July 4, 2012

உக்கார்ந்து யோசிச்சது (04-07-12)

கவிஞர் சிபிச்செல்வன் மலைகள்.காம் எனும் இணைய இதழை நடத்தி வருகிறார். இதுவரைக்கும் ஐந்து இதழ்கள் வெளியாகி உள்ளன. தமிழின் மூத்த படைப்பாளிகளோடு புதிதாக எழுத வரும் இளம் எழுத்தாளர்களின் படைப்புகளும் சேர்ந்து எனத் தரமான இணைய இதழாக வெளிவருகிறது மலைகள்.காம். சிபிச்செல்வனுக்கு வாழ்த்துகள். இதழை வாசிக்க இங்கே சொடுக்குங்கள்..

***************

சென்னை. நண்பரொருவரை சந்திப்பதற்காக சைதாப்பேட்டை ஆர்ச்சின் அருகே காத்துக் கொண்டிருந்தேன். நேரம் மதியம் மூன்றைத் தாண்டி விட்டிருந்தது. நல்ல பசி. நண்பர் வந்த பிறகு அவரோடு சேர்ந்துதான் ஹோட்டலுக்குப் போவதாகத் திட்டம். என்ன செய்வதெனத தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தபோது அருகிலிருந்த இளநீர்க்கடை கண்ணில் பட்டது. நகர்ந்தேன். நாற்பது வயது மதிக்கக்கூடிய பெண்ணொருவர் அமர்ந்திருந்தார். முகம் கடு கடுவென இருந்தது.

இன்னா..

எளனி எவ்ளோக்கா..

ம்ம்ம்.. முப்பத்தஞ்சு ரூபா..

ரொம்பவே ஜாஸ்திதான். ஆனால் எனக்கோ கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது. ஏதாவது குடித்தே ஆகவேண்டும் என்பது போன்ற நிலைமை.

சரிக்கா வெட்டுங்க..

தண்ணி மட்டும்தான் குடிக்க முடியும். அதுக்கப்புறம் காய வெட்டித் தர சொல்லக்கூடாது.. சரியா..

இது வேறா? சரிக்கா.. பரவாயில்ல.. வெட்டுங்க..

அந்த நேரத்துக்கு தாகம் படுத்திய பாட்டுக்கு இளநீர் அத்தனை அருமையாக இருந்தது. போன உயிர் மீண்டு வந்ததைப் போன்ற உணர்வு.

ரொம்ப நன்றிங்க அக்கா..

சொல்லி விட்டுப் பணத்தைக் கொடுத்தேன். அவர் என்னை விநோதமாகப் பார்த்தார்.

வெளியூரா... எந்தூரு..

ஆமாக்கா.. மதுரை. சும்மா நண்பர்களைப் பார்க்கலாம்னு வந்தேன்.

இரு என்று சைகை செய்தவர் இளனியை வெட்டித் தேங்காய் எடுத்துத் தந்தார். சாப்பிட்டு விட்டுக் கிளம்பினேன். நில்லுப்பா என்று கூப்பிட்டவர் ஒரு பத்து ரூபாயை என்னிடம் திருப்பித் தந்தார். நான் புரியாமல் பார்த்தேன்.

இருபத்தஞ்சு ரூபா தான். வச்சுக்க..

அந்த அம்மாவின் முகத்தில் இப்போது சின்னதொரு சிரிப்பும் அமைதியும் இருந்தது. மீண்டும் ஒரு நன்றி சொல்லிக் கிளம்பினேன்.

***************

சென்னையில் இருக்கும் நண்பர் அவர். காமிக்ஸ் வாசிப்பதில் பெரும் ஆர்வம் கொண்டவர். கூட சில நண்பர்களை அழைத்துக் கொண்டு காமிக்ஸ் வேட்டைக்காக மதுரை வந்திருந்தவரை அவருடைய அறையில் போய் சந்தித்தேன். மாலை ஆறு மணிக்கு ஆரம்பித்த கச்சேரி இரவு பதினோரு மணி வரை தொடர்ந்து கொண்டே போனது. பேச்சு சுவாரசியத்தில் நேரம் போனதே தெரியவில்லை.

அன்றைக்கு இரவு பனிரெண்டு மணிக்கு சென்னை திரும்பும் ரயிலில் நண்பருக்கு டிக்கட் புக் பண்ணி இருந்தது. எனவே கதை பேசி முடித்துக் கிளம்பும் சமயத்தில் பதினோரு மணிவாக்கில் இன்டர்காமில் ரிசப்சனுக்குக் கூப்பிட்டார்.

எனக்கு 12 மணிக்கு டிரெயின். நான் கெளம்பணும். பில் ரெடி பண்றீங்களா..

அதெல்லாம் முடியாது சார். இந்த நேரத்துல தான் எங்க ஹோட்டல்ல இன்னைக்கு நாளுக்கான அக்கவுண்ட்ஸ் எல்லாம் சரி பாப்போம். நீங்க 12 மணிக்கு மேல காலி பண்ணிக்கோங்க..

எங்களுக்கு அதிர்ச்சி. ஒரு வாடிக்கையாளரிடம் எப்படிப் பேசுவது என்கிற வரைமுறை இல்லையா? நான் இத்தனை மணிக்குத்தான் காலி செய்ய வேண்டும் என என்னைச் சொல்ல இவன் யார் என்று நண்பருக்கு பயங்கர கடுப்பு. அறையைக் காலி செய்து பூட்டிக் கொண்டு ரிசப்ஷனுக்குப் போனால் அங்கிருந்த அந்தப் பையன் அதையேதான் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தான். தனக்கு ரயிலுக்கு நேரமாகி விட்டதாக நண்பர் சொன்னதை அவன் காதில் வாங்கிக் கொண்டதாகவேத் தெரியவில்லை.

ஒரு கட்டத்துக்கு மேல் எனக்குப் பொறுமை சுத்தமாகப் போய் விட்டது. நம் ஊருக்கு வந்திருக்கும் விருந்தாளியிடம் இப்படித்தான் நடந்து கொள்வீர்களா எனக் கத்த ஆரம்பித்தேன். நண்பரோ தனது விசிட்டிங் கார்டை எடுத்து மேஜை மேல் வைத்து நேரில் வந்து பணம் வாங்கிக் கொள்ளுங்கள் எனச் சொல்லி விட்டு நடக்க ஆரம்பித்து விட்டார். பிறகு ஹோட்டலின் மேனேஜர் வந்து புதுப்பையன் சார் அது இது என்று சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

இது சின்னதொரு எடுத்துக்காட்டே. இந்த ஒரு இடம் தான் என்றில்லை. எங்கே போனாலும் இன்றைக்கு வாடிக்கையாளரை யாரும் மதிப்பதே கிடையாது. சர்வீஸ் என்கிற ஒரு விசயமே அர்த்தம் இல்லாததாக மாறி விட்டது. நீ இல்லை என்றால் எனக்கு ஆயிரம் பேர் வருவார்கள் என்கிற மனநிலை தான் எல்லோருக்கும். யாரைக் குற்றம் சொல்வது?

***************

புனலும் மணலும் - .மாதவன் எழுதிய நாவல். தமிழும் மலையாளமும் கலந்த நாஞ்சில் வாடார மொழியில் எழுதப்பட்ட கதை. அங்குசாமி மூப்பர் ஆற்றங்கரையில் மணல் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்பவர். அவருடைய மனைவி தங்கம்மையின் மூத்த கணவனுக்குப் பிறந்த மகள் குரூபியாக இருக்கிறாள். அங்குசாமிக்கு எப்போதுமே அவளைப் பிடிப்பதில்லை. தங்கத்தின் மரணத்திற்குப் பிறகு மகளின் மீதான பொறுப்பு தன்னிடம் வந்து சேர தீராத துயரம் கொள்கிறார்.

சிறு வயதிலிருந்து அவரால் பாசத்துடன் வளர்க்கப்பட்ட தாமோதரன் தான் அந்தப் பெண்ணுக்கான ஒரே ஆறுதல். நாவலின் இறுதியில் மூப்பர், தாமோதரன், மூப்பரின் மகள் ஆகியோர் பிரயாணிக்கும் படகு சுழலில் சிக்கிக் கொள்கிறது. எல்லோரும் தப்பிப் பிழைத்திட மூப்பரின் மகள் மட்டும் காணாமல் போகிறாள். கரையேறிய மூப்பருக்குத் தன் காலை யாரோ நீருக்குள் பற்றியதும் உயிர் பயம் உந்தித் தள்ள தாம் அதை விலக்கி விட்டு மேலே வந்ததும் நினைவுக்கு வருவதோடு கதை முடிகிறது.

இன்றைய காலகட்டத்தோடு பெரிதும் பொருந்திப் போவதுதான் இந்தக் கதையின் பலமே. மனித மனத்தின் நிர்தாட்சான்யமும், தான் எதற்கும் இரங்கி விடக்கூடாது என்கிற மூப்பரின் அகந்தையும்தான் கதையின் அடிநாதம். மூப்பரின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருக்கும் விதம் மிக நுண்மையானது. ஒரு விஷயம் பிடிக்காமல் போனால் அது ஆயுசுக்கும் பிடிக்காமல் போகும் என்கிற அடிப்படையில் அவருக்குத் தன் மகளைப் பிடிக்காமலே போகிறது. உடல் நலமின்றி அவளுடைய ஆதரவில் தான் வாழ நேரும்போது தன்னையே வெறுக்கும் அளவுக்குத் தீவிரமாக இருக்கிறார் மூப்பர். இத்தனைக்கும் அவர் கெட்டவர் எல்லாம் கிடையாது. யாருமில்லாது வந்து நிற்கும் தாமோதரனைத் தன் மகன் போல வளர்க்கும் நல்ல உள்ளம் படைத்தவர் என நன்மைக்கும் தீமைக்குமான மெல்லியதொரு இடைவெளியில் மூப்பரின் மனம் இயங்குவது மிக அழகாக நாவலில் கையாளப் பட்டிருக்கிறது. கவிஞர் சுகுமாரன் எழுதியிருக்கும் அருமையான முன்னுரையுடன் காலச்சுவடு கிளாசிக் வரிசையில் வெளியாகி இருக்கும் புனலும் மணலும் கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டிய நாவல்களில் ஒன்று.

***************

The Color Of Paradise - மஜீத் மஜிதி இயக்கிய திரைப்படம். இதுவும் ஒரு தந்தைக்கும் பிள்ளைக்குமான உறவைப் பேசும் படம்தான். சிறுவனான மொகமதுக்கு கண்பார்வை கிடையாது. மிகுந்த புத்தி கூர்மை உடைய, இயற்கையின் மீது ஆர்வம் கொண்டவன். அவனுடைய சகோதரிகளுக்கும் பாட்டிக்கும் அவனை ரொம்பவே பிடிக்கும். ஆனால் மறுமணம் செய்ய நினைக்கும் அவனது தந்தை ஹசீமுக்கோ பார்வையற்ற சிறுவன் தன் வாழ்க்கையில் பெரும் பாரமாக இருப்பானோ என்ற பயம். எனவே தனது மகனை ஒரு கண்பார்வையற்ற தச்சன் ஒருவரிடம் வேலைக்கு சேர்த்து விடுகிறான். பேரனைப் பிரிந்த துயரத்தில் பாட்டி இறந்து போகிறாள். இதை ஒரு கெட்ட சகுனமாக எண்ணிப் பெண் வீட்டார் ஹசீமின் திருமணத்தை நிப்பாட்டி விடுகிறார்கள்.

வேறு வழி இல்லாமல் தன் மகனை மீண்டும் வீட்டுக்கு ஹசீம் கூட்டி வரும் வழியில் மொகமது தவறி ஒரு காட்டாற்றில் விழுந்து விடுகிறான். அவனைக் காப்பாற்றுவதா வேண்டாமா எனத் தயங்கும் ஹசீம் மனம் மாறி தானும் ஆற்றுக்குள் குதிக்கிறான். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருவரும் ஒரு ஓரமாகக் கரை சேருகிறார்கள். தன் மகன் இறந்து விட்டானோ என எண்ணித் துடிக்கும் ஹசீம் அவன் மீதானத் தன் அன்பை உணர மொகமதுவின் கைகள் அசையத் தொடங்குவதோடு படம் முடிகிறது.

பார்வையற்ற மொகமது இந்தப்படத்தில் சொல்லும் ஒரு வசனம் மிக முக்கியமானது. "எனது ஆசிரியர் சொல்வார்.. கடவுள் மிகுந்த கருணை மிக்கவர். உன் மீது அவருக்கு அளவில்லாத அன்பு என்று.. ஆனால் அது உண்மையில்லை. கடவுளுக்கு என் மீது அன்பு இருக்குமென்றால் ஏன் அவர் என் கண்களைப் பறித்தார்.." பதில் சொல்ல மாட்டாத பார்வையிழந்த தச்சன் அமைதியாக எழுந்து போகும் இந்த ஒற்றைக் காட்சிதான் படத்தின் அடிப்படை சாராம்சம்.

உடல் ஊனமுற்ற அல்லது மனம் பிறழ்ந்த குழந்தைகளைக் கொண்டிருக்கும் யாருக்கும் உண்டாகும் கேள்வியையும் மன உளைச்சலையும் பதிவு செய்திருக்கும் இப்படம் அதற்கான தீர்வு அன்பு ஒன்றுதான் என்பதையும் சொல்லிப் போகிறது. டத்தின் ஆரம்பம் முதலே மொகமது இயற்கையோடு தன் விரல்களால் பேசியபடி இருக்கிறான். படத்தின் இறுதியில் அவனுடைய அப்பா அன்பின் வலியை உணரும் தருணத்தில் மோகமத்தின் கைகள் பிரகாசிக்கத் தொடங்குகின்றன. அவனால் கடவுளோடு தொடர்பு கொள்ள முடிகிறது எனும்படியாக அமைக்கப்பட்டிருக்கும் இறுதிக்காட்சி அழகானதொரு கவிதை.

இரானிய இயக்குனர் மஜீத் மஜிதி பற்றிய நண்பர் சூர்யாவின் பதிவு இங்கே...

***************

சமீபமாக வாசித்ததில் பிடித்த கவிதை..

கதையின் காகம்

வெயில் வேகும் நிலத்தில்
பயணியொருவன்
விட்டுச்சென்ற
பானையின்
மிஞ்சிய அடிநீராய்
இருந்தேன்
வெகுநாட்களாக.
நிலமெங்கும் நீர்தேடி
தாகத்துடன்
ஒருநாள்
காகமும் வந்தது..
பானையின அடியில்
தன் அலகால் எட்டமுடியாத
என்னை
அன்பின்
கூழாங்கற்கள் கொண்டு
நிரப்பிப் பருகத் துணிந்தது
காகம்.
என் கடன் தீர்க்க
நானும் ஆரவாரித்துத் ததும்பினேன்..
என் உயிரின் வேகத்திலா
கூழாங்கல்லின் கனத்திலா
காகத்தின்
தாக தாபப் பரபரப்பிலா
தெரியவில்லை
பானை உடைந்தது
நான்
மீண்டும் கல்லாய் காய்ந்தேன்..

- ஷங்கர்ராமசுப்ரமணியன்

இப்போதைக்கு அவ்ளோதான். நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-))))

6 comments:

கிருஷ்ணா வ வெ said...

பதிவை ஒரு கதம்பமாக அளித்துள்ளீர்கள்.
நன்றாக இருந்தது.

Suresh Subramanian said...

antha kavithai arumai.... http://www.rishvan.com

mohamed salim said...

மதுரகரைங்க பாசமான பயபுள்ளைக என அந்த அக்கா நினைத்து இருக்கும் நல்ல கலவையான பதிவு

திவாண்ணா said...

இளநீர் பெண்மணி போன்றவர்களை நானும் பார்த்து இருக்கிறேன். பேரம் பேசவே ஒரு விலையை சொல்லுகிறார்கள். பேரம் பேசவில்லை என்றால் ஆச்சரியமாக பார்ப்பார்கள். அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்தால் முக்காலே மூணு வீச நேரம் சரியான விலையை எடுத்துக்கொண்டு மீதி திருப்பி தருவார்கள். நேர்மை இந்த பெரும்பாலும் அடுக்கு மக்களிடமே இருக்கிறது.

அனைவருக்கும் அன்பு  said...

வாழ்வின் தத்துவங்களை குறிப்பிட்டு சொல்லும் நிகழ்வுகள் அருமை ................உங்கள் பாதிப்புகள் ஓவொன்றும் ஒரு வெளியை எனக்குள் உருவாக்கியது கவிதை ..................கதையின் மாற்றுரு அருமை .............

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

அருமையான பதிவு