Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

April 5, 2011

2011 தேர்தலும் தரங்கெட்ட ஊடகங்களும்

இரண்டு வாரங்களுக்கு முன்பு தினமலர் நாளிதழின் முதல் பக்கத்தில் இந்த செய்தி வெளியாகி இருந்தது.

"தேங்காய் உடைத்து கருணாநிதி பயணம்"

திராவிடம், கடவுள் மறுப்பு எனச் சொல்லும் கருணாவும் சகுனம் பார்க்கிறார் என நிறுவுகிறார்களாம். அதே இதழில் வெளியாகி இருந்த இன்னும் சில தலைப்புகள்..

"அதிருப்தி.. கோஷ்டி சண்டை காரணமாக சோனியா வருத்தம்.."

"புதுவையில் உடைகிறது தி.மு. அணி.."

"பாமகவுக்கு ஆதரவாக குஷ்பூ? எப்படி ஆகிப்போச்சு நிலைமை.. திமுகவினர் கவலை.."

இது எல்லாமே சாம்பிள்தான். திமுகவை திட்டி எழுதுவது தவிர்த்து எத்தனை செய்திகள் தினமலரில் வருகிறது எனப் பார்த்தால் இரண்டு பக்கம் கூட தேறாது போல. அவர்களைப் பொறுத்தவரையில் பார்ப்பனியம் சார்ந்து இயங்கக் கூடிய பத்திரிக்கை, இவர்களுக்கும் திமுகவுக்கும் ஆகாது என எல்லாருக்கும் தெரிந்தாலும் இந்தத் தேர்தலில் எல்லா எல்லைகளையும் மீறிப் போய்க் கொண்டு இருக்கிறார்கள். ஜெயலலிதா தன்னிச்சையாக பட்டியல் வெளியிட்டபோது இவர்கள் எழுதியது..

“ஜெ.க்கு தெரியாமலே பட்டியல் வெளியானதா?”

ஜெவை நல்லவர் என நிறுவ முயலும் இவர்கள், மன்னார்குடி கும்பல்தான் அவரைச் சீரழிக்கிறது எனச் சொல்லும் இவர்கள், அவர்களை விட்டு வெளியே வாருங்கள் என எழுதாது ஏன்? திராவிடம் புண்ணாக்கு என்றெல்லாம் சொல்லி விட்டு கோவில் கோவிலாக ஜெ போகும்போது இவர்களுக்கு கசப்பதில்லையே. லூசுத்தனமாக அவர் காரியம் செய்தால் கூட ஜெ அப்பாவி, கருணாநிதி அதையே செய்தால் அடப்பாவியா? மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்?

எல்லாவற்றையும் விடப் பெரிய கொடுமை தினமலர் வைகோவை சீண்டிய விதம். தேர்தல் புறக்கணிப்பு என்றதும் “ஓட்டம்” எனக் கார்ட்டூன், ஏப்ரல் ஒன்று அன்று முட்டாள் தினம் என்பதாக வைகோ மீண்டும் ஜெவைச் சந்தித்தார் எனச் செய்தி போட்டு அசிங்கப்படுத்தியது. இதையெல்லாம் வெளிப்படையாக ஒரு கட்சிக்கு ஆதரவு சொல்லி விட்டு செய்யலாமே.. இதுதான் எங்கள் அரசியல் நிலைப்பாடு என முடிவு செய்கிறீர்களா.. தைரியமாக அறிவித்து விட்டு மோதலாமே.. ஏன் நடுநிலை நாளிதழ் என்கிற பெயரில் செய்ய வேண்டும் என்பதே என் கேள்வி.

அடுத்ததாக விகடன் குழுமம். தங்கள் வீட்டில் ஒரு அங்கம் எனத் தமிழக மக்கள் பலரும் நம்பும் பத்திரிக்கை. அவர்கள் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? மதுரையில் ஜூ.வி நிருபருக்கு அடி விழுந்த நேரத்தில்தான் இது ஆரம்பித்தது என நினைக்கிறேன். முதலில் நன்றாக விஜயகாந்துக்கு விளம்பரம் கொடுத்து சுதி ஏற்றினார்கள். அதற்கு இரண்டு மாதங்களுக்கு பிறகு அதிமுக ஏன் தேமுதிகவோடு கூட்டணி வைக்க வேண்டும் என்றும் விளக்கினார்கள்.

இப்போது தேர்தல் நேரத்திலோ நேரடியாக களத்திலேயே இறங்கி விட்டார்கள். தொடர்ச்சியாக கருத்து கணிப்புகள், அத்தனையும் மு.க மற்றும் அவர் குடும்பத்தைத் தாக்கி. மறைமுக எண்ணம் என்றெல்லாம் இல்லாமல் நேரடித் தாக்குதல்தான். மறக்க முடியுமா என்று தலையங்கம், துறை வல்லுனர்களின் குற்றச்சாட்டு, அரசாங்கம் நிகழ்த்தும் அராஜகம் என்று பயங்கரமான ஒரு ஊடகத் தாக்குதலை விகடன் இன்றைய அரசு மீது நிகழ்த்தி வருகிறது. அதிலும் விஜயகாந்து தன் கட்சி வேட்பாளரை அடித்ததை சப்பைக்கட்டு கட்டி ஜூ.வியில் வெளியான கட்டுரை அத்தனை பெரிய கேவலம்.

கிட்டத்தட்ட எல்லாப் பத்திரிக்கைகளுமே இந்தத் தேர்தலில் ஏதாவொரு நிலையெடுத்து இயங்குவதாக தெரிகிறது. நக்கீரனைப் பொறுத்தவரை அது அறிவிக்கப்படாத முரசொலி மாதிரி. ஊரில் எல்லாப்பயலும் திமுக ஜெயிப்பது கஷ்டம் என்றால் இவர்களுக்கு மட்டும் எல்லா இடங்களிலும் அதாவது 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி என்பார்கள். ஜிங்க்சாக் அடிங்கையா.. ஆனா கொஞ்சமாவது மனசாட்சியோட அடிங்க.

தினத்தந்தியைப் பொறுத்தவரை யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்களுக்கு சாதகம். அரசியல் விசயங்ளைப் பொறுத்தவரை ஹிந்து என்பது நம்மைப் பிடித்து இருக்கும் ஒரு கெரகம். ஆ.விக்கு எதிராக இருக்க வேண்டும் என்பதாலேயே குமுதம் திமுக பக்கம். துக்ளக் - சொல்லவே வேண்டாம். ஏதோ தமிழக அரசியல் (யார் பத்திரிக்கை என்று தெரியவில்லை) என்கிற ஒரு பத்திரிக்கை மட்டும் கொஞ்சம் நடுநிலையோடு செய்திகள் வெளியிடுவதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் தொலைக்காட்சிகள் எல்லாமே கட்சிசார் நிறுவனங்கள் என்றாகி விட்ட சூழ்நிலையில் பொதுமக்கள் உண்மையான செய்திகளைத் தெரிந்து கொள்ள பத்திரிக்கைகளைத்தான் நம்பி இருக்கிறோம். ஆனால் இவர்களும் தங்கள் சொந்த விருப்பு வெறுப்பு சார்ந்து எழுத்தொடங்கினால் பொதுஜனம் என்ன செய்வது? எங்களுடைய கருத்துதான் உங்களுடையதாகவும் இருக்க முடியும் என மக்கள் மீது திணிப்பது எத்தனை பெரிய அராஜகம்? நாட்டின் நான்காவது தூண் என்று சொல்லப்படும் எழுத்துத் துறை இந்த லட்சணத்தில் இருந்தால் எங்கு போய் முட்டிக் கொள்வது?

பீப்ளி லைவில் ஒரு காட்சி வரும். பல ஆண்டுகளாக உழைத்த ஒருவன் அதே கிணறுக்குள் விழுந்து செத்துப் போயிருப்பான். ஆனால் ஊடகங்களோ சர்ச்சைக்குரிய மனிதன் மலம் கழித்த இடத்தை தேடிக் கொண்டிருப்பர்கள். இங்கே எது விற்குமோ அதைத் தருவதுதான் ஊடகங்களின் கடமை என்பதாக ஒரு நிருபர் சொல்லுவார். இதுதான் நிதர்சனம். உண்மைக்கு இங்கே மதிப்பு இல்லை. விக்கிலீக்ஸுக்கு கேபிள்கள் அனுப்பி உதவிய வீரரொருவர் இருபதாண்டு தனிமைச் சிறை தண்டனை கொடுக்கப்பட்டு இன்னும் சிறிது நாட்களில் பைத்தியம் ஆகும் சூழலில் இருக்கிறார். இதை நேர்மையாக எந்த பத்திரிக்கையாவது வெளியிட்டதா? இல்லையே.. எல்லாமே வியாபாரம்னு ஆகிப் போச்சு.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சின்னு எந்த பேதமும் இல்லாம உண்மையா செய்திகள் சொல்ற பத்திரிக்கையோ, டிவியோ இனிமேல் வாய்ப்பே இல்லைன்னுதான் தோணுது. இதே லட்சணத்துல போனா பி.எஸ்.வீரப்பா டயலாக்க சொல்லித்தான் முடிக்கணும்.. “இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்..”

September 24, 2009

உன்னைப் போல் ஒருவன்...?!!!

உன்னைப் போல் ஒருவன் - இணையத்தில் பலவிதமான சர்ச்சைகளையும், விவாதங்களையும் கிளப்பி இருக்கிறது. நான் இன்னும் படம் பார்க்காத நிலையில் என்னால் படத்தைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது. நான் அடிப்படையில் ரஜினி ரசிகன் என்றபோதும் கமலின் நடிப்பை வெகுவாக நேசிப்பவன். ஆனால் நம் பதிவுலக நண்பர்கள இந்தப் படத்தை அணுகி இருக்கும் விதம் உண்மையிலேயே மனதை மிகவும் நோகடித்து விட்டது. இங்கே கமலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் இரண்டு தரப்புகள். மிகவும் நல்ல கருத்துள்ள படம், அருமையான பொழுதுபோக்குப் படம், மோசமான இந்துத்துவா படம்.. இது போல இன்னும் பல விமர்சனங்கள்.


ஒரு தரப்பு படத்தை கண்மூடித்தனமாக சப்போர்ட் செய்கிறார்கள். யார் என்ன சொன்னாலும் இது ஒரு நல்ல படம் என்று சொன்னால் ஒத்துக் கொள்ளலாம். ஆனால் கமலைப் பற்றி விமர்சிக்கிறார்கள் என்ற காரணத்துக்காக உன்னைப் போல ஒருவனை வெறும் பொழுதுபோக்கு படம், கருத்தெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது.. என்ற ரீதியில் பேசுவது மன்னிக்க முடியாதது. சாமானியனுக்கும் நல்ல விஷயங்களைக் கொண்டு போய் சேர்க்க முடியும் என்றால் அதற்கு திரைப்படத்தை விட சிறந்த சாதனம் கிடைக்காது. இதை நன்கு உணர்ந்தவர் கமல். வெறும் பொழுதுபோக்கு என்றால் அவர் "partner "ஐ ரீமேக் பண்ணலாமே.. "A Wednesday " எதற்கு?


எதிர்த் தரப்பில் சிலர், சினிமாவை உண்மையாக நேசிக்கும் கமல் என்ற கலைஞனை இதற்குமேல் கேவலப்படுத்த முடியாது என்னும் அளவுக்கு கேவலமாகத் திட்டி உள்ளார்கள். படைப்பை பற்றி பேசுவதைத் தவிர்த்து படைப்பாளியையும் அவனுடைய ஜாதியையும் முன்னிறுத்தி பேசுவதும், ஜாதிபுத்தியால்தான் இப்படி படம் எடுக்கிறார் எனச் சொல்வதும் எந்த வகை நியாயம் என்று புரியவில்லை.


நான் படித்தவரையில் தோழர் மாதவராஜின் இடுகைகள் மட்டுமே படத்தை நேர்மையாக, நடுநிலையோடு அணுகி இருந்ததைப் போல தோன்றியது.


கமல் உன்னைப் போல் ஒருவனில் பல குறியீடுகளைப் பயன்படுத்தி இருப்பதாக சொல்கிறார்கள். எனக்கு அவற்றைப் படிக்கும்போது காதலா காதலா படத்தின் ஒரு காட்சிதான் ஞாபகத்துக்கு வருகிறது. பிரபுதேவா வரைந்த ஒரு மட்டமான படத்தில் பெப்சியை ஊற்றி கந்திரகோலமாக்கி விடுவார் கமல். அதைப் பார்க்கும் சௌந்தர்யாவும், ரம்பாவும் "இது அணில், இது ராமர்.. வாவ் என்ன ஒரு பெயிண்டிங்" என்றெல்லாம் சொல்வார்கள். ஆச்சரியமுடன் கமல் திரும்பிக் கேட்பார்.."அடேங்கப்பா.. இதெல்லாமா உங்களுக்குத் தெரியுது?" இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல விரும்பலை.


இதை எல்லாம் விடப் பெரிய கொடுமையை நேற்று டிவியில் பார்க்க நேர்ந்தது. கமல் சினிமாவில் நடிக ஆரம்பித்து ஐம்பது வருடங்கள் ஆனதைக் கொண்டாடும் வண்ணம் விஜய் டிவி ஒரு நிகழ்ச்சி நடத்தி வருகிறார்கள். இதில் கலந்து கொண்ட கமல் ரசிகர் ஒருவர் சொன்னது... "விலைவாசி உயர்வு, பன்றிக் காய்ச்சல் என்று எல்லாப் பிரச்சினைகளையும் மீறி இன்று தமிழ்நாட்டு மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் இது எங்கள் தலைவரின் பொன்விழா வருடம் என்பதால்தான்.." அடப் போங்கடா போக்கத்தவங்களா..!!!

May 5, 2009

ஓட்டுப் பொறுக்கும் பச்சோந்திகள்..!!!

"என்ன நெஞ்சழுத்தம் இருந்தா அந்த கேவலமான அரசியல்வாதி(வியாதி)களோட எங்கள கம்பேர் பண்ணி எழுதுவ..." அப்படின்னு பச்சோந்திகள் எல்லாம் என்னோட வீட்டு முன்னாடி உண்ணாவிரதம் இருக்கோம்னு அடம் பிடிக்காம இருந்தா சரி.. ஏன்னா இது உண்ணாவிரத சீசன் பாருங்க.. தேர்தல் வந்தாலும் வந்துச்சு .. இவங்களோட அலும்பு தாங்க முடியல.. நேரத்துக்கு ஒரு பேச்சு, நிமிஷத்துக்கு ஒரு பல்டி.. அடங்கப்பா,,, இது உலக நடிப்புடா சாமின்னு ஆளாளுக்கு பிச்சு உதறுராய்ங்க.. இந்த தேர்தல்ல யாருக்குத்தான் ஓட்டு போடுறது? மண்டை காயுது.. எரியுற கொள்ளில எந்த கொள்ளி நல்ல கொள்ளின்னு செலக்ட் பண்ண வேண்டிய கட்டாயத்துல நாம இருக்கோம்..
கலைஞர்: இருக்குறதிலேயே பாவப்பட்ட ஜீவன்.. புலிவால் பிடிச்ச நாயர் கதை தான்.. காங்கிரசை விட்டு விலகுனா ஆட்சி போய்டும்.. இயற்கையா இருக்குற புலி பாசத்தையும் விட முடியாம.. படுற பாடு கொஞ்ச நஞ்சம் இல்ல. கழகமே குடும்பம்னு இருந்த காலம் போய் என்னைக்கு குடும்பமே கழகம்னு கலைஞர் நினைக்க ஆரம்பிச்சாரோ, அன்னைக்கு பிடிச்சது சனி. முத்துக்குமார் மரணம் இளைஞர்கள் மத்தியில ஒரு எழுச்சிய உண்டு பண்ணினப்ப காலேஜ் எல்லாம் லீவு விட்டு அடக்குனாரு.. காலைல பேரணில சீமானைப் பார்த்து கைய அசைச்சுட்டு சாயங்காலமே அரஸ்ட் பண்ணி உள்ள தள்ளினாறு.. பிராபாகரனை கைது பண்ணினா ஒழுங்கா நடத்தனும்.. இது முதல் நாள் அறிக்கை.. அவரு என்னோட பெஸ்ட் ப்ரெண்டு.. இது அடுத்த நாள் காமெடி.. எல்லாமே முன்னுக்கு முரண்.. இந்த தள்ளாத வயசுல கலைஞருக்கு இது தேவையா? எல்லாம் முடிஞ்ச பிறகு வர போலீஸ மாதிரி.. ஒரு ஆறு மணி நேர உண்ணாவிரதம் வேற.. தயவு செஞ்சு கலைஞர் டிவில வர அந்த கட்டுமரம் விளம்பரத்த நிப்பாட்டுங்கப்பா.. அதைப் பார்த்தா கடுப்புதான் வருது.. தமிழினத் தலைவர் தமிழீனத் தலைவரா மாறிப் போனாரு..
ஜெயலலிதா: இந்த அம்மாவாலேயே இவங்களை ஜட்ஜ் பண்ண முடியாது.. நாம அடுத்து என்ன செய்யப் போரோம்கிறது அவங்களுக்கே தெரியாது. இன்ஸ்டன்ட் காபி, இன்ஸ்டன்ட் காதல் மாதிரி இவங்களுக்கு இப்போ வந்து இருக்குறது இலங்கைத் தமிழர்கள் மீதான இன்ஸ்டன்ட் பாசம். மார்ச் மாசம் இவங்க சொன்னது.. போர்னு வந்தா மக்கள் சாகுறது சகஜம் தானே.. ஆனா இன்னைக்கு சொல்றது.. நான் ஆட்சிக்கு வந்தால் தமிழீழம் அமைக்க பாடுபடுவேன்.. அது எப்படிப்பா ஒரே மாசத்துல புத்தி மாறுச்சு? வீடியோ பார்த்தாங்களாம்.. மனசு மாறுச்சாம்.. அப்போ இதுக்கு முன்னாடி வந்த படங்கள எல்லாம் இந்த அம்மா பார்க்கவே இல்லையா? என்னாங்கடா கதை விடுறீங்க? யாரையுமே மதிக்கறதும் கிடையாது.. இந்த லட்சணத்துல பிரதமர் பதவியப் பத்தி வேற பேசுறாங்க.. நினச்சாலே கண்ண கட்டுதுடா சாமி..
ராமதாஸ்: இவரைப் பத்தி நான் இனிமேலும் என்ன சொல்ல? அந்த அம்மா என்னோட வேட்டிய உருவப் பார்த்துச்சு, தானைத் தலைவர் கலைஞர்தான் என் மானத்தைக் காப்பத்தினாறு.. ஈனம், மானம் ரோஷம் இருக்குறவன் அந்த அம்மா கூட இனிமேல் கூட்டணி பத்தி பேச மாட்டான். இதெல்லாம் டாக்டர் ஐயாவோட தத்துவ முத்துக்கள். தமிழ்நாடுலையே இவர் அளவுக்கு கூட்டணி மாறி யாருமே சாதனை பண்ணி இருக்க மாட்டாங்க.. என் குடும்பத்தில் யாராவது அரசியலுக்கு வந்தால் என்னை சாட்டையால் அடிங்கள்.. அப்படின்னு சொன்னவரு.. இப்போ சாட்டைய எங்கயோ மறந்து வச்சுட்டாரு போல.. ஜாதி பலம ஒன்னை மட்டுமே நம்பி அரசியல் பண்ற இவங்களை வளர்த்து விட்டது திராவிட கட்சிகளோட தப்பு..
வைகோ: இன்னைய தேதிக்கு தமிழக அரசியலின் காமெடி பீஸ். கிட்டத்தட்ட அ.தி.மு.க வோட கொள்கை பரப்பு செயலாளர் ரேஞ்சுக்கு இருந்த மனுஷன தொகுதிப் பங்கீட்டுல ஜெயா படுத்துன பாடு.. செம காமெடி. விடுதலைப் புலிகள் பிரச்சினை மட்டும் வரலைன்னா ஆள் இந்நேரத்துக்கு அட்ரஸ் இல்லாம போய் இருப்பாரு. ஜெயாவோட உண்ணாவிரத டிராமால கடைசியா பழரசம் கொடுத்து இவர் முடிச்சு வச்சப்போ, கேவலமா இருந்தது. எப்படி இருந்த வைகோ இப்படி ஆகிட்டாரு?
தேர்தல்ல ஓட்டு போட போகும்போது மட்டும்தான் மற்ற கட்சிக்காரன் கும்பிடுவான். ஆனா கம்யூனிஸ்ட் ஒருத்தன்தான் திரும்பி வரப்பவும் கும்பிட்டு நன்றி சொல்லுவான். அது அந்தக் காலம். இன்னைக்கு அவங்களுக்கும் பதவி ஆசைதான் முக்கியமாப் போச்சு. காங்கிரஸ் இன்னைக்கு தமிழ்நாட்டுல காலி பெருங்காய டப்பா. ஆ ஊன்னு குதிச்ச திருமா காங்கிரஸ் கூடவே கூட்டணி வச்சு இருக்காரு. விஜயகாந்தோ பணம் வாங்கிகிட்டு தனியா நிக்குறதா சொல்றாங்க. நாங்களும் கட்சி வச்சு இருக்கோம்னு சொல்லத்தான் சரத் பி. ஜெ. பி கூட கூட்டணி போட்டு தேர்தலை சந்திக்கிராரு.
இதுல யாருக்கு ஓட்டு போட? இங்க யாருக்குமே கொள்கையும் இல்லை, மக்கள் மேல அக்கறையும் இல்ல.. எல்லாமே பணம்தானு ஆகிப்போச்சு.. தன்னோட அம்மாவாகவே இருந்தாலும், விதிய மீறி போட்ட தண்ணிக்குழாய எடுக்க சொன்ன கர்மவீரர் காமராசர் எங்கே.. ஓட்டுக்காக ...யக் கூட தின்கிற இன்றைய அரசியல்வாதிகள் எங்கே? ஒத்தப் பைசா கூட இல்லாம செத்துப்போன கக்கன், ஜீவா போன்ற பல தலைவர்கள் இருந்த அரசியல் எல்லாம் இன்னைக்கு நாசமாப் போச்சு. இன்னைக்கு பாக்கி இருக்குறது பொறுக்கித் தின்னுற சந்தர்ப்பவாதிக தான். அதனால் நான் இந்த தடவை யாருக்கும் ஓட்டே போடப் போறதில்ல. "O" போடலாம்னா அதை பகிரங்கமாத்தான் செய்யணும். அது பிரச்சினை. உன்னோட ஜனநாயகக் கடமைய புறக்கணிக்க கூடாதுன்னு சொல்றவங்களுக்கு.. தப்பான ஒருத்தனுக்கு ஓட்டு போடுறதும் குற்றம்தான். இந்த நிலைமை மாறனும்னு வேண்டுரதைத் தவிர்த்து நான் செய்யக் கூடியது வேற ஒண்ணுமில்லை..!!!
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

April 15, 2009

சிகரெட் - தனக்குத்தானே கொள்ளி..!!!!

முன்பெல்லாம் தியேட்டர்களில் படம் போடுவதற்கு முன்பாக ஐந்து நிமிடங்கள் வரை ஓடும் செய்திப்படங்கள் காமிப்பார்கள். அதை பார்ப்பதற்காகவே தியேட்டருக்கு சீக்கிரம் போகும் பழக்கம் எனக்கு இருந்தது. இந்திய நாட்டுத் தலைவர்கள், பயணங்கள், தியாகிகள், சின்ன சின்ன கதைகள் என்று சுவாரசியமாக இருக்கும். செய்திப்படங்கள் போடும் பழக்கம் இப்போது சுத்தமாக மறைந்தே போய் விட்டது. ஆனால் அதிசயமாக, சமீபத்தில் அயன் படம் பார்க்க போனபோது மதுரையில் உள்ள தியேட்டரில் ஒரு படம் போட்டார்கள். அது ஒரு கார்ட்டூன் படம். அந்த படத்தின் பெயர்.." The first puff - புகைப்பழக்கத்தின் முதல் தருணம்.."
ஒரு சேரின் மேல் மனிதன் ஒருவன் அமர்ந்து இருக்கிறான். அவனுடைய உடல் இதய வடிவத்தில் இருக்கிறது. கீழே கிடக்கும் ஒரு பீடித்துண்டை எடுத்துப் புகைக்கிறான். அடுத்து அவன் புகைப்பது சிகரெட்டாக மாறுகிறது. இப்போது சிந்திக்கிறான். ஒரு குழாயை எடுத்து அதில் கஞ்சாவை நிரப்பி குடிக்கிறான். கடைசியாக போதை மருந்து. பேப்பரில் போட்டு சூடு பண்ணி அதையும் புகைக்கிறான். அவன் இவ்வாறு செய்து கொண்டிருக்கும்போது அவனுடைய இதய வடிவிலான உடல் கொஞ்சம் கொஞ்சமாக கறுப்பாக மாறி வருகிறது. அவனுடைய இதயத்தை க்ளோசப்பில் காட்டுகிறார்கள். வேகமாக கறுப்பாக மாறி அதிவேகமாக துடிக்கத் தொடங்குகிறது. ஒரு கட்டத்தில் படாரென வெடித்துச் சிதறுகிறது.
படத்தின் கடைசியில் இரண்டு வரிகள் தோன்றுகின்றன. " the first puff - might be your last puff". மொத்தப்படமும் ரெண்டே நிமிடம்தான். ஆனால் சொல்ல வந்த விஷயத்தை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் தெளிவாக சொல்லி இருந்தார்கள். இசையும் அருமை. எனக்குத் தெரிந்த வரை நம் மக்கள் உடம்புக்கு ஆகாது எனத் தெரிந்தும் செய்யும் ஒரு கெட்ட காரியம் என்றால் அது புகை பிடிப்பதுதான். இதில் பெரும் கொடுமை என்னவென்றால், அன்றைக்கு தியேட்டரில்.. இடைவேளையின் போது என்னால் வெளியே நிற்கவே முடியவில்லை. எங்கும் புகை மண்டலம். தண்ணி அடிப்பவர்களைக் கூட ஒரு கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். எங்காவது ஓரமாக மல்லாந்து விடுவார்கள்.. அவர்களால் மற்றவர்களின் உடல்நலம் பாதிக்கப் படுவதில்லை. ஆனால் சிகரெட் பிடிப்பவர்கள்..? தங்களின் உடல் நலத்தையும் கெடுத்து.. அடுத்தவரின் நிம்மதியையும் உடலையும் பாழ் பண்ணி (passive smoking)... இவர்களை என்ன செய்வது?
எனக்கு அரசியல் கட்சிகளில் சுத்தமாக பிடிக்காத ஒரு கட்சி பா.ம.க. அதிலும் டாக்டர் அன்புமணி ராம்தாஸ் சுகாதாரத் துறை அமைச்சராக ஆனபோது மண்டை காய்ந்து போனேன். ஆனால், அவர் வாழ்க்கையிலேயே செய்த ஒரே உருப்புடியான விஷயம்.. புகையிலைக்கு எதிராக போராடியதுதான் என்று சொல்வேன். அவர் அதை அரசியல் காரணங்களுக்காக செய்து இருக்கலாம். ஆனால் அந்த முயற்சி ரொம்ப நியாயமானதே. அன்புமணியின் வேண்டுகோளை ஏற்று ரஜினிகாந்த் தன்னுடைய படங்களில் புகை பிடிக்கும் காட்சி இடம்பெறாமல் பார்த்துக் கொண்டது ஒரு நல்ல உதாரணம். காரணம், நம் தமிழ் மக்களை சினிமா எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும். அதேபோல பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்ததை ஒழுங்காக நடைமுறைப்படுத்தி இருந்தால் எத்தனையோ மக்கள் சந்தோஷப்பட்டு இருப்பார்கள்.
கிட்டத்தட்ட 400 விஷப் பொருட்களையும், 4000 வேதியியல் பொருட்களையும் தன்னுள்ளே அடக்கியதுதான் சிகரெட். புகை பிடிப்பதனால் எட்டு நொடிக்கு ஒரு மரணம் நிகழ்கிறதாம். கேன்சர், இதய நோய்கள் என சிகரெட்டால் வரும் பிரச்சினைகள் ஏராளம். முக்கியமாக ஆண்மைக்குறைவு ஏற்படவும் சிகரெட் காரணமாக இருக்கிறது. புகைப்பவர்களை மட்டும் அல்லாது புகையை உள்வாங்கும் அருகில் இருக்கும் மனிதர்களையும் சிகரெட் வெகுவாக பாதிக்கிறது. இன்று வெளிநாடுகளில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் புகைக்கிறார்கள். இது அவர்கள் கர்ப்பமாக இருக்கும்போது சிசுவின் மரணத்திற்கு வித்திடுகிறது.
நீர் நிரம்பிய பாட்டில் ஒன்றில் சின்ன ஓட்டை விழுந்து தண்ணீர் ஒழுகி ஓடுவதைபோல.. மனிதன் புகைக்கும் ஒவ்வொரு தருணத்திலும் உயிர் கொஞ்சம் கொஞ்சமாய் உடலை விட்டு வெளியேறுகிறது. உண்மையை சொல்வதானால், மனிதன் உயிருடன் இருக்கும்போதே தனக்கு தானே வைத்துக் கொள்ளும் கொள்ளிதான் சிகரெட். புகைக்கும் நண்பர்களிடம் ஒரு வேண்டுகோள்... அடுத்த முறை நெருப்பை பற்ற வைக்கும்போது ஒன்றே ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் என்பது நீங்கள் மட்டும் அல்ல.. அதில் உங்கள் குடும்பமும் அடக்கம். உங்களை நம்பித்தான் அவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் புகைக்கும்போது அவர்களின் நலனையும் நம்பிக்கையையும் சேர்த்துத்தான் எரிக்கிறீர்கள். இதை படிக்கும் யாராவது ஒருவர் சிந்தித்தால் கூட அதுவே எனக்குப் போதும்..!!!
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)