Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

July 29, 2013

பட்டத்து யானை




பட்டத்து யானை – போலச் செய்தலின் துயரம்”னு தான் ஆரம்பிக்கலாம்னு இருந்தேன். ஆனா சாரி, இந்தப்படம் அதுக்கெல்லாம் வொர்த் இல்லை. கொஞ்ச நாள் முன்னாடி – வேட்டைக்காரன் வெளியான சமயம் – ஆனந்த விகடன்ல விஜய் ரசிகர்கள் கடிதம் எழுதின மாதிரி ஒரு மேட்டர் பண்ணியிருந்தாங்க. போஸ்டர்ல இருக்க கதாநாயகியோட முகமும், பாட்டும் வேற வேறயா இருக்குறத வச்சுத்தான் தலைவா உங்க படங்களுக்கு நடுவுல இருக்க வித்தியாசங்களைக் கண்டுபிடிக்க முடியுதுன்னு எழுதி இருப்பாங்க. அது விஷாலோட பட்டத்து யானைக்கும் பொருந்தும். நாம நடிச்ச படத்தோட கதைலயே மறுபடியும் நடிக்கிறோமேன்னு சின்ன குற்றவுணர்ச்சி கூட இவங்களுக்கு எல்லாம் வராதா?


அந்நியன் – கந்தசாமி


மலைக்கோட்டை – பட்டத்து யானை


விக்ரம் – விஷால் – விளங்கிரும் (இதுல இன்னொரு வி-யும் வரும்.... அதான் ஊருக்கே தெரியுமே)


வெடி, சமர்னு ரெண்டு பிளாக்பஸ்டருக்குப் பிறகு இந்தப்படமாவது ஓடாதான்னு விஷால் ஏங்கிப் போயிருக்காரு. சாரி பாஸ், பாண்டியநாடு எதையாவது மாத்துதான்னு பார்ப்போம். வெளிறிப் போன வெள்ள காக்கா (அல்லது) வேக வைக்காத கருவாடு மாதிரி இருக்காங்க ஐஸ்வர்யா அர்ஜுன். அவங்களுக்கு ரெண்டு பாட்டு + நாலு சீன் = கேமிராமேன் இஸ் வெரி பாவம். படம் முழுக்க வந்தும் சந்தானத்தால யாரையும் சிரிக்க வைக்க முடியலைன்னா அவர் கேரக்டர் எவ்வளவு மொக்கைன்னு பார்த்துக்கோங்க. கலர் ஜெராக்ஸ் போட்ட காட்ஸில்லா, காடையை வறுத்து கல்லாவுல உட்கார வச்சது எவண்டான்னு டிரைலர் காமெடியைப் பார்த்து ஏமாந்து படத்துக்கு போன நமக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும். விஷால் கிட்ட அடி வாங்கிச் சாகுறதுக்கு ஒரு சீரியஸ் வில்லன், சில பல காமெடி வில்லன்கள்னு பலர் வந்து போறாங்க.. வந்து… போறாங்க.. அவ்வளவே. எப்பவும் போல ரெண்டு சீனே வந்தாலும் மயில்சாமி பட்டாசு.


இண்டெர்வல் ப்ளாக்ல வருது பாருங்க ஒரு ட்விஸ்டு.. யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டோம். வில்லன் காண்டாகிக் கத்துறாரு.. “ஆஃப்டர் ஆல் ஒரு சமையக்காரன் நீ.. என்ன அடிச்சிட்டியா..” ஒடனே விஷால் அடிக்கிறாரு பாருங்க ரிபீட்டு.. “ஆமாண்டா.. நா சமையக்காரன் தான்.. ஆனா நா சமையல் கத்துகிட்டது எங்க தெரியுமா.. மதுர ஜெயில்லடா..” எனக்கோ ஒரே பயம். “நான் சாணக்கியன் இல்ல.. சத்திரியண்டா...” ஹோ ஹோ ஹோன்னு பேக்கிரவுண்டு முசீக் போட்டு மீனாட்சி அம்மன் கோயிலைக் காட்டிருவாய்ங்களோன்னு. நல்ல வேளை தப்பிச்சோம்டா சாமி. இப்படித்தான் போகும்னு தெரிஞ்சாலும் ஃபிளாஷ்பேக்குல வர்ற குழந்தையோட கதை – அந்தப் பத்து நிமிஷம் மட்டும்தான் கொஞ்சமாவது படத்தோட டிராவல் பண்ண முடிஞ்சது.     


ஹாரிஸ் ஜெயராஜுக்கு ஒரு அருள் மாதிரி தமனுக்கு இந்தப்படம். ஒரு பாட்டு கூட வெளங்கலை. என்னவொரு என்னவொரு அழகியடா பாட்டு மட்டும் பரவாயில்லை ரகம். ஆனா அதையும் இதுக்கு முன்னாடி எங்கயோ கேட்ட மாதிரியே இருக்கு. படமே சரியில்லைன்னு ஆன பிறகு ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, எடிட்டிங் பத்தியெல்லாம் தனித்தனியா பேசி என்ன ஆகப்போவுது? விடுங்க.. பூபதிபாண்டியனோட காதல் சொல்ல வந்தேன் கான்செப்ட் மோசம்னாலும் படம் பார்க்க நல்லா இருந்தது. ஆனா திரைக்கதை சொதப்பினதால பட்டத்து யானைல சுத்தமா உட்காரவே முடியலை. டைரக்டர் சார்.. முடிக்கிறதுக்கு முன்னாடி ஒரே ஒரு டவுட்டு.. இந்தப்படத்துக்கு எதுக்கு சார் பட்டத்து யானைன்னு பேர் வச்சீங்க?

April 14, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி - ஒரு பின்நவீனத்துவப் பார்வை

ரமணிசந்திரன் என்றொரு எழுத்தாளர் இருக்கிறார். தமிழில் இன்றைக்கு அதிகம் விற்பனையாகும் நாவல்களை எழுதிக் கொண்டிருப்பவர். எனக்குத் தெரிந்த எல்லாப் பெண்களுக்கும் அவரை ரொம்பப் பிடிக்கும். ஆனால், நான் வாசித்த வரையில், அவரிடம் இருப்பது ஒரே கதைதான். காதலாகிக் கசிந்துருகும் ஒரு ஆணும் பெண்ணும். பெரும்பாலும் அந்தப் பெண் ஏழையாகவும் ஆண் பணக்காரனாகவும் இருப்பார்கள். திடீரென ஆணுக்குப் பெண் மீது சந்தேகம் வந்து பிரிவார்கள். நீண்டதொரு இடைவெளிக்குப் பிறகு இருவரும் சந்திக்கும்போது பெண் ஆணிடம் வேலை செய்திட வேண்டிய சூழல் நேரும். பிறகு அவனுடைய அண்மையை விட்டு விலகிட முடியாமல் அவள் தன்னைத் தொலைப்பதும் பிரச்சினைகள் தீர்ந்து பெரிய மனதோடு அவன் அவளை ஏற்றுக் கொள்வதும் எனக் கதை முடியும். கிட்டத்தட்ட இதே மாதிரியான ஒற்றைக் கதையோடு தமிழ் சினிமாவை ஒரு கை பார்த்திடக் களம் இறங்கி இருக்கும் எம்.ராஜேஷின் மூன்றாவது படம்தான் ஒரு கல் ஒரு கண்ணாடி.

பொறுப்பே இல்லாத ஒரு ஆண். வீட்டில் வம்பு வளர்ப்பதும் தண்ணி அடிப்பதும் பெண்கள் பின்னால் சுற்றுவதும் அன்றி வேறேதும் தெரியாதவன். அவனைக் கூட இருந்து வழிநடத்தும் நண்பன். தனது மகன் தப்பே செய்தாலும் கூடவே இருந்து ஊக்கம் தரும் அம்மா. எதேச்சையாகப் பார்க்கும் பெண்ணோடு காதல். அவளுடைய அப்பா கண்டிப்பாக காதலுக்கு எதிரியாக இருப்பார். தொடர்ச்சியான வழிதல் மற்றும் மோதலுக்குப் பிறகு உறுதியாகும் காதல். எல்லாம் நல்லபடியாக முடிந்தது எனும் நிலையில் நண்பனை முன்னிட்டு ஒரு பிரிவு. கடைசியில் காதலர்கள் ஒன்றுசேர சுபம். கதை என்கிற விசயத்தைப் பற்றி கவலையே படாது கொண்டாட்டத்தை நம்பிக் களம் இறங்கி இருக்குறார் இயக்குனர்.



என்றாலும் மூன்றாம் காலனிய ஆதிக்கச் சிந்தனைகளுக்கு எதிரான உதிரிகளின் நடவடிக்கைகளைப் பதிவு செய்வதோடு சில பல புனித பிம்பங்களை உடைத்தெறிவதோடு நம்பப்பட்ட உண்மைகளையும் சொல்லப்பட்ட நியாயங்களையும் விமர்சனத்துக்கு உள்ளாக்குவதாலும் குடி உடல்நலத்துக்குக் கேடு என்கிற வரிகளைச் சேர்த்துக் கொண்டு படம் முழுவதும் குடியைப் பிரதானப்படுத்தி இந்திய சென்சார் விதிகளை எள்ளி நகையாடுவதோடு எல்லாவற்றையும் பகடி செய்யும் நோக்குடன் மையத்தைச் சிதறடிக்கும் பின்நவீனத்துவப் போக்குகள் படம் முழுவதும் நிரம்பி வழிகின்றன என்கிற வகையிலும் ஒரு கல் ஒரு கண்ணாடி மிக முக்கியமான படமாக மாறுகிறது.

தமிழ் சினிமாவின் நாயகன் என்கிற கற்பிக்கப்பட்ட உண்மையின் பேருருவை ஒன்றுமில்லாததாக கலைத்துப் போட்டு உடன் வரும் நண்பனை முன்னிறுத்திப் புதியதொரு சகாப்தம் படைக்கிறார்கள். எதிலும் நிலையில்லாதவனாக யாராலும் நம்ப முடியாதவனாக நாயகனுடைய பாத்திரம் இருப்பது பின்காலனிய காலகட்டத்தின் மறுக்கவியலாக் கூறுகளைப் பிரதிபலிக்கிறது. இத்தனை காலம் உடற்பயிற்சி நடனத்தின் பிரதிநிதியாக தான் ஒருவன் மட்டுமே இருக்கிறோம் என்கிற கே.பாக்கியராஜின் இறுமாப்பையும் அவருடைய சர்வாதிகாரத்தையும் உதயநிதி ஸ்டாலின் என்கிற அஸ்திரத்தைக் கொண்டு வீழ்த்தி இருக்கிறார் இயக்குனர். காதல் சோகம் பாசம் கோபம் என எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியான முகம் கொண்டு நிற்பதன் மூலமாக புதுவிதமான நடிப்பு முறையையும் செய்து பார்த்திருக்கிறார்கள் எனும்போது இயக்குனரின் பரீட்சார்த்த ஆர்வங்களை நம்மால் வியக்காமல் இருக்க முடிவதில்லை. மோந்து பார்த்தாலே மட்டையாயிடுவாண்டா என்கிற வாய்மொழி வழக்காடலை முதன்முறையாக காட்சிப்படுத்திக் காட்டி இருக்கும் இயக்குனரின் தைரியம் அசாத்தியமானதும் கூட.

பிரதிக்கு உள்ளேயே பிரதியைப் பற்றிய விமர்சனங்களை முன்வைப்பது பின்நவீனத்துவத்தின் மற்றொரு முக்கியமான போக்கு. நாயகன், நாயகியாக நடித்திருக்கும் ஹன்சிகா மோத்வானியைப் பார்க்கும் முதல் தடவையிலேயே, பித்துப் பிடித்தவன் ஆகிறான். ஆனால் நாயகியைப் பெண் பார்க்க வரும் மற்றொரு பாத்திரத்தின் மூலமாக நீ சிரிச்சா கேவலமா இருக்கு நீ போட்டிருக்க டிரஸ் பச்சக் கலரு சிங்குச்சா ஆக மொத்தம் நீ ஆண்ட்டி மாதிரி இருக்க என்று நேரடியான விமர்சனங்களை முன்வைக்கிறார் அல்லது தன் மனதில் இருக்கும் உண்மைகளை வெளிப்படுத்தவும் செய்கிறார் இயக்குனர். ஆக ஒரு வகையில் இவ்வளவுதான் உன் தேர்வா என்று இந்த இடத்தில் நாயகனைப் பார்த்து எள்ளி நகையாடுகிறார்.

சந்தானத்தின் பாத்திரம் இந்தப்படத்தின் உச்சபட்சக் கொண்டாட்டம். தமிழ் சினிமாவின் நண்பனை நேரடியாகப் பகடி செய்கிறதன் மூலம் இதுநாள் வரை சொல்லப்பட்ட நண்பர்களின் நியாயங்களைக் கேள்விக்கு உள்ளாக்கும் பாத்திரம். தனது காதலியை அனுப்பி நண்பனின் காதலைக் கூறுபோடும் நண்பனின் குரூரத்தை இதுவரைக்கும் யாரும் தமிழில் சொன்னதில்லை என்றே சொல்லலாம். இறுதிக்காட்சியில் ஹன்சிகா திருமணத்தில் உதயநிதி ஆங்கிலத்தில் பொளந்துகட்ட அதை சந்தானம் மொழிபெயர்ப்பதும் பிரசங்கிப்பதும் வாழ்க்கை என்பதும் இது மாதிரியான எழுப்புதல் கூட்டங்களுக்கு ஒப்பானதுதான் எனச் சொல்லும் மிகக் கூர்மையான அங்கதம். ஆனாலும் படம் முழுதும் சந்தானம் தெலுங்கு நடிகர் பிரம்மானந்தத்தைப் பிரதி செய்ய முர்பட்டிருக்கிறார் என்பதைச் சின்னதொரு வருத்தத்தோடு இங்கு பதிவு செய்வது அவசியமாகிறது.

எப்போதும் தனது இசையை தானே மீண்டும் நகல் எடுக்கும் புனித இசைப்போராளி ஹாரிஸ் இந்தப் படத்திலும் தனது திருப்பணியை தெளிவாகச் செய்திருக்கிறார். கண்களை மூடிக் கொண்டு பின்னணி இசையைக் கேட்டால் அப்படியே கஜினியில் இருந்து உருவியது தெளிவாகப் புரியும். அதே போல மொத்தத் தியேட்டரையும் நடனமாட வைக்கும் - அத்தனை பாதிக்கப்பட்டவர்கள் இங்கே இருக்கிறார்கள் - வேணாம் மச்சான் வேணாம் பாடலை ஒரு படி மேலே போய் தேவா வடிவேலும் இணையின் வாடி பொட்டப்புள்ள வெளியே பாடலில் இருந்து உருவியதின் மூலம் மாறி வரும் காலப்போக்குக்குத் தகுந்தாற்போல தானும் மறக்கூடியவன் என்பதை அழகாகப் பதிவு செய்கிறார் ஹாரிஸ்.

அப்படியானால் இந்தப்படத்தின் ஆகப்பெரிய பிரச்சினை தான் என்ன? இயக்குனரின் மனம் ஆண்வயப்பட்டதாக இருக்கிறது. அது நாயகனின் எல்லா செயல்களையும் நியாயப்படுத்துகிறது. அவன் எத்தனை மோசமானவனாக வெட்டியான ஆளாக இருந்தாலும் பரவாயில்லை எந்த மறுதலிப்பும் இன்றி அவனை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனப் பெண்ணை நிர்ப்பந்திக்கிறது. அழகான பெண்கள் மட்டுமே சாலையில் நடமாட வேண்டும் என்பதிலும் புற அழகே காதலை முடிவு செய்கிறது என்பதிலும் நாயகியைக் கட்டாயப்படுத்தி அவள் அன்பைப் பெற்றாலும் ஆணைப் பொறுத்தவரை எதுவும் சரிதான் என்பதிலும் தென்படுவதுஆண் என்னும் அகங்காரத்தின் உச்சம். இருபது வருடம் பேசாமல் இருந்த தன் கணவன் ஒற்றை வார்த்தை பேசியவுடன் இத்தனை வருடம் ஆதரவாக இருந்த பையனை நாயகனின் அம்மா வைவதும் கூட இயக்குனரின் ஆணாதிக்க மனத்தின் வெளிப்பாடே. இத்தனைச் சிக்கல்களை முன்வைத்து பார்க்கும்போது..

ஏய் ஏய் நிறுத்து.. எதுக்கு இவ்ளோ மெனக்கெடுற? படம் நல்லா இருக்கா இல்லையா? சூப்பரா இருக்கு தலைவா. ஜாலியா போய் கொண்டாடிட்டு ஜாலியா வரலாம். அவ்ளோதான. அப்புறம் எதுக்கு இப்படி ஜல்லியடிக்குற. போ.. போய் பொழப்பப் பாரு. அட.. இப்பப் பார்த்தீங்கன்னா.. விமர்சனத்துக்கு நடுவுல நீங்களும் எழுதுறவரும் பேசிக்கிறீங்க பாருங்க. இது கூட பின்நவீனத்துவக் கூறுதான். அதாவது.. கீழைத்தேய மரபுல என்ன சொல்றாங்கன்னா.. டேய்.. அடிவாங்காம ஓடிப் போயிரு, இத்தோட முடிச்சுக்குவோம்.

ஒரு கல் ஒரு கண்ணாடி - கொண்டாட்டம்

March 31, 2012

3 - திரைப்பார்வை

இழவு வீட்டில் ஆரம்பிக்கும் முதல் காட்சி. குடிமக்கள் புடைசூழ பாரில் நடைபெறும் நாயகன் நாயகி திருமணம். வி நெக்கும் த்ரீ ஃபோர்த்தும் அணிந்து முதலிரவில் நளினமாய் நடைபயிலும் நாயகி. காதலர்கள் இருவரும் மேற்கத்திய உடையில் ஷாம்பெயன் அருந்தி தங்கள் திருமண நாளை கொண்டாடுகிறார்கள். நாயகனுக்கு மனப்பிறழ்வு. ஆனால், அவனுக்கு சின்ன வயது பாதிப்பு அல்லது அம்மா மீதான அதீத அன்பு என்று க்ளிஷேவாக காரணங்கள் ஏதுமில்லாமல், மனநோய். அவ்வளவே. இப்படியாக தமிழ் மரபு அல்லது நம்பிக்கைகள் என்பதாகச் சொல்லப்படும் பல விசயங்களை விலக்கி வைக்கும் படமாக வெளியாகி இருக்கிறது ஐஸ்வர்யா ஆர் தனுசின் “3”.



தனுஷ் - அவருக்குள் இருக்கும் இன்னொரு தனுஷ் - ஸ்ருதி - 3. தனுஷ் ஸ்ருதி பள்ளிக்காதல் - அவர்கள் திருமணம் - அதன் பின்பான வாழ்க்கை - 3. தனுஷ் - ஸ்ருதி - ஐஸ்வர்யா - 3. தனுஷ் ஸ்ருதி - ஐஸ்வர்யா - செல்வராகவன் - 3. அடப்போங்கப்போ. ஏதோ ஒரு வகையில 3. பள்ளிக்காலத்தில் சந்திக்கும் தனுசும் ஐஸ்வர்யாவும் காதலிக்கிறார்கள். ஐந்து வருடங்களுக்குப் பின் வீட்டை எதிர்த்து திருமணம். நல்லபடியாகப் போய்க்கொண்டிருக்கும் வாழ்வில் இடைவேளைக்குப் பிறகு பிரச்சினை. தனுசுக்கு மனநோய். மனைவிக்குத் தெரியாமல் அதிலிருந்து தப்ப முயல்கிறார். ஆனால் அது இயலாது தோற்கிறார். கடைசியில் அவருக்கு என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை.

பழைய படங்களில் எல்லாம் ஒரு டெம்ப்ளேட் வைத்திருப்பார்கள். பெரிய குடும்பத்தின் தலைவர் என்றால் ரங்காராவ், பண்ணையார் என்றால் மனோகர், கிருஷ்ணர் என்றால் ராமாராவ். அதுப்போல இப்போதைய படங்களில் சைக்கோ என்றால் கூப்புடுறா தனுசை என்கிறார்கள். ஏன்யா, இப்பத்தானய்யா மயக்கம் என்ன வந்துச்சு? கந்தசாமி பார்க்கும்போது வந்த மிகப்பெரிய சந்தேகம் அது எப்படி இந்தாளு தான் நடிச்ச அந்நியன் படத்தையே ரீமேக் பண்ண ஒத்துக்கிட்டாருன்னு. இப்போ அது போயிருச்சு. எல்லாம் ஒரே குட்டைல ஊறுன மட்டைங்க. ஆனா தான் எப்படிப்பட்ட நடிகர்னு கிளைமாக்ஸ் சீன்ல காட்டுறாரு பாருங்க.. அதுதான் தனுஷ். பள்ளிப்பருவ உடல்மொழியும் இரண்டாம் பாதியில் அதற்கு அப்படியே எதிராக மாறும் மனநோய் கொண்டவரும் என பிரித்து மேய்கிறார்.



ஸ்ருதிக்கு இதுதான் முதல் படமாக வந்திருக்க வேண்டும். ஸ்கூல் யூனிஃபார்மில் அத்தனை அழகு. கெச்சலான அவரது உடம்பும் நிமிசத்துக்கு நிமிசம் மாறும் முகபாவனைகளும் அசர அடிக்கின்றன. சொல்லப்போனால் முதல் பாதியின் நாயகன் ஸ்ருதிதான். மாடியில் தனுசின் கையை இன்னும் ஒரு நிமிடம் பிடித்துக் கொள்ளட்டுமா எனும்போதும் முதலிரவில் கணவன் மடியில் அமர்ந்து உறவாடும்போதும் நெஞ்சை அள்ளுகிறார். ஆனால் இரண்டாம் பாதி முழுதும் அவரை அழ வைத்தே காலி செய்கிறார்கள். படத்தில் கவனம் ஈர்க்கும் இன்னொரு மனிதர் சிவகார்த்திகேயன். அவரை ஸ்கூல் பையன் எனச் சொல்வது காமெடியாக இருந்தாலும் தனது ஒன் லைனர்களால் வெளுத்து வாங்குகிறார். இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள் யூ நோ.

படத்தின் முன்பாக தைரியமாக “ எ அநிருத் ம்யூசிக்கல்” என்று போடலாம். பாடல்களிலும் பின்னணி இசையிலும் வெளுத்து வாங்கி இருக்கிறார் மனிதர். குறிப்பாக தீம் ம்யூசிக்கைக் கொண்டு போய் தனுசின் சண்டையில் சேர்த்த விதம் அழகு. பாடல்களைப் படமாக்கியதில் கண்ணழகாவும் இதழின் ஒரு ஓரமும் டாப். எதிர்பார்த்ததைப் போலவே கொலவெறியை படு கேவலமாகப் படமாக்கி இருக்கிறார்கள். போதாக்குறைக்கு பாட்டு பூராவும் விளம்பரங்கள் இருந்தது பெரிய எரிச்சல். ஒளிப்பதிவாளருக்கு முதல் பாதியில் நல்ல வாய்ப்பு. தன்னை வெளிக்காட்டிக் கொள்ள அதைச் சரியாக பயன்படுத்தி இருக்கிறார்.



அருமையான காதல், நல்ல நடிகர்கள். அட்டகாசமான இசை என எல்லாம் இருந்தும் இந்தப்படத்தை நல்ல படம் எனச் சொல்ல முடியாமல் போனதற்குக் காரணம் இயக்குனர் ஐஸ்வர்யா. சமீபத்தைய எல்லாப் படங்களையும் போல இதிலும் இரண்டு கதைகள். முதல் பாதி காதல் கதை. இரண்டாம் பாதி சைக்கோ கதை. இரண்டும் ஒட்டவே இல்லை. கணவனின் மேல் அத்தனை பிரியம் கொண்ட பெண் அவனுள் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டுபிடிக்காமலா இருப்பாள்? தன் நிலை இத்தனை மோசம் என்று தெரிந்தும் ஏன் தனுஷ் மருத்துவம் செய்து கொள்ள மறுக்கிறார்? நண்பன் குடும்பம் பற்றி எல்லாம் தெரிந்தும் சுந்தர் ஏன் விட்டு வேடிக்கை பார்க்க வேண்டும்? சுத்தமாக லாஜிக் இல்லாத நிலையில் படம் பார்ப்பவரைப் பெரிதும் சோர்வடையச் செய்கிறது. என்னைக் கேட்டால் முதல் பாதியோடு கூட படத்தை முடித்து மக்களைச் சந்தோசமாக வீட்டுக்கு அனுப்பி இருக்கலாம். அதுவே மூன்று மணி நேரம் படம் பார்த்த உணர்வைத்தான் தந்தது. நன்றாக இருந்தாலும் அத்தனை நீளம். இதில் இரண்டாம் பாதி சைக்கோ என்றதில் பார்ப்பவர்கள் மண்டை காய்ந்ததுதான் மிச்சம்.

படம் முடிந்தபின்னும் எனக்குக் குழப்பமாக இருந்தது. படம் பிடிக்கவில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் முழுவதும் பிடித்ததா என்றால் அதுவும் இல்லை. அடுத்த படத்தில் திரைக்கதையைச் சரியாக அமைப்பதின் மூலம் இந்தக் குழப்பங்கள் எல்லாம் ஏற்படாமல் இருக்க ஐஸ்வர்யா அருள் புரிவாராக. ஆமேன்.

3 - குழப்பம்.

March 3, 2012

அரவான் - திரைப்பார்வை

சாகித்ய அகாடமி விருது பெற்ற காவல் கோட்டம் நாவலை அடிப்படையாகக் கொண்டு அரவானை உருவாக்கி இருக்கிறார் வசந்தபாலன். மதுரையின் நீண்ட வரலாற்றைப் பேசும் நாவலின் ஒரு பகுதியான பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கள்வர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்ய முயன்றிருக்கிறார்கள். சமீப காலமாக தமிழ் சினிமாவைப் பெரிதாய் ஆக்கிரமித்திருக்கும் பீரியட் பிலிம் மேனியாவில் (மாவீரன் எஃபெக்ட்?!!!) முதல் படமாய் வெளியாகி இருக்கிறது அரவான். டி சிவாவின் அம்மா கிரியேசன்ஸ் தயாரிப்பு.



கள்வர்கள் வாழும் கிராமம் வேம்பூர். ஊருக்குள் பெரிய கொத்து கொம்பூதியுனுடையது. அதில் புதிதாக வந்து சேருகிறான் அநாதையான வரிப்புலி. முதலில் அவனை வெறுக்கும் ஊர்மக்கள் அவன் திறமையைப் பார்த்து தங்களில் ஒருவனாக ஏற்றுக் கொள்கிறார்கள். யாருமே திருட முடியாத கோட்டையூர் காவலை உடைத்துத் திரும்புகையில் காவலர்களிடம் சிக்கிக் கொள்கிறான் கொம்பூதி. அப்போது தன் உயிரைப் பணயம் வைத்து கொம்பூதியைக் காக்கிறான் வரிப்புலி. இருவருக்குமான நட்பு இன்னும் அத்தியந்தம் ஆகிறது.

தன் தங்கையை மணக்கும்படி கேட்கும் கொம்பூதியிடம் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்ட உண்மையைச் சொல்லும் வரிப்புலியின் உண்மையான பின்புலம் என்ன? மாடுபிடி ஒன்றில் வேம்பூரின் மானம் காக்கக் களமிறங்கும் அவனை ஒரு கும்பல் அடித்துக் கைது செய்கிறது. கூடவே அவன் சின்னியவீரம்பட்டியின் பலியாள் என்றும் சொல்லிப் போகிறது. என்ன காரணத்துக்காக புலி பலியாள் ஆக்கப்பட்டான்? இறுதியில் வரிப்புலியின் முடிவு என்ன ஆனது என்பதைச் சொல்லும் கதைதான் அரவான்.



படத்தின் முதல் பாதியின் நாயகன் - கொம்பூதியாக வரும் பசுபதி. தொண்ணூறுகளில் நாசர் என்றால் இப்போது பசுபதி. தனக்குத் தரும் எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் சரியாகச் செய்யும் மனிதர். இரண்டாம் பாதி வரிப்புலி ஆதிக்குச் சொந்தம். ஆள் பார்க்க அட்டகாசமாக இருக்கிறார். கடுமையாக உழைத்து இருக்கிறார். ஆனால் அவருடைய குரலும் வசன உச்சரிப்பும் சுத்தமாக பழங்காலத் தமிழுக்கு ஒட்டவில்லை. ஆதியின் மனைவியாக வரும் தன்ஷிகாவுக்கும் இதே பிரச்சினைதான். படத்தின் நடுவே அங்கங்கே சிரிக்க வைக்கிறார் சிங்கப்புலி. பரத்தும் அஞ்சலியும் கண்டிப்பாக இந்தக் கதாபாத்திரங்களை செய்திருக்க வேண்டிய அவசியமில்லை.

படத்துக்கு மிகப்பெரிய பலம் சித்தார்த்தின் ஒளிப்பதிவு. நிறைய வித்தியாசமான கோணங்களில் அழகாகப் படம் பிடித்து கவனம் ஈர்க்கிறார் மனிதர். நிலா நிலா பாடலில் ஒரு மரத்தூருக்குள் முயங்கிக் கிடக்கும் ஆதி-தன்ஷிகா காட்சி ஒன்று போதும் படத்துக்கு. இன்னொரு அழகான இடம் ஆதி பசுபதியைக் காப்பாற்றும் காட்சி. நம்மால் முடிந்த கிராஃபிக்சோடு அழகாகப் படமாக்கி இருக்கிறார்கள். இது மாதிரியான பீரியட் படங்களில் கலை இயக்கம் பற்றி நிறைய பேசுவார்கள். நன்றாக இருந்தாலும் அரவானில் சில தவறுகளும் இருப்பதாகவே எனக்குப் பட்டது. குறிப்பாக அஞ்சலியின் உடை அமைப்பு சுத்தமாக அந்தக் காலகட்டத்துக்குப் பொருந்தாது போல எனக்கொரு உணர்வு. இசையமைப்பாளராக கார்த்தி அறிமுகம். பாடல்கள் எல்லாமே நிறைவு. பின்னணி இசையும் எனக்குப் பிடித்தே இருந்தது.



தனக்கு இலக்கியப் பரிச்சயம் உண்டு என்பதையும் வெவ்வேறு தளங்களில் படம் எடுப்பதே தனக்குப் பிடிக்கும் என அடிக்கடி சொல்லி வருபவர் வசந்தபாலன். அரவான் ஒரு அற்புதமான முயற்சி. முடிந்த அளவுக்கு நேர்மையாக சொல்ல முயன்று இருக்கிறார் மனிதர். கதையில் ஒரு இடத்தில் அறிமுகம் ஆகும் ராசா திக்கித் திக்கித் தமிழ் பேசுவார். என்னடா இது என்று யோசிக்கையில் பின்பு தான் ஞாபகம் வந்தது அது நாயக்கர் ஆண்ட காலம் என்பதும் ராசா தெலுங்கு பேசுபவர் என்பதும். இது மாதிரியான சின்ன சின்ன விசயங்களாக நிறைய பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள்.

ஆனால் சரியான கதையைத் தெரிவு செய்தவர் திரைக்கதையில் கோட்டை விட்டிருக்கிறார். ஆதியின் கதையைச் சொல்லும் இரண்டாம் பாதி சரியான இழுவை. கதை நகர்வேனா என்கிறது. வித்தியாசமகப் படம் பண்ண வேண்டும் என்கிற தைரியம் இருக்கும் இயக்குனர்கள் கூட ஏன் படத்தில் கண்டிப்பாகப் பாடல்கள் வேண்டும் என அடம்பிடிக்கிறார்கள் எனப் புரியமாட்டேன் என்கிறது. அதைப் போலவே எக்கச்சக்க கேள்விகளும். காவல்காரனான ஆதி பிழைக்க வேறு வழியே இல்லாமல் ஏன் திருடனாக வேண்டும்? தேட்டை போட்டதை எல்லாம் பசுபதி வருவார் என்பதற்காகவே உருண்டை போட்டு வைத்தாரா? ராசா காணாமல் போனால் பாளையம் என்ன ஏது என்று தேடாதா? நிறைய கேட்டுக் கொண்டே போகலாம். அத்தோடு படத்தில் பயன்படுத்தி இருக்கும் பேச்சுத்தமிழ். நாம் முந்தைய காலத்தின் பதிவொன்றைப் பார்க்கிறோம் என்கிற உணர்வே சுத்தமாக இல்லை.

படத்தில் சில இடங்களில் அபோகாலிப்டோவின் பாதிப்பு. படத்தின் முடிவைப் பொறுத்தவரைக்கும் வசந்தபாலன் ஒரு தீர்மானத்தோடு இருந்திருக்கிறார். கண்டிப்பாக தன் படங்கள் சோகமாகத்தான் முடிய வேண்டும் என்கிற எண்ணம் மனிதருக்கு இருக்கிறது. ஆதியை அடித்து இழுத்து வரும் காட்சிகளில் இயேசுவின் இறுதிப்பயணம்தான் நினைவுக்கு வந்தது. படம் முடிந்து மரண தண்டனையை ஒழிப்போம் என்று ஸ்லைடு போட்டார்கள். அதற்கும் இந்தப் படத்துக்கும் என்ன சம்பந்தம் எனப் புரியவில்லை. வெறுமனே இந்தக் காலத்துக்குப் பொருந்தக்கூடியது எனப் போட்டார்களோ என்னமோ?

அரவான் மீது எனக்குப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஒரு அனுபவமாக படம் அதை நிறைவேற்றவில்லை என்றுதான் சொல்லுவேன். திரைக்குழுவினரின் கடுமையான உழைப்பு, கள்வர்கள் வாழ்வின் மீதான பதிவு என்பதற்காகப் பார்க்கலாம்.

February 4, 2012

மெரினா - திரைப்பார்வை

உல சினிமா என்று சில படங்களை, குறிப்பாக ஈரானிய படங்களை, பார்க்கும் போதெல்லாம் பொறாமையாக இருக்கும். தொலைந்து போகும் காலணிகள், மறந்து போன வீட்டுப்பாடப் புத்தகத்தைக் கொண்டு போய்க் கொடுக்க அலையும் சிறுவன், தங்க மீன்கள் வாங்க ஆசைப்படும் குழந்தைகள் போன்ற வெகு சாதாரணமான கதைக்கருவை எடுத்துக்கொண்டு குழந்தைகளின் உலகை வெகு அழகாகப் படமாக்கி இருப்பார்கள். ஏன் இது மாதிரியான படங்களை நம்மால் எடுக்க முடியவில்லை நம் இயக்குனர்கள் ஏன் இப்படி முயற்சிகள் செய்வதில்லை என்று ஆதங்கமாக இருக்கும்.

தமிழ் சினிமாவின் குழந்தைகள் சபிக்கப்பட்டவர்கள். அவர்களை நாம் எப்போதும் இயல்பானவர்களாக திரையில் பார்க்கக் கிடைப்பதேயில்லை. தமிழ்ப்படங்களில் நம் குழந்தைகளுக்கு எப்போதும் இரண்டே வேலைதான். வயதுக்கு மீறி அதிகபிரசங்கித்தனமாகப் பேசி நாயகனின் காதலுக்கு உதவ வேண்டும் அல்லது அன்பான பிள்ளையாயிருந்து அநியாயமாய் வில்லனால் சாகடிக்கப்பட வேண்டும். அப்படி எல்லாம் இல்லாமல் குழந்தைகளின் உலகை இயல்பாக படமாக்கிய படங்கள் தமிழில் வெகு குறைவே.

அந்த வரிசையில் மெரினா என்கிற கடற்கரை பின்புலத்தை எடுத்துக்கொண்டு அங்கு பிழைத்துக் கிடைக்கும் சிறுவர்கள் மற்றும் மனிதர்களின் வாழ்க்கையைப் படமாக்கி இருக்கிறார் பாண்டிராஜ். அவருடைய முதல் படமான பசங்க படத்தின் சாயல் இருப்பது போலத் தோன்றினாலும் அதைக் காட்டிலும் நேர்மையானதொரு படமாகவும் நன்றாகவும் வந்திருக்கிறது மெரினா.



வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்து கடற்கரையில் பிழைப்புக்காக சுற்றித்திரியும் சிறுவர்கள், அவர்களுக்கு உதவும் ஒரு போஸ்ட்மேன், பெற்ற பிள்ளையை அசிங்கப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு பிச்சையெடுத்துத் திரியும் பெரியவர், சினிமா ஆசைகளோடு பாட்டுப் பாடி பிச்சையெடுக்கும் மனிதரும் அவர் பிள்ளையும், பைத்தியம் என்று மற்றவர்களால் ஒதுக்கப்படும் மனிதர், குதிரை சவாரி விட்டு பிழைப்பவர், விதவிதமான காதலர்கள்.. இவர்களின் வாழ்க்கையில் சில பகுதிகள்தான் மெரினா.

படத்தில் பெரிதாக கதை என்று ஏதுமில்லை. ஆனால் எல்லாருக்கும் சொல்வதற்கான வாழ்க்கை இருக்கிறது. கடற்கரையில் கிடக்கும் மனிதர்கள் என்பதற்காக அவர்களின் கஷ்டம் சோகம் விதிக்கெதிரான போராட்டம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிராமல் வாழ்வின் நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டு கொண்டாட்டமாய் வாழும் அவர்கள் வாழ்க்கையை சொல்லிப் போகிறது படம்.

நடிகர்களாக மிகச்சரியான மனிதர்களைத் தேர்வு செய்ததன் மூலம் படம் தரும் அனுபவத்தை மறக்க முடியாததாகச் செய்திருக்கிறார் பாண்டிராஜ். தன்னுடைய தயாரிப்பில் முதல் படம். ஏற்கனவே நிரூபித்த தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேடிப்போகாமல் இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என எல்லாமே புதுமுகங்களாய் பிடித்துப் போட்டிருக்கிறார். அவர்களும் நிறைவாகச் செய்திருக்கிறார்கள். குறிப்பாக இசையமைப்பாளர் கிரிஷ் படத்தின் மிகப்பெரிய பலம். படத்தின் முதல் இருபது நிமிடத்தை பார்த்தபின்பு சென்னையைப் பிடிக்காதவர்களுக்குக் கூட இனி சென்னை பிடிக்கக்கூடும். எடிட்டிங்கும் ஒளிப்பதிவும் இந்த காட்சிகளில் அட்டகாசம் செய்திருக்கின்றன.



படத்தின் ஒரே பிரச்சினை சிவகார்த்திகேயன் - ஓவியா வரும் பகுதிகள். எந்த ஒட்டுதலும் இல்லாத இன்றைய நவநாகரீகக் காதலைக் காட்ட நினைத்ததில் தவறில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக பெண்கள் எல்லோருமே கேவலமானவர்கள் என்பதாக அடிக்கடி வரும் வசனங்களை மட்டும் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். சிவகார்த்திகேயனைக் காட்டிலும் அவர் நண்பராக வருபவர் பட்டாசு கிளப்புகிறார். கடைசியில் அவருக்கே சி.கா பன்ச் சொல்வதும் திருமணம் முடிந்து கணவரோடு வரும் ஓவியா முதல் முறையாக பீச்சுக்கு வருவதாக சொல்லும் காட்சியும் நச்.

பசங்க படத்தில் ஏற்கனவே பார்த்த சிறுவர்களின் கொண்டாட்டங்கள், முதல் பாதியில் போலிஸ்காரர்கள் தரும் தேவையில்லாத பில்டப், அடுத்தடுத்து நடக்கும் காட்சிகளை நாம் கணிக்க முடிவது என சிலச்சில குறைகள் படத்தில் இருக்கின்றன. ஆனால் தொய்வில்லாத திரைக்கதையும் சிரிக்க வைத்துக் கொண்டேயிருக்கும் வசனங்களும் அதை எளிதில் மறக்கடித்து விடுகின்றன.

நம் மண்ணின் இயல்போடு படங்கள் வெளியாவதில்லை, தமிழ் வாழ்க்கையை யாரும் பதிவு செய்வதில்லை என்பது போன்றான குற்றச்சாட்டுகளுக்கு சரியான பதில் இந்தப்படம். பீச்சில் வாழும் மக்களை காட்சிப்படுத்தும் நல்ல முயற்சி. இன்னும் ஆழமாகப் பேசுவதற்கான ஸ்பேஸ் படத்தில் இருக்கிறது. காதல் பகுதிகளை வெட்டியெறிந்து விட்டு அனுப்பினால் உலக திரைப்பட விழாக்களில் கண்டிப்பாக மெரினா கலக்கும் என்றும் நம்புகிறேன். இயக்குனர் பாண்டிராஜுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

மெரினா - அனுபவம்

January 14, 2012

வேட்டை - திரைப்பார்வை

அய்யயயோ.. எங்களை யாராவது காப்பாத்துங்களேன்..

ப்ளீஸ்.. வேண்டாம்.. என்னை விட்டுருங்க..

என்னையப் பார்த்தா உனக்குப் பாவமா தெரியலையா..

நாங்க என்ன பாவம் செஞ்சோம்...

இந்த வசனம் எல்லாம் பொதுவாக தியேட்டரில் ஓடும் படங்களில் வருபவை. ஆனால் இதே வசனங்கள் தியேட்டரில் படம் பார்க்கும் மக்களிடம் இருந்து வந்தால்? அங்கே வேட்டை ஓடுகிறது என்று அர்த்தம்.



1990 களில் கே.பாக்யராஜ் அவசர போலிஸ் 100 என்றொரு படம் எடுத்தார். எம்.ஜி.ஆர் நடித்து வெளிவராத அண்ணா நீ என் தெய்வம் படத்தில் இருந்து சில காட்சிகளையும் இணைத்து இருப்பார். இரண்டு பாக்யராஜ்கள். அண்ணன் பயந்தாங்கொள்ளி. போலிசாக இருப்பார். தம்பி தைரியமானவர். தவறுகளை தைரியமாக தட்டிக் கேட்பவர். தம்பி செய்யும் வீரதீர செயல்களின் பலன் எல்லாம் அண்ணனுக்குக் கிடைக்கும். ஒரு கட்டத்தில் தம்பி ஆபத்தில் சிக்கிக் கொள்ள அண்ணனுக்கு வீரம் வந்து வில்லன்களை நொக்கி எடுக்க எல்லாம் சுபம். இந்த படத்தைத்தான் ரீமேக் செய்து ரசிகர்களை வேட்டை ஆடி இருக்கிறார் லிங்குசாமி.

கிட்டத்தட்ட வடிவேலு நடிக்க வேண்டிய கைப்புள்ள அண்ணன் கேரக்டரில் மாதவன். பார்க்கவே பாவமாக இருக்கிறது. வருகிறவன் போகிறவன் எல்லாரிடமும் அடி வாங்குகிறார். போதாக்குறைக்கு ஆர்யாவும் மாதவனை சந்தடி சாக்கில் ஒரு மிதி மிதித்துக் கொள்கிறார். கால்களில் அடிபட்டுக் கிடக்கும் மாதவனுக்கு நம்பிக்கை வர வேண்டும் என்பதற்காக ஆர்யா அடி வாங்கும் காட்சியில் தியேட்டரே சிரிக்கிறது. என்ன கொடுமை சார் இது? எந்த உணர்வையும் முகத்தில் காட்டாமல் சுற்றும் அதே ஆர்யா. பஞ்ச் பேசுவதும் சண்டை போடுவதும் மட்டுமே வேலை. நடுநடுவே வரும் காதல் காட்சிகளில் மட்டும் கொஞ்சமே கொஞ்சம் ரசிக்க வைக்கிறார்.



சமீரா ரெட்டியை தாவணியில் பார்த்தபோது தோன்றியது - முப்பது வருசத்துக்கு முன்னாடியே கல்யாணம் ஆகி இருக்க வேண்டியவ.. இன்னும் இப்படியே சுத்திக்கிட்டு இருக்கா. வாயாடிப் பெண்ணாக அவர் பேசும் வசனங்கள் எதுவுமே லிப் சின்க் ஆகாமல் படுத்தி எடுக்கிறது. அவரும் படத்தில் இருக்கிறார். அவ்வளவே. சமீராவின் தங்கையாக அமலா பால் ஆர்யாவின் ஜோடி. அவருடைய உடல்வாகுக்கு கவர்ச்சி காட்டினால் விளங்கவில்லை. ஆனால் மேக்கப் போட்ட அமலாவை விட மேக்கப் இல்லாத அந்தக் காந்தக் கண்களே அழகு. படத்தில் ஓரளவு ரசிக்கும்படியாக இருப்பவர் அவர் மட்டுமே. ஹீரோ எண்ட்ரி ஆகும்வரை டெர்ரர் மேனாகவும் அவர் வந்த பின்பு காமெடி பீசாகவும் மாறும் வழக்கமான வில்லனாக அசுதோஷ் ராணா. கடைசி காட்சி வரை டாய் டாய் என்று கத்திவிட்டு கிளைமாக்சில் செத்துப்போகும் ரொம்ப நல்ல மனிதர்.

மொத்த ரணகளத்திலும் ஒரே கிளுகிளுப்பு படம் முடிவதற்கு சற்று முன்னால் வரும் பப்பரப்பா பாப்பப்பா பாட்டு. அதைத் தவிர்த்து மற்ற பாடல்களில் எல்லாம் செமத்தியாக கோல் போட்டிருக்கிறார் யுவன்சங்கர் ராஜா. படத்துக்கு ஒளிப்பதிவு நீரவ் ஷா என்று டைட்டிலில் போட்டார்கள். வேறு எதுவும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. சண்டைக் காட்சிகள் அமைத்த புண்ணியவான் யாரோ.. எங்கிருந்தாலும் வாழ்க. அத்தனை பேரும் ஆர்யா விரல் பட்டாலே பறக்கிறார்கள். சரி விட்டுரலாம்.. மொத்தக் கோலமுமே அலங்கோலம் எனும்போது இந்தப் புள்ளி சரியில்லை அந்த வண்ணம் சரியில்லை எனப் புலம்பி என்ன பிரயோஜனம்?



தமிழ் சினிமாவில் இரண்டு இயக்குனர்களை தகுதிக்கு மீறிப் புகழ்கிறார்கள் என்பது எனது எண்ணம். ஒருவர் கவுதம். இன்னொருவர் லிங்குசாமி. அதில் எந்தத் தவறும் இல்லை என மீண்டும் நிரூபித்து இருக்கிறார் லிங்குசாமி. மொக்கைக் கதை. செம மொக்கைத் திரைக்கதை. ஆனால் இந்தப் படத்தை எடுத்து விட்டு என்னமோ கிம் கி டுக் ரேஞ்சுக்கு ஒவ்வொரு சேனலாக வந்து அந்த ஆள் செய்கிற அலப்பரை இருக்கே.. முடியலைடா சாமி.

எட்டு வருசமாக விஜய் படம் பார்ப்பது கிடையாது. நண்பனுக்காக அதை மாற்ற வேண்டாமே என இந்தப் படத்துக்குப் போனேன். எனக்கு இதுவும் வேணும். இன்னமும் வேண்டும்.

வேட்டை - அடப் போங்கையா.. படத்துக்குப் போனதுல ஒரே நல்ல விசயம் மசாலா கஃபே டிரைலர் மட்டும்தான்.

December 29, 2011

மௌனகுரு - திரைப்பார்வை

கிரிக்கெட் ஆட்டத்தில் முதல்தர பேட்ஸ்மேன்கள் எல்லாம் சொதப்பி எடுக்க டெயில் எண்டர்கள் அடி பின்னி எடுத்தால் எப்படி இருக்கும்? இந்த வருடம் வெளியான பெருந்தலைகளின் படங்கள் எல்லாம் மக்களை கொத்தி எடுக்க எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்து சிக்சர் அடித்திருக்கிறது மௌனகுரு. இந்த வருட ஆரம்பத்தில் யுத்தம் செய் அடுத்த காட்சிகள் என்னவாக இருக்கும் என்கிற ஒரு திரில்லர் ஃபார்மட்டில் வந்து மிரட்டியது என்றால் வருட இறுதியில் அதை எல்லாம் ரொம்பச் சாதாரணமாகத் தூக்கிச் சாப்பிட்டிருக்கிறது இந்தப்படம். அரசாங்கமும் அதிகாரமும் சேர்ந்தால் ஒரு மனிதனை எந்த அளவுக்குப் போட்டுத் தள்ள முடியும் என்பதைப் பேசுகிற கதைதான். ஆனால் திரைக்கதையும் சொன்ன விதமும் கிளாஸ்.



ஒரு பக்கம் எந்த வம்புக்கும் போகாத வந்த வம்பை விடாத இளைஞன் கருணா. கல்லூரிப் படிப்புக்காக மதுரையிலிருந்து சென்னைக்கு வருகிறான். வந்த இடத்தில் மச்சினியோடு காதல். அதே நேரம் விடுதியில் கூடப்படிக்கும் இன்னொரு மாணவனோடும் அவனுக்கு முட்டிக் கொள்கிறது. இன்னொரு பக்கம் ஒரு சாலை விபத்தில் கிடைக்கும் கோடிக்கணக்கான பணத்தை நான்கு போலிஸ்காரர்கள் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்கிறார்கள். அது சம்பந்தமான வீடியோ ஆதாரம் பற்றிய பிரச்சினை ஒன்றில் கருணா எதிர்பாராமல் சிக்கிக் கொள்ள கடைசியில் என்ன ஆகிறது என்பதுதான் படத்தின் கதை.

பெரிய அளவில் நடிக்கத் தேவையில்லாத கதை என்பது இந்தப்படத்தில் அருள்நிதிக்கு நிறைய கைகொடுத்திருக்கிறது. அமைதியாக வந்து போவதும் போதை நிலையில் வெறித்துப் பார்ப்பதும் என்று படம் நெடுக ஒரே மாதிரியாக சுற்றுகிறார். ரவுடியை ஒரே அடியில் வீழ்த்துவது, போலிஸை அடித்து விட்டு ஸ்டேசனுக்குப் போவது, நடுரோட்டில் தனி ஆளாய் நின்று மனு தருவது, பேச முடியாத குழந்தைகளுடன் சைகையில் உரையாடுவது என ஹீரோயிசம் தெரியாத ஆனால் ஹீரோயிசம் சார்ந்த காட்சிகள் எல்லாமே நிறைவு. கடைசி காட்சியில் தான் என்ன தப்பு செய்தோம் என அலறும்போதுதான் வசனங்கள் அவருக்கு ஒட்டவே இல்லை. காதல் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் இயல்பாக இருப்பது போலத் தோன்றியது. குறிப்பாக காபி நன்றாக இருந்தது என்று அண்ணி பார்க்காதபோது இனியாவிடம் சொல்லும் சீன், அப்புறம் அம்மாவுக்குத் தெரியாது என்று நினைத்து இனியா அருள்நிதியின் தலையைக் கோதி விட்டு செல்லும் காட்சி. நாயகிக்கு பெரிய அளவில் வேலையில்லை என்றாலும் மாடர்ன் உடையிலும் இனியா அழகு என்பதைப் பதிவு செய்ய வேண்டியது நம் முக்கியக் கடமையாகிறது.



ஓரம்போவின் சன் ஆஃப் கன் இந்தப்படத்தின் மெயின் வில்லன் ஜான் விஜய். அடக்கி வாசித்து அதகளம் செய்திருக்கிறார். செல்வம், ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி என்று கூட வரும் போலிஸ்காரர்களும் பெர்ஃபெக்ட். மனநோய் விடுதியில் இருந்து நாயகனின் நண்பனாகும் பாத்திரத்தில் மணல்மகுடி முருகதாஸ் நாடக நிலத்தின் நடிப்பை வெள்ளித்திரைக்குக் கடத்தி இருக்கிறார். தமிழ் சினிமாவில் எனக்குத் தெரிந்து இதுவரை யாரும் பயன்படுத்தி இராத பாத்திரத்தில் உமா ரியாஸ். கர்ப்பிணியாக இருக்கும் போலிசாக வரும் அவர் பார்வையில் கதை நகர்வது அருமையான உத்தி.

சின்ன சின்ன விசயங்களில் கவனம் செலுத்தி இருக்கும் இயக்குனரின் உழைப்புக்குக் கிடைத்திருக்கும் வெற்றிதான் இந்தப்படம். மதுரை என்றவுடன் தெப்பக்குளத்தை காண்பிக்காமல் கீழக்குயில்குடி அழகர் கோயில் என்று போயிருப்பது, அட்டகாசமான அந்த இடைவேளைக்காட்சி, யார் திருடியது என்று எல்லாரையும் யோசிக்க வைத்து நினைக்காத இடத்தில் கொண்டு போய் அந்த முடிச்சினை அவிழ்ப்பது, நாயகன் அசாத்திய பலசாலி என்றெல்லாம் அடித்து விடாமல் தன்னால் இயன்ற வழியில் எதிரிகளைத் தாக்கிவிட்டு இயல்பாய் தன் முடிவினைத் தீர்மானிப்பது என படம் முழுக்க இயக்குனர் சாந்தகுமார் தன்னை நிரூபித்திருக்கிறார். ஒரு திரில்லர் படத்துக்கு ஒரு பாட்டுப் போதும் என்கிற அவர் தைரியத்தையும் பாராட்டலாம். ஆனால் அதில் தமனின் அனாமிகா பாட்டு அடியாகிப் போனதில் எனக்கு வருத்தமே.



சின்ன சின்ன ப்ளூப்பர்கள் , தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படும் பெண்ணின் கால்கள் உயரமாய் மிதப்பது, டாக்டருக்குப் படிக்கும் நாயகி எந்த நொட்டையும் சொல்லாமல் நாயகனை மனநோயாளி என நம்புவது, சற்றே தொய்வடையும் இரண்டாம் பாதி - இவற்றை எல்லாம் ரொம்பக் கஷ்டப்பட்டு யோசித்தால்தான் கண்டேபிடிக்க முடிகிறது. Edge of the seat thriller என்கிற வகையில் படம் பார்த்து வெகு நாட்கள் ஆகி விட்டன என்று சொல்லும் மக்கள் எல்லோரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம். அமைதியாக அசத்தி இருக்கும் சாந்தகுமார் தனது அடுத்தப்படத்தை தலைக்கோ தளபதிக்கோ செய்யாமல் இருந்தால் சந்தோசம்.


December 13, 2011

ஏழாம் அறிவு

(மாத இதழ் ஒன்றுக்காக எழுதிய பதிவு. அவர்கள் எதிர்பார்த்த விமர்சனமாக தமிழுணர்வைப் பேசும் படத்தைப் பாராட்டும் விதமாக எதுவும் இல்லையென்று பிரசுரிக்கவில்லை.)

ஏழாம் அறிவு

கஜினி என்கிற மிகப்பெரிய வெற்றிப்படத்துக்குப் பிறகு முருகதாஸ் - சூர்யா - ஹாரிஸ் ஜெயராஜ் மீண்டும் கூட்டணி சேர்ந்திருக்கும் படம் ஏழாம் அறிவு. இந்த வருடம் வெளியான எந்தத் தமிழ்ப் படத்துக்கும் இந்த அளவுக்கு விளம்பரமும் எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. "தமிழனே மறந்த ஒரு தமிழரின் பெருமையைப் பேசி இருக்கிறோம். படம் பார்த்து வெளியே வரும் ஒவ்வொருவரும் நானொரு தமிழன் என மார் தட்டிச் சொல்லிக் கொள்ளலாம்" என பாடல் வெளியீட்டு விழாவில் முருகதாஸ் கொளுத்திப்போட பக்கென்று பற்றிக் கொண்டது நெருப்பு. இந்த பிரமாண்ட எதிர்பார்ப்பை படம் நிறைவேற்றி இருக்கிறதா?



படம் ஐந்தாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கிறது. பல்லவ இளவரசனான போதிதர்மர் தற்காப்புக் கலைகளிலும் மருத்துவத்திலும் தேர்ந்த பயிற்சி உடையவர். அஷ்டமா சித்துகளில் ஒன்றான ஐம்பூதங்களையும் கட்டுப்படுத்தும் அசித்துவம் கற்றவர். தன் குருமாதாவின் கட்டளையை ஏற்று சீனதேசம் செல்கிறார். கொள்ளை நோயிலிருந்தும் தீய சக்திகளிடம் இருந்தும் சீன மக்களைக் காப்பாற்றுகிறார். அவர்களுக்கு தன் வித்தைகளையும் மருத்துவத்தையும் பயிற்றுவிக்கிறார். அவர் தங்கள் மண்ணில் புதைக்கப்பட்டால் நாடு நலமாக இருக்கும் என நம்பும் சீன மக்களின் வேண்டுகோளை ஏற்று விஷம் உண்டு அங்கேயே மரித்துப் போகிறார். தாமோ என்று இன்றைக்கும் சீன மக்கள் புத்தருக்கு இணையாக அவருக்குக் கோயில் கட்டி வழிபாட்டு வருகிறார்கள்.

நிகழ்காலத்தில் சுருதி ஒரு ஆராய்ச்சி மாணவி. போதிதருமரைப் பற்றியும் அவரது மரபணுக்கள் பற்றியும் அறிந்து கொண்டு அவரது வம்சாவழித் தோன்றலான சூர்யாவைத் தேடி வருகிறார். சர்க்கஸில் பணிபுரியும் சூர்யா சுருதியக் காதலிக்கத் தொடங்குகிறார். ஆனால் சுருதியோ ஆராய்ச்சிக்காகவே சூர்யாவை பயன்படுத்த நினைக்கிறார். இந்நிலையில் இந்தியாவில் தொற்று நோயைப் பரப்பவும் போதிதருமரை மீண்டும் கொண்டு வரத் துடிக்கும் சுருதியைக் கொல்லவும் ஒரு சீன உளவாளியை அவர்களது அரசாங்கம் அனுப்பி வைக்கிறது. கடைசியில் நீதி வென்றதா என்பதும் போதி தருமர் மீண்டும் வந்தாரா என்பதும்தான் ஏழாம் அறிவின் கதை.



போதிதருமர் என்கிற இதுவரை யாரும் அதிகம் பேசாத விஷயத்தைப் பேசத் துணிந்த இயக்குனருக்குப் பாராட்டுகள். ஆனால் ஒரு படத்தின் வெற்றிக்கு அது மட்டும் போதாது. மிக அருமையான கதைக்களன், எந்த செலவும் செய்யத் தயாராக இருக்கும் தயாரிப்பாளர், தமிழ் சினிமாவின் தலைசிறந்த தொழில்நுட்ப வல்லுனர்கள், அர்ப்பணிப்புடன் கூடிய நடிகர்கள் என எல்லாம் கூடி வந்திருக்கும் நிலையில் ஏழாம் அறிவு தமிழின் மிக முக்கியமான படமாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் அது நிகழவில்லை என்பதே சோகமான விஷயம். படத்திற்கு செய்யப்பட விளம்பரமே அதற்கு எதிராக மாறி இருக்கிறது. இது வெறுமனே ஒரு வணிகப்படம் என வெளியாகி இருந்தால் இத்தனை ஏமாற்றம் இருந்திருக்காது. தமிழின் முதல் படம் என்கிற தொனியில் பேசிவிட்டு வெகு சாதாரணமானதொரு படத்தைத் தந்திருக்கிறார் முருகதாஸ்.

படத்தில் நம்பகத்தன்மை சார்ந்து எக்கச்சக்கமான கேள்விகள். படத்துக்காக நிறைய ஆராய்ச்சி செய்த மாதிரியெல்லாம் தெரியவில்லை. இணையத்தில் கிடைத்த ஒன்றிரண்டு தகவல்களை வைத்தே ஒப்பேற்றி இருக்கிறார்கள். போதிதருமரைப் பற்றிய பகுதி கதையோடு ஒன்றி வராமல் ஒரு ஆவணப்படம் போல வருகிறது. அவர் எதற்கு சீனாவுக்குப் போகிறார் என்பதற்கு நோய் இந்தியாவுக்குப் பரவாமல் இருக்க என சுருதி சொல்லும் ஒரு காட்சி இருக்கிறது. அப்படியானால் நோய் பரவும் என்பது தீர்க்கதரிசனமா? சர்க்கஸில் சூர்யா வேலை செய்கிறார் என்கிறார்கள். எந்தவொரு சர்க்கஸும் ஒரு மாதத்துக்கு மேல் ஒரே ஊரில் இருக்காது. பிறகெப்படி சூர்யா மூன்று மாதங்களாக சென்னையில் சுருதியின் பின்னால் திரிந்து கொண்டிருக்கிறார்? சமகால நவீன இளைஞனாக வரும் சூர்யா சர்க்கஸில் வேலை செய்பவர் என்பதை நம்பவே நமக்கு கஷ்டமாக இருக்கிறது. நோக்குவர்மம் மூலமாக மொத்தக் கூட்டத்தையும் வில்லன் கட்டுப்படுத்துவதும் ஓரளவுக்கு மேல் சலிப்படைய வைக்கிறது. பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு கற்ற குங்க்பூ கலையை ஒருவர் பார்ப்பதன் மூலமே சண்டை போட வைக்க முடியுமானால் என்னாவது? முன்னூறு கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு இந்திய அரசாங்கத்தையே காட்டிக் கொடுக்கும் பேராசிரியர் தன் தகவல்களை அடுத்தவர் பார்க்கும் வண்ணம் கணினியில் இத்தனை எளிதாக விட்டுச் செல்லுவாரா? பதில் தெரியாத கேள்விகள்.



படத்தில் சுவாரசியமான விஷயங்களும் இல்லாமல் இல்லை. நோய் தாக்கிய குழந்தையை போதிதருமர் காப்பாற்றும் காட்சியும் தன் குழந்தை உயிரோடு வருவதைக் கண்டு மகிழ்ச்சி பொங்க ஓடி வரும் தாயும் கொள்ளை அழகு. யானைக்கு வைத்தியம் பார்க்க அண்ணா சாலையில் அழைத்துப் போகும் சூர்யா சுருதிக்கு உதவுவது, அலைபேசியின் மூலம் சுருதியின் காதலை அறிந்து கொள்வது முதலியன ரசனையான காட்சிகள். ஒருவனின் மனதை மட்டும் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என ஜானி சொல்லி தாமோ என மதகுரு உறுமும் காட்சியும், கண்பார்வையின் மூலம் தனக்குத் தேவையான விஷயங்களை வாங்கி சூர்யாவைத் தேடி ஜானி வரும் காட்சிகளும் அட்டகாசம். ஆனால் இது போன்ற காட்சிகள் படத்தில் வெகு குறைவாகவே இருக்கின்றன.

முதல் பாதி கதை நாயகியின் பார்வையில் சொல்லப்படுகிறது. இரண்டாம் பாதி எதிர்நாயகனான சீன உளவாளியின் பார்வையில் செல்கிறது. இது மாதிரியானதொரு படத்தின் கதை நாயகனாக சூர்யா. போதிதருமன் வேடத்துக்காக நிறைய உழைத்து இருக்கிறார். உடம்பை இரும்பாக்கி கண்களில் வழியும் கருணையோடு அந்தக் கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார். தற்காப்புக் கலைகளில் பயிற்சி எடுத்து, சர்க்கஸ் கலைஞனாக நடிக்க பயிற்சி மேற்கொண்டு என நிறைய சிரமப்பட்டு இருக்கிறார். கமலின் மகள் சுருதி தமிழ் பேசத்தெரிந்த அழகான பெண் என்றாலும் அவருடைய தமிழ் உச்சரிப்பு பார்க்கும் மக்களை எரிச்சல் கொள்ள வைக்கிறது. படத்தின் அட்டகாசமான அம்சம் எதிர்நாயகனாக வரும் ஜானி திரையன். தீவிரமான தன் பார்வையின் மூலமே மிரட்டி எடுக்கிறார்.



படத்தின் மிகப்பெரிய ஏமாற்றம் ஹாரிஸ் ஜெயராஜின் இசை. டாக்சி டாக்சி பாடலை வேறு வடிவில் ரிங்கா ரிங்காவாகத் தந்திருக்கிறார். குழந்தைகளுக்கான பாடலைப்போல ஒலிக்கிறது சீனப்பாடல். உணர்வுகளை தட்டி எழுப்பவேண்டிய இன்னும் என்ன தோழா சுத்தமாக எடுபடவில்லை. முன் அந்திச் சாரல் நீ, யம்மா யம்மா ஆகிய பாடல்கள் கேட்க நன்றாக இருந்தாலும் படத்தில் தவறான இடங்களில் புகுத்தப்பட்டு இருக்கின்றன. பின்னணி இசை கடும் இரைச்சல் கூடவே எரிச்சலும். ரவி சந்திரனின் ஒளிப்பதிவு போதிதருமர் பகுதியினை மேலும் அழகாக்குகிறது. ஒரு தமிழ்ப்படத்தில் எந்த அளவுக்குச் சிறப்பாக முடியுமோ அந்தளவுக்கு சிறப்பாக சண்டைக் காட்சிகளை வடிவமைத்து இருக்கிறார் பீட்டர் ஹெயின். என்றாலும் பல ஆங்கில குங்க்பூ படங்கள் பார்த்த மக்களுக்கு இது அத்தனை ரசிக்காது. முதல் பாடலுக்கு ஆயிரம் நடனக்கலைஞர்கள், யம்மா யம்மா பாடலுக்கு போட்ட இரண்டு கோடி ரூபாய் அரங்கம் என வீணான பணத்தை சண்டைக் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் வரைகலையை மெருகூட்டப் பயன்படுத்தி இருக்கலாம்.

சின்னதொரு கதைக்கரு, நாட்டுக்கு நீதி சொல்வது, காட்சிகளில் தேவையில்லாத பிரமாண்டம் என எல்லாவற்றையும் வணிகரீதியாகக் கலந்து தரும் ஷங்கரின் சூத்திரத்தை முயன்று பார்த்திருக்கிறார் முருகதாஸ். ஆனால் தடுமாறும் திரைக்கதையால் பாதிக்கிணறு தான் தாண்டி இருக்கிறார். படத்தில் தமிழுணர்வு பற்றி நிறைய பேசினாலும் உணர்வு ரீதியாக அதைப் பார்வையாளனுக்குக் கடத்த முடியாத வியாபார நோக்கமே இருப்பதாகப் படுகிறது. கடைசியாக படத்தைப் பற்றி என்ன சொல்வது? எதிர்ப்பார்ப்புகளை மறந்துவிட்டு சாதாரண வணிகப்படம் என்கிற ரீதியில் ஏழாம் அறிவை ஒரு முறை பார்க்கலாம்.


December 9, 2011

ஒஸ்தி - திரைப்பார்வை

ஹிந்தியில் ஒரே அடிதடி வன்முறைப் படங்களாக வந்து கொண்டிருந்த நேரத்தில் வெளியானது தபாங். அலட்டிக் கொள்ளாமல் சாகசங்கள் செய்யும் கோமாளி போலிஸ்காரராக சல்மான் பின்னியெடுக்க படமும் பட்டையைக் கிளப்பியது. ஆனால் தபாங் ஓடியதற்கு முக்கிய காரணம் - எப்போதாவதுதான் ஹிந்தியில் இதுமாதிரி படம் வரும். ஆனால் தமிழில் வெளிவரும் மூன்றில் நான்கு படங்கள் இந்த மாஸ் மசாலா வகையறா என்பதால் தமிழில் இந்தப்படத்தை மறுவுருவாக்கம் செய்தால் நன்றாக இருக்காது என நினைத்திருந்தேன். ஆனால் அந்த எண்ணத்தைப் பொய்யாக்கி ஒஸ்தியை நன்றாகவே தந்திருக்கிறார்கள் சிம்புவும் தரணியும்.



கெட்டவர்களிடம் திருடி ஏழைகளுக்கு உதவும் ரவுடி போலிஸ் சிம்பு. தன் தாயின் மீது பிரியம் கொண்டிருந்தாலும் அவருடைய இரண்டாவது கணவரையும் தம்பியையும் போட்டியாகக் கருதி வெறுப்பவர். தேர்தலில் மக்களுக்குப் பணம் கொடுத்து ஜெயிக்க ஆசைப்படும் அராஜக அரசியல்வாதி சோனு சூத். இருவருக்கும் இடையே நடக்கும் ஆடுபுலி ஆட்டத்தில் சிம்பு எப்படி ஜெயிக்கிறார் என்பதே ஒஸ்தி.

நான் கண்ணாடி மாதிரிலே என்று வசனம் பேசியபடி படம் முழுமைக்கும் கூலர்ஸ் போட்டுத் திரியும் சிம்பு. அலட்டலான உடல்மொழியில் அப்படியே சல்மானைக் கொண்டு வர முயன்று ஜெயித்தும் இருக்கிறார். செமையாக டான்ஸ் ஆடுகிறார் (வானம் படத்தில் அனுஷ்காவின் தொடைகளைப் பிடித்து ஆடிய சிம்பு இந்தப்படத்தில் இரண்டு ஜீப்களை நிறுத்தி அந்தரத்தில் ஆடியிருப்பது முன்னேற்றம்). பறந்து பறந்து அடிக்கிறார். பைக் ஜீப் என்று வித்தை காட்டுகிறார். இறந்து போன அம்மாவைப் பார்த்துத் துடிக்கையிலும் மருத்துவமனையில் இருக்கும் அப்பாவிடம் பேசும் காட்சியிலும் நன்றாக நடிக்கிறார். இப்படி படம் பூராவுமே சிம்பு நிறையக்கிறார்”. திருநெல்வேலி ஸ்லாங் சிம்புவுக்கு அருமையாகப் பொருந்துகிறது. ஆனால் ஒரு சில இடங்களில் சிம்பு பேசும்போது குறளரசன் ஞாபகம் வந்து தொலைக்கிறது. கதாநாயகி நல்லா நடிச்சாத்தான் ஆச்சுன்னு யாரு சொன்னா. ச்சும்மா வந்து நின்னே மனதை அள்ளுகிறார் ரிச்சா. மனுஷனாப் பொறந்துதுக்கு அவர் இடுப்புக்கு கொலுசாப் பொறந்திருக்கலாம் எனத் தியேட்டருக்குள் பெருமூச்சு விட்ட பலருள் அடியேனும் ஒருவன்.



அடுத்ததாக சந்தானம். முதல் பாதியில் சிம்புவுக்கு முட்டுக் கொடுக்கும் இன்னொரு நாயகன். நெடுவாலி பாட்டில் சிம்புவைப் போலவே ஆடிக் கலாய்க்கிறார். யாரு இவன்.. கோவா பட பிரேம்ஜி மாதிரியே இருக்கான். அவர் பேசும் ஒரு வரி வசனங்கள் எல்லாமே நச். வில்லனாக சோனு சூத். உப்புக்கு சப்பாணி. சிம்புவிடம் அடிவாங்கச் சாக ஒரு வில்லன் வேண்டும் என்பதற்காக படத்தில் இருக்கிறார். கிளைமாக்சில் சிம்புவின் சிக்ஸ் பேக்கை காட்ட வேண்டும் என நினைத்தவர்கள் இவரை சட்டை போடச் சொல்லி இருந்தால் சிம்பு கொஞ்சம் எடுபட்டிருப்பார். ஜித்தன் ரமேஷ் சிம்புவின் தம்பியாக நிறைவாக நடித்து இருக்கிறார். போக படத்தில் நாசர், ரேவதி, சரண்யா மோகன், மயில்சாமி, தம்பி ராமையா எனப் பெரிய பட்டாளமே உண்டு.

படத்தின் பாடல்கள் எல்லாமே செம குத்து. ஒரே மாதிரியாக இசையமைக்கும் தமனிடம் கூடத் தன்னால் நல்ல பாடல்கள் வாங்க முடியும் எனக் காட்டி விட்டார் சிம்பு. பாடல்களைப் படமாக்கிய விதத்திலும் அசத்தி விட்டார்கள். குறிப்பாக நெடுவாலியும் க்யூட் பொண்டாட்டியும். வசனம் எழுதிய புண்ணியவான் யார் என்று தெரியவில்லை. தபாங்கிலிருந்து விலகி தமிழுக்கு பொருந்தும்படியாக நீட்டாக எழுதி இருக்கிறார். நிறைய டபுள் மீனிங்கும் உண்டு. அலம்பல் சாதாரணமாகவே சிம்புவிடம் ஜாஸ்தி என்பது அவர் பேசும் வசனங்களுக்கு இன்னும் அதிகமாகப் பொருந்துகிறது. உங்கள் கடமை உணர்வைப் பார்த்து காவல்துறை வியக்கிறது. எப்போதும் போல ஒளிப்பதிவாளர் கோபிநாத் தரணியின் ஆள் என்பதை நிரூபித்து இருக்கிறார்.



ஹிந்திப் படத்திலிருந்து சண்டைக் காட்சிகள் தவிர்த்து வேறு எதையும் பெரிய அளவில் மாற்றாமல் அப்படியே படமாக்கி இருக்கிறார் தரணி. குருவிக்கு முன்புவரை மாஸ் கதநாயாகர்களின் டார்லிங்காக இருந்தவர். சின்னதொரு சறுக்கலுக்குப் பிறகு இந்தப்படத்தில் விட்டதைப் பிடித்திருக்கிறார். லாஜிக், இது எப்படி வந்தது, ஒரு குண்டு கூட சிம்பு மீது படாதா எனக் கேள்வி கேட்பவர்கள் எல்லாம் ஒதுங்கிப் போங்கள். இது உங்களுக்கான படமல்ல. இரண்டு மணி நேரம் ஆட்டம் பாட்டம் சண்டை எனக் கொண்டாட நினைக்கும் மக்களுக்கான படம் - ஒஸ்தி. ஒரு அழகான மசாலா எண்டெர்டெயினராகப் படத்தை எடுத்திருக்கும் தரணிக்கு வாழ்த்துகள்.