Showing posts with label இலக்கிய சந்திப்பு. Show all posts
Showing posts with label இலக்கிய சந்திப்பு. Show all posts

December 7, 2011

விஷ்ணுபுரம் விருது விழா 2011

வணக்கம். தமிழின் மூத்த படைப்பாளுமைகளை கவுரவிக்கும் பொருட்டுவிஷ்ணுபுரம் விருதுகள்கடந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த விருது பாராட்டு கேடயமும், ரூ.50,000/- ரொக்கப் பணமும் உள்ளடக்கியது.

கடந்த ஆண்டு இவ்விருது எழுத்தாளர் . மாதவன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இயக்குனர் மணிரத்னம் தலைமையில் கோவையில் நிகழ்ந்த விழாவில் .மாதவன் படைப்புலகம் குறித்து ஜெயமோகன் எழுதியகடைத்தெருவின் கலைஞன்எனும் நூலும் வெளியிடப்பட்டது.

2011ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. டிசம்பர் 18ம் தேதி கோவையில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா அவர்களின் தலைமையில் விருது வழங்கும் விழா நடைபெற இருக்கிறது. விழாவில் ஜெயமோகன், நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்கள் கலந்துகொண்டு பூமணியை வாழ்த்த இருக்கிறார்கள். விழா அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளோம்.

தாங்கள் வருகை தந்து விழாவினைச் சிறப்பிப்பதோடு, விழா குறித்த செய்தியினை தங்களது பத்திரிகை / தொலைக்காட்சி / வலைதளம் / முகநூல் வெளியிடச் செய்து உதவுமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

மிக்க அன்புடன்,
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.




தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது

மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு

ஜெயமோகன் எழுதிய பூமணி படைப்புகளின் விமர்சன நூல்

பூக்கும் கருவேலம் நூல் வெளியீடு

டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி- கீதா ஹால்,ரயில்நிலையம் எதிரில் , கோவை

கலந்துகொள்ளும் ஆளுமைகள்


எழுத்தாளர் ஜெயமோகன்,
வே.அலெக்ஸ் – அயோத்திதாசர் ஆய்வு நடுவம்
எழுத்தாளர் யுவன் சந்திரசேகர்,
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்,
எழுத்தாளர் நாஞ்சில்நாடன்
கன்னட கவிஞர் பிரதீபா நந்தகுமார்,
இயக்குனர் பாரதிராஜா
எழுத்தாளர் பூமணி

உள்ளிட்ட ஆளுமைகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வுக்கு நண்பர்களை அன்புடன் அழைக்கிறோம்
அன்புடன் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் – தொடர்புக்கு 094421 10123
(குறிப்பு:நிகழ்ச்சி குறித்த நேரத்தில் துவங்கும்)

September 20, 2011

அற்றைத் திங்கள் - அம்ஷன் குமார் சந்திப்பு

கடந்த 18-09-11 அன்று மாலை ஆறு மணிக்கு மதுரை மருத்துவக் கல்லூரி அரங்கத்தில் காலச்சுவடு மற்றும் கடவு இணைந்து நடத்தும் "அற்றைத் திங்கள்" கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மாத சிறப்பு விருந்தினராக திரைப்பட மற்றும் ஆவணப்பட இயக்குனரான அம்ஷன் குமார் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் ஆரம்பமாக அம்ஷன் குமார் பேசினார். அதன் பின்பாக அவருடைய படங்களில் இருந்து சில காட்சிகள் திரையிடப்பட்டன. இறுதியாக வாசகர்களுடனான கலந்துரையாடல் நடந்தது.



முதலில் அம்ஷன் குமாரின் உரை..

"என்னுடைய சொந்த ஊர் திருச்சி. சின்ன வயதில் இருந்தே வாசிப்பும் திரைப்படமும் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களாக இருந்தன. திருச்சியில் இருக்கக்கூடிய எல்லா நூலகங்களிலும் புத்தகங்களைத் தேடிதேடிப் படித்திருக்கிறேன். குறிப்பாக திரைப்படங்கள் சார்ந்த புத்தகங்களை விரும்பி வாசிப்பேன். வளர்ந்து வெகு நாட்களுக்கு ஏதும் இலக்கின்றி சுற்றித் திரிந்த பின்பு ஒரு வங்கிப்பணியில் சேர்ந்து சென்னை வந்து சேர்ந்தேன். இந்தக் காலகட்டத்தில், திரைப்படங்கள் தயாரிப்பு பற்றி நிறைய புத்தகங்கள் இருந்தாலும் ஒரு திரைப்படம் பார்ப்பது எப்படி, என்கிற ரசனை சார்ந்த புத்தகம் ஒன்றை நான் எழுதினேன்.

சில நாட்களுக்குப் பிறகு, என்னுடைய நண்பர் ஒருவர் தான் எடுக்கப் போகும் விளம்பரப் படம் குறித்து என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது நான் அவர் சொன்ன விளம்பரப்படத்தின் கதை அத்தனை நன்றாக இல்லை எனச் சொல்லி நானே ஒரு கருவைச் சொன்னேன். அதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த அவர் அந்தப்படத்தை என்னையே எடுத்துத் தரும்படி சொன்னார். ஏதோ ஒரு தைரியத்தில் நானும் ஒத்துக் கொண்டேன்.

அது விளம்பரப் படங்களுக்கு ரொம்பப் பெரிய மதிப்பு இருந்த காலம். என்னுடைய விளம்பரத்துக்கு .ஆர்.ரகுமான் தான் இசை. நான் ஏற்கனவே திரைப்படம் சார்ந்து நிறைய வாசித்து இருந்ததால் படத்தளத்தில் ஒளிப்பதிவாளரிடம் எல்லா விஷயங்களையும் சொல்லிக் கொண்டே இருப்பேன். கருவியின் கோணம் இப்படி இருக்க வேண்டும் அது இதுவென. அவருக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் வெறுமனே புத்தகத்தில் படித்தது நிதர்சனத்தில் உதவாது என்பதை நிரூபிப்பதாக ஒரு சம்பவம் நடந்தது.

படப்பிடிப்பின் முதல் நாள். அப்போது இருந்த வழக்கம என்னவெனில், முதலில் இயக்குனர் ஸ்டார்ட் எனச் சொல்ல வேண்டும். உடனே ஒளிப்பதிவு கருவியை ஒளிப்பதிவாளர் இயக்குவார். அப்போது ரன்னிங் என்று சொல்வார். பிறகு இயக்குனர் ஆக்ஷன் எனச் சொல்ல வேண்டும். எனக்கு இதெதுவும் தெரியாது. எடுத்தவுடனே ஸ்டார்ட், ஆக்ஷன் என்று சொல்ல ஒளிப்பதிவாளருக்குக் கடும் கோபம். பின்பு அந்த வழிமுறைகளை எல்லாம் வேகமாகக் கற்றுக் கொண்டேன். இப்படியாகத்தான் எனது திரையுலக அனுபம் ஆரம்பித்தது.

என்னுடைய விளம்பரங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று, அத்துறை என்னை இழுத்துப்போக, என்னால் முழுமையாக வங்கிப்பணியில் கவனம் செலுத்த இயலவில்லை. பொறுத்து பொறுத்துப் பார்த்த அவர்களும் சில நாட்களில் என்னைக் கூப்பிட்டுச் சொல்ல வேலையை விட்டு வெளியே வந்தேன். மீண்டும் விளம்பரப் படங்கள் எடுப்பதில் எனக்கு ஆர்வமில்லை. இந்த சமூகத்துக்குப் பயனளிக்கும் வகையில் ஏதெனும் செய்ய ஆசை. எனவே ஆவணப்படங்கள் எடுக்கத் துவங்கினேன்.

பொதுவாக என்னுடைய படங்களில் அரசியல் இருக்காது. ஆனால் நான் எடுப்பவை எல்லாமே மக்களின் வாழ்க்கை பற்றிய அரசியல் சார்ந்த படங்களாக, மக்களின் உள்ளத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான படங்களாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். புதிது புதிதான அனுபவங்களோடு இந்தப் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. என்னைப் பற்றி இத்தோடு போதும் என நினைக்கிறேன். அடுத்ததாக படங்களைப் பார்க்கலாம்.”

அடுத்ததாக அம்ஷன் குமார் இயக்கிய திரப்படங்களில் இருந்து சில காட்சிகள் திரையிடப்பட்டன. சுப்பிரமணிய பாரதி பற்றிய ஆவணப்படம், சாகித்ய அகாதெமி விருது பெற்ற அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடு பற்றிய அவரது அனுபவங்கள், சர்.சி.வி.இராமன், நவீன நாடகத்தில் புரட்சி செய்த பாதல் சர்க்கார் பற்றிய படம், கி.ராஜநாராயணனின்கிடைஎன்கிற சிறுகதையை ஒட்டி எடுக்கப்பட்டஒருத்தி”, தமிழ் நவீன கலை - சிற்பங்கள் பற்றிய படம் என ஆறு படங்களில் இருந்து சில காட்சிகள் திரையிடப்பட்டன. பிறகு அப்படங்கள் சார்ந்து வாசகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தப்பட்டது. அவற்றில் சில துளிகள்..

தமிழில் மாற்று சினிமாவுக்கான களம் இருக்கிறதா?

இல்லை. ஆங்காங்கே சில கீற்றுகள் நம்பிக்கை தந்தாலும் சமரசம் செய்து கொள்ளாமல் படம் எடுப்பது என்பது இன்னும் சாத்தியமாக வில்லை. நாம் இன்னும் வியாபார சினிமாவில்தான் இருக்கிறோம். இதோ - 2011 வந்தால் நம் தமிழ் சினிமாவுக்கு வயது நூறு ஆண்டுகள் ஆகப் போகிறது. 1914 இல் கீசகவதம் நம் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதுதான் உண்மையான துவக்கம். நிறைய பேர் காளிதாசன்தான் ஆரம்பம் எனச் சொல்லுவார்கள். அது சரி கிடையாது. நூறு ஆண்டுகள். நாம் என்ன சாதித்து இருக்கிறோம்? எல்லாரும் இரானியப் படம் அப்படி எடுக்கிறார்கள் என்றெல்லாம் பேசுகிறார்கள். அங்கே அந்தப் படங்களுக்கான சந்தை இருக்கிறது. மக்கள் பார்க்கிறார்கள். ஆனால் நம்மூரில் இது சாத்தியமா என்றால் இல்லை. மாற்று சினிமா என்பதற்கான களாம் இங்கே உருவாகவில்லை என்பதுதான் வருத்தத்தோடு ஒத்துக் கொள்ள வேண்டிய உண்மை.

பாரதி - அனுபவம் குறித்து? இந்த ஆவணப்படம் முதலில் வந்ததா அல்லது பாரதி திரைப்படமா?

முதலில் வந்தது இந்த ஆவணப்படம்தான். படத்தில் சில புனைவுகளும் இருந்தன. இந்த ஆவணப்படத்தில் வெகு அரிதான ஆவணங்களை எல்லாம் தேடி எடுத்து பயன்படுத்தி இருக்கிறோம். பாரதியார் கைது செய்யப்பட்டபோது பதிவு செய்த கோப்புகள், 1919 - 1921 வரை மூன்று வருட காலத்தில் எடுக்கப்பட்ட அவருடைய ஐந்து புகைப்படங்கள் என நிறைய விஷயங்கள். பாரதியை நேரில் பார்த்த, அவர் வாழ்ந்த கடையத்தில் இருந்த, மனிதரொருவரின் பேட்டியும் உள்ளது.

அசோகமித்திரனுடனான அனுபவம்?

அவர் தன்னுடைய பால்யத்தில் வாழ்ந்த ஹைதை நகரத்துக்குப் போய் எசுக்க வேண்டிய படம். நாற்பது ஐம்பது வருடங்கள் கடந்து விட்ட நிலையில் அவர் வசித்த ரயில்வே குடியிருப்பு நிறையவே மாறி இருந்தது. அவர் குடியிருந்த வீட்டைத் தேடிக் கண்டுபிடிக்கவே வெகு நேரமானது. படம் எடுக்கையில் அவர் அந்த வீட்டுக்கு உள்ளே போக மாட்டேன் எனச் சொல்லி விட்டார். தேவையில்லாத ஞாபகங்கள் வருமெனச் சொல்லி உள்ளே போகவேயில்லை. அவரோடு இருக்க முடிந்த காலங்கள் இனிமையானவை.

ஒருத்தி?

தமிழில் தலித்துகள் பற்றிய படங்கள் வந்தாலும் அவை மற்றவரின் பார்வையிலேயே வந்திருக்கின்றன. ஆனால் தலித்துகளின் பார்வையில் வரவில்லை. அப்படியானதொரு முயற்சியாகத்தான் ஒருத்தியை எடுத்தேன். முதல் வாரம் சத்யத்தில் ஹவுஸ்ஃபுல்லாகப் போனாலும் புதுப் படங்கள் வந்ததெனத் தூக்கி விட்டார்கள். அது முதல் திரைப்பட விழாக்கள், கல்லூரி நிகழ்வுகள் எனத் தொடர்ச்சியாகப் போய்க் கொண்டிருக்கிறது.

தற்போது நீங்கள் பணிபுரியும் படம்?

மணக்கால் எஸ். ரங்கராஜன் என்றொரு கர்நாடக இசைக்கலைஞர். அற்புதமாகப் பாடக்கூடியவர்.ஆனால் அவருக்கானசரியான அங்கீகாரம் வழங்கப்படவில்லை. அவரைப் பற்றித்தான் தற்போது ஆவணப்படம் எடுக்கிறேன்.

தொடர்ச்சியாக தனிப்பட்ட முறையிலும் அம்ஷன் குமார் அவர்களுடன் வாசகர்கள் உரையாடிப் போக நிகழ்வு நிறைவு பெற்றது.

September 8, 2011

வலசை - கலந்துரையாடல் (04-09-11)

கடந்த ஞாயிறு (04-09-11) காலை பத்து மணிக்கு, மதுரை நாகமலை புதுக்கோட்டைக்கு அருகே இருக்கும் கீழக்குயில்குடி சமண மலையடிவாரத்தில், வலசை முதல் இதழ் மீதான கலந்துரையாடல் நடைபெற்றது. கலந்து கொண்டவர்கள் - செல்மா ப்ரியதர்ஷன், சுகுமாரன், செந்தி, சக்திஜோதி, யவனிகா ஸ்ரீராம், ஸ்ரீசங்கர், லிபி ஆரண்யா, அகநாழிகை பொன்.வாசுதேவன், கலாப்ரியா, வடகரை ரவிச்சந்திரன், பூமிசெல்வன், ஜெகன்னாதன், ஸ்ரீ, மதுரை வாசகன், மதுரை சரவணன், செல்வம், மாரி மற்றும் கா.பா. நிகழ்வின் தொடக்கமாக வலசை இதழை கலாப்ரியா வழங்கிட சுகுமாரன் பெற்றுக் கொண்டார். அனைவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டோம். வலசை கொண்டு வருவதற்கான காரணம் பற்றி கா.பா பேசிய பின்பு கலந்துரையாடல் தொடங்கியது. தமிழின் மிக முக்கியமான ஆளுமைகள் பங்கேற்ற இந்த நிகழ்வினை என் நினைவினில் இருந்து இங்கே தொகுத்திருக்கிறேன்.



சுகுமாரன்: எனக்கு நேற்றைக்குத்தான் புத்தகம் கிடைத்தது என்பதால் முழுதும் வாசிக்க முடியவில்லை. ஆனால் மேலோட்டமாக வாசித்த வரையில்.. இதுவரையில் இஸ்மாயில் கதாரே போன்ற ஆளுமைகளை தமிழில் யாரும் பேசியதில்லை. மற்ற படைப்பாளிகளும் அத்தனை அறியப்படாதவர்களே. அவ்வகையில் இவ்விதழ் மிக முக்கியமானதொரு தொடக்கமாகவே எனக்குப் படுகிறது. புத்தகம் பற்றிய என்னுடைய முழுமையான கருத்துகளை வாசித்துப் பகிருகிறேன்...

கலாப்ரியா: எனக்கு பார்வையின்மை வெகுவாகப் பிடித்தது. அதே போல பத்மா மொழிபெயர்த்திருக்கும் நீச்சல்காரன் கதையும் நன்றாக இருந்தது. ஆனால் வி மாதிரியான நீளமான கவிதைகளை வாசிக்கும்போது ரொம்ப அயர்ச்சியாக இருக்கிரது. என்னால் தொடர்ச்சியாகக் கவிதையில் பயணிக்க முடியவில்லை. மற்றபடி இதழில் எனக்கு மொழி சார்ந்து சில சிக்கல்கள் இருந்தன. அத்தோடு வடிவமைப்பிலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

முருகேச பாண்டியன்: இந்த இதழ் பற்றி எனக்கு பெரியளவில் எந்த விதமான எதிர்பார்ப்பும் ஆரம்பத்தில் இருக்கவில்லை. ஏற்கனவே தமிழில் ஒரு இதழ் மொழிபெயர்ப்பு சார்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அது கடனுக்கு செய்யப்படுவது. அத்தனை சரியானது கிடையாது. வலசையும் அதுபோல இருக்கக்கூடும் என்றிருந்த எண்ணம் எனக்கு இதழை வாசிக்க ஆரம்பித்தவுடன் மாறத் துவங்கியது. இவர்களுக்கு ஒரு நோக்கம் இருப்பது புத்தகத்தில் தெளிவாக தெரிகிறது. எனக்கு இந்த இதழில் எல்லா விஷயங்களுமே பிடித்து இருந்தன. குறிப்பாக ஒரு மொழிபெயர்ப்பாளரின் நேர்காணல். வெகு கடினமான விஷயங்களை எல்லாம் அவர் இதில் எளிதாக சொல்லி இருக்கிறார். ஆனாலும் எனக்கு சின்னதொரு வருத்தம் உண்டு. இந்த இதழுக்கு செங்கால் நாராய் என்று பெயர் வைத்து சில நேரடித் தமிழ்ப் படைப்புகளையும் வெளியிட்டிருக்கலாம். வலசை என்றாலே அது வெளியிலிருந்து இங்கு வருவதுதானா? ஏன் பறவைகள் நம்மூரில் இருந்து வெளிநாடுகளுக்குப் போவதில்லையா? எனவே அடுத்த இதழில் ஆசிரியர்கள் இதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

யவனிகா: இதழ் பற்றிப் பேசுமுன்பாக ஒரு விஷயம். இதில் இருக்கும் படைப்புகளை மொழிபெயர்த்தவர்கள் தெரிவு செய்தார்களா?

காபா: இல்லை யவனிகா. இதழை ஆரம்பிக்கும்போதே இதன் ஊடுசரடாக இருக்கப்போவது உடல் மற்றும் அதன் மீதான அரசியல் என்பதை முடிவு செய்து கொண்டோம். பின் அது சார்ந்த படைப்பாளிகளும் அதர்குப் பின்னர் அவர்களுடைய படைப்புகளும் தேர்வு செய்யப்பட்டு மொழிபெயர்க்கும் நண்பர்களுக்குத் தரப்பட்டது.

யவனிகா: நல்லது. அதைத் தெரிந்து கொண்டு பேசுவது தான் சரியாக இருக்கும். முருகேச பாண்டியன் சொன்னது போல இந்த இதழுக்கென ஒரு நோக்கம் இருக்கிறது. அது மிகச் சரியான அணுகுமுறை. வி மாதிரியான நீண்ட கவிதைகளை வாசிக்கும்போது அயர்ச்சி வருவதாக கலாப்ரியா சொன்னார். ஆனால் எனக்கு அது மிக முக்கியமான கவிதை. இன்றைக்கு சூழ்நிலைக்கு வெகு பொருத்தமானது. இங்கிலாந்தில் பிறந்த ஒரு மனிதன் அங்கிருக்கும் அரசியலை எப்படியெல்லாம் பகடி செய்கிறான் என்பதான மிக அற்புதமான விஷயங்கள் அந்தக் கவிதையில் இருக்கின்றன. ஒரு புதிய நிலத்தை எனக்கந்த கவிதை அறிமுகம் செய்கிறது. அது மிகவும் முக்கியம். கிரேக்கம் தெரிந்தவர்களை மேன்மக்கள் எனக் கொண்டாடும் ஒரு சமூகத்தை சாடும் கவிஞனின் நேர்மை அபாரமாக வெளிப்படும் வி மிக மிக முக்கியமான கவிதையாக இருக்கிறது. அதே மாதிரி நீச்சல்காரன் சிறுகதை உண்டாக்கும் வாழ்வின் மீதான அபத்தம் ரொம்பவே ரசிக்கும்படியான ஒன்று. எட்டு மைல் நீந்தி ஒருவன் வீட்டை அடைய முடியும் என்கிற எண்ணமே கிளர்ச்சியைத் தருவது. அவன் நோயால் பீடிக்கப்பட்டவனா, இறந்தவனா இல்லை மனநிலை தவறியவனா என்கிற மாதிரியான விடையில்லாக் கேள்விகளை கதை எழுப்புகிறது. இதை வாசிக்கும்போது எனக்கு இட்டாலோ கால்வினோவின் கதை ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. நடு இரவில் காற்று வாங்கலாம் என வெளியே செல்லும் ஒருவன். தெருவில் யாருமில்லை. கடை ஒன்றை நான்கைந்து திருடர்கள் சேர்ந்து உடைக்க முற்படுகிறார்கள். இவனைப் பார்த்தவுடன் அவனையும் சேர்ந்து கொள்ளச் சொல்கிறார்கள். சிறிது நேரத்தில் கடையை உடைத்து திருடிக் கொண்டு ஓடுகிறார்கள். இவன் திகைத்து நிற்கிறான். இப்போது அங்கு வந்து சேரும் காவல்துறை இவனைக் கண்டவுடன் ஓடிப்போய் திருடர்களைப் பிடிக்கச் சொல்கிறது. சற்று நேரம் கழித்து எல்லாரும் போய் விட இவன் வீட்டுக்கு வந்து சேருகிறான். கையில் பொருள் இல்லாத காரணத்தால் அவன் எல்லா இடங்களிலும் இருக்கிறான். அப்படியானால் இன்றைக்கு எல்லாமே பொருள் சார்ந்த மதிப்பீடுகள்தானா? நவீன காலனிய ஆதிக்கக்காலத்தில் மனிதனுக்கு மதிப்பே இல்லையா என்பதான கேள்விகளை இந்தக்கதை எழுப்பும். அத்தகைய உணர்வை நீச்சல்காரனும் தந்தது. ஆக இதழ் தனது துவக்கத்தை சரியாகவே கொண்டிருக்கிறது. ஆனால் நண்பர்கள் சிலர் இதழ் பற்றிப் பேசும்போது மொழிபெயர்ப்புகள் மூலத்துக்கு உண்மையானவையாக இல்லை என்று சொன்னார்கள். அதைக் கருத்தில் கொண்டு மொழி சார்ந்து இன்னும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக ஆசிரியர்கள்தான் படைப்புகளைத் தெரிவு செய்கிறீர்கள் எனும்போது இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.



வடகரை ரவிச்சந்திரன்: படைப்புகள் மூலத்துக்கு எத்தனை நெருக்கமாக இருக்கின்றன என்கிற விஷயம் ரொம்ப முக்கியமானது. அதே மாதிரியான மொழியும். நாம் அன்னியதேசம் ஒன்றை அதன் நிலத்தைப் பற்றியும் மக்கள் பற்றியும் வாசிக்கிறோம் என்கிற விழிப்புநிலை மொழியில் இருக்க வேண்டும். அதற்கு இன்னும் நிறைய புதிய சொற்களை நாம் பயன்படுத்த வேண்டி இருக்கிறது. அப்புறம் தேவுகள். இந்த இதழில் இருக்கும் ஒருசில கவிதைகள் வெகு சாதாரணமானவையாகத் தோன்றின. ராபியா பஸ்ரி, ஆயிஷா அர்னௌத்.. இது மாதிரி..

செல்மா: ஆமாம். இது முக்கியமான இடம். இங்கே தமிழில் எடுத்துக்கொண்டாலே இதை விட அதிகப் பாய்ச்சலைத் தரக்கூடிய படைப்புகள் இருக்கின்றன. எனவே நீங்கள் தேர்வு செய்யும்போது அந்தப் படைப்புகள் எத்தனைத் தரமுடையவை என்பதையும், அவை சமகாலத்துக்குப் பொருந்துமா என்பதையும் பார்த்துத் தேர்வு செய்ய வேண்டும்.

வாசுதேவன்: என்னாலும் இதை உணர முடிந்தது. மோரியோட செவாய்க்கிழமைகள் வெகு நாட்கள் முன்பாக வந்த புத்தகம். இதை எதற்காக இங்கே கொண்டுவந்தார்கள் என்கிற கேள்வி எனக்கு இருந்தது?

கா.பா: படைப்புகள் தெரிவில் ராபியா, அர்னௌத் பொறுத்தவரை.. இருவரும் பெண்கள் என்பதோடு தங்கள் மதம் சார்ந்து கடவுளுக்கு உடலை காணிக்கை செய்யத் துணிந்தவர்கள் என்பதாலும் கண்டிப்பாக பேசப்படவேண்டியவர்கள் என்பதாக உள்ளே வைத்தது. அதே போலத்தான் மிட்ச் ஆல்பமும் தமிழ் சூழலில் பேசப்படாதவர், உடல் மர்றும் நோய்மை சார்ந்த கதை என்பதால் உள்ளே வந்தது.

செல்மா: இன்னொரு முக்கியமான விஷயம்.. எனக்கு நீங்கள் முதல் வாசகர்கள் என்று சொல்வதில் உடன்பாடு இல்லை. அது வாசக அதிகாரம் மாதிரியான தோற்றத்தை உண்டாக்குகிறது என்பதையும் இங்கு பதிவு செய்கிறேன்.

யவனிகா: செல்மா சொன்னதில் மிக முக்கியமானது.. சமகாலத் தனமையோடு படைப்புகளை தருவது. எனக்கு ஆங்கிலம் தெரியாது. மொழிபெயர்ப்புகள் மூலமாகத்தான் உலக இலக்கியத்தை அறிந்து கொள்கிறேன். இன்றைக்கு இருக்கக் கூடிய இளைஞன் என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ்கிறான், அவனுடைய அரசியல் நோக்கு என்ன, என்ன மாதிரி காதல் செய்கிறான், எது மாதிரியான கவிதைகளை எழுதுகிறான்.. இதுபோன்ற விஷயங்களாஇ எல்லாம் நீங்கள் இங்கே கொண்டுவந்தால் என்னைப் போன்ற இளைஞர்களுக்கு இன்னும் உபயோகமாக இருக்கும்.

லிபி ஆரண்யா: தொடர்ச்சியாக சிற்றிதழ்கள் வர ஆரமபித்து இருப்பது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. படைப்புகள் சார்ந்து எனக்கு எந்த விதமான சிக்கல்களும் இல்லை. இது ஒரு அருமையான ஆரம்பம். ஆனால் வடிவம் மற்றும் லேஅவுட் சார்ந்து நீங்கள் இன்னும் நிறைய உழைக்க வேண்டி இருக்கிறது. இதழை வாசிக்கும்போது ஒரு அக்கடமிக் தன்மையை உணர முடிகிரது. அதைத் தவிர்த்து சிற்றிதழுக்கான ஒரு உணர்வை நீங்கள் கொண்டு வர வேண்டும். அடுத்த இதழ் இன்னும் சிறப்பாக வரும் என்பதற்கான அறிகுறிகள் இந்த இதழில் உள்ளன. அது நிகழ வேண்டியது அவசியம்.

யவனிகா: கண்டிப்பாக இரண்டாம் இதழ் இன்னும் சிறப்பாக வரும். முருகேச பாண்டியன் சொல்வது போல சமகாலத் தமிழ் படைப்பாளிகளையும் உள்ளே கொண்டு வருவது இன்னும் நன்றாக இருக்கும்.

பூமிசெல்வம்: நான் சொல்ல வேண்டியதை எல்லாம் நண்பர்கள் சொல்லி விட்டார்கள். வடிவம் தவிர்த்து எனக்கு இதழில் பெரிய அளவில் பிரச்சினைகள் இல்லை. உள்ளே இருக்கும் படைப்புகள் மிக முக்கியமானவை. அத்தோடு மொழியிலும் சில இடங்கள் நன்றாக வந்திருக்கின்றன. புணர்ச்சி விதிகள் சார்ந்து நிறைய வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்தி இருப்பதைப் பார்க்கும்போது மனதுக்கு சந்தோசமாக இருக்கிறது.

சக்திஜோதி: இதழுடைய அடையாளமாக யாளி இருக்கிறது. கீழைத்தேய நாடுகளில் யாளி அதிர்ஷ்டத்தின் குறியீடு. ஆனால் மேலை நாடுகளிலோ அது அவநம்பிக்கையின் வடிவமாகப் பார்க்கப்படுகிறது. அதை ஆசிரியர்கள் நினைவில் கொள்தல் நலம். பிற்காலங்களில் வலசை வெகுபல இடங்களுக்குப் போகும்போது அது என்னவாக இருக்கிறது என்பதைக் காலம் தீர்மானிக்கும். இப்போதைக்கு முதல் இதழாக இது ஒரு அபாரமான முயற்சி. நேசனுக்கும் காபாவுக்கும் என் வாழ்த்துகள்.

ஸ்ரீசங்கர்: இதழ் நல்லதொரு தொடக்கத்தைக் கொண்டிருக்கிறது. அடுத்தடுத்த இதழ்கள் இன்னும் தனித்தன்மையுடன் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

அத்தோடு கலந்துரையாடல் முடிவுக்கு வந்தது. பின்பாக மாலைவரை நண்பர்களோடு கழிந்த பொழுதுகள் இனிமையானவை. அற்புதமானதொரு தினத்தை சாத்தியமாக்கிய நண்பர்கள் அனைவருக்கும் வலசை தனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

February 2, 2011

சாவடி - மதுரை இலக்கிய சந்திப்பு (2)

சாவடி - மதுரை இலக்கிய சந்திப்பு (1)

கா.பா - நான் கே.என்.செந்திலுடைய மூன்று கதைகளை மட்டுமே வாசித்து இருக்கிறேன். கதவு எண், கிளைகளில் இருந்து, மேய்ப்பர்கள்.. இவற்றை முன்வைத்தே உரையாட விரும்புகிறேன். கதைகள் சொல்லும் கதைகள் உண்டு, அதே போல கதை சொல்லாத கதைகளும் உண்டு. இதில் கே.என்.செந்தில் இரண்டாம் வகையைச் சார்ந்து கதையல்லாத கதைகளைப் பேசுவதாகவே நான் நம்புகிறேன். கதை சொல்லி என்று சொல்லுவதை விட அவரை ஒரு தேர்ந்த சித்திரக்காரர் எனச் சொல்லலாம். சூழலையும் மனிதர்களையும் வர்ணித்துப் போகும் இடங்களில் அவர் அருமையான நேரனுபவத்தைத் தரக்கூடிய சித்திரங்களை உருவாக்குகிறார். முதல் கதையான கதவு எண்ணில் ஒரு மனிதன் மூத்திர சந்தின் உள்நுழைந்து போகிறான். இதை வாசிக்கும்போது நான் என்னமோ அந்தத் தெருவுக்குள் நடந்து போவதைப் போன்ற ஒரு அருவெருப்பையும் அசூயையும் என்னால் உணர முடிந்தது. அதுவே அந்த எழுத்துகளின் வெற்றி. ஹவி சொன்ன சில விஷயங்களில் எனக்குக் கருத்து வேறுபாடும் உண்டு. ஒரே கேன்வாசுக்குள் பல விஷயங்களை சொல்லித்தான் ஆக வேண்டுமா? கண்டிப்பாக... ஏன் என்றால் அங்கேதான் வாசகன் சிந்திப்பதற்கான ஒரு வெளி உண்டாகிறது. இதை நீங்கள் கிளைகளில் இருந்து கதையில் நன்கு உணரலாம். சில மனிதர்கள், அவர்களைப் பற்றிய சில தகவல்கள் என சொல்லிக் கொண்டே கதை வேறு இடங்களுக்கு நகர்ந்து போய் விடுகிறது. அதன் பிறகு அவர்கள் என்ன ஆனார்கள்? அதை வாசகர்களின் முடிவுக்கு விட்டு விடுகிறான் கதை சொல்லி. கடைசி கதையான மேய்ப்பர்கள் விளிம்பு நிலை மனிதர்களின் யதார்த்த வாழ்க்கையை பேசிப் போகிறது. குற்றவுணர்வை ஏற்படுத்தாத காமம் இந்தக் கதையில் கொண்டாட்டமாக வெளிப்பட்டு இருக்கிறது. ஆக எனக்கு செந்தில் கதையுலகம் ரொம்பவே பிடித்து இருக்கிறது.

ஹவி: நண்பர் சொன்ன விஷயத்தை என்னால் சற்றும் ஒத்துக் கொள்ள முடியாது. கதை சொல்லாத கதைகள் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வர்ணனைகள், சித்திரங்கள் எனப் பேசுவதெல்லாம் சரிதான். ஆனால் நாம் எதற்காக சிறுகதைகள் எழுதுகிறோம்? ஏதாவது ஒரு விஷயத்தைச் சொல்வதற்காக.. அதைச் செய்யவில்லை என்றால் மற்ற எல்லாம் வீணாகிப் போய் விடும். ஆக கதை என்கிற அடிநாதம் ரொம்ப முக்கியமானது. கண்டிப்பாக எழுத்தாளனுக்கு என ஒரு பொறுப்பு இருக்கிறது. அதை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. நம்மைச் சுற்றி இருக்கக் கூடிய எல்லா விஷயங்களையும் நம்மை பாதிக்கிற சங்கடங்களையும் நாம் கண்டிப்பாக பதிவு செய்யும்போது அதற்கு நேர்மையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. இன்றைய கண்காணிக்கப்படும் சூழலிலும் இதை நாம் தீவிரமாக செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதை விடுத்து வெறும் தகவகழி மட்டும் சொல்லிப் போவது சரி கிடையாது என்றே நம்புகிறேன்.

கே.என்.செந்தில் - பொதுவாக என்னுடைய கதைகள் ஒரு நேரடி அனுபவத்தைத் தருவதாக நிறைய பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதையேதான் இந்த நண்பரும் சொன்னார். ஆனால் ஹவி சொன்னதுபோல நான் எந்த இடத்திலும் என்னுடைய கொள்கைகளை என் பாத்திரங்களின் மீது திணிக்க முயற்சிப்பதில்லை. அதைப் போலவே தான் தகவல்கள் அதிகம் என்பது பற்றிய குற்றச்சாட்டும். இது கதைக்குத் தேவை என நான் நம்புவதை மட்டுமே எழுதி வருகிறேன்.

இந்திரா - எனக்கு உங்களுடைய இரவுக்காட்சி கதை ரொம்பப் பிடித்து இருந்தது. ஆனால் ஒரு சில இடங்களில் காமம் சார்ந்து எழுதும்போது சில நெருடல்கள் இருக்கின்றன. நண்பர் ஒருவர் சொன்னார் காமம் கொண்டாட்டமாக வெளிப்படுகிறது என்று. அவன் ஒரு கூலித் தொழிலாளி. மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள். இந்த மாதிரியான நேரத்தில் அவனால் எப்படி எந்த மனக்கிலேசமும் இல்லாமல் உறவு வைத்துக் கொள்ள முடிகிறது? மிருகங்கள் மட்டுமே அதுமாதிரியான செயல்பாடுகளில் ஈடுபடும். இது எல்லாம் தவிர்த்து மொத்தமாக உங்களின் தொகுப்பு எனக்கு பிடித்து இருக்கிறது.

கே.என்.செந்தில் - நான் முன்னரே சொன்னதுபோல கதைக்குத் தேவையானதையே நான் எழுதுகிறேன். காமம் என்பதை வலிந்து எழுத முயற்சிப்பதில்லை. அந்தக் கதாப்பாத்திரம் அந்த சூழலில் அவ்வாறே நண்டந்து கொள்ளும் எனக் கதைதான் தீர்மானிக்கிறது.

கதைகளில் இன்று உரையாடல்களைத் (dialogue) தவிர்த்து வர்ணனைகளின் மூலமாகக் கதை சொல்வது என்பது அதிகரித்து வருகிறது. இது சரிதானா என்ற கேள்வி கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. கதை சொல்லும் உத்தி என்னவாக இருந்தாலும் கதையை முன்னகர்த்தி செல்லவும் அடர்த்தியைக் கூட்டவும் உதவுமெனின் கண்டிப்பாக வர்ணனைகள் தேவையே என்பதை எல்லா படைப்பாளிகம் ஆமோதித்தனர். இதன் பின்பான உரையாடல் மற்றொரு கேள்வியை முன்வைத்து ஆரம்பித்தது.

பா.திருச்செந்தாழை - எல்லாரும் எழுதிய உலகத்தையே நாம் மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருக்கிறோம். இதை விடுத்து நாம் ஏன் இன்னொரு தளத்துக்கு நகரக் கூடாது? நம்மைச் சுற்றி இருக்கும் பொருட்களின் மேல் நாம் ஏன் கவனம் கொள்வதில்லை? அவையும் நம் வாழ்வில் முக்கியப் பங்கு ஆற்றத்தானே செய்கின்றன? எளிதாகச் சொல்ல வேண்டுமானால், நமக்குப் பிடித்தமான ஒரு சட்டையைப் போட்டுக் கொள்ளும்போது அன்றைய நாள் முழுதும் சந்தோஷமாக உணருகிறோம். இது போல நிறைய.. ஆக பொருட்கள் நமக்கு ஏதோ ஒரு வகையில் சில உணர்வுகளை உண்டாக்கிப் போகின்றன அல்லவா.. ஏன் அவற்றைப் பற்றி நாம் பேசக் கூடாது?

கே.என.செந்தில் - பொருட்களை முன்னிறுத்தி கதைகள் எழுதுவதில் தவறில்லை. ஆனால் அவை உயிரற்றவை. அவை மனிதனால் பயனபடுத்தபடுகின்றன. ஆக சார்புநிலை என்று வரும்போது அங்கும் நாம் மனிதர்களைப் பற்றித்தான் பேச வேண்டி இருக்கிறது.

பா.திருச்செந்தாழை - நான் சொல்ல வருவதை இன்னும் கொஞ்சம் தெளிவாக்க முயலுகிறேன். வண்ணநிலவனின் மிருகம் எனக்கு ரொம்பப் பிடித்த கதை. நிறைய திறப்புகள் (opening) கொண்ட கதை சூழல். ஒரு மனிதன் அடுக்களைக்குள் நுழையும்போது எங்கும் சாம்பல் மணம் வீசியது என்கிற ஒரு வரி வரும். திறந்து கிடக்கும் வீட்டுக்கள் இருந்த புகைப்படங்கள் எல்லாமே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தன என்கிற ஒரு இடமும் உண்டு. இங்கே உயிரற்ற அந்தப் பொருட்கள் நமக்குள் ஏற்படுத்தக் கூடிய அதிர்வுகளை நாம் கவனிக்க வேண்டும். அப்புறம் இன்னொரு கதை.. சமீபமாக எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியது. ஆணி என்று நினைக்கிறேன். ஒரு சுவரில் இருக்கும் ஆணையைப் பற்றிய அவருடைய சிந்தனைகள். அவ்வளவேதான். இந்தக் கதையை எழுதும்போது, தன்னுடைய பொது எழுத்துலகை விட்டு வெளியேறி, வேறொரு தளத்தில் இயங்குவதன் மூலம் அவர் மிகுந்த ஆசுவாசத்தை உணர்ந்திருக்கக் கூடும் என நம்புகிறேன். எனவேதான் பொருட்களின் மீது இயங்கக் கூடிய இன்னொரு வெளியைப் பற்றி ஏன் யோசிக்கக் கூடாது என கேட்கிறேன்.

கே.என்.செந்தில் - நீங்கள் சொல்வது சரிதான் என்றாலும் முப்பது வருடங்களுக்கு முன்பு வண்ணநிலவன் இந்தக் கதையை எழுதும்போது இந்த விஷயங்களை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டிருப்பாரா என்றால் இருக்காது என்றுதான் சொல்ல வேண்டும். எழுதும் விஷயங்கள் பிற்காலத்தில் வாசகர்களாலேயே இன்னதென்று தீர்மானிக்கபடுகிறது. எனவே பொருட்கள் சார்ந்து எழுதுவதென்பது திட்டம் போட்டு செய்ய முடியாததாகவே இருக்கும். கதைக்குத் தேவையெனில் நாம் அந்த உத்தியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

கா.பா- பொருட்கள் சார்ந்த கதை எனச் சொல்லும்போது எனக்கு ஜி.முருகனின் காண்டாமிருகம் ஞாபகத்துக்கு வருகிறது. அது ஒரு உண்டியல். திடீர் தித்தர் என காணாமல் போய் மீண்டும் கிடைக்கிறது. கிட்டத்தட்ட வாசகனோடு ஒரு விளையாட்டாக இந்தக் கதையை அவர் எழுதி இருக்கிறார். உயிரற்ற அந்த பொருள் மொத்தக் கதையயும் தாங்கிப் பிடிக்கிறது என்பதை நாம் கண்டுகொள்ளலாம். ஆகவே கதையின் தேவை குறித்தே பொருட்களின் மீதான கவனம் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.

அதன் பிறகும் அங்கங்கே அலைந்து திரிந்து இறுதியாக உரையாடல் முடிவுக்கு வந்தது. ஆக மொத்தத்தில் அருமையானதொரு நிகழ்வு. பா.திருச்செந்தாழை ஒருவர் மட்டுமே செந்திலின் கதையுலகம் பற்றிய கட்டுரை எழுதி வந்து வாசித்தார் என்பது ஒரு சிறு குறை. இன்னும் மூன்று நான்கு கட்டுரைகளாவது வாசிக்கப்பட்டு இருக்க வேண்டும். அதையே கே.என்.செந்திலும் தன் நன்றியுரையில் குறிப்பிட்டார். அதே போல நிறைய விஷயங்கள் பொதுவாக பேசப்பட்டன. அப்படி இல்லாது படைப்பாளியின் படைப்புலகை முன்னிறுத்தி பேசுவது இன்னும் இந்த சந்திப்புகள் காத்திரமாக அமைய உதவக்கூடும். நிகழ்வை சாத்தியமாக்கிய அத்தனை நண்பர்களுக்கும் நன்றி.

January 31, 2011

சாவடி - மதுரை இலக்கிய சந்திப்பு (1)

மதுரையில் இருக்கக்கூடிய இலக்கிய நண்பர்கள் அனைவரும் ஒன்றுகூடிசாவடிஎன்கிற புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள் / றோம். இன்றைய தமிழ்ச்சூழலில் முக்கியமானவர்கள் என்று சொல்லக்கூடிய இளம் படைப்பாளிகளை அடையாளம் கண்டு, அவர்களின் படைப்புலகம் பற்றிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தி, அவர்கள் மீது பரவலான கவனிப்பை உண்டாக்குவதே இவ்வமைப்பின் நோக்கம். இதன் தொடர்ச்சியாக 30-01-2011 அன்று மதுரை காக்காத்தோப்பில் இருக்கும் மூட்டா ஹாலில்சாவடியின் முதல் அமர்வு நடைபெற்றது. “இரவுக்காட்சி என்கிற தன்னுடைய சிறுகதை தொகுப்பின் மூலம் பரவலான கவனிப்பைப் பெற்றிருக்கும் கே.என்.செந்தில் இந்த நிகழ்வின் முதல் படைப்பாளியாக கலந்து கொண்டார்.

மதுரையில் இருக்கும் தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள். அவர்கள் - சமயவேல், .ஜயபாஸ்கரன், ஸ்ரீசங்கர், எஸ்.செந்தில்குமார், பா.திருச்செந்தாழை, ஹவி மற்றும் அவரது துணைவியார் இந்திரா, செந்தி, புதுகை சஞ்சீவி ஆகியோர்.வலைப்பதிவர்களும் கணிசமான எண்ணிக்கையில் வந்திருந்தார்கள். வாசிப்பில் புதிதாக நுழைய விழையும் வாசகர்கள் மற்றும் சில பெயர் தெரியா நண்பர்கள் என பலர் ஒன்று கூடிட நிகழ்வு பதினொரு மணிக்குத் தொடங்கியது. நிகழ்வுகளை என்னுடைய நினைவிலிருந்து மீட்டெடுத்து முடிந்தவரை சரியாக எழுத முற்படுகிறேன். எங்கும் ஏதேனும் தவறு இருந்தால் தொடர்புடையவர்கள் மன்னியுங்கள்.

முதலாவதாக எஸ்.செந்தில்குமார் பேசினார். “ஆரம்பிக்குமுன், இன்றைக்கு நாம் எதைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறோம் என்று பேசுவோம். அகச்சிக்கல்கள், நெருக்கடி என்றெல்லாம் சொல்லிக் கொள்ளும் விஷயங்களைத்தான் காலம் காலமாக எழுதி வருகிறோம். அப்படிப் பார்க்கும்போது இன்றைய இளம் படைப்பாளிகளுக்கான பெரும் நெருக்கடியாக எது இருக்கிறது? பெரும்பாலும் காமம் சார்ந்த விஷயங்களையே அவர்கள் எழுதி வருவதாக எனக்குப் படுகிறது. அதிலும் குறிப்பாக, தன்னை விட மூத்த பெண் மீது ஒருவன் கொள்ளும் காதல். அப்புறம் இன்னொரு விஷயம், சுய மைதுனம். அதை விடுத்து உடல் சார்ந்து பேச பல விஷயங்கள் இருந்தாலும் நாம் பக்கம் பக்கமாக சுயமைதுனம் செய்து கொண்டிருக்கிறோம். இது சரிதானா? மௌனியில் ஆரம்பித்து தி.ஜாவில் தொடர்ந்து இன்றுவரைக்கும் திரும்ப திரும்ப இது எழுதித் தீராத விஷயமாக இருக்கிறது.. ஏன்? நாம் சார்ந்து இருக்கக் கூடிய சமுதாயத்தில் நமக்கு எவ்விதமான சிக்கலும் இல்லையா? ஏன் அவற்றை எல்லாம் இளம் படைப்பாளிகள் எழுத முன்வருவதில்லை..?”

கே.என்.செந்தில் - "நீங்கள் சொல்லும் விஷயத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. காலம் காலமாக பெண்ணின் மீதான காமம் மட்டுமே பதியப்பட்டு வருவதாக நீங்கள் சொல்வதில் நியாயம் இல்லை. புதுமைப்பித்தனின் எழுத்திலோ இல்லை மௌனியின் எழுத்திலோ நீங்கள் சொல்லும் மூத்த பெண் மீதான காமம் என்பது எதுவும் கிடையாது. தி.ஜாவும் அதன் தொடர்ச்சியாக வண்ணதாசன், வண்ணநிலவன் ஆகியோரின் எழுத்தில் இது போன்ற விஷயங்களைக் காணலாம். என்றாலும், இன்றைக்கு இருக்கக் கூடியவர்களுக்கு தங்களுடைய மிக முக்கியமான பிரச்சினையாக அவர்களுடைய உடல்தான் இருக்கிறது. தன் பிரதான பிரச்சினைகள் என நாம் நம்பக் கூடிய விஷயங்களையே ஒரு எழுத்தாளன் பதிவு செய்கிறான் எனும்போது காமம் சார்ந்து நிறைய பேச வேண்டியதாக இருக்கிறது.."

செந்தி - "இந்த தொகுப்பின் முன்னுரையில் இருக்கும் செந்திலின் சில வார்த்தைகளை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். முக்கியமானது என நான் எண்ணிய சில பாத்திரங்கள் ஒன்றுமில்லாமல் போக திடீரென உருவான சில பாத்திரங்கள் கதையின் மையமாகிப் போன விஷயங்கள் இங்கே நிகழ்ந்து இருக்கின்றன. கதையை நான் எழுதினேன் என்பதை விட கதை தன்னைத்தானே எழுதிக் கொண்டது என்பதுதான் மிகச் சரியாக இருக்கும். இது எனக்கு ரொம்பப் பிடித்து இருக்கிறது. அப்புறம் கதைகளைப் பற்றி, முதல் கதையில் வாரும் ஒரு வாசகம் எனக்கு ரொம்ப நெருடலாக இருக்கிறது. கீழ்த்தரமான பழக்கங்களால் அவனுடைய உடலும் மனமும் சிதைந்து போயிருந்தன. இதில் "கீழ்த்தரமான" என்ற வார்த்தையை எப்படிப் பயன்படுத்தலாம்? ஆசிரியர் அதை தீர்மானிப்பது சரிதானா? அதேபோல கதையின் நாயகனின் பின்புலம் லாட்டரி மீது மோகம் கொண்டவன் என்பதாக இருக்கிறது. இதையும் கொஞ்சம் மாற்றி இருக்கலாம். இரண்டாம் கதையான கிளைகளில் இருந்து கூட இதே போல வர்ணனைகளின் மீது மட்டுமே கவனம் கொள்வதாக எனக்குப் படுகிறது. தொகுப்பின் தலைப்புக் கதையான இரவுக்காட்சி எனக்கு ரொம்பப் பிடித்து இருக்கிறது. மொத்தத்தில் ஒரு சில நெருடல்கள் தவிர்த்து இது எனக்கு ரொம்பவும் பிடித்த தொகுப்பாக இருக்கிறது"

கே.என்.செந்தில் - "என்னைப் பொறுத்தவரை ஆசிரியர் எதையும் தீர்மானம் செய்வதில்லை. அது அந்த கதாபாத்திரம் உணரக் கூடிய உணர்வு மட்டுமே. பெண்கள், சுயமைதுனம் எனத் தன் உடம்பை அழித்துக் கொண்ட ஒருவன் தன்னைப் பற்றி தானே சொல்லும்போது இருக்கக் கூடிய குற்றவுணர்வை மட்டுமே அங்கே பார்க்க முடியும். மற்றபடி கதைக்குத் தேவையான வர்ணனைகள், சூழலை விளக்க கண்டிப்பாகத் தேவை என நான் நம்புகிறேன்."

பா.திருச்செந்தாழை - "இன்றைக்கு எழுதப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் என இரண்டு விஷயங்களை மட்டுமே என்னால் சொல்ல முடியும். அது criminality மற்றும் sexuality. அதிலும் குறிப்பாக பாலுணர்வு சார்ந்து இயங்கும்போது ஒரு மனிதனுக்கு வரக்கூடிய அடிப்படை உணர்வுகளையும், குற்ற மனப்பான்மையும் பதிவு செய்வதுதான் முக்கியம் என நான் நம்புகிறேன். ஏன் என்றால் இவை தவிர்த்து எழுதப்படும் மற்ற விஷயங்கள் எல்லாமே காலாவதியாகி விட்டன. அன்பு, கருணை என்று அதை எல்லாம் மீண்டும் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது என்பது வெறும் பாவனையாகவே இருக்கக் கூடும்.."

சமயவேல் - "எதை எழுதுவது என்பது பற்றிய இன்றைய படைப்பாளிகளுக்கு இருக்கக் கூடிய மிக முக்கியமான பிரச்சினை முன்னோடிகளின் சாதனைதான். சிறுகதைகளின் அத்தனை சாத்தியங்களையும் அவர்கள் முயற்சி செய்து பார்த்து விட்டார்கள் என்பதுதான் உண்மை. எனவே இன்றைக்கு எழுதும்போது எந்த சூழலிலும் அவர்களுடைய சாயல் என்பது வந்து விடக் கூடாது என்பதில் இளம் தலைமுறையினர் கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது. அதேபோல செந்தாழை சொன்னது ஒரு முக்கியமான விஷயம். குற்றமும் பாலியலும் இன்றைக்கு பெரும்பாலான கவனத்தைப் பெற முடிகிறதென்றால் அதற்குக் காரணம் நம்மால் அத்தோடு நம்மைத் தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது என்பதால்தான்... இதுதான் எழுத வேண்டும் என்று யாராலும் அருதியிட்டுச் சொல்ல முடியாது.."

கே.என்.செந்தில் - "இந்த பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டுமானால் மூத்த படைப்பாளிகளை கண்டிப்பாக படிக்க வேண்டும் என்பதையே நான் தீர்வாக சொல்லுவேன். என்ன எழுதி இருக்கிறார்கள் என்பது தெரிந்தால் மட்டுமே நமக்கான இலக்கு எது என்பதை நாம் தீர்மானம் செய்ய முடியும்.."

ஹவி - "அகச்சிக்கல்கள் பற்றி இங்கே எல்லாரும் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதால் இதை நான் சொல்ல வேண்டி இருக்கிறது. ஒரு மனிதனுக்கு அவனுடைய உடல் மட்டுமே சிக்கலான ஒன்றாக இருக்குமா என்றால் கண்டிப்பாகக் கிடையாது என்றே நான் சொல்லுவேன். நாம் வாழும் இந்த சமூகத்தில் எத்தனை பிரச்சினைகள் இருக்கின்றன? அவற்றோடு இணைந்துதான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எனும்போது அவை எப்படி நம்மை பாதிக்காமல் இருக்க முடியும்? உலகமயமாக்கல், அது சார்ந்த பிரச்சினைகள் என்று நிறைய பேசுகிறோம். நிறைய இழந்து விட்டோம் என்றெல்லாம் சொல்கிறோம். ஆனால் பெருநகரத்தின் இன்னொரு முகத்தை நாம் ஏன் பதிவு செய்ய மறுக்கிறோம். சென்னையில் ஒரு மின்தொடர்வண்டியில் நானும் என் மனைவியும் போய்க் கொண்டிருந்தோம். திடீரென என் மனைவிக்கு அடக்க முடியாத இருமல். எதிரே அமர்ந்து இருந்த மனிதர் சட்டென தன் கையில் இருந்த மினரல் வாட்டர் பாட்டிலைக் கொடுத்து குடிக்கச் சொன்னார். திருப்பிக் கொடுத்தபோது கூட நான் இறங்கி விடுவேன் உங்களுக்கு உதவும் வைத்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லி இறங்கிப் போய் விட்டார். இப்படியான மனிதர்களும் நகரத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். இதை நாம் ஏன் பேசாமல் புலம்ப மட்டுமே செய்கிறோம்? இப்போது தொகுப்பை முன்வைத்து, கே.ஏன்.செந்திலுடைய கதைகள் நேர்மையாக இருக்கின்றனவா? தனக்குத் தெரிந்த அத்தனை விவரங்களையும் சொல்லிடும் முனைப்பு அவரிடம் இருக்கிறது. ஒரு ஏழு வயது பையனைப் பற்றிக் கதை சொல்லும்போது அங்கே அந்த சிறுவனுடைய மனநிலையில்தான் கதைஸ் சொல்ல வேண்டும். மாறாக எனக்கு அங்கே ஆசிரியரின் கொள்கைகளை எல்லாம் சிறுவனின் மீது அவர் இறக்கி வைப்பதாகப் படுகிறது. ஒருவனைத் துரத்திக் கொண்டு ஓடுகிறார்கள். அப்போது அவன் என்ன மாதிரி எல்லாம் சிந்திக்க முடியும்? போகும் வழியில் செந்தில் உண்டாகும் பிம்பங்களை எல்லாம் என்னால் துல்லியமாக கவனிக்க முடிவதில்லை.. எதற்காக இத்தனை சிதறல்கள்? கேன்வாஸ் பெரிதாக இருக்கிறது என்பதற்காக அத்தனை விஷயங்களையும் உள்ளே கொண்டு வந்து விடவேண்டும் என்பது அவசியமில்லை என்றே நான் நினைக்கிறேன்.."

(உரையாடலின் தொடர்ச்சி அடுத்த இடுகையில்..)