October 18, 2010

ஒரு எழுத்தாளனின் (சோகக்) கதை

முடிவு பண்ணி விட்டேன். வேறு வழியே இல்லை. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் வீட்டில் வெட்டிப்பயல், தண்டம் என்றெல்லாம் திட்டு வாங்கிக் கொண்டிருப்பது? உருப்புடியாக ஏதாவது செய்தே ஆக வேண்டும். ஆமாம். அதனால் நான் எழுத்தாளராகப் போகிறேன்.

சுப்.. அப்படி எல்லாம் சிரிக்கக் கூடாது. நான் என் அம்மாவிடம் இதைச் சொன்னபோது அவரும் இப்படித்தான் சிரித்தார். "நீ திருந்தவே மாட்டியாடா?" என்று அட்வைஸ் வேறு. பரவாயில்லை. கண்ணம்மாவுக்குத் தெரியுமா கதை எழுதுபவனின் அருமை. என்னடா இந்த சின்னப் பையனுக்கு இவ்ளோ அறிவான்னு உங்கள் எல்லாருக்கும் பொறாமை.

ஏதாவது செய்யணும்னு முடிவு பண்ணிட்ட.. அது ஏன் கதை எழுதணும்னு தோணுச்சு?

அப்படி கேளுங்க.. சின்ன வயசுல இருந்தே எனக்குள்ள ஒரு பொறி இருந்திருக்குங்க (ஆயுத பூஜைக்கு தரது கிடையாது). சிறுவர் மலர், பாப்பா மலர்ல எல்லாம் நிறைய கதை வாசிச்சுக்கிட்டே இருப்பேனாம். ஸ்கூல்ல என்னோட பரீட்சை பேப்பரைத் திருத்தி முட்டை போடுற வாத்திமாருங்க கூட நீ கதை எழுதத்தாண்டா லாயக்குன்னுதான் திட்டுவாங்கன்னா பாருங்களேன்.

எல்லாத்துக்கும் மேல, அன்னைக்கு ராத்திரி நான் ஒரு கனவு கண்டேன். ஒரு பெருசு நமக்கு சால்வை எல்லாம் போத்தி "எழுத்தாளர் குல திலகம் வாழ்க" அப்படின்னு சொல்றார். அப்படியே திகைப்புல முழிச்சு பார்த்தா மணி காலைல அஞ்சு மணி. எப்பவுமே அதிகாலைல காணுற கனவு பலிக்கும்னு சொல்லுவாங்க. அதனாலத்தான் நான் முடிவு பண்ணினேன் - எழுத்தாளர் ஆகுறதுன்னு...

முடிவு எடுத்தாச்சு. ஆனா என்ன எழுதுறது எதப்பத்தி எழுதுறது? யாருக்கிட்ட கேக்கலாம்? கழுதை கெட்டா குட்டிச்சுவரு. நேரா நம்ம நண்பர்கள்கிட்ட போய் நின்னேன். எல்லாப்பயலும் எங்கம்மா மாதிரியே சிரிச்சானுங்க- ஒருத்தனைத் தவிர. குமார் - நீதாண்டா என் உயிர் நண்பன். அவன் சொந்தமா பழைய பேப்பர் கடை வச்சிருக்கான்கிற விவரம் நமக்குத் தேவை இல்லாதது.

"டேய் மாப்ள... எந்த வேலைய செய்யும்போதும் முன்னோர்களோட அறிவுரை அவசியம்டா.. இப்போ நீ ஏதாவது எழுதனும்னா ஏற்கனவே எழுதிக்கிட்டு இருக்குற ஒருத்தரோட வழிகாட்டுதல் வேணும்டா.."

எனக்கு அப்படியே உடம்பு புல்லரிச்சுப் போச்சு. ஒரு நிமிஷத்துல அவன் சோனியா காந்தி மாதிரியும் நான் மன்மோகன் மாதிரியும் ஒரு உணர்வு. (எப்பவுமே கிருஷ்ணர் - அர்ஜுனனைத் தான் சொல்லனுமா?)

"யாரடா மாப்ள போய்ப் பார்க்கலாம்?"

"எங்க தெருவுல செல்வம் அண்ணன்னு ஒருத்தர் இருக்காரு.. எனக்குத் தெரிஞ்சு பதினஞ்சு வருஷமா எழுதிக்கிட்டு இருக்காரு.. அவரப் போய் பார்ப்போம்டா.."

நாங்கள் போனபோது செல்வம் அண்ணன் அவர் வீட்டில் அதிபயங்கர சிந்தனையில் இருந்தார்.

"வா குமாரு.. தம்பி யாரு.."

"நம்ம பயதானே.. எழுதிப் பழகணும்னு ஆசைப்படுறான்.. அதான் உங்க கூட சேர்த்து விடலாம்னு.."

அண்ணனின் கண்கள் ஒரு வினாடி பெருமையில டாலடிச்சது.

"செஞ்சிரலாம் தம்பி.. நம்ம கிட்ட வந்துட்டீங்க இல்ல.. இனிமேல் உங்களுக்கு எல்லாமே ஜெயம்தான்.. ஊருக்குள்ள நம்மளப் பத்திக் கேட்டுப் பாருங்க.. கதை கதையா சொல்லுவாங்க.. எம்.ஜி.யார் ஜெயிச்ச்சதுக்குக் காரணம் என்ன.. எல்லாம் நம்ம எழுத்துத்தானே.."

எனக்குப் புரியவில்லை. "அது எப்படிண்ணே.."

"பின்ன.. ஊருல ஒரு சுவரு விடாம புடிச்சு புரட்சித் தலைவர் வாழ்கன்னு எழுதி பட்டையக் கிளபிட்டோம்ல.. இப்பக் கூட பாருங்க.. அடுத்தத் தேர்தல்ல நீங்க நமக்குத் தான் எழுதணும்னு ரெண்டு கட்சிக்காரனும் உசிர வாங்குறானுங்க.. அதான் யார் பக்கம் போகலாம்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்.."

"என்னது.. செல்வம் சுவத்துல விளம்பரம் எழுதுறவரா? டேய்.. குமார் என்னடா இது?"

நான் காண்டாக குமாரைப் பார்த்தபோது அவன் வானத்தை பார்த்துக் கொண்டிருந்தான். செல்வத்திடம் அப்புறம் வந்து பார்ப்பதாக சொல்லிவிட்டுக் கிளம்பினோம். தெருவில் நடந்தபோது ரெண்டு பேரும் எதுவும் பேசிக் கொள்ளவே இல்லை.

"சரி விடுறா.. இப்போ அடுத்து என்ன செய்யலாம்?"

நாங்கள் அடுத்து போன இடம் ரேடியோ ஸ்டேஷன்ல வேலை பார்க்குற குன்னனோட வீடு.

"வாங்க தம்பி.. எழுத்தாளர் ஆகணுமா? ரொம்ப சந்தோசம். ஆர்வம்தான் முக்கியம். இந்த புத்தகத்த எல்லாம் பார்த்துக்கிட்டு இருங்க.. எல்லாத்துலையும் நாம் எழுதி இருக்கோம்ல.. வந்திடுறேன்."

அவர் கொடுத்த புத்தகத்துல எந்தக் கதைலயும் அவர் பேரும் இல்லை. குமார் வாங்கி பார்த்தான்.

"டேய் இங்க பாருடா.."

"உலகின் ஏழு அதிசயங்களில் தாஜ்மகால் இந்தியாவில் உள்ளது. காக்கை தனக்காக கூடு கட்டிக் கொள்ளாது. பாம்புக்கு காதுகள் கிடையாது. எல்லாமே துணுக்குடா.. இதத்தான் இந்த ஆளு எழுதுவான் போல.."

சிரித்துக் கொண்டே குன்னன் வந்தார்.

"த்தம்பி.. இந்தாங்க நான் பதிப்பிச்ச புக்கு.."

எனக்கு அதை பார்த்தவுடன் திக்கென்றிருந்தது.

"ரேடியோ ரிப்பேர் செய்வது எப்படி?"

"நூறு நாட்களில் பணக்காரன் ஆவது எப்படி?"

எழுதியவர் பேரா.குன்னன் என்று வேறு போட்டிருந்தது.

"ஹி ஹி.. அப்படி போட்டாத்தான் தம்பி ஒரு மரியாதை.."

எனக்கு அழுகையே வரும் போல இருந்தது. குமாரைப் பார்த்தேன். அவனும் பேய் அறைந்த மாதிரித்தான் இருந்தான். நானும் குமாரும் கிளம்பும்போது அந்தாளு சொன்னது இன்னும் வயித்தெரிச்சல்.

"என்னை மாதிரியே நல்ல எழுத்தாளரா வர வாழ்த்துகள்.."

ரெண்டு பேரும் மண்டை காய்ஞ்சு வழியே வந்தோம்.

"குமார்.. இனிமே மத்தவங்கள நம்பி பிரயோஜனம் இல்ல.. நானா முயற்சி பண்ணி எழுதப் போறேன்.."

அவனுக்கு அப்படியே ஜிவ்வுன்னு இருந்திருக்கும் போல. என்னை கட்டிக் கொண்டான்.

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

- சோகம் தொடரும்

16 comments:

Balakumar Vijayaraman said...

"எழுத்தாளர் குல திலகம் வாழ்க" :)

// காக்கை தனக்காக கூடு கட்டிக் கொள்ளாது. // ??? அப்படியா ???

Anonymous said...

//ஆயுத பூஜைக்கு தரது கிடையாது//
எழுதியவர் பேரா.குன்னன் என்று வேறு போட்டிருந்தது.//

ஹா ஹா..

// நானா முயற்சி பண்ணி எழுதப் போறேன்..//

சிங்கம் ஒன்று புறப்பட்டதே :)

முரளிகண்ணன் said...

nice one. start music

சிவாஜி சங்கர் said...

//ஒரு நிமிஷத்துல அவன் சோனியா காந்தி மாதிரியும் நான் மன்மோகன் மாதிரியும் ஒரு உணர்வு. //
கலக்கல் :) :P

Karthik said...

Hehe nalla irukkungna! :-) :-)

நையாண்டி நைனா said...

/*எழுதியவர் பேரா.குன்னன் என்று வேறு போட்டிருந்தது.*/

அட பாவமே... பேரா. மாவே. காளை பாண்டியன் அவர்களே.... ஒரு "பேரா" இப்படி பேரா வாங்கணும் ? வேற நல்ல பேரா வாங்குனா தானே நல்லது...

வார்த்தை said...

//"குமார்.. இனிமே மத்தவங்கள நம்பி பிரயோஜனம் இல்ல.. நானா முயற்சி பண்ணி எழுதப் போறேன்.."//
gods must be crazy

//அவனுக்கு அப்படியே ஜிவ்வுன்னு இருந்திருக்கும் போல. என்னை கட்டிக் கொண்டான்.//
gods must be crazy 2

Balakumaran Lenin said...

Copyrightss enaku sirr!! Skit ku story theva padudhu!!!! ;)

மங்குனி அமைச்சர் said...

சார் என்ன சார் நீங்க , யாரு யாரையோ பாத்து டயத்த வேஸ்ட் பண்ணி இருக்கிங்களே , நேரா என்கிட்ட வரவேண்டியது தானே ?

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல நகைச்சுவை.இல்லத்தில் உள்ள அனைவரும் படித்து மகிழ்ந்தனர்.நன்றி.

Unknown said...

இது என்னோட கதைங்க

கமல் said...

அருமை நண்பரே "ஒரு எழுத்தாளனின் கதை பல கோணத்தில் இருக்கிறது, அதை நகைசுவையாக சொல்லிருக்கிங்க

நன்றி தொடர்ந்து படிக்கிறேன்.

ப்ரியமுடன் வசந்த் said...

செம ஃப்ளோ வாத்யாரே!

Sriakila said...

//சிங்கம் ஒன்று புறப்பட்டதே :) //


எங்க‌? எங்க‌?

kannamma said...

எழுதி பழகனும்னா ஏதாவது ஒரு "ANSWER PAPER-A"
வாசித்திருக்காலாம் -ல இதுக்கெதுக்கு ஊர் ஊர்-ஆ அலன்சீங்க SIR???
உங்க சோகம் ரொம்ப காமெடி SIR இன்னும் தொடருங்க.....

Sudharsan said...

Romba.. Romba.. Nalla erunthuchu....!