January 31, 2011

சாவடி - மதுரை இலக்கிய சந்திப்பு (1)

மதுரையில் இருக்கக்கூடிய இலக்கிய நண்பர்கள் அனைவரும் ஒன்றுகூடிசாவடிஎன்கிற புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள் / றோம். இன்றைய தமிழ்ச்சூழலில் முக்கியமானவர்கள் என்று சொல்லக்கூடிய இளம் படைப்பாளிகளை அடையாளம் கண்டு, அவர்களின் படைப்புலகம் பற்றிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தி, அவர்கள் மீது பரவலான கவனிப்பை உண்டாக்குவதே இவ்வமைப்பின் நோக்கம். இதன் தொடர்ச்சியாக 30-01-2011 அன்று மதுரை காக்காத்தோப்பில் இருக்கும் மூட்டா ஹாலில்சாவடியின் முதல் அமர்வு நடைபெற்றது. “இரவுக்காட்சி என்கிற தன்னுடைய சிறுகதை தொகுப்பின் மூலம் பரவலான கவனிப்பைப் பெற்றிருக்கும் கே.என்.செந்தில் இந்த நிகழ்வின் முதல் படைப்பாளியாக கலந்து கொண்டார்.

மதுரையில் இருக்கும் தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள். அவர்கள் - சமயவேல், .ஜயபாஸ்கரன், ஸ்ரீசங்கர், எஸ்.செந்தில்குமார், பா.திருச்செந்தாழை, ஹவி மற்றும் அவரது துணைவியார் இந்திரா, செந்தி, புதுகை சஞ்சீவி ஆகியோர்.வலைப்பதிவர்களும் கணிசமான எண்ணிக்கையில் வந்திருந்தார்கள். வாசிப்பில் புதிதாக நுழைய விழையும் வாசகர்கள் மற்றும் சில பெயர் தெரியா நண்பர்கள் என பலர் ஒன்று கூடிட நிகழ்வு பதினொரு மணிக்குத் தொடங்கியது. நிகழ்வுகளை என்னுடைய நினைவிலிருந்து மீட்டெடுத்து முடிந்தவரை சரியாக எழுத முற்படுகிறேன். எங்கும் ஏதேனும் தவறு இருந்தால் தொடர்புடையவர்கள் மன்னியுங்கள்.

முதலாவதாக எஸ்.செந்தில்குமார் பேசினார். “ஆரம்பிக்குமுன், இன்றைக்கு நாம் எதைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறோம் என்று பேசுவோம். அகச்சிக்கல்கள், நெருக்கடி என்றெல்லாம் சொல்லிக் கொள்ளும் விஷயங்களைத்தான் காலம் காலமாக எழுதி வருகிறோம். அப்படிப் பார்க்கும்போது இன்றைய இளம் படைப்பாளிகளுக்கான பெரும் நெருக்கடியாக எது இருக்கிறது? பெரும்பாலும் காமம் சார்ந்த விஷயங்களையே அவர்கள் எழுதி வருவதாக எனக்குப் படுகிறது. அதிலும் குறிப்பாக, தன்னை விட மூத்த பெண் மீது ஒருவன் கொள்ளும் காதல். அப்புறம் இன்னொரு விஷயம், சுய மைதுனம். அதை விடுத்து உடல் சார்ந்து பேச பல விஷயங்கள் இருந்தாலும் நாம் பக்கம் பக்கமாக சுயமைதுனம் செய்து கொண்டிருக்கிறோம். இது சரிதானா? மௌனியில் ஆரம்பித்து தி.ஜாவில் தொடர்ந்து இன்றுவரைக்கும் திரும்ப திரும்ப இது எழுதித் தீராத விஷயமாக இருக்கிறது.. ஏன்? நாம் சார்ந்து இருக்கக் கூடிய சமுதாயத்தில் நமக்கு எவ்விதமான சிக்கலும் இல்லையா? ஏன் அவற்றை எல்லாம் இளம் படைப்பாளிகள் எழுத முன்வருவதில்லை..?”

கே.என்.செந்தில் - "நீங்கள் சொல்லும் விஷயத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. காலம் காலமாக பெண்ணின் மீதான காமம் மட்டுமே பதியப்பட்டு வருவதாக நீங்கள் சொல்வதில் நியாயம் இல்லை. புதுமைப்பித்தனின் எழுத்திலோ இல்லை மௌனியின் எழுத்திலோ நீங்கள் சொல்லும் மூத்த பெண் மீதான காமம் என்பது எதுவும் கிடையாது. தி.ஜாவும் அதன் தொடர்ச்சியாக வண்ணதாசன், வண்ணநிலவன் ஆகியோரின் எழுத்தில் இது போன்ற விஷயங்களைக் காணலாம். என்றாலும், இன்றைக்கு இருக்கக் கூடியவர்களுக்கு தங்களுடைய மிக முக்கியமான பிரச்சினையாக அவர்களுடைய உடல்தான் இருக்கிறது. தன் பிரதான பிரச்சினைகள் என நாம் நம்பக் கூடிய விஷயங்களையே ஒரு எழுத்தாளன் பதிவு செய்கிறான் எனும்போது காமம் சார்ந்து நிறைய பேச வேண்டியதாக இருக்கிறது.."

செந்தி - "இந்த தொகுப்பின் முன்னுரையில் இருக்கும் செந்திலின் சில வார்த்தைகளை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். முக்கியமானது என நான் எண்ணிய சில பாத்திரங்கள் ஒன்றுமில்லாமல் போக திடீரென உருவான சில பாத்திரங்கள் கதையின் மையமாகிப் போன விஷயங்கள் இங்கே நிகழ்ந்து இருக்கின்றன. கதையை நான் எழுதினேன் என்பதை விட கதை தன்னைத்தானே எழுதிக் கொண்டது என்பதுதான் மிகச் சரியாக இருக்கும். இது எனக்கு ரொம்பப் பிடித்து இருக்கிறது. அப்புறம் கதைகளைப் பற்றி, முதல் கதையில் வாரும் ஒரு வாசகம் எனக்கு ரொம்ப நெருடலாக இருக்கிறது. கீழ்த்தரமான பழக்கங்களால் அவனுடைய உடலும் மனமும் சிதைந்து போயிருந்தன. இதில் "கீழ்த்தரமான" என்ற வார்த்தையை எப்படிப் பயன்படுத்தலாம்? ஆசிரியர் அதை தீர்மானிப்பது சரிதானா? அதேபோல கதையின் நாயகனின் பின்புலம் லாட்டரி மீது மோகம் கொண்டவன் என்பதாக இருக்கிறது. இதையும் கொஞ்சம் மாற்றி இருக்கலாம். இரண்டாம் கதையான கிளைகளில் இருந்து கூட இதே போல வர்ணனைகளின் மீது மட்டுமே கவனம் கொள்வதாக எனக்குப் படுகிறது. தொகுப்பின் தலைப்புக் கதையான இரவுக்காட்சி எனக்கு ரொம்பப் பிடித்து இருக்கிறது. மொத்தத்தில் ஒரு சில நெருடல்கள் தவிர்த்து இது எனக்கு ரொம்பவும் பிடித்த தொகுப்பாக இருக்கிறது"

கே.என்.செந்தில் - "என்னைப் பொறுத்தவரை ஆசிரியர் எதையும் தீர்மானம் செய்வதில்லை. அது அந்த கதாபாத்திரம் உணரக் கூடிய உணர்வு மட்டுமே. பெண்கள், சுயமைதுனம் எனத் தன் உடம்பை அழித்துக் கொண்ட ஒருவன் தன்னைப் பற்றி தானே சொல்லும்போது இருக்கக் கூடிய குற்றவுணர்வை மட்டுமே அங்கே பார்க்க முடியும். மற்றபடி கதைக்குத் தேவையான வர்ணனைகள், சூழலை விளக்க கண்டிப்பாகத் தேவை என நான் நம்புகிறேன்."

பா.திருச்செந்தாழை - "இன்றைக்கு எழுதப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் என இரண்டு விஷயங்களை மட்டுமே என்னால் சொல்ல முடியும். அது criminality மற்றும் sexuality. அதிலும் குறிப்பாக பாலுணர்வு சார்ந்து இயங்கும்போது ஒரு மனிதனுக்கு வரக்கூடிய அடிப்படை உணர்வுகளையும், குற்ற மனப்பான்மையும் பதிவு செய்வதுதான் முக்கியம் என நான் நம்புகிறேன். ஏன் என்றால் இவை தவிர்த்து எழுதப்படும் மற்ற விஷயங்கள் எல்லாமே காலாவதியாகி விட்டன. அன்பு, கருணை என்று அதை எல்லாம் மீண்டும் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது என்பது வெறும் பாவனையாகவே இருக்கக் கூடும்.."

சமயவேல் - "எதை எழுதுவது என்பது பற்றிய இன்றைய படைப்பாளிகளுக்கு இருக்கக் கூடிய மிக முக்கியமான பிரச்சினை முன்னோடிகளின் சாதனைதான். சிறுகதைகளின் அத்தனை சாத்தியங்களையும் அவர்கள் முயற்சி செய்து பார்த்து விட்டார்கள் என்பதுதான் உண்மை. எனவே இன்றைக்கு எழுதும்போது எந்த சூழலிலும் அவர்களுடைய சாயல் என்பது வந்து விடக் கூடாது என்பதில் இளம் தலைமுறையினர் கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது. அதேபோல செந்தாழை சொன்னது ஒரு முக்கியமான விஷயம். குற்றமும் பாலியலும் இன்றைக்கு பெரும்பாலான கவனத்தைப் பெற முடிகிறதென்றால் அதற்குக் காரணம் நம்மால் அத்தோடு நம்மைத் தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது என்பதால்தான்... இதுதான் எழுத வேண்டும் என்று யாராலும் அருதியிட்டுச் சொல்ல முடியாது.."

கே.என்.செந்தில் - "இந்த பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டுமானால் மூத்த படைப்பாளிகளை கண்டிப்பாக படிக்க வேண்டும் என்பதையே நான் தீர்வாக சொல்லுவேன். என்ன எழுதி இருக்கிறார்கள் என்பது தெரிந்தால் மட்டுமே நமக்கான இலக்கு எது என்பதை நாம் தீர்மானம் செய்ய முடியும்.."

ஹவி - "அகச்சிக்கல்கள் பற்றி இங்கே எல்லாரும் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதால் இதை நான் சொல்ல வேண்டி இருக்கிறது. ஒரு மனிதனுக்கு அவனுடைய உடல் மட்டுமே சிக்கலான ஒன்றாக இருக்குமா என்றால் கண்டிப்பாகக் கிடையாது என்றே நான் சொல்லுவேன். நாம் வாழும் இந்த சமூகத்தில் எத்தனை பிரச்சினைகள் இருக்கின்றன? அவற்றோடு இணைந்துதான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எனும்போது அவை எப்படி நம்மை பாதிக்காமல் இருக்க முடியும்? உலகமயமாக்கல், அது சார்ந்த பிரச்சினைகள் என்று நிறைய பேசுகிறோம். நிறைய இழந்து விட்டோம் என்றெல்லாம் சொல்கிறோம். ஆனால் பெருநகரத்தின் இன்னொரு முகத்தை நாம் ஏன் பதிவு செய்ய மறுக்கிறோம். சென்னையில் ஒரு மின்தொடர்வண்டியில் நானும் என் மனைவியும் போய்க் கொண்டிருந்தோம். திடீரென என் மனைவிக்கு அடக்க முடியாத இருமல். எதிரே அமர்ந்து இருந்த மனிதர் சட்டென தன் கையில் இருந்த மினரல் வாட்டர் பாட்டிலைக் கொடுத்து குடிக்கச் சொன்னார். திருப்பிக் கொடுத்தபோது கூட நான் இறங்கி விடுவேன் உங்களுக்கு உதவும் வைத்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லி இறங்கிப் போய் விட்டார். இப்படியான மனிதர்களும் நகரத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். இதை நாம் ஏன் பேசாமல் புலம்ப மட்டுமே செய்கிறோம்? இப்போது தொகுப்பை முன்வைத்து, கே.ஏன்.செந்திலுடைய கதைகள் நேர்மையாக இருக்கின்றனவா? தனக்குத் தெரிந்த அத்தனை விவரங்களையும் சொல்லிடும் முனைப்பு அவரிடம் இருக்கிறது. ஒரு ஏழு வயது பையனைப் பற்றிக் கதை சொல்லும்போது அங்கே அந்த சிறுவனுடைய மனநிலையில்தான் கதைஸ் சொல்ல வேண்டும். மாறாக எனக்கு அங்கே ஆசிரியரின் கொள்கைகளை எல்லாம் சிறுவனின் மீது அவர் இறக்கி வைப்பதாகப் படுகிறது. ஒருவனைத் துரத்திக் கொண்டு ஓடுகிறார்கள். அப்போது அவன் என்ன மாதிரி எல்லாம் சிந்திக்க முடியும்? போகும் வழியில் செந்தில் உண்டாகும் பிம்பங்களை எல்லாம் என்னால் துல்லியமாக கவனிக்க முடிவதில்லை.. எதற்காக இத்தனை சிதறல்கள்? கேன்வாஸ் பெரிதாக இருக்கிறது என்பதற்காக அத்தனை விஷயங்களையும் உள்ளே கொண்டு வந்து விடவேண்டும் என்பது அவசியமில்லை என்றே நான் நினைக்கிறேன்.."

(உரையாடலின் தொடர்ச்சி அடுத்த இடுகையில்..)

9 comments:

Unknown said...

நேற்றைய சந்திப்பில் நான் இன்னும் நிறைய படிக்க வேண்டும் என்று உணர்ந்து கொண்டேன் . நன்றி

Prabu M said...

பகிர்வுக்கு நன்றி பாஸ்...
நான் தவறவிட்ட இன்னுமொரு நல்ல சந்திப்பு இது என்று புரியுது! :(

'பரிவை' சே.குமார் said...

நல்லா தொகுத்திருக்கீங்க நண்பரே...
உண்மைதான் இன்றைய இலக்கிய உலகில் நிறைய பேர் நல்ல எழுதுகிறார்கள். குறிப்பாக காமம் கலக்காமல்...
விவாதம் தொடரட்டும்.

கார்த்திகைப் பாண்டியன் said...

நா.மணிவண்ணன்
நண்பா.. இங்க எல்லாருமே ஆரம்பத்துல தான் இருக்கோம்.. வாசிக்கிற ஆர்வம் உங்களுக்கு இருப்பதுதான் முக்கியம்.. தொடருங்க..

பிரபு.எம்
மாசாமாசம் நடக்கும்யா.. கவலப்படாத.. நீ வரும்போதும் கலக்கிருவோம்..:-))

சே.குமார்
வருகைக்கு நன்றிங்க

செ.சரவணக்குமார் said...

நல்ல முயற்சி கா.பா. நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து எழுதுவது உங்களின் தனிச்சிறப்பு. மதுரையில் நாம் கலந்துகொண்ட எஸ்.ராவின் நூல் வெளியீட்டைப்பற்றி நீங்கள் எழுதியிருந்தபோதே இதை உணர்ந்தேன். சூழலை கவனிப்பதும் அதை அப்படியே எழுத்தில் கொண்டுவருவதும் ஒரு எழுத்தாளனுக்கு மிக முக்கியம். உங்களுக்கு அது நன்றாக வருகிறது. மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் கா.பா.

திரு.சமயவேல் சொன்ன கருத்து மிக முக்கியமானது.

பகிர்வுக்கு நன்றி கா.பா.

cheena (சீனா) said...

அன்பின் கா.பா - முதல் அமர்வே கலக்கலாக இருந்தது - விவாதங்கள் - இன்றைய இளம் எழுத்தாளர்களின் மன நிலை - அத்தனையும் நன்று. பொறுமையாக அமைதி காத்து பார்வையாளராக மட்டும் கலந்து கொண்ட பதிவர்களின் பொறுமை அசாத்தியமானது. தொடரவும், மேன் மேலும் சிறப்புறவும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Balakumar Vijayaraman said...

நல்ல துவக்கம், வெல்லட்டும்.

அமைப்பின் பெயர் காரணப்பெயர் இல்லியே :)

கார்த்திகைப் பாண்டியன் said...

சரவணா
உங்க அன்புக்கு நன்றி..:-))

சீனா அய்யா
வந்து உக்கார்ந்து பொறுமையா அத்தனையையும் பார்த்தீங்க.. பதிவர்களைக் கூடி வந்தது சிறப்பு..:-))

பாலா
:-))))))

மதுரை சரவணன் said...

சாவடியைத் தொடரவும் ... பகிர்வுக்கு நன்றி.. ஹவி துணைவியார் பெயர் இந்திரா காந்தி என்று நினைக்கிறேன்.. வாழ்த்துக்கள்