August 1, 2011

மஞ்சள் நிறப் பைத்தியங்கள் - எஸ்.செந்தில் குமார்

நான் வாசிக்கும் எஸ்.செந்தில்குமாரின் முதல் தொகுப்பு இது. அவருடைய கதைகளைப் பற்றிப் பேசுமுன்பாக சிறுகதைகளை நான் புரிந்து கொண்டிருப்பது எவ்வாறு என்பதைச் சொல்ல விழைகிறேன். கதாபாத்திரங்களின் அகவழிப் பயணங்களினூடாக அவர்கள் உணரும் விஷயங்களையும், சிக்கல்கள் மற்றும் நெருக்கடிகளையும் காட்சிப்படுத்துவது ஒரு வகைக் கதை சொல்லல். மாறாக புறவய காரணங்கள் வழியாகவும் தொடர்ச்சியான நிகழ்வுகளின் மூலமாகவும் சம்பவங்களின் கோர்வையாகக் கதை சொல்லிப்போவது இன்னொரு வகை. இதில் செந்தில்குமாரின் கதைகளை இரண்டாவதாகச் சொன்ன வகையில் வைத்தே என்னால் பார்க்க முடிகிறது. துண்டு துண்டாக சிதறிக் கிடக்கும் கண்ணாடிச் சில்லுகளென மனிதன் வாழும் இயந்திர வாழ்விலிருந்து உண்டாகும் யதார்த்தம் சார்ந்த மற்றும் அதை மீறிய படிமங்களும் அவற்றின் மாயத்தன்மையுமே செந்தில்குமாரின் படைப்புலகமாக விரிகின்றன. இனி கதைகள் பற்றி..

இந்தத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதைஇடம்”. யதார்த்த வாழ்வின் சில பக்கங்களை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கும் கதை. தன் மகள் தன்னை ஏமாற்றிய ஆத்திரத்தில் உன் வாழ்க்கை நாசமாகத்தான் போகும் என சாபம் விடும் ஒரு தாயின் வாக்கு பலித்து விட இறுதிவரை தன் தாயை, சாவுக்குக் கூட வராமல், புறக்கணிக்கும் ஒரு மகளின் கதை. யாருக்கும் அவரவருக்கான நியாயம் உண்டென்பதை உணர்வுகளின் கோர்வையாய், மிகுவுணர்ச்சி ஏதுமின்றி, இயல்பான நடையில் சொல்லிப் போகும் கதை. கதையின் முதல் பத்தியிலேயே முடிவு இதுதானென சொல்லிவிட்டு பின் அதற்கான காரணங்களை விவரிக்கும் படியான உத்தி இந்தக்கதைக்கு மிகச்சரியாகப் பொருந்திப் போகிறது.

மாற்று மெய்மை எனக்கு எப்போதும் மிகப்பிடித்தமான விஷயமாக இருந்து வந்திருக்கிறது. அதன் காரணமாகவேஅனைப்பட்டி வெற்றிலை சுவாமிகளின் சரிதம்ரொம்ப வசீகரிக்கிறது. சமாதி இருக்கும் இடம் பற்றிய விவரணையும், அங்கே வந்து ரோஜா மலரை எடுத்துப் போகும் சிறுமியும், ரோஜா அவள் முகமாய் மாறுவதும் என நிறைய சொல்லலாம். குறிப்பாக இந்தக் கதையின் முடிவு.. தந்தையின் மரணத்துக்குப் போ என குழந்தை தரும் பணத்தைப் பெற்றுக் கொண்டவன் அதன் பின் ஊருக்கே போவதில்லை. அவன் தன்னை முற்றுமாக உணர்ந்த நிலையின் அழகிய வெளிப்பாடு அது. ஆனால் இந்தக் கதையில் சொல்லப்படும் சாமியின் வரலாற்றில் இருந்து ஒரு பக்கம், ஏற்கனவே நிகழ்காலத்தில் சொல்லப்பட்டு விட்ட நிலையில் மீண்டும் சொல்வது எதற்கெனப் புரியவில்லை.

ஒரு சாகசக்காரனின் மனநிலையை வாசிப்பவனுக்குத் தரக்கூடியதுஎன்னைத் தொடர்ந்து வாருங்கள்”. கதைகளின் நடுவே புதையலைத் தேடிப்போகும் துருவன் நம் எல்லோருக்கு உள்ளேயும் உண்டு. அப்படி பொய்யான புதையலைத் தேடியபடி வாழ்க்கையை தொலைத்து நிற்கும் மாமாவின், மதுரவல்லியின் துயரத்தை இந்தக்கதை சொல்கிறது. தன் கணவனை இன்னொருத்திக்கு விட்டுக் கொடுத்த பிறகு அத்தை நிகழ்காலத்துக்குத் திரும்புகிறாள். அதன் பிறகு அவள் புதையல் கதைகளை வாசிப்பதே இல்லை.

கவிதைகளில் வரக்கூடிய படிமங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகளெனமறையும் முகம்மற்றும்மஞ்சள் நிறப் பைத்தியங்கள்ஆகியவற்றைச் சொல்லலாம். திருமணத்துக்கு முன் கிறிஸ்துவைக் காதலித்தாலும் வேளாங்கன்னிக்கு நீரூற்றில் அவளுடைய கணவன் முகமே தெரிவது அவள் தன் வாழ்க்கையை அவனுக்கு ஒப்புக் கொடுத்ததற்கான சாட்சியம். அவளுக்குப் பிடித்த மேய்ப்பர் - ஆடுகளின் சித்திரங்களில் எப்போதும் ஆடுகளைத் தனியாகவே அவளால் பார்க்க முடிகிறது. ஆடென்பதே இங்கு அவளாக, கிறிஸ்து மேய்ய்ப்பராக இருக்கிறான் என்றே நான் வரிந்து கொள்கிறேன்.

மஞ்சள் நிறப் பைத்தியங்கள் - வாசஸ்தலத்தில் பார்த்த மாயப்பெண் பரப்பிச் செல்லும் மஞ்சள் நிறம் மீதான காதலைப் பேசும் அழகானதொரு உருவகம். இந்தத் தொகுப்பில் தனித்து தெரியக்கூடிய கதையெனஆயிரம் கால்கள் கொண்ட பூரானைச்சொல்லலாம். தொகுப்பின் பொதுப்போகிலிருந்து விலகி வெகு அபூர்வமாக பெண்மனதின் ஆழத்தில் ஊடுருவி அகமனப் போராட்டங்களைச் சொல்லும் கதை. மாதத்தில் மூன்று நாட்கள் தென்படும் பூரான், கலவிக்குப் பின்பாக கணவன் மீது தோன்றும் வெறுப்பு, இரண்டு பெண்களுக்கிடையே தோன்றும் அன்பென நிறைய இடங்களை அந்தரங்கமாகத் தொட்டுப் போகும் கதையிது.

"இதற்கிடையில் ஒரு பெண்கதையை வாசித்தபோது 80களில் வெளியான பாலைவனச்சோலையின் ஞாபகம் வந்துபோனது. என்றாலும் இந்தக்கதையில் மதுரை மக்களின் மனநிலையை அழகாகச் சொல்லும் இடம் சினிமாக்களுக்கு அவர்கள் தரும் முக்கியத்துவம் பற்றி பேசுமிடத்தில் வருகிறது. சந்தோசம் துக்கம் என எதுவானாலும் சினிமா என்பதை எப்படிப் பார்த்தாலும் அவர்களிடமிருந்து பிரிக்கவே முடியாதென்பதை கதை சித்தரிக்கிறது. என்றாலும் காலத்தோடு ஒவ்வாததாக இருக்கும் இந்தக் கதையும், வாழ்வின் வறுமையைப் பேசும்பாலை நிலக் காதல்ஆகிய கதைகளும் சின்னதொரு அயர்ச்சியைத் தருகின்றன.

ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்லும்போது வாசகனுக்கு அது உண்டாக்கக்கூடிய உணர்வு எத்தகையதாக இருக்கும்? வெறுமையையோ இல்லை அவலத்தையோ கடத்தவே அவை பயன்படும். ஆனால்அம்மாவின் காதல் கடிதங்கள்கதையில் அதிர்ஷ்டம்-துரதிர்ஷ்டம் சார்ந்த விவரிப்புகள் அதை நிகழ்த்தத் தவறுகின்றன. என்ன காரணத்தினால் இவை மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது என்கிற எரிச்சலே வருகிறது. அதேபோல கதையின் போக்கை முன்னமே முடிவாகச் சொல்ல இயலும்அதிகாலைத் தற்கொலையின் கதையும்தொகுப்போடு சேர்ந்தியங்கும் ஒத்திசைவு இல்லாதவை.

எந்தக் கதையிலும் சொல்லக்கூடிய கதை என்கிற ஒன்று கண்டிப்பாக இருந்தேயாக வேண்டும் என கேட்கக்கூடியவனில்லை நான். ஆனால் அந்தக்கதையின் வாயிலாக அது தரும் தகவல்கள் வழியாக அது கலையாக மாற வேண்டும் என்பது ரொம்பவே முக்கியம். ஆனால்ஹென்றிவெல் மார்ஷெல் நினைவு நூலகம்கதையில் அந்த சப்ளிமேஷன் - கலையாக மாறும் தருணம் நிகழவே இல்லை. அது வெறும் தகவல்களின் துருத்தலாகவே இருக்கிறது.

சுவாரசியமாக கதைசொல்லல் என்பதொரு கலை. அது செந்தில்குமாருக்கு எளிதாகக் கைகூடி வருகிறது. மொழியைக் கொண்டு வித்தை காட்டாமல், அனைவருக்கும் புரியும் எளிய மொழியில், எதார்த்தமான கதைகளை எழுதி இருக்கிறார். “மஞ்சள் நிறப் பைத்தியங்களைப்பொறுத்தவரையில் அலைகள் இல்லாத கடல் போன்ற அமைதியானத் தொகுப்பு. ஆனால் காலம் என்கிற ஒரு விஷயத்தை செந்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய தருணமிது. ஏறக்குறைய எல்லா கதைகளுமே சொல்லப்பட்டு விட்ட நிலையில் என்ன மாதிரியாக கதை சொல்கிறோம், என்ன உத்திகள் பயன்படுகின்றன, அவை இன்றைய காலகட்டத்தோடு பொருந்திப் போகிறதாக இருக்கிறதாவென்பது முக்கியம். அவ்வகையிலான கதைகளை அவர் எழுதுவார் எனும் நம்பிக்கையோடு முடிக்கிறேன்.

(31-07-11 அன்று ந்டைபெற்ற புத்தகம் மீதான விமர்சன அரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை..)

மஞ்சள் நிறப் பைத்தியங்கள்
தோழமை வெளியீடு
விலை - ரூ.80/-

1 comment:

Anonymous said...

http://specialdoseofsadness.blogspot.com/


add tis movie blog to ur google reader...essays r written in simple english and very shortly...

add tis movie blog too in ur google reader

http://cliched-monologues.blogspot.com/