October 5, 2011

நான் அமைதியாக இருக்கிறேன்

என் வீட்டின் வரவேற்பறையில்
நாம் இருவரும் நாற்காலிகளில்
எதிரெதிரே அமர்ந்திருக்கிறோம்
அருந்திய பின்னும் நிரம்பி வழிந்தபடியே
இருக்கிறது உங்கள் தேநீர்க்கோப்பை
எரியம்புகளென பாய்ந்து கொண்டே
இருக்கின்றன வார்த்தைகள்
நான் அமைதியாக இருக்கிறேன்
நதியிலிருந்து பிடுங்கி எறியப்பட்ட மீனென
உங்களுடைய நான் என் முன்பாக
தத்தளித்துத் துடித்தபடி கிடக்கிறது
சின்னதொரு பார்வை
ஆதுரமாய் சில வார்த்தைகள்
தோள்சாய்க்கும் பேரன்பு
ஏதேனும் ஒன்று உங்களை
மீட்டெடுக்கக்கூடும் என்பதாய்
என் கண்களில் ஊடுருவிப் பார்க்கிறீர்கள்
அப்போதும்
நான் அமைதியாகவே இருக்கிறேன்
யுகங்களாய் கடந்துபோன சில
கணங்களுக்குப் பின் வேறென்ன
என்பதாய் என்னைப் பார்க்கிறீர்கள்
ஒன்றுமில்லை எனத் தலையசைக்கிறேன்
பின்பாக
எதுவும் பேசாமல்
நீங்கள் எழுந்து போனபின்னும்
நுரைத்துச் சுழன்றபடியே இருக்கிறது
பேசப்படாத வார்த்தைகளின்
அமில நீரூற்று

7 comments:

தருமி said...

//பேசப்படாத வார்த்தைகளின்
அமில நீரூற்று//

ambuttu kovama..... ?

Raju said...

அருமையா இருக்குண்ணே..

நாடோடி இலக்கியன் said...

அமில‌ நீரூற்று ந‌ல்லாயிருக்கு கா.பா.

//வரவேற்பரையில்// ?

கார்த்திகைப் பாண்டியன் said...

நாடோடி இலக்கியன்..
நன்றி நண்பா.. மாத்திட்டேன்..

அத்திரி said...

வர வர வாத்தியோட பதிவு என்னை மாதிரி சாமான்யனுக்கு புரியாது போல....................................................

சித்திரவீதிக்காரன் said...

''அருந்திய பின்னும் நிரம்பி வழிந்தபடியே
இருக்கிறது உங்கள் தேநீர்க்கோப்பை
எரியம்புகளென பாய்ந்து கொண்டே
இருக்கின்றன வார்த்தைகள்
நான் அமைதியாக இருக்கிறேன்''

ஜென் கவிதை போல இருக்கே. வாழ்த்துகள்.

அனைவருக்கும் அன்பு  said...

சொல்லபடாத சோகங்களின் வழி உணர்த்துது வரிகள் அருமை !