January 12, 2012

உதிரிப்பூக்கள் -2

யில்வே காலனியில் எனது குடும்பம் குடியேறியபோது நான் பத்தாவதை முடித்திருந்தேன். குடிபோன இரண்டே மாதங்களில் நாலைந்து நெருங்கிய நண்பர்களைச் சம்பாதிக்க முடிந்தது. எங்கள் நண்பர்கள் குழாம் எப்போதும் என் வீட்டு வாசலில் இருக்கும் குழாயடி ஒன்றில்தான் பழியாய்க் கிடக்கும். எனவே எங்கள் செட்டின் பெயராகவும் அதுவே முடிவானது - குழாயடி குரூப்ஸ்.

அந்தக் காலகட்டத்தில்தான் மதுரையில் போஸ்டர் ஒட்டுவதும் ஃபிளக்ஸ் வைப்பதும் பிரபலமாகத் துவங்கி இருந்தது. விதவிதமாக ஒட்டப்படும் போஸ்டர்களும் அதில் காணப்படும் பட்டப்பெயர்களையும் பார்க்கும் போதெல்லாம் ஆவலாதியாக இருக்கும். நாமளும் நம்ம குரூப்ஸ் பேரைப் போட்டு ஜம்முன்னு போஸ்டர் அடிக்கணும்டா மாப்ள என எங்களுக்குள் பேசிக் கொள்வோம். அதற்கான முதல் வாய்ப்பு எனது நண்பன் சாமியின் அண்ணன் திருமணத்தின் போதுதான் கிடைத்தது.

எங்கள் நண்பர் சாமியின் இல்லத் திருவிழாவுக்கு வரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம் - இவண்.. குழாயடி குரூப்ஸ். நான்கு பீஸ்களாக மெகா சைஸ் போஸ்டர் அடித்தோம். திருமணத்துக்கு முந்தைய நாள் இரவெல்லாம் அலைந்து திரிந்து அவற்றை ஒட்டிவிட்டு சாமியிடம் போய் டிரீட் கேட்டால் போங்கடா பொக்கைகளா என்றான். நாளைக்கு கல்யாண வீட்டுல சோறு போடுவாங்கள்ல அதான் ட்ரீட் என்று சொன்னவன் மேலும் கடுப்படித்தான். இதாவது பரவாயில்லை, என் கல்யாணத்துக்கு ஒருத்தனுக்கும் சாப்பாடு கிடையாது. அத்தனை பயலுக்கும் வெறும் கடலை மிட்டாயும் ஒரு கலரும்தாண்டி.. என்றவனைக் கொன்றால் என்ன என நண்பர்களுக்கு வெறியாய் வந்தது. ஆனால் எனக்குத் தெரியும். சாமி எப்பவுமே அப்படித்தான்.

சாமியின் நிஜப்பெயர் கார்த்தி. ஏற்கனவே நானொரு கார்த்தி இருந்ததால் அவன் குட்டை கார்த்தி நான் நெட்டை கார்த்தி. ஆனால் போஸ்டரில் அப்படிப் பெயர் போட முடியாதென்பதால் என்ன பட்டப்பெயர் வைக்கலாம் என யோசித்தபோது கிடைத்த பெயர் தான் சாமி. அவன் வருடா வருடம் அய்யப்ப சாமிக்கு மாலை போடுபவன். எனவே சாமி கார்த்தி. எங்கள் செட்டில் அப்போது செல் வைத்து இருந்தவன் நாந்தான். கறுப்புக் கலர் செங்கல் ஒன்று நோக்கியாவில் வந்ததே, ஞாபகம் இருக்கிறதா? ஆகவே நான் “செல்” கார்த்தி. எதைச் சொன்னாலும் வார்த்தைகளை மென்று விழுங்கும் “but" குமார், லூசு மாதிரியே தோற்றம் தரும் “மெனா” கண்ணன், வம்பு தும்புகளுக்கு அஞ்சாத “சிங்கம்” திராவிட மணி.. இதெல்லாம் போஸ்டரில் அடிக்கப்பட்ட பெயர்கள்.

சாமி ரொம்ப வித்தியாசமானவன். எந்நேரத்தில் எப்படி இருப்பான் என யாருக்கும் தெரியாது. இந்த யாருக்கும் என்பதில் அவனும் அடக்கம். ஒரு நேரம் பார்த்தால் உலகிலேயே சந்தோசமான மனிதன் அவன்தான் என்பதுபோல உற்சாகமாக இருப்பான். மறுசமயம் மொத்த வாழ்வையும் இழந்து தொலைத்தவன் போல தேமேவென்று இருப்பான். அது மாதிரியான நேரங்களில் யார் என்னவென்று பார்க்காமல் கடித்து வைப்பான். அதனால் நண்பர்களின் நடுவே அவனுக்கு “சைக்” என்றொரு செல்லப்பெயரும் உண்டு. அவன் என்ன செய்தாலும் பொறுத்துக் கொள்வேன் என்பதால் கூடுதலாகவே என்னிடம் கொஞ்சம் நெருக்கம் காட்டுவான்.

சாமி ஆள் எப்படி என்பதைச் சொல்ல ஒரே ஒரு நிகழ்வு போதும். அவனுக்கு சொந்த ஊர் விருதுநகர். அம்மன் கோவில் திருவிழா ஒன்று சித்திரை மாதத்தில் பிரமாதமாய் நடக்கும். நண்பர்கள் அனைவரையும் திருவிழாவுக்கு வரும்படிச் சொல்லிவிட்டு அவன் முதல் நாளே ஊருக்குப் போய்விட்டான். அவன் பேச்சை நம்பி அத்தனை பேரும் மறுநாள் மட்ட மத்தியானம் சாப்பிடாமல் அவன் வீட்டில் போய் நின்றால் ஆளைக் காணவில்லை. வீடும் பூட்டிக் கிடக்கிறது. போன் வசதியும் இல்லாமல் அவன் எங்கே போனான் என்றும் தெரியாமல் நாள் முழுக்கப் பரதேசிகளாய் அலைந்துவிட்டு மதுரைக்குத் திரும்பி வந்தோம். அதற்கு இரண்டு நாள் கழித்துத்தான் சாமி வந்தான். அத்தனை பேரும் அவனைச் சுற்றி நின்று கோரசாக கேட்டோம்.

என்னடா ஆச்சு?

அலட்டிக் கொள்ளாமல எல்லாரையும் ஒரு முறை பார்த்து விட்டு மெதுவாகச் சொன்னான்.

இல்லடா.. அன்னைக்கு வீட்டில் படுத்துக் கிடந்தேனா.. திடீர்னு உள்ள ஒரு குரல் கேட்டுச்சு. எந்திரிச்சு அப்படியே கோவிலுக்குப் போய்ட்டேன். உங்கள வரச்சொன்னது, அம்மாவ பேசச் சொன்னது.. எல்லாமே மறந்து போச்சு. நேத்துத்தான் வீட்டுக்குப் போகணும்னு தோணுச்சு.. கெளம்பி வந்துட்டேன்.. ரொம்ப அவதிப்பட்டீங்களாடா.. சரி.. லூஸ்ல விடுங்க..

டாய் அதை நாங்க சொல்லணும்டா என அவனை வெளுக்கக் கிளம்பிய நண்பர்களை அடக்கிட நான் ரொம்பவே சிரமப்பட வேண்டி இருந்தது.

ங்கள் மக்களில் யாருக்கும் தண்ணி அடிக்கும் பழக்கம் கிடையாது என்பதால் எங்கள் ட்ரீட்டுகள் எல்லாமே வித்தியாசமாக இருக்கும். நல்ல ஹோட்டலாக பார்த்து மூக்குப்பிடிக்கத் தின்பது, பிறகு நண்பர்கள் யாரேனும் ஒருவர் வீட்டில் சிடி போட்டுப் படம் பார்ப்பது. அது பெரும்பாலும் கில்மா படமாகத்தான் இருக்கும். யார் வீட்டிலாவது ஊருக்குப் போகிறார்கள் என்றால் நாங்கள் உடனே ட்ரீட்டுக்கு தயாராகி விடுவோம். சாமிதான் சிடி பிளேயர் ஸ்பான்சர் செய்பவன். அவனுடைய அண்ணா வெளிநாட்டில் வேலை பார்த்ததால் அப்போது அவன் வீட்டில் மட்டும்தான் பிளேயர் இருந்தது.

ஒருமுறை கண்ணன் வீட்டில் எல்லாரும் வெளியே கிளம்பிட நாங்கள் ட்ரீட்டுக்குத் தயாரானோம். பஜாரில் ஒருகடையில் சொல்லி வைத்து புத்தம்புதிய மலையாள சிடி ஒன்றை வாங்கியாயிற்று. சாமியைக் கூட்டி வரலாம் என்று நானும் கண்ணனும் வீட்டுக்குப் போனால் ஆள் உம்மென்று உக்கார்ந்து இருந்தான்.

அம்மா விருதுநகர் போறப்போ பிளேயர் வயரைக் கொண்டு போய்டாங்கடா.. இன்னைக்கு ஒண்ணும் முடியாது

டிவி மேல் பிளேயர் இருக்கிறது. வயரை மட்டும் அம்மா ஏண்டா கொண்டு போகிறார் என அவனிடம் கேட்கத் தோன்றியது. ஆனால் நான் கேட்டேன் என்றால் மேலே விழுந்து பிடுங்கி வைப்பான். திரும்பிப் பார்த்தால் கண்ணன் என்னையே முறைத்துக் கொண்டிருந்தான். என்ன செய்வதெனத் தெரியாமல் நான் அமைதியாக இருந்தேன். சிறிது நேரம் கழித்து என்ன நினைத்தானோ ஏது நினைத்தானோ சாமி திடீரென உள்ளே போனவன் கையில் வயரோடு வெளியே வந்தான்.

டேய் கார்த்தி.. அம்மா உள்ளாற அரிசிப்பெட்டில ஒளிச்சு வச்சு இருந்தது.. தேடி எடுத்துட்டேன்.. வா போகலாம்

சிரித்தபடி சொன்னவனை என்ன செய்ய முடியும்? தலையில் அடித்துக் கொண்டு கிளம்பினோம். சாமியின் பெரிய பிரச்சினையே இதுதான். இந்த நேரத்தில் இப்படித்தான் இருப்பான் என யாராலும் அவனை வரையறை செய்ய முடியாது.

நான் கல்லூரி இறுதி ஆண்டை முடித்தபோது சாமி வேலைக்கு சேர்ந்திருந்தான். சாமியின் அம்மா ரொம்பவே கஷ்டப்பட்டு அவனுக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தந்தார். சாமியையும் சும்மா சொல்லக் கூடாது. வெளியில் எப்படி இருந்தாலும் வேலையில் மிகச் சரியாக இருப்பான். கேங்மேன் வேலை என்றால் ரயில்வே மக்களில் நிறையப்பேர் தயங்குவார்கள். ஆனால் சாமி அதை எந்த முகச் சுளிப்பும் இல்லாமல் செய்தான். சென்னையில் மூன்று ஆண்டுகள் ஆஃபிசர் ஒருவர் வீட்டில் எடுபிடி வேலை பார்க்கவேண்டி வந்தபோதும் அவன் கலங்கவே இல்லை. ஊருக்குத் திரும்புகையில் ஆள் பாதியாக இளைத்து வந்தவனைக் கண்டு நாங்கள் எல்லோரும் அதிர்ந்து போனோம். ஆனால் அவன் அதை இயல்பாக எடுத்துக் கொண்டான். கடைசியாக ஒரு நல்ல நாளில் அவனுடைய வேலை உறுதியாக மதுரைக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு வந்தான்.

வேலை கிடைத்தாயிற்று. அடுத்தது கல்யாணம்தானே. கோவில்பட்டியில் பெண் பார்த்து சாமிக்கு நிச்சயம் செய்தார்கள். பூ வைத்துவிட்டு வந்த இரண்டாம் நாளில் இருந்து பயபுள்ளயைக் கையில் பிடிக்க முடியவில்லை. எந்நேரமும் செல்போனும் கையுமாக சுற்றிக் கொண்டிருந்தான். எதிலும் பிடிப்பு இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்தவனுக்குள் இப்படி ஒரு மாற்றம் நடந்ததில் எங்கள் அனைவருக்குமே சந்தோசம். எல்லாம் நல்லபடியாகப் போய்க் கொண்டிருப்பதாக நாங்கள் நம்பினோம். அப்போதுதான் அது நடந்தது. பெண்ணினுடைய அப்பா எதிர்பாராமல் நோயில் விழுந்தார். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் மனிதர் ஒரு வாரத்துக்கு மேல் பிழைக்க மாட்டார் என்று சொல்லி விட்டார்கள்.

விசயத்தைக் கேள்விப்பட்ட சாமியின் அம்மா இந்தத் திருமணம் நடக்க வேண்டுமா என யோசிக்க ஆரம்பித்து விட்டார். பெண்ணின் அப்பா இல்லாமல் போனால் கல்யாணம் எல்லாம் யார் எடுத்துச் செய்வார்? பொருளாதார ரீதியாக தனது மகன் சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாதே என்கிற கவலை அவருக்கு. ஆனால் சாமி அந்தப் பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் எனத் தீர்மானமாக இருந்தான். அழுதுபிடித்துப் பேசி அம்மாவிடம் சம்மதம் வாங்கினான். குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாக பெண்ணுடைய அப்பாவின் கண் முன்னாடியே கல்யாணத்தை நடத்தி விடலாம் என முடிவு செய்தோம்.

திருமணம் செய்யலாம் என்று முடிவு செய்த தினம் சாமியின் பிறந்தநாளாக இருந்தது. விருதுநகரில் வெகு சில மக்களின் முன்னிலையில் அவன் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினான். அங்கிருந்து கிளம்பி மணமக்கள் கோவில்பட்டி மருத்துவமனையில் இருக்கும் மனிதரைக் காணக் கிளம்பிப் போனார்கள். சாமியோடு நானும் கூடப் போயிருந்தேன். ஆனால் நாங்கள் போய்ச் சேர்ந்த கால் மணி நேரத்துக்கு முன்பாகவே அவர் இறந்திருந்தார். சாமியின் பிறந்தநாளே அவனது திருமண நாளாகவும் அவனது மாமனார் இறந்த நாளாகவும் மாறிப்போனது.

எல்லோரும் அழுதுக் கொண்டிருக்க நானும் சாமியும் ஓரமாக ஒதுங்கி நின்றோம். ஒரு கட்டத்தில் உடைந்து போனவன் என் தோளில் சாய்ந்து அழத் தொடங்கினான்.

கடைசில பார்த்தியாடா.. அடிக்கடி சொல்வேன்ல.. என் கல்யாணத்துல நான் சொன்ன மாதிரியே யாருக்கும் சாப்பாடு கிடையாது. வெறும் கடலை மிட்டாயும் கலரும்தான்.


15 comments:

நிகழ்காலத்தில்... said...

கடைசி இரண்டு வரிகளை இப்படித்தான் அமையும் என நான் யூகித்துப்பார்க்கக் கூட இல்லை.,

வருத்தமான நிகழ்வை பகிர்ந்தாலும் சொன்னவிதம் பாரட்டுக்குரியது.

வாழ்த்துகள் கா பா

vasu balaji said...

அருமை கா.பா.
/சென்னையில் மூன்று ஆண்டுகள் ஆஃபிசர் ஒருவர் வீட்டில் எடுபிடி வேலை பார்க்கவேண்டி வந்தபோதும் அவன் கலங்கவே இல்லை./

அந்த அடிப்படையில்தான் வேலை கிடைத்திருக்கும்.

Raja said...

அம்மன் கோவில் திருவிழா ஒன்று சித்திரை மாதத்தில் பிரமாதமாய் நடக்கும்.?

I think Panguni Pongal is FAMOUS there

சரவணகுமரன் said...

வாழ்க்கை அனுபவங்களை அருமையாக வார்த்தைகளில் பதிந்திருக்கிறீர்கள்.

க ரா said...

எங்கள் மக்களில் யாருக்கும் தண்ணி அடிக்கும் பழக்கம் கிடையாது என்பதால்
--
Bad Boys.

ராகவன் said...

அன்பு கார்த்தி,

நல்லாருக்கு... எனக்கும் இது போல கல்லூரியில் ஒரு பட்டப்பெயர் உண்டு... எங்களுக்கெல்லாம் பட்டப்பெயர் வைப்பவன் பெயரும் கார்த்தி... நீங்க சொன்னது போலவே ரெண்டு கார்த்தி... ஒருத்தை மொட்டைக் கார்த்தி, இன்னொருத்தன் பல்லுக் கார்த்தி. கார்த்தியெல்லாம் ரொம்ப குசும்பய்ங்களா இருப்பாய்ங்க போல...

உதிரிப்பூக்கள் நல்லா இருக்கு...

அன்புடன்
ராகவன்

Romeoboy said...

கா.பா .. சாமி சான்சே இல்ல செமையா இருக்கு

குமரை நிலாவன் said...

arumai nanba

Balakumar Vijayaraman said...

நல்லயிருக்கு கார்த்தி.

ஆகா, எனக்குத் தெரிந்த கார்த்தி’கள் னு ஒரு பதிவு தேறும் போலயே :)

இண்ட்ரோ’வை இன்னும் கொஞ்சம் சுருக்கியிருக்கனுமோ?

@ராகவன் அண்ணா : 'கார்த்தி’கள் பலவிதம். :)

தருமி said...

//நல்ல ஹோட்டலாக பார்த்து மூக்குப்பிடிக்கத் தின்பது...//

அட .. நீங்க காமிச்சி குடுத்த கடையில் ரத்தப் பொரியல், சூப் பற்றியெல்லாம் சொல்லாம உட்டுட்டீங்களே ..!

வெண்பூ said...

செம‌ ரைட் அப்... ஆர‌ம்பிச்ச‌தும் ச‌ரி, அதை கொண்டுபோன‌தும் ச‌ரி, முடிச்ச‌ வித‌மும் ச‌ரி, அருமை.. ர‌சிச்சி ப‌டிச்சேன்

குடுகுடுப்பை said...

நன்று.

Unknown said...

Kalakkittayya..

அக்கப்போரு said...

எங்கள் மக்களில் யாருக்கும் தண்ணி அடிக்கும் பழக்கம் கிடையாது என்பதால் எங்கள் ட்ரீட்டுகள் எல்லாமே வித்தியாசமாக இருக்கும். நல்ல ஹோட்டலாக பார்த்து மூக்குப்பிடிக்கத் தின்பது, //

சிந்தனையும் செயலும் அப்டியே என்னைப் போல் இருக்கிறது.

Mahi_Granny said...

விரைவில் பிரபல எழுத்தாளர்கள் வரிசையில் கா. பா.