January 26, 2012

உதிரிப்பூக்கள் - 4

வீட்டுக்குத் தெரியாமல் படம் பார்க்க ஆரம்பித்தபோது நான் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். அப்படி நான் பார்த்த முதல் படம் வான் டாமின் கிக் பாக்ஸர். மாப்பிள்ளை விநாயகர் தியேட்டரில் மூணேகால் ரூபாய் டிக்கட். தின்பண்டம் வாங்கித் தின்னச் சொல்லி சாயங்கால நேரங்களில் தரும் நாலணா எட்டணாக்கள் எல்லாம் சேர்த்து வைத்து இந்தச் சேட்டை. வார இறுதியில் ஏதாவது நண்பன் வீட்டுக்குப் போவதாகச் சொல்லிவிட்டு எஸ்ஸாகி விடுவது வழக்கம்.

பத்மா தியேட்டரில் ஏதோ படம் பார்த்துவிட்டுத் திரும்பும் வழியில்தான் வில்லாபுரத்தில் முதன்முதலாக அந்தத் தியேட்டரைப் பார்த்தேன். அழகான கவர்ச்சியான பெயர். முகப்பில் டிக்கட் விலை ஒரு ரூபாய், எழுபது பைசா, ஐம்பது பைசா என்பதாக எழுதி வைத்திருந்தார்கள். இந்தக் காலத்திலும் இத்தனை சீப்பாக டிக்கட் தருகிறார்களா என எனக்கு ஆச்சரியம். என்ன படம் என்று தேடினால் தியேட்டர் வாசலில் எந்தப் போஸ்டரும் காணவில்லை. ரொம்ப சிரமப்பட்டுத் தேடியதில் கவுண்டருக்கு வெளியே சின்னதாக கறுப்பு வண்ணப் போஸ்டர் ஒன்றை ஒட்டியிருந்தார்கள். அதிலும் படத்தின் பெயர் மட்டுமே இருந்தது யார் நடித்தது என்ன என்கிற எந்தத் தகவலும் இல்லை. அங்கே கண்டிப்பாக படம் பார்க்க வேண்டும் எனத் தீர்மானம் செய்து கொண்டேன்.

அடுத்த சனிக்கிழமை காலைக்காட்சிக்கு தியேட்டர் வாசலில் நின்றிருந்தேன். உள்ளே நுழைய முற்பட்டவனை வாட்ச்மேன் தடுத்து நிப்பாட்டினார்.

தம்பி எங்க போறீங்க..

அண்ணே உள்ளாற படம் பார்க்க..

அதெல்லாம் கூடாது. உன்னப் பார்த்தாப் பச்சப்புள்ள மாதிரித் தெரியுது. இங்கன இங்கிலிஷ் படம் ஓடுது. உனக்குப் புரியாது. அதனால ஒழுங்கா வீட்டுக்குப் போ..

எனக்கு அவமானமாகப் போய் விட்டது. உள்ளே நுழையக் கூடாது என்பதைக் காட்டிலும் பச்சப்புள்ள என்று சொன்னது ரொம்பவே வலித்தது. அன்றைக்கு ஒரு சத்தியம் செய்தேன்.

என்னைய உள்ள விடமாட்டேன்னு சொன்னீங்கள்லடா இதே தியேட்டர்ல நூறு படமாவாது பாக்குறேனா இல்லையான்னு பாருங்க.

பிற்காலத்தில் அந்த சத்தியத்தை நீரூபித்தும் காட்டினேன். அந்தத் தியேட்டரின் பெயர் - மது.

பிட்டுப்படம் பார்ப்போர் என ஓர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு எனத் தைரியமாகச் சொல்லலாம். அந்தத் தியேட்டர்களுக்கு மக்கள் படம் பார்க்க வரும் அழகே தனி. பெரும்பாலும் காலைக்காட்சிகள். டிக்கட் தரும்வரை கவுண்டர் காலியாகவே இருக்கும். ஏதோ பெரிய வேலை இருப்பது போல படம் பார்க்க வந்தவர்கள் எல்லாரும் வெளியே சுற்றிக் கொண்டிருப்பார்கள். கொடுக்க ஆரம்பித்தவுடன் சடசடவென தலையைக் குனிந்தபடியே உள்ளுக்குள் நுழைந்து டிக்கட் எடுத்து தியேட்டர் இருளுக்குள் காணாமல் போவார்கள். சின்னப் பயல்கள்தான் என்னவென்று தெரிந்து கொள்ள வருகிறார்கள் என்றால் எல்லாம் தெரிந்த பெரிசுகளும் எதற்காக இதற்குக் கிடந்து இப்படி அலைகிறார்கள் என எனக்குப் புரிவதேயில்லை. படம் போட்டுக் கொஞ்ச நேரம் ஆன பிறகு உள்ளே வருபவர்கள் தட்டித் தடவி சீட்டைத் தேடிப் பிடித்து உட்கார்ந்த மறுநிமிசம் பக்கத்து சீட்டில் இருப்பவரிடம் கேட்கும் முதல் கேள்வி சீன் எதுனாச்சும் போயிருச்சா என்பது இன்னும் பெரிய காமெடி.

பிட்டுப்படங்களைப் பொறுத்தவரை தொண்ணூறுகளே அவற்றின் பொற்காலம் என்று சொல்லலாம். ஷகிலாவும் ரேஷ்மாவும் சேர்ந்து லாலேட்டன்களுக்கும் மம்முக்காக்களுக்கும் இனிமா கொடுத்த காலமது. சின்ன இன்வெஸ்ட்மெண்ட் பெத்த லாபம் - இதுதான் பிட்டுப்படங்களின் தாரகமந்திரம். ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு மாடி வீடு, போதையேற்றும் அழகிகள் இரண்டு பேர், நாலு மங்குனி நாயகர்கள் இருந்தால் போதும் ஒரு படமே எடுத்து விடலாம். நல்ல பேமசான நடிகையை வைத்துத் தனியே சில காட்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு மற்ற காட்சிகளோடு இணைத்து வைத்தால் வேலை முடிந்தது. பெரிய படங்களை எடுத்து அவை ஓடுமா ஓடாதா எனத் தெரியாமல் கையைச் சுட்டுக் கொள்வதை விட இதுமாதிரியான மினிமம் கியாரண்டி படங்களை ஓட்டுவதையே தியேட்டர்க்காரர்கள் அப்போது விரும்பினார்கள்.

வெளிநாட்டில் எடுக்கப்படும் பி கிரேடு ஆங்கிலப் படங்கள், நேரடித் தமிழ்ப் படங்கள், முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே எடுக்கப்படும் தமிழ்ப்படங்கள் என இவற்றிலும் நிறைய வகைகள் உண்டு. அதிலும் நம் தமிழ் மக்கள் செல்லம் கொஞ்சி செல்லம் கொஞ்சி ஆங்கிலம் பேசுவதைப் பார்க்க பெரிய கூத்தாக இருக்கும். படங்கள் எல்லாம் அதிகபட்சம் ஒரு மணி நேரம்தான் ஓடும் என்பதால் பெரிய அளவில் நேரத்தைச் சாப்பிடாது என்பது இதிலிருக்கும் இன்னொரு நல்ல விசயம். பின்நவீனத்துவம் என்று இன்று சொல்லப்படுவதெல்லாம் அந்தக் காலத்திலேயே செய்து காட்டியது இந்தத் தியேட்டர்கள்தான். படம் போட்டக் கொஞ்ச நேரத்திலேயே கிளைமாக்ஸ் வரும். அதன் பிறகு படத்தின் முதல் சீன். செத்துப் போனவன் பிழைத்து வந்து வசனம் பேசிக் கொண்டிருப்பான். சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் கண்டதும் ஓடிக் கொண்டிருக்கும். அது கிடக்கிறது கழுதை அதை எவன் பார்த்தான்?

துரையில் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் ஏழு எட்டு தியேட்டர்கள் வரை இந்தப்படங்களை ஓட்டிய காலகட்டமும் இருந்தது. வில்லாபுரம் மது, முத்துப்பட்டி ராஜா, வண்டியூர் பழநிமுருகன், புதூர் லட்சுமி, சிம்மக்கல் ரூபா, அரசரடி ராம் விக்டோரியா, அண்ணா பஸ் ஸ்டாண்ட் ஹாஜிரா, பெரியார் நிலையம் தங்கரீகல். ஒவ்வொரு தியேட்டரும் படம் திரையிடுவதில் தங்களுக்கென சில வழிமுறைகளையும் வைத்திருப்பார்கள். அதில் எனக்கு ரொம்பப் பிடித்தது ராஜா தியேட்டர்.

முத்துப்பட்டியில் கம்மாய்க்குள் இருந்தது ராஜா தியேட்டர். மூன்று மாதம் ஓடும். மூன்று மாதம் சீல் வைத்துப் பூட்டிக் கிடக்கும். அதைத் தியேட்டர் என்று கூட சொல்ல முடியாது. இரண்டு பக்கமும் திறந்து கிடக்கும் ஒரு கூரைக் கொட்டாய். நான்கு வேட்டியை ஒன்றாக சேர்த்துக் கட்டிய திரை. ஆப்பரேட்டர் ரூமில் இருந்து எப்போதும் கிர்ர் என்று சத்தம் வந்தபடி இருக்கும். அந்த ரூமை ஒட்டி நான்கைந்து சேர் வரிசை. அடுத்ததாக சாய்வதற்கு முதுகில்லாத பென்ச்சுகள் கொஞ்சம் கிடக்கும். அதையும் தாண்டி வெறுமனே மண்ணைக் குவித்து வைத்திருப்பார்கள். சுவரில் ஓரமாக இரண்டு நைந்து போன ஸ்பீஇக்கர்கள். ஸ்டீரியோ எஃபெக்ட். தியேட்டரில் டிக்கட்டோ சைக்கிள் ஸ்டாண்டுக்கு டோக்கனோ கிடையாது. வெறுமனே வாசலில் இருக்கும் மனிதரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு உள்ளே நுழைவதுதான். அந்தத் தியேட்டரில் ஒரு நாளைக்கு இரண்டு காட்சிகள் மட்டுமே. மாலையும் இரவும். பகலில் தியேட்டருக்குள் வெளிச்சமாக இருக்கும் என்பதால் படம் போட முடியாது.

மாலை ஆறு மணிக்குப் பாடல்கள் போடத் தொடங்குவார்கள். அது தியேட்டர் திறந்து விட்டார்கள் என்பதற்கான சிக்னல். எனக்கு ரொம்பப் பிடித்த பாடலான தேவதை இளந்தேவியை முதல் முதலாக ராஜாவின் கொர கொர ஸ்பீக்கர்களில்தான் கேட்டேன். அந்தப் பாட்டு என்னப் படமென்றுத் தேடித்திரிந்து பதிந்தது தனிக்கதை. மிகச்சரியாக ஆறு நாப்பதுக்கு ராஜாவில் அந்தப் பாடல் ஒலிக்கும். அச்சம் என்பது மடமையடா.. அது ஒலித்தால் படம் போடப் போகிறார்கள் என்று அர்த்தம். எனக்கு எந்தப்படமும் முழுதாகப் பார்க்கத்தான் பிடிக்கும் என்பதால் முதலிலேயே போய் விடுவேன். ஆரம்ப நிலையில் தியேட்டருக்குள் அங்கொருவர் இங்கொருவராக நாலைந்து பேர் மட்டுமே இருப்பார்கள். ஏழரை மணிக்கு ஒரு மணி அடித்து இடைவேளைக்கு குண்டு பல்பை எரிய விடுவார்கள். ஐந்து நிமிட இடைவேளை முடிந்துத் திரும்பும்போது எங்கிருந்து வந்தார்கள் எனத் தெரியாமல் மொத்தத் தியேட்டரும் நிரம்பி வழியும். ஆனால் அத்தனை கூட்டம் இருந்தாலும் துளி சப்தம் இருக்காது. அடுத்த இருபது நிமிடங்கள் படத்துக்கு சம்பந்தமே இல்லாத சிலபல சமாச்சாரங்கள் ஓடி அடையும்வரை அந்த அமைதி அப்படியே இருக்கும்.

படம் சரி இல்லை என்றால் மற்ற தியேட்டர்களில் கத்திக் குமிக்கும் நம் மக்கள் ராஜாவில் மட்டும் தமக்குள் புலம்பியபடி கலைந்து போவார்கள். அதையும் மீறி சத்தம் போட்டால் சட்டென்று தியேட்டர்காரர்கள் கையில் கம்புடன் உள்ளே நுழைந்து விடுவார்கள். சத்தம் போட்டவனின் மொத்தக் குடும்பமும் கண்டமாகிப் போகும் அளவுக்கு அர்ச்சனை நடக்கும் என்பதாலேயே மக்கள் அமைதியாகப் போய் விடுவார்கள். மழைக்காலங்களில் கம்மாய் சேறும் சகதியுமாக இருக்க ரப்பர் செப்பல்களைத் தொலைத்தாலும் பரவாயில்லை என நீந்திப் போய் அங்கே படம் பார்த்த காலங்களை எப்போதும் மறக்க முடியாது.

நான் அதிகம் படம் பார்த்த தியேட்டர் மது. ஒரு கட்டத்தில் வாராவாரம் வெள்ளியென்று ரெகுலராக அங்கே போகும் கஸ்டமராக இருந்திருக்கிறேன். ஒரு வாரம் போக வில்லையென்றால் கூட சைக்கிள் ஸ்டாண்ட்காரரும் டிக்கட் கொடுப்பவரும் என்ன தம்பி உடம்பு முடியலையா எனக் கேட்கும் அள்வுக்கு நெருக்கம். மதுவில் ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள். எட்டரை மணி காட்சிக்கு மட்டும் ஒரு படம் ஓடும். மற்ற நாலு காட்சியும் வேறு படம். மாப்ள எட்டரை மணி ஷோதான் ஸ்பெசலாம்டா கண்டிப்பா அது வேறு தினுசா இருக்கும் பாரேன் எனச் சொன்ன நண்பனை நம்பி நாங்கள் பார்த்த ஒரே எட்டரை ஷோவில் நடிகர் செந்தில் சிங்கப்பூர் போனக் கதையைக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். அன்றைக்கு போட்ட பிட்டும் நாங்கள் ஏற்கனவே பார்த்ததாக இருக்க நண்பனுக்கு நல்ல அர்ச்சனை. என் வாழ்வில் நான் பார்த்த ஒரே எட்டரைக் காட்சி அதுதான்.

தங்கரீகலைப் பொறுத்தவரை நேரடி ஆங்கிலப்படங்கள் மட்டுமே. ரயில்வேயில் என் அப்பா கூட வேலை பார்க்கும் ஆட்கள் எல்லாம் வருவார்கள். நான் கவலையே படாமல் உள்ளே போவேன். என்னைப் பார்த்து அவர்கள் எல்லாரும் தலையில் முக்காடு போட்டுக் கொள்வார்களே தவிர நான் பயந்தது கிடையாது. பழநிமுருகன் ஒரு காலகட்டத்தில் இந்தப் படங்களில் தி பெஸ்ட் என்பதாக இருந்தது. இடைவேளைக்கு முன்புன் பின்பும் பத்துப் பத்து நிமிசம் பிட்டு ஓட்டிய ஒரே தியேட்டர். ராம்விக்டோரியா நகருக்கு உள்ளே இருந்ததால் பேருக்கு ஓட்டுவார்கள். ஆங்கிலப் படங்கள் போட்ட ரூபாவும் லட்சுமியும் தொண்ணூறுகளின் இறுதியிலேயே மூடிவிட்டார்கள். எல்லாத் தியேட்டர்களும் மூடிவிட்ட நிலையில் தைரியமாக படம் ப்ளஸ் பிட்டு ஓட்டிவந்த ஹாஜிராவும் சமீபமாக ஒரு வருடத்துக்கு முன்பாக மூடிவிட்டார்கள். கிட்டத்தட்ட ஒரு பண்பாட்டு நிகழ்வே முடிவுக்கு வந்து விட்டதைப் போன்ற உணர்வு.

த்தனை படங்களை தேடித் தேடி பார்த்திருப்பேன். அதனால் கிடைத்தது என்னவென்று யோசித்தால் ஒன்றுமே இல்லை. ஹேய் நாங்க எல்லாம் எத்தனை படம் பார்த்தவய்ங்கன்னு தெரியும்ல என்கிற அலப்பறை அன்றைக்கு பெரிதாக இருந்தது. அவ்வளவே. பீகாரில் நண்பர்களோடு பார்த்த படத்தில் சீன் பை சீன் நான் சொல்ல தலைவா நீங்க எங்கேயோ போயிட்டீங்க என்று அவர்கள் என் காலில் விழுந்தது இப்போதும் நினைவில் இருக்கிறது. ஒரு கனவைப் போல எல்லாம் முடிந்தாகி விட்டது. இன்றைக்கு குறுந்தகடுகளும் இணையமும் மலிந்து விட்ட சூழலில் தியேட்டர்களில் பார்க்கும் படங்களின் தேவை இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் யார் எந்நேரம் பார்ப்போர்களோ என உயிரைக் கையில் பிடித்தபடி குறுகுறுப்போடு தியேட்டர்கள் தேடி அலைந்த காலம் திரும்பி வருமா?

னவுக்கன்னி என்றொரு படம் மதுவில் போட்டிருந்தார்கள். கூட்டம் அம்முகிறது. ஹவுஸ்புல். நிறைய பேருக்கு உட்கார இடமில்லை. நான் நண்பர்களோடு வாசலின் அருகே அமர்ந்து இருக்கிறேன். அப்போது வெளியே சில குரல்கள்.

யோவ்.. டிக்கட் இல்லைய்யா.. கெளம்புங்க..

அய்யா.. அய்யா.. அப்படி எல்லாம் சொல்லாதீங்க.. வாடிப்பட்டில இருந்து வண்டி கட்டி வந்திருக்கோம். ஒரு ஓரமா நின்னு பார்த்திட்டுப் போயிடுறோம். கொஞ்சம் பார்த்து செய்ங்க..

சரி சரி.. தொலைங்க..

சிரித்தபடி உள்ளே வந்தவர்களின் கண்களில் ஒளிந்து கிடக்கும் அந்த ஆர்வமும் பயமும் குறுகுறுப்பும் இன்றைக்கு மக்களுக்குக் கிடைக்க வாய்ப்பே இல்லை. அது ஒரு அழகிய நிலாக்காலம்.

(கூகிள் ப்ளஸ்ஸில் இந்தப் பதிவுக்கான ஆரம்பத்தைத் தந்த நண்பர்கள் குசும்பன், சென்ஷி, முரளிக்கண்ணன், மேவி, மாம்ஸ் க ரா மற்றும் வேலன் அண்ணாச்சிக்கு..)

13 comments:

மேவி... said...

super me the 1st

சரவணகுமரன் said...

//படம் போட்டக் கொஞ்ச நேரத்திலேயே கிளைமாக்ஸ் வரும். அதன் பிறகு படத்தின் முதல் சீன். செத்துப் போனவன் பிழைத்து வந்து வசனம் பேசிக் கொண்டிருப்பான். சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் கண்டதும் ஓடிக் கொண்டிருக்கும். அது கிடக்கிறது கழுதை அதை எவன் பார்த்தான்?//

//ஐந்து நிமிட இடைவேளை முடிந்துத் திரும்பும்போது எங்கிருந்து வந்தார்கள் எனத் தெரியாமல் மொத்தத் தியேட்டரும் நிரம்பி வழியும்.//

//ஒரு வாரம் போக வில்லையென்றால் கூட சைக்கிள் ஸ்டாண்ட்காரரும் டிக்கட் கொடுப்பவரும் என்ன தம்பி உடம்பு முடியலையா எனக் கேட்கும் அள்வுக்கு நெருக்கம். //

//கிட்டத்தட்ட ஒரு பண்பாட்டு நிகழ்வே முடிவுக்கு வந்து விட்டதைப் போன்ற உணர்வு.//

//அய்யா.. அய்யா.. அப்படி எல்லாம் சொல்லாதீங்க.. வாடிப்பட்டில இருந்து வண்டி கட்டி வந்திருக்கோம். ஒரு ஓரமா நின்னு பார்த்திட்டுப் போயிடுறோம். கொஞ்சம் பார்த்து செய்ங்க..//

இத்தனை முறை சிரித்தது, இந்த பதிவிற்காக தான் இருக்கும்.

உதிரிபூக்கள் புத்தகமாக வந்தால், கண்டிப்பாக வாங்க வேண்டும். :-)

மேவி... said...

ஏலே வாத்தி ... கொன்னுட்டேலே :)))

tamil thasan said...

really great sir!!!

Jackiesekar said...

அன்பின் கார்த்தி

உதரிபூக்கள் தொடர்ந்து வாசிக்கின்றேன்.

ரொம்ப அற்புதமாக இருக்கின்றது. இந்த பகுதியை மதிக்கதக்க வேலை செய்தாலும், பூசி மொழுகாமல் வெளிப்படையாக எழுதும் இந்த எழுத்துக்கு என் வாழ்த்துகள்..

http://www.jackiesekar.com/2009/01/blog-post_05.html முடிந்தால் இதை வாசித்து பார்க்கவும்..

இந்த கட்டுரைக்கு சற்று சம்பதமாக இருக்கும் அல்லது இல்லாமலும் இருக்கும்..

க ரா said...

மாப்ள பின்றீங்க...

ரவிச்சந்திரன் said...

கலக்கலான பதிவு நண்பரே!
புறநகர் பகுதிகளில்-(பேர் பெத்த) திருமங்கலத்தில் ஆனந்தா தியேட்டரில் இன்றும் இது மாதிரியான படங்களும் அவற்றுக்கான ரசிகர்கள் கூட்டமும் தொடர்கிறது!
இந்தப் படங்களின் மீதான மனித மனம் கொண்டுள்ள ஈர்ப்பு மிக ஆழமான ஆய்வுக்குரியது.

ரவிச்சந்திரன் said...

'பச்சப்புள்ள' என்று சொன்னதும் புள்ளைக்கு என்னா ஒரு தார்மீகக் கோபம் பாருங்க மக்கா!!!

chandru / RVC said...

Ka.Pa... excelnt post nanba. //கிட்டத்தட்ட ஒரு பண்பாட்டு நிகழ்வே முடிவுக்கு வந்து விட்டதைப் போன்ற உணர்வு.// ROFL :))))

ஆ.ஞானசேகரன் said...

//வீட்டுக்குத் தெரியாமல் படம் பார்க்க ஆரம்பித்தபோது நான் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன்.//

நான் ஆறாவது

வணக்கம் நண்பா

Unknown said...

உதிரிப்பூக்கள் தொடர் படிக்க மிக அற்புதம்.உங்கள் எழுத்தில் மிக தேர்ந்த எழுத்தாளர் தென்படுகிறார் .சினிமா தியேட்டர் பெயர் எல்லாம் ஒன்று விடாமல் நினைவு வைத்து இருப்பதை பார்த்து ரொம்ப ஆச்சர்யப்பட்டேன்.உள்ளம் கவர்ந்த பதிவு .

Unknown said...

/கிட்டத்தட்ட ஒரு பண்பாட்டு நிகழ்வே முடிவுக்கு வந்து விட்டதைப் போன்ற உணர்வு

Unknown said...

theater perellam marakka mudiyuma boss