August 9, 2012

உதிரிப்பூக்கள் - 16

கோவையில் ஒரு கருத்தரங்கத்திற்காக இரண்டு வாரங்கள் பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் தங்கிட நேர்ந்தபோது அந்த மனிதருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. கொடைக்கானலில் இருக்கும் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் இருந்து வந்திருந்தார். அவரும் வாசிக்கக் கூடியவர் என்பதோடு அவருக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் எஸ்ரா என்கிற கூடுதல் தகுதியும் இருக்க அவரை என்னால் எளிதில் நட்பாக்கிக் கொள்ள முடிந்தது.

இரண்டு வாரப் பழக்கத்தில் குடும்ப விவகாரங்களைக் கூட விரிவாகப் பேசுமளவுக்கு நாங்கள் நெருக்கமான நண்பர்களாக மாறியிருந்தோம். நண்பருடைய திருமணம் காதல் திருமணம். தன்னுடைய மனைவி பற்றிப் பேசும்போது அவருக்கு அத்தனை சந்தோசம். தனக்காக உறவுகள் சொத்து அத்தனையும் விட்டு வந்தவர் என்பதால் அவருக்காகத் தான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று பெருமையாகச் சொல்வார். ஆனால் அவர் பேசும்போதெல்லாம் நான் ஒரு விசயத்தை மட்டும் கவனித்து வந்தேன். தன் மனைவி பற்றி எத்தனை பேசினாலும் அவருடைய பெயரை மட்டும் மனிதர் சொல்லவே மாட்டார்.

ஒரு முறை பொறுக்க மாட்டாமல் அவரிடம் கேட்டே விட்டேன். “ஏன்யா வீட்டுக்காரம்மா பத்தி இவ்ளோ சொல்றீங்க அவங்க பேர் என்னய்யா...” ஒரு நிமிடம் திடுக்கிட்டுப் போன மனிதர் சட்டென்று சுதாரித்துக் கொண்டு அது கெடக்கு தலைவா அதப் போய்க் கேட்டுக்கிட்டு என்று ஏதோ சொல்லி சமாளித்தபடி அந்த விசயத்தைத் தாண்டிப் போய் விட்டார். அவர் மனைவி பெயரைக் கேட்பதை விரும்பவில்லை என்று உணர்ந்து கொண்ட பின்பாக நானும் அதைப் பற்றிப் பேசுவதை விட்டுவிட்டேன்.

இன்னும் இரண்டு நாட்களில் கருத்தரங்கம் முடிந்து அவரவர் வீட்டுக்குக் கிளம்ப வேண்டும். வந்திருந்த நண்பர்கள் எல்லாரும் கொண்டாட்டமாக மது அருந்தப் போகலாம் என ஒன்றாய்க் கிள்ம்பினார்கள். நான் வழக்கம் போல சைட் டிஷ்களை சேகரித்துக் கொண்டு ஒதுங்கினேன். கோடை நண்பர் அன்றைக்கு சரியான சுதி. மிகுந்த சிரமப்பட்டுத்தான் அவரை அறைக்குக் கொண்டு வந்து சேர்க்க முடிந்தது. படுக்க வைத்தால் படுக்காமல் மனிதன் புலம்பத் தொடங்கினார்.

“அவ ஏன் நண்பா அப்படிப் பண்ணினா? அவளால என் வாழ்க்கை இப்படி நாசமாப் போச்சே..”

“என்ன நண்பா.. யார் என்ன பண்ணினா..”

“நீங்க ரொம்ப நல்லவர் நண்பா.. உங்ககிட்ட கூட சொல்ல முடியாமப் பண்ணிட்டாளே..”

“யோவ்.. யாரு உன்னைய என்னய்யா பண்ணினா..”

“ஊரு உலகத்துல எத்தனையோ பேரு இருக்கப்போ அவ ஏன் அந்தப் பேரை வச்சுக்கிட்டா.. அவ எதுல வேணா நடிக்கட்டும் என்ன வேணா பண்ணட்டும்.. ஆனா அந்தப்பேர எதுக்கு வச்சுக்கிட்டா.. அவளாலதான என்னால என் பொண்டாட்டி பேரை யாருக்கிட்டயும் சொல்ல முடியலை.. அவளை விடக்கூடாது.. ஏய்ய்...”

யாரோ ஒரு நடிகையின் பொருட்டுதான் அவரால் தனது மனைவியின் பெயரை எங்கேயும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “அப்படி என்னதான்யா உம்ம பொண்டாட்டி பேரு..”

“ஷகிலா..”

ள்ளியில் படிக்கும்போது தமிழ் துணைப்பாடப் பிரிவில் “பெயரில் என்ன இருக்கிறது” என்றொரு கதை படித்ததாக ஞாபகம். மனிதருக்கு மனம்தான் முக்கியம் பெயரல்ல என்கிற ரீதியில் அந்தக்கதை இருக்கும். ஆனால் அந்தக் கதையின் கருத்தோடு என்னால் ஒத்துப் போக முடிவதில்லை. பெயரில் என்ன இருக்கிறது? பெயரில் எல்லாம் இருக்கிறது. பெயர் என்பது வெறும் பெயர் மட்டும் அல்ல. அது ஒரு அடையாளம். பல நினைவுகளுக்கான திறவுகோல். எங்கோ நாம் கேள்விப்படும் அல்லது பெயர்ப்பலகைகளில் பார்க்கும் பெயர்கள் நம் மனதுக்குள் ஏற்படுத்தும் அதிர்வலைகள்தான் எத்தனை எத்தனை?

என்னுடைய உண்மையான பெயரான கார்த்திகேயப் பாண்டியனை பள்ளியில் சேர்க்கும் விண்ணப்பப் படிவம் நிரப்பும்போது தவறுதலாக கார்த்திகைப் பாண்டியன் என்பதாய் எழுதப்போக அதுவே நிரந்தமாகிப் போனது. அந்தத் தவறைச் செய்தவர் ஜேம்ஸ் அங்கிள். எனக்குப் பக்கத்து வீட்டில் குடியிருந்தவர். நான் படித்த செவந்த் டே பள்ளியின் முதல்வர். பள்ளிக்கூடத்தில் எனக்கு எல்லாவிதத்திலும் உதவியாக இருந்த மனிதர்.

என்னுடைய பெயரைக் கிண்டல் செய்வதில் அவருக்கு அத்தனை சந்தோசம். தீபாவளிப் பாண்டியன், பொங்கல் பாண்டியன் என்று எல்லாப் பண்டிகைகளையும் வம்புக்கு இழுப்பார். நான் கோபத்தில் சிணுங்கியபடி அழுதால் அதையும் கிண்டல் செய்து சிரிப்பார். தப்பாக எழுதியது நீங்கள்தானே என்று நான் குற்றம் சுமத்தினாலும் கண்டு கொள்ளவே மாட்டார். தீபாவளியும் பண்டிகை, கார்த்திகையும் பண்டிகை எப்படிக் கூப்பிட்டால் என்ன என்று எகடாசி பேசுபவரை என்ன செய்வது? என்னுடைய எட்டாம் வகுப்பில் மாற்றலாகி வேறு ஊருக்குப் போகும்வரைக்கும் என்னை அவர் கிண்டல் செய்வது நிற்கவே இல்லை.

சில தினங்களுக்கு முன்பு அவருடைய வீட்டைத் தேடிக் கண்டுபிடித்துப் போயிருந்தேன். கிட்டத்தட்ட பதினைந்து வருட இடைவெளி என்றாலும் அறிமுகம் செய்து கொண்டவுடன் என்னைக் கண்டுபிடித்து விட்டார். “நான் உனக்குச் சொல்லிக் கொடுத்த காலம் போய் நீ இப்போ சொல்லித் தர்றியா.. சந்தோசம்டா..” வெகுநேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு விடைபெற்றுக் கிளம்பினேன். சட்டென அந்தக் குரல் கேட்டது.

“டே தீபாவளிப் பாண்டியா..”

திரும்பிப் பார்த்தேன். ஜேம்ஸ் அங்கிள் நின்று சிரித்துக் கொண்டிருந்தார்.

“மறந்துட்டியோன்னு.. ச்சும்மா.. பழைய ஞாபகங்கள்.. போயிட்டு வா..”

ன்னோடு சிறுவயது முதல் பள்ளியில் ஒன்றாகப் படித்தவன் ராம்பிரசாத். என் ஆரம்பகால குற்றங்களான வீட்டில் காசு திருடுவதிலும் கில்மா படம் பார்க்கப் போவதிலும் அய்யாதான் நம்முடைய கூட்டாளி. அவனுடைய இனிஷியல்கள் எஸ்.டி. என்றிருக்கும். அதை வேகமாகச் சொன்னால் செட்டி என்பதாக வரும். அதனால் பள்ளியில் படிக்கும் பையன்கள் எல்லாரும் சேர்ந்து அதையே அவனுக்கு பட்டப்பெயராகவும் வைத்திருந்தோம்.

ஒருமுறை உயிரியல் வகுப்பில் எய்ட்ஸ் பற்றிப் பாடம் நடத்திவிட்டு ஹெச்.ஐ.வி வைரசை தெர்மாக்கோல் மாடலாக செய்து எடுத்து வரும்படி ஆசிரியர் சொல்லி இருந்தார். இது மாதிரியான வேலைகள் எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்பதால் செட்டியோடு சேர்ந்து செய்யலாம் என்று முடிவானது. ஒரு சனிக்கிழமை காலை அவனுடைய வீட்டில் ஆஜராகி விட்டேன். தெர்மக்கோல் அட்டைகள், ஜிகினா என்று வேலை கனஜோராக நடந்து கொண்டிருக்கையில் பிரசாத்தின் அம்மா என்னிடம் வாயைக் கொடுத்தார்.

“என்னடா பண்றீங்க.. இது என்னது..”

“அத்தை.. இது ஒரு வைரஸ்.. இதாலதான் எயிட்ஸ் வருது..”

“அதெல்லாம் சரி.. இது ஆம்பளையா பொம்பளையாடா..”

அங்கேதான் சனி என் நாவில் சம்மணம் போட்டு அமர்ந்து இருக்கிறான் என்பதை கவனிக்கத் தவறி விட்டேன். ஏதோ விளையாட்டாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு சொன்னேன்.

“அதெல்லாம் இல்லை.. நம்ம பிரசாத் மாதிரி.. எல்லாம் கலந்தது..”

சொல்லி முடிப்பதற்கும் அவர் கையில் வைத்து அரிந்து கொண்டிருந்த காய்கறித் தட்டு பறப்பதற்கும் ரொம்பச் சரியாக இருந்தது. யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொன்ன என்று மூச்சிரைக்க அவர் கத்த ஆரம்பித்தார். ஏதோ தவறாக சொல்லி விட்டோம் என்பது மட்டும் உள்ளுக்குள் உறைக்க விடுவிடுவென்று வீட்டை விட்டு ஓடி வந்து விட்டேன். மறுநாள் காலையில் பிரசாத் அம்மா என் வீட்டுக்கே வந்து விட்டார்.

“கார்த்தியம்மா.. உங்க பையன் என் பையன ஒம்போதுன்னு சொல்லிட்டான்..” ஓவென்று அழுதபடி சொன்னவரின் கண்களில் கண்ணீர் மாலை மாலையாய் வழிந்து கொண்டிருந்தது. என் அம்மா என்னென்னவோ சொல்லி சமாதானம் பண்ணியும் வேலைக்கு ஆகவில்லை. சரி நம்மால் ஆனதைச் செய்வோம் என்று அவர் முன்னால் போனேன்.

“மன்னிச்சுருங்க அத்தை... தெரியாமச் சொல்லிட்டேன்..”

“நீ பாட்டுக்கு ஸ்கூல்ல போயி இது மாதிரி பேசினீன்னா எம்மவன் பேரு என்ன ஆகும்..”

சொல்லியபடி மூக்கைச் சிந்தியவரைப் பார்க்க பாவமாக இருந்தது.

“அடச்சே.. இதுக்குத்தான் இவ்ளோ அழுதீங்களா.. பயப்படாதீங்க அத்தை.. ஸ்கூல்ல ஏற்கனவே அவனுக்கு இன்னொரு பேரு இருக்கு.. செட்டின்னு.”

கொஞ்சமாக சிணுங்கிக் கொண்டிருந்தவர் இதைக் கேட்டவுடன் இன்னும் அதிகமாகக் கத்த ஆரம்பித்து விட்டார். பிறகுதான் தெரிந்தது அவர்கள் அந்த இனம்தானாம். நான், பிரசாத், என் அம்மா எல்லாரும் சேர்ந்து அவரை சமாதானம் செய்வதற்குள் வாழ்க்கையே வெறுத்துப் போனது. அதன் பிறகு நான் செட்டியின் வீட்டுக்குப் போவதையே வெகுவாகக் குறைத்துக் கொள்ளும் அளவுக்கு அந்தப் பெயர் என்னைப் பழிவாங்கியதை என்னவென்று சொல்வது?

றாவது படிக்கும்போது சுப்பிரமணியபுரம் கல்லு சந்துக்கு குடிபோன சமயத்தில்தான் எனக்கு பர்பி அறிமுகமானது. அவனுடைய இயற்பெயர் என்னவென்று யாருக்கும் தெரியாது. நாலைந்து பொத்தல்கள் விழுந்த பனியன். சாயம் போன நிறத்தில் ஒரு அரை டவுசர். எப்போதும் முகத்தில் வழிந்து கொண்டிருக்கும் எண்ணெய். இதுதான் பர்பி. என்னைக் காட்டிலும் இரண்டு வயது அதிகம். என்றபோதும் சற்றே மூளை வளர்ச்சி குறைவு. நாம் சொல்வதை எல்லாம் புரிந்து கொள்ளுவான். ஆனால் பதில் சொல்வதற்காகப் பேசினான் என்றால் கோர்வையாக இருக்காது. அவன் கூடவே ஒரு நாட்டு நாயும் சுற்றிக் கொண்டிருக்கும். அதற்கு ராஜா என்று பெயர். பர்பி ஒரு இடத்தில் இருக்கிறான் என்றால் ராஜாவும் அங்கேயே இருக்கும் என்பதும் போல அவனுக்கும் அதற்கும் அத்தனை நெருக்கம்.

அந்த சந்தில் இருக்கும் எல்லா பிள்ளைகளுக்கும், நான் உட்பட, விளையாட்டில் ஊறுகாய் என்றால் அது பர்பிதான். அப்போது நாங்கள் ரவுண்டு கண்ணாமூச்சி என்றொரு விளையாட்டு விளையாடுவோம். சுப்பிரமணியபுரத்தில் இருக்கும் பனிரெண்டு சந்துகளில் எங்கு வேண்டுமானாலும் ஒளிந்து கொள்ளலாம் என்பது ஆட்ட விதிமுறை. பட்டு வருபவன் அத்தனை பேரையும் கண்டு பிடிப்பதற்குள் மண்டை காயும் என்பதால் எப்போதும் இதில் பர்பிதான் சூதாக சிக்க வைக்கப்படுவான். சந்து முக்கில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்குப் போய் ஆயிரம் எண்ணி முடித்தபின் தான் பட்டு வர வேண்டும். என்னுடைய ரவுண்டு கண்ணாமூச்சி சரித்திரத்தில் ஒவ்வொரு தடவையும் ஆயிரம் வரைக்கும் முழுமையாக எண்ணக்கூடிய ஒரே ஆள் பர்பி மட்டுமே.

ஒவ்வொரு முறையும் ஆட்டம் முடிய குறைந்தது மூன்று மணி நேரமாவது ஆகும். எப்படியும் யாராவது பர்பிக்கு ஐஸ் வைத்து விட்டோம் என்றால் ஆட்டம் முதலில் இருந்து தொடங்கும். அப்படி இல்லாமல் என்றாவது அவன் எல்லாரையும் கண்டுபிடித்து விட்டான் என்றால் அன்றைய ஆட்டம் அத்தோடு முடிந்து விடும். மறுநாள் ஆட்டம் தொடங்கும்போது பர்பி மீண்டும் பட்டு வருவான். அவன் மக்களைத் தேடி வரும் அழகே தனி. திடீரென ஆள் காணாமல் போய் விடுவான். ரொம்ப நேரமாகியும் ஆளைக் காணோமே என நாம் குழம்பி வெளியே வந்தால் போர்வை மூடி கால் விந்தி விந்தி நடந்து நம்மைத் தாண்டிப் போகும் ஆள் சட்டென்று நெருங்கி வந்து ஒண்ணு என்பான். பார்த்தால் அது பர்பியாக இருக்கும். ராஜா உடன் வந்தால் நாங்கள் கண்டுபிடித்து விடுவோம் என்பதால் அதை எங்காவது விட்டு வந்திருப்பான். ரவுண்டு கண்ணாமூச்சி என்றுதானில்லை எங்களுடைய எல்லா விளையாட்டுகளையும் சுவாரசியமாய்ச் செய்தவன் பர்பி. ஒரு டீ வாங்கிக் கொடுத்தால் போதும் அவனை என்ன வேலை செய்யச் சொன்னாலும் செய்வான் என்பது தெருவில் இருந்த அனைவருக்கும் வசதியாகப் போனது. ஆகமொத்தம் சிறியவர் பெரியவர் என தெருவில் இருந்த அனைவருக்கும் மிக நெருக்கமான உறவாக அவன் இருந்தான்.

திடீரென ஒருநாள் காலை தூக்கத்தில் இருந்த என்னை எழுப்பி பர்பி செத்துப் போனதாக என அம்மா சொன்னார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இது எப்படி நடந்தது? காலையில் எழுந்ததும் வழக்கம் போல காலைக் கடன்களை முடிக்க பர்பி ரயில்வே டிராக் பக்கம் போயிருக்கிறான். உடன் ராஜாவும் போயிருக்கிறது. டிராக்கின் ஓரமாக இருவரும் உட்கார்ந்து இருக்க ரயில் வரும்போது தண்டவாளத்தின் மீது ராஜாவின் வால் கிடந்திருக்கிறது. ரயில் அதன் மீது ஏறும் தருணத்தில் யாராவது தொடும்போது நாம் சட்டெனத் திரும்புவதுபோல சட்டென ராஜா திரும்ப உள்ளிழுக்கப்பட்டு விட்டது. ராஜா என்று கத்திக் கொண்டே பர்பியும் ரயிலுக்கு உள்ளே பாய்ந்து விட்டான் என்று பார்த்தவர்கள் சொன்னார்கள்.

பாகம் பாகமாகப் பிரிந்து கிடந்த பர்ர்பியைப் போய்ப் பார்க்க வேண்டாம் என எனது அம்மா தடுத்து விட்டார். இரங்கல் தெரிவித்து ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் ஒன்றில்தான் அவனது பெயரை முதல்முதலாகப் பார்த்தேன். “மரண அஞ்சலி - செல்வம் என்கிற பர்பி”. இப்போதும் சாலையில் விளையாடும் பிள்ளைகளைக் கடந்து போகும் போதெல்லாம் பர்பியின் நினைவுகள் மனதுக்குள் கிளர்ந்தெழுந்து கண்ணீரை வரவழைக்கும்.

தை எழுதும் இவ்வேளையில் நண்பர்கள் தொடங்கி பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் வரை ஒருவர் விடாமல் எல்லாருக்கும் வைத்த பட்டப்பெயர்கள் எல்லாம் நினைவுக்கு வருகின்றன. எப்போதும் என்னைக் கோத்திரி என்றே கூப்பிடும் பால்வண்டி என்கிற பாலாஜி, என்னை எவனாவது பட்டப்பெயர் சொல்லிக் கூப்பிட்டீங்க அழுதுருவேன் என்று கதறும் மண்டையன் என்கிற சிங்கம் என்கிற திராவிடமணி, ஒரே அறையில் நான்கு வருடம் ஒன்றாக இருந்து விட்டு காதலுக்காக என்னைத் தூக்கியெறிந்த மொட்டை என்கிற தேவா, எல்லாரையும் சிரிக்க வேண்டும் என்ப்தே தன் லட்சியமெனச் சொல்லும் மெனா என்கிற முத்துக்கண்ணன், என் பிரியத்துக்குரிய சைக்கோ சரவணன், சாமி கார்த்தி, வீனா கூனா குமார், தலைவன் வெங்கடேசன், மசாஜ் செர்வீஸ் மாரி, இனிலன் எனும் குட்டிச் சாத்தான் என எத்தனையோ பெயர்களும் அவர்கள் சார்ந்த நினைவுகளும் நிலழென என் கண்முன்னே ஆடியபடி இருக்கின்றன. சொன்னேன் இல்லையா? பெயர் என்பது நம் மனதின் நினைவுகளுக்கான திறவுகோல்.

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய சந்திப்பை பதிவாக்கித் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா...

Anonymous said...

Good memories and feeling the same when reading as u were...

இராஜராஜேஸ்வரி said...

நண்பர்கள் தொடங்கி பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் வரை ஒருவர் விடாமல் எல்லாருக்கும் வைத்த பட்டப்பெயர்கள் எல்லாம் நினைவுக்கு வருகின்றன.

இனிய நினைவுப்பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

mohamed salim said...

மிக அழகான பதிவு என்னுடைய பழைய பள்ளிகூட நாட்களை நினைவுகள் திரும்ப நினைத்தது போல் இருந்தது! வாத்தியரே ரொம்ப நாளா ப்ளாக் எழுத வரலையே ?? பிஸியோ??

அகல்விளக்கு said...

எனக்கு மிகப்பரிட்சையமான, ஈரோட்டில் பிரபலமான பைன்டிங் ஆலையில் இருக்கும் ஒரு அக்காவின் பெயரும் ஷகிலா-தான்... ஆனால் அவர் பெயரைச் சொல்லி அழைப்பதற்கு தயக்கம் ஏதும் இருப்பதாய் தெரியவில்லை... #சர்வ நிச்சயமாக பெயர், ஒருவரை இழிவுபடுத்துவதற்கான காரணமாக இருக்க முடியாது... அந்த கோடை நபரை நினைத்தால் :(((

மேவி... said...

ஸ்கூல் படிக்குறப்ப நான் யார் கிட்டயும் ஜாஸ்தியா பேசினதில்ல..அதனால யாரும் எனக்கு பெயர் வைச்சது இல்லை..நானும் பெயர் வைச்சது இல்லை. கல்லூரி படிக்கும் போது ......... ம்ம்ம் அப்பவும் இல்லை .

ஏக்கமா இருக்கு இந்த தொடரை படிக்குறப்ப. சீக்கிரம் புஸ்தகமா கொண்டு வாங்க காபா

dharma said...

Neenga matrum oru s Ra . Super boss , I love your blog.

சுவாதி ச முகில் said...

பள்ளிகால நினைவுகள் வருகின்றன காபா. அருமை

Robert said...

நல்ல உணர்வுப்பூர்வமான பதிவு. எனது பால்ய நினைவுகளை கிளறி விட்டது சுகமாக!!!!!!!!