September 21, 2012

உதிரிப்பூக்கள் - 17

ள்ளிப்படிப்பு முடித்து கல்லூரிக்குப் போகும் காலகட்டம். கோவை சிறுவாணி மலையடிவாரத்தில் இருந்த ஒரு பொறியியல் கல்லூரியில் சீட் கிடைத்தது. என்னை ஹாஸ்டலில் கொண்டு சேர்க்க வந்த மக்களுக்கு பயங்கர சந்தோசம். அருமையான வசதிகளுடன் கூடிய கல்லூரி, தலைக்கு மேலே தவழ்ந்து போகும் மேகங்கள், மெல்லிய தூறலுடன் மழை, அற்புதமான சுற்றுச்சூழல் என எல்லாம் பார்க்கையில் அம்மாவுக்குப் பரம திருப்தி. பத்திரமா இருந்துக்கப்பா என்று ஒற்றை வார்த்தையோடு நிம்மதியாகக் கிளம்பிவிட்டார். ஆனால் நான் உள்ளுக்குள் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தேன்.

கிளம்புவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் செட்டியைப் பார்க்கப் போயிருந்தேன் (ராம்பிரசாத் - ஞாபகம் இருக்கானா?). காரைக்காலில் ஒரு பிசியோதெரபி கல்லூரியில் சேர்ந்தவன் இரண்டே வாரங்களில் பயங்கரக் காய்ச்சலோடு ஊருக்குத் திரும்பி வந்திருந்தான். என்னடா ஆச்சு என்று கேட்டதற்கு ஓவென அழ ஆரம்பித்து விட்டான். காரணம் - ராகிங்.

கல்லூரியின் முதல் நாளே பத்து ஆசை சாக்லேட் ரேப்பர்களைக் கொடுத்து அவற்றின் நிறத்தை நீக்கித் தர வேண்டுமென சொல்லி இருக்கிறார்கள் சீனியர்கள். அதுவும் வாயால் சவைத்து சவைத்தே எடுக்க வேண்டுமாம். ஒரு துளி நிறம் மிச்சமிருந்தாலும் அதற்குத் தண்டனையாக மேலும் பத்து ரேப்பர்கள். ஆசை ரேப்பரில் எத்தனை நிறங்கள் இருக்கும் என்று தெரியாதவர்கள் தெரிந்தவர்களிடம் கேளுங்கள். அன்றைக்குப் பூராவும் ரேப்பர்களை சவைத்து சாயங்காலத்தின் போது வாயெல்லாம் வீங்கி இரண்டு நாட்கள் பயல் பேசமுடியாமல் கிடந்திருக்கிறான்.

எல்லாவற்றையும் விடப் பெரிய கொடுமை அவனுக்கு ஹாஸ்டலில் நடந்திருக்கிறது. முதலாம் வருட மாணவர்களை எல்லாம் ஒரு இருட்டு அறைக்குள் தள்ளி நிர்வாணமாக்கி இருக்கிறார்கள். பிறகு அவர்களில் ஒவ்வொருவராகப் போய் மற்றவர்களுடைய பிறப்புறுப்பின் அளவை ஸ்கேலால் அளந்து வர வேண்டும். கடைசியாக எல்லாரும் ஒரே மாதிரி அளந்திருக்கிறார்களா என்று சீனியர்கள் சரி பார்ப்பார்கள். தப்பாய் அளந்தவனுக்கு செமத்தியான அடியும் உதையும் கிடைக்கும். இதெல்லாம் தாங்கிக் கொள்ள மாட்டாமல் ஓடிவந்து விட்ட செட்டி அடுத்து கல்லூரிக்குப் போகவே மட்டேன் என அழும் அளவுக்கு பயந்து கிடந்தான். ஆக ராகிங் பற்றிய பயத்தில் நான் ததிங்கினத்தோம் போட்டுக் கொண்டிருந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லைதானே?

ல்லூரியின் முதல் நாள். மிகச்சரியாக இண்டெர்வெல் சமயத்தில் சீனியர்களிடம் சிக்கினேன். 

எந்த ஊருடா நீ?

மதுரைண்ணே..

ப்ர்ர்ர் என்று சிரித்து விட்டார்கள். அண்ணே என்கிற வார்த்தையின் பயன்பாடு அவர்களுக்கு அத்தனை கிண்டலானதாக இருந்தது.

மதுரையாம்... அண்ணேவாம்.. கெரகம்.. அது கிடக்கட்டும். நாங்க எல்லாம் உனக்கு அண்ணங்க தான? எங்க பேர் கேக்க மாட்டியா...

பரவாயில்லை ஒரு நேசபாவத்தோடு தான் இருக்கிறார்கள் என்று நம்பிக் கேட்டேன்.

உங்க பேரு என்னண்ணே?

முடிக்குமுன்பாக மண்டையைச் சேர்த்து அடி விழுந்தது.

அவனுக்கு நீதான் பேரு வச்சியா? ஒழுங்கா மரியாதையாக் கேளுடா..

எப்படிண்ணே கேக்கணும்?

மைட்டி மைட்டி சீனியர் சார் ஐயாம் அக்லி அக்லி ஜூனியர் சார் மே சார் ஐ சார் நோ சார் யுவர் சார் நேம் சார்.. இப்படிக் கேளுடா வெண்ண..

சுற்றி இருந்த பத்து அண்ணன்கள், பதினைந்து அக்காக்களிடம் எல்லாம் பேர் கேட்டு முடித்தபின்பு அடுத்த இம்சை ஆரம்பமானது. எங்கள் கல்லூரிக்கு என இருந்த பிரத்தியேகமான முறையில் சல்யூட் அடிக்க வேண்டும். எப்படி? அட்டென்ஷனில் நின்று இடது கையைத் தொடையிடுக்கில் இறுக்கிப்பிடித்து வானில் ஒரு தவ்வு தவ்வி அதே நேரத்தில் முழுதுமாய்ச் சுழன்று கீழிறங்கும் வேளையில் வலக்கையால் சல்யூட் அடிக்க வேண்டும். கேட்கும் போதே தலை சுற்றுகிறதா? அப்போது அதைச் செய்பவர்களுக்கு? சுற்றி இருக்கும் அத்தனை பேருக்கும் சல்யூட் அடி. ஆக இப்படி கோலாகலமாகத்தான் தொடங்கியது என் கல்லூரி வாழ்க்கை.

பெரும்பாலும் ராகிங் என்கிற பெயரில் அப்போது நடந்து கொண்டிருந்தது எல்லாம் பணம் பறிப்பதுதான். பணத்துக்காக பேயாய் அலையும் ஜீவன்களை நான் அங்குதான் முதலில் சந்தித்தேன். அன்றைய காலகட்டத்தில் என் செலவுக்காக அம்மாவால் மாதாமாதம் தர முடிந்தது வெறும் நூறு ரூபாய் மட்டுமே. பாக்கெட் வைத்த ஷார்ட்ஸ் போட்டு அதில் பணத்தை ஒளித்து வைத்திருப்பேன். ஆனால் எமப்பயல்கள் அதையும் தேடி எடுத்து விடுவார்கள். காசு போட்டு படத்துக்கு கூட்டிப் போகச் சொல்வார்கள். புதிதாய் ரிலீஸ் ஆன படங்களின் கேசட்கள் வாங்கி வா என்பார்கள். என் சுவாசக் காற்றே மட்டும் நாலைந்து கேசட்டுகள் என் சீனியர்களுக்கு அழுதிருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 

அதில் தமிழ் மாணவர்களைக் கூட ஒரு கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். சில நேரங்களில் நாம் கெஞ்சினால் மனம் இளகி விட்டு விடுவார்கள். ஆனால் தெலுங்கு மற்றும் மலையாள மாணவர்கள்தான் ரொம்பப் பாவம். அந்த  சீனியர்கள் எப்போதும் பத்து முதல் இருபது பேர் வரைக்கும் ஒரு கூட்டமாகத்தான் வருவார்கள். யார் நல்ல பசையுள்ள பார்ட்டி என்று பார்த்து அழைத்துப் போய் விடுவார்கள். அவர்கள் கேட்பதை எல்லாம் செய்து கொடுத்து விட்டால் அவன் பிழைத்தான். மறுத்துப் பேசினால் ஹாஸ்டலுக்குப் பின்னால் இருக்கும் காட்டுக்குள் கூட்டிப்போய் அடி நொறுக்கி விடுவார்கள். 

நான் பள்ளியில் படிக்கும்வரைக்கும் யாரும்  எதற்கும் என்னை அடித்தது இல்லை. முதல் வருடம் முழுவதும் அப்படி இப்படி என்று பணம் போனால் கூட யாரிடமும் அடி வாங்காமல் தப்பித்துக் கொண்டேன். அதில் எனக்கு பரம சந்தோசமும் பெருமையும் கூட. ஆனால் எல்லாவற்றுக்கும் சேர்த்து பெரிய மொத்தாக வாங்கப் போகிறேன் என்பது அப்போது எனக்குத் தெரியாது.

ரண்டாம் வருடம். லேட்டரல் பயல்கள் மீது எங்களுக்கு ஒரு காண்டு. நாங்கள் மட்டும் இத்தனை இம்சைப்பட்டு முதல் வருடம் படித்து விட்டு வருவோம், நீங்கள் நோகாமல் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து சீனியர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்ளுவீர்கள்? அப்படி எல்லாம் விட்டு விட முடியாது தம்பிகளா? அதனால் லேட்டரல் மக்களை நாங்களே ராகிங் செய்வது என முடிவானது. இந்த நாங்களே என்பது நான் மற்றும் எனது நான்கு அறை நண்பர்களைக் குறிக்கிறது எனக் கொள்க.

ஒரு நிறைந்த செவ்வாய்க்கிழமை இரவில் சுந்தரேசன் எங்களிடம் மாட்டினான். எப்படிடா குழந்தை பிறக்கும் எனக்கேட்டால் சாமி கொடுப்பார் என சொல்லுமளவுக்கு மிகப்பெரிய அப்பாவி அவன். எங்களுக்கும் அப்படி ஒரு ஆள்தான் தேவை. ஏனென்றால் அவன்தான் நாம் எத்தனை அடித்தாலும் திருப்பி அடிக்க மாட்டான் பாருங்கள். அன்றைக்கு ராத்திரி முழுக்க செம கூத்து. அவனை ஓட்டி எடுத்து விட்டோம். போதாக்குறைக்கு எங்கள் முதல் ராகிங் முயற்சியை எப்போதும் நினைவில் கொள்ளும் வகையில் அதைக் கேசட்டில் பதிவு செய்தும் வைத்துக் கொண்டோம்.

மறுநாள் காலை எட்டு மணி போல அவசரமாகக் கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தேன். அந்த நேரம் பார்த்து ஃபைனல் இயர் ஸ்டூடண்ட் சேர்மன் அங்கே வந்தார்.

என்னடா சாமியாரே.. நேத்து ஒரே ஆட்டம் போல?

ஆமாண்ணே.. சும்மா விளையாட்டுக்கு..

அதனால் என்னடா.. விடு.. ஏதோ ரெக்கார்ட்லாம் பண்ணிங்களாம்.. போடு கொஞ்ச நேரம் ஜாலியாக் கேப்போம்..

கேசட் ஒரு இருபது நிமிடம் ஓடியிருக்கும். எதேச்சையாக சேர்மன் கேட்டார்.

இம்புட்டு பேக்கா இருக்கான். இந்த சுந்தரேசன் யாருன்னு தெரியுமாடா..

இல்லையே.. ஏண்ணே.. சிரித்தபடி கேட்டேன்.

அவன் என் தம்பிடா...

ன்றைக்கு இரவு சேர்மனின் அறைக்குள் நண்பர்கள் அனைவரும் மண்டியிட்டு அமர்ந்திருந்தோம். கேசட் ஓடிக் கொண்டிருக்க சுந்தரேசன் யார் யார் எதை எதைப் பேசியது என அடையாளம் காட்டிக் கொண்டிருந்தான். யார் என்னவென்று தெரியாதவர்கள் எல்லாம் வந்து எங்களை அடித்துக் கொண்டிருந்தார்கள். 

இவனுங்க கெட்ட கேட்டுக்கு இண்ட்ர்னல் ராகிங்.. ஏண்டா?

ஒருவன் எங்கிருந்தாவது வருவான். நாங்கள் மண்டியிட்டு இருப்பதைப் பார்ப்பான். ஓங்கி முதுகைச் சேர்த்து ஒரு மிதி. அம்மா என்று கதறியபடி கீழே விழுந்தாலும் உடன் எழுந்து கொள்வோம். இல்லை என்றால் அதற்கும் அடிப்பார்கள். பிறகு பொறுமையாகக் கேப்பான்.

எதுக்குடா மாப்ள இவனுங்கள அடிக்கிறீங்க?

ஏண்டா டேய்.. எதுக்கு என்னன்னு கேட்டுட்டாவது அடிக்கக் கூடாதா? லூசுப்பயலுகளா.. அடிச்சுட்டுதான் கேப்பீங்களாடா? இது என் மைண்ட் வாய்ஸ். அன்றைக்கு இரவு ரூமுக்குத் திரும்பி வந்தபோது அத்தனை பேர் உடம்பும் புண்ணாகிப் போயிருந்தது. பேருக்குத் தூங்கி விட்டு காலையில் எழுந்தோம்.  அடுத்த குண்டு தயராக இருந்தது. 

மாப்ள. நேத்து அடிச்சது ஹாஸ்டல் சீனியர்களாம். இன்னைக்கு ராத்திரி டே ஸ்காலர்ஸ் வர்றாங்களாம்..

நாசமாப் போச்சு. நம்மால முடியாதுடா யப்பா. இதுக்கு மேல உடம்பு தாங்காது. மாலை கல்லூரி முடிந்தது சத்தம் போடாமல் கோவையில் இருந்த எங்கள் நண்பன் ஒருவனின் வீட்டுக்கு எஸ் ஆகி விட்டோம்.

ரவில்  எங்களைத் தேடிக் கொண்டு வந்தது நான்காம் வருட மாணவர்கள் அல்ல - மூன்றாம் வருட மாணவர்கள். எந்தக் கல்லூரியையும் போல எங்கள் கல்லூரியிலும் மூன்றாம் வருட மக்களுக்கும் நான்காம் வருட மக்களுக்கும் ஆகவே ஆகாது. ஹாஸ்டலில் ஒரு தப்பு நடந்தால் ஃபைனல் இயர் மட்டும்தான் தட்டிக் கேட்கலாமா, நாங்கள் கேட்கக் கூடாதா என்னும் உயரிய கொள்கையோடு எங்களைத் தேடி இருக்கிறார்கள். நாங்கள் கையில் சிக்கவில்லை. ஆத்திரத்தில் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் எங்கள் பக்கத்து அறையில் இருந்த இன்னொரு நண்பனை பிடித்து நாயடி அடித்து விட்டார்கள். அங்குதான் ஆரம்பித்தது வினை.

எதிர்பாராதவிதமாக அவர்கள் அடித்தது அவன் உயிர்நிலையில் பட்டு விட்டது. வலி தாங்காமல் துடித்தவனை மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள். பரிசோதித்துப் பார்த்த டாக்டர் அவன் எழுந்து நடமாட ஆறு மாதங்கள் ஆகும் என்றும் அதன் பின்பும் அவன் ஆண்மையோடு இருப்பது சந்தேகம்தான் என்றும் சொல்லி விட்டார். மறுநாள் காலை இந்தத் தகவல் எங்களுக்கு வந்து சேர்ந்தபோது நாங்கள் அதிர்ந்து போனோம். கல்லூரிக்குத் திரும்பி வந்தால் இரண்டாம் வருட மாணவர்கள் ஸ்ட்ரைக். வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களை டிஸ்மிஸ் செய்யும் வரை போராட்டம். கடைசியில் கல்லூரி நிர்வாகம் ஆறு மூன்றாம் வருட மாணவர்களைக் கல்லூரியை விட்டுத் தூக்கிய பின்புதான் பிரச்சினை ஓய்ந்தது. எங்களை யாரும் இந்தக் களேபரத்தில் கவனிக்கவில்லை என்பதில் எங்களுக்கு ஒரு அல்ப நிம்மதி.

ல்லூரியில் எனது மூன்றாம் வருடம். எங்களுக்கும் ஃபைனல் இயர் மாணவர்களுக்கும் ஒரு மறைமுகப் போர் நடந்தபடி இருக்க அதை மீண்டும்  பெரிதாக்கிய பிரச்சினை இரண்டாம் வருட மாணவர்களின் வடிவில் வந்தது.

கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் ஒரு பெண். அவளை ஒரு எலெக்ட்ரிக்கல் பையனும் மெக்கானிக்கல் பையனும் விரும்பி இருக்கிறார்கள். அவளோ அந்த எலெக்ட்ரிக்கல் பையனை விரும்பி இருக்கிறாள். காண்டாகிப் போன மெக்கானிக்கல் பையன் லேடிஸ் ஹாஸ்டல் வாசலில் வைத்தே அந்த எலெக்ட்ரிக்கல் பையனை அடி நொறுக்கி விட்டான். அவன் அழுது கொண்டே எங்களிடம் வந்தான். நாங்களும் அந்த மெக்கானிக்கல் பையனைக் கூப்பிட்டு மிரட்டி அனுப்பினோம். அந்தப் பக்கி அதை நேராக ஃபைனல் இயர் மக்களிடம் போய் சொல்லி விட்டு ஒதுங்கிக் கொண்டது. ஆக மீண்டும் எங்களுக்கும் சீனியர்களுக்கும் சண்டை.

ஃபிப்ரவரி மாதத்தின் இரண்டாம் வாரம். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மூன்றாம் வருட ஸ்டூடண்ட் சேர்மனின் கார் தீப்பற்றி எரிகிறது. அன்று மாலை எங்களிடம் சிக்கிய செக்யூரிட்டி ஒருவர் தீ வைத்தது நான்காம் வருட மாணவர்கள் என்பதையும் யார் யார் என்பதையும் சொல்லி விட்டார். மறுநாள் மாலை சீனியர்களை ஹாஸ்டலில் புகுந்து கதவுகளை எல்லாம் உடைத்து அடி நொறுக்குகிறோம். கல்லூரியின் மிகப்பெரிய தலைகள் எல்லாம் வந்து சண்டையை நிப்பாட்டும்படிக் கெஞ்சுகிறார்கள். யாரும் கேட்கத் தயாராக இல்லை.

வெகு சில எண்ணிக்கையில் சீனியர்கள். நாங்களோ அவர்களைப் போல மூன்று மடங்கு எண்ணிக்கையில் இருந்தோம். முந்தைய நாட்களின் ராகிங் கோபம் எல்லாம் சேர்ந்து கொள்ள கையில் டிராஃப்டரோடு வெறியாட்டம் போட்ட அந்த நேரத்தை இப்போது நினைத்துப் பார்க்கையில் வெட்கமாக இருக்கிறது. அடிதடி எல்லாம் ஓய்ந்த பின்பும் அன்றைய இரவு பதட்டமாக கழிந்தது.

புதன் அன்று என் அம்மாவுக்கு மதுரையில் கண் ஆபரேஷன். எனவே நண்பர்களிடம் சொல்லிக் கொண்டு செவ்வாயன்று காலை ஊருக்குக் கிளம்பினேன். பிரச்சினையின் காரணமாக கல்லூரிக்கு இரண்டு நாள் விடுப்பு விட்டிருந்ததும் எனக்கு வசதியாகப் போக ஹாயாக் கிளம்பி விட்டேன். அப்போது எல்லாம் முடிந்து விட்டதாக நான் நினைத்தது இரண்டே நாட்களில் பொய்யாகிப் போனது.

புதன்கிழமை இரவு ஒன்பது மணி போல மூன்றாம் வருட மாணவர்கள் நான்கு பேர் கோவைக்கு படத்துக்குப் போய்விட்டு பைக்கில் திரும்பி இருக்கிறார்கள். கல்லூரிக்கு இரண்டு கிலோமீட்டர் முன்பாக சீனியர்கள் அவர்களை மடக்கி விட்டார்கள். மூவர் மாட்டிக் கொள்ள ஒருவன் மட்டும் தப்பி வந்து ஹாஸ்டலில் இருந்த என் நண்பர்களிடம் சொல்லி விட்டான். உடன் அங்கிருந்து 94 பேர் கொண்ட ஒரு கூட்டம் கிளம்பி விட்டது. 

கல்லூரி விடுதியின் வாசலில் நின்று டீ குடித்துக் கொண்டிருந்திருக்கிறார் ஒரு கவர்மெண்ட் பஸ் டிரைவர். இப்போது பஸ்ஸை நீ எடுக்கிறாயா இல்லை நாங்கள் எடுக்கட்டுமா என மிரட்டி மொத்தக் கும்பலும் கிளம்பி அந்த இடத்துக்குப் போயிருக்கிறார்கள். கையில் ஹாக்கி ஸ்டிக், பேட், சைக்கிள் செயின் போன்ற ஆயுதங்களும்.

சீனியர்கள் தங்கியிருந்த வீட்டுக்குப் பெயர் வொயிட் ஹவுஸ். அவர்கள் கிட்டத்தட்ட இருபது பேர். எனது நண்பர்கள் அங்கே போய் இறங்க பயங்கரக் களேபரம். கண்டபடி சண்டை நடந்திருக்கிறது. விமல் என்று ஒரு சீனியர். அருமையாக நடனம் ஆடுபவர். கோவையின் மைக்கேல் ஜாக்சன் என்று சொல்வோம். சைக்கிள் செயின் பற்றி இழுத்ததில் அவருடைய வலது கண் தெறித்துப் போனது. சீனியர்கள் அடித்ததில் என் நண்பன் மைக்கேலுக்கு காது கேட்காமல் போனது. எல்லாவ்ற்றுக்கும் மேலே, தன்னையும் அடித்து விடுவார்களோ என பயந்து ஓடிய சீனியர் சுந்தர் என்பவர், தரையோடு தரையாக இருந்த கிணற்றுக்குள் விழுந்து செத்துப் போனார்.

ம்மாவின் ஆபரேஷன் நல்லபடியாக முடிந்து நான் வெள்ளியன்று ஊருக்குக் கிளம்பிக் கொண்டிருந்தேன். போன் வந்தது.

மாப்ள.. ஐடிசி டா.. சீனியருங்க நம்ம மேல கொலவெறில இருக்காங்க.. பார்த்துக்க..

புலனாய்வு பத்திரிக்கைககள் எல்லாம் கண்டபடி எழுதின. ஆண்களுக்கு ராகிங். பெண்களுக்கு ரேப்பிங். பயங்கரக் கல்லூரி. கொலைவெறி கொண்ட மூன்றாம் வருட மாணவர்கள். என்ன சொல்வதன்றே தெரியவில்லை. நண்பர்களில் 36 பேர் டிஸ்மிஸ். 50 பேர் சஸ்பெண்ட். அங்கே இருந்தவன் இல்லாதவன் என்று கணக்கில்லாமல் யார் மீதெல்லாம் கல்லூரிக்கு கடுப்பு இருந்ததோ அவர்களை எல்லாம் தாளித்து எடுத்து விட்டார்கள்.

அம்மாவுக்கு ஆபரேஷன் இல்லாதிருந்தால் ஒருவேளை நானும் அவர்களில் ஒருவராய் இருந்திருக்கலாம். என்னை அன்று காப்பாற்றியது எதுவென்று இதுவரைக்கும் எனக்குத் தெரியவில்லை. அத்தோடு அடங்கியவர்கள்தான் நாங்கள். அதற்குப் பிறகு நான்காம் வருடம் முடிக்கும் வரை ஒரு சத்தம் கிடையாது. கல்லூரி நிர்வாகமும் எங்களுக்கு எந்த பிளேஸ்மெண்டும் வராமல் பார்த்துக் கொண்டது. இன்றைக்கு யோசிக்கும்போது எல்லாமே பைத்தியக்காரத்தனம் என்பது புரிகிறது. வருடங்களில் பின்னோக்கிப் பிரயாணித்து சில விசயங்களை, சில தவறுகளை மாற்றி விட வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஆனால் முடியவில்லை. அமைதியாகச் சிரித்தபடி இருக்கிறது காலம்.




12 comments:

கிருஷ்ணா வ வெ said...

என்ன தலைவரே நலமா?
நீண்ட நாட்களுக்கு பிறகு வந்துள்ளீர்கள்.
குடும்ப பணி அதிகமோ?

எனக்கு நம்மவர் படம் பார்த்தது போல இருந்தது.
அருமையாக விளக்கி உள்ளீர்கள்.
கண்முன்னே திரைப்படமாக ஓடியது.
இப்பொழுது தண்டனை மிகவும் அதிகம் என்பதால் குறைந்துள்ளது என நினைக்கிறேன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லா இருக்கேன் நண்பா.. நீங்களும் நலம்னு நம்புறேன்..:-)

அன்பேசிவம் said...

நான் டைரக் செகண்ட் இயர்தான் நண்பா! எனக்கு தெரியும் அந்தக்காமெடியெல்லாம். இப்ப என் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸெல்லாம் அப்ப என்ன செமத்தியா காட்டியிருக்கானுங்க.... எங்க கல்லூரியிலேயும் இப்படி ஒரு பிரச்சனை நடந்தது,ஆனால் நல்லவேளையாய் உயிர்சேதம் எதுவுமில்லை. பள்ளிப்பருவத்திலேயே இதையெல்லாம் செய்து முடித்துவிட்டிருந்தேன். அதனால் ஒரு பக்குவம் இருந்தது கல்லூரி பருவத்தில்.....

Robert said...

பணம் பறிப்பதில் இருந்து, சல்யூட் அடிக்க செய்வது வரை எல்லா சீனியர்களும் ஒரே மாதிரிதான் போல.

Anbu said...

ithuku than anna nan college key pokala

Anbu said...

இந்த கா. பா. விற்குள்ளும் ஒரு மிருகம் இருந்திருக்கு..

ஸ்வர்ணரேக்கா said...

இண்ட்ர்னல் ராகிங்..

முதல்ல உதைச்சிட்டு அப்பறம் தான் ஏன் எதுக்குன்னு கேப்பாங்களா... சரி தான்...

கண் தெரித்து, காது கேட்காம, யப்பா... பயங்கரமான கோஷ்ட்டி சண்டையா இருந்திருக்கே!!!


ஹுஸைனம்மா said...

எங்க காலேஜ்லயும் சில பிரச்னைகள் நடந்தது. அதிலே ரொம்பத் தீவிரமா நின்னவங்க நிறைய பேர், இப்ப கல்லூரி ஆசிரியர்கள்!! முற்பகல் - பிற்பகல்??!! :-)))))

svijayachitra said...

என்ன சார் எப்படி இருக்கீங்க? உங்களோட ராகிங் அனுபவம் படிக்க நல்லா தான் இருக்கும். ஆனா அனுபவிச்ச உங்களுக்கு எப்பிடி இருந்திருக்கும்.... ரொம்ப பாவம் நீங்க...
vijayachitra
kongu

Rathnavel Natarajan said...

வேதனையாக இருக்கிறது.

manjoorraja said...

ராக்கிங் என்பது மிகவும் கொடுமையான விசயம். அது ஒருகட்டத்தில் எந்த அளவிற்கு போகும் என்பதை பார்த்தால்.....

Anonymous said...

Anna its really koduma... neenga class la solirukinga.. but only few incidents.. aaaana ipa dhan full ah padichen.