September 20, 2011

அற்றைத் திங்கள் - அம்ஷன் குமார் சந்திப்பு

கடந்த 18-09-11 அன்று மாலை ஆறு மணிக்கு மதுரை மருத்துவக் கல்லூரி அரங்கத்தில் காலச்சுவடு மற்றும் கடவு இணைந்து நடத்தும் "அற்றைத் திங்கள்" கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மாத சிறப்பு விருந்தினராக திரைப்பட மற்றும் ஆவணப்பட இயக்குனரான அம்ஷன் குமார் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் ஆரம்பமாக அம்ஷன் குமார் பேசினார். அதன் பின்பாக அவருடைய படங்களில் இருந்து சில காட்சிகள் திரையிடப்பட்டன. இறுதியாக வாசகர்களுடனான கலந்துரையாடல் நடந்தது.



முதலில் அம்ஷன் குமாரின் உரை..

"என்னுடைய சொந்த ஊர் திருச்சி. சின்ன வயதில் இருந்தே வாசிப்பும் திரைப்படமும் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களாக இருந்தன. திருச்சியில் இருக்கக்கூடிய எல்லா நூலகங்களிலும் புத்தகங்களைத் தேடிதேடிப் படித்திருக்கிறேன். குறிப்பாக திரைப்படங்கள் சார்ந்த புத்தகங்களை விரும்பி வாசிப்பேன். வளர்ந்து வெகு நாட்களுக்கு ஏதும் இலக்கின்றி சுற்றித் திரிந்த பின்பு ஒரு வங்கிப்பணியில் சேர்ந்து சென்னை வந்து சேர்ந்தேன். இந்தக் காலகட்டத்தில், திரைப்படங்கள் தயாரிப்பு பற்றி நிறைய புத்தகங்கள் இருந்தாலும் ஒரு திரைப்படம் பார்ப்பது எப்படி, என்கிற ரசனை சார்ந்த புத்தகம் ஒன்றை நான் எழுதினேன்.

சில நாட்களுக்குப் பிறகு, என்னுடைய நண்பர் ஒருவர் தான் எடுக்கப் போகும் விளம்பரப் படம் குறித்து என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது நான் அவர் சொன்ன விளம்பரப்படத்தின் கதை அத்தனை நன்றாக இல்லை எனச் சொல்லி நானே ஒரு கருவைச் சொன்னேன். அதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த அவர் அந்தப்படத்தை என்னையே எடுத்துத் தரும்படி சொன்னார். ஏதோ ஒரு தைரியத்தில் நானும் ஒத்துக் கொண்டேன்.

அது விளம்பரப் படங்களுக்கு ரொம்பப் பெரிய மதிப்பு இருந்த காலம். என்னுடைய விளம்பரத்துக்கு .ஆர்.ரகுமான் தான் இசை. நான் ஏற்கனவே திரைப்படம் சார்ந்து நிறைய வாசித்து இருந்ததால் படத்தளத்தில் ஒளிப்பதிவாளரிடம் எல்லா விஷயங்களையும் சொல்லிக் கொண்டே இருப்பேன். கருவியின் கோணம் இப்படி இருக்க வேண்டும் அது இதுவென. அவருக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் வெறுமனே புத்தகத்தில் படித்தது நிதர்சனத்தில் உதவாது என்பதை நிரூபிப்பதாக ஒரு சம்பவம் நடந்தது.

படப்பிடிப்பின் முதல் நாள். அப்போது இருந்த வழக்கம என்னவெனில், முதலில் இயக்குனர் ஸ்டார்ட் எனச் சொல்ல வேண்டும். உடனே ஒளிப்பதிவு கருவியை ஒளிப்பதிவாளர் இயக்குவார். அப்போது ரன்னிங் என்று சொல்வார். பிறகு இயக்குனர் ஆக்ஷன் எனச் சொல்ல வேண்டும். எனக்கு இதெதுவும் தெரியாது. எடுத்தவுடனே ஸ்டார்ட், ஆக்ஷன் என்று சொல்ல ஒளிப்பதிவாளருக்குக் கடும் கோபம். பின்பு அந்த வழிமுறைகளை எல்லாம் வேகமாகக் கற்றுக் கொண்டேன். இப்படியாகத்தான் எனது திரையுலக அனுபம் ஆரம்பித்தது.

என்னுடைய விளம்பரங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று, அத்துறை என்னை இழுத்துப்போக, என்னால் முழுமையாக வங்கிப்பணியில் கவனம் செலுத்த இயலவில்லை. பொறுத்து பொறுத்துப் பார்த்த அவர்களும் சில நாட்களில் என்னைக் கூப்பிட்டுச் சொல்ல வேலையை விட்டு வெளியே வந்தேன். மீண்டும் விளம்பரப் படங்கள் எடுப்பதில் எனக்கு ஆர்வமில்லை. இந்த சமூகத்துக்குப் பயனளிக்கும் வகையில் ஏதெனும் செய்ய ஆசை. எனவே ஆவணப்படங்கள் எடுக்கத் துவங்கினேன்.

பொதுவாக என்னுடைய படங்களில் அரசியல் இருக்காது. ஆனால் நான் எடுப்பவை எல்லாமே மக்களின் வாழ்க்கை பற்றிய அரசியல் சார்ந்த படங்களாக, மக்களின் உள்ளத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான படங்களாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். புதிது புதிதான அனுபவங்களோடு இந்தப் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. என்னைப் பற்றி இத்தோடு போதும் என நினைக்கிறேன். அடுத்ததாக படங்களைப் பார்க்கலாம்.”

அடுத்ததாக அம்ஷன் குமார் இயக்கிய திரப்படங்களில் இருந்து சில காட்சிகள் திரையிடப்பட்டன. சுப்பிரமணிய பாரதி பற்றிய ஆவணப்படம், சாகித்ய அகாதெமி விருது பெற்ற அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடு பற்றிய அவரது அனுபவங்கள், சர்.சி.வி.இராமன், நவீன நாடகத்தில் புரட்சி செய்த பாதல் சர்க்கார் பற்றிய படம், கி.ராஜநாராயணனின்கிடைஎன்கிற சிறுகதையை ஒட்டி எடுக்கப்பட்டஒருத்தி”, தமிழ் நவீன கலை - சிற்பங்கள் பற்றிய படம் என ஆறு படங்களில் இருந்து சில காட்சிகள் திரையிடப்பட்டன. பிறகு அப்படங்கள் சார்ந்து வாசகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தப்பட்டது. அவற்றில் சில துளிகள்..

தமிழில் மாற்று சினிமாவுக்கான களம் இருக்கிறதா?

இல்லை. ஆங்காங்கே சில கீற்றுகள் நம்பிக்கை தந்தாலும் சமரசம் செய்து கொள்ளாமல் படம் எடுப்பது என்பது இன்னும் சாத்தியமாக வில்லை. நாம் இன்னும் வியாபார சினிமாவில்தான் இருக்கிறோம். இதோ - 2011 வந்தால் நம் தமிழ் சினிமாவுக்கு வயது நூறு ஆண்டுகள் ஆகப் போகிறது. 1914 இல் கீசகவதம் நம் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதுதான் உண்மையான துவக்கம். நிறைய பேர் காளிதாசன்தான் ஆரம்பம் எனச் சொல்லுவார்கள். அது சரி கிடையாது. நூறு ஆண்டுகள். நாம் என்ன சாதித்து இருக்கிறோம்? எல்லாரும் இரானியப் படம் அப்படி எடுக்கிறார்கள் என்றெல்லாம் பேசுகிறார்கள். அங்கே அந்தப் படங்களுக்கான சந்தை இருக்கிறது. மக்கள் பார்க்கிறார்கள். ஆனால் நம்மூரில் இது சாத்தியமா என்றால் இல்லை. மாற்று சினிமா என்பதற்கான களாம் இங்கே உருவாகவில்லை என்பதுதான் வருத்தத்தோடு ஒத்துக் கொள்ள வேண்டிய உண்மை.

பாரதி - அனுபவம் குறித்து? இந்த ஆவணப்படம் முதலில் வந்ததா அல்லது பாரதி திரைப்படமா?

முதலில் வந்தது இந்த ஆவணப்படம்தான். படத்தில் சில புனைவுகளும் இருந்தன. இந்த ஆவணப்படத்தில் வெகு அரிதான ஆவணங்களை எல்லாம் தேடி எடுத்து பயன்படுத்தி இருக்கிறோம். பாரதியார் கைது செய்யப்பட்டபோது பதிவு செய்த கோப்புகள், 1919 - 1921 வரை மூன்று வருட காலத்தில் எடுக்கப்பட்ட அவருடைய ஐந்து புகைப்படங்கள் என நிறைய விஷயங்கள். பாரதியை நேரில் பார்த்த, அவர் வாழ்ந்த கடையத்தில் இருந்த, மனிதரொருவரின் பேட்டியும் உள்ளது.

அசோகமித்திரனுடனான அனுபவம்?

அவர் தன்னுடைய பால்யத்தில் வாழ்ந்த ஹைதை நகரத்துக்குப் போய் எசுக்க வேண்டிய படம். நாற்பது ஐம்பது வருடங்கள் கடந்து விட்ட நிலையில் அவர் வசித்த ரயில்வே குடியிருப்பு நிறையவே மாறி இருந்தது. அவர் குடியிருந்த வீட்டைத் தேடிக் கண்டுபிடிக்கவே வெகு நேரமானது. படம் எடுக்கையில் அவர் அந்த வீட்டுக்கு உள்ளே போக மாட்டேன் எனச் சொல்லி விட்டார். தேவையில்லாத ஞாபகங்கள் வருமெனச் சொல்லி உள்ளே போகவேயில்லை. அவரோடு இருக்க முடிந்த காலங்கள் இனிமையானவை.

ஒருத்தி?

தமிழில் தலித்துகள் பற்றிய படங்கள் வந்தாலும் அவை மற்றவரின் பார்வையிலேயே வந்திருக்கின்றன. ஆனால் தலித்துகளின் பார்வையில் வரவில்லை. அப்படியானதொரு முயற்சியாகத்தான் ஒருத்தியை எடுத்தேன். முதல் வாரம் சத்யத்தில் ஹவுஸ்ஃபுல்லாகப் போனாலும் புதுப் படங்கள் வந்ததெனத் தூக்கி விட்டார்கள். அது முதல் திரைப்பட விழாக்கள், கல்லூரி நிகழ்வுகள் எனத் தொடர்ச்சியாகப் போய்க் கொண்டிருக்கிறது.

தற்போது நீங்கள் பணிபுரியும் படம்?

மணக்கால் எஸ். ரங்கராஜன் என்றொரு கர்நாடக இசைக்கலைஞர். அற்புதமாகப் பாடக்கூடியவர்.ஆனால் அவருக்கானசரியான அங்கீகாரம் வழங்கப்படவில்லை. அவரைப் பற்றித்தான் தற்போது ஆவணப்படம் எடுக்கிறேன்.

தொடர்ச்சியாக தனிப்பட்ட முறையிலும் அம்ஷன் குமார் அவர்களுடன் வாசகர்கள் உரையாடிப் போக நிகழ்வு நிறைவு பெற்றது.

3 comments:

Rathnavel Natarajan said...

அருமையான அனுபவப் பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

aotspr said...

மிகவும் அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்......

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

சித்திரவீதிக்காரன் said...

ஞாநியின் அற்றைத்திங்கள் நிகழ்வுக்கு வந்தது தான். அதற்கடுத்து பல முறை முயற்சித்தும் வர முடியவில்லை. இம்முறை எப்படியும் வர விரும்புகிறேன். நல்ல பகிர்வு. நன்றி