July 13, 2010

கருணை மனசு..!!!

சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன். கிளம்பத் தயாராக இருந்த அந்த மின்தொடர் வண்டியின் ஜன்னலோர சீட்டில் அவன் உட்கார்ந்து இருந்தான். தினமும் அந்த வழித்தடத்தில் சென்று வருபவன். எப்போதும் கூட்டத்தில் தொங்கிக் கொண்டேதான் போக வேண்டும். இன்றைக்கு ஏதோ அதிசயமாக உட்கார இடம் கிடைத்து இருந்தது. அதுவும் ஜன்னலோரமாக..

இது போன்ற சின்ன சின்ன சந்தோஷங்களில்தான் நடுத்தர மனிதர்களின் வாழ்க்கை ருசிக்கிறது. அவனுக்கு மனசுக்கு ரொம்ப நிறைவாக இருந்தது. சுற்றி நின்று கொண்டிருந்தவர்களை சற்றே பெருமையாகப் பார்த்துக் கொண்டான். எல்லோரும் நிற்கிறார்கள்.. நான் இன்றைக்கு உட்கார்ந்து இருக்கிறேன்..

ரயில் கிளம்பி விட்டிருந்தது.

"இந்தக் காலத்துல யாரை சார் நம்ப முடியுது? நல்ல மனுஷங்களைப் பார்க்கவே முடியுறதில்ல.. என்னமோ போங்க.." எதிர் சீட்டு மனிதர் பக்கத்தில் இருந்தவரிடம் புலம்பிக் கொண்டிருந்தார்.

அவன் சிரித்துக் கொண்டே வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தவனாக, அதிகாலையின் காற்று வேகமாக முகத்தில் மோதுவதை ரசிக்கத் தொடங்கினான். வண்டி ஒரு சின்ன ஸ்டேஷனில் நின்று கிளம்பியது. சிறிது நேரம் கழித்து அந்தப் பாட்டு கேட்டது.

"பழம் நீயப்பா..." உடைந்த குரலைக் கேட்டு திரும்பிப் பார்த்தான். கூட்டத்தின் ஊடாக பாடிக் கொண்டே ஒரு கிழவி.... கிழிந்து போன ஒரு சேலையை உடம்போடு போர்த்தி இருந்தாள். கையில் ஒரு அழுக்கு மூட்டை. எண்ணைப் பிசுக்கேறிய தலை. குழி விழுந்த கண்கள். ஒட்டிய வயிறும் வற்றிய நெஞ்சுமாக அவளைப் பார்க்கவே பாவமாக இருந்தது.

அவனுக்கு அவளைப் பார்க்க பார்க்க மனதை ஏதோ செய்தது. அவளுக்கு உதவ வேண்டும். ஆனால்..

கிழவிக்குப் பணம் தர வேண்டுமெனில் அவன் எழுந்து அவளருகே போக வேண்டும். எழுந்தால் இந்த இடம் அவனுக்கு மீண்டும் கிடைக்காமல் போகக்கூடும். ஏதோ ஒரு நாளைக்கு அதிசயமாகக் கிடைத்த இடம். அதை இழக்கவும் மனமில்லை. அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

பாடிக் கொண்டே கிழவி அவன் இருந்த இடத்தை நெருங்கி விட்டிருந்தாள். அவனுக்கு ஒரே குழப்பம். இடமா? இல்லை அவளுக்கு உதவுவதா? சுற்றிப் பார்த்தான்.

எல்லாரும் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். யாரும் அந்தக் கிழவியைக் கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லை. நான் மட்டும் ஏன்? சரி.. நாளைக்கும் இந்த வண்டியில் வர மாட்டாளா? அப்போது பார்த்துக் கொள்வோம். பெரிதாக உதவி செய்வோம். தன்னைத் தானே சமாதானம் செய்தவனாக கவனத்தை வெளியே திருப்ப முயன்றான். ஆனால் முடியவில்லை. கிழவியின் தீனமான குரல் அவன் உள்ளே புகுந்து மனத்தைக் குடைந்தது. இப்போது என்ன செய்வது?

சட்டென்று எழுந்தான். பாக்கெட்டில் கையை விட்டு பத்து ரூபாயை எடுத்தான். அவளருகே போய் கைகளில் கொடுத்தான்.

"மகாராசா.. என்னைப் பெத்த ஐயா.. நீ நல்லா இருக்கணும்.."

திரும்பிப் பார்த்தான். அவன் உட்கார்ந்த இடத்தில் யாரும் உட்காரவில்லை. நிம்மதியாக இருந்தது. மீண்டும் போய் உட்கார்ந்து கொண்டான். எதிர் சீட்டில் இருந்தவர் சிரித்தபடியே அவனிடம் சொன்னார்..

"உங்களுக்கு ரொம்ப கருணை மனசு சார்.."

அவன் அவரைப் பார்த்து சிரித்துவிட்டு தலையைக் குனிந்து கொண்டான்.

July 12, 2010

மெட்ராசப்பட்டிணம் - தமிழில் ஒரு "டைட்டானிக்" முயற்சி..!!!

ரொம்ப நாளைக்குப் பிறகு தமிழில் ஒரு அட்டகாசமான காதல் படம். (நண்பர்கள் மன்னிக்கவும்.. எனக்கு வி.தா. பிடிக்கவில்லை..) சுதந்திரத்துக்கு முந்தைய மெட்ராஸில் நடக்கும் ஒரு காதல் கதையை ரொம்பவே அழகாக சொல்லி இருக்கிறார்கள். "சர்வ" நாசத்திற்கு பிறகு ஆர்யா நடித்து இருக்கும் படம். கிரீடம், பொய் சொல்லப் போறோம் போன்ற படங்களை தந்த விஜய் இயக்கியிருக்கிறார். கல்பாத்தி.எஸ்.அகோரத்தின் தயாரிப்பு.



2010 - லண்டன். எப்போதோ தலையில் பட்ட அடியால் கோமா நிலைக்கு போகவிருக்கும் வயதான ஏமி, அவசரமாக இந்தியாவுக்குப் போக வேண்டும் என்கிறார். தன்னுடைய பேத்தியுடன் சென்னைக்கு வருகிறார். அங்கே பரிதி என்றொரு மனிதரைத் தேடுகிறார்கள். யார் அவர்? சாகும் தருவாயில் ஏமி ஏன் பரிதியைத் தேட வேண்டும்? கதை 1945-க்கு தாவுகிறது. சாதாரண சலவைத் தொழிலாளி பரிதி. மதராசப்பட்டிணத்தின் கவர்னரின் மகள் ஏமி. இருவருக்கு உள்ளும் காதல் நுழைகிறது. ஆனால் நாட்டின் சுதந்திரமும், விதியும் அவர்களைப் பிரிக்கின்றன. பரிதியின் உயிரைக் காப்பாற்ற அவனைப் பிரிகிறாள் ஏமி. தன்னிடம் பரிதி கொடுத்த தாலியைத் தான் இறப்பதற்குள் திருப்பித் தந்து விட வேண்டும் என்ற காரணத்திற்காகவே ஏமி சென்னைக்கு வந்து இருக்கிறார். அவருடைய ஆசை நிறைவேறியதா? ஏமியைப் பிரிந்த பிறகு பரிதி என்ன ஆனான்? இருவரும் சந்தித்தார்களா? படத்தப் பாருங்கப்பா..



கட்டுமஸ்தான உடம்போடு கிண்ணென்று ஆர்யா. அலட்டிக் கொள்ளாமல் நச்சென்று நடித்து இருக்கிறார். சுதந்திர தின இரவில், தன்னிடம் இருந்து பிரிந்து விட்டதாக எண்ணிய நாயகியை ரயில் நிலையத்தில் பார்த்தவுடன் மனிதருக்கு ஒரு சந்தோசம் கண்களில் மின்னுகிறது பாருங்கள்.. கிளாஸ். அதிசயமாக ஆர்யாவுக்கு நகைச்சுவைக் காட்சிகளும் அருமையாக சூட் ஆகின்றன. நல்ல வேளையாக ஆர்யாவை தாத்தா வேஷம் போட்டெல்லாம் காட்டவில்லை. யாருப்பா இந்த ஏமி ஜாக்சன்? எங்கய்யா பிடிச்சீங்க?கொஞ்சம் சதை போட்ட லிசாரே மாதிரி கும்மென்று இருக்கிறார். காலைப்பனியில் நனைந்த ரோஜா போல அத்தனை அழகு. சந்தோசம், வெட்கம், சோகம், அழுகை என எல்லாமும் ரொம்ப நேர்த்தியாக... பட்டையைக் கிளப்பி இருக்கிறார்.



வில்லன் ராபர்ட் எல்லீசாக வருபவரும், ஆர்யாவின் நண்பர்களாக வருபவர்களும் நன்றாக நடித்து இருக்கிறார்கள். குஸ்தி வாத்தியாராக வருகிறார் நாசர். சலவைத் தொழிலாளர்களின் தலைவராக பாலாசிங். நிறைவு. கார் டிரைவராக வரும் ஜீவாவும், உதவி செய்வதாக பணம் பிடுங்கும் அவருடைய பாசாக வருபவரும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்கள். ஆனால் எல்லோரையும் தூக்கி சாப்பிடுபவர் மொழி பெயர்ப்பாளராக வரும் காலம் சென்ற வி.எம்.சி.ஹனீபா தான். மனிதர் பட்டையைக் கிளப்பி இருக்கிறார். தத்தக்க புத்தக்க என்று அவர் மொழி பெயர்க்கும் அழகும், சிக்கலான கட்டங்களில் அவருடைய உடல்மொழியும்.. அதகளம் பண்ணுகிறார். வி வில் மிஸ் யு சார்..



நிஜமும் நினைவுகளும் என மாறி மாறிப் பயணிக்கிறது படம். முதல் பாதி முழுக்க சிரிப்பு, இரண்டாம் பாதி செண்டிமெண்ட் என பக்காவான திரைக்கதை. படத்தில் மனத்தைக் கவரும் முக்கியமான காட்சிகள் சில..

--> சிறையில் இருந்து தங்களைக் காப்பாற்றிய ஏமிக்கு நன்றி சொல்ல ஆர்யாவும், அவருடைய நண்பர்களும் ஆங்கிலேயர்களின் பங்களாக்குள் நுழைவதும்.. அதனைத் தொடரும் நகைச்சுவைக் காட்சிகளும்..

--> வெள்ளையனோடு ஆர்யா குஸ்தியில் மோதும்போது எம்.எஸ்.பாஸ்கர் சொல்லும் வசனம்.."நானூறு வருஷம் கழிச்சு இப்போத்தாண்டா திருப்பி அடிக்கிறோம்.."

--> வாத்தியாரிடம் ஆர்யாவும் நண்பர்களும் ஆங்கிலம் கற்கும் காட்சி

--> போட்டோக்களை அன்பளிப்பாகத் தரும் ஏமிக்கு திருப்பித்தர தன்னிடம் ஏதுமில்லை என்னும் ஆர்யாவிடம், ஏமி தாலியைக் கேட்பது..

--> ஆர்யாவைக் காப்பாற்ற நண்பர்கள் உயிர் இழக்கும் காட்சிகள்..

--> கடைசியாக, கூவம் ஆற்றில் ஏமி ஆர்யாவைப் பிரிவது..



படத்தில் ரவுண்டு கட்டி அடித்து இருப்பவர்.. கலை இயக்குனர் செல்வக்குமார். சுதந்திரத்துக்கு முந்தைய சென்னை சென்றல் ஸ்டேஷன், அதனை ஒட்டி ஓடும் கூவம் ஆறு, டிராம் வண்டிகள், கார்கள், பழைய டோபிகானா,அந்தக் காலத்து விளம்பரங்கள் மற்றும் தியேட்டர்களின் பெயரைப் பயன்படுத்தி இருப்பது என ரசித்து ரசித்து பண்ணி இருக்கிறார். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு அம்சம். ஜி.வி.பிரகாசின் இசையில் பூப்பூக்கும் தருணம், வா வா துரையம்மா, மேகமே ஆகிய பாடல்கள் அருமை. பின்னணி இசையிலும் பின்னி இருக்கிறார். ஆனால் மனிதர் காப்பி அடிப்பதை குறைத்துக் கொள்வது நலம். படத்தின் தீம் ம்யூசிக் பழைய "Mr .India" ஹிந்திப்படத்தை நினைவூட்டுகிறது. அதே போல ரகுமானிடம் இருந்தும் நிறைய இசைக்கோர்வைகளை சுட்டு பயன்படுத்தி இருக்கிறார். திருந்துங்க பாஸ்..



கடைசியாக இயக்குனர் விஜய்.. கையக் கொடுங்க சார்.. காதலர்கள் ரெண்டும் பேரும் பிரிஞ்சு போறப்ப பாக்குற நமக்கு மனசு வலிக்குது பாருங்க.. அதுதான் இயக்குனருக்கான வெற்றி.. இந்த மாதிரியான மனதை வருடிச் செல்லும் காதலைப் பார்த்து ரொம்ப நாளாச்சு.. வித்தியாசமான களம்.. ரொம்பவே மெனக்கெட்டு செஞ்சிருக்கார் விஜய்.. கடுமையாக உழைத்து இருப்பதற்கு கண்டிப்பாக பலன் கிடைக்கும்.

பின்குறிப்பு : படம் முடிஞ்சு வெளில வந்து யோசிச்சுப் பார்த்தாதான் தெரியுது.. இது அப்படியே டைட்டானிக் இல்ல? மேல்தட்டுப் பொண்ணு.. கீழ்த்தட்டுப் பையன்.. பொண்ணுக்கு நிச்சயம் பண்ணி இருக்கிற ஒரு கடுவன் பூனை வில்லன்.. அங்க கப்பல்.. இங்க சுதந்திரம்.. பிரிவு.. அட ஆமாம்? அதனாலென்ன.. ஒரு நல்ல படம் எடுக்கணும்னா எதுவும் தப்பில்ல..:-)))

மதராஸப்பட்டிணம் - காதல் நகரம்

July 8, 2010

ரிக்சா..!!!

மதுரையின் ஜன சந்தடி மிகுந்த பைபாஸ் சாலை. டர்ர் பர்ர் என சீரியவாறே விரைந்து ஓடிக் கொண்டிருந்த வாகனங்களில் எல்லாம் தங்களுடைய மறுநாள் கவலைகளில் ஆழ்ந்து கிடந்த மனிதர்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த சாலை விளக்குகள் அமந்து அமந்து எரிந்து கொண்டிருந்தன.

சாலையின் ஓரமாக அவன் இருட்டின் நிழலுக்குள் நின்றிருந்தான். காலடியில் ஒரு பெரிய சூட்கேஸ். ரொம்ப நேரமா எந்த ஆட்டோவும் வரலியே? இப்போ எப்படி வீட்டுக்குப் போறது? அப்போதுதான் அந்தப் பெரியவர் ரிக்சாவை மிதித்தபடி அவனைக் கடந்து போனார்.

"ஐயா.."

அவர் நின்று திரும்பிப் பார்த்தார்.

"சவாரி வர்றீங்களா?"

"எங்க தம்பி.."

"பி.ஆர்.சி வரைக்கும போகணும்.. பாலத்துக்கு முன்னாடியே.."

"சரி தம்பி.. ஏறுங்க.."

சூட்கேசை தூக்க தூக்க முடியாமல் தூக்கி வண்டிக்குள் வைத்து விட்டுத் தானும் ஏறிக் கொண்டான். அவரும் ரிக்சாவை ஏறி மிதிக்கத் தொடங்கினார். அவனால் இப்போது அந்தப் பெரியவரை முதுகுப் பக்கமிருந்து அருகாமையில் நன்றாகப் பார்க்க முடிந்தது.

பரட்டைத்தலை. வற்றிப்போன முகம். ஒடுங்கிய தேகம். குச்சி குச்சியாக கைகால்கள். ஆனால் வெகு இலகுவாக ரிக்சாவை மிதித்துக் கொண்டிருந்தார். ஆடைகள் அணிய வேண்டுமே என்பதற்காக பெயருக்கு இருந்தன. சாயம் போன சிவப்பு நிறத்தில் ஒரு அரைக்கை சட்டை. அதை தோள் வரை மடித்து விட்டிருந்தார். அதன் முனையில் எட்டிப்பார்த்த கசங்கிய ஐந்து ரூபாய் நோட்டு. தொடை வரை ஏற்றிக் கட்டியிருந்த கைலி ஓரங்களில் நைந்து கிடந்தது.

"அடடா அடடா அடடா.. என்னை ஏதோ செய்கிறாய்.."

அவன் கலைந்தான். ஒலித்த அலைபேசியை எடுத்து காதில் வைத்தான்.

"சொல்டா மாப்ள.. இப்போத்தான் ஊர்ல இருந்து வரேன்.. வீட்டுக்குப் போய்க்கிட்டு இருக்கேன். போயிட்டு கூப்பிடட்டுமா? ஓகே டா.. பை.."

போனை பாக்கெட்டுக்குள் வைத்தவாறே பெரியவரிடம் கேட்டான்.

"ரிக்சா இப்பவெல்லாம் ஓட்டம் இருக்காண்ணே?"

அவன் கேட்பதற்காகவே காத்திருந்தது போல அவர் பேசத் தொடங்கினார்.

"எங்க தம்பி.. முன்ன மாதிரி இல்ல.. இப்போ யாரு தம்பி இதுல எல்லாம் ஏறுறா? முந்தி எல்லாம் ஒரு நாளைக்கு முன்னூறு நானூறு ரூபாய்க்கு எல்லாம் ஓட்டுவேன். இன்னைக்கு நூறு ரூபா சம்பாதிக்கிறதே குதிரைக் கொம்பா இருக்கு.."

"ஏண்ணே.. ஸ்கூல் பிள்ளைங்க எல்லாம் வருவாங்களே?"

"அடப் போங்க தம்பி.. நம்ம வீட்டுப் பிள்ளைங்களே ஸ்கூலுக்கு ரிக்ஷாவுல போகலாம்னு சொன்னா வர மாட்டேங்குதுங்க.. அதெல்லாம் கவுரவக் குறைச்சலாம்.. அப்புறம் எங்கிட்டு மத்த பிள்ளைங்க வர்றது?"

"..."

வண்டி மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. அவன் அமைதியாக இருந்தான். அவர் தொடர்ந்தார்.

"இந்தா.. எஸ்.எஸ்.காலனி வாசல்ல ஒரு பேன்க் இருக்குல்ல.. அங்கதான் நிப்பேன்.. ஏதோ தெரிஞ்சவங்க நாலஞ்சு பேரு வந்து போறதால பொழப்பு ஓடிக்கிட்டு இருக்கு.. ஒரு நாளைக்கு நூத்தம்பது எரநூருன்னு வரும்.. இன்னொரு நாளைக்கு பத்து ரூபா கூட கிடைக்காது.. ஏதோ நமக்கு வாச்சவ நல்லவ.. குடும்பத்த நல்லபடியா கொண்டு வந்துட்டா.. புள்ளைங்க வளந்து நம்ம கஷ்டத்த கொஞ்சம் குறைச்சுட்டதால பெரிசாத் தெரியல.. நமக்கும் தண்ணி தம்முன்னு எந்தப் பழக்கமும் இல்லாததால ஏதோப் போய்க்கிட்டு இருக்கு..கடைசி வரைக்கும் உழைச்சுக்கிட்டே இருந்துட்டு யாரையும் தொந்தரவு பண்ணாம போய் சேர்ந்திடனும்.. அவ்வளவுதான் .."

"நேர்மையா வாழணும்னு நினைக்கிறீங்க பாருங்க.. நல்லாத்தாண்ணே இருப்பீங்க.."

பேசிக்கொண்டே வந்ததில் அவன் வீடு இருந்த சந்து வந்து விட்டிருந்தது. சந்தின் முக்கில் இருந்த டீக்கடை ரேடியோ நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு என்று அலறிக் கொண்டிருந்தது.

"ஐயா.. வலது பக்கமாக திரும்பிக்கோங்க.."

மெதுவாக ஒடித்து திருப்பினார்.

"அந்தா.. அந்தக் கடைசி வீடுதான்.."

ரிக்சா ஊர்ந்து போய் வீட்டின் முன்பாக நின்றது. அவன் சூட்கேசை எடுத்துக் கொண்டு இறங்கினான்.

அந்தப் பெரியவர் இறங்கி அவன் முன்னே வந்தார். முகம் எல்லாம் வியர்த்துக் கிடந்தது. துணியால் துடைத்தபடியே வந்தவரிடம் அவன் தன்னுடைய பர்சைப் பிரித்து இருபது ரூபாயை எடுத்துக் கொடுத்தான்.

"தம்பி.."

"என்ன?"

"கிட்டத்தட்ட மூணு கிலோமீட்டர்.. மிதிச்சு வந்திருக்கேன்.. கொஞ்சம் பார்த்து போட்டுக் கொடுங்க.."

அவன் முகம் இறுகியது.

"ஐயய.. இது என்ன.. உங்க வண்டில ஏறி உங்க கூட பேச்சு கொடுத்தது தப்பாப் போயிரும் போல இருக்கே? இந்தா இருக்கிற வீட்டுக்கு வந்ததுக்கு இருபது ரூபாய்க்கு மேலயா தர முடியும்? ஆட்டோவுல வந்தாலே முப்பது ரூபாதான.. ஏதோ போனாப் போகுதுன்னு உங்க ரிக்ஷால வந்தா.. ரொம்பப் பேசறீங்களே.. இந்தாங்க இந்தாங்க.. வாங்கிட்டுக் கிளம்புங்க.."

அவர் பாவமாக அவனைப் பார்த்தார். அவன் முகத்தை எங்கோ திருப்பிக் கொண்டான். அவர் பணத்தை வாங்கி பைக்குள் வைத்துக் கொண்டார். சோர்ந்து போனவராக ரிக்சாவில் ஏறி அமர்ந்து மிதிக்கத் தொடங்கினார். கொஞ்சம் கொஞ்சமாக ரிக்சா இருளுக்குள் மறைந்து போனது.

July 7, 2010

அம்பாசமுத்திரம் அம்பானி..!!!

நடிகனுக்காகப் படமில்லை, படத்துக்காகத்தான் நடிகன் என்று எப்போ முதலாளிகளும், இயக்குனர்களும் நினைக்க ஆரம்பிக்கிறாங்களோ அப்போத்தான் தமிழ் சினிமா உலகம் உண்மையா முன்னேறும் - இது இப்போ யாரோ சொன்னது கிடையாது.. கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு முன்பு டி.எஸ்.பாலையா சொன்னது (உபயம்:ஆ.வி பொக்கிஷம்). ஆனா இதை யாராவது கேக்குறாங்களா என்ன? கதாநாயக நடிகர்களின் பின்னால் அலைந்து கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் எப்போதாவது ஒரு சில படங்கள் கதையையும், திரைக்கதையும் நம்பி வருவதுண்டு. அந்த வகையில் "திண்டுக்கல் சாரதி"யின் வெற்றியைத் தொடர்ந்து வெளிவந்திருக்கும் கருணாசின் அடுத்த படம்தான் "அம்பாசமுத்திரம் அம்பானி". கென் மீடியா தயாரிப்பு.


சின்ன வயதிலேயே வறுமையின் காரணமாக தன்னுடைய தாயைப் பறிகொடுக்கிறான் தண்டபாணி. பணம் சம்பாதிக்கும் வெறியோடு சென்னைக்கு வருகிறான். அவனுடைய ஆசை எல்லாம் வசந்த்&கோ போல தண்டபாணி&கோ என்றொரு நிறுவனத்தின் அதிபராவதுதான். அண்ணாச்சி என்னும் பெரிய மனிதரின் உதவியோடு சொந்தமாக ஒரு பேப்பர் ஏஜன்சி வைக்கும் அளவுக்கு வாழ்வில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுகிறான். அதே அண்ணாச்சி கட்டும் புதிய காம்ப்ளக்சில் தனக்கும் ஒரு கடையை வாங்கி விட வேண்டும் என்று படாதபாடுபடுகிறான். நடுவில் அவன் வாழ்க்கையில் காதலும் வருகிறது. கடைசியில் தண்டபாணியின் கனவு பலித்ததா? என்ன மாதிரியான பிரச்சினைகளை அவன் சந்திக்கிறான்? அவனால் கடையை வாங்க முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை.


கதையின் நாயகனாக கருணாஸ். தனக்கு பொருந்தக் கூடிய கதாபாத்திரங்களாக தெரிவு செய்து நடிக்கிறார். அதற்கே மனிதரைப் பாராட்ட வேண்டும். இயல்பாக வரும் நகைச்சுவைக் காட்சிகளில் நம்மைக் கவர்பவர், கடைசி காட்சியில் கனவுகள் எல்லாம் கலைந்து போன நிலையில் அழுது புலம்பும் காட்சியில் மனத்தைக் கலங்கடிக்கிறார். தான் நம்பிய சிறுவனே தன்னை அடித்துப் போட்டு பணத்தை பறித்துக் கொண்டு ஓடும் காட்சியிலும் கருணாஸின் நடிப்பு அபாரம். பாடல்களில் அவர் ஆடி இருக்கும் ஆட்டம் அட்டகாசம். அரசாங்கம் படத்தில் விஜயகாந்தை காதலித்த நவ்நீத் கவுர் இந்தப் படத்தில் கருணாசின் ஜோடி. நன்றாக வளர்ந்து ஓங்கு தாங்காக இருக்கிறார். வஞ்சனை இல்லாமல் தாராளமாகக் காமிக்கிறார். படத்துக்கு தேவையான நடிப்பும் இருக்கிறது. தமிழ்ப்பட நாயகிக்கு இது போதாதா?


அண்ணாச்சியாக கோட்டா சீனிவாச ராவ். அவருடைய மகனாக சேரன்ராஜ். நல்லவர்களுக்கு நல்லதுதாண்டா செய்வோம் என்று சொல்லும் இருவருமே நன்றாக நடித்து இருக்கிறார்கள். நாயகியின் அப்பாவாக மறைந்த வி.எம்.சி.ஹனீபா. மனிதர் கடைசியாக நடித்த படம். ஆள் ஏற்கனவே உருகிப்போய் தான் இருந்திருக்கிறார். கடைசிப் படத்தில் இறந்து போன பிணமாகவே நடித்து இருப்பது பெரிய சோகம். கருணாசின் கூடவே இருந்து கழுத்தை அறுக்கும் சிறுவனாக வரும் ஷங்கர், தப்பாக ரீசார்ஜ் பண்ணிய பாவத்துக்காக ஊர் தாண்டி ஊர் வந்து செல்லில் பேசிப் போகும் மயில்சாமி, வீட்டு ஓனராக வரும் டெல்லி கணேஷ், நாயகியை ஒருதலையாகக் காதலிக்கும் லிவிங்க்ஸ்டன் என எல்லோரும் கதையை முன்னகர்த்தி செல்ல பயன்பட்டு இருக்கிறார்கள்.

பாடல்களுக்கு இசை அமைத்து இருப்பவரும் கருணாஸ்தான். "பூப்பூக்கும் தருணம்" பாட்டும், "ஒத்தக்கல்லு" பாட்டும் கண்டிப்பாக ஹிட்டாகும். குறிப்பாக ஒத்தக்கல்லு பாட்டில் ரகசியாவின் நடனம்.. அடேங்கப்பா. பார்மேஷன்கள் எல்லாமே தூள். அதே போல செல்போனில் காட்சிகள் மாறுவது போல படமாக்கப்பட்டு இருக்கும் "பூப்பூக்கும்" பாட்டும் ரசிக்க வைக்கிறது. இரண்டு பாடல்களையுமே பட்டாசாக படம் பிடித்து இருக்கிறார்கள். நடனம் அமைத்து இருக்கும் ஸ்ரீதருக்குப் பாராட்டுகள். பின்னணி இசை - சபேஷ் முரளி. ஜோக்குக்கெல்லாம் "டோயிஈஈ.. டின் டின் டின் டின்" என்று அடிக்கும் எஸ்.ஏ.ராஜ்குமார் காலத்து இசையை எல்லாம் என்றைக்குத்தான் மறப்பார்களோ? ஒளிப்பதிவு செய்திருக்கும் புலித்தேவனும், எடிட்டிங்கில் வி.டி.விஜயனும் படத்துக்கு வேண்டியதை நிறைவாக செய்திருக்கிறார்கள்.


கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் ராம்நாத். கதைக்காகப் பெரிதாக மெனக்கெட வில்லை. சப்பை கதைதான். ஆனால் அதை சொன்ன விதத்தில் ரசிக்க வைக்கிறார். முதல் பாதி முழுக்க குட்டி குட்டி ஜோக்குகள். துண்டு துண்டாக காட்சிகள் இருந்தாலும் போரடிக்காமல் போகிறது. இரண்டாம் பாதி ஆரம்பத்தில் கொஞ்சம் ஜவ்வடித்தாலும் சற்று நேரத்தில் சென்டிமென்டலாக பிக்கப் ஆகி விடுகிறது. ஆரம்பத்தில் வரும் டீக்கடை காட்சியை படத்தின் கிளைமாக்சில் கொண்டு வந்து இணைப்பது இயக்குனரின் சாமர்த்தியம். நெகட்டிவ்ஸ்? குடும்பத்தோடு பார்க்கக்கூடிய ஒரு படத்தில் தேவை இல்லாமல் குல்பி காட்சிகள் மூலம் கவர்ச்சியைத் திணித்து இருப்பதுதான் எரிச்சல். அதேபோல அடுத்து வரும் காட்சிகளை நாம் முதலிலேயே கணித்து விட முடிவதும் மைனஸ்தான். இருந்தாலும் ஒரு நீட்டான பொழுதுபோக்கு படத்தைத் தந்ததற்காக இயக்குனருக்குப் பாராட்டுகள்.

அம்பாசமுத்திரம் அம்பானி - மனதை அள்ளிக் கொள்கிறான்

June 29, 2010

உக்கார்ந்து யோசிச்சது(29-6-10)..!!!

உங்களோட பைக்க ஜம்முனு ஓட்டிக்கிட்டு, நீங்க பாட்டுக்கு ரோட்டில ஜாலியா போய்க்கிட்டு இருக்கீங்கன்னு வச்சுக்கோங்க.. திடீர்னு உங்க பக்கத்துல வந்த ஒருத்தன், உங்களுக்கு யாருன்னே தெரியாத ஆளு.. "ஏண்டா டேய்.. உனக்கெல்லாம் அறிவே கிடையாதா"ன்னு சம்பந்தமே இல்லாம திட்டினா எப்படி இருக்கும்? ரெண்டு நாளைக்கு முன்னாடி இதேதான் எனக்கு நடந்துச்சு. சாயங்கால நேரம். கல்லூரி முடிஞ்சு வீட்டுக்கு வந்துக்கிட்டு இருக்கேன். மேலமாசி வீதி. செமையான டிராபிக். சர்க்கஸ் மாதிரி வண்டி ஓட்டிக்கிட்டு இருக்குறப்ப திடீர்னு எனக்கு இடது பக்கத்துல இருந்து அந்தக் குரல் வந்தது.

"நீயெல்லாம் சோத்துல உப்பு போட்டுத்தானடா தின்ற?"

எவன்டா அவன்னு திரும்பிப் பார்த்தா.. புல்லட்டுல கெடா மாடு மாதிரி ஒருத்தன். சட்ட பேண்ட் எல்லாம் போட்டு நல்லா டீசண்டா இருக்கான். எனக்கு ஒரே குழப்பம். நமக்கு இவன யாருன்னே தெரியலையே.. எதுக்கு நம்மளத் திட்டுறான்? அவன் மறுபடி திட்டுனான்..

"நான் சொல்ல சொல்ல கேக்காம திரும்பத் திரும்ப பேசாதடா.. அறிவு கெட்ட நாயே.. வகுந்துபுடுவேன்.."

எனக்கு வவுத்துல புளியைக் கரைக்குது.. யேண்டா.. நான் எங்கடா பேசுனேன்? அப்போத்தான் திடீர்னு அது தோணுச்சு. ஒருவேளை அப்படி இருக்குமோ? மெதுவா வண்டிய சுலோ பண்ணி அவனுக்கு இடது பக்கம் வந்தா.. நான் எதிர்பார்த்த மாதிரியே.. அவன் காதுல ப்ளூடூத் இயர்போன். அட நாசமாப் போறவனே.. நீங்க எல்லாம் திருந்தவே மாட்டிங்களா? இந்த மொபைல வச்சுக்கிட்டு இவனுங்க பண்ற அழிச்சாட்டியம் தாங்க முடியலடாயப்பா..

***************

ராவணன் வெளியான தினம். மதியம் மூன்று மணி போல "indiaglitz" இணையதளத்தில் படத்தைப் பற்றிய விமர்சனம் வெளியாகி இருந்தது. எப்போதும் ஈத்தரைப் படத்தைக் கூட நன்றாக இருக்கிறது என்று சொல்பவர்கள், ஈவு இரக்கமே இல்லாமல் இந்தப் படத்தை அடித்துக் கிழித்துக் காயப் போட்டிருந்தார்கள். திரை அரங்குக்குப் போய் நேரத்தை வீணாக்க வேண்டாம், வீட்டில் டிவியில் போடும்போது பார்த்துக் கொள்ளுங்கள் என்று எழுதி விட்டு "பத்து தலை கருமாந்திரம்" (Ten headed downer) என்கிற அர்த்தத்தில் பன்ச் வேறு கொடுத்து இருந்தார்கள். ஆனால் அன்றைக்கு இரவே அந்த விமர்சனம் மாற்றப்பட்டது. படத்தை பற்றிய பல நெகட்டிவான விஷயங்கள் மாயமாக மறைந்து போயின. கடைசி வரிகள் மாற்றப்பட்டு, பன்ச்சும் "பத்து வித குணாதிசயங்கள்" (Ten headed personna) என்கிற ரீதியில் மாற்றப்பட்டது. எப்படி இது சாத்தியம்? பணம் பத்தும் செய்யும் என்பது இதுதானோ?

***************

ஞாயிற்றுக்கிழமை நண்பரை பார்ப்பதற்காக அவருடைய நெட் சென்டருக்குப் போயிருந்தேன். வாசலில் இரண்டு பெண் பிள்ளைகள். அதிகபட்சம் போனால் ஏழாவது இல்லை எட்டாவது படித்துக் கொண்டிருக்கலாம். பதட்டமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

"இங்க பாருடி.. அவனுக்காகத்தான் வீட்டுல பொய் சொல்லிட்டு வந்தேன்.. அவன் வரலைன்னா எப்படி.. கண்டிப்பா வரச் சொல்லுடி.."

"சரிடி.. சொல்றேன்.. பொறுமையா இரு.."

அடுத்தவள் மொபைலை எடுத்து பேசத் தொடங்கினாள். பார்த்துக் கொண்டிருந்த எனக்கு மண்டை காய்ந்து போனது. இந்த சின்ன வயசில் இப்படியா? இவர்கள் பெற்றோர்கள் இவர்கள் மேல் எத்தனை நம்பிக்கை வைத்து இருப்பார்கள்? சின்னப் பிள்ளைகள் இப்படி சீரழிவதற்கு யாரைக் குற்றம் சொல்வது? ஒண்ணுமே புரியல போங்க..

***************

சம்பத்தின் "இடைவெளி" நாவலை அனுப்பித் தந்த நண்பர்கள் சென்ஷி, அகநாழிகை பொன்.வாசுதேவன் மற்றும் யாத்ரா ஆகியோருக்கு நன்றி. போனசாக நண்பர் யாத்ரா நவீன விருட்சத்தில் வெளியாகி இருந்த "பிரிவு" என்கிற சம்பத்தின் சிறுகதைக்கான லிங்கையும் அனுப்பி இருந்தார். கதையைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்..

***************

கவுதம் சசிதரன் - எனது பிரியத்துக்கு உரிய மாணவன். கொங்கு கல்லூரியில் என்னிடம் பயின்றவன். தற்போது மத்திய அரசின் விண்வெளி ஆராய்ச்சித்துறையில் பொறுப்புள்ள பணியில் இருக்கிறான். எழுதும் மற்றும் படிக்கும் ஆர்வம் நிறையவே உண்டு. வெகு சமீபமாக தன்னுடைய எண்ணங்களை ஆங்கிலத்தில் "gauss' boulevard" என்கிற தளத்தில் எழுதி வருகிறான். கோடைக்கால மழையை அவன் அழகாக விவரிக்கும் இந்த இடுகையை வாசித்துப் பாருங்கள்.. நாமும் மழையில் நனைந்த உணர்வு ஏற்படுகிறது..

***************

அழிந்து வரும் அரிய கலையான "தோல் பாவைக் கூத்து" பற்றிய இந்த இடுகை கண்டிப்பாக அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று..

***************

காதல் சொல்ல வந்தேன் - பூபதிபாண்டியன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் படம். இசையில் யுவன் பேக் டூ பார்ம். பாடல்கள் எல்லாமே பிஸ்து கிளப்புகின்றன. "ஓ ஷலா " காதல் கிடைக்கப்பெற்றவன் சந்தோஷமாகப் பாடுவதாக வரும் வழக்கமான யுவன் பாடல். உதித் நாராயண் பாடும் "ஒரு வானவில்லின்" பாட்டு, தன காதலியின் அருகில் இருக்கும் வாய்ப்பு கிடைத்ததை காதலன் கொண்டாடுவதைப் போல அமைந்திருக்கிறது. "என்ன என்ன ஆகிறேன்" விஜய் யேசுதாசின் குரலில் அருமையான மெலடி. பிட்சா சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது நடுவே சுள்ளென்று வெங்காயத்தைக் கடித்தது போல கிராமத்து பாட்டாக வருகிறது "சாமி வருகுது" பாடல். கடைசியாக வரும் "அன்புள்ள சந்தியா" பாடல்தான் பிக் ஆப் தி ஆல்பம். உள்ளம் கேட்குமே படத்தின் ஓ மனமே பாட்டு ஞாபகம் வந்தாலும், கார்த்திக்கின் மயக்கும் குரலில் ரொம்பவே அருமையான மென்சோகப் பாடல். மொத்தத்தில் ஒரு ஜிலீர் காதல் ஆல்பம்.

(ஹி ஹி ஹி.. ஒரு ஆனந்த விகடன் ஸ்டைல் முயற்சி..)

***************

சமீபத்தில் ரசித்த எஸ்.எம்.எஸ் ஜோக்குகள்..

--> டெஸ்ட்க்கும்(Test ), குயிஸ்சுக்கும் (Quiz) என்ன வித்தியாசம்?

டெஸ்ட்ல விடை தெரிஞ்சா பாஸ்..(Pass)

குயிஸ்ல விடை தெரியலைனா பாஸ்.. (Pass)

--> அக்கா பிரண்ட அக்காவா நினைக்கலாம்.. தங்கச்சி பிரண்ட தங்கச்சியா நினைக்கலாம்.. அதுக்காக பொண்டாட்டி பிரண்ட பொண்டாட்டிய நினக்க முடியுமா?

--> ஜனவரி 14க்கும் பிப்ரவரி 14க்கும் என்ன வித்தியாசம்?

ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்தா அது ஜனவரி 14

அதே பொண்ணு ஒரு பையனுக்கு அல்வா கொடுத்தா அது பிப்ரவரி 14

இப்போதைக்கு அவ்ளோதான்.. நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-)))))

June 24, 2010

சொர்க்கமும் நரகமும்..!!!

அவன் அந்த ஊர்லையே பெரிய போர்ப்படைத் தளபதி. தன்னோட ஊருக்கு புதுசா ஒரு சாமியார் வந்திருக்கார்னு கேள்விப்பட்டு அவரை பார்க்குறதுக்குப் போனான். ஒரு ஆலமரத்துக்கு அடியில சாமியார் ஜம்முன்னு உக்கார்ந்து இருந்தார். சுத்தி நிறைய மக்கள் கூட்டம். தளபதி மரியாதைக்கு ஒரு வணக்கத்தைப் போட்டுட்டு தன்னோட சந்தேகத்தைக் கேட்டாரு.

"ஐயா.. சொர்க்கமும் நரகமும் உண்மையிலேயே உலகத்துல இருக்குதா?"

"நீ என்னப்பா தொழில் பண்ற?" சாமியார் திருப்பிக் கேட்டாரு.

என்னடா இது.. நாம ஒண்ணு கேட்டா சாமியாரு நம்மள சம்பந்தமே இல்லாம வேற எதையோ கேக்குறாருன்னு தளபதிக்குக் குழப்பம்.

"நான் ஒரு படைத்தளபதிங்க.."

"உன்னைய எல்லாம் எவன்யா தளபதின்னு நம்புவான்.. ஆளு பார்க்க ஆடு திருடுறவன் மாதிரி இருக்க.. ஹே ஹே ஹே.."

"யாரைப் பார்த்து என்னய்யா சொன்ன.. இப்பவே உன்ன வெட்டிக் கூறு போடுறேன் பாரு.." உறுமினான் தளபதி.

"அதேதான்.. நீ கேட்டில.. நரகத்தின் கதவு.. அது இப்போ இங்கே உனக்காகத் தொறந்து கிடக்கு.." அமைதியாக சாமியார் சொன்னார்.

தளபதிக்கு தன்னோட ஆத்திரம் தப்புன்னு புரிஞ்சது. சட்டுன்னு சாமியார் கால்ல விழுந்துட்டான்.

"ஐயா.. புரிஞ்சுக்கிட்டேன்.. மன்னிச்சுடுங்க.. என்னோட அகந்தைல கண்ணு மண்ணு தெரியாம பேசிட்டேன்.."

"நல்லது.. இப்போ உனக்காக சொர்க்கத்தின் வாசல் தெரிஞ்சிருக்குமே.."

ஒரு கணம் தோன்றி மறையும் எண்ணத்தில்தான் நன்மையையும் தீமையும் உறைந்திருக்கின்றன.

***************

நாலு சாமியாருங்க சேர்ந்து ஒரு சத்தியம் பண்ணுனாங்க. "ஏழு நாளைக்கு ஒண்ணுமே பேசாம தியானம் பண்ணனும். ஒரு வார்த்தை கூட பேசக் கூடாது.." அப்படின்னு. சொன்ன மாதிரி ஒரு தனி அறைல வெறும் மெழுகுவர்த்திகள மட்டும் ஏத்தி வச்சுட்டு தியானத்துல உக்கார்ந்தாச்சு.

மொத நாள் முடியப் போற சமயம்.. பயங்கர காத்துக்கு மெழுகுவர்த்தி எல்லாம் படபடன்னு எரிய ஆரம்பிச்சது.

"அய்யய்யோ.. மெழுகுதிரி அணைஞ்சிடும் போல இருக்கே.." ஒருத்தர் பொலம்ப ஆரம்பிச்சுட்டார்.

உடனே இன்னொருத்தர் கோபத்தோட சொன்னாரு.." மறந்துட்டியா? நாம இப்ப பேசக்கூடாது.."

அடுத்தவரு.. "ஏன் இப்படி பேசிக்கிட்டு இருக்கீங்க"ன்னு மூஞ்சிய சுழிச்சாரு.

கடைசி ஆளு மட்டும் சும்மா இருப்பாரா? "ஹா ஹா ஹா.. அப்பாடா.. நான் மட்டும்தான் கடைசி வரைக்கும் எதுவுமே பேசல"

அடுத்தவர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டும்போது, எப்போதுமே அந்தத் தவறை நாமும் செய்யக்கூடும் என்பதை நாம் மறந்து விடுகிறோம்.

***************

கண்பார்வையில்லாத ஒருத்தன் தன்னோட நண்பனோட ஊருக்குப் போயிருந்தான். கொஞ்சம் நேரம் கழிச்சு மறுபடி ஊருக்குக் கிளம்பும்போது, நண்பன் அவன்கிட்ட ஒரு லாந்தர் விளக்கக் கொடுத்து, அதை எடுத்துட்டுப் போகும்படி சொன்னான்.

கண்ணு இல்லாதவன் சிரிச்சுக்கிட்டே சொன்னான்.. "எனக்கு வெளிச்சமும் இருட்டும் ஒண்ணுதானே நண்பா.. எனக்கு எதுக்கு இது?"

"அப்பு.. அது எங்களுக்கும் தெரியும்.. ஆனா இது இல்லாம நீ இருட்டுல போறேன்னு வையி.. வழியில வர யாராவது உம்மேல மோதிட்டா? அதுக்குத்தான்" அப்படின்னு சொல்லி விளக்கக் கொடுத்து விட்டான் நண்பன்.

சமாதானமா லாந்தர் விளக்க வாங்கி, அதை தனக்கு முன்னாடி தூக்கி பிடிச்சுக்கிட்டு கிளம்பினான் அந்தப் பார்வை இல்லாதவன். சித்த தூரத்துலையே எதிர்த்தாப்பிடி வந்த ஒருத்தன் மேல மோதிட்டான். அவனுக்கு பயங்கர கோபம்.

"என்னய்யா ஆளு நீ? மூஞ்சிக்கு முன்னாடி ஒரு விளக்கு எரியறது கூடவா உனக்கு தெரியாது?"

"தம்பி.. உங்க விளக்கு அணைஞ்சு ரொம்ப நேரம் ஆகிடுச்சு போல.." அமைதியா சொல்லிட்டு எதிர்ல வந்தவன் போய்ட்டான்.

மற்றவர்களுக்கு ஞானம் அளிக்க அடுத்தவரின் கருத்துக்களைப் பயன்படுத்துவது, கண்பார்வையற்றவன் கைவிளக்கேந்திப் போனது போலத்தான்.. வழியில் விளக்கு அணைந்து போகலாம். அது ஒருபோதும் தெரியாது.

***************

யூமா வாசுகியின் மஞ்சள் வெயில் புத்தகத்தை வாங்குவதற்காக "அகல்" பதிப்பகத்தை தேடிக் கண்டுபிடித்துப் போயிருந்தேன். சென்னையில் எளிதில் கண்டுபிடிக்க முடியாத ஒரு குட்டி காம்பவுண்டுக்குள் ஒரு சின்ன வீடு. அதுதான் வீடு. அதுதான் அலுவலகம். நான்கைந்து புத்தகங்கள் சேர்த்து வாங்கினேன். பதிப்பக உரிமையாளர் நான் மதுரையில் இருந்து வருவதைக் கேட்டு ரொம்ப சந்தோஷப்பட்டார். நான் வாங்கிய புத்தகங்களோடு பரிசாக "ஜென் கதைகள்" என்ற புத்தகத்தையும் அன்பளிப்பாகத் தந்தார். நான் எவ்வளவோ வற்புறுத்தியும் அதற்கான பணத்தை வாங்கிக் கொள்ள மறுத்து விட்டார். "அவ்ளோ தூரத்துல இருந்து புத்தகம் வாங்க வந்திருக்கீங்க.. உங்களுக்கு இது கூட செய்யலைன்னா எப்படி?" அத்தனை கஷ்டத்துக்கு நடுவிலும் புத்தகங்களை, வாசகர்களை நேசிக்கும் இது போன்ற மக்கள் இருக்கும்போது இலக்கியம் கண்டிப்பாக வாழும் என்றே நம்ப முடிகிறது.

ஜென் கதைகள்
தமிழில்: சேஷையா இரவு
வெளியீடு: அகல் பதிப்பகம்
விலை: ரூ.60

June 21, 2010

பரீட்சைன்னா.. பெரிய பருப்பா?!!!

அது என்னமோ பாருங்க.. சின்ன வயசுல இருந்து நமக்கு இந்தப் பரீட்சைன்னாலே அவ்வளவா ஒண்ணும் பெரிய பயமெல்லாம் கிடையாதுங்க.. ஏன்னு கேட்டீங்கன்னா.. அதுக்குக் காரணம் எங்கம்மா. அவங்க தான் நமக்கு பாடம் சொல்லிக் கொடுத்த மொத வாத்தியாரு. அவங்க நமக்கு சொன்னதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்.. "மகனே.. படிக்கிறது அறிவ வளர்க்கத்தான்.. வெறுமன புத்தகத்துல இருக்குறத படிச்சிட்டுப் போய் பேப்பர்ல வாந்தி எடுக்கிறதால நாம பெரிசா எதையும் சாதிச்சிட முடியாது.. அதனால எதப் படிச்சாலும் புரிஞ்சு படி.. ஏன் எதுக்குப் படிக்கிறோம்னு தெரிஞ்சு படி.. அது போதும்.. பரீட்சைல நீ மார்க்கு வாங்கலை, அது இதுன்னு நான் கவலைப்படவே மாட்டேன்.. சரியா?" அவங்க சொன்னதுல நம்ம மண்டைல எது ஏறுச்சோ இல்லையோ.. அந்தக் கடைசி வரி.. பரீட்சைன்னா பயப்பட வேண்டியது கிடையாதுங்கிறது மட்டும் தெளிவா பதிஞ்சு போச்சு. அதுக்கு அப்புறம் நமக்கு என்ன கவலை சொல்லுங்க?

நல்லா படிச்சா நம்ம வாழ்க்கை நல்லாயிருக்கும். இதுதான் எங்க தாத்தா சொல்லிக் கொடுத்தது. பொதுவாவே எனக்கும் படிக்க பிடிக்கும். சோ நமக்கு படிப்பு நோ ப்ராப்ளம்தான். நாம இருந்த வீட்டுல இருந்து பத்து வீடு தாண்டி பள்ளிக்கூடம். நாங்கதான் எங்க ஸ்கூலோட மொத செட்டும் கூட. அதனால வாத்தியாருங்க எல்லாரையும் நல்லாத் தெரியும். நல்ல ஜாலியா பொழுது போகும். பக்கத்து வீட்டுக்காரர்தான் ப்ரின்சி. அதனால பரீட்சை மார்க் எல்லாம் நான் பாக்குறதுக்கு முன்னாடியே அம்மா பார்த்திடுவாங்க. பெரும்பாலும் மூணு ரேன்குக்குள்ள வந்திருவேன். யாரு பர்ஸ்ட் வரதுன்னு பசங்களுக்கு உள்ள போட்டி, அப்படி இப்படின்னு பரீட்சைய எதிர்பார்த்துக் கிடந்த கோஷ்டி நம்மது. (அடிக்க வராதீங்கப்பா..)

அஞ்சாவது வரைக்கும் பரீட்சை எழுதினது எல்லாம் அவ்வளவா ஞாபகம் இல்லை. அதுக்கு அப்புறமும் சாதாரணமாத்தான் இருந்தது. சுத்தி இருந்த மக்கள் எல்லாம் ஓவரா பில்டப்பா கொடுத்தது பத்தாவது பரீட்சையப்பத்தான். "இதுதான் உன் லைப்பு.. பார்த்து.. ஆ.. ஊன்னு.." அடப் போங்கப்பா.. திமிருக்குன்னே அடுத்த நாள் பயாலஜி எக்ஸாம் வச்சிக்கிட்டு நம்ம பசங்க கூட படத்துக்குப் போனேன். "பூச்சூடவா" - அந்தக் கொடுமைய பார்த்ததுக்கு ஒழுங்கா உக்கார்ந்து படிச்சிருந்தாலாவது புண்ணியம். கடைசியா +2 . மொதல்லேயே வீட்டுல சொல்லியாச்சு. இவ்வளவு மார்க்குதான் வாங்குவேன்... இதுக்குத்தான் படிக்கப் போறேன்னு. அவங்களும் ஒண்ணும் கண்டுக்கல. கடைசியா சொல்லி வச்சி மாதிரித்தான் மார்க்கும் வந்தது. அதுக்குப் பொறவு நான் பொறியியல் சேர்ந்ததும், இன்னைக்கு வாத்தியாரா வந்து நாலு பேருக்கு நாம பரீட்சை வச்சுக் கொலையா கொல்றதும்.. விடுங்கப்பா.. அதெல்லாம் அவனவன் செய்த வினைப்பயன்..

சம்பவம் 1

என்னடா இவன் ஓவராப் பேசுறான்.. பரீட்சைன்னா நீ பயந்ததே கிடையாதா? நீ பெரிய *****யோ? இப்படி எல்ல்லாம் திட்டணும்னு தோணுதா? பிளீஸ் வெயிட்.. நாங்களும் அசிங்கப்பட்ட கதைய சொல்லுவோம்ல. நான்தான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே. நம்ம அம்மாவுக்கு நம்ம மேல நம்பிக்கை ஜாஸ்தி. பிள்ளைய ஒரு பெரிய படிப்பாளின்னு நெனச்சுக்கிட்டு மூணாவது படிக்கும்போதே ஹிந்தி படிக்கக் கொண்டு போய் விட்டாங்க. அவனும் அஞ்சு பரீட்சைய ஒழுங்கா எழுதிட்டான். ஆனா பாருங்க.. இந்த விஷாரத் உத்தரார்த் வந்தப்பதான் புடிச்சது சனி. ஏழாங்கிளாஸ்னு நினைக்கிறேன். அப்பத்தான் நமக்கு கோலிகுண்டு, சீட்டு, உருட்டுக்கட்டை, புது நண்பர்கள் எல்லாம் அறிமுகம் ஆன நேரம். எல்லா கிளாசும் கட்டு. நேரா பரீட்சைக்கு போய் நின்னா..? ஒண்ணுமே தெரியல. என்ன பண்ண.. வேற வழி இல்லாம கைடத் தூக்கிட்டு உள்ள நொழஞ்சாச்சு.

லட்சுமி ஸ்கூல்தான் செண்டர். பரீட்சை ஆரம்பிச்சா.. சும்மா குண்டு குண்டுன்னு ஒரு அம்மாதான் சூப்பர்வைசர். சுத்தி சுத்தி வருது. காலுக்கு கீழ கைடு. பார்த்து பார்த்து அடிச்சுக்கிட்டு இருக்கேன். அப்படியே வேர்த்து வழியுது. பயம். முன்ன பின்ன செத்தாத்தான சுடுகாடு தெரியும்? கடைசில நம்ம மூஞ்சியே காட்டிக் கொடுத்துருச்சு. அந்த அம்மா நேரா வந்து கைட எடுத்துருச்சு. சுமார் ஒரு மணி நேரம் நின்னுக்கிட்டே இருக்கேன். அப்புறம் என்ன நினச்சாங்கன்னு தெரியல.. பாவம்னு என்கிட்டே வந்து.."இனிமேல் இப்படி பண்ணாதப்பா"னு சொல்லிட்டு அது வரைக்கும் எழுதி இருந்த எல்லாத்தையும் அடிச்சுட்டுப் போய்ட்டாங்க. அதுக்கு அப்புறம் நடந்ததுதான் காமெடி. நான் மறுபடி அடிச்சத பார்த்தே எழுத ஆரம்பிக்க, அந்தம்மாவுக்கு வந்துச்சு பாருங்க ஒரு கோபம்... குடுகுடுன்னு ஓடி வந்து பேப்பர புடுங்கிட்டாங்க. "நீ எழுதிக் கிழிச்சது போதும்.. கிளம்புப்பா".. நாம வாழ்க்கைல வாங்குன மொதக் கப்பு.. அதுதான். அப்புறமேட்டிக்கு நான் ஹிந்தில எம்.ஏ வரைக்கும் படிச்ச கொடுமைலாம் நடந்தது தனிக்கதை.. (ஹி ஹி ஹி.. எல்லாம் ஒரு விளம்பரந்தானே..)

சம்பவம் 2

வெற்றிகரமா +2 எழுதியாச்சு. அடுத்து என்ன? முட்டி மோதியும் மூணே மார்க்குல மெடிக்கல் சீட் இல்லைன்னு தெரிஞ்சு போச்சு. அப்ப வேற வழியே கிடையாது.. பொறியியல்தான். ஆனாலும் கடைசி முயற்சியா.. ஒரு தடவை கேரளாவுல போய் பரீட்சை எழுதிப் பார்க்கலாமேன்னு ஒரு ஆசை. அங்க நடக்குற மெடிக்கல் மற்றும் பொறியியல் தேர்வுக்கான பரீட்சை. போய் உக்கார்ந்து கேள்வித்தாள வாங்கி பார்த்தா கண்ணக் கட்டுது. 120 கேள்விகள். சரி.. மொதல்ல நமக்குத் தெரிஞ்சத எல்லாம் எழுதுவோம். அதுக்கு அப்புறம் தெரியாததைப் பத்தி யோசிப்போம்னு எழுதி முடிச்சுட்டு பார்த்தா.. மொத்தம் மூணே கேள்விதான் எழுதி இருக்கேன். அவ்வ்வ்வவ்.. ரைட்டு வேற வழியே இல்லை.. பாண்டியா.. உருட்டுடா பகடையன்னு எல்லாக் கேள்விக்கும் டாஸ் போட்டு பதில் எழுதி முடிச்சுட்டு வெளில வரேன்.. வந்து பார்த்தா, அங்க பயபுள்ளைங்க எல்லாம் பேசிக்கிட்டு இருக்குதுங்க..

"நீ எத்தனைடா எழுதுன?"

"24 .. நீ?"

"நான் 28ப்பா .."

டேய்.. என்னடா சொல்றீங்க.. நான் இப்போத்தாண்டா 120 கேள்விக்கு பதில் எழுதிட்டு வரேன்? அப்புறம் விசாரிச்ச்சத்தான் தெரிஞ்சது.. அங்க எல்லா கேள்விக்கும் பதில் அளிக்கிறது கட்டாயம் இல்லையாம். ஏன்னா.. சரியான விடைக்கு நாலு மார்க்கு.. அதே மாதிரி தப்பான விடைக்கு ஒரு மார்க்கு மைனஸ். வெளங்கிடும். அங்க ரிசல்ட் வந்தப்ப என்னோட ரேன்க் பத்தாயிரத்து சொச்சம். அங்கயும் பொறியியல்தான் கிடைக்கும்னு சொன்னங்க. வேற வழி இல்லாம தமில்நாட்டுலையே சேர்ந்து படிச்சு.. கஷ்டப்பட்டு முன்னேறி.. விடுங்கப்பா.. அதெல்லாம் நாளைய வரலாறு கூறட்டும். (ஒரு விண்ணப்பம்.. துப்புரவங்க பப்ளிக்ல துப்பாதீங்கப்பா.. தனியா மின்னஞ்சல் அனுப்பி உங்க கடமைய செய்யலாம் )

ஆக.. இப்படியாக பரீட்சைக்கும் நமக்கும் இருக்குற உறவு மாமன் மச்சான் உறவு மாதிரிதான். ரொம்ப பயந்தது எல்லாம் கிடையாது. அது பாட்டுக்கு நடக்கும். கடமையைச் செய்.. பலனை எதிர்பார்க்காதே.. நம்ம கைல என்ன இருக்கு.. சொல்லுங்க? இந்த சங்கிலிப்பதிவை எழுதும்படி கேட்டுக்கொண்ட தோழி "இயற்கை ராஜி"க்கு நன்றிகள் பல.. வேறு யாரும் எழுத விருப்பட்டால் தொடரலாம்..