September 26, 2009

அழகு,காதல்,பணம்,கடவுள் - ஆசையும் உண்மையும்.. !!!

சில பல நாட்களுக்கு முன்பாக நண்பர் "தினசரி வாழ்க்கை" mayvee இந்தத் தலைப்பில் என்னை சங்கிலித் தொடராக எழுதும்படி அழைத்து இருந்தார். அந்த நேரத்தில் தான் காலேஜில் இருக்கும் புண்ணியவான்களின் தயவால் ப்ளாகர் ப்ளாக் செய்யப்பட்டது. சரி, பொறுமையாக எழுதிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். பின்னர் நண்பர் "இலக்கியா" அன்புமணியும் எழுதும்படி கேட்டுக் கொண்டார். "பசங்கள மட்டும் ஒழுங்கா அசைன்மென்ட் எல்லாத்தையும் நேரத்துல சப்மிட் பண்ண சொல்றீங்க.. நீங்க ரொம்ப யோக்கியமா?"ன்னு கண்டனக் குரல்கள் வேற வந்தாச்சு. இதற்கு மேல் ஓப்பியடிக்க முடியாது என்பதால்.. இதோ இடுகை.


அழகு,காதல்,கடவுள்,பணம் - நான்கு விஷயங்களைப் பற்றி எழுத சொல்லி இருக்கிறார்கள். நான்குமே கொஞ்சம் விவகாரமான விஷயங்கள். கடவுளைத் தவிர மற்ற மூன்றும் ஒன்றுக்கொன்று ஏதோ ஒரு வகையில் தொடர்புடையவை. இவை எப்படி இருக்க வேண்டும் என நான் ஆசைப்படுவதையும், உண்மையில் இன்றைய உலகில் நிதர்சனம் என்ன என்பதையும் சொல்ல விரும்புகிறேன். பதிவர்களின் மாறுபட்ட கருத்துக்களை அறிந்து கொள்ளும் வகையில் இந்த தொடரை ஆரம்பித்து வைத்த தோழி ஹேமாவுக்கு நன்றி.

அழகு

ஆசை: புற அழகு என்பதை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு ஒருவரை அழகு என்று சொல்ல முடியாது. மனது தான் முக்கியம். வயது ஆகும்போது புற அழகு மாறிப்போகக் கூடும். ஆனால் நல்ல மனம் என்றும் மாறாது. உடம்பு அழகாக இருந்தும் உள்மனம் அழுக்காக இருந்தால் அதனால் என்ன பிரயோஜனம்? ரோட்டில் நடந்து போகும்போது யாரென்றே தெரியாத ஒருவர் அடிபட்டுக் கிடந்தால், அவருக்கு உதவ வேண்டும் என்று யோசிக்கிறது பாருங்கள்.. அந்த நல்ல மனதுதான் உண்மையான அழகு.

உண்மை: வடிவேலு ஜோக் ஒன்று நினைவுக்கு வருகிறது.."சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்.. இவன் கருப்பன்.. பொய் சொல்லுவான்.. இவனப் போட்டு அடிங்கடா.." இதுதான் இன்றைய மக்களின் மனநிலை. கருப்பு என்றால் ஏதோ அவலட்சணம் என்பதைப் போல உருவகப்படுத்துகிறார்கள். நின்று நிதானமாக மனதைப் பார்க்க யாருக்கும் நேரம் இல்லை. ஆடை பாதி, ஆள் பாதி என்பதெல்லாம் மாறி இன்றைக்கு ஆடையும் அழகும்தான் மதிப்பே என்பது போல ஆகி விட்டது.

காதல்

ஆசை: எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி, இரு மனங்கள் ஒன்றை ஒன்றை விரும்பி ஏற்றுக் கொண்டு, கடைசி வரை தங்கள் வாழ்கையை ஒன்றாக வாழ்வது தான் காதல். அழகைப் பார்த்தோ, அந்தஸ்தைப் பார்த்தோ வருவது கிடையாது. அது ஒரு நம்பிக்கை. என் வாழ்க்கை பூராவும் இவர் நம்மோடு இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்ற உணர்வு. உண்மையான காதலில் அழகு ரெண்டாம் பட்சமாகத்தான் இருக்கும்.

உண்மை: இன்றைக்கு காதல் ஒரு வியாபாரமாகிப் போய் விட்டது. ஒரு ஆண் நன்றாக சம்பாதிக்கிறானா, அவனிடம் கார் இருக்கிறதா, வீடு இருக்கிறதா.. இதை எல்லாம் பார்த்து தான் பெண்ணுக்கு காதல் வருகிறது. பெண் அழகாக இருக்கிறாளா, வீட்டில் எந்த இம்சையும் இருக்கிறதா.. இதைப் பார்த்து தான் ஆண் காதல் கொள்கிறான். அன்பு என்னும் ஆதாரமான விஷயத்தைத் தவிர இன்றைய காதலில் மற்ற எல்லாமே இருக்கிறது. காதல் இன்று பலருக்கு பொழுதுபோக்காக மாறிப் போனது இன்னும் கொடுமை.

பணம்

ஆசை: பணம் நம் வாழ்க்கைக்குத் தேவையான ஒன்றாக, அளவோடு இருக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. நம்மையும் நம்மைச் சார்ந்தோரையும் காப்பாற்றும் அளவுக்கு பணத்தை வைத்துக் கொண்டு, அதிகமாக இருப்பதை இல்லாத மக்களுக்கு கொடுக்க முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும்? அதன் பின்னர் உலகத்தில் யாருமே ஏழை என்று இருக்க மாட்டார்கள் இல்லையா?

உண்மை: காசைத் தேடி ஓடி ஓடி தங்கள் வாழ்வை தொலைத்தவர்கள் தான் இன்று உலகம் முழுதும் நிறைந்து இருக்கிறார்கள். "கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் நமக்கு எஜமானன்.." எத்தனை உண்மை? ஒருவனுக்கு காசு சம்பாதிக்கும் வெறி இல்லை என்றால் சமூகம் அவனுக்குத் தரும் பட்டம் "பிழைக்கத் தெரியாதவன்". பணம் இருந்தால் தான் இன்று உறவுகள் கூட மனிதனை மதிக்கின்றன. பணம் என்னும் விஷயத்தை ஏன் தான் மனிதன் கண்டுபிடித்தானோ என்று பலமுறை நொந்து இருக்கிறேன். பணம் இருந்தால் தான் மரியாதை. இல்லை என்றால் மனிதனுக்கு பிணத்துக்கு சமமாகத்தான் மதிப்பு.

கடவுள்

ஆசை: ஒரு சின்ன சம்பவம். என் பெற்றோருக்கு அதிகமான கடவுள் பக்தி உண்டு. என் தங்கையின் திருமணம் நல்ல படியாக முடிந்ததற்கு நேர்த்திக்கடன் செய்வதற்காக பட்டமங்கலம் (குருஸ்தலம், காரைக்குடி போகும் வழியில் உள்ளது) போயிருந்தோம். அங்கே அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு தம்பதியைப் பார்க்க நேர்ந்தது. குழந்தை இல்லை என்ற குறை நீங்க அவர்கள் போகாத மருத்துவமனை கிடையாதாம். அவர்களை சோதனை செய்த எல்லா மருத்துவர்களுமே இருவருக்கும் உடம்பில் எந்தக் குறையும் இல்லை என்று சொல்லி விட்டார்களாம். இருந்தும் பிள்ளை இல்லையே என்ற சோகத்தில் இருந்தவர்கள், யாரோ சொன்னதைக் கேட்டு, பட்டமங்கலம் சென்று வழிபட்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையோடு வந்து இருந்தார்கள். அவர்கள் கதையைக் கேட்டு நான் ஆடிப்போனேன். பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து அந்த தம்பதியை இந்தக் கோயில் வரை செலுத்திக் கொண்டு வந்தது எது? அவர்களுடைய நம்பிக்கை தானே.. அந்த நம்பிக்கைக்காகவாவது கடவுள் என்ற ஒன்று உண்மையாக இருக்க வேண்டும்.

உண்மை: மனிதர்களின் நன்மைக்காக என்பதை மீறி, இன்றைக்கு கடவுளின் பெயரால் சண்டைகளும் பிரச்சினைகளும் தான் நடக்கின்றன. அறிவியல் வளர வளர, மக்களுக்கு கடவுள் மீதான பக்தியும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதை பக்தி என்று சொல்லுவதை விட பயம் என்று சொல்லாம். "மரணத்துக்குப் பின் நாம் என்ன ஆவோம்? கடவுள் என்ற ஒன்று இருந்து, அதை நாம் மறுக்கப் போய், பின்னால் நரகத்தில் உழல நேரிட்டால்?" இந்த பயம் தான் இன்றளவும் மனிதனைக் கடவுளின் பால் செலுத்திக் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன். கஷ்டங்களின் போது மக்களுக்கு உதவாத கடவுள் இருந்துதான் என்ன பிரயோஜனம்? கடவுள் என்னும் விஷயத்தைப் பொறுத்தவரை நான் குழப்பவாதிதான். இதுபற்றி நான் ஏற்கனவே எழுதிய பதிவைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.

இதுதான் உண்மை நிலை என்று நான் இங்கே சொல்லி இருப்பவை என்னுடைய கருத்துக்கள் மட்டுமே.. நண்பர்களுக்கு ஏதேனும் மாற்றுக் கருத்துகள் இருந்தால் பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்.

இந்தத் தலைப்பில் தொடர்ந்து எழுத நான் மூன்று நண்பர்களை அழைக்கிறேன்.

தேனீ சுந்தர்

சொல்லரசன்

அ.மு.செய்யது


September 24, 2009

உன்னைப் போல் ஒருவன்...?!!!

உன்னைப் போல் ஒருவன் - இணையத்தில் பலவிதமான சர்ச்சைகளையும், விவாதங்களையும் கிளப்பி இருக்கிறது. நான் இன்னும் படம் பார்க்காத நிலையில் என்னால் படத்தைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது. நான் அடிப்படையில் ரஜினி ரசிகன் என்றபோதும் கமலின் நடிப்பை வெகுவாக நேசிப்பவன். ஆனால் நம் பதிவுலக நண்பர்கள இந்தப் படத்தை அணுகி இருக்கும் விதம் உண்மையிலேயே மனதை மிகவும் நோகடித்து விட்டது. இங்கே கமலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் இரண்டு தரப்புகள். மிகவும் நல்ல கருத்துள்ள படம், அருமையான பொழுதுபோக்குப் படம், மோசமான இந்துத்துவா படம்.. இது போல இன்னும் பல விமர்சனங்கள்.


ஒரு தரப்பு படத்தை கண்மூடித்தனமாக சப்போர்ட் செய்கிறார்கள். யார் என்ன சொன்னாலும் இது ஒரு நல்ல படம் என்று சொன்னால் ஒத்துக் கொள்ளலாம். ஆனால் கமலைப் பற்றி விமர்சிக்கிறார்கள் என்ற காரணத்துக்காக உன்னைப் போல ஒருவனை வெறும் பொழுதுபோக்கு படம், கருத்தெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது.. என்ற ரீதியில் பேசுவது மன்னிக்க முடியாதது. சாமானியனுக்கும் நல்ல விஷயங்களைக் கொண்டு போய் சேர்க்க முடியும் என்றால் அதற்கு திரைப்படத்தை விட சிறந்த சாதனம் கிடைக்காது. இதை நன்கு உணர்ந்தவர் கமல். வெறும் பொழுதுபோக்கு என்றால் அவர் "partner "ஐ ரீமேக் பண்ணலாமே.. "A Wednesday " எதற்கு?


எதிர்த் தரப்பில் சிலர், சினிமாவை உண்மையாக நேசிக்கும் கமல் என்ற கலைஞனை இதற்குமேல் கேவலப்படுத்த முடியாது என்னும் அளவுக்கு கேவலமாகத் திட்டி உள்ளார்கள். படைப்பை பற்றி பேசுவதைத் தவிர்த்து படைப்பாளியையும் அவனுடைய ஜாதியையும் முன்னிறுத்தி பேசுவதும், ஜாதிபுத்தியால்தான் இப்படி படம் எடுக்கிறார் எனச் சொல்வதும் எந்த வகை நியாயம் என்று புரியவில்லை.


நான் படித்தவரையில் தோழர் மாதவராஜின் இடுகைகள் மட்டுமே படத்தை நேர்மையாக, நடுநிலையோடு அணுகி இருந்ததைப் போல தோன்றியது.


கமல் உன்னைப் போல் ஒருவனில் பல குறியீடுகளைப் பயன்படுத்தி இருப்பதாக சொல்கிறார்கள். எனக்கு அவற்றைப் படிக்கும்போது காதலா காதலா படத்தின் ஒரு காட்சிதான் ஞாபகத்துக்கு வருகிறது. பிரபுதேவா வரைந்த ஒரு மட்டமான படத்தில் பெப்சியை ஊற்றி கந்திரகோலமாக்கி விடுவார் கமல். அதைப் பார்க்கும் சௌந்தர்யாவும், ரம்பாவும் "இது அணில், இது ராமர்.. வாவ் என்ன ஒரு பெயிண்டிங்" என்றெல்லாம் சொல்வார்கள். ஆச்சரியமுடன் கமல் திரும்பிக் கேட்பார்.."அடேங்கப்பா.. இதெல்லாமா உங்களுக்குத் தெரியுது?" இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல விரும்பலை.


இதை எல்லாம் விடப் பெரிய கொடுமையை நேற்று டிவியில் பார்க்க நேர்ந்தது. கமல் சினிமாவில் நடிக ஆரம்பித்து ஐம்பது வருடங்கள் ஆனதைக் கொண்டாடும் வண்ணம் விஜய் டிவி ஒரு நிகழ்ச்சி நடத்தி வருகிறார்கள். இதில் கலந்து கொண்ட கமல் ரசிகர் ஒருவர் சொன்னது... "விலைவாசி உயர்வு, பன்றிக் காய்ச்சல் என்று எல்லாப் பிரச்சினைகளையும் மீறி இன்று தமிழ்நாட்டு மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் இது எங்கள் தலைவரின் பொன்விழா வருடம் என்பதால்தான்.." அடப் போங்கடா போக்கத்தவங்களா..!!!

September 21, 2009

போதிமரம்..!!!

கல்லூரி முடிந்து வெளியே வந்த போது வானத்தில் மேகங்கள் திரண்டு கொண்டிருந்தன. கடந்த இரண்டு, மூன்று நாட்களாகவே மதுரையில் நல்ல மழை. வீட்டுக்கு நனையாமல் போய் விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டே வண்டியைக் கிளப்பினேன். தெப்பக்குளத்தை நெருங்கியபொழுது மொபைல் அடித்தது. வண்டியை ஓரங்கட்டி நிறுத்தினேன். போனில் அம்மா.

"தம்பி, வரும்போது ஒரு லிட்டர் நல்லெண்ணையும், கொஞ்சம் சின்ன வெங்காயமும் வாங்கிட்டு வந்துடுரியாப்பா?"

அம்மா எப்போதாவதுதான் என்னிடம் இது போல சொல்வது உண்டு.

"சரிம்மா..."

வாடிக்கையாக எண்ணெய் வாங்கும் கடை கீழவாசலில் இருக்கிறது. அவர்களிடமே வெங்காயம் எங்கே வாங்குவது என்று விசாரித்தேன். அருகில் இருக்கும் சந்துக்குள் செல்ல வேண்டும் என்றார்கள். வண்டியைத் திருப்பினேன். மழை லேசாகத் தூர ஆரம்பித்து இருந்தது.

நான் வெங்காய மண்டியை அடைவதற்கும் மழை வலுப்பதற்கும் சரியாக இருந்தது. அவசரமாக வண்டியை நிப்பாட்டி விட்டு கடையின் வாசலில் நின்று கொண்டேன். வெளியே காய வைத்து இருந்து வெங்காயத்தை எல்லாம் ஒரு வயதான பாட்டி பெருக்கி எடுத்துக் கொண்டிருந்தார். இன்னொருவர் கடையின் உள்ளே மூட்டைகளை அடுக்கிக் கொண்டிருந்தார். மழை ரொம்பப் பெரிதாக பெய்யத் தொடங்கியது.

"தம்பி, அப்படி வாசல்ல நின்னீங்கன்னா நனைஞ்சிடுவீங்க.. இப்படி உள்ள வந்து நில்லுங்க.." உள்ளே இருந்தவர் அழைத்தார். அவர்தான் கடையின் முதலாளியாக இருக்கக் கூடும்.

"இல்லண்ணே... பரவாயில்ல.. கால்ல ஷூ போட்டிருக்கேன்.. நீங்க வேலை பாக்குற எடம்.."

"அதனால என்ன தம்பி.. எல்லாம் நம்ம மனசுதான்... மனுஷனத்தான் முதல்ல மதிக்கணும்.. சும்மா உள்ள வாங்க.."

கடைக்கு உள்ளே போய் நின்று கொண்டேன். ஒரு பெரிய அறை. அதன் முக்கால்வாசி இடத்தை வெங்காய மூட்டைகளும், பூண்டு மூட்டைகளும் அடைத்துக் கொண்டிருந்தன. ஒரு டேபிள், சேர். அதன் மேலே கொஞ்சம் சாமி படங்கள். பக்கத்திலேயே ஒரு எடை போடும் எந்திரம்.

"நீங்க ...... ஸ்கூல்லையா தம்பி வேலை பாக்குறீங்க?" அவர் கேட்டபோது தான் நான் கழுத்தில் கிடக்கும் அடையாள அட்டையை இன்னும் கழட்டவில்லை என்பதையே கவனித்தேன்.

"இல்லண்ணே.. நான் காலேஜ்ல வேலை பாக்குறேன்.. ஸ்கூல், காலேஜ் எல்லாமே ஒரே நிர்வாகம்தான்.."

"ஏன்னா தம்பி.. எம்பிள்ளைங்க ரெண்டும் உங்க ஸ்கூல்லதான் படிக்குதுங்க.. அதுக்காக கேட்டேன்.."

"அப்படியா.. சரிங்கண்ணே..." சிரித்துக் கொண்டே மழையை வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். அப்போது ஹோவென சத்தம் போட்டவாறே ஒரு சிறுவர்கள் கூட்டம் மழையில் ஆடிக் கொண்டே போனார்கள். அடித்து ஊற்றும் மழையை அவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

"கொடுத்து வச்சவங்க.. இல்லையா தம்பி..?"

"கண்டிப்பாண்ணே..வாழ்க்கைல வளரவே கூடாது.. எப்பவும் சின்னப் பசங்களாவே இருந்துடணும்.."

"அப்படி எல்லாம் இல்ல தம்பி.. எல்லாம் சூழ்நிலையைப் பொறுத்துதான்.. என்னோட பிள்ளைங்களுக்கும் இந்த வயசுதான்.. ஆனா அதுங்க இந்த மாதிரி ஆடிப் பாடி சிரிச்சு விளையாண்டு நான் பார்த்ததே இல்ல.. நாமதான் வியாபாரத்துக்கு வந்துடோம்.. நம்ம பிள்ளைங்களாவது நல்லா படிக்கட்டும்னு பெரிய ஸ்கூல்ல சேர்த்து விட்டா அவங்க பிள்ளைங்கள செக்கு மாடா ஆக்கிட்டாங்க.. காலைல எட்டுல இருந்து சாயங்காலம் அஞ்சு வரைக்கும் ஸ்கூல்.. ஸ்கூல் விட்டு வந்தவுடனே டியூஷனுக்குப் போயிட்டு ஒன்பது மணிக்குத்தான் வரும்ங்க.. அதுக்கு அப்புறம் கொஞ்சம் டிவி.. தூங்கிடும்ங்க... இதுதான் வாழ்க்கைன்னு ஆகிப்போச்சு தம்பி.."

நான் ஏதும் பேசாமல் அவர் முகத்தை பார்த்தேன். அதில் ஒரு சின்ன வேதனை இருந்தது. அவரே தொடர்ந்தார்.

"ஏதோ ஏன் வீட்டுக்காரம்மா இருக்குற தைரியத்துலதான் தம்பி என் பொழப்பு ஓடிக்கிட்டு இருக்கு.. அது பொறுமையா பிள்ளைங்கள பார்த்துக்குரதாலத்தான் நான் நிம்மதியா இருக்கேன்.. பிள்ளைங்க கூட சேர்ந்து வெளிய கொள்ள போக முடியல.. ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் தான் அதுங்களுக்கு லீவு.. ஆனா அன்னைக்கு நான் லைனுக்கு போனாத்தான் கலெக்ஷன்... யாருக்காக சம்பாதிக்கிறோமோ, அவங்க கூட சந்தோஷமா இருக்க முடியாட்டி எதுக்கு இந்த வாழ்க்கைன்னு ரொம்ப கோபமா வருது தம்பி.."

எளிமையாக அவர் பேசினாலும் அந்த வார்த்தைகளில் இருந்த உண்மை என்னை சுட்டது.

"ஏதோ உங்க கிட்ட பேசனும்னு தோணுச்சு தம்பி.. தப்பா எடுத்துக்காதீங்க.."

"அய்யய்யோ.. என்னன்னே இப்படி சொல்லிட்டீங்க... உங்க கூட பேசுனதுல எனக்கும் சந்தோஷம்தாண்ணே .."

அவர் முகம் கொஞ்சம் தெளிவு அடைந்தது. மழை கொஞ்சம் சிறுத்து இருந்தது. வெங்காயம் வாங்கிக் கொண்டு கிளம்பினேன்.

"இருங்க தம்பி.. மழைல நனையாமப் போங்க.." என்று சொல்லியவாறே அவருடைய ஹெல்மட்டைக் கொடுத்தார். "நேரம் கிடைக்குரப்ப கொண்டு வந்து கொடுங்க.."

நன்றி சொல்லி வாங்கிக் கொண்டேன். மனதுக்குள் அவர் சொன்ன விஷயங்கள் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தன. இந்த வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் தான் என்ன? வாழ்க்கையை நாம் துரத்திக் கொண்டிருக்கிறோமா அல்லது வாழ்க்கை நம்மை துரத்துகிறதா? விடை தெரியாத நிலையிலும் பயணங்கள் தொடர்ந்து கொண்டுதானே இருக்கின்றன. மழைத்துளிகள் முகத்தில் அறைய வண்டியைக் கிளப்பினேன்..!!!


(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

September 19, 2009

அவன், அவள், அது - அவனும் அவளும் (7)..!!!

இரவு பதினோரு மணி. அந்த பேருந்து நிறுத்தத்தில், இரவின் கருமையை மட்டும் துணையாகக் கொண்டவனாய், அவன் நின்று கொண்டிருந்தான். ஆள் அரவமே இல்லாத அந்த சாலையும், அந்த சூழ்நிலையுமே அச்சம் தருவதாக இருந்தது. ஆனால் அவன் கவலை ஏதும் அற்றவனாக ஒரு பாட்டை சீட்டி அடித்துக் கொண்டு பஸ்சுக்கு காத்து இருந்தான்.

"டக்.. டக்.. டக்.."

யாரோ நடந்து வரும் அரவம் கேட்டு திரும்பினான். அவன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை. அழகான பெண்ணொருத்தி அவனருகில் வந்து நின்றாள்.

அவளைப் பார்க்கும் யாருக்கும் மறுமுறை பார்க்கும் ஆசை தோன்றும். பார்த்தான்.

வட்ட முகம். வில்லாய் வளைந்த அடர்த்தியான புருவங்கள். அதன் ஊடாக குட்டிப் பாம்பொன்று நெளிந்து கொண்டிருப்பதை போல பொட்டு. கருணை நிறைந்த கண்கள். சட்டென்று நீண்ட நாசி. செதுக்கியதைப் போல உதடுகள். உடம்பில் கருநீல நிறத்தில் இறுக்கமாக சுடிதார் அணிந்து இருந்தாள். அவள் உடம்பின் வளைவுகள் அவனை சூடாக்கின.

மீண்டும் நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தான். அவளும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் திகைத்துப் போய் முகத்தை திருப்பிக் கொண்டான்.

சற்று நேரம் கழித்து தைரியம் வரப் பெற்றவனாய் மீண்டும் அவளைப் பார்த்தான். அவள் வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் சிரித்த மாதிரி அவனுக்குத் தோன்றியது.

"இவள் ரூட்டாக இருப்பாளோ?"அவள் கண்களில் ஒரு அழைப்பு இருந்தது.

அவள் திரும்பி நடக்கத் தொடங்கினாள். ஏதோ ஒரு சக்தியால் இயக்கப்பட்டவன் போல அவனும் அவளை பின்தொடர்ந்தான். செல்லும் வழியில் திரும்பிப் பார்த்து அவன் வருவதை உறுதி செய்து கொண்டாள். என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று அவனும் தொடர்ந்தான்.

ரொம்ப தூரம் நடந்து ஒரு பாழடைந்த பங்களாவின் முன்பாக அவள் நின்றாள். அவனும் நின்றான். சுற்றி முற்றி பார்த்தான். ஏதோ ஒரு சுடுகாட்டுக்குள் வந்ததைப் போல உணர்ந்தான். முதல் முறையாக நெஞ்சுக்குள் பயம் எட்டிப் பார்த்தது. கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளை அழைத்தான்.

"என்னங்க.. என்னங்க.."

அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அவனுக்கு முதுகைக் காட்டியவளாக அமைதியாக நின்று கொண்டிருந்தாள். அவன் வயிற்றுக்குள் ஒரு பயப்பந்து உருளத் தொடங்கியது.

" இவ பொண்ணுதானா? தெரியாத்தனமா இங்க வந்து மாட்டிக்கிட்டோமா? ஒருவேளை இது மோகினிப் பிசாசா இருக்குமோ? நாம இங்க இருந்து உசிரோடத் திரும்ப முடியுமா?"

திடீரென அவள்.. இல்லை .. அது.. திரும்பியது. கருணை நிறைந்த கண்களாக அவனுக்கு தோன்றிய இடத்தில் இப்போது வெறும் குழிகள் மட்டுமே இருந்தன. கையில் ஒரு நீளமான கத்தி. கால்கள் தரையில் பாவாமல் இவனை நோக்கி நகர்ந்து வரத் தொடங்கியது.

அவன் அதிர்ச்சியில் உறைந்தவனாக நின்று கொண்டிருந்தான். இதயம் பயங்கர வேகமாக துடித்தது. ஓவெனக் கத்த எண்ணி வாயைத் திறந்தான். சத்தமே வரவில்லை. நாக்கு மேலன்னத்தோடு ஒட்டிக் கொண்டது.

வியர்த்துக் கொட்டியது. எதற்கோ ஆசைப்பட்டு வந்து கடைசியில் இப்படி மாட்டிக் கொண்டோமே என தன்னைத் தானே நொந்தான் . என்ன செய்வதெனத் தெரியாமல் கண்களை இறுக மூடிக் கொண்டான்.

சற்று நேரம் கழித்து அவன் கண்களை திறந்தபோது அது அவன் முன்னே அமைதியாக நின்று கொண்டிருந்தது. தன்னை அது ஏன் கொல்லவில்லை என்று குழம்பியவனாக அதைப் பார்த்தான். அது முதல் முறையாக வாயைத் திறந்து பேசியது.

"மன்னிக்க வேண்டும். இது உங்கள் கனவு. அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.."

அவன் சட்டென விழித்துக் கொண்டான்.

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

September 17, 2009

செப்டம்பர் 20 - மதுரையில் பதிவர் சந்திப்பு.!!!

"நண்பா.. நாம எல்லோரும் ஒண்ணு கூடி ரொம்ப நாளாச்சு.. பார்க்கணும் போல இருக்கு.. எப்போன்னு சொல்லுங்க.." அடிக்கடி கேட்டுக்கொண்டே இருக்கும் நண்பர் தேனீ சுந்தருக்கு...

"பதிவர் சந்திப்பா.. எங்களை என்னய்யா கேட்டுக்கிட்டு.. எப்பன்னு சொல்லுங்க.. கலக்கிருவோம்.." எப்போதும் உற்சாகத்துடன் எங்களை ஊக்கப்படுத்தும் தருமி ஐயா மற்றும் சீனா ஐயாவுக்கு..

நன்றிகள் பல..!!!

அப்படின்னா?

அதேதான் நண்பர்களே.. மதுரையில் பதிவர் சந்திப்பு..!!!

பதிவர்கள் சந்திப்பு

நாள்: 20.09.09 - ஞாயிற்றுக் கிழமை

காலம்: மாலை 4 மணி

இடம்: அமெரிக்கன் கல்லூரியின் சிற்றுண்டிச்சாலைக்கு அருகில்

"வந்தோம், எழுதினோம், போனோம்னு இல்லாம நாமளும் இந்த சமுதாயத்துக்கு ஏதாவது செய்யணும் நண்பா..." நம்ம பதிவுலக நண்பர்கள் எல்லார்கிட்டயும் இந்த எண்ணம் உண்டு.. என்ன பண்ணலாம்னு கூடி பேசுவோம்.. கண்டிப்பா கலந்துக்கோங்க..

நான் பதிவர் எல்லாம் கிடையாது. வெறுமனே வாசிக்கிரதுதான் அப்படின்னாலும் பரவாயில்லை.. உங்களையும் வரவேற்கிறோம்..

இந்த சந்திப்பு கண்டிப்பா பயனுள்ளதாக அமையும்னு நம்புகிறோம்..!!!

தொடர்புக்கு:

தருமி - 9952116112

கார்த்திகைப் பாண்டியன் - 98421 71138

ஸ்ரீதர் - 93606 88993

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

September 12, 2009

ஈரம் - திரைவிமர்சனம்..!!!


வெகு நாட்களுக்குப் பிறகு தமிழில் ஒரு மிரட்டலான த்ரில்லர் கம் பேய்ப்படம். ஷங்கரின் தயாரிப்பு என்றால் ஏதோ ஒன்று வித்தியாசமாகவும், ரசிக்கும்படியும் இருக்கும் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறது ஈரம். படம் பார்ப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நல்ல சவுண்ட் சிஸ்டம் இருக்கும் திரை அரங்கில் பார்க்கவும். அருமையான அனுபவமாக இருக்கும்.

கதாநாயகி ரம்யா (சிந்து) பாத்டப்பில் பிணமாக கிடப்பதாக ஆரம்பிக்கிறது படம். போலிஸ் தற்கொலை என்று சொல்ல அதை நம்ப மறுக்கிறார் சிந்துவின் முன்னாள் காதலனான அசிஸ்டன்ட் கமிஷனர் வாசுதேவன்( ஆதி). சிந்துவின் கணவர் பாலா (நந்தா) மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் இருக்கிறார். இந்த சூழ்நிலையில் அவர்கள் தங்கி இருந்த அபார்ட்மென்டில் தொடர்ச்சியாக மரணங்கள் நிகழ்கின்றன. இவைகளை செய்வது மனிதனா இல்லை வேறு ஏதேனும் சக்தியா? உண்மையில் சிந்துவைக் கொன்றது யார்? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடை தருகிறது ஈரம்.


மிருகம் படத்தில் கரடி தாடியும், கிழிந்து போன கைலியுமாக சுற்றி வந்த ஆதிதான் இவர் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். சூப்பர் ஸ்மார்ட்டாக இருக்கிறார். காதல் காட்சிகளிலும், சிந்துவின் பிரிவை எண்ணி வருந்தும் காட்சிகளிலும் அருமையாக நடித்து இருக்கிறார். சிந்து மேனனுக்கு இந்தப் படம் தமிழில் ரீ என்ட்ரி. பாந்தமாக இருக்கிறார். ஆனால் கல்லூரிக்கு போகும் பெண் வேடத்தில் சற்று முதிர்ச்சியாகத் தெரிகிறார். கணவன் சந்தேகப்படுவதை அறிந்து கலங்கும் காட்சிகளில் மனதை கனமாக்குகிறார்.


"எனக்கு எல்லாமே புதுசாத்தான் இருக்கணும்.." என்று பேசும் நந்தா புரியாத புதிர் ரகுவரனை ஞாபகப்படுத்துகிறார். தன்னுடைய கேரக்டர் என்ன என்பதை உணர்ந்து அருமையாக அண்டெர்பிளே செய்து இருக்கிறார். படத்தில் மொத்தமாக வெஸ்ட் செய்யப்பட்டு இருக்கும் ஒரே ஜீவன் சரண்யா மோகன். சிந்துவின் தங்கையாக வந்து போகிறார். நந்தாவின் நண்பராக வரும் ஸ்ரீநாத்தும் அருமையாக நடித்து இருக்கிறார்.


படம் பார்க்கும் மக்களை "அட" போட வைக்கும் காட்சிகள்..


* புதுவை சாலையில் அபார்ட்மென்ட் பெரியவரை குடையால் கொலை செய்வது..

* திரை அரங்கின் கழிவறையில் முதல் முறையாக ஆதி பேயை சந்திக்கும் காட்சி..


* இடைவேளையில் கண்ணாடியின் ஊடாக வரும் சிந்துவின் முகம்..


* பேய் முகமூடி அணிந்து ஸ்ரீநாத்தை அவருடைய மகள் பயமுறுத்தும் காட்சி..

* புத்திசாலித்தனமான கிளைமாக்ஸ்..


தமனின் இசையும், மனோஜ் பரமஹம்ஸாவின் ஒளிப்பதிவும் படத்துக்கு பெரிய பலம். தமனின் இசையில் யுவன் மற்றும் ரகுமானின் சாயல் தெரிந்தாலும் பாடல்கள் கேட்க நன்றாக இருக்கின்றன. பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். ஆதி முதல் முதலாக சிந்துவை பார்க்கும் காட்சியில் பின்னணி இசை பரவசம். வித்தியாசமான, அசாதாரண கோணங்களில் திகைக்க வைக்கிறார் மனோஜ். நிகழ்கால படம் முழுவதும் நீரின் நீல நிற பேக்ட்ராப், பிளாஷ்பேக் காட்சிகளில் வண்ணமயம் என்று பொளந்து கட்டி இருக்கிறார். ரெம்போனின் கலை இயக்கம் படத்துக்குத் தேவையானதை மிகை இல்லாமல் தருகிறது.


எழுதி இயக்கி இருப்பவர் அறிவழகன். சின்ன சின்ன விஷயங்களில் அசத்தி இருக்கிறார். படம் பார்க்கும் நமக்குள் எழும் கேள்விகளை திரையிலே கூற வைத்து பதிலும் சொல்லி விடுவது கலக்கல். ஆனால் படத்தின் நீளத்தை கொஞ்சம் கவனித்து இருக்கலாம். இரண்டாம் பாதி கொஞ்சம் பொறுமையை சோதிக்கிறது. படத்தின் சஸ்பென்ஸ் இடைவேளையிலேயே தெரிந்து போவதால், படம் இப்படித்தான் போகப் போகிறது என்பதை நாம் கொஞ்சம் கணிக்க முடிகிறது. இருந்தாலும் இத்தனை முயற்சி எடுத்து ஒரு நல்ல படத்தை கொடுத்ததற்காக அறிவு மற்று ஷங்கர் இருவருக்கும் ஒரு பூங்கொத்து.


ஈரம் - மிரட்டல்

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

September 10, 2009

காற்றில் யாரோ நடக்கிறார்கள் (2)..!!!

காற்றில் யாரோ நடக்கிறார்கள் - கல்குதிரை, கணையாழி, தினமணி, விகடன், குமுதம், அட்சரம், எஸ்ராவின் வலைத்தளம் ஆகியவற்றில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. இந்தப் புத்தகத்தில் இருக்கும் கட்டுரைகளை இலக்கியம், கலை, திரைப்படம், அனுபவம், பொது என்று ஐந்து பிரிவுகளாக தொகுத்து இருக்கிறார்கள். புத்தகம் பற்றிய முதல் இடுகையை படிக்க இங்கே சொடுக்குங்கள்.


கலை
******


தமிழ்நாட்டில் பிறப்பு முதல் இறப்பு வரை இசை என்பது மிக முக்கியாயமான ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் இன்றைய சூழலில் நம் பாரம்பரிய இசை வடிவங்களில் பல காணாமல் போய் விட்டன. தலைமுறை தலைமுறையாக இசைக்கருவிகளை வாசித்து வந்தவர்கள் இன்று இருந்த இடம் தெரியவில்லை. இது எத்தனை பெரிய வேதனை? வெளிநாட்டில் இருந்தெல்லாம் ஆர்வத்தோடு வந்து இங்குள்ள கலைகளை கற்றுக் கொள்ளும் பொழுது நாம் ஏன் அவற்றை புறக்கணிக்கிறோம்? இந்தக் கேள்விகளை எல்லாம் எழுப்புகிறது "ஹாங் இசை" என்னும் கட்டுரை. கண்டுபிடிக்கப்பட்டு வெறும் எட்டு வருடமே ஆன "ஹாங்" என்னும் இசைக்கருவி பற்றியும், அதை வாசிக்கப் பழகிக் கொண்ட ஜெர்மானிய இளைஞரின் ஆர்வம் பற்றியும் இந்தக் கட்டுரை விரிவாகப் பேசுகிறது. பாரி நாயனம் என்னும் தமிழ்நாட்டு பாரம்பரிய இசைக்கருவியை கற்ற ஜப்பானிய இளைஞர், அதனைப் பற்றி புத்தகம் ஒன்றும் எழுதி இருக்கிறார் என்பது ஆச்சரியம்.


ஒரு எழுத்தாளர் மிகச் சிறந்த ஓவியராக இருக்க முடியும் என்பதற்கு சான்று "டி.ஹெச்.லாரன்சின் ஓவியங்கள்". எது ஆபாசம் என்று எதிர்க்குரல் எழுப்பிய லாரன்சின் ஓவியங்களில் இருக்கும் நேர்த்தியையும், சிதறடிக்கப்பட தன்மையையும் பெரிதும் சிலாகிக்கிறார் எஸ்ரா.


புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூரில் இருக்கும் "மூவர் கோவில்" மிகவும் முக்கியமான சரித்திரச் சான்றாகும. பூதி இருக்கு வேளிர் என்ற மன்னரால் கட்டப்பட்ட இந்தக் கோவில் சிற்பக்கலைக்கு அருமையான எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ஆயிரம் வருடப் பழமை கொண்ட இந்தக் கோயிலின் இன்றைய நிலை என்ன? புதையுண்ட சுவர்களும் இடிபாடுகளுமே. நம் நாட்டின் வரலாற்றை நாம் ஏன் பாதுகாக்க முற்படுவதில்லை? சரித்திரப் புத்தகங்களுக்கு வெளியேயும் உலகம் இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும் என்று விசனப்படுகிறது இந்தக் கட்டுரை.


புகைப்படக்கலையில் முன்னோடிக் கலைஞரான பிரசான், இடைக்காட்டூரில் இருக்கும் புனித இருதயநாதரின் தேவாலயம், இசைக்கலைஞர் பகானினி, காமிக்ஸ் பற்றிய அறிமுகங்கள் என்று கலை உலகின் பல தளங்களையும் திறம்பட விவரிக்கின்றன எஸ்ராவின் மற்ற கட்டுரைகள்.


திரைப்படம்
*************


கஷ்டப்பட்டு ஐந்தாறு பக்க வசனங்கள் எழுதி புரிய வைக்க வேண்டிய விஷயத்தை ஒரே காட்சியில் எளிதாகச் சொல்லி விடலாம். ஏனெனில் காட்சி ஊடகத்தின் வலிமை மிக அதிகம். ஆரம்ப காலங்களில் திரைப்படத்தின் மூலம் ஒரு தேசத்தின் கலாச்சாரத்தையும், புராணங்களையும், அவர்கள் சந்தித்த பிரச்சனைகளையும் பதிவு செய்து வந்தார்கள். திரைப்படத்தின் மூலம் பல நல்ல விஷயங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடிந்தது. உணர்வு ரீதியாக ஒரு மனிதனை பாதிக்க முடிந்ததே நல்ல சினிமா. தமிழிலும், பிற மொழிகளிலும் வந்த நல்ல படங்கள், கலைஞர்கள் என்று பலரைப் பற்றி பேசுகிறார் எஸ்ரா.


தன் உடல் மொழியால் நகைச்சுவையில் புதிய சகாப்தம் படைத்தவர் சந்திரபாபு. அவர் இயக்கிய "தட்டுங்கள் திறக்கப்படும்" என்னும் படம் அவருக்குள் இருக்கும் இயக்குனரை அழகாக விளக்குகிறது. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் என்று அனைத்துத் துறைகளையும் ஒன்றாக கவனித்த முதல் தமிழ் கலைஞர் அவர்தான். தன் நிஜ வாழ்வின் வெளிப்படுத்த முடியாத துயரை தனது பாடல்கள் மூலமாக சொன்னவர் சந்திரபாபு. "ஆடிப் பாடித் திரிபவன்" என தனக்கான ஒரு பிம்பத்தை கட்டமைத்துக் கொண்டு, வாழ்வின் இருண்ட பக்கங்களை மூடி வைத்துக் கொண்டார். கடைசி வரை யாராலும் புரிந்து கொள்ள முடியாத ஒரு மர்ம மனிதராகவே வாழ்ந்து மறைந்தும் போனார் சந்திரபாபு.


தமிழ்த் திரையுலகில் பலரும் தொடத் தயங்கிய விஷயங்களை அனாயாசமாக தனது படங்களில் கையாண்டவர் கே.பாலச்சந்தர். விவாதங்களையும், எதிர்ப்புக் குரல்களையும் தனது படங்களில் பலமாக பதிவு செய்தவர். அவருடைய மிக முக்கியமான படமாக "அவள் ஒரு தொடர்கதை"யை சொல்லலாம். பார்வையாளனுக்கு நெருக்கமான, அவனுக்கு நன்கு அறிமுகமான யதார்த்தமான நடுத்தர மக்களை திரையில் காண்பித்த பெருமை பாலசந்தரையே சேரும் என்கிறார் எஸ்ரா.

திரையிலும் இலக்கியம் வெற்றி பெரும் என்பதை செய்து காட்டிய ஜெயகாந்தனின் திரைப்படங்களின் பிரதிகள் இன்று யாரிடமும் இல்லை. ஏன் தமிழில் திரைப்படக் காப்பகம் ஒன்றை உருவாக்க இயலவில்லை என்ற கேள்வி எழும்புகிறது. தமிழில் புதிய அனுபவங்களைத் தரும் கல்லூரி, ஹிந்தியில் வெளியான The blue umbrella, Taare Zameen Par, traffic siganal, Yatra, Johnny gaddhaar முதலிய படங்கள் இந்திய சினிமாவை வேறு தளங்களுக்கு கொண்டு போயிருப்பது மகிழ்ச்சியைத் தருவதையும் குறிப்பிடுகிறார்.


தேசத்தின் நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு மங்கோலியாவில் எடுக்கப்பட்ட "the story of the weeping camel" என்னும் ஆவணப்படம் மனதின் உணர்வுகளை அமைதி கொள்ளச் செய்யும் இசையின் சக்தியை வியக்கிறது.


மலையாளத்தில் பல நல்ல படங்களை எடுத்த பத்மராஜன் தமிழில் ஒரு மூன்றாந்தர செக்ஸ் பட இயக்குனராக மட்டுமே அறியப்பட்டு இருந்தார் என்பது வேதனை. அவருடைய "ஓரிடத்தில் ஒரு பயில்வான்" என்னும் திரைப்படம், உடல் அளவில் வலிமையான, ஆனால் மனதளவில் மிகவும் முதிர்ச்சியற்ற ஒரு பயில்வானின் வாழ்கை பற்றி பேசுகிறது. காமத்தில் இச்சை கொள்ளாத அவன் எப்படி தன்னுடைய வாழ்க்கையை இழக்கிறான் என்பதையும், அவனுடைய மன உளைச்சல்களையும் அற்புதமாக பதிவு செய்து இருக்கிறார் பத்மராஜன்.


நீதிமன்ற விசாரணையை மையமாகக் கொண்டு வெளியான ஹாலிவுட் படமான "Judgement at Nuremberg", போலந்தின் புகழ் பெற்ற இயக்குனரான ஆந்த்ரே வாஜ்தா தன தந்தையின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு இயக்கிய "Katyn" என்னும் போர் பற்றிய படங்கள் பற்றியும் விரிவாகப் பேசுகிறார் எஸ்ரா. இந்தியத் திரை உலகில் ஒரு புதிய எழுச்சியை உண்டு பண்ணிய "Shloey" எந்த எந்த படங்களின் சாயலைக் கொண்டது என்பது பற்றிய தகவல்களும் இருக்கின்றன.


இதை எல்லாம் படிக்கும்போது என் மனதில் வந்த கேள்விகள் இவைதான். தமிழ் சினிமாவின் இன்றைய நிலை என்ன? ஜனரஞ்சகம் என்ற பெயரில் நாம் நம் அடையாளத்தை தொலைத்து நிற்கிறோம் இல்லையா? பணத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு இன்று கலை பின்தங்கி விட்டதே, இந்த நிலை மாறுமா? பிற நாட்டு படங்களைப் பற்றி நாம் பெருமையாக படிப்பது போல நம் தமிழ்ப்படங்களைப் பற்றி வெளிநாட்டவர் படிக்கும் காலம் வருமா? விடைதெரியாக் கேள்விகள்..!!!


(தொடருவேன்..)


(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)