December 22, 2008

நாட்டு நடப்பு!!!!

பணியின் நிமித்தமாக வெளியூர் சென்று விட்ட காரணத்தினால் சில நாட்களாக எழுத இயலாமல் போய் விட்டது. கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் கோவையிலும் ஒரு வாரம் மதுரையிலுமாக பொழுது போனது. பல புதிய நண்பர்களோடு பழக வாய்ப்பு கிடைத்தது. கோவை நகரம் பெரிதாக ஏதும் மாறவில்லை. ஈஷா யோகா மையம் வரை சென்று வரும் வாய்ப்பு கிடைத்தது. நான் பொதுவாக கடவுளை அதிகமாக நம்புவதில்லை என்னும் போதும் மனதிற்கு நிம்மதி தரும் இடமாக ஈஷா இருக்கிறது. பாதரசத்தால் செய்யப்பட்ட லிங்கத்தை நீரின் உள்ளே பிரதிஷ்டை செய்து இருக்கிறார்கள். அந்த தண்ணீர் நம்மேல் படும் போதே நம்மால் வித்தியாசத்தை உணர முடிகிறது.மழையின் காரணமாக கோவையில் அதிகமாக வெளியே சுற்ற இயலவில்லை. மற்றபடி மதுரையில் நண்பர்களை சந்திக்கவே நேரம் சரியாக இருந்தது. இதோ, மீண்டும் பணிக்கு திரும்பி வந்தாயிற்று.
**********************************************************************

மும்பையில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதல் சமீபத்தில் நம் நாட்டில் நடைபெற்ற மிக மோசமான நிகழ்வாகும். முதல் முறையாக கடல் வழியே உள்ளே வந்துள்ளனர். நம் நாட்டின் பாதுகாப்பையே பெரும் கேள்விக்குறி ஆக்கியுள்ளது இந்த தாக்குதல். அமைச்சர்களை மாற்றுவதால் மட்டும் இந்த பிரச்சினை தீர்ந்து விட போவதில்லை. தீவிரவாதத்திற்கு எதிரான ஒரு போரை நாம் மேற்கொள்ள வேண்டும். கடுமையான சட்டங்கள் மூலமாக மட்டுமே இது சாத்தியமாகும். மக்களை காக்க தங்கள் உயிரை இழந்தவர்கள், தாக்குதலின்போது தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது போராடிய வீரர்கள் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர்கள். ஒற்றுமையாக இருந்து நம் மக்கள் அனைவரும் தேசத்திற்கான அபிமானத்தை வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது. எந்த மதமானுலும் மக்களை நேசிக்க சொல்கிறதே தவிர கொள்ள சொல்வதில்லை. இனிமேல் இது போன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க எல்லா மத கடவுள்களும் அருள் புரிவதாக...
*********************************************************************
போன மாதத்தில் நண்பர் ஒருவருக்கு சென்னை சென்று வரும் வாய்ப்பு கிடைத்தது. ஏண்டா போனோம் என்ற நிலையில் தான் மனிதர் திரும்பி வந்தார். மழைக்காலத்தில் சென்னை சென்று வருவதை விட நாம் நேராக நரகத்திற்கே சென்று வரலாம் என புலம்பி தள்ளி விட்டார். நண்பர் தங்கி இருந்த வேளச்சேரி பகுதி தனித்தீவாகவே மாறி போனதாம். கிட்டத்தட்ட படகு சவாரி மூலமாகதான் மக்களால் நடமாட முடிந்து இருக்கிறது. அதோடு கொஞ்சம் பாம்புகளும் வீட்டுக்குள் வந்து சென்றதால் மனிதர் அரண்டு போய் விட்டார். சிங்கார சென்னை மழையின் போது சிரிப்பாய் சிரித்து விடுவதை யாராலும் மாற்ற முடியாது போலும். ஒவ்வொரு முறையும் நிவாரணம் கொடுக்க வருவதை விட இதற்கான நிரந்தர தீர்வினை நம் அரசாங்கம் யோசித்தால் தேவலாம். மின்சாரமும் இல்லாமல் மக்கள் பாடு பெரும்பாடாய் போவதை எந்த புண்ணியவான் வந்து மாற்றுவாரோ..
**********************************************************************
வெகு நாட்களாய் தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த ஒரு மெகா தொடர் முடிவுக்கு வந்தது. கண்கள் பனிக்க, இதயம் இனிக்க... அடடா என்ன ஒரு காட்சி.. பல திருப்பங்களுக்கும் மோதல்களுக்கும் பிறகு வந்த இந்த இனிய முடிவு நேயர்களாகிய தமிழக மக்களுக்கு இன்ப அதிர்ச்சி. யார் சந்தோஷபட்டிருப்பார்களோ இல்லையோ, நம் தமிழக முதல்வருக்கு இந்த இணைப்பு மிக்க சந்தோசத்தை தந்திருக்கும். ஒரே உறையில் இரண்டு வாள்கள்? சன் டிவி vs கலைஞர் டிவி? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்...
**********************************************************************
விலைவாசி உயர்வு, தீவிரவாதம் என் அனைத்தையும் மீறி, காங்கிரஸ் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று உள்ளது. இது வரப்போகும் பாராளுமன்ற தேர்தல்களில் எதிரொலிக்குமா என் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்...

சமீபத்தில் என்னை மிகவும் பாதித்த ஒரு எஸ்.எம்.எஸ். இது..

விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுட்டு வெற்றி பெற்ற வீரருக்கு பத்து கோடி பரிசு.. நாட்டை காக்க துப்பாக்கி ஏந்தி தன் உயிரை விட்ட இராணுவ வீரரின் குடும்பத்துக்கு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு.. ஜெய் ஹிந்த்... வாழ்க இந்தியா...!!!!

No comments: