June 22, 2011

கலைடாஸ்கோப் மனிதர்கள்

பெரியார் பேருந்து நிலையத்தின் வளைவில் இருக்கும் அந்த பைக் ஸ்டாண்டுக்குள் அவன் நுழைந்தபோது சாயங்காலம் மணி ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது. மொத்த இடத்தையும் அடைத்துக் கொண்டு நின்றிருந்த பைக்குகள் சிதறிப்போன சங்கிலியொன்றின் கண்ணிகளை ஞாபகப்படுத்தின. காலையில் விட்டுப்போன இடத்தில் தனது பைக்கைக் காணாமல் தேடத் துவங்கியவன் ஒரு ஓரமாக தூக்கி கடாசப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தான்.

ஊரின் மொத்த தூசியையும் எடுத்து அப்பியது போல பைக்கின் சீட் அலங்கோலமாக இருந்தது. இது போன்ற தருணங்களில் பயன்படுத்தவென எப்போதும் பைக்கில் சொருகி வைத்திருக்கும் துணியையும் காணவில்லை. யாரோ ஒரு நாதாரி எடுத்து விட்டிருக்கலாம். என்ன செய்வதெனத் தெரியாமல் அருகில் இருந்த வண்டிகளை நோட்டம் விட்டான். டிவிஎஸ் 50 ஒன்றில் நீட்ட துணி ஒன்று இருந்தது. அதை எடுத்து வண்டியைத் துடைத்தவன் சத்தமில்லாமல் தன் பைக்குள் போட்டுக் கொண்டான். இனிமேல் கிழிந்த துணியை வண்டியில் வைக்கக் கூடாது என்று தனக்குத்தானே சொல்லியபடி வண்டியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.

அம்மாவுக்கு மாதாமாதம் கொடுக்க வேண்டிய ஹோமியோபதி மாத்திரைகளை வாங்க கீழவாசல் வரை போக வேண்டி இருந்தது. காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்டின் வழியே வண்டியை செலுத்தத் தொடங்கினான். வாகனங்களின் நெரிசல் ரொம்பவே அதிகமாக இருந்தது. மாலை வேளைகளில் இந்த சாலையில் வண்டியோட்டுவது போன்ற மடத்தனம் வேறெதுவும் இருக்க முடியாது என நினைத்துக் கொண்டவனை சூமென ஒரு ஸ்கூட்டி கடந்து போனது. அந்த வண்டியை ஓட்டிப்போன பெண் பின்னோக்கிய கோணத்தில் பார்க்க வெகு வடிவானவளாகத் தெரிந்தாள். அவள் முகத்தைப் பார்க்க வேண்டுமென்கிற ஆவல் இவனுக்குள் தோன்றியது. வண்டியை விரட்டினான்.

வேகத்தைக் கூட்டி வண்டியை அவளுக்கு முன்னால் கொண்டு சென்றவன் கண்ணாடியில் அவள் முகத்தைப் பார்த்தான். களையான முகம். மூக்கு குத்தியிருந்தது அவளுக்கு ஒரு தனி அழகைக் கொடுத்தது. பகலில் பார்த்தால் இத்தனை அழகாக தெரிவாள் என அவனுக்குத் தோன்றவில்லை. ஆனால் இரவும் அந்த சோடியம் விளக்கின் மஞ்சள் ஒளியும் அவளை ஒரு தேவதையென மாற்றியிருந்தன. சாதாரணமான ஒருவரைக் கூட அழகியாக மாற்றி விடும் ஆற்றல் அந்த பொன்மஞ்சள் நிறத்துக்கு இருக்கிறதென்பது அவன் நம்பிக்கை. இயற்கையின் மிக அற்புதமான படைப்பும் மிக மோசமான படைப்பும் எப்படி ஒன்றாக அமைந்தது என்கிற சந்தேகம் எப்போதும்போல அப்போதும் வர தனக்குள் சிரித்துக் கொண்டான்.

அவள் தெற்குவாசல் நோக்கிப்போக இவன் மேலமாசி வீதிக்குள் வண்டியைத் திருப்பினான். பெருமாள் கோவில் சந்தில் சாலையின் ஓரமாக இருந்த ”லலிதா பேப்பர் ஸ்டோர்ஸ்” கடையின் பெயர்ப்பலகையைப் பார்த்தபோது அவனுக்குத் தன் கல்லூரி ஞாபகம் வந்தது. அவன் புதிதாக ஒரு கல்லூரியில் வேலைக்கு சேர்ந்திருந்ததால் கூட வேலை பார்ப்பவர்கள் பற்றிய எந்த விவரமும் சரியாகத் தெரியாத சூழல். புதியவனான அவனோடு பேச யாரும் தயாராக இல்லாத நிலையில் ஓரளவுக்காவது மதித்துப் பேசிய ஜீவன்களில் லலிதாவும் ஒருவர். கணிதத்துறையில் பேராசிரியை. எனவே அவர் மீது அவனுக்கு நிறைய மதிப்பு இருந்தது.

அன்றைக்கு அவர்கள் இருவரும் சேர்ந்து முடிக்க வேண்டும் என்று ஒரு வேலையை முதல்வர் அவர்களுக்குத் தந்திருந்தார். கணிணியில் ஒன்றாக அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதுவரை செய்துமுடித்த எதையும் சேவ் செய்து பாதுகாக்காத நிலையில் அத்தனையும் தொலைந்து போயிருக்கும் என்பதை உணர்ந்த லலிதா மேடம் “அய்யா சேசுவே எல்லாம் போச்சே..” என்று தலையில் அடித்துக் கொண்டாள். இவன் வினோதமாக அவளைப் பார்த்தான். சற்று நேரம் கழித்து அவளிடம் கேட்டான்.

“நீங்க கிறிஸ்டினா மேடம்..”.

“இல்ல சார்.. மதமெல்லாம் மாறலை. ஆனா ஏசு மீது நம்பிக்கை உண்டு..”

அதன்பிறகு அவனால் லலிதாவோடு இயல்பாகப் பேச முடியவில்லை. பொதுவில் அவனுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது என்றபோதும் இது மாதிரியான விஷயங்களில் அவனுக்கெனத் தனியாக சில கோட்பாடுகள் இருந்தன.

கடவுள் உண்டென நம்புகிறீர்கள் என்றால் அவருடைய முடிவையும் நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்? ஒருவரே உண்மையான கடவுள் அனைவரும் அவருக்குப் பிரியமானவர் என்றால் எதற்காக இத்தனை மதங்கள்? எதற்காக நீங்கள் வேறு மதத்தில் பிறக்க வேண்டும் பின்பு உண்மையை உணர்ந்து கடவுளை அடைய வேண்டும்? நீங்கள் யார் எங்கே பிறக்க வேண்டும் என்பதை முடிவு செய்தபின்புதானே பிறக்கிறீர்கள் பின்பு எதற்காக மதம் மாற வேண்டும்?

அது போல இருக்கும் மனிதர்கள் மீது கடும் வெறுப்பு அவனுக்குண்டு என்பதால் அதன் பிறகு லலிதா மேடமோடு அவனால் இயல்பாகப் பேச முடியவில்லை. என்ன ஏதென்றே புரியாமல் தன்னை அவன் ஒதுக்குவதில் அவருக்கு ரொம்பவே வருத்தம். அதை இன்று அவனிடம் நேரில் சொல்லவும் செய்து விட்டார். ஆனால் இவன் ஏதும் பேசாமல் வந்துவிட்டான்.

பேப்பர் கடையில் அவர் பெயரைப் பார்த்தவுடன் இவையெல்லாம் நினைவுக்கு வர தன் மீது அன்பு செலுத்தும் ஒருவரிடம் இதுபோலத்தான் நடந்து கொள்வது சரிதானாவென்கிற குழப்பம் அவனைப் பெரிதும் இம்சை செய்தபடி இருந்தது. ஏதேதோ யோசித்தவன் கடைசியாக தான் செய்வது சரிதானென சொல்லிக் கொண்டும் யாருக்காவும் எதற்காகவும் தன் கொள்கைகளை விட்டுத் தரமுடியாது என்று தனக்குள் சமாதானம் சொல்லியபடியும் வண்டியை செலுத்தினான்.

வழியில் வாடிக்கையாக அவன் புத்தகங்கள் வாங்கும் கடையின் முன்பாக வண்டியை நிறுத்தினான்.

“சுபா, இந்திரா எதுவும் வந்திருக்கா அண்ணே?”

“இல்லயே தம்பி..”

“சரி.. அப்போ ஒரு விகடன் மட்டும் கொடுங்க..”

“குமுதம்?”

“வேண்டாம்ணே.. விகடன் போதும்...”

தீவிரமாக புத்தகத்தின் கடைசிப் பக்க நையாண்டியில் பார்வையை ஓட்டியபடி வண்டியில் மீதமர்ந்தவனை அந்தக் குரல் கலைத்தது.

“தம்பி.. தம்பி..”

நிமிர்ந்து பார்த்த இடத்தில் அந்தப் பெரியவர் நின்று கொண்டிருந்தார். குறைந்தது அறுபது வயதிருக்கும். தலையில் மிச்சமிருந்த கொஞ்ச நஞ்ச முடியும் பங்கரையாகப் பறந்து கொண்டிருந்தது. அணிந்திருந்த கண்ணாடி எப்போது வேண்டுமானாலும் கீழே விழலாம் என்பது போல தொடுக்கிக் கொண்டிருந்தது. வாயில் வெகு சில பற்களே மிச்சமிருந்தன. கையில் துணிமணி போல ஏதோ வைத்திருந்தார்.

ஏதேனும் தர்மம் கேட்கப் போகிறாரோ என அவன் அவர் முகத்தைப் பார்த்தான். அவர் நடுங்கிய குரலில் பேசினார்.

“ஒரு சின்ன உதவி தம்பி. எனக்குக் தவுட்டு சந்தைல வீடு. வியாபாரம் எதுவும் இன்னைக்கு சரியில்லை. கொஞ்சம் கொண்டு போய் விடுறியா? பசி நேரம் கண்ண இருட்டிக்கிட்டு வருது..”

அந்தக் கடைசி வரிகள் அவனை உலுக்கிப் போட்டது. பசி ஒரு மனிதனை என்னவாக மாற்றுகிறது? யாரெனத் தெரியாதவனிடம் கூட உதவி கேட்பதை அது பொருட்படுத்துவதே இல்லை. அவருக்கு உதவலாம் என்றாலும் இவனுக்கு தன் வேலைகளை என்ன செய்வது என்று கவலையானது.

“இல்லைங்கைய்யா.. நான் அந்தப்பக்கம் போகல.. கீழவாசல்தான் போறேன்.. அங்கே விடட்டுமா..”

“அப்படிச் சொல்லாத தம்பி. கொஞ்சம் சுத்திப்போனா சரியாப்போச்சு..”

இப்போது அவனுக்கு எரிச்சலாக வந்தது. பெரியவர் தன்னை அதிகாரம் செய்வதைப்போல உணர்ந்தான். நான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்ல நீங்கள் யாரென்கிற கேள்வி வந்தது. ஆனாலும் அவரை அப்படியே விட்டுப்போகவும் மனதில்லை. குழம்பியவனாக நின்றவன் சரியென ஒரு முடிவுக்கு வந்தவனாக அவரிடம் சொன்னான்.

“ஏறுங்க அய்யா.. போகலாம்..”

அவர் தடுமாறியபடி வண்டியில் ஏறிக் கொண்டார். வண்டியை ஓட்டினாலும் அவனுக்குள் அலைஅலையாக கேள்விகள் வந்தபடியே இருந்தன. எதற்காக நான் இவருக்கு உதவ வேண்டும்? எத்தனை பேரிடம் இவர் கேட்டிருப்பார்.. அவர்கள் எல்லாம் மாட்டேன் என்று சொல்லிவிட்டு போகும்போது என்னால் ஏன் அது முடியவில்லை? ஏன் என்னை ஒரு குற்றவுணர்ச்சி துரத்துகிறது? சரி இவருக்கு நான் உதவுகிறேன். ஆனால் இவரை மாதிரி எத்தனி பேர் இருக்கிறார்கள்.. அவர்களுக்கு எல்லாம் யார் உதவுவது? என்னாலும் எல்லாருக்கும் உதவ முடியுமா? ஒருவேளை இவரையும் என் தாத்தாவையும் ஒன்றாக உள்மனது ஒப்பிட்டுப் பார்ப்பதாலேயே நான் இப்படி நடந்து கொள்கிறேனா? அவனுக்கு குழப்பமாக இருந்தது. சில நேரங்களில் எதையும் யோசிக்காமல் விடுவதே நல்லதென கவனத்தை சாலையில் திருப்பினான்.

செயிண்ட் மேரிஸ் ஸ்கூலை வண்டி தாண்டியபோது பெரியவர் “நிறுத்துங்க தம்பி” என்று அவசரமாக சொன்னார்.

“ஏங்க.. தவுட்டு சந்தைன்னு சொன்னீங்க..”

“இல்ல தம்பி..” என்று அருகிலிருந்த ஹோட்டலைக் காண்பித்தவர்..."அங்கே போனா தெரிஞ்ச ஹோட்டல்.. ஏதாவது சாப்பிடக் குடுப்பாங்க.. சாப்பிட்டுப் போயிருவேன்..” என்றார்.

“வீட்டுல அவ மட்டும்தான் இருப்பா.. பிள்ளைங்க எல்லாம் வெளியூரு.. பொழப்புக்கு இந்த டவுசரு, ஜட்டி விக்கிற தொழிலப் பாக்குறேன். எல்லா நாளும் நாம் நினைக்கிற மாதிரி இருக்குறதில்லையே.. அது மாதிரி நாள்ல இப்படித்தான் ஓட்டிக்கிடுறது..”

வாய் சற்றே கோணியிருக்க இளித்தபடி அவர் சொன்னதக் கேட்டு அவனுக்கு என்னமோ செய்தது.

“ரொம்ப நன்றி தம்பி.. நான் வர்றேன்..” என்றபடி அவர் சாலையைக் கடந்து போனார். இவன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சட்டென்று ஏதோ ஞாபகம் வந்தவனாக தன் பின்புறத்தைத் தொட்டுப் பார்த்தான். பர்ஸ் பத்திரமாக இருந்தது. சட்டைப்பைக்குள் மொபைல் பத்திரமாக இருக்கிறதாவெனப் பார்த்தான். இருந்தது. நிம்மதியாக வண்டியைத் திருப்பினான்.

17 comments:

Unknown said...

நல்ல இயல்பான கதை சார்

Asir said...

Good...

சமுத்ரா said...

good one

Balakumar Vijayaraman said...

நல்லா இருக்கு கார்த்தி.

gonzalez said...

super


http://funny-indian-pics.blogspot.com/

க ரா said...

Good one karthik

குமரை நிலாவன் said...

நல்ல கதை நண்பரே

இது ஒரு கதை என்பது போல் இல்லாமல் ஒரு அனுபவம் மாதிரி தோன்றியது

சிநேகிதன் அக்பர் said...

அருமை சார்.

RVS said...

Good One

தருமி said...

//நீங்கள் யார் எங்கே பிறக்க வேண்டும் என்பதை முடிவு செய்தபின்புதானே பிறக்கிறீர்கள்//

??????????

தருமி said...

நானும் யாரையேனும் பின்னாலேற்றிச் சென்றால் முடிவில் பாக்கெட்டுகளைத் தொட்டுப் பார்ப்பது வழக்கம்.

நிலமை அப்படி ...!

sashi said...

sir...avan avannu sonnengale...avan neenga thaannu sollama vittuteengale!!!

kannamma said...

இயல்பான கதை!! இது அனுபவம் தானே.....

மதுரை சரவணன் said...

nalla kathai ... kathaiyil ungkalai paarkiren.. unmaikathai enRu lebel idalaame..

jeya said...

pasikuthu sonna pothu sapadu vangi kuduka manasu illaye! unga heroku!

சித்திரவீதிக்காரன் said...

இச்சிறுகதை வம்சி சிறுகதைப்போட்டியில் தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துகள். மதுரை சித்திரவீதிகளுக்குள் ஒருமுறை சுற்றி வந்தது போல இருந்தது. இறுதியில் அந்தப் பெரியவர் இறங்கிச்சென்ற பின் பையைப் பார்ப்பது இன்றுள்ள எதார்த்த வாழ்வை காட்டுகிறது. புத்தாண்டு வாழ்த்துகள்.
- அன்புடன்
சித்திரவீதிக்காரன்.

கே.ஜே.அசோக்குமார் said...

வம்சி போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!!