August 7, 2011

போட்டா போட்டி 50:50 - திரைப்பார்வை

ஒரு படத்தின் பாதிப்பில் இன்னொரு படம் எடுப்பதில் தவறில்லை, மொத்தமாக காப்பி அடிக்கத்தான் கூடாது (நான் இங்கே தெய்வத்திருமகள் பற்றி ஏதும் பேசவில்லை). அந்த வகையில் பார்க்கும்போது மிகப்பெரிய வெற்றி பெற்ற லகான் திரைப்படத்தின் பாதிப்பில், கிரிக்கெட் போட்டி என்கிற ஆதார விஷயத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, அதில் முழுக்க முழுக்க நகைச்சுவையைக் கலந்து பட்டாசு கிளப்பி இருக்கும் படம்தான் போட்டா போட்டி. இந்திய கிரிக்கெட் அணிக்காக ஆடிய தமிழ்நாட்டின் சடகோபன் ரமேஷ் இந்தப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார்.


மதுரைக்குப் பக்கத்தில் இருக்கும் உப்பார்பட்டி கிராமம். கொடைவாணன், கொலைவாணன் என்கிற ரெண்டு பங்காளிகளுக்கும் ஆகாது. எதற்கெடுத்தாலும் சண்டை. இதில் கொலைவாணன் சீரியஸ் ஆசாமி என்றால் கொடைவாணன் காமெடி பீஸ். இருவருமே தங்கள் மாமன் மகளான ரஞ்சிதத்தை விரும்புகிறார்கள். யார் அவளைத் திருமணம் செய்வது என்பதற்காக ஒரு கிரிக்கெட் போட்டி நடக்கிறது. கொடைவாணன் குரூப்பிடம் ரமேஷ் கோச்சாக சேர்கிறார். ஊரில் இருக்கும் மலையை உடைத்து பணம் பண்ண நினைக்கும் வெளிநாட்டு குரூப் கொலைவாணனிடம் சேர்க்கிறது. மேட்சில் யார் ஜெயித்தது, ரஞ்சிதம் யாரைத் திருமணம் செய்தாள், தந்திர மனிதர்களிடமிருந்து மலை தப்பியதா என்பதை விழுந்து விழுந்து சிரிக்கும்படியாக சொல்லிப்போகும் கதை.

படத்தின் உண்மையான நாயகன் கொடைவாணனின் அல்லக்கையாக வரும் அவதாரம் என்கிற பாத்திரத்தில் நடித்திருக்கும்அவதார்கணேஷ்தான். கவுண்டர் + சந்தானம் காம்பினேஷன் என்றால் எப்படி இருக்கும்? அதுதான் இவர். டயலாக் டெலிவரியும் அலப்பறையும் என அட்டகாசமாக படம் முழுக்க பட்டையைக் கிளப்பி இருக்கிறார் மனிதர். அதே மாதிரி மனதை அள்ளிக் கொள்ளும் இன்னொரு ஜீவன் கொடைவாணனாக வரும் ஆர்.சிவம். ஜூவிலிருந்து தப்பி வந்த உர்ராங் உட்டான் மாதிரி இருந்து கொண்டு விஜய் ரசிகராக அறிமுகம் ஆகும் காட்சியிலேயே கலக்குகிறார். ராசுக்குட்டி பாக்யராஜ் மாதிரியான கேரக்டர். ஆரம்பத்தில் கொஞ்சம் கடுப்பு வந்தாலும் போகப் போக ரசிக்க வைக்கிறார். கடைசியில் காதலியைத் தாரை வார்க்கும் தியாகியாகிறார்.


கிரிக்கெட் சம்பந்தமான படம் என்பதால் தப்பிக்கிறார் ரமேஷ். ஓகே என்கிற ரீதியிலான நடிப்பு. வெளிநாட்டுக்காரர்கள் நம் மண்ணை எப்படி எல்லாம் நாசம் செய்கிறார்கள் என்று ஊரார் மத்தில் பேசும் காட்சியில் இன்னும் கொஞ்சம் நன்றாகச் செய்திருக்கலாம். நாயகி ரஞ்சிதமாக வரும் ஹரிணி கொஞ்சம் சமிக்ஷா போலவும் கொஞ்சம் ஜெயா சீல் போலவும் இருக்கிறார். பாவாடை சட்டையில் அலையும் கிராமத்துப் பெண்ணுக்கு பொருத்தமான அழகு. வில்லன் கொலைவண்ணனாக வரும் உமர் எதற்கெடுத்தாலும் ஜெயிக்கணும் நான் ஜெயிக்கணும் என்று சீரியசாக காமெடி பண்ணுகிறார். அது ஏன்யா கிராமத்துப் பெரிய மனுஷ வில்லன் என்றாலே உடம்பில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு எதிரில் சாணி தட்டும் வேலைக்காரியை ரசிக்க வேண்டுமா?

அருள்தேவின் இசையில் இதுவரை இதுவரை பாட்டும், டிரையெனிங் எடுக்கும் பாட்டும் கேட்கும்படியானவை. அவரும் ஒரு பாட்டுக்கு சம்பந்தமே இல்லாமல் வந்து இங்கிலீஷ் ஸ்டைலில் நீச்சலுடைப் பெண்களோடு ஆடிவிட்டுப் போகிறார். ஒளிப்பதிவாளப் புண்ணியவான் கோபி அமர்நாத் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் கிராமத்தை கண்ணுக்குக் குளிர்ச்சியாக படம் பிடித்திருக்கிறார். அதிலும் இதுவரை பாட்டு படமாக்கி இருக்கும் விதம் கொள்ளை அழகு. படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு ஆள் எடிட்டர் ராஜா முகமது. முதல் பாதி ஆரம்பித்ததும் தெரியவில்லை. முடிந்ததும் தெரியவில்லை. அத்தனை வேகம். நன்றாகச் செய்திருக்கிறார்.


கதை திரைக்கதை வசனம் எல்லாம் யுவராஜ் என்கிற புதியவர். நல்வரவு. இந்தப்படம் முழுக்க நம்மை யோசிக்க விடாமல் தொடர்ச்சியாக சிரிக்க வைத்துக் கொண்டிருப்பது இயக்குனரின் பலம். குறிப்பாக வசனங்கள். ரொம்ப நுட்பமாக கவனித்துச் சிரிக்கும் இடங்கள் படத்தில் நிறைய இருக்கிறது. கிரிக்கெட் என்கிற ஒரு விஷயத்தை மட்டும் சொல்லாமல் அதில் கமர்ஷியல் படத்துக்குத் தேவையான எல்லா விஷயங்களையும் சரியாகக் கலந்து கட்டி அடிப்பதில் யுவராஜ் ஜெயிக்கிறார்.

படத்தில் சில குறைகளும் இல்லாமல் இல்லை. படத்தில் லாஜிக்கே கிடையாது. இரண்டாம் பாதியில் சற்றே தொய்வு தரும் காட்சியமைப்புகள். முக்கால்வாசி கிராமத்து மனிதர்களையே நடிக்க வைத்திருப்பதால் ஒரு சில இடங்கள் நாடகம் போல இருக்கிறது. வசனத்தில் அங்கங்கே தென்படும் இரட்டை அர்த்தங்களும் தேவை இல்லாதவை. கடைசி கிரிக்கெட் காட்சிகள் அத்தனை பரபரப்பு இல்லாமல் இருப்பதும் ஒரு சின்ன குறை. இருந்தாலும், இவை எல்லாவற்றையும் மீறி, நல்லதொரு நகைச்சுவைப் படத்தைக் கொடுத்த இயக்குனருக்கு வாழ்த்துகள்.

போட்டா போட்டி - சிரிப்புச் சரவெடி

6 comments:

நாய் நக்ஸ் said...

ஹாப்பி பிரிண்ட்ஷிப் டே

நாய் நக்ஸ் said...

டோவ்ன்லோடு பண்ணிடுவோம்

Anonymous said...

எங்கேயோ அவசரமா கிளம்புற நேரத்துல... சரி இந்த விமர்சனத்தை போட்டு போயிடலாம்னு போட்ட பதிவா நண்பா?/ வேகமா பதிவு செய்து முடிச்ச மாதிரி இருக்கு..

அப்புறம் நட்பு தின வாழ்த்துக்கள் நண்பா

Raju said...

\\மேட்சில் யார் ஜெயித்தது, ரஞ்சிதம் யாரைத் திருமணம் செய்தாள்,\\

\\கடைசியில் காதலியைத் தாரை வார்க்கும் தியாகியாகிறார்.\\

சஸ்பென்ஸா எழுதுறாராமாம்!
:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

NAAI-NAKKKS
நன்றிங்க

ஷீ-நிசி
அட நம்ம கவிஞர்.. ரொம்ப நாளைக்குப் பிறகு.. வாங்க நண்பா.. நல்லா இருக்கீங்களா? எதையும் விரிவா சொல்ல வேணாம்னு எழுதினது.. பார்த்துக்கலாம்..

ராஜூ
ஓரமா ஒளிஞ்சு இருக்க வேண்டியது.. தப்புன்னா மட்டும் குடுகுடுன்னு ஓடியாந்திட வேண்டியது.. டக்கு பையா..:-))

லோகு said...

//ஜூவிலிருந்து தப்பி வந்த உர்ராங் உட்டான் மாதிரி இருந்து கொண்டு விஜய் ரசிகராக//

அப்படினா மிகப் பொருத்தமான பாத்திர தேர்வுன்னு சொல்லுங்க.. :)

*******

ரொம்ப நாளைக்கு பிறகு உங்களை படிப்பத்தில் மகிழ்ச்சி.. எப்படி இருக்கீங்க..