April 9, 2012

உதிரிப்பூக்கள் - 10

சின்னப் பிள்ளையாய் இருந்த காலத்தில் இருந்தே ஆசிரியர் பணி மீது எனக்கு மிகுந்த ஈர்ப்பு உண்டு. அதற்குக் காரணம் இந்திரா அம்மா. என் அம்மாவின் உடன்பிறந்த தங்கை. தமிழ்ப் பேராசிரியை. விளாங்குடியில் ஒரு யூனியன் ஸ்கூலில் பணி. இருபத்தைந்து வருடங்கள் வேலை பார்த்த பிறகு சமீபமாகத்தான் ஓய்வு பெற்றார்.

வீட்டுக்கு வரும் மாணவர்கள் இந்திரா அம்மாவுக்குத் தரும் மரியாதையும் ஆசிரியர் பணியின் மீது அம்மாவுக்கு இருந்த பெருமையும் என்னையும் பற்றிக் கொண்டதில் ஆச்சரியம் இல்லை. பொறியியல் படிப்பில் சேர்ந்த போதே எனது முடிவு தெளிவாக இருந்தது. படிப்பு முடிந்தவுடன் நான் ஆசிரியராகப் போகிறேன்.

இன்றைக்கு நான் விரும்பிய வேலையை முழுமனதாகச் செய்து வரும் திருப்தி எனக்கு இருக்கிறது. என்னுடைய ஆசிரியர்கள் என்னிடம் எப்படி இருக்க வேண்டும் என நான் விரும்பினேனோ, அது மாதிரியான ஒரு ஆசிரியராகவே இருக்க முயற்சிக்கிறேன். பாடங்களைக் காட்டிலும் அதனை நடத்தும் ஆசிரியரைப் பிடித்து விட்டாலே போதும், மாணவர்கள் எளிதில் படித்து விடுகிறார்கள் என்பதாகப் புரிந்து கொண்டிருக்கிறேன். அத்தோடு , படிப்பு என்பதைத் தாண்டி, ஒரு மாணவனை நல்ல மனிதனாக உருவாக்குவதும் ஒழுக்கத்தைக் கற்றுத் தருவதும் ஆசிரியர்களே என்பதையும் தீவிரமாக நம்புகிறேன்.

ஆசிரியர்களைப் பொறுத்தவரை நல்லவர் கெட்டவர் என்றெல்லாம் கிடையாது. பிடிக்கும் பிடிக்காது அவ்வளவே. ஏதேனும் ஒரு விசயம் பிடித்துப் போய்விட்டால் வாழ்வில் கடைசி வரைக்கும் மறக்க முடியாதவர்களாக அவர்கள் ஆகி விடுவார்கள். அது மாதிரியான நிறைய மனிதர்கள் என் வாழ்வில் உண்டு.

ன்னுடைய மொத்த பள்ளிப்படிப்பும் ஜீவாநகரில் இருக்கும் செவந்த் டே அட்வெண்டிஸ்ட் பள்ளியில்தான் முடிந்தது. நான் எல் கே ஜி சேர்ந்த போது அங்கே ஆசிரியராக சேர்ந்தவர் குருராஜ் சார். +2 படித்து முடிக்கும்வரை எனக்கு பள்ளியில் நல்லதொரு ஆசானாகவும் நண்பராகவும் இருந்தவர்.

நல்ல படிய வாரிய சுருட்டை முடி. பெரும்பாலும் வெள்ளை சட்டை கருப்பு பேண்ட். முகத்தில் எப்போதும் தொலைந்து போகாத சிரிப்பு. அத்தனைப் பெற்றோரிடமும் தன்மையாகப் பழகக் கூடியவர். இதெல்லாம்தான் குருராஜ் சாருக்கான அடையாளங்கள். மற்ற ஆசிரியர்கள் மாணவர்கள் பற்றிக் குறை சொல்லும்போதெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் மனிதர் என்பதால் எங்கள் எல்லாருக்குமே சாரை ரொம்பப் பிடிக்கும்.

எந்தப் பிரச்சினை என்றாலும் தைரியமாகப் பகிர்ந்து கொள்ளக் கூடிய நல்ல மனிதர் என்றாலும் எனக்கு அவரிடம் பிடிக்காத ஒரு விசயமும் இருந்தது. அது அவருடைய தீவிரமான கடவுள் விசுவாசம். மதம் சார்ந்த என்னுடைய நம்பிக்கைகளோ அப்போது வேறு மாதிரி இருந்தன. உங்க நம்பிக்கைகளை உங்களோட வச்சுக்கோங்க சார் என்றால் மனிதர் கேட்க மாட்டார். நல்ல விசயத்தையும் உண்மையையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லத்தாண்டா நான் இங்க வந்திருக்கேன் என்று திருப்பி அடிப்பார். வகுப்பில் எங்களுக்கு மாரல் பாடங்கள் நடத்துவது அவர்தான் என்பதால் பைபிளில் இருந்து கதை கதையாகச் சொல்வார். கூடவே சில ஏவுகணைகளும் வரும்.

முப்பத்து முக்கோடி தேவர்கள்னு சொல்றாங்களே.. அவங்க எல்லாம் யாரு தெரியுமா? ஆதியில கடவுள்கிட்ட நூறு கோடி தேவதைகள் இருந்தாங்க. அதுல லூசிஃபர்னு சொல்ற சாத்தான் பிரிஞ்சு வந்து போது மூணுல ஒரு பங்கு தேவதைகள் அவனோட போயிட்டாங்க. அவங்கதான் இந்த முப்பத்து முக்கோடி தேவர்கள். புரியுதா.. அத்தனையும் பேய்டா தம்பிகளா..”

அது எப்படிறா அவரு நம்ம சாமியை எல்லாம் சாத்தான்னு சொல்லலாம் என்று பையன்கள் உள்ளுக்குள் சடைத்துக் கொண்டாலும் சார் கதை சொல்லும் அழகுக்காகவே கிளாஸ் களைகட்டும். அவ்வப்போது தனது வாழ்க்கையில் நடந்ததாக சில சம்பவங்களையும் எடுத்து விடுவார்.

எப்பவும் வண்டியை காம்பவுண்டுக்கு வெளில நிறுத்துவேன். நேத்தைக்கு சாயங்காலம் மனசுக்குள்ள ஒரு குரல். வேணாம் வண்டியை உள்ளே நிறுத்துன்னு. சரின்னு நானும் வண்டியை வீட்டுக்கு உள்ள நிறுத்திட்டேன். காலைல எழுந்து பார்த்தா காம்பவுண்ட்ல இருந்த அத்தனை வீட்டுலயும் வண்டி திருட்டு போயிருக்கு. நம்ம வண்டி மட்டும் தப்பிச்சிருச்சு. எல்லாம் கடவுளோட கிருபைதான்ப்பா”.

அது எப்படி சார் உங்க ஒருத்தருக்கு மட்டும் உதவிட்டு தான் படைச்ச மத்த எல்லாரையும் அவதிப்பட வைக்கிறவரு நல்ல சாமியா இருக்க முடியும்?” குனிந்து கொண்டு ஆனந்தகிருஷ்ணன் கத்துவான்.

யாருடா அந்த லூசுப்பய.. ஏசுவையே சந்தேகப்படுறதுஎனக் கோபப்படுவார். ஆனால் அதெல்லாம் சில நிமிசம்தான். பிறகு மீண்டும் சாந்தசொரூபியாக மாறி கதையைத் தொடர ஆரம்பித்து விடுவார். கிளாசுக்கு வெளியே முற்றிலும் வேறொரு நபராக மாறி அனைவருக்கும் நெருக்கமான மனிதராக இருப்பார்.

பள்ளி முடியும் தினம். ஆசிரியர்கள் சார்பில் எங்கள் அனைவருக்கும் ஃபேர்வெல் ஏற்பாடு செய்திருந்தார்கள். நிகழ்வு முடிந்து ஒவ்வொருவர் பற்றியும் குருராஜ் சார் பேசிக்கொண்டே வந்தார். கடைசியாக என்னைப் பற்றி அவர் சொன்னதுதான் அன்றைய ஹைலைட்.

நேற்றைக்கு இரவு கிறிஸ்துவோடு பேசிக் கொண்டிருந்தேன். அவர் சொன்னார். கண்டிப்பாக ஒருநாள் கார்த்தி உண்மையானதொரு கிருஸ்துவனாக மாறுவான்..” கிளாசே கொல்லென்று சிரித்து விட்டது.

மனிதர் அசையாமல் மீண்டும் சொன்னார். “எனக்கு நம்பிக்கை இருக்கு. அவன் ரொம்ப நல்லவன். உண்மையை உணர்ந்து அவன் ஒருநாள் கண்டிப்பா கடவுளை ஏத்துக்குவான்”.

பள்ளி முடித்த பின்பாக கல்லூரி, வேலை என்று சில பல வருடங்களாக சாரைப் பார்க்க முடியவில்லை. சில மாதங்களுக்கு முன்பு திடீரென்றுதான் அது தோன்றியது. நாம் படித்த பள்ளிக்குப் போய்ப் பார்த்தால் என்ன? கிளம்பிப் போனேன். பள்ளி நிறையவே மாறி இருந்தது. பிரைமரி ஸ்கூல் தனியாகவும் மேல்நிலை வகுப்புகள் தனியாகவும் என்று பிரித்திருந்தார்கள்.

பிரைமரி ஸ்கூலின் ஹெட் மாஸ்டராக குருராஜ் சார். அவருக்கு முதலில் என்னை அடையாளம் தெரியவில்லை. இன்னார் என்று சொன்னதும் ரொம்ப சந்தோசப்பட்டார். நானும் ஆசிரியராகத்தான் இருக்கிறேன் என்றதும் மனிதருக்கு இருப்புக் கொள்ளவில்லை. எழுந்து வந்து கட்டிக் கொண்டார். நிறைய நேரம் மகிழ்ச்சியாக அவரோடு உரையாடி விட்டுக் கிளம்பினேன். வெளியேறும்போது தயங்கியபடிக் கேட்டார்.

இப்பவாவது கடவுளை ஏத்துக்கிட்டியாடா..”

சிரித்தபடி சொன்னேன். “இல்லை சார். முந்தி ஏசு கடவுள் இல்லைன்னு உங்கக்கிட்ட வம்பு வளர்ப்பேன். இப்பவெல்லாம் கடவுளே இல்லைன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்.”

அடப்பாவி.. நீ மாறுவ. கண்டிப்பா ஏசு உன்னை ரட்சிப்பார்”. சிரித்தபடி இதைச் சொன்னபோது அவர் கண்களில் பல வருடங்கள் முன்பாகப் பார்த்த அதே நம்பிக்கையும் கருணையும். இன்னுமா இந்த உலகம் என்னைய நம்புது?

ருணாச்சலக் கவிராயர் - சிறுகுறிப்பு வரைக

இவர் தமிழின் புகழ்பெற்றக் கவிஞர். சிவபெருமானைப் பார்த்து அதாண்டா இதாண்டா அருணாச்சலம் இவந்தாண்டா எனப் பாடியதால் இந்தப் பெயர் பெற்றார்

பரிட்சையில் இப்படி எழுதி வைத்தால் எந்த ஆசிரியருக்காவது கோபம் வராமல் இருக்குமா? எல்லாருமே கொந்தளித்து விடுவார்கள், ஒரே ஒருவரைத் தவிர. அவர் கஜேந்திரன் சார். எட்டாவது முதல் பனிரெண்டாப்பு வரைக்கும் எனக்குத் தமிழ் சொல்லித்தந்த மகாத்மா. அவர் வேலைக்குச் சேர்ந்த சில நாட்களிலேயே நான் அவருக்கு ரொம்ப நெருக்கமானவனாக ஆகி விட்டிருந்தேன்.

அப்போதெல்லாம் பணம் கொடுத்துப் புத்தகங்கள் வாங்க முடியாத சூழலில் எனது வீடு இருந்தது. கஜா சாருக்கு இது தெரியும் என்பதால் பள்ளி முடிந்ததும் அவரது வீட்டுக்கு என்னையும் கூட்டிக் கொண்டு போவார். அவர் வீட்டில் எல்லாப் பத்திரிக்கைகளும் வாங்குவார்கள் என்பதால் அங்கேயே அமர்ந்து எல்லாவற்றையும் வாசித்த பின்பு கிளம்புவேன். பள்ளிக்கான புத்தகங்களையும் தன் செலவில் அவரே வாங்கிக் கொடுப்பார். ஆக மொத்தம் வகுப்பில் அவருடைய செல்லப்பிள்ளை நான். அதனாலேயே வகுப்புக்குள் எனக்கு கஜா சாரின் ஒற்றன் என்கிற பட்டப்பெயர் கூட இருந்தது.

கஜா சார் பாடம் நடத்தும் அழகே தனி. சினிமா மீது அவருக்கு இருந்த பிரியம் அலாதியானது. பைத்தியம் என்று கூட சொல்லலாம். ஆகவே அவர் எல்லாவற்றுக்கும் சினிமாவில் இருந்து ஒரு எடுத்துக்காட்டு சொல்லுவார். பாஞ்சாலி சபதம் பற்றிப் பாடமா? கிருஷ்ணன் பற்றி சொல்ல வேண்டுமா? அவருக்கு உடனே என்.டி.ராமாராவ் ஞாபகம் வந்துவிடும். கட்டபொம்மன் பற்றிய வரலாற்றுப் பாடமா? சிவாஜியைப் போல உறுமிக் கொண்டே மொத்த வசனத்தையும் பேசிக் காட்டுவார். மொத்தத்தில் அவர் கிளாசுக்குள் இருந்தால் நேரம் போவதேத் தெரியாது.

நான் +2 முடிக்கிற நிலையில் இருந்தபோது சாருக்குத் தூத்துக்குடிக்கு மாற்றல் ஆனது. அவர் கிளம்பிப் போனபோதுதான் என் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு ஆசிரியருக்காக நான் அழுதது. இப்போது சார் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் தமிழ் மீதான எனது ஆர்வத்தைக் கண்டறிந்து என்னை உற்சாகப்படுத்திய கஜா சாரை என்னால் என்றைக்கும் மறக்க முடியாது.

தீபாவளிப் பாண்டியன் பொங்கல் பாண்டியன் எனக் கிண்டல் செய்தபடி இருக்கும் சுந்தர்சிங் ஹெட்மாஸ்டர், மவுன கீதங்கள் சரிதாவை ஞாபகப்படுத்தும் மாரியம்மாள் மிஸ், உங்க பையன் பெரிய ரவுடியா ஸ்ட்ரைக் எல்லாம் பண்ணுவானா என்று என் அம்மாவிடம் முறைத்த வில்சன் சார், கணக்கு சரியாகப் போடாவிட்டால் கையின் ஆடுசதையைப் பிடித்துக் கிள்ளி வைக்கும் முத்துசிதம்பரம் சார், ரோட்டில் அடிபட்டுக் கிடந்த பிள்ளைக்கு ரத்ததானம் செய்து விட்டு லேட்டாக ஸ்கூலுக்கு வர நீ நல்ல மனுசனா வருவடா என்று தோள் சாய்த்து அணைத்துக் கொண்ட விஜயகுமார் சார், படம் சரியாக வரையாமல் வந்த ராம்பிரசாத்தை ஏதோ எடக்காக கேள்வி கேட்டான் என்று நிஜமாகவே எத்தி ஃபுட்பால் ஆடி மாணவர்கள் வயிற்றில் புளியைக் கரைத்த மணிமாறன் சார் (என் வாழ்வில் எனக்குச் சுத்தமாகப் பிடிக்காமல் போன ஒரே மனிதர்), அர்த்தமே இல்லாமல் என்னை அடித்தார் என்பதற்காக நண்பர்களோடு சேர்ந்து பெரியாரில் வைத்து நாங்கள் அடி பொளந்த சுரேஷ் சார் (எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என இன்றைக்கும் நான் அதற்காக வருந்துவதுண்டு).. எத்தனை எத்தனை மனிதர்கள் ஞாபகத்தின் அடுக்குகளில் இருந்து கிளம்பி வந்து கொண்டே இருக்கிறார்கள்.

பள்ளியில் இருந்த மாதிரி நான் கல்லூரியில் ஆசிரியர்களோடு நெருக்கமாக இருந்தது இல்லை. மிஸ் என்பது இல்லாமல் போய் மேடம் எனச் சொல்வதே சங்கடமாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. அதே போலவே சார்களும் முடிந்த அளவு மாணவர்களிடம் இருந்து விலகியே இருப்பார்கள் என்பதால் பெரிய அளவில் யாரோடும் பழக்கம் இருந்தது கிடையாது. ஆனால் கல்லூரி காலத்தில் ஒரு ஆசிரியையோடு நடந்த மோதல் காலம் முழுதும் என்னைத் துரத்தும் என்பது மட்டும் எனக்குத் தெரியாமல் போய் விட்டது.

ந்த மேடமின் பெயர் ஞாபகத்தில் இல்லை. ஆனால் அவருக்கு நாங்கள் வைத்த பட்டப்பெயர் “டெட்பாடி”. பாடம் நடத்தினாலும் சரி, சிரித்தாலும் சரி, கோபப்பட்டாலும் சரி.. எல்லாவற்றுக்குமே முகத்தில் ஒரே உணர்ச்சிதான். உம்மென்று இருப்பார். எனவே அவர் பெயர் செல்லமாக டெட்பாடி.

ஐந்தாவது செமெஸ்டரில் எனக்கு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் அவர்தான் எடுத்தார். அந்த செமஸ்டர் முழுக்க கலை நிகழ்வுகளைச் சாக்காக வைத்து நான் வகுப்புக்கே போகவில்லை. வகுப்புக்கள் முடிய ஒரு வாரம் இருக்கும்போதுதான் முதல் முறையாக நம் டெட்பாடியின் கிளாசில் போய் அமர்ந்தேன். உள்ளே நுழைந்தவர் என்னை வித்தியாசமாகப் பார்த்தார்.

“தம்பி, இது இன்ஸ்ட்ருமெண்டேசன் கிளாசுப்பா..”

“தெரியும் மேடம். நானும் இந்த கிளாஸ் தான்..”

“அப்படியா. நான் உன்னை இங்க பார்த்ததே இல்லையே? எங்க உன் நோட்டை எடு பார்க்கலாம்..”

உக்கும். முதல் நாள் அன்றுதான் கிளாசுக்கே வருகிறேன். இதில் எந்த நோட்டுக்குப் போக? அமைதியாக எழுந்து நின்றேன். நீயெல்லாம் என்ன டாஷுக்குப் படிக்க வருகிறாய் என்கிற ரீதியில் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார். இதெல்லாம் நமக்குப் புதுசா என்ன? கண்டு கொள்ளாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் திட்டி திட்டிக் களைத்துப் போனவர் வகுப்பை விட்டு வெளியே போகும்படி சொன்னார். நான் அசராமல் உள்ளேயே நின்றிருந்தேன். வெறுத்துப் போய் நெருங்கி வந்தவர் என்னிடம் தீர்க்கமாகச் சொன்னார்.

“என்ன திமிரா? என் கையில் இருபது மார்க் இண்டர்னல் இருக்கு தெரியும்ல?”

என்னால் அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாமல் திருப்பிச் சொன்னேன். “தெரியும் மேடம். அதே நேரம் என் கையில் எம்பது மார்க் எக்ஸ்டர்னல் மார்க் இருக்கு. நான் எழுதி பாஸ் ஆகிக்குறேன்” சொல்லி முடித்த கையோடு வகுப்பை விட்டு வெளியேறினேன்.

பிறகு அவர் துறைத்தலைவரிடம் போய் புகார் சொன்னதும் என்மீது பிரியம் கொண்ட துறைத்தலைவர் அவன் நல்ல பையன் படிச்சுடுவான் ஏதோ தெரியாமப் பண்ணிட்டான் என எனக்காக்ப் பரிந்து பேசி காப்பாற்றி விட்டதும் வரலாறு. அன்றைக்கு பிரச்சினை ஓய்ந்து வெளியே வரும்போது டெட்பாடி என்னிடம் சொன்னது. “வாத்தியார மதிக்காத நீயெல்லாம் நல்லாவா இருக்கப் போற. கண்டிப்பா இதுக்காக வருத்தப்படுவ..”

சரி. இதை எல்லாம் நான் ஏன் இப்போது சொல்ல வேண்டும்? கடந்த பத்து வருடமாக நான் வாத்தியாராகத்தான் இருக்கிறேன். ஒவ்வொரு வருடமும் நான் எடுக்கும் பாடங்களில் கட்டாயமான ஒன்றாக இருப்பது - கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் மட்டுமே. சும்மாவா சொன்னார்கள்? ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்.

13 comments:

Romeoboy said...

\\அவருக்கு நாங்கள் வைத்த பட்டப்பெயர் “டெட்பாடி”.///

இப்போ உங்களுக்கு ஒரு பேரு இருக்குமே அது என்ன ??:))

anujanya said...

//நண்பர்களோடு சேர்ந்து பெரியாரில் வைத்து நாங்கள் அடி பொளந்த சுரேஷ் சார் //

அடப்பாவி. இப்படி ஒரு வில்லனா நீயி? வணக்கம் சார்.

அனுஜன்யா

King Viswa said...

அனைத்து விஷயங்களையும் தன்னைப்பற்றி முன்னிலைப்படுத்தாமல் நேர்மையாக எழுதுவது என்பது மிகவும் கடினமான ஒன்று.

உங்களின் நேர்மை எனக்கு பிடித்திருக்கிறது.

ஒரே ஒரு கேள்வி: இதுவரை ஒருவர் கூடவா உங்கள் ப்ளாக்கை படித்துவிட்டு சண்டைக்கு வரவில்லை

CS. Mohan Kumar said...

//சிவபெருமானைப் பார்த்து அதாண்டா இதாண்டா அருணாச்சலம் இவந்தாண்டா எனப் பாடியதால் இந்தப் பெயர் பெற்றார்//

:))

இராஜராஜேஸ்வரி said...

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்.

அமுதா கிருஷ்ணா said...

படிக்க மிக நன்றாக இருந்தது.

KSGOA said...

உதிரிப்பூக்கள் தொடர்ந்து படிக்கிறேன்.ரொம்ப நல்லா இருக்கு.

manjoorraja said...

சுவாரஸ்யமான அனுபவங்களை சுவைப்பட எழுதியுள்ளீர்.

பாராட்டுதல்கள்

ஆ.ஞானசேகரன் said...

நல்ல உதிரிபூக்கள்...

sakthi said...

ka pa its intresting :))

கார்த்திகைப் பாண்டியன் said...

ரோமியோ.. நமக்கு பசங்க வச்சு இருக்க பேரு போந்தாக்கோழி..:-))

அனு..:-)))

விஸ்வா.. அது வேற நடக்கனும்னு ஆசையா உங்குளுக்கு? விட்டுருங்க நண்பா.. ஐயம் பாவம்..:-))

கார்த்திகைப் பாண்டியன் said...

மோகன் குமார்
இராஜராஜேஸ்வரி
அமுதா கிருஷ்ணா
KSGOA
manjoorraja
ஆ.ஞானசேகரன்
sakthi


வாழ்த்துக்கு நன்றி நண்பர்களே

சித்திரவீதிக்காரன் said...

குருவே சரணம்!