April 15, 2009

சிகரெட் - தனக்குத்தானே கொள்ளி..!!!!

முன்பெல்லாம் தியேட்டர்களில் படம் போடுவதற்கு முன்பாக ஐந்து நிமிடங்கள் வரை ஓடும் செய்திப்படங்கள் காமிப்பார்கள். அதை பார்ப்பதற்காகவே தியேட்டருக்கு சீக்கிரம் போகும் பழக்கம் எனக்கு இருந்தது. இந்திய நாட்டுத் தலைவர்கள், பயணங்கள், தியாகிகள், சின்ன சின்ன கதைகள் என்று சுவாரசியமாக இருக்கும். செய்திப்படங்கள் போடும் பழக்கம் இப்போது சுத்தமாக மறைந்தே போய் விட்டது. ஆனால் அதிசயமாக, சமீபத்தில் அயன் படம் பார்க்க போனபோது மதுரையில் உள்ள தியேட்டரில் ஒரு படம் போட்டார்கள். அது ஒரு கார்ட்டூன் படம். அந்த படத்தின் பெயர்.." The first puff - புகைப்பழக்கத்தின் முதல் தருணம்.."
ஒரு சேரின் மேல் மனிதன் ஒருவன் அமர்ந்து இருக்கிறான். அவனுடைய உடல் இதய வடிவத்தில் இருக்கிறது. கீழே கிடக்கும் ஒரு பீடித்துண்டை எடுத்துப் புகைக்கிறான். அடுத்து அவன் புகைப்பது சிகரெட்டாக மாறுகிறது. இப்போது சிந்திக்கிறான். ஒரு குழாயை எடுத்து அதில் கஞ்சாவை நிரப்பி குடிக்கிறான். கடைசியாக போதை மருந்து. பேப்பரில் போட்டு சூடு பண்ணி அதையும் புகைக்கிறான். அவன் இவ்வாறு செய்து கொண்டிருக்கும்போது அவனுடைய இதய வடிவிலான உடல் கொஞ்சம் கொஞ்சமாக கறுப்பாக மாறி வருகிறது. அவனுடைய இதயத்தை க்ளோசப்பில் காட்டுகிறார்கள். வேகமாக கறுப்பாக மாறி அதிவேகமாக துடிக்கத் தொடங்குகிறது. ஒரு கட்டத்தில் படாரென வெடித்துச் சிதறுகிறது.
படத்தின் கடைசியில் இரண்டு வரிகள் தோன்றுகின்றன. " the first puff - might be your last puff". மொத்தப்படமும் ரெண்டே நிமிடம்தான். ஆனால் சொல்ல வந்த விஷயத்தை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் தெளிவாக சொல்லி இருந்தார்கள். இசையும் அருமை. எனக்குத் தெரிந்த வரை நம் மக்கள் உடம்புக்கு ஆகாது எனத் தெரிந்தும் செய்யும் ஒரு கெட்ட காரியம் என்றால் அது புகை பிடிப்பதுதான். இதில் பெரும் கொடுமை என்னவென்றால், அன்றைக்கு தியேட்டரில்.. இடைவேளையின் போது என்னால் வெளியே நிற்கவே முடியவில்லை. எங்கும் புகை மண்டலம். தண்ணி அடிப்பவர்களைக் கூட ஒரு கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். எங்காவது ஓரமாக மல்லாந்து விடுவார்கள்.. அவர்களால் மற்றவர்களின் உடல்நலம் பாதிக்கப் படுவதில்லை. ஆனால் சிகரெட் பிடிப்பவர்கள்..? தங்களின் உடல் நலத்தையும் கெடுத்து.. அடுத்தவரின் நிம்மதியையும் உடலையும் பாழ் பண்ணி (passive smoking)... இவர்களை என்ன செய்வது?
எனக்கு அரசியல் கட்சிகளில் சுத்தமாக பிடிக்காத ஒரு கட்சி பா.ம.க. அதிலும் டாக்டர் அன்புமணி ராம்தாஸ் சுகாதாரத் துறை அமைச்சராக ஆனபோது மண்டை காய்ந்து போனேன். ஆனால், அவர் வாழ்க்கையிலேயே செய்த ஒரே உருப்புடியான விஷயம்.. புகையிலைக்கு எதிராக போராடியதுதான் என்று சொல்வேன். அவர் அதை அரசியல் காரணங்களுக்காக செய்து இருக்கலாம். ஆனால் அந்த முயற்சி ரொம்ப நியாயமானதே. அன்புமணியின் வேண்டுகோளை ஏற்று ரஜினிகாந்த் தன்னுடைய படங்களில் புகை பிடிக்கும் காட்சி இடம்பெறாமல் பார்த்துக் கொண்டது ஒரு நல்ல உதாரணம். காரணம், நம் தமிழ் மக்களை சினிமா எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும். அதேபோல பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்ததை ஒழுங்காக நடைமுறைப்படுத்தி இருந்தால் எத்தனையோ மக்கள் சந்தோஷப்பட்டு இருப்பார்கள்.
கிட்டத்தட்ட 400 விஷப் பொருட்களையும், 4000 வேதியியல் பொருட்களையும் தன்னுள்ளே அடக்கியதுதான் சிகரெட். புகை பிடிப்பதனால் எட்டு நொடிக்கு ஒரு மரணம் நிகழ்கிறதாம். கேன்சர், இதய நோய்கள் என சிகரெட்டால் வரும் பிரச்சினைகள் ஏராளம். முக்கியமாக ஆண்மைக்குறைவு ஏற்படவும் சிகரெட் காரணமாக இருக்கிறது. புகைப்பவர்களை மட்டும் அல்லாது புகையை உள்வாங்கும் அருகில் இருக்கும் மனிதர்களையும் சிகரெட் வெகுவாக பாதிக்கிறது. இன்று வெளிநாடுகளில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் புகைக்கிறார்கள். இது அவர்கள் கர்ப்பமாக இருக்கும்போது சிசுவின் மரணத்திற்கு வித்திடுகிறது.
நீர் நிரம்பிய பாட்டில் ஒன்றில் சின்ன ஓட்டை விழுந்து தண்ணீர் ஒழுகி ஓடுவதைபோல.. மனிதன் புகைக்கும் ஒவ்வொரு தருணத்திலும் உயிர் கொஞ்சம் கொஞ்சமாய் உடலை விட்டு வெளியேறுகிறது. உண்மையை சொல்வதானால், மனிதன் உயிருடன் இருக்கும்போதே தனக்கு தானே வைத்துக் கொள்ளும் கொள்ளிதான் சிகரெட். புகைக்கும் நண்பர்களிடம் ஒரு வேண்டுகோள்... அடுத்த முறை நெருப்பை பற்ற வைக்கும்போது ஒன்றே ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் என்பது நீங்கள் மட்டும் அல்ல.. அதில் உங்கள் குடும்பமும் அடக்கம். உங்களை நம்பித்தான் அவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் புகைக்கும்போது அவர்களின் நலனையும் நம்பிக்கையையும் சேர்த்துத்தான் எரிக்கிறீர்கள். இதை படிக்கும் யாராவது ஒருவர் சிந்தித்தால் கூட அதுவே எனக்குப் போதும்..!!!
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

April 14, 2009

என்ன கொடுமை சார் இது...?

சனிக்கிழமை எங்கள் கல்லூரியின் ஆண்டுவிழா என்பதால் வேலை ஜாஸ்தி. ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டரை மாணவ நண்பர்களுடன் கோவையில் கொண்டாட முடிவாகி இருந்தது. மறுநாள் இறுதியாண்டு மாணவர்களின் பிரிவு உபச்சார விழா. எனவே மூணு நாலு நாளைக்கு பதிவுகள் பக்கம் சுத்தமா வர முடியாதுன்னு தெரிஞ்சு போச்சு. சரி.. அதுவரைக்கும் நம்ம கடை காலியா இருக்க வேணாமேன்னு ஏழெட்டு படத்த டவுன்லோட் பண்ணி.. ஒரு மொக்கை பதிவு போட்டேன். சும்மா நண்பர்களை ஓட்டுவது மட்டுமே எனது எண்ணம். எனக்குள் இருக்கும் ஒரு சிறுபிள்ளையின் விளையாட்டுத்தான் அது. ஒரு சில நண்பர்கள் அதை ரசித்து இருந்தனர். ஆனால் சில நண்பர்களுக்கு அது பிடிக்கவில்லை என்பதை பின்னூட்டத்திலும் அலைபேசியிலும் சொன்னார்கள். கார்த்தி எழுதுனா கொஞ்சம் உருப்புடியா இருக்கும்னு என்னை இன்னும் நம்பிக்கிட்டு இருக்கிற அந்த உள்ளங்களுக்கு நன்றி. அவங்ககிட்ட என் வருத்தத்த தெரிவிச்சுக்கிறேன். (கவனிங்க.. தலைவர் ஸ்டைல்.. வருத்தம்தான்.. )

இதுல ஒரு நொம்பலம் என்னன்னா.. நான் எழுதுனதுலே அதிகமான ஹிட்ஸ் இந்தப் பதிவுக்குத்தான் வந்திருக்கு.. 2000 ஹிட்ஸ்.. மனுஷன் உக்கார்ந்து யோசிச்சு நல்ல விஷயங்களா எழுதுனா அதை படிக்குற மக்கள் கம்மியாத்தான் இருக்காங்க.. ஆனா சும்மா எதையாவது எழுதி அதுக்கு தலைப்பு மட்டும் காமாசோமான்னு வச்சா.. (குறிப்பா இந்த 18 +).. கூட்டம் அள்ளுது.. என்ன கொடுமை சார் இது?

***************

மாணவ நண்பர்களுடன் அடிக்கடி ப்ளாகுகள் பற்றி பேசுவது உண்டு. போன வாரம் இதேபோல் பேசிக்கொண்டு இருக்கும்போது.. எஸ்ராவைப் பற்றி நான் எழுதியதையும் பின்பு அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததைப் பற்றியும் சொல்லிக்கொண்டு இருந்தேன். உடனே கேட்டுக் கொண்டிருந்த மாணவன் ஒருவன் சொன்னான்..

"சார், நீங்க சொல்ற மாதிரி நடக்கும்னா நானும் ஒரு ப்ளாக் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன் சார்..".

எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை. பரவா இல்லையே.. நாம பேசி ஒரு பையனுக்குள்ள ஆர்வத்த தூண்டிட்டோமேன்னு நினைச்சுக்கிட்டு அவன்கிட்ட கேட்டேன்..

" சொல்லுடா.. எதப்பத்தி எழுதப் போற.."

அதுக்கு அவன் சொன்னான்.. "சார்.. என் வாழ்க்கையின் லட்சியமே நமீதாவை சந்திக்கிறதுதான்.. அதனால நான் ப்ளாக்ல அவங்களைப் பத்தி எழுதி.. அவங்கள போய் பாக்கலாம்னு இருக்கேன்.."

நான் அதுக்கப்பறம் அவன்கிட்ட என்னத்தப் பேச..? ஆணியே புடுங்க வேண்டாம்னு பேச்ச நிப்பாட்டிட்டேன்.. என்ன கொடுமை சார் இது..?

***************

கிளாஸ்ல பாடம் நடத்துறது போக, அப்பப்போ மத்த விஷயங்களையும் டிஸ்கஸ் பண்ணுவது உண்டு. பொது அறிவு, முக்கியமான நிகழ்வுகள்.. இந்த மாதிரி. அப்படித்தான் ஒருநாள் மாணவர்கள் தங்களுடைய தொடர்பு கொள்ளும் திறனை (communication skills) வளர்த்துக் கொள்வது பற்றியும், ஆங்கிலத்தில் தப்பில்லாமல் பேசுவது பற்றியும் சொல்லிக்கொண்டு இருந்தேன்.

அப்போது ஒரு மாணவன் எழுந்து சொன்னான்.."சும்மா சொல்லாதீங்க சார்.. ஆங்கிலம் ஒன்னும் ரொம்ப நல்ல மொழி எல்லாம் கிடையாது.. அதுல நிறைய தப்பெல்லாம் இருக்கு.. எக்கச்சக்கமான உச்சரிப்பு பிராப்ளம் உண்டு.. தெரியுமா.."

"எப்படிடா சொல்ற..." - நான்.

அவன் போர்டுக்கு வந்து எழுதத் தொடங்கினான்.

"ma - இது என்ன சார்?"

"ம..."

"chi - இது என்ன சார்?"

"சி..."

"ne - இது என்ன சார்?" "நி.."

"இப்போ எல்லாத்தையும் சேர்த்து வாசிங்க... ma chi ne - மச்சினி தான.. அப்புறம் என் மெஷின்னு சொல்றாங்க? "

எனக்கு வாயடைச்சுப் போச்சு. உக்கார்ந்து யோசிப்பாங்களோ? அவன் அத்தோடு நிறுத்தவில்லை.

"on - இது ஆன் தான் சார்.. e - ஈ.. அப்போ சேர்த்து எழுதுனா one - ஆணின்னு தான சொல்லணும்.. ஏன் ஒன் அப்படின்னு சொல்றாங்க..."

தெய்வமே என்ன விட்டுடுன்னு கெஞ்சாத குறையா ஓடி வந்தேன். இந்த பயபுள்ளைகள கட்டி மேய்க்கிறதுக்கு உள்ள.. நாம நொந்து நூடுல்ஸ் ஆகிடுவோம் போல.. எ. கொ. சா. இ..?

***************

கடைசியாக.. ஒரு மாணவன் எனக்கு அனுப்பிய S.M.S...

"உலகின் எல்லா தலைசிறந்த இசைக் கலைஞர்கள் சேர்ந்து உருவாக்கக்கூடிய மென்மையான பாடல்கள் கூட.. எங்கள் ஆசிரியரின் தாலாட்டின் முன் தோற்றுப்போகும்.. "

(பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இந்த விரோதி ஆண்டு நண்பனாக அமைய.. தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. )

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

April 11, 2009

கதாநாயகிகளின் கவர்ச்சி படங்கள் (வயது வந்தவர்கள் மட்டும்....)














































ஹி.. ஹி.. ஹி.. நம்புங்கப்பா.. அந்தக் காலத்துல கவர்ச்சின்னா இவ்வளவுதான்.. அப்புறம் அந்தத் தலைப்பு.. வயதானவர்கள் மட்டும்னு போட வேண்டியது.. வயது வந்தவர்கள் மட்டும்னு கொஞ்சம் நாறிப் போச்சு.. சீ சீ.. மாறிப் போச்சு..

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

April 9, 2009

பிரியமான தோழிக்கு...!!!



என்னவென்று விவரிக்க இயலாத
ஏதோ ஒரு கணத்தில் எனக்கும்
உனக்குமான உறவு உருப்பெற்றது..!!

நாம் காதலர்கள் அல்ல..
இருந்தும்.. நம்
நட்பைக் காதலிக்கிறோம்..!!

எனக்குள் இருக்கும் உன்னை
உனக்குத் தெரியும்..
உனக்குள் இருக்கும் என்னை
எனக்குப் புரியும்..!!

வானம் அழுது தீர்த்த
ஒரு மாலை நேரத்தில்..
குடை மறந்த எனக்காய்
நீ நனைந்த நினைவுகளும்..

உன் சந்தோஷமும் துக்கமும்
என்னுடனாய் - பகிர்ந்து
கொண்ட சந்தர்ப்பங்களும்..

உன் அம்மா உன்னை
திட்டிய தினத்தன்று - என்
தோள் சாய்ந்து அழுத பொழுதுகளும்..

என் எல்லாப் பிறந்த நாளுக்கும்
முதல் மனுசியாய் நீ
சொன்ன வாழ்த்துக்களும்..

நான் அழுத போதெல்லாம்
கை படாமல் துடைத்த பாங்கும்..

தோழி..

நீ பெண்ணென்ற
போர்வைக்குள் இருப்பதால்..

நம் நட்பென்னும்
முகம் காட்ட இயலாதபோது..

ஆணாகப் பிறந்ததற்காக
எத்தனை அழுதிருக்கிறேன் தெரியுமா..?!!!

(இந்தக் கவிதையின் கரு என்னுடையது அல்ல... எப்போதோ படித்த கவிதை ஒன்றின் வரிகள் எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.. அத்துடன் என்னுடைய வார்த்தைகளையும் கோர்த்து எழுதி இருக்கிறேன்...)
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

April 8, 2009

ரயில் பயணங்களில்...!!!

மதுரை ரயில் நிலையம். ஈரோடு வழியாக பெங்களூர் வரை செல்லும் ரயிலுக்காக காத்திருந்தேன். பிளாட்பாரம் எங்கும் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக் கொண்டு இருந்தனர். வண்டி அரை மணி நேரம் தாமதமாக வந்தது. வண்டியின் உள்ளேயும் பயங்கர ஜனத்திரள். எல்லோருக்கும் பயணம் செய்வதற்கான ஏதோ ஒரு காரணம் இருந்து கொண்டே இருக்கிறது. கஷ்டப்பட்டு அடித்து பிடித்து ரயிலில் ஏறினால் நிற்கக் கூட இடம் இல்லை. என்னருகில்.. ஒரு பாட்டி கையோடு ஒரு சிறு குழந்தையையும் கூட்டி வந்து இருந்தார்கள்.

"தம்பி.. கொஞ்சம் இடம் விட்டீங்கன்னா வயசானவ உக்காந்துக்குவேன்.."

"பரவா இல்லை பாட்டி.. இப்படி கீழ உக்காருங்க.."

மெதுவாக கீழே அமர்ந்தவர் கால்களை நன்றாக நீட்டிக் கொண்டார். அவர் மடியில் அந்தக் குழந்தை படுத்துக் கொண்டது. சாவகாசமாக சாய்ந்து அமர்ந்து கொண்டார். பக்கத்தில் நடந்து போன ஒருவர் தெரியாமல் அவரை இடித்தபோது காச்மூச்சென்று கத்தத் தொடங்கி விட்டார். எனக்கு எங்கள் ஊர்ப்பக்கம் சொல்லும் விஷயம் ஒன்று ஞாபகத்துக்கு வந்தது. "இருக்க இடம் கொடுத்தால் படுக்க மடி கேட்பார்கள்.." சிரித்துக் கொண்டே நகர்ந்து வந்து கதவை ஒட்டி நின்று கொண்டேன். ரயில் நகரத் தொடங்கி இருந்தது. காற்று மிதமாக என் முகத்தில் அறைந்து கொண்டிருந்தது. இரவின் குளிர் காற்றில் எங்கும் பாவி இருந்தது.


தரையில் நிறைய பேர் உட்கார்ந்து இருந்தார்கள். என்னை ஒட்டி நின்று இருந்த சிலர் தங்களுக்குள் ஹிந்தியில் பேசிக்கொண்டு இருந்தனர். வடமாநிலத்தவர் போல.. வேலைக்காக இங்கே வந்துள்ளார்கள். எந்த நம்பிக்கையில் இவர்கள் தங்கள் சொந்த மண்ணை பிரிந்து வந்தார்கள்? எதை தேடி பயணம் செய்கிறார்கள்? இவர்களுடைய குடும்பத்தினர் இவர்களைப் பற்றி கவலைப் படுவார்களா? எனக்குள் நிறைய கேள்விகள். வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். எங்கும் இருள் படர்ந்து இருந்தது. மரங்களும் விளக்குக் கம்பங்களும் பின்னோக்கி சென்று கொண்டிருந்தன. எத்தனையோ ரகசியங்களை தனக்குளே புதைத்துக் கொண்ட இரவு என்னுடைய கேள்விகளையும் விழுங்கிக் கொண்டது.


வாசற்படியில் அமர்ந்து இருந்த ஒரு ஹிந்தி இளைஞன் காதில் செல்போனை மாட்டிக் கொண்டு சத்தமாக பாடி கொண்டு இருந்தான். எனக்கு மிகவும் பிடித்தமான பாடல். " பாகோ மே சலே ஆ..." நானும் மெதுவாக அந்தப்பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தேன். நான் பாடுவதை அவன் கவனித்து விட்டான். சட்டென்று நின்று போன பெருமழை போல, நத்தை தனது கூட்டுக்கள் ஒடுங்குவது போல் அவனுடைய பாடல் தானாகவே தொலைந்து போனது. எதற்காக அவன் பாடலை நிறுத்தினான்? நாம் எல்லாருமே மற்றவர் நம்மை கவனிக்க வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் அது நிகழும்போது நமக்கு என்னவோ அதில் விருப்பம் இல்லாததுபோல் நடிக்கிறோம். அவனுடைய சந்தோஷத்தை பறித்துக் கொண்டதுபோல் எனக்குள் ஒரு குற்ற உணர்ச்சி தோன்றியது. மெதுவாக ரயிலின் உள்ளே திரும்பி நின்று கொண்டேன். சற்று நேரம் கழித்து அவன் மீண்டும் மெல்லிய குரலில் பாடத் தொடங்கினான்.


ரயிலின் உள்ளே கலைத்துப் போட்ட சீட்டுக்களாய் மக்கள் எல்லா இடங்களிலும் உக்கார்ந்து இருந்தார்கள். கதவை ஒட்டிய முதல் கூபெவில் ஒரு குடும்பம் பொறுமையாக தாங்கள் கொண்டு வந்த புளிச்சாதத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. ஜன்னலை ஒட்டி ஒரு ஜோடி அமர்ந்து இருந்தது. புதுமணத் தம்பதி என்பது பார்த்தவுடன் புரிந்தது. பெண் ரொம்ப சின்னவராக இருந்தார். நிறைய பேசிக்கொண்டே வந்தார். அவள் கணவரோ அதில் சுவாரசியம் இல்லாமல் குமுதம் படித்துக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்தில் அந்தப் பெண் பேச்சை நிறுத்தி விட்டு ஜன்னலின் வழியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார். அந்தக் கண்களில் சொல்ல முடியாத ஏதோ ஒரு சோகம் தேங்கி நின்றது . இதற்குள் ரயில் திண்டுக்கல்லை அடைந்து விட்டு இருந்தது.


ரயிலுக்குள் இரண்டு குறவர்கள் ஏறினார்கள். அவர்கள் அணிந்து இருந்த உடையை துவைத்து பல மாதங்கள் இருக்கும். ரயிலில் நின்றவர்கள் எல்லாம் அவர்களைப் பார்த்து முகம் சுளித்தார்கள். ஒருவர் அவர்களிடம்.."டேய்.. இங்க எல்லாம் நிக்கக் கூடாது.. போ.. போய் கக்கூஸ் பக்கத்துல உக்காரு.." அவர்கள் எந்த விதமான எதிர்ப்பும் காட்டாமல் அங்கே போய் அமர்ந்து கொண்டார்கள். உதாசீனத்தை ஏற்றுக் கொள்ள இந்த சமூகம் அவர்களைப் பழக்கி விட்டதா? அவர்களுடைய இந்த நிலைக்கு அவர்கள் மட்டும்தான் காரணமா? எனக்குப் புரியவில்லை. ரயிலுக்குள் பார்த்தேன். அந்தப் பெண்ணின் கணவர் அவள் தோளின் மீது சாய்ந்து தூங்கி விட்டிருந்தார். நான் கையோடு எடுத்துப் போயிருந்த "பதினெட்டாம் நூற்றாண்டின் மழை"யில் ஆழ்ந்து போனேன். கரூர் வந்தபின்தான் உட்கார இடம் கிடைத்தது.

சிறிது நேரத்திற்குப் பின் வண்டி ஏதோ ஒரு ஸ்டேஷனில் நின்றது. ஏதாவது கிராசிங்கா இருக்கும் என்றார்கள். வெகு நேரமாக வண்டியின் உள்ளேயே இருந்ததால் மூச்சு முட்டுவது போல் இருந்தது. கொஞ்ச நேரம் கீழே நிற்கலாம் என்று இறங்கினேன். ராத்திரி பனிரெண்டு மணிக்கு ஒரு மனிதர் "கடலை சார், டைம்பாஸ் கடலை சார்.." என்று கத்தியவாறே கடலை விற்றுக் கொண்டிருந்தார். அருகில் கிடந்த சிமென்ட் பெஞ்சின் மீது படுத்துக் கொண்டேன். விரித்து வைத்த கறுப்புப் போர்வையாய் என் பார்வையில் வானம். சின்னச் சின்ன வெளிச்ச பொட்டுக்களாய் நட்சத்திரங்கள் அங்கங்கே இருந்தன. நிலா ஏதோ ஒரு மேகத்தின் பின்னே ஒளிந்து கொண்டு இருந்தது. பொதுவாக எனக்கு தனிமை பிடிப்பதில்லை. எனினும் அந்த இரவின் ஏகாந்தம் ரொம்ப ரம்மியமானதாக இருந்தது.

திடீரென.. யாரோ என்னை பார்ப்பதுபோல் ஒரு குறுகுறுப்பு. அந்த பெண்ணும் ஜன்னல் வழியாக வானத்தை பார்த்துக் கொண்டிருந்தவள், என்னை திரும்பி பார்த்தாள். அவள் கண்களில் இனம் புரியாத ஒரு ஆர்வமும் சிநேக பாவமும் இருந்தன. அவளும் வானத்தை ரசித்து கொண்டு இருந்திருக்கிறாள். எனக்கு அவளைப் பார்க்கையில் சொல்லவொண்ணாத உணர்வுகள் தோன்றின. முக்கால் மணி நேரம் கழித்து ரயில் கிளம்பியபோது நான் அவளை எனக்கு மிகவும் நெருக்கமானவளாக உணர்ந்தேன்.

ஈரோடு ரயில் நிலையம் வந்தபோது மணி ஒன்றாகி இருந்தது. அந்தத் தம்பதியும் ஈரோடுதான் போல.. இறங்கி எனக்கு எதிர் திசையில் நடக்கத் தொடங்கினர். அந்தப் பெண்ணின் முகமும் அவள் உதடுகளில் தேங்கி நின்ற சிரிப்பும் எனக்குள் நன்றாக பதிந்து விட்டிருந்தது. நான் ரயிலை பிரிந்து நடந்தேன். ஒவ்வொரு பயணமும் ஏதோ ஒரு அனுபவத்தை தனக்குள்ளாக கொண்டு இருக்கிறது. பயணிகள்தான் மாறிக் கொண்டு இருக்கிறோம். பயணங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. நம் வாழ்க்கையும் அதுபோலத்தான்.. இல்லையா..?!!

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

April 6, 2009

அயன் - திரை விமர்சனம்...!!!


சுரேஷ் - பாலா (சுபா..) தமிழின் மாத நாவல் எழுத்தாளர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர்கள். ஆக்சன் காட்சிகளை இவர்களின் எழுத்தில் படிக்கும்போது நேரில் பார்ப்பது போலவே இருக்கும். இவர்களின் சூப்பர் நாவல் அட்டைப்படத்தின் மூலம் எனக்கு அறிமுகம் ஆனவர்தான் கே. வி. ஆனந்த். தனது ஒளிப்பதிவில் முதல் படமான தேன்மாவின் கொம்பத்துக்காக தேசிய விருது வாங்கியவர். இவர்களுடைய நட்பு இன்று வரை தொடர்வது சந்தோஷம். ஆனந்த் இயக்கிய முதல் படமான "கனா கண்டேன்" சுபாவின் பூமிக்குள் புதைந்தவன் என்னும் நாவலின் கதைதான். இந்த நண்பர்கள் கூட்டணியுடன் சூர்யா, ஹாரிஸ், சன் பிக்சர்ஸ், AVM முதலான பெரும் தலைகள் இணைந்து இருக்கும் பர பர ஆக்சன் படம்தான் "அயன்".


வெளிநாட்டில் இருந்து வைரம், புதுப்பட சிடி என்று சகலத்தையும் கடத்தி வருபவர் சூர்யா. தன் அப்பாவின் நண்பரான பிரபுவுக்காகவும், த்ரில்லுக்காகவும் இந்த கடத்தல் வேலைகளை செய்கிறார். இவர்களின் தொழில்ரீதியான எதிரி ஆகாஷ். பணத்துக்காக தன் அப்பாவையே கொல்லும் அளவுக்கு மோசமான வில்லன். பிரபுவின் கூட்டத்தில் புதிதாக சேரும் ஜெகன் சூர்யாவின் நண்பன் ஆகிறார். ஜெகனின் தங்கை தமன்னா சூர்யாவைக் காதலிக்கிறார். உண்மையில் ஜெகன் ஆகாஷின் ஆள். பிரபுவை கஸ்டம்சில் போட்டுக் கொடுக்க முயற்சிக்கையில் சூர்யா காப்பாற்றி விடுகிறார். உண்மை தெரிந்து நண்பர்கள் பிரிகிறார்கள்.


பணத்துக்காக ஆசைப்பட்டு வயிற்றில் போதை மருந்துடன் மலேஷியா போகிறார் ஜெகன். அதே விமானத்தில் சூர்யாவும் பயணம் செய்கிறார். வயிற்றுக்குள் போதை மருந்து காப்சூல் உடைந்து போக உயிருக்கு போராடும் ஜெகனை சூர்யா காப்பாற்ற முயல்கிறார். ஆனால் ஆகாஷின் ஆள்கள் ஜெகனைக் கடத்தி போதை மருந்தை எடுப்பதற்காக வயிறைக் கிழித்து கொன்று போடுகிறார்கள். ஊர் திரும்பும் சூர்யா கஸ்டம்ஸ் ஆபிசர் பொன்வண்ணன் உதவியுடன் ஆகாஷின் திட்டங்களை தவிடு பொடியாக்குகிறார். வில்லன் சூர்யாவைக் கொல்ல முயற்சிக்க அதில் பிரபு பலியாகிறார். கடைசியில் வில்லனைக் கொன்று சூர்யா வாழ்க்கையில் நல்வழிக்கு திரும்புவதுதான் கதை.


செம அதிரடியாக, ப்ரெஷாக... சூர்யா. பின்னி எடுக்கிறார். நகைச்சுவை பகுதிகளை ரொம்ப எளிதாக ஹாண்டில் செய்து உள்ளார். சண்டைக் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்து இருக்கிறார். எல்லா ஹேர் ஸ்டைல்களும் அவருக்கு அழகாக இருக்கிறது. உடைகளும் செம மாட்சிங். உள்ளாடையோடு அறிமுகம் ஆகிறார் தமன்னா. (ஆதவா.. நோட் பண்ணுப்பா..) கல்லூரிக்கு பிறகு இந்தப் படத்தில் தான் எனக்கு அவரை பிடித்து இருக்கிறது. பாடல்களுக்கு பயன்பட்டு இருக்கிறார்.


படத்தின் முக்கியமான நபர் ஜெகன் ( விஜய் டிவி கடவுள் பாதி மிருகம் பாதி புகழ் நண்டு) . கேரக்டர் ஒரு மாதிரி என்றாலும் பின்னி எடுத்துள்ளார். இவர் பேசும் ஒரு வரி வசனங்கள் சக்க காமெடி. கடைசியில் நண்பன் கண் முன்னாடியே உயிர் விடும்போது மனதைத் தொடுகிறார். வில்லன் ஆகாஷ் ஓகே ரகம்தான். சூர்யாவின் அம்மாவாக ரேணுகா . பிரபு நியாய சிந்தனைகள் கொண்ட கடத்தல்வாதியாக வருகிறார். கருணாசும் உள்ளார்.


படத்தின் உண்மையான ஹீரோ - ஒளிப்பதிவாளர் M.S. பிரபு. டைட்டில் பறவைப் பார்வையில் வெவ்வேறு நாடுகளை காண்பிக்கும்போது ஆரம்பிக்கிறது அதகளம். ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்ட காட்சிகளில் பயன்படுத்தி இருக்கும் கலர் டோன்கள் தமிழ் சினிமாவுக்கு ரொம்ப புதுசு. காங்கோவில் நடைபெறும் சேஸ்.. மலேஷியா கார் சேஸ் என்று காமிரா வித்தை காட்டுகிறது. பாடல்களை படமாக்கி இருக்கும் விதம்.. அட்டகாசம். பாலைவனம், நீண்ட வானம், அந்திச் சூரியன், கடல் எல்லாம் ஒன்று சேரும் நெஞ்சே நெஞ்சே பாடலில் அசத்தி உள்ளார்கள். கனல் கண்ணன் சண்டைக் காட்சிகளை தூளாக அமைத்துள்ளார். முதல் சேஸ் Casino royale, ong bak, rumble in the bronx போன்ற படங்களை நினைவு படுத்தினாலும் நன்றாக எடுத்துள்ளார்கள். ஹாரிஸின் இசையில் பாடல்கள் ஹிட். ராஜீவனின் கலையும் ஆண்டனியின் எடிட்டிங்கும் படத்தின் வேகத்தை கூட்டுகின்றன.


படத்தின் மிகப் பெரிய மைனஸ் - லாஜிக்கே இல்லாதது...

* பல வேடங்களில் சூர்யா கடத்தல் செய்வது நம்பும்படி இல்லை..

* அண்ணன் ஜெகன் தங்கையின் காதலை பார்க்கும் விதம்...

* சென்னை பாஷை சூர்யாவுக்கு சுத்தமாக பொருந்த வில்லை..

* தேவையே இல்லாமல் வரும் ஹனி ஹனி பாடல்..

* கண்முன்னே வில்லன் ஒரு சின்ன பெண்ணை நாசம் செய்வதை சூர்யா வேடிக்கை பார்த்துவிட்டு வீடியோ மட்டும் எடுத்து வருவது..


இப்படி பல கேள்விகள் இருந்தாலும் அதை அனைத்தையும் மறக்கடித்து விடுகிறது.. கே. வி. ஆனந்தின் திரைக்கதை. காங்கோவில் நடக்கும் ராணுவக் கொடுமைகளை குழந்தைகள் புட்பால் விளையாடும் ஒரே காட்சியில் புரிய வைத்து விடுகிறார். (தேவை இல்லாமல் சிட்டி ஆப் காட் படம் ஞாபகத்திற்கு வருகிறது...) சின்ன சின்ன உத்திகளை படம் முழுக்க சுவாரசியமாக பயன்படுத்தி உள்ளார். குறிப்பாக.. குல்பி ஐஸின் மணிச் சத்தம் மூலம் சூர்யா வில்லனை அடையாளம் காணும் காட்சி. அதே போல் படம் முழுவதும் வரும் அந்த "ரீவைண்ட்" யுத்தியும் அருமை. மொத்தத்தில் ஒரு நல்ல ஆக்சன் படம் பார்த்த திருப்தி.

அயன் - அதிரடி அசத்தல்..!!!

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

April 2, 2009

பற பற பற.. பட்டாம்பூச்சி...!!!


பட்டாம்பூச்சி அல்லது வண்ணத்துப் பூச்சி என்பது கண்ணைக் கவரும் மிக அழகான நிறங்களில் இறக்கைகள் உள்ள ஒரு பறக்கும் பூச்சி... இப்பூச்சிகள் மலர்களில் இருந்து தேனை உறிஞ்சிப் பருகுவதும், மிக ஒடிசலாக இங்கும் அங்கும் பறப்பதும் பலரும் கண்டு களிப்பது. பட்டாம்பூச்சிகள் உயிரின வகைப்பாடுகளில் லெப்பிடோப்டரா (Lepidoptera) என்னும் அறிவியல் பெயர் தாங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவை. பட்டாம்பூச்சிகளில் 15,000 முதல் 20,000 வகையான பல்வேறு உள்ளினங்கள் உள்ளன. இவற்றில் மிகப்பெரியதான பட்டாம்பூச்சியானது பப்புவா நியுகினி நாட்டில் காணப்படும் குயின் அலெக்ஸாண்டிரா என்பதாகும். அது தன் இறக்கைகளை விரித்திருக்கும் பொழுது 28 செ.மீ நீளம் இருக்கும். அமெரிக்காவில் காணப்படும் மேற்குக் குட்டிநீலம் எனப்படும் பட்டாம்பூச்சி இறக்கையை விரித்திருக்கும் பொழுது 1 செ.மீ தான் இருக்கும். (நன்றி: தமிழ் விக்கிப்பீடியா...)


இருங்க இருங்க.. பொறுமை.. இப்போ இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா.. நாம வாங்குன பட்டாம்பூச்சி விருத நம்ம நண்பர்களுக்குத் தரப் போறோம். கூடவே கொஞ்சம் பொது அறிவையும் வளர்ப்போம்னுதான். (ஹி ஹி ஹி...) ரெண்டு வாரத்துக்கு முன்னாடி நண்பர் வேத்தியன் எனக்கு இந்த விருதைக் கொடுத்தார். நேத்து நம்ம நண்பர் ஷீ-நிசி போனப் போட்டு தி(கு)ட்டிட்டார். "அழகா சுதந்திரமா பறக்க வேண்டிய பட்டாம்பூச்சிய உன்னோட வலையில ஏன் சிறைப்பிடிச்சு வைக்குறன்னு.." அதனால விருதைக் கொடுத்திர வேண்டியதுதான்..


அதுக்கு முன்னாடி.. என்ன இது சின்னப்புள்ளத்தனமா உங்களுக்கு உள்ளேயே விருது கொடுத்து வெளையாண்டுக்கிட்டுன்னு கேள்வி கேக்குறவங்களுக்கு.. தப்பில்ல.. நாலு பேருக்கு சந்தோஷம் கிடைக்கும்னா எதுவும் தப்பில்ல.. இந்த மாதிரி விருது கொடுக்குறது எதுக்கு? ஒரு சின்ன ஊக்கம் தானே.. நாலு பேரு நாம எழுதறத படிக்குரதுங்கறதே ஒரு சந்தோஷம்தான.. கூடவே ஒரு அங்கீகாரம் கிடைச்சா இன்னும் நல்லா எழுதணும்னு மக்கள் நினைப்பாங்கல்ல.. நண்பர்களை சந்தோஷப்படுத்தி பாக்குறதை விட உலகத்துல பெரிய விஷயம் ஏதும் இருக்கா என்ன..?


நான் பட்டாம்பூச்சி விருது கொடுக்கும் நண்பர்கள்..




புதிய பதிவர்களைத் தேடிப்பிடித்து ஊக்குவிப்பவர். குறைவாக எழுதினாலும் நல்ல பதிவுகளை எழுதுபவர். பதிவுலகில் நான் மட்டுமே படித்து வந்த என் பதிவுகளை மற்றவரும் அறியச் செய்தவர். இவருடைய காதல் கவிதைகள் ரொம்ப அருமையாக இருக்கும்.




ரொம்ப ஜாலியான மனிதர். மற்றவர்களை ஓட்டுவது இவருக்கு மிகவும் பிடித்தமான விஷயம். மும்பையில் வேலை பார்க்கிறார். இவருடைய கற்பனை கவிதைகளும், கார்ட்டூன் குசும்புகளும் அட போட வைக்கும்.




போலிஸ் என்பதையும் தாண்டி எனக்கும் ராமிடம் பிடித்த விஷயம் -நல்ல மனிதர். தீடிர்னு காதல் கவிதை எழுதுவார். அடுத்த நாளே நாட்டுப் பற்றோட சல்யூட் வைப்பார். இன்னொரு முறை தன்னை அசத்திய மனிதர்கள் பற்றி.. எல்லாம் எழுதுபவர். பழமொழியில் சதம் கண்டவர்.




திருப்பூரில் இருந்து எழுதும் நண்பர் சொல்லரசன் சமூகத்தின் மீது தீராத கோபம் கொண்டவர். இவருடைய எல்லாப் பதிவுகளுமே ஏதோ ஒரு வகையில் அரசியல் மீதான கோபம் கொண்டதாகவே இருக்கும். கொஞ்சமாக, ஆனால் காட்டமாக எழுதுபவர்.




புகைப்படக் கலையில் அலாதி விருப்பம் கொண்டவர். யாரும் தொடாத தளங்களை பற்றி திடீர்னு கவிதைகள் எழுதுவார். அவ்வப்போது கதைகளும்... கொஞ்சம் அரசியல் கோபமும் உண்டு.




இளைஞர். சிவகாசியில் இருப்பவர். வாழ்க்கையின் கஷ்டங்களுக்கு இடையே தன்னுடைய விருப்பங்களை காக்க போராடி வருபவர். வித விதமான படங்களாக தேடி பதிவிடுவார். நகைச்சுவையாக படிக்க இவரது தளத்துக்கு சென்றால் போதும். கவிதைகளும் தத்துவமும் கூட உண்டு.


ஏய்.. ஏய்.. நிப்பாட்டு.. மூணு பேருக்குத்தான கொடுக்கணும்.. நீ பாட்டுக்கு கொடுத்துகிட்டே போறன்னு நினைக்காதீங்க நண்பா.. என்னைய விட்டா எல்லாருக்கும் கொடுத்துருவேன்.. அப்புறம் நம்ம நண்பர்கள் விருது கொடுக்க ஆள் இருக்க மாட்டாங்கலேங்குற ஒரே காரணத்துக்காக இத்தோட நிப்பாட்டிக்குறேன்.. மத்தபடி இந்த விருது என்ன பண்ணனும்.. எப்படி கொடுக்கணும்.. எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சதாத்தான் இருக்கும்.. பட்டாம்பூச்சி விருத என்ன பண்ணனும்னு கேக்குறவங்க வேத்தியனோட இந்தப் பதிவ படிங்க.. விருது பெற்ற எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.. !!!

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துறை
போடுங்க..)