December 1, 2010

தனிமையில் வாடும் செருப்புகள்

சில நாட்கள் முன்பு கல்லூரிக்குப் போகும் போது சாலையில் ஒரு செருப்பு கேட்பாரற்று கிடப்பதைப் பார்த்தேன். அது ஒரு கரிய உலோகத்துண்டைப் போல வெயிலில் மின்னிக் கொண்டிருந்தது. அருகில் சென்று பார்த்தேன். அழகான வாருடன் கூடிய தோல் செருப்பு. அதன் ஜோடியான இன்னொரு செருப்பு அருகே எங்கேனும் கிடக்கிறதா என்று தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. ஒற்றையாய்க் கிடக்கும் அதை அப்படியே சாலையில் விட்டுப் போகவிடாமல் ஏதோவொன்று தடுத்தது. கனத்த மனதுடன் அதை எடுத்து சாலையின் ஓரங்களில் இருந்த செடியின் மறைவில் வைத்து விட்டுக் கிளம்பினேன்.

அன்று மாலை வீட்டுக்குத் திரும்பி வீட்டு வாசலில் செருப்புகளைக் கழட்டும்போது மீண்டும் அந்த செருப்பின் ஞாபகம் எனக்குள் புகுந்து கொண்டது. அந்த செருப்பை தொலைத்தவர் அதை எங்கெல்லாம் தேடியிருப்பார். இந்த செருப்பை தொலைத்ததினால் அவர் மனம் என்ன பாடுபட்டிருக்கும். மீதமிருக்கும் இன்னொரு செருப்பை அவர் என்ன செய்திருப்பார். அவரால் புது செருப்பு வாங்க இயலுமா. மீண்டும் மீண்டும் எனக்குள் எழுந்து கொண்டே இருந்த கேள்விகளால் மனதுக்குள் சொல்லவொண்ணா பாரம் கூடிப் போனது. அறைக்குள் அலைந்து கொண்டிருந்த காற்றுக்குள் எனது துயரமும் கலந்திருந்தது. இரவெல்லாம் செருப்பை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்.

எனது பால்ய காலம் முதலே செருப்புகளின் மீது தீராத காதல் கொண்டவனாக இருந்திருக்கிறேன். என்னைக் கடந்து போவோரின் முகத்தை பார்ப்பதை விட கால்களை பார்ப்பதிலேயே எனக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. செருப்புகளில்தான் எத்தனை விதங்கள். சின்னதாய், பெரியதாய், தட்டையாய், கூர்முனை கொண்டதாய், முன் பக்கம் அழகாய் வளைந்து, பொம்மைப் படங்கள் அச்சிடப்பட்டு.. எத்தனை எத்தனை செருப்புகள். அத்தனையும் அழகு. எனக்கு என் தந்தை முதன்முதலாக வாங்கித்தந்த செருப்பு இப்போதும் என் நினைவில் இருக்கிறது. நடக்கும்போது கீச் கீச் என்று சத்தம் வரக்கூடிய அந்த ஊதா வண்ண செருப்பை இப்போதும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

செருப்புகளைக் கொண்டே அதை அணியும் மனிதனின் இயல்புகளை எளிதாகச் சொல்லி விடலாம். சரக் சரக் என்று தரையை தேய்த்து நடக்கும் மனிதர்கள் எதன் மீதும் ஆர்வம் கொள்ளாதவர்களாக இருப்பார்கள். டக் டக்கென்று சத்தம் வரும்படி நடப்பவர்கள் மற்றவர்கள் தங்களை கவனிக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். தனிமையை விரும்புபவர்கள் நடக்கும்போது எந்த சத்தமும் ஏற்படுத்தாத தட்டையான செருப்புகளையே அணிவார்கள். இதுமாதிரியான என்னுடைய சிறுவயது கண்டுபிடிப்புகள் நிறையவே இருந்தன.

செருப்பு ஒரு உன்னதமான பொருள். இன்றைக்கும் மதிப்புள்ள யாரையாவது திட்ட வேண்டும் என்றால் செருப்பால் அடிப்பேன் என்றோ ஒருவரை அசிங்கப்படுத்த வேண்டுமென்றால் செருப்பைத் தூக்கி எறிவதையோ நாம் பார்க்கிறோம். நம் நாட்டின் புராணங்களிலும் கூட செருப்புகளுக்கு மிக முக்கியமானதொரு இடம் இருந்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ராமன் காட்டுக்குப் போய் விட பரதன் பதினான்கு ஆண்டுகளுக்கு ராமனின் செருப்பைக் கொண்டுதான் பாரத்தையே ஆண்டான். வெளிநாட்டு இலக்கியங்களில் செருப்புக்கு இருக்கும் முக்கியத்துவம் குறித்து சிண்ட்ரெல்லா கதை சொல்லிப் போகிறது.

இவ்வளவு முக்கியமான செருப்புக்கு நாம் கொடுக்கும் மதிப்பென்ன? வீட்டுக்கு வெளியிலே விட்டு விடுகிறோம். காட்டிலும் மேட்டிலும் நமக்காக கஷ்டப்படும் செருப்புக்கான மரியாதை அவ்வளவேதான். நாம் பயன்படுத்தும் எல்லா பொருட்களுக்காகவும் பண்டிகைகள் கொண்டாடுகிறோம். இருந்தும் நம் நிழலை விட அதிகமாய் நம் கூடவே வரும் செருப்புக்கென எந்த பண்டிகையும் இல்லை. இது நாம் செருப்புக்கு செய்யும் துரோகம் இல்லையா?

ஒரே ஒரு நாள் செருப்பு இல்லாமல் என்னால் இருக்க முடியுமா என்பதை அறிந்து கொள்ள விரும்பினேன். காலைச் சூரியனில் நான்கு எட்டு நடப்பதற்குள் கால் பொத்துப் போனது. போதாக்குறைக்கு நடைபாதையில் கிடந்த முள் ஏறி பாதங்கள் வீங்கியதுதான் மிச்சம். வீட்டுக்குத் திரும்பி வந்து செருப்புகளை எடுத்து அணிந்து கொண்ட பின்புதான் ஆசுவாசமாக உணர்ந்தேன். எத்தகையான மகத்தான விஷயம் இந்த செருப்புகள். இதைக் கண்டுபிடித்த எகிப்தியர்களும், கிரேக்கர்களும், ரோமானியர்களும் என் நினைவில் வந்து போனார்கள். மனதார அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டேன்.

ஆதலினால் அடுத்த முறை எங்கேனும் ஒற்றை செருப்பை பார்க்க நேர்ந்தால் ஏளனமாகத் தாண்டிப் போகாதீர்கள். அவற்றின் பின்னால் பல கதைகளும் வரலாறுகளும் ஒளிந்திருக்கலாம். அதே நேரம் உங்களுடைய செருப்புகளுக்கு நன்றி சொல்லவும் மறக்காதீர்கள். ஏனென்றால் எப்போதும் உங்களைக் காக்கும் உற்ற நண்பன் அவைகள்தான் இல்லையா?

28 comments:

Unknown said...

செருப்பு பற்றி இப்பிடி ஒரு விளக்கம்! சூப்பரப்பு! :-)
நீங்க எஸ்.ராமகிருஷ்ணனின் வாசககரா? :-))

அத்திரி said...

// ஜீ... said...
செருப்பு பற்றி இப்பிடி ஒரு விளக்கம்! சூப்பரப்பு! :-)
நீங்க எஸ்.ராமகிருஷ்ணனின் வாசககரா? :-))//



அவரு எஸ்.ரா வோட அடியாள்

சிவக்குமரன் said...

நண்பா எப்பிடி நண்பா இப்பிடில்லாம்! ஒலக எலக்கியம் படைக்க ஆரமிச்சிட்டிங்க. இனிமே கொஞ்சம் சாக்கிரதியாத்தான் இருக்கணுமாட்ருக்குது. ஆனாலும் நல்லாத்தான் கீது.

Unknown said...

அத்திரி said.
//அவரு எஸ்.ரா வோட அடியாள்//

ஓ! நானும் அவரோட profile பார்த்தேன் இப்போ! :-)
இரண்டாவது பாரா வாசிக்கும்போது தோன்றியது எஸ்.ரா வோட பாதிப்பு இருக்குன்னு!
எனக்கும் அவறது எழுத்துக்கள் பிடிக்கும்! :-))

கார்த்திகைப் பாண்டியன் said...

ஐயையே.. இதை எல்லாரும் சீரியஸ் கட்டுரை ரேஞ்சுக்கு வாசிச்சுக்கிட்டு இருக்கீங்க.. லேபிளை படிங்கப்பா..

Unknown said...

நல்பதிவு. ஒற்றைச் செருப்பு பற்றி விகடனில் சுஜாதா எழுதியது நனைவுக்கு வருகிறது.

Prabu M said...

//அன்று மாலை வீட்டுக்குத் திரும்பி வீட்டு வாசலில் செருப்புகளைக் கழட்டும்போது மீண்டும் அந்த செருப்பின் ஞாபகம் எனக்குள் புகுந்து கொண்டது. //

ஓகே... அது லேடீஸ் செப்பல்!!

//இரவெல்லாம் செருப்பை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்.//

க‌ன‌வுப்பாட்டு எங்க‌ "ஹ‌வாய்" தீவுல‌யா!!

//என்னைக் கடந்து போவோரின் முகத்தை பார்ப்பதை விட கால்களை பார்ப்பதிலேயே எனக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது//

இது ந‌ந்த‌லாலா பார்த்த‌ எஃபெக்டு....

//செருப்புகளைக் கொண்டே அதை அணியும் மனிதனின் இயல்புகளை எளிதாகச் சொல்லி விடலாம்//

வாத்தியார் வ‌ர்றத அவரோட செருப்பு ச‌த்த‌ம் சொல்லும்....
ஹெட்மாஸ்ட‌ர் வ‌ர்ற‌ ச‌த்தம் அவரு செருப்புக்கே கேட்காது....

இத‌த் தவிர‌ வேற‌ எதையுமே நான் யோசிச்ச‌தில்ல‌ ந‌ண்பா.. நீங்க‌ எங்கெயோஓஓ போயிட்டீங்க‌.....

//ஆதலினால் அடுத்த முறை எங்கேனும் ஒற்றை செருப்பை பார்க்க நேர்ந்தால் ஏளனமாகத் தாண்டிப் போகாதீர்கள். அவற்றின் பின்னால் பல கதைகளும் வரலாறுகளும் ஒளிந்திருக்கலாம்//

அண்ணே... உங்க‌ செருப்பைத்தாங்க‌ இனிமே என் க‌ம்ப்யூட்ட‌ர் சேர்ல‌ வெச்சு அதுமேல‌ அம‌ர்ந்துதான் ப்ளாக்ல‌ எழுத‌ப்போறேன்.... :-)

பதிவைப் ப‌டிக்க‌ ஆர‌ம்பிச்ச‌ கொஞ்ச‌ நேர‌த்துல‌யே புரிஞ்சிக்கிட்டேன்......
லேபிளைப் பார்த்த‌பின்தான் க‌மெண்ட் எழுதுறேன்...
பார்க்க‌லைன்னா ஃபோன்தான் ப‌ண்ணியிருப்பேன்!! :‍)))))

Thomas Ruban said...

அதனால் தான் செருப்பை ஷோகேஸ்களில் வைத்தும், உணவுப்பொருள்களை புட்பாத் கையேந்திப் பவனிலும் விற்கிறார்களா!!
நன்றி சார்.

செ.சரவணக்குமார் said...

இந்தப் பதிவிற்கு எதற்கு இப்படி ஒரு லேபிள்.. புரியவில்லை கா.பா. ஆனால் கட்டுரை அப்படியே எஸ்.ரா டச்.

நர்சிம் said...

//எனது பால்ய காலம் முதலே செருப்புகளின் மீது தீராத காதல் கொண்டவனாக இருந்திருக்கிறேன். //

எஸ்ராவை படிப்பது போலவே இருந்தது கா.பா.

கார்த்திகைப் பாண்டியன் said...

சரவணா மற்றும் நரசிம்..

இது சமீப காலமா எஸ்ரா எழுதிக்கிட்டு இருக்குற கட்டுரைகளின் பகடி.. அதனால்தான் அந்த லேபில்.. எதைப் பார்த்தாலும் மனுஷன் உருகுராரு இல்லைன்னா பால்ய காலத்துக்கு ஓடிடுராறு.. ஆதலினால்னு ஒரு தொகுப்பு.. காக்கா செத்து கெடக்குரதுக்கு நாலு பக்கத்துல கட்டுரை.. குதிரையைப் பார்த்தா கட்டுரை.. ரொம்ப ஓவரா இருக்கேன்னு அந்த காண்டுல எழுதினதுதான் இது..

நேசமித்ரன் said...

கா.பா :)))))

கார்த்திகைப் பாண்டியன் said...

நேசன்

நான் ஏதோ பெரிய வெங்காயம் மாதிரி கிண்டல் பண்ணி எழுதினா எல்லாரும் பீல் பண்ணி சீரியசா கமெண்டு போட்டுக்கிட்டு இருக்காங்க.. நான் பண்றது பகடின்னு நானே அறிவிக்க வேண்டியிருக்கு.. அவ்வ்வ்வ்.. என்ன கொடுமை சார் இது?

vasu balaji said...

மொக்கை? லொள்ளு? இல்லை கார்த்தி, தினமும் மின்சார ரயிலில் போகின்றவர்களுக்குத் தெரியும். செண்ட்ரலிலோ பார்க்கிலோ, தலையற்ற உடலின் ஒரு காலில், அல்லது பிணமான அதன் கைக்குள் வைக்கப் பட்டிருக்கும் ஒரு காலில் இருக்கும் மற்றச் செருப்பு. :((

க.பாலாசி said...

ஒரு உண்மைய சொல்லணும்னா தீபாவளியப்ப வீட்டுக்கு பின்னாடி தாழ்வாரத்தில என்னோட பழைய செருப்புகள்லாம் கிடந்தது. அந்த நேரத்தில் அதை பார்க்கும்போது அதை வாங்கின காரணங்கள், புதிதாய் அந்த செருப்பை அணியும்போது மனதில் உண்டான ஒருவித பெருமை போன்ற இத்யாதிகள் ஞாபகம் வந்தது.

இந்த இடுகை கொஞ்சம் ஓவர் ஃபீல்தான். நீங்க என்ன லேபிள் போட்டா என்ன? ஃபீலிங், ஃபீலிங்தானே!!!

மேவி... said...

நந்தலாலா பார்த்து நொந்தலாலாயான நேரத்துல தோன்றிய கட்டுரையா ???

பாவமா எஸ்ரா ...அவருக்கு தெரிஞ்சதை வைச்சு காலத்தை ஓட்டிகிட்டு இருக்காரு

மேவி... said...

இந்த பதிவை மீள் வாசிப்புக்கு வைத்து கொள்ளலாமா ???

மேவி... said...

அந்த ஒத்த செருப்பை வைத்து என்ன செய்திருப்பார் ???

இந்த பதிவை படிச்ச பிறகு ..அதனை கொண்டு தன்னை தானே அடிச்சிருப்பார்

மேவி... said...

"லேபிளை படிங்கப்பா.."

மொக்கை பதிவு எழுதிட்டாராம் ....

மேவி... said...

திருவள்ளுவர் எழுதினன மூட்பால்களை படித்த எனக்கு ஆவின் பால் கிடைக்கவில்லையே ...

மேவி... said...

முக்காடு போட்டுக்கிட்டு புஸ்தக திருவிழாவுக்கு போய் எஸ்ரா புஸ்தகங்களை வாங்கி படிச்சிட்டு....இப்ப இங்கன்ன குடுக்குற சலம்பலை பாரு ...

உங்களுக்கு மட்டும் தான் பகுடி தெரியுமா ???? எனக்கு கூட பன்னிகுட்டியை தெரியும்

selventhiran said...

ஹா ஹா கார்த்திகைப்பாண்டியன் வாய்விட்டுச் சிரித்தேன். இப்போதெல்லாம் திருவிழாக் கச்சேரிகளின் இடைவேளை பலகுரல் நிகழ்வுகளில் கூட எஸ்ரா மாதிரி பேசிக் காண்பிக்கிறார்களாம் :))) அட்டகாசமான பகடி!

ஆ.ஞானசேகரன் said...

ஆகா செருப்புலேயே கலக்கல் சூப்பர் நண்பா

செ.சரவணக்குமார் said...

ஆஹா.. இதான் மேட்டரா? ரைட்டு நண்பா.

"உழவன்" "Uzhavan" said...

அருமை நண்பா.. உழைப்பு தெரிகிறது இதில்.

குமரை நிலாவன் said...

கட்டுரை அப்படியே எஸ்.ரா டச்.

Karthik said...

எஸ்ரா சொல்வார் : Et tu Karthick? :))

ஒற்றைச் செருப்புகள் எப்போதும் ஒருவித அலட்சிய தொனியில் எறியப்பட்டவை போலவே எங்கும் கிடக்கின்றன. சாலை நடுவில் கிடந்த அந்த செருப்பை பார்த்துக் கொண்டே இருந்தேன். பகலின் வெக்கை தணியத் தொடங்கி வெயில் மஞ்சளாகிக் கொண்டிருந்தது. தன்னைப் பற்றிய எந்தக் கவலையுமின்றி விரையும் போக்குவரத்திற்கு நடுவில் கிடந்த அந்த ஒர்றைச் செருப்பில் நிராகரிப்பின் கசப்பும், தனிமையின்..

அய்யோ!!

priyamudanprabu said...

:)