February 2, 2011

சாவடி - மதுரை இலக்கிய சந்திப்பு (2)

சாவடி - மதுரை இலக்கிய சந்திப்பு (1)

கா.பா - நான் கே.என்.செந்திலுடைய மூன்று கதைகளை மட்டுமே வாசித்து இருக்கிறேன். கதவு எண், கிளைகளில் இருந்து, மேய்ப்பர்கள்.. இவற்றை முன்வைத்தே உரையாட விரும்புகிறேன். கதைகள் சொல்லும் கதைகள் உண்டு, அதே போல கதை சொல்லாத கதைகளும் உண்டு. இதில் கே.என்.செந்தில் இரண்டாம் வகையைச் சார்ந்து கதையல்லாத கதைகளைப் பேசுவதாகவே நான் நம்புகிறேன். கதை சொல்லி என்று சொல்லுவதை விட அவரை ஒரு தேர்ந்த சித்திரக்காரர் எனச் சொல்லலாம். சூழலையும் மனிதர்களையும் வர்ணித்துப் போகும் இடங்களில் அவர் அருமையான நேரனுபவத்தைத் தரக்கூடிய சித்திரங்களை உருவாக்குகிறார். முதல் கதையான கதவு எண்ணில் ஒரு மனிதன் மூத்திர சந்தின் உள்நுழைந்து போகிறான். இதை வாசிக்கும்போது நான் என்னமோ அந்தத் தெருவுக்குள் நடந்து போவதைப் போன்ற ஒரு அருவெருப்பையும் அசூயையும் என்னால் உணர முடிந்தது. அதுவே அந்த எழுத்துகளின் வெற்றி. ஹவி சொன்ன சில விஷயங்களில் எனக்குக் கருத்து வேறுபாடும் உண்டு. ஒரே கேன்வாசுக்குள் பல விஷயங்களை சொல்லித்தான் ஆக வேண்டுமா? கண்டிப்பாக... ஏன் என்றால் அங்கேதான் வாசகன் சிந்திப்பதற்கான ஒரு வெளி உண்டாகிறது. இதை நீங்கள் கிளைகளில் இருந்து கதையில் நன்கு உணரலாம். சில மனிதர்கள், அவர்களைப் பற்றிய சில தகவல்கள் என சொல்லிக் கொண்டே கதை வேறு இடங்களுக்கு நகர்ந்து போய் விடுகிறது. அதன் பிறகு அவர்கள் என்ன ஆனார்கள்? அதை வாசகர்களின் முடிவுக்கு விட்டு விடுகிறான் கதை சொல்லி. கடைசி கதையான மேய்ப்பர்கள் விளிம்பு நிலை மனிதர்களின் யதார்த்த வாழ்க்கையை பேசிப் போகிறது. குற்றவுணர்வை ஏற்படுத்தாத காமம் இந்தக் கதையில் கொண்டாட்டமாக வெளிப்பட்டு இருக்கிறது. ஆக எனக்கு செந்தில் கதையுலகம் ரொம்பவே பிடித்து இருக்கிறது.

ஹவி: நண்பர் சொன்ன விஷயத்தை என்னால் சற்றும் ஒத்துக் கொள்ள முடியாது. கதை சொல்லாத கதைகள் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வர்ணனைகள், சித்திரங்கள் எனப் பேசுவதெல்லாம் சரிதான். ஆனால் நாம் எதற்காக சிறுகதைகள் எழுதுகிறோம்? ஏதாவது ஒரு விஷயத்தைச் சொல்வதற்காக.. அதைச் செய்யவில்லை என்றால் மற்ற எல்லாம் வீணாகிப் போய் விடும். ஆக கதை என்கிற அடிநாதம் ரொம்ப முக்கியமானது. கண்டிப்பாக எழுத்தாளனுக்கு என ஒரு பொறுப்பு இருக்கிறது. அதை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. நம்மைச் சுற்றி இருக்கக் கூடிய எல்லா விஷயங்களையும் நம்மை பாதிக்கிற சங்கடங்களையும் நாம் கண்டிப்பாக பதிவு செய்யும்போது அதற்கு நேர்மையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. இன்றைய கண்காணிக்கப்படும் சூழலிலும் இதை நாம் தீவிரமாக செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதை விடுத்து வெறும் தகவகழி மட்டும் சொல்லிப் போவது சரி கிடையாது என்றே நம்புகிறேன்.

கே.என்.செந்தில் - பொதுவாக என்னுடைய கதைகள் ஒரு நேரடி அனுபவத்தைத் தருவதாக நிறைய பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதையேதான் இந்த நண்பரும் சொன்னார். ஆனால் ஹவி சொன்னதுபோல நான் எந்த இடத்திலும் என்னுடைய கொள்கைகளை என் பாத்திரங்களின் மீது திணிக்க முயற்சிப்பதில்லை. அதைப் போலவே தான் தகவல்கள் அதிகம் என்பது பற்றிய குற்றச்சாட்டும். இது கதைக்குத் தேவை என நான் நம்புவதை மட்டுமே எழுதி வருகிறேன்.

இந்திரா - எனக்கு உங்களுடைய இரவுக்காட்சி கதை ரொம்பப் பிடித்து இருந்தது. ஆனால் ஒரு சில இடங்களில் காமம் சார்ந்து எழுதும்போது சில நெருடல்கள் இருக்கின்றன. நண்பர் ஒருவர் சொன்னார் காமம் கொண்டாட்டமாக வெளிப்படுகிறது என்று. அவன் ஒரு கூலித் தொழிலாளி. மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள். இந்த மாதிரியான நேரத்தில் அவனால் எப்படி எந்த மனக்கிலேசமும் இல்லாமல் உறவு வைத்துக் கொள்ள முடிகிறது? மிருகங்கள் மட்டுமே அதுமாதிரியான செயல்பாடுகளில் ஈடுபடும். இது எல்லாம் தவிர்த்து மொத்தமாக உங்களின் தொகுப்பு எனக்கு பிடித்து இருக்கிறது.

கே.என்.செந்தில் - நான் முன்னரே சொன்னதுபோல கதைக்குத் தேவையானதையே நான் எழுதுகிறேன். காமம் என்பதை வலிந்து எழுத முயற்சிப்பதில்லை. அந்தக் கதாப்பாத்திரம் அந்த சூழலில் அவ்வாறே நண்டந்து கொள்ளும் எனக் கதைதான் தீர்மானிக்கிறது.

கதைகளில் இன்று உரையாடல்களைத் (dialogue) தவிர்த்து வர்ணனைகளின் மூலமாகக் கதை சொல்வது என்பது அதிகரித்து வருகிறது. இது சரிதானா என்ற கேள்வி கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. கதை சொல்லும் உத்தி என்னவாக இருந்தாலும் கதையை முன்னகர்த்தி செல்லவும் அடர்த்தியைக் கூட்டவும் உதவுமெனின் கண்டிப்பாக வர்ணனைகள் தேவையே என்பதை எல்லா படைப்பாளிகம் ஆமோதித்தனர். இதன் பின்பான உரையாடல் மற்றொரு கேள்வியை முன்வைத்து ஆரம்பித்தது.

பா.திருச்செந்தாழை - எல்லாரும் எழுதிய உலகத்தையே நாம் மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருக்கிறோம். இதை விடுத்து நாம் ஏன் இன்னொரு தளத்துக்கு நகரக் கூடாது? நம்மைச் சுற்றி இருக்கும் பொருட்களின் மேல் நாம் ஏன் கவனம் கொள்வதில்லை? அவையும் நம் வாழ்வில் முக்கியப் பங்கு ஆற்றத்தானே செய்கின்றன? எளிதாகச் சொல்ல வேண்டுமானால், நமக்குப் பிடித்தமான ஒரு சட்டையைப் போட்டுக் கொள்ளும்போது அன்றைய நாள் முழுதும் சந்தோஷமாக உணருகிறோம். இது போல நிறைய.. ஆக பொருட்கள் நமக்கு ஏதோ ஒரு வகையில் சில உணர்வுகளை உண்டாக்கிப் போகின்றன அல்லவா.. ஏன் அவற்றைப் பற்றி நாம் பேசக் கூடாது?

கே.என.செந்தில் - பொருட்களை முன்னிறுத்தி கதைகள் எழுதுவதில் தவறில்லை. ஆனால் அவை உயிரற்றவை. அவை மனிதனால் பயனபடுத்தபடுகின்றன. ஆக சார்புநிலை என்று வரும்போது அங்கும் நாம் மனிதர்களைப் பற்றித்தான் பேச வேண்டி இருக்கிறது.

பா.திருச்செந்தாழை - நான் சொல்ல வருவதை இன்னும் கொஞ்சம் தெளிவாக்க முயலுகிறேன். வண்ணநிலவனின் மிருகம் எனக்கு ரொம்பப் பிடித்த கதை. நிறைய திறப்புகள் (opening) கொண்ட கதை சூழல். ஒரு மனிதன் அடுக்களைக்குள் நுழையும்போது எங்கும் சாம்பல் மணம் வீசியது என்கிற ஒரு வரி வரும். திறந்து கிடக்கும் வீட்டுக்கள் இருந்த புகைப்படங்கள் எல்லாமே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தன என்கிற ஒரு இடமும் உண்டு. இங்கே உயிரற்ற அந்தப் பொருட்கள் நமக்குள் ஏற்படுத்தக் கூடிய அதிர்வுகளை நாம் கவனிக்க வேண்டும். அப்புறம் இன்னொரு கதை.. சமீபமாக எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியது. ஆணி என்று நினைக்கிறேன். ஒரு சுவரில் இருக்கும் ஆணையைப் பற்றிய அவருடைய சிந்தனைகள். அவ்வளவேதான். இந்தக் கதையை எழுதும்போது, தன்னுடைய பொது எழுத்துலகை விட்டு வெளியேறி, வேறொரு தளத்தில் இயங்குவதன் மூலம் அவர் மிகுந்த ஆசுவாசத்தை உணர்ந்திருக்கக் கூடும் என நம்புகிறேன். எனவேதான் பொருட்களின் மீது இயங்கக் கூடிய இன்னொரு வெளியைப் பற்றி ஏன் யோசிக்கக் கூடாது என கேட்கிறேன்.

கே.என்.செந்தில் - நீங்கள் சொல்வது சரிதான் என்றாலும் முப்பது வருடங்களுக்கு முன்பு வண்ணநிலவன் இந்தக் கதையை எழுதும்போது இந்த விஷயங்களை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டிருப்பாரா என்றால் இருக்காது என்றுதான் சொல்ல வேண்டும். எழுதும் விஷயங்கள் பிற்காலத்தில் வாசகர்களாலேயே இன்னதென்று தீர்மானிக்கபடுகிறது. எனவே பொருட்கள் சார்ந்து எழுதுவதென்பது திட்டம் போட்டு செய்ய முடியாததாகவே இருக்கும். கதைக்குத் தேவையெனில் நாம் அந்த உத்தியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

கா.பா- பொருட்கள் சார்ந்த கதை எனச் சொல்லும்போது எனக்கு ஜி.முருகனின் காண்டாமிருகம் ஞாபகத்துக்கு வருகிறது. அது ஒரு உண்டியல். திடீர் தித்தர் என காணாமல் போய் மீண்டும் கிடைக்கிறது. கிட்டத்தட்ட வாசகனோடு ஒரு விளையாட்டாக இந்தக் கதையை அவர் எழுதி இருக்கிறார். உயிரற்ற அந்த பொருள் மொத்தக் கதையயும் தாங்கிப் பிடிக்கிறது என்பதை நாம் கண்டுகொள்ளலாம். ஆகவே கதையின் தேவை குறித்தே பொருட்களின் மீதான கவனம் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.

அதன் பிறகும் அங்கங்கே அலைந்து திரிந்து இறுதியாக உரையாடல் முடிவுக்கு வந்தது. ஆக மொத்தத்தில் அருமையானதொரு நிகழ்வு. பா.திருச்செந்தாழை ஒருவர் மட்டுமே செந்திலின் கதையுலகம் பற்றிய கட்டுரை எழுதி வந்து வாசித்தார் என்பது ஒரு சிறு குறை. இன்னும் மூன்று நான்கு கட்டுரைகளாவது வாசிக்கப்பட்டு இருக்க வேண்டும். அதையே கே.என்.செந்திலும் தன் நன்றியுரையில் குறிப்பிட்டார். அதே போல நிறைய விஷயங்கள் பொதுவாக பேசப்பட்டன. அப்படி இல்லாது படைப்பாளியின் படைப்புலகை முன்னிறுத்தி பேசுவது இன்னும் இந்த சந்திப்புகள் காத்திரமாக அமைய உதவக்கூடும். நிகழ்வை சாத்தியமாக்கிய அத்தனை நண்பர்களுக்கும் நன்றி.

9 comments:

செ.சரவணக்குமார் said...

பகிர்வுக்கு நன்றி நண்பா.

'பரிவை' சே.குமார் said...

அழகாக பகிர்ந்தமைக்கு நன்றி.

ஆதவா said...

பேசியது முழுக்க அப்படியே பதிவில் இருக்கிறது போல??
நல்ல பதிவனுபவம்!
சந்திப்புப் பதிவுகளில் இது ஒரு கோணம்

பா.ராஜாராம் said...

பகிர்விற்கு நன்றி வாத்யாரே! :-)

கார்த்திகைப் பாண்டியன் said...

சரவணா
நன்றி நண்பா..

சே.குமார்
நன்றிங்க

ஆதவா
நமக்குப் பிடிச்ச விஷயங்களைப் பேசும்போது அது அப்படியே பதிஞ்சு போகுது தல..:-)) நேரம் கிடைக்கும்போது கூப்பிடுங்க

பா.ரா
அண்ணே.. ரொம்ப நன்றிண்ணே..

Sriakila said...

நல்ல அனுபவம்!

Anonymous said...

பகிர்ந்தமைக்கு நன்றி.

அந்த இந்திரா யாருனு தெரிஞ்சுக்கலாமா???

கார்த்திகைப் பாண்டியன் said...

sriakila
நன்றிங்க

இந்திரா
வணக்கங்க.. அந்த இந்திரா கவிஞர் ஹவியோட மனைவி மேடம்.. நீங்க மதுரைதானா? முடிந்தால் தனிமடல் இடுங்கள்..:-))

Prabu M said...

உண்மையிலேயே கலந்துகொண்ட திருப்தி கிடைத்தது பாஸ்...
அருமையான‌ தொகுப்பு...