March 3, 2012

அரவான் - திரைப்பார்வை

சாகித்ய அகாடமி விருது பெற்ற காவல் கோட்டம் நாவலை அடிப்படையாகக் கொண்டு அரவானை உருவாக்கி இருக்கிறார் வசந்தபாலன். மதுரையின் நீண்ட வரலாற்றைப் பேசும் நாவலின் ஒரு பகுதியான பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கள்வர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்ய முயன்றிருக்கிறார்கள். சமீப காலமாக தமிழ் சினிமாவைப் பெரிதாய் ஆக்கிரமித்திருக்கும் பீரியட் பிலிம் மேனியாவில் (மாவீரன் எஃபெக்ட்?!!!) முதல் படமாய் வெளியாகி இருக்கிறது அரவான். டி சிவாவின் அம்மா கிரியேசன்ஸ் தயாரிப்பு.



கள்வர்கள் வாழும் கிராமம் வேம்பூர். ஊருக்குள் பெரிய கொத்து கொம்பூதியுனுடையது. அதில் புதிதாக வந்து சேருகிறான் அநாதையான வரிப்புலி. முதலில் அவனை வெறுக்கும் ஊர்மக்கள் அவன் திறமையைப் பார்த்து தங்களில் ஒருவனாக ஏற்றுக் கொள்கிறார்கள். யாருமே திருட முடியாத கோட்டையூர் காவலை உடைத்துத் திரும்புகையில் காவலர்களிடம் சிக்கிக் கொள்கிறான் கொம்பூதி. அப்போது தன் உயிரைப் பணயம் வைத்து கொம்பூதியைக் காக்கிறான் வரிப்புலி. இருவருக்குமான நட்பு இன்னும் அத்தியந்தம் ஆகிறது.

தன் தங்கையை மணக்கும்படி கேட்கும் கொம்பூதியிடம் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்ட உண்மையைச் சொல்லும் வரிப்புலியின் உண்மையான பின்புலம் என்ன? மாடுபிடி ஒன்றில் வேம்பூரின் மானம் காக்கக் களமிறங்கும் அவனை ஒரு கும்பல் அடித்துக் கைது செய்கிறது. கூடவே அவன் சின்னியவீரம்பட்டியின் பலியாள் என்றும் சொல்லிப் போகிறது. என்ன காரணத்துக்காக புலி பலியாள் ஆக்கப்பட்டான்? இறுதியில் வரிப்புலியின் முடிவு என்ன ஆனது என்பதைச் சொல்லும் கதைதான் அரவான்.



படத்தின் முதல் பாதியின் நாயகன் - கொம்பூதியாக வரும் பசுபதி. தொண்ணூறுகளில் நாசர் என்றால் இப்போது பசுபதி. தனக்குத் தரும் எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் சரியாகச் செய்யும் மனிதர். இரண்டாம் பாதி வரிப்புலி ஆதிக்குச் சொந்தம். ஆள் பார்க்க அட்டகாசமாக இருக்கிறார். கடுமையாக உழைத்து இருக்கிறார். ஆனால் அவருடைய குரலும் வசன உச்சரிப்பும் சுத்தமாக பழங்காலத் தமிழுக்கு ஒட்டவில்லை. ஆதியின் மனைவியாக வரும் தன்ஷிகாவுக்கும் இதே பிரச்சினைதான். படத்தின் நடுவே அங்கங்கே சிரிக்க வைக்கிறார் சிங்கப்புலி. பரத்தும் அஞ்சலியும் கண்டிப்பாக இந்தக் கதாபாத்திரங்களை செய்திருக்க வேண்டிய அவசியமில்லை.

படத்துக்கு மிகப்பெரிய பலம் சித்தார்த்தின் ஒளிப்பதிவு. நிறைய வித்தியாசமான கோணங்களில் அழகாகப் படம் பிடித்து கவனம் ஈர்க்கிறார் மனிதர். நிலா நிலா பாடலில் ஒரு மரத்தூருக்குள் முயங்கிக் கிடக்கும் ஆதி-தன்ஷிகா காட்சி ஒன்று போதும் படத்துக்கு. இன்னொரு அழகான இடம் ஆதி பசுபதியைக் காப்பாற்றும் காட்சி. நம்மால் முடிந்த கிராஃபிக்சோடு அழகாகப் படமாக்கி இருக்கிறார்கள். இது மாதிரியான பீரியட் படங்களில் கலை இயக்கம் பற்றி நிறைய பேசுவார்கள். நன்றாக இருந்தாலும் அரவானில் சில தவறுகளும் இருப்பதாகவே எனக்குப் பட்டது. குறிப்பாக அஞ்சலியின் உடை அமைப்பு சுத்தமாக அந்தக் காலகட்டத்துக்குப் பொருந்தாது போல எனக்கொரு உணர்வு. இசையமைப்பாளராக கார்த்தி அறிமுகம். பாடல்கள் எல்லாமே நிறைவு. பின்னணி இசையும் எனக்குப் பிடித்தே இருந்தது.



தனக்கு இலக்கியப் பரிச்சயம் உண்டு என்பதையும் வெவ்வேறு தளங்களில் படம் எடுப்பதே தனக்குப் பிடிக்கும் என அடிக்கடி சொல்லி வருபவர் வசந்தபாலன். அரவான் ஒரு அற்புதமான முயற்சி. முடிந்த அளவுக்கு நேர்மையாக சொல்ல முயன்று இருக்கிறார் மனிதர். கதையில் ஒரு இடத்தில் அறிமுகம் ஆகும் ராசா திக்கித் திக்கித் தமிழ் பேசுவார். என்னடா இது என்று யோசிக்கையில் பின்பு தான் ஞாபகம் வந்தது அது நாயக்கர் ஆண்ட காலம் என்பதும் ராசா தெலுங்கு பேசுபவர் என்பதும். இது மாதிரியான சின்ன சின்ன விசயங்களாக நிறைய பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள்.

ஆனால் சரியான கதையைத் தெரிவு செய்தவர் திரைக்கதையில் கோட்டை விட்டிருக்கிறார். ஆதியின் கதையைச் சொல்லும் இரண்டாம் பாதி சரியான இழுவை. கதை நகர்வேனா என்கிறது. வித்தியாசமகப் படம் பண்ண வேண்டும் என்கிற தைரியம் இருக்கும் இயக்குனர்கள் கூட ஏன் படத்தில் கண்டிப்பாகப் பாடல்கள் வேண்டும் என அடம்பிடிக்கிறார்கள் எனப் புரியமாட்டேன் என்கிறது. அதைப் போலவே எக்கச்சக்க கேள்விகளும். காவல்காரனான ஆதி பிழைக்க வேறு வழியே இல்லாமல் ஏன் திருடனாக வேண்டும்? தேட்டை போட்டதை எல்லாம் பசுபதி வருவார் என்பதற்காகவே உருண்டை போட்டு வைத்தாரா? ராசா காணாமல் போனால் பாளையம் என்ன ஏது என்று தேடாதா? நிறைய கேட்டுக் கொண்டே போகலாம். அத்தோடு படத்தில் பயன்படுத்தி இருக்கும் பேச்சுத்தமிழ். நாம் முந்தைய காலத்தின் பதிவொன்றைப் பார்க்கிறோம் என்கிற உணர்வே சுத்தமாக இல்லை.

படத்தில் சில இடங்களில் அபோகாலிப்டோவின் பாதிப்பு. படத்தின் முடிவைப் பொறுத்தவரைக்கும் வசந்தபாலன் ஒரு தீர்மானத்தோடு இருந்திருக்கிறார். கண்டிப்பாக தன் படங்கள் சோகமாகத்தான் முடிய வேண்டும் என்கிற எண்ணம் மனிதருக்கு இருக்கிறது. ஆதியை அடித்து இழுத்து வரும் காட்சிகளில் இயேசுவின் இறுதிப்பயணம்தான் நினைவுக்கு வந்தது. படம் முடிந்து மரண தண்டனையை ஒழிப்போம் என்று ஸ்லைடு போட்டார்கள். அதற்கும் இந்தப் படத்துக்கும் என்ன சம்பந்தம் எனப் புரியவில்லை. வெறுமனே இந்தக் காலத்துக்குப் பொருந்தக்கூடியது எனப் போட்டார்களோ என்னமோ?

அரவான் மீது எனக்குப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஒரு அனுபவமாக படம் அதை நிறைவேற்றவில்லை என்றுதான் சொல்லுவேன். திரைக்குழுவினரின் கடுமையான உழைப்பு, கள்வர்கள் வாழ்வின் மீதான பதிவு என்பதற்காகப் பார்க்கலாம்.

7 comments:

CS. Mohan Kumar said...

//படத்தின் முடிவைப் பொறுத்தவரைக்கும் வசந்தபாலன் ஒரு தீர்மானத்தோடு இருந்திருக்கிறார்.//

When the name is Aravan, what else he can do? It has to end like that .

Our family enjoyed the film fully.

Anonymous said...

அருமையான விமர்சனம்... !

Joe said...

//
வித்தியாசமகப் படம் பண்ண வேண்டும் என்கிற தைரியம் இருக்கும் இயக்குனர்கள் கூட ஏன் படத்தில் கண்டிப்பாகப் பாடல்கள் வேண்டும் என அடம்பிடிக்கிறார்கள் எனப் புரியமாட்டேன் என்கிறது.
//
Musical format-௦ஐ விட்டு கண்டிப்பாக வெளியேற வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என்று தோன்றுகிறது.

தயாரிப்பாளர்கள் மனம் மாறும் வரை, அந்த மாற்றம் நிகழாது. "உன்னைப் போல் ஒருவன், ஆரண்ய காண்டம்" போன்ற படங்கள் பெரியளவில் வெற்றி பெற்றிருந்தால் அந்த மாற்றத்துக்கு வழி வகுத்திருக்கலாம்.

ஹாலிவுட்ரசிகன் said...

நல்ல விமர்சனம். இதுக்கு மேல ஒன்னும் சொல்ல தெரியலீங்க.

மாதேவி said...

"அரவான்" விமர்சனம் அருமை.
மிக்க நன்றி.

rajasundararajan said...

/மரண தண்டநனைக்கு எதிராக இப்படத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றுதான் தெரியவில்லை..! அந்த கார்டு போடப்படாமலேயே இருந்திருந்தால் ரசிகர்களின் கொஞ்சமான குழப்பத்தைத் தவிர்த்திருக்கலாம்..!/

இது உண்மைத்தமிழன் தன் விமர்சனத்தில் சொன்னது. அதற்கு நான் இட்ட பின்னூட்டம்:

/அந்தக் கார்டில், இன்னும் உலகில் இத்தனை நாடுகளில் மரணதண்டனை இருக்கிறது என்பதோடு நிறுத்தி இருக்க வேண்டும். அதற்கும் மேல் ஒரு வரி போட்டு இயக்குநர் சிரிப்பை வரவழைத்துவிட்டார்./

கூடவே, நான் சி.பி. செந்தில்குமாரின் விமர்சனத்துக்கு இட்ட பின்னூட்டம்:

/களவுத் தொழிலை glorify பண்ணிவிட்டார் என்று நாவலாசிரியரை அவரது கட்சியச் சேர்ந்தவர்களே விமர்சித்துவிட்டார்கள். வசந்தபாலன் மரணதண்டனைக்கு எதிராக எழுத்துப் போட்டுக் காட்டி அந்தப் பழி தன் மீதும் வந்துவிடாத வழிதேடி இருக்கிறார்./

இதோடு, நெருக்கடி மனவமைப்பின் வசந்தபாலன் பற்றி 'கேபிள்' தளத்தில் நான் இட்ட பின்னூட்டத்தின் இப் பகுதியையும் வாசிக்கலாம்:

/இப் படம் ஒரு murder mystery ஆக எடுக்கப்பட்டிருக்க வேண்டிய படம். நாவலில் எழுதப்பட்ட களவு நுணுக்கங்கள் நம்மை ஈர்க்கும்தான். இயக்குநரையும் கவர்ந்துவிட்டது போலும், பாதிப் படத்தை அதற்காகவே ஒதுக்கிவிட்டார்.

நாவலில் சின்னா 'கருப்பு'க்கு முன் 'சடைச்சி'யை வணங்குவான். அது அவன் இன்ன ஊரான் என உணர்த்திவிடும், ஆனால் யார் என்ன என்று பிடிகிட்டாது. அதே 'அரைகுறை வெளிப்பாடு' படம் தொடங்கிய அரைமணிக்குள் வரச் செய்து, முழு வெளிப்பாடு இடைவேளைக் கட்டத்தில் தெளியும்படிச் செய்திருக்கலாம்.

வசந்தபாலனிடம் நான் காண்பது ஒரு நெருக்கடி மன அமைப்பை. அவர் தான் யாக்கும் சட்டகங்களை இடைவெளி இல்லாமல் நிரப்புகிறார். நாடக வழக்குக்கு அது பொருந்தி வரக் கூடியதுதான் என்றாலும், காண்பவருக்கு அயர்ச்சியை உண்டுபண்ணவும் கூடும். இந்தப் படத்தில், அருவியில் பாளையக்காரரும் சின்னானும் பாய்கிற சட்டகத்தில் கூட நம்மை விட்டுப் பிடிக்கும் அந்த வெட்டவெளி கிட்டவில்லை. டூயட் பாட்டிலும் கூட இல்லை. (அடைபாட்டுக்குள் நிகழும் "அங்காடித் தெரு"க் கதைக்கு இந்த leaving-no-space-composition பொருத்தமாக இருந்ததும் உண்மை)

மகாபாரதத்தில் ஒரு பிரச்சாரம் உண்டு: பரசுராமன் க்ஷத்ரிய ஆண்களையெல்லாம் கொன்று போட்டதால், க்ஷத்ரிய ஸ்த்ரீகள் பிராமணர்களைக் கூடி வம்ச விருத்தி செய்தார்கள் என்பது அது. அதாவது, இன்றைக்கு ஒரிஜினல் க்ஷத்ரியன் என்று ஒருவனும் இல்லை; பிராமண விந்து வழி வந்தவர்கள்தான் அத்தனை பக்கிகளும் என்பது அந்தப் பிரச்சாரம்.

அது போல, ராஜாவின் (பாளையக் காரரின்) மனைவியை ஒரு கள்ளர் இனத்தவன் கூடுவதாக வசந்தபாலன் இக் கதையில் திருத்தம் செய்திருக்கிறார். (நாவலில் இதற்கு மூலம் என்று கொள்ளத்தக்க அத்தியாயத்தில், பொம்மு நாயக்கனின் மனைவியரை ஒரு கொல்லவாரு நாயக்க இளைஞன் கூடுவதாக இருக்கும்).

எஸ்ரா.வைப் போல 'ஆயிரம் பக்கம் அபத்தம்' என்றெல்லாம் புலம்பாமல் இப்படி ஒரு சிக்ஸர் அடித்தார் பாருங்கள் வசந்தபாலன், இதுதான் இப் படத்தின் கூடுதல் கதையாடல் ஆச்சரியம்!/

தேவன் மாயம் said...

நண்பரே! நலமா?