December 31, 2008

நானும், ரயிலில் வந்த பெண்ணும், நாசமாய்ப்போன ஜாதியும்...!!!

நான் கோயம்பத்தூரில் கல்லூரியில் படித்து கொண்டிருந்த காலம். அப்பா ரயில்வேயை சேர்ந்தவர் என்பதால் ஓசி பாஸ் உண்டு. சனி மற்றும் ஞாயிறு கல்லூரி விடுமுறை என்பதால் ரயிலை பிடித்து மதுரைக்கு வந்து விடுவேன். வெள்ளிக்கிழமை மதிய நேர வகுப்புக்களை நான் அட்டென்ட் செய்ததே கிடையாது. (என்னமோ மற்ற நாளெல்லாம் ரொம்ப ஒழுங்கு மாதிரி...). அப்போது இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் என்று ஒரு ட்ரைன் இருந்தது. மாலை நாலு மணிக்கு கோவையிலிருந்து கிளம்பி இரவு ஒன்பது மணிக்கெல்லாம் மதுரைக்கு வந்து விடும். அந்த வண்டி தான் நம்முடைய ஆபத்பாந்தவன். காலேஜ் கட்டடித்து விட்டு ரயிலில் ஏறி வீட்டுக்கு ஓடி வந்துவிடுவேன்.

அன்றும் அதேபோல் கோவையில் இருந்து கிளம்பும் ரயிலில் உட்கார்ந்து இருந்தேன். ட்ரைன் கிளம்பும் வேலையில் ஒரு குடும்பம் ஓடி வந்து ஏறியது. நான் இருந்த கம்பார்த்மன்டில் கூட்டம் அவ்வளவாக இல்லை. நான் ஒருவன் மட்டுமே இருந்த கூபேவில் அவர்களும் வந்து அமர்ந்து கொண்டார்கள். அம்மா, அப்பா மற்றும் மூன்று பெண் பிள்ளைகள். அப்பாவும் அம்மாவும் கொஞ்சம் கரடு முரடாக இருந்தார்கள். மூத்த பெண்ணுக்கு என் வயதுதான் இருக்கும். நல்ல உயரமாக, அழகாக இருந்தாள். இரண்டாவது பெண் கருப்பு என்றாலும் பார்க்க லட்சணமாக இருந்தாள். மூன்றாவது பெண் சற்றே சைனீஸ்காரி போல் இருந்தாள். ஓடி வந்த அவசரத்தில் எதையோ மூத்த பெண் மறந்து விட்டது போல. அவள் அம்மா அவளை திட்டி கொண்டு இருந்தாள். நான் எதையும் கவனிக்காதது போல புத்தகம் படித்து கொண்டு இருந்தேன்.

சற்று நேரத்தில் அவர்கள் நன்றாக செட்டில் ஆகி விட்டனர். பொறுமையாக கொண்டு வந்த தின்பண்டங்களை எடுத்து சாப்பிட தொடங்கினார்கள். அவர் என்னிடம் மெதுவாக பேச்சு கொடுத்தார்.

இரண்டு முறுக்கை என்னிடம் கொடுத்து " சாப்பிடுங்க தம்பி".. என்றார்.

"இல்லைங்க.. பரவாயில்ல" என்றேன்.

"அட சும்மா சாப்பிடுங்க தம்பி" என்று கொடுத்தார். வாங்கி கொண்டேன்.

"தம்பி என்ன பண்றீங்க..."

நான் கல்லூரியின் பெயரை சொல்லி " நாலாவது வருஷம் இன்ஜினீரிங் படிச்சுட்டு இருக்கேன்" என்று சொன்னேன்.

"ரொம்ப சந்தோசம். என் பேரு குருமூர்த்தி. சொந்தமா தொழில் பண்ணிக்கிட்டு இருக்கேன். உங்க காலேஜ்ல இருந்து கொஞ்ச தூரத்துல தான் நம்ம வீடு. தம்பிய எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு யோசிச்சேன். அதான் உங்ககிட்டே பேசினேன்" என்றார்.

நான் "அப்படீங்களா.. " என்று பொத்தாம்பொதுவாக சொல்லி வைத்தேன்.

கொஞ்ச நேரத்திலேயே அவர்கள் எல்லோரும் என்னிடம் நன்றாக பேசத் தொடங்கி விட்டார்கள். அந்த ஆன்ட்டி (அப்படித்தான் கூப்பிட வேண்டுமாம்...) ஒரு கவர்மென்ட் ஸ்கூல் டீச்செர். மூத்த பெண் கல்லூரி இறுதி வருடம். இரண்டாவது பெண் கல்லூரி முதல் வருடம். கடைசி பெண் +1. என்னை பற்றி எல்லாம் கேட்டு கொண்டார்கள். சொந்த ஊர், குடும்பம், படிப்பு முடிந்தவுடன் வேலை கிடைக்குமா என எல்லாமே கேட்டு கொண்டார்கள். எனக்கும் அவர்களோடு ஒரு பிணைப்பு ஏற்பட்டு விட்டது. பரவாயில்லையே, முதல் சந்திப்பிலேயே இவ்வளவு நன்றாக பழகுகிரார்களே என சந்தோசப்பட்டேன்.

எல்லோரும் ஒன்றாய் சீட்டு விளையாண்டு கொண்டு இருந்தோம். அப்போது அந்த ஆன்ட்டி சொன்னார்கள்.. "மூத்தவளுக்கு பையன் பார்த்துகிட்டு இருக்கோம்பா..... மூணு பொண்ணுங்களா வேற போச்சு...சீக்கிரமா கட்டி கொடுக்கணும்ல". நானும் சரி சரி என்று தலையை ஆட்டி வைத்தேன்.

"எங்க.. ஒன்னும் சரியா அமைய மாட்டேங்குது. நல்ல பையனா இருக்கனும்னுதான் ரொம்ப கஷ்டப்படுறேன்..இவ ரொம்ப உயரமா வேற இருக்காளா.. அதுவே பெரிய பிரச்சினையா இருக்கு ." என்றார்கள்.

திடீர் என்று "தம்பி.. நீங்க கொஞ்சம் எந்திரிச்சு நில்லுங்களேன்.." என்றார்.

எனக்கு சங்கடமாக போய் விட்டது. "எதுக்கு ஆன்ட்டி.." என்றேன்.

"பரவா இல்லப்பா.. இங்க கொஞ்சம் நில்லேன்.." என்றவுடன் நான் எழுந்து நின்றேன்.

"அம்மாடி.. நீயும் இங்க வந்து கொஞ்சம் தம்பி பக்கத்துல நில்லேன்".

மூத்த பெண் சற்றே சிணுங்கிக்கொண்டே என்னருகில் வந்து நின்றாள். "ஏங்க, உயரம் சரியா இருக்குல்ல.. "என்று அங்கிள்கிட்ட சொன்னார்கள். அவரும் ஆமாம் என்று சொன்னார்.

எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவர்கள் இருவரும் தங்களுக்குள் ரொம்ப மும்முரமாக பேசிக்கொள்ள தொடங்கி விட்டனர். ஆகா இது என்னடா வம்பா போச்சு. விட்டா நம்ம கல்யாணம் ட்ரைன்ல தான் நிச்சயம் ஆகும் போலயே என எண்ண தொடங்கி விட்டேன்.

அந்த பக்கம் பார்த்தால் மூத்த பெண் கொஞ்சம் வெட்கத்தோடு என்னை பார்த்து சிரிக்கிறது. "ஆள் வேற நல்லா தான் இருக்கா.. பண்ணிக்கிட்டா என்ன.. " உள்ளே இருந்து சாத்தான் சங்கு ஊத ஆரம்பித்தான். "அப்பா அம்மா கேட்டா.?.. அதெல்லாம் பார்த்துக்கலாம்.." எனக்கு நானே சொல்லி கொண்டேன்.

சற்று நேரம் கழித்து ஆன்ட்டி என்னிடம் நெருங்கி வந்து உட்கார்ந்து கொண்டார்கள். மெதுவாக என்னிடம் கேட்டார்கள்.."தம்பி.. நீங்க என்ன ஆளுங்க..?".

எனக்கு புரியவில்லை. குழம்பியவனாக "என்னங்க..?" என்றேன்.

"இல்ல தம்பி.. நீங்க என்ன ஜாதின்னு கேட்டேன்...".

எனக்குள் எதோ ஒன்று வெறுமையானதை போல் இருந்தது. பொங்கி வந்த நீரூற்று சட்டென்று அடங்கி போனதை போன்ற உணர்வு. மெதுவாக என் ஜாதியை சொன்னேன். அதைக் கேட்டவுடன் அவர்களின் முகம் இறுகிப்போனது. ஒரு நீண்ட பெருமூச்சுடன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள். சற்று நேரத்திற்கு யாரும் எதுவும் பேசவில்லை.

கொஞ்ச நேரத்திற்கு பிறகு ட்ரைன் ஒரு ஸ்டேஷனில் நின்றது. பிளாஸ்க்கில் இருந்த காப்பியை எடுத்து எல்லோருக்கும் ஊற்றி கொடுக்க தொடங்கினார் ஆன்ட்டி. ஒரு கப்பில் ஊற்றி மூத்த பெண்ணிடம் கொடுத்தார். அடுத்து அவர் சொன்ன வார்த்தைகளை கேட்டு எனக்கு காதில் ரத்தம் வராத குறைதான்.

"அண்ணனுக்கு காப்பி கொடும்மா.."

"அடப்பாவிகளா... ஒரு ஜாதி பிரச்சினையால.. அதுக்குள்ளே நான் அண்ணன் ஆகிட்டேனா.. என்ன கொடுமை இது..." மனதுக்குள் புலம்பி கொண்டேன். அதன் பிறகு அவர்கள் என்னிடம் சரியாக பேசவில்லை. அந்த பெண் என்னை பாவமாய் பார்த்து கொண்டு இருந்தது. எனக்குள் ஓங்கி கத்தினேன்..."ஜாதிகள் நாசமாய் போகட்டும்"!!!!!

15 comments:

ச.பிரேம்குமார் said...

//"அண்ணனுக்கு காப்பி கொடும்மா.."//

பாண்டியரே, என்ன கொடும இது??? இந்த உலகம் எப்பத்தான் மாறப்போகுதோ????

ச.பிரேம்குமார் said...

அந்த சொல் சரிபார்ப்பை (word verification)ஐ கொஞ்சம் எடுத்துருங்களேன்

கார்த்திகைப் பாண்டியன் said...

முதல் முறையாக எனது வலைமனைக்கு வருகை தந்து இருக்கும் தங்களுக்கு நன்றி.

Anonymous said...

அன்பு நண்பரே உங்கள் ரயில் கதை படித்தேன். மிக அற்புதம். கடைசியில் எதிர் பாராத ஒரு ட்விஸ்ட் இருந்தது மிக நன்று. ஆனால் ரயிலில் இப்படி ஒரு வாய்ப்பு அமையுமா என்பது சற்று சந்தேகம் தான். எழுத்தாளரின் கற்பனையை பாராட்ட தான் வேண்டும். இது அவரின் வாழ்வில் நடந்திருக்குமோ? என்ற ஐயம் ஏற்படுகிறது. இதனால் நான் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால்......................












ஒன்றுமில்லை

Rajeswari said...

இதெல்லாம் சகஜமப்பா !

Anonymous said...

எனக்குள் ஓங்கி கத்தினேன்..."ஜாதிகள் நாசமாய் போகட்டும்"!!!!!

in this modern scinece world, why we could not remove or reduce this concept.
well have a nice days.

Krishna said...

*-"ஜாதிகள் நாசமாய் போகட்டும்"!!!!-*

ஜாதிகள் மட்டும்மல்ல ஜாதிகளை நம்பும் மனித ஓநாய்களும் நாசமாய் போகட்டும்.

-- முதிர்கன்னிகள் மற்றும் முதிர் கண்ணன்களின் சாபம் இது!

வினோத் கெளதம் said...

//இரண்டாவது பெண் கருப்பு என்றாலும் பார்க்க லட்சணமாக இருந்தாள்.//

ஜாதியயை தூற்றும் நீங்கள் இதுவும் ஒரு வகையில் RACISM அடிபோடும் வார்த்தை என்பதை உணர்விர்களா..

கறுப்பாக லட்சணமாக இருந்தால் என்பது வேறு.
கருப்பு தான் ஆனால் லட்சணம் என்பது வேறு..
மற்றபடி படிக்க நன்றாக உள்ளது..

Anbu said...

முதல் சந்திப்பிலேயே கல்யாணம் வரை போய் விட்டீர்கள் என்றால் எவ்வளவு அழகாக இருப்பீர்கள்..

கதை நன்றாக இருந்தது அண்ணா..

கார்த்திகைப் பாண்டியன் said...

வருகைக்கு நன்றி கோவை நண்பர், ராஜேஸ்வரி, மற்றும் asfar

கார்த்திகைப் பாண்டியன் said...

//kay kay said..
ஜாதிகள் மட்டும்மல்ல ஜாதிகளை நம்பும் மனித ஓநாய்களும் நாசமாய் போகட்டும். முதிர்கன்னிகள் மற்றும் முதிர் கண்ணன்களின் சாபம் இது!//

உண்மை தோழரே.. வருகைக்கு நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//vinoth gowtam said..
ஜாதியயை தூற்றும் நீங்கள் இதுவும் ஒரு வகையில் RACISM அடிபோடும் வார்த்தை என்பதை உணர்விர்களா..
கறுப்பாக லட்சணமாக இருந்தால் என்பது வேறு.கருப்பு தான் ஆனால் லட்சணம் என்பது வேறு..மற்றபடி படிக்க நன்றாக உள்ளது..//

ரொம்ப நன்றி வினோத்.. தவறை சுட்டி காமித்தமைக்கு.. திருத்திக் கொள்கிறேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

நன்றி அன்பு.. உண்மையில் நான் மிகச் சாதாரணமாக, பார்க்க சுமாராகத்தான் இருப்பேன்..

singam said...

கார்த்திகை பாண்டியனின் ரயில் அனுபவம் நன்றாக இருந்தது. முடிவுதான்.. என்னசொல்ல..
சாதீய அணிகளை ஒழிப்போம் என்று நான் முன்னர் எழுதிய ஒரு கவிதைதான் நினைவிற்கு வந்தது. நேரம் இருந்தால் படித்து தங்கள் கருத்துகளை பகிரவும். நன்றி
http://kallimalar.blogspot.com/2010/05/blog-post_22.html

Anonymous said...

Whenever Kotta (Reservation)system is there, Jaathi(Castes) also there. Only remedy to stop benefitting by Kotta's., without benefits nobody can't follow castes(Jaathi's)., another 10 years no castes.