முன்குறிப்பு: சாகித்ய அகாதெமி விருது பெற்றிருக்கும் நாஞ்சில் நாடனுக்கு நல்வாழ்த்துகள்.
கோவை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக தமிழின் மூத்த படைப்பாளிகளில் ஒருவரான ஆ.மாதவனுக்கு விருது வழங்கும் விழா 19-12-10 அன்று பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. "மனதில் உறுதி வேண்டும்" பாட்டை ராமச்சந்திர ஷர்மா பாடி விழாவை ஆரம்பித்து வைத்தார். ஜெமோவின் தீவிர வாசகரும் பிரியத்துக்குரிய பதிவுலக நண்பருமான செல்வேந்திரன் நிகழ்வினைத் தொகுத்து வழங்கினார்.
பேராசிரியை எம்.ஏ.சுசீலா வரவேற்புரை வழங்கினார். "விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைப் பொறுத்தவரை நான் ஒரு குழந்தை மாதிரி. வெகு சமீபத்தில்தான் புதிதாக என்னை இணைத்துக் கொண்டிருப்பவள். இருந்தும் எனக்கு இந்த வாய்ப்பைத் தந்ததற்காக நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்த விருது முழுக்க முழுக்க ஒரு வாசகனின் பார்வையில் மாபெரும் எழுத்தாளனைக் கொண்டாடும் முகமாக வழங்கப்படுகிறது. இதில் எந்த அரசியலும் கிடையாது. ஜெயமோகனின் துணையோடும் அவருடைய வழிகாட்டுதலின் படியும் இந்த நிகழ்வு தொடர்ந்து நடக்கும். இங்கு வந்திருக்கும் அனைவரையும் எங்கள் இலக்கிய வட்டம் சார்பாக வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.."

அடுத்ததாக விழாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த கோவை ஞானி பேசத் துவங்கினார். அதிரடி. அதிர்வெடி. இப்படித்தான் அவருடைய பேச்சை சொல்ல வேண்டும். "பொதுவாக எனக்கு விருதுகளில் நம்பிக்கை இல்லை. விருதுகள் வாங்கினால்தான் அவன் உயர்ந்த கலைஞனா? கவனிக்கப்படாத எத்தனையோ அற்புதமான கலைஞர்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். அதற்காக அவர்கள் எல்லாம் தகுதியில் குறைந்தவர்களா? கண்டிப்பாக கிடையாது. ஆ.மாதவன் போன்ற எழுத்தாளர்கள் தமிழில் இருப்பது நமக்குத்தான் பெருமை. இப்போது அவரைப் பாராட்டி விருது தருகிறீர்கள். சந்தோசம். ஆனால் பரிசுத்தொகை 50,000/- என்பதை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கி லட்ச ருபாய் தரலாம். அவர் எழுத்துகளுக்கு அந்தத் தகுதி இருக்கிறது.

மேடையில் என்னைப் பற்றி பேச வேண்டாம் என்று ஜெமோ சொன்னார். ஆனால் நான் ஒரு நல்ல மாணவன் இல்லை என்பதால் அதை மீற வேண்டி இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு ஜெமோவின் பெயரும் சாகித்ய அகாதெமி விருதுக்கு பரிசீலனையில் இருந்திருக்கிறது. விருதுக்குழுவில் இருந்த மூன்று தமிழர்களில் ஒருவர் சொன்னாராம்.."ஜெமோவா.. அவர் தமிழ்த் துரோகி ஆயிற்றே?" ஏனய்யா.. அப்படிப் பார்த்தால் கலைஞரை விடவும் பெரிய தமிழ்த்துரோகி யாரும் இருக்க முடியுமா? இன்னொரு நடுவர் சொன்னாராம் "என்னால் கொற்றவை நாவலைப் படிக்கவே முடியவில்லை.." ஒரு புத்தகத்தை படிக்கவே முடியாத மனிதருக்கு அந்த தேர்வுக்குழுவில் இருக்கத் தகுதி உண்டா?
மூன்றாவதாக இருந்த தமிழவன் எத்தனை போராடியும் அந்த வருடம் ஜெமோவுக்கு விருது கொடுக்கவில்லை. புவியரசுக்குத் தந்தார்கள். இந்த மாதிரி காலக் கொடுமையெல்லாம் தமிழில் மட்டும்தான் நடக்கும். தமிழில் இன்று இருக்கக் கூடிய ஆகச்சிறந்த எழுத்தாளர்களில் கண்டிப்பாக ஜெயமோகனைப் புறக்கணிக்கவே முடியாது. அவருடைய "பின்தொடரும் நிழலில் குரல்" ஒரு மாஸ்டர்பீஸ். இதைச் சொன்னால் என்னை என் கட்சிக்காரர்களுக்குப் பிடிக்காமல் போகிறது. விருது பெறும் மாதவனுக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்துக்கும் என் வாழ்த்துகள்.."
அடுத்ததாக மலையாள நாவலாசிரியர் புனத்தில் குஞ்ஞப்துல்லா ஆ.மாதவனுக்கு விருதையும் காசோலையும் வழங்கினார். நிகழ்வை ஒட்டி ஜெயமோகன் எழுதிய "கடைத்தெருவின் கலைஞன்" என்ற புத்தகத்தை மணிரத்னம் வெளியிட வாசகர் ராதாகிருஷ்ணன் என்கிற இளைஞர் பெற்றுக் கொண்டார்.

புனத்தில் குஞ்ஞப்துல்லா மலையாளத்தில் உரையாற்ற அதை ஜெமோ மொழிபெயர்த்து சொன்னார். "25 வருடங்களுக்கு முன்பே என்னை ஜெமொவுக்குத் தெரிந்திருக்கிறது. ஒரு இலக்கிய விழாவில் என்னை சந்தித்து இருக்கிறாராம். அதை என்னோடு பகிர்ந்து கொண்டபோது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவருக்கு நீங்கள் விருது தருவதில் ரொம்ப மகிழ்ச்சி. இன்றைக்கு கேரளத்தில் இலக்கிய சூழல் அத்தனை நன்றாக இல்லை. அங்கிருக்கும் மக்களுக்கு மொழி பற்றிய ஆர்வம் ரொம்பவே குறைந்து வருகிறது. தங்களுடைய பிள்ளைகள் அம்மே என்றழைப்பதை விட மம்மி என்று சொல்ல வேண்டுமென கேரளா அம்மாக்கள் விரும்புகிறார்கள்.

ஆனால் தமிழில் அப்படி இல்லை என்பது மனதுக்கு ரொம்ப நிறைவாக இருக்கிறது. நீங்கள் உங்கள் மொழியை நேசிக்கிறீர்கள். தாயைப் போல, தாயின் முலைப்பாலைப் போல.. ரொம்ப நெகிழ்வாக இருக்கிறது. ஆ.மாதவனின் மொழிபெயர்ப்புகளை நான் வாசித்து இருக்கிறேன். தலைசிறந்த எழுத்தாளர். அவர் நெடுங்காலம் நன்றாக இருக்க வேண்டும். இனிமேலும் அவருக்குப் பல விருதுகள்.. ஞானபீடம் ஏன் நோபல் பரிசும் கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.." தமிழ்ச்சூழல் பற்றிய புனத்திலின் பேச்சை ஒரு சில இடங்களில் மொழிபெயர்க்கும் போது சிரிக்காமல் இருக்க ஜெமோ நிறையவே சிரமப்பட்டிருப்பார் என்றே தோன்றுகிறது.
"இலக்கிய விழாக்களில் விருப்பமில்லாத நண்பனொருவனிடம் மணிரத்னம் பேசுகிறார் வாடா என்று சொன்னேன். அடப்போடா அவர் என்னைக்குப் பேசினார் மைக் முன்னாடி சிரிக்கப் போறார் இதுக்கு எதுக்கு என்றான். அவன் எண்ணத்தைப் பொய்யாக்கும் வண்ணம் இப்போது மணி பேசுவார்" என்கிற செல்வாவின் கிண்டலோடு பேச வந்தார் மணிரத்னம். அளவான பேச்சு.
"தமிழ் சினிமாவுக்கும் இலக்கியத்துக்கும் ரொம்ப தூரம் என்கிறார்கள். ஏதோ என்னால் முடிந்தது.. இங்கே வந்திருக்கிறேன். மாதவனின் எழுத்துகள் இருட்டிலிருக்கும் மனிதர்களின் மேல் வெளிச்சம் பாய்ச்சுகிறது என்று சொனார்கள். இருட்டுக்கும் எனக்கும் சம்பந்தம் இருப்பதால்தான் என்னை அழைத்தார்களோ என்னமோ? மாதவனின் கிருஷ்ணப் பருந்தை வாசித்தேன். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. ஆனால் போகப்போக என்னை உள்ளிழுத்துக் கொண்டது. அதில் ஒரு பகுதியை சினிமாவாக்க முயன்றாலே அது அற்புதமான படமாக இருக்கும்.. அவருக்கு என் வாழ்த்துகள்.."
அடுத்ததாக சிறப்புரை ஆற்ற வந்தவர் "எப்போதும் மூக்கின் நுனியில் சினத்தை சுமந்து கொண்டிருக்கும் கும்பமுனி" நாஞ்சில் நாடன். திருவனந்தபுரம் என்கிற ஊரிலிருந்து எத்தனை முக்கியமான கலைஞர்கள் வந்திருக்கிறார்கள் என்று பட்டியலிட்டு தன் பேச்சை ஆரம்பித்தார். "கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாக எழுதி வரும் மாபெரும் கலைஞன் ஆ.மாதவன். அவருக்கு உண்டான விருதுகளை இன்னும் ஏன் தர மறுக்கிறார்கள்? காரணம் அரசியல். சாதி சார்ந்து விருதுகள் வழங்கும் கொடுமையெல்லாம் இருக்கிறது. நமக்கு முன்னால் விருது வாங்க வரிசையில் இருப்பவர்களைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. முத்தமிழ் அறிஞரில் ஆரம்பித்து கவிச் சக்கரவர்த்தி வரை எல்லோரும் இருக்கிறர்கள். இதெல்லாம் தமிழுக்கு வந்த சோதனை.

திராவிட பாரம்பரியத்தில் வந்த எழுத்தாளர்தான் ஆ.மாதவன். முரசொலி தொடங்கி பல திராவிட பத்திரிக்கைகளில் அவருடைய கதைகள் வந்திருக்கின்றன. கிட்டத்தட்ட 200 கதைகள். ஆனால் தன்னுடைய தொகுப்பென வந்தபோது அந்தக் கதைகள் எல்லாவற்றையும் புறந்தள்ளும் தைரியம் மாதவனுக்கு இருந்தது. அவருக்கு விருதுகள் தந்து உங்களைப் பெருமைப்படுத்திக் கொள்ளுங்கள். ஓய்வு பெற்று மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது கூட இந்த அறச்சீற்றம் கொள்ளாவிட்டால் எப்படி?"
அடுத்துப் பேசிய விமர்சகர் வேதசகாயகுமாரின் நிதானமான பேச்சு சற்றே சலிப்படைய வைத்தது என்றுதான் சொல்ல வேண்டும். "இதுவரை ஆ.மாதவன் கதைகள் பற்றிய திறனாய்வுகள் என எத்தனை வந்திருக்கிறது என்று பார்த்தால் ரொம்ப வருத்தமாக இருக்கிறது. ஏன் அவர் புறக்கணிக்கப்படுகிறார்? தமிழ் இலக்கியத்தின் நவீனத்துவப் போக்கை மாற்றியமைத்த கதாபாத்திரங்கள் மூன்று. ஜி.நாகராஜனின் கந்தன், சுராவின் ஜே ஜே, மாதவனின் சாளைப்பட்டாணி. ஆனால் மற்ற இருவரைப் போல சாளைப்பட்டாணி கவனிக்கப்படவில்லை. இதற்கு என்ன காரணம்?" இதே ரீதியில் கடைசி வரை மாதவன் ஏன் புறக்கணிக்கப்படுகிறார் என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். மேடையில் அவர் பேசியதை எல்லாம் காலையில் நேரடி உரையாடலிலேயே கேட்டு விட்டிருந்ததால் ருசிக்கவில்லை.
ஜெயமோகன் இரத்தின சுருக்கமாகப் பேசினார். "இந்த விருது தமிழின் முக்கிய படைப்பாளிகளை அடையாளம் கண்டு மரியாதை செய்வதற்காக உண்டானது. பணத்தைக் கொண்டு இதை மதிப்பிட முடியாது. மாறாக நாங்கள் அவர்கள் மீது கொண்டிருக்கும் மரியாதையையே காட்டுகிறது. விருது வழங்கிய குஞ்ஞப்துல்லாவை 25 வருடங்களுக்கு முன்பு ஒரு விழாவில் பார்த்தேன். அந்த விழாவின் நாயகரை எனக்கு பத்து வருடங்களாக நண்பராகத் தெரியும். அதற்காக உங்கள் எழுத்துகள் எனக்குப் பிடித்திருக்க வேண்டும் என அவசியம் இல்லை என்று சொல்லி பேச ஆரம்பித்தார். ஆகா இதோ நம்மைப் போன்றே ஒருவர் இருக்கிறார் என்று ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இன்றைக்கு இங்கே வந்து சிறப்பித்த அவருக்கு என் நன்றி. மாதவனுக்கு விருது வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்..”

அனைவருக்கும் நன்றி சொல்லிய ஆ.மாதவனின் ஏற்புரையோடு விழா நிறைவு பெற்றது. தமிழின் முக்கியமானதொரு முன்னோடிக்கு விருது வழங்கி சிறப்பித்த நிகழ்வில் நாமும் கலந்து கொண்டது ரொம்பவே நெகிழ்வாக இருந்தது.
பின்குறிப்பு 1: நகர்வலத்தின்போது அகில இந்திய ரீதியில் ரசவடை என்கிற விஷயத்தை அறிமுகம் செய்து வைத்த அண்ணன் கேபிளுக்கும், பிரதாப்புக்கும் நன்றி. அத்திரி, ஜாக்கி, உ.த, சூர்யா, மேவி போன்ற சென்னை நண்பர்களை சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி. ஒரு சிலரைப் பார்க்க எண்ணியும் பார்க்க முடியவில்லை. அவர்கள் இந்த சிறுவனை மன்னிப்பார்களாக.. ஆமென்..
பின்குறிப்பு 2: பிரியத்துக்குரிய கோபியை முதல் முறையாக சந்தித்தேன்.
அமைதியாக மசமொக்கை போடுகிறார்.
உங்களைப் போன்றவர்கள்தான் பதிவுலகுக்குத் தேவை.
வாழ்க வளமுடன்..
பின்குறிப்பு 3: அருமையாக மீன்குழம்பும் வறுவலும் செய்து அசத்திய திரு,
அண்ணே அண்ணே என்று கவனித்துக் கொண்ட செல்வா..
இருவருக்கும் உளமார்ந்த நன்றிகள்.
நல்லா இருங்க மக்களே..
பின்குறிப்பு 4: ஸ்ட்ஃப்டு சப்பாத்தி செய்ய வருதான்னு டெஸ்ட் பண்ணிப் பார்க்க கிடச்ச ஸ்பெசிமென் ஆகிட்டோமுன்னு பயந்த சமயத்துல,
அருமையா சமைச்சு அசத்திய விஜிக்கும் அப்பாவி ரங்கமணி ராமுக்கும் ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
சஞ்சய் -
உங்களுக்கும்..
நன்றி நண்பா..
கடைசியா.. கொஞ்சம் பெரிய பதிவாப் போயிருச்சு. பொறுமையா வாசிச்ச அத்தனை பேருக்கும் நன்றி மக்கள்ஸ்..:-))
[ படங்கள் உதவி - கோபி ராமமூர்த்தி]