Showing posts with label தொடர்பதிவு. Show all posts
Showing posts with label தொடர்பதிவு. Show all posts

August 3, 2011

மூன்று முடிச்சு - தொடர்பதிவு

இந்தத் தொடர் பதிவை எழுதும்படி கேட்டுக்கொண்ட நண்பன் கோபிக்கு நன்றி.

1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?

நண்பர்கள், புத்தகம், சினிமா

2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?

என் அப்பாவின் ஒன் சைடு பாசம், பஸ்ஸில் பிரயாணம் செய்வது, நம்முடைய நண்பர்களை வேறொருவர் உரிமை கொண்டாடுவது

3) பயப்படும் மூன்று விஷயங்கள்?

பாம்பு, உயரம், பணம்

4) உங்களுக்குப் புரியாத மூன்று விஷயங்கள்?

பெண்கள், ரஜினி, கடவுள்

5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?

பேனா, எஸ்ராவும் நானும் இருக்கும் போட்டோ, அவ்வப்போது படிக்கும் புத்தகம்

6) உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் அல்லது மனிதர்கள்?

குழந்தைகள், எப்போதும் கவுண்டர், என் நண்பன் முத்துக்கண்ணன்

7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?

கல்லூரியில் நமது நண்பர் முரளிக்கண்ணனைக் கொண்டு ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் முயற்சி, இலக்கியம் சார்ந்து ஒரு வேலை, எப்பொழுதும் போல மாலை நேரங்களில் ஊர் சுற்றுவது

8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?

ஆதரவற்ற மக்களுக்கென ஒரு இல்லம் அமைப்பது, சொந்தமாக ஒரு லான்சர் கார் வாங்குவது, முடிந்த மட்டும் வெளிநாடுகள் சுற்றி வருவது

9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயஙகள்?

டாக்டர் பட்டம் பெற்று நல்லதொரு கல்லூரியில் உயர்பதவியில் அமர்வது, சீக்கிரமே என் அம்மாவுக்காக சின்ன வீடொன்றைக் கட்டித் தருவது, என் நண்பர்களுக்கு அவர்கள் அறிந்த கார்த்தியாகவே எல்லாரையும் சிரிக்க வைப்பது

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?

முன்னாள் காதலிகள் பற்றிய தகவல்கள், நம்பிக்கை துரோகம் செய்யும் நண்பர்கள் என நான் நம்பி ஏமாந்தவர்களின் பேச்சு, பிரியமானவர்களின் துயரங்கள்

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?

கிடார், சினிமா மொழி, ஓவியம்

12) பிடிச்ச மூன்று உணவு வகை?

பிரியாணி, புரோட்டா, எல்லா அசைவ சமாச்சாரமும்

13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?

லூசுப்பெண்ணே, பார்த்த முதல் நாளே, என் காதல் சொல்ல (கொஞ்சம் மாறிக்கிட்டே இருக்க லிஸ்ட் இது..)

14) பிடித்த மூன்று படங்கள்?

நிறைய இருக்கு.. ஆனாலும் மூன்று முக்கியமான படங்கள் - சில காரணங்களுக்காக.. வகைக்கு ஒண்ணா

முள்ளும் மலரும் (ரஜினி-மகேந்திரன்)
ப்ரோக்கன் ஆரா (ஜான் டிரவோல்டா - ஜான் வூ)
தி ரோடு ஹோம் (யாங் ஜீமு - நான் பார்த்த முதல் உலகப்படம்)

15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்றுவிஷயம்?

என் மீதான நம்பிக்கை, இசையும் புத்தகமும், நட்பு

16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?

எங்க ஊருக்கார அண்ணே ஸ்ரீ
நம்ம பிரியத்துக்குரிய மொக்கைச்சாமி மேவி
கோயம்புத்தூர் அம்மிணி தாரணிபிரியா

August 7, 2010

ஒரு டுபாக்கூரின் வாக்குமூலம்..!!!

வலை(டை)யுலகில் நான் என்னும் தொடர்பதிவை எழுதும்படி அழைப்பு விடுத்த நண்பர் முகிலனுக்கு நன்றி..

1)வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

கார்த்திகைப்பாண்டியன்
(பதிவுக்கு வச்சிருக்கிற பேரு "பொன்னியின் செல்வன்" - எனக்கு ரொம்பப் பிடிச்ச புத்தகத்தோட பேருப்பா...)

2)அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

எழுதறதுக்கு வச்சுக்கிட்ட கா.பா - என்னோட நிஜப்பேரே இதுதாங்க... எங்க வீட்டுல வச்ச உண்மையான முழுப்பேர கேட்டு மயக்கம் போட்டு விழ மாட்டீங்கன்னா சொல்றேன்.. துரை வேல சண்முக கார்த்திகேயப் பாண்டியன்.. பள்ளிச் சான்றிதழ் எல்லாத்துலையும் இதை எழுதுறதுக்கே ஒரு மணி நேரம் ஆகும்னு பக்கத்து வீட்டு மாமா ஒருத்தரு சுருக்கி வச்சதுதான் இந்தப் பேரு.. இன்னும் விரிவாத் தெரியணும்னா என்னோட அம்பதாவது பதிவப் படிங்கப்பா...

3)
நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி?

அது ஒரு விபத்துன்னு சொல்லலாமா? ஹி ஹி ஹி.. சரி சரி.. ஒரு எதேச்சையான இணையத்தேடலில் அதிஷாவின் வலைப்பூ கண்ணில் சிக்கியது.. அங்க தொட்டு இங்க தொட்டு நெறைய பேரைப் படிச்சேன்.. எல்லாருக்கும் பின்னூட்டம் போட நமக்குன்னு ஒரு தளம் வேணும்னு ஆரம்பிச்சதுதான் இந்தப்பதிவு...எதுவுமே தெரியாமதான் ஆரம்பிச்சேன்.. அப்புறம் கையப் பிடிச்ச கரகரப்பு எதையோ பிடிச்சு பிசையச் சொல்லுங்கிற மாதிரி... இயல்பாகவே இருந்த தமிழார்வம் காரணமா எழுத ஆரம்பிச்சு இப்போ ஒண்ணரை வருஷம் முடிஞ்சு போச்சு..

4)உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்ன எல்லாம் செய்தீர்கள்?

ரொம்பப் பெரிய விஷயமெல்லாம் இல்ல நண்பா.. ஆரம்பத்துல திரட்டி பத்தி தெரியாத காரணத்தால நானே எழுதி நான் மட்டுமே படிச்சுக்கிட்டு இருந்தேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமா நெட்டே கதின்னு உக்கார்ந்துதான் சூதக் கண்டுபிடிச்சேன்..

இங்க எல்லாமே கிவ் அண்ட் டேக் பாலிசி தான்.. நிறைய நண்பர்களுக்குப் பின்னூட்டம் போட்டேன்.. அப்புறம் ஆரம்பத்துல கொஞ்சம் வெவகாரமா எழுதினேன்.. விஜய் ஓட்டுறது, துப்பட்டா போடலாமா வேண்டாமா, பிடிக்காத விளம்பரங்கள் .. இந்த மாதிரி.. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா மக்கள் கவனிக்க ஆரம்பிச்சாங்க..

பதிவுல நாம எழுதுறது ஒரே ஒரு எண்ணத்துலதான்.. வாசிக்குரவங்க கூட இயல்பா உரையாடுற மாதிரி இருக்கணும்னு எழுதுவேன்.. அவ்வளவுதான்.. எல்லா நண்பர்களின் ஊக்கமும் ஆதரவும்தான் இன்னைக்கு வரைக்கும் தொடர்ந்து எழுத வச்சுக்கிட்டு இருக்கு..

5)வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

என்னுடைய எல்லா இடுகைகளிலுமே எங்கோ ஓர் இடத்தில் நான் இருக்கிறேன். ஒரு பங்கேற்பாளனாக அல்லது ஒரு பார்வையாளனாக.. முழுவதும் புனைவு என்பது என்னால் அவ்வளவாக, தெளிவாக சொல்ல இயலாத ஒரு விஷயமாகவே இருப்பதால், என்னுடைய சொந்த வாழ்விலிருந்தே சம்பவங்களைக் கோர்த்து எழுதுகிறேன்.

விளைவு என்று சொன்னால், ஒரு சம்பவத்தை சொல்லலாம். விஜயைக் கிண்டல் பண்ணி ஒரு இடுகை எழுதி இருந்த நேரம்.. பிரைவேட் நம்பர் என்று நடு ராத்திரி ரெண்டு மணிக்கு ஒரு நாதாரியிடமிருந்து போன் வந்தபோது வீட்டில் பயந்து போனார்கள். அதன் பிறகுதான் பதிவல் இருந்த என்னுடைய அலைபேசி எண்ணை எடுத்துவிட்டேன்.

6)நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

சத்தியமாக இது பொழுதுபோக்கு கிடையாது. பிறகு? பதிவுகளின் மூலம் நிறையவே சம்பாதித்து இருக்கிறேன்.. அன்பான உறவுகளை. இந்த நட்புகளே எனக்கு பதிவுலகில் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.

7)நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒண்ணே ஒண்ணு.. கண்ணே கண்ணு. தமிழ்லதான் - அதுவும் இது மட்டும்தான்.

8)மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

அன்பையும் உறவுகளையும் மீறி எப்போதாவது வெடித்துக் கிளம்பும் பிரச்சினைகளின்போது பொதுவாகக் கோபம் வந்திருக்கிறது.
அப்பவெல்லாம் எதுலையும் தலையிடாம அமைதியா இருந்துடுவேன்.(கள்ள மவுனம்?!) காரணம், கோபத்தில் ஏதேனும் வார்த்தைகள் வந்து விட்டால் அதை மீண்டும ள்ள முடியாது. எனவே கப் சிப் காரவடைதான்.

மற்றபடி
சில பதிவர்கள் மேல் பொறாமை நெறையவே உண்டு. ஏன் நம்மால் இப்படி எழுத முடியவில்லை என்று நிறைய பேர் மேல் காண்டாக இருக்கிறேன். நான் அடிப்படையில் ஒரு கோமாளி.. ஆனால் எழுத்தில் எனக்கு அது வந்து தொலையாது. எனவே
நகைச்சுவையாக எழுதும் மக்கள் மீது கொஞ்சம் பொறாமை உண்டு.

9)உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

பின்னூட்டங்களில் நண்பர் பிரேம்குமார் சண்முகமணி. என்னுடைய முதல் வாசகர் அவர்தான். நான் எழுதத் தொடங்கிய காலத்தில், பல புதிய பதிவர்களைத் தேடிக் கண்டுபிடித்து ஊக்குவித்த நல்ல மனிதர். அவர் எங்க ஊருக்காரர் என்பது எனக்கு இன்னும் பெருமை. இதுவரை அவரை ஒருதடவை கூட சந்தித்தது கிடையாது, அலைபேசியிலும் பேசியது கிடையாது என்பதில் எனக்கு வருத்தமுண்டு. நான் சந்திக்க விரும்பும் மனிதர்.

அலைபேசியில் கூப்பிட்டு பாராட்டிய முதல் நண்பர் சொல்லரசன். திருப்பூர்க்காரர். பதிவு, நட்பு என்பதையும் மீறி என் மீது அக்கறை செலுத்தும் பாசத்துக்குரிய அண்ணன் அவர்.

10) கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

தேங்கி நிற்காத ஆறு போல ஓடிக் கொண்டியிருக்க வேண்டும், தெரிந்து கொள்வதற்கான விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கிறது என்று நம்புகிறவன். அவ்வளவே...

விருப்பமிருக்கும் நண்பர்கள் யார் வேண்டுமானாலும் இதைத் தொடரலாம்..

June 21, 2010

பரீட்சைன்னா.. பெரிய பருப்பா?!!!

அது என்னமோ பாருங்க.. சின்ன வயசுல இருந்து நமக்கு இந்தப் பரீட்சைன்னாலே அவ்வளவா ஒண்ணும் பெரிய பயமெல்லாம் கிடையாதுங்க.. ஏன்னு கேட்டீங்கன்னா.. அதுக்குக் காரணம் எங்கம்மா. அவங்க தான் நமக்கு பாடம் சொல்லிக் கொடுத்த மொத வாத்தியாரு. அவங்க நமக்கு சொன்னதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்.. "மகனே.. படிக்கிறது அறிவ வளர்க்கத்தான்.. வெறுமன புத்தகத்துல இருக்குறத படிச்சிட்டுப் போய் பேப்பர்ல வாந்தி எடுக்கிறதால நாம பெரிசா எதையும் சாதிச்சிட முடியாது.. அதனால எதப் படிச்சாலும் புரிஞ்சு படி.. ஏன் எதுக்குப் படிக்கிறோம்னு தெரிஞ்சு படி.. அது போதும்.. பரீட்சைல நீ மார்க்கு வாங்கலை, அது இதுன்னு நான் கவலைப்படவே மாட்டேன்.. சரியா?" அவங்க சொன்னதுல நம்ம மண்டைல எது ஏறுச்சோ இல்லையோ.. அந்தக் கடைசி வரி.. பரீட்சைன்னா பயப்பட வேண்டியது கிடையாதுங்கிறது மட்டும் தெளிவா பதிஞ்சு போச்சு. அதுக்கு அப்புறம் நமக்கு என்ன கவலை சொல்லுங்க?

நல்லா படிச்சா நம்ம வாழ்க்கை நல்லாயிருக்கும். இதுதான் எங்க தாத்தா சொல்லிக் கொடுத்தது. பொதுவாவே எனக்கும் படிக்க பிடிக்கும். சோ நமக்கு படிப்பு நோ ப்ராப்ளம்தான். நாம இருந்த வீட்டுல இருந்து பத்து வீடு தாண்டி பள்ளிக்கூடம். நாங்கதான் எங்க ஸ்கூலோட மொத செட்டும் கூட. அதனால வாத்தியாருங்க எல்லாரையும் நல்லாத் தெரியும். நல்ல ஜாலியா பொழுது போகும். பக்கத்து வீட்டுக்காரர்தான் ப்ரின்சி. அதனால பரீட்சை மார்க் எல்லாம் நான் பாக்குறதுக்கு முன்னாடியே அம்மா பார்த்திடுவாங்க. பெரும்பாலும் மூணு ரேன்குக்குள்ள வந்திருவேன். யாரு பர்ஸ்ட் வரதுன்னு பசங்களுக்கு உள்ள போட்டி, அப்படி இப்படின்னு பரீட்சைய எதிர்பார்த்துக் கிடந்த கோஷ்டி நம்மது. (அடிக்க வராதீங்கப்பா..)

அஞ்சாவது வரைக்கும் பரீட்சை எழுதினது எல்லாம் அவ்வளவா ஞாபகம் இல்லை. அதுக்கு அப்புறமும் சாதாரணமாத்தான் இருந்தது. சுத்தி இருந்த மக்கள் எல்லாம் ஓவரா பில்டப்பா கொடுத்தது பத்தாவது பரீட்சையப்பத்தான். "இதுதான் உன் லைப்பு.. பார்த்து.. ஆ.. ஊன்னு.." அடப் போங்கப்பா.. திமிருக்குன்னே அடுத்த நாள் பயாலஜி எக்ஸாம் வச்சிக்கிட்டு நம்ம பசங்க கூட படத்துக்குப் போனேன். "பூச்சூடவா" - அந்தக் கொடுமைய பார்த்ததுக்கு ஒழுங்கா உக்கார்ந்து படிச்சிருந்தாலாவது புண்ணியம். கடைசியா +2 . மொதல்லேயே வீட்டுல சொல்லியாச்சு. இவ்வளவு மார்க்குதான் வாங்குவேன்... இதுக்குத்தான் படிக்கப் போறேன்னு. அவங்களும் ஒண்ணும் கண்டுக்கல. கடைசியா சொல்லி வச்சி மாதிரித்தான் மார்க்கும் வந்தது. அதுக்குப் பொறவு நான் பொறியியல் சேர்ந்ததும், இன்னைக்கு வாத்தியாரா வந்து நாலு பேருக்கு நாம பரீட்சை வச்சுக் கொலையா கொல்றதும்.. விடுங்கப்பா.. அதெல்லாம் அவனவன் செய்த வினைப்பயன்..

சம்பவம் 1

என்னடா இவன் ஓவராப் பேசுறான்.. பரீட்சைன்னா நீ பயந்ததே கிடையாதா? நீ பெரிய *****யோ? இப்படி எல்ல்லாம் திட்டணும்னு தோணுதா? பிளீஸ் வெயிட்.. நாங்களும் அசிங்கப்பட்ட கதைய சொல்லுவோம்ல. நான்தான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே. நம்ம அம்மாவுக்கு நம்ம மேல நம்பிக்கை ஜாஸ்தி. பிள்ளைய ஒரு பெரிய படிப்பாளின்னு நெனச்சுக்கிட்டு மூணாவது படிக்கும்போதே ஹிந்தி படிக்கக் கொண்டு போய் விட்டாங்க. அவனும் அஞ்சு பரீட்சைய ஒழுங்கா எழுதிட்டான். ஆனா பாருங்க.. இந்த விஷாரத் உத்தரார்த் வந்தப்பதான் புடிச்சது சனி. ஏழாங்கிளாஸ்னு நினைக்கிறேன். அப்பத்தான் நமக்கு கோலிகுண்டு, சீட்டு, உருட்டுக்கட்டை, புது நண்பர்கள் எல்லாம் அறிமுகம் ஆன நேரம். எல்லா கிளாசும் கட்டு. நேரா பரீட்சைக்கு போய் நின்னா..? ஒண்ணுமே தெரியல. என்ன பண்ண.. வேற வழி இல்லாம கைடத் தூக்கிட்டு உள்ள நொழஞ்சாச்சு.

லட்சுமி ஸ்கூல்தான் செண்டர். பரீட்சை ஆரம்பிச்சா.. சும்மா குண்டு குண்டுன்னு ஒரு அம்மாதான் சூப்பர்வைசர். சுத்தி சுத்தி வருது. காலுக்கு கீழ கைடு. பார்த்து பார்த்து அடிச்சுக்கிட்டு இருக்கேன். அப்படியே வேர்த்து வழியுது. பயம். முன்ன பின்ன செத்தாத்தான சுடுகாடு தெரியும்? கடைசில நம்ம மூஞ்சியே காட்டிக் கொடுத்துருச்சு. அந்த அம்மா நேரா வந்து கைட எடுத்துருச்சு. சுமார் ஒரு மணி நேரம் நின்னுக்கிட்டே இருக்கேன். அப்புறம் என்ன நினச்சாங்கன்னு தெரியல.. பாவம்னு என்கிட்டே வந்து.."இனிமேல் இப்படி பண்ணாதப்பா"னு சொல்லிட்டு அது வரைக்கும் எழுதி இருந்த எல்லாத்தையும் அடிச்சுட்டுப் போய்ட்டாங்க. அதுக்கு அப்புறம் நடந்ததுதான் காமெடி. நான் மறுபடி அடிச்சத பார்த்தே எழுத ஆரம்பிக்க, அந்தம்மாவுக்கு வந்துச்சு பாருங்க ஒரு கோபம்... குடுகுடுன்னு ஓடி வந்து பேப்பர புடுங்கிட்டாங்க. "நீ எழுதிக் கிழிச்சது போதும்.. கிளம்புப்பா".. நாம வாழ்க்கைல வாங்குன மொதக் கப்பு.. அதுதான். அப்புறமேட்டிக்கு நான் ஹிந்தில எம்.ஏ வரைக்கும் படிச்ச கொடுமைலாம் நடந்தது தனிக்கதை.. (ஹி ஹி ஹி.. எல்லாம் ஒரு விளம்பரந்தானே..)

சம்பவம் 2

வெற்றிகரமா +2 எழுதியாச்சு. அடுத்து என்ன? முட்டி மோதியும் மூணே மார்க்குல மெடிக்கல் சீட் இல்லைன்னு தெரிஞ்சு போச்சு. அப்ப வேற வழியே கிடையாது.. பொறியியல்தான். ஆனாலும் கடைசி முயற்சியா.. ஒரு தடவை கேரளாவுல போய் பரீட்சை எழுதிப் பார்க்கலாமேன்னு ஒரு ஆசை. அங்க நடக்குற மெடிக்கல் மற்றும் பொறியியல் தேர்வுக்கான பரீட்சை. போய் உக்கார்ந்து கேள்வித்தாள வாங்கி பார்த்தா கண்ணக் கட்டுது. 120 கேள்விகள். சரி.. மொதல்ல நமக்குத் தெரிஞ்சத எல்லாம் எழுதுவோம். அதுக்கு அப்புறம் தெரியாததைப் பத்தி யோசிப்போம்னு எழுதி முடிச்சுட்டு பார்த்தா.. மொத்தம் மூணே கேள்விதான் எழுதி இருக்கேன். அவ்வ்வ்வவ்.. ரைட்டு வேற வழியே இல்லை.. பாண்டியா.. உருட்டுடா பகடையன்னு எல்லாக் கேள்விக்கும் டாஸ் போட்டு பதில் எழுதி முடிச்சுட்டு வெளில வரேன்.. வந்து பார்த்தா, அங்க பயபுள்ளைங்க எல்லாம் பேசிக்கிட்டு இருக்குதுங்க..

"நீ எத்தனைடா எழுதுன?"

"24 .. நீ?"

"நான் 28ப்பா .."

டேய்.. என்னடா சொல்றீங்க.. நான் இப்போத்தாண்டா 120 கேள்விக்கு பதில் எழுதிட்டு வரேன்? அப்புறம் விசாரிச்ச்சத்தான் தெரிஞ்சது.. அங்க எல்லா கேள்விக்கும் பதில் அளிக்கிறது கட்டாயம் இல்லையாம். ஏன்னா.. சரியான விடைக்கு நாலு மார்க்கு.. அதே மாதிரி தப்பான விடைக்கு ஒரு மார்க்கு மைனஸ். வெளங்கிடும். அங்க ரிசல்ட் வந்தப்ப என்னோட ரேன்க் பத்தாயிரத்து சொச்சம். அங்கயும் பொறியியல்தான் கிடைக்கும்னு சொன்னங்க. வேற வழி இல்லாம தமில்நாட்டுலையே சேர்ந்து படிச்சு.. கஷ்டப்பட்டு முன்னேறி.. விடுங்கப்பா.. அதெல்லாம் நாளைய வரலாறு கூறட்டும். (ஒரு விண்ணப்பம்.. துப்புரவங்க பப்ளிக்ல துப்பாதீங்கப்பா.. தனியா மின்னஞ்சல் அனுப்பி உங்க கடமைய செய்யலாம் )

ஆக.. இப்படியாக பரீட்சைக்கும் நமக்கும் இருக்குற உறவு மாமன் மச்சான் உறவு மாதிரிதான். ரொம்ப பயந்தது எல்லாம் கிடையாது. அது பாட்டுக்கு நடக்கும். கடமையைச் செய்.. பலனை எதிர்பார்க்காதே.. நம்ம கைல என்ன இருக்கு.. சொல்லுங்க? இந்த சங்கிலிப்பதிவை எழுதும்படி கேட்டுக்கொண்ட தோழி "இயற்கை ராஜி"க்கு நன்றிகள் பல.. வேறு யாரும் எழுத விருப்பட்டால் தொடரலாம்..

April 7, 2010

தமிழ்ப்படம் - ஒண்ணு இல்ல.. பத்து..!!!

"அங்காடித் தெரு" பற்றிய என்னுடைய திரைப்பார்வையில் இப்படி எழுதி இருந்தேன் - "என் வாழ்வில் நான் பார்த்த மிகச் சிறந்த பத்து தமிழ்ப் படங்களின் வரிசையில் கண்டிப்பாக அங்காடித் தெருவும் இருக்கும்." இதைப் படித்தவுடன் நம்ம தருமி ஐயாவுக்கு ஒரு சின்ன ஆசை. எல்லோரும் தங்களுக்கு மிகவும் பிடித்த பத்து படங்களைப் பற்றி எழுதினால் என்ன என்பதுதான் அது. அவரே முதல் ஆளாக எழுதியும் விட்டார். சங்கிலிப்பதிவாக எழுதும்படி என்னை அழைத்ததற்கு நன்றி அய்யா.

தமிழில் வந்த சிறந்த பத்து படங்கள் என்றால் அது சிரமம். எனவே ரொம்பவெல்லாம் யோசிக்காமல் என் மனதுக்கு தோன்றிய, நான் ரசித்த படங்களைப் பற்றி எழுதுகிறேன்.

முள்ளும் மலரும்

சூப்பர் ஸ்டாரின் ஆகச் சிறந்த படம். ரஜினியின் தேர்ந்த நடிப்பு இந்தப் படத்தைப் போல வேறு எந்தப் படத்திலும் வெளிப்பட்டு இருக்கிறதா என்று தெரியவில்லை. மகேந்திரனின் யதார்த்தமான இயக்கம், இளையராஜாவின் அற்புதமான இசை என்று படம் பட்டையைக் கிளப்பும். குறிப்பாக கிளைமாக்ஸ். "வள்ளி.. இவனுங்க எல்லாம் யாரோ ஏதோ.. ஆனா நீ.. என் கூடப் பொறந்தவ.. என் தங்கச்சி.. நீ கூடவா என்ன விட்டுட்டுப் போற.." திமிரோடு பேசும் ரஜினியும், ஷோபாவின் கிளாஸ் நடிப்பும், "டுங் டக் டுங் டக் டுங்குடுங்கு டுங் டாக்" என்று இன்னதென்று சொல்ல முடியாத ஒரு வாத்தியத்தில் இசைக்கும் ராஜாவின் பின்னணி இசையும்.. சொல்லும்போதே புல்லரிக்கிறது.

முதல் மரியாதை

மத்திம வயதில் தோன்றும் காதலை கிராமத்துப் பின்னணியில் பாரதிராஜா சொன்ன விதம் ரொம்பவே பிடித்திருந்தது. குறிப்பாக சிவாஜியின் நடிப்பு. கல்லைத் தூக்கும் காட்சி, மீன் சாப்பிடும் காட்சி என்று சொல்லிக் கொண்டே போகலாம். படத்தில் பிடித்த இன்னொரு விஷயம் - வடிவுக்கரசி. இயல்பாக செய்திருப்பார். மறக்க நினைக்கும் ஒரே காட்சி - டேய்ய்ய்ய்ய் என்று கத்திக்கொண்டே ராதா சத்யராஜைக் கொல்லுவது. நிறைய சினிமாத்தனங்கள் இருந்தாலும் உள்ளத்தைத் தொட்ட படம்.

முகவரி

அஜித்துக்கு என்னை ரசிகனாக்கிய படம். இசையமைப்பாளர் ஆக விரும்பும் ஒருவனுடைய வாழ்க்கையை அழகாகப் படமாக்கி இருப்பார்கள். ரகுவரன், விஸ்வநாத், சித்தாரா, ப்ரீத்தா என்று அஜித்தின் குடும்பமும் அவர்களின் தியாகங்களும் நெஞ்சைத் தொடும். கிளைமாக்ஸ் நிதர்சனம். படத்தில் மனதில் நிற்கும் காட்சி - குடும்பத்தோடு வானவில் பார்க்கும் காட்சி.

பூவே உனக்காக

அப்பா தயாரிக்கும் சீன் படங்களில் மட்டும் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த விஜயை புதிய பாதைக்கு திருப்பிய விக்கிரமனின் படம். தமிழில் வெளிவந்த பல காதல் படங்களுக்கும் முன்னோடி. எக்கச்சக்கமான கிளேஷக்கள், மொக்கை நகைச்சுவை என்பதையும் மீறி நிறைவான படம். கிளைமாக்சும், காதல் பற்றிய வசனங்களும்.. டாப் கிளாஸ்.

உள்ளம் கொள்ளை போகுதே

சுந்தர்.சி இயக்கத்தில் பிரபுதேவா, கார்த்தி, அஞ்சலா நடித்த அருமையான காதல் படம். (இந்தப்படம் லிஸ்டில் இருப்பதில் ஒரு சூது இருக்கிறது..) கார்த்தி வந்து போகும் கொஞ்ச நேரத்தில் பட்டாசு கிளப்பி இருப்பார். தான் ஒரு நல்ல நடிகர் என்பதை பிரபுதேவா நிரூபித்த படம். கார்த்திக்ராஜா இசையில் எல்லாப் பாட்டுமே நன்றாக இருக்கும். ஆனாலும் படம் ஓடவில்லை...:-(((((

சேது

இப்படி ஒரு படம் எடுக்க முடியுமா என்று என்னை அதிர்ச்சிக்கு ஆளாக்கிய படம். பொருத்தமான நடிகர்கள், திகைக்க வைக்கும் திரைக்கதை, கண்கள் கலங்கும் கிளைமாக்ஸ் என பாலா தன்னை அறிமுகம் செய்து கொண்ட படம். ராஜாவின் பின்னணி இசைதான் இந்தப் படத்திலும் ஹைலைட். எல்லோருக்கும் விக்ரம் காதலை சொல்லும் காட்சிதான் படத்தில் பிடித்ததாக சொல்வார்கள். ஆனால் அதைவிட.. ஸ்ரீமன் விக்ரமிடம் பேசும் காட்சி எனக்கு ரொம்பப் பிடிக்கும். "அவங்களுக்கு நம்மள விட்டா யாருடா இருக்கா? நாம பிரண்ட்ஸ்டா.. இத்தனை வருஷமா நம்ம காலையே சுத்திக்கிட்டு இருக்கவங்க.." அட்டகாசம்.

அன்பே சிவம்

தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர் கமல் என்பதை யாராலும் மறுக்க முடியாது. படம் வெளிவரும்வரை கமலின் மேக்கப் பற்றி யாருக்குமே தெரியாது. அந்த தைரியம்தான் கமல். முதல் தடவை பார்த்தபோது அதிர்ந்து போனேன். தான் ரத்தம் தந்து காப்பாற்றிய சிறுவன் வழியிலேயே இறந்து போக மாதவன் ரோட்டில் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பார். அவர் அருகிலேயே கமல் உட்கார்ந்து இருப்பார். அப்போது கேமிரா கமலின் முகத்துக்கு பக்கவாட்டில் இருக்கும். பேசுவதில் சிரமம் காரணமாக அவருடைய கழுத்து நரம்புகள் எல்லாம் புடைத்துக் கொள்ளுவதை காட்டுவார்கள். அதன் பின்பு கமழும் மாதவனும் பேசும் வசனங்கள்.. மதன் பின்னி இருப்பார். அதே போல கிளைமாக்சும் அருமை.

நந்தா

சேது தந்த நம்பிக்கையோடு, மிகுந்த எதிர்பார்ப்புகளோடு நந்தாவுக்கு போனேன். அதுவும் அஜித் நடிக்க மறுத்து பின்பு சூரியா நடித்த படம். ஆர்வமாக பார்க்க ஆரம்பித்தால் படம் என்னவோ போல் இருந்தது. ஒன்றுமே பிடிக்கவில்லை. நல்லவேளை தல தப்பிச்சுட்டருடா என்று சொல்லியவாறு வீட்டுக்கு வந்தேன். ஆனால் ஏதோ ஒன்று எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. ஒரு தாயே தன் மகனை கொல்வாளா.. என்ன படம் இது என வருவோர் போவோர் எல்லோரிடமும் புலம்பி கொண்டிருந்தபோது, நண்பன் கேட்டான். "என்னடா படம் நல்லா இல்லன்னு சொல்லிட்டு ரெண்டு நாளா அதப்பத்திய புலம்பிக்கிட்டு இருக்க? " அப்போதுதான் எனக்கே உரைத்தது. நந்தா என்னை எந்த அளவுக்கு பாதித்தது என்று நானே பிறகு தான் உணர்தேன். பின்பு தான் கோவை பல்லவி திரை அரங்கத்தில் ஒரே நாளில் மூன்று காட்சிகள் பார்த்தேன். செம படம்.

தவமாய் தவமிருந்து

சின்ன வயதில் அப்பாவின் அன்பு என்பது கிடைக்கப் பெறாத எனக்கு, ஒவ்வொரு முறை இந்தப் படம் பார்க்கும்போதும், ஏன் நமக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிட்டவில்லை என்று கண்ணீர் முட்டிக் கொண்டு வரும். சேரன் எடுத்திலேயே இதுதான் பெஸ்ட் என்பது என் கருத்து. தீபாவளிக்கு முந்தின தினம் போஸ்டர் ஒட்டும் ராஜ்கிரணை எண்ணும்போதே கண்கள் ஈரம் ஆகின்றன.

பொற்காலம்

சேரனின் இன்னுமொரு அருமையான படம். மெதுவாக நகரும் அழகான திரைக்கதை, நல்ல நடிப்பு.. "நீ உன் தங்கச்சிக்கு நல்ல அழகான பையனாத்தான் பார்த்த.. எங்கள மாதிரி கருப்பன் எல்லாம் உன் கண்ணுக்குத் தெரியல இல்ல?" வடிவேலு பேசும் இந்த வசனம் ரொம்பப் பிடிக்கும். ஒத்துக் கொள்ள முடியாத கிளைமாக்ஸ் என்றாலும்.. என்னை ரொம்பவே பாதித்த ஒன்று.

எழுதி முடித்து விட்டு பார்த்தால், எல்லாமே உணர்வுப்பூர்வமான படங்கள். பொழுதுபோக்கு என்பதையும் மீறி, எதோ ஒரு விஷயத்தை சொன்ன படங்கள். (ஹ்ம்ம்.. உண்மையிலேயே நமக்கு வயசு ஆகிடுச்சோ?) இன்னும் லிஸ்டில் நிறைய இருந்தாலும், பத்து படங்கள் மட்டுமே சொல்லி இருக்கிறேன். இந்த சங்கிலிதொடரில் இணைந்து கொள்ளும்படி நான் அழைக்க விரும்புவது..

டக்ளஸ் "ராஜூ"

ஜெட்லி

முகிலன்

(பின்னூட்டம் போடும் நண்பர்களும் தங்களுக்குப் பிடித்த படங்களின் பட்டியலை சொல்லலாமே..)

March 30, 2010

நினைவுகளின் நீரோடையில்.... பத்துப் பெண்கள் - தொடர்பதிவு..!!!

என் வாழ்க்கை பெண்களால் ஆக்கப்பட்டது. என் சிறு வயது முதல் இன்று வரை பெண்களுடனேயே வளர்ந்துள்ளேன். வெற்றி பெற்ற ஒவ்வொரு சாமான்யனுக்குப் பின்னாலும் பெண்கள் இருந்தே தீருகிறார்கள் ( நன்றி - ஸ்ரீ ). எத்தனை உண்மையான வார்த்தைகள். பெண்கள் எப்போதுமே எனக்குப் பிடித்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். என்னுடைய வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஏதோ ஒரு பெண்ணின் பாதிப்பு என்னுடனே இருந்து வருகிறது. நான் என்று மட்டுமல்ல.. நம் எல்லோருடைய வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் பெண்கள் பெரிய பாதிப்புகளை விட்டுச் செல்கிறார்கள். "எனக்குப் பிடித்த பத்து பெண்கள்" என்கிற இந்த தொடர்பதிவை எழுதும்படி எனக்கு அழைப்பு விடுத்த நண்பர் வாசகர் தேவை - எம்.பிரபுவுக்கு மிக்க நன்றி.

நான் ரொம்பவே லேட்டாக இந்த வண்டியில் ஏறுகிறேன் என்று நினைக்கிறேன். பதிவுலகில் கிட்டத்தட்ட எல்லோருமே இந்தத் தலைப்பில் எழுதி விட்டார்கள். அன்னை தெரசா தொடங்கி ஐஸ்வர்யா ராய் வரை எல்லா பிரபலங்களும் ஏற்கனவே பல நண்பர்களால் குறிப்பிடப்பட்டு விட்ட நிலையில் நான் யாரைப் பற்றி எழுத என்று எனக்குத் தெரியாத காரணத்தால், இடுகையில் ஒரு சின்ன மாற்றத்தை செய்திருக்கிறேன். என் வாழ்க்கையில்.. நான் கடந்து வந்த பாதையில்.. என்னுள் பாதிப்பையும் மாற்றத்தையும் ஏற்படுத்திய பெண்களைப் பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன். கோல் போட வசதியாக கம்பத்தை மாற்றி வைத்ததற்காக ஆட்டத்தின் ரூல்ஸை வடிவமைத்த அம்பயர்கள் என்னை மன்னிப்பீர்களாக..:-)))

திருமதி.சுந்தர்சிங்

நான் படித்த செவன்த் டே பள்ளியில் மூன்றாம் வகுப்பு வரை எனக்கு தமிழ்ப்பாடம் எடுத்தவர். என்றைக்கும் எனது பிரியத்துக்கு உரியவர். தமிழ் மீதான என்னுடைய ஆர்வத்தின் மூலகாரணம் இவர்தான். பள்ளி முதல்வரின் மனைவி என்கிற எந்த பந்தாவும் இல்லாமல் எல்லோரோடும் இனிமையாக பழகக் கூடியவர். பொருளாதார சூழ்நிலையின் காரணமாக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த என்னைப் போன்ற பல மாணவர்களுக்கு புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து ஊக்குவித்தவர். எனக்கு ஆசிரியை என்பதை விட ஒரு நல்ல, அன்பான மனுஷி.

மீனாட்சி

இந்தப் பெயரை சொல்லும்போதே என் உடம்பில் என்னையும் அறியாமல் ஒரு சின்ன சிலிர்ப்பு ஓடுகிறது. பெயரைத் தவிர மீனாட்சியை பற்றிய எதுவும் எனக்கு நினைவில் இல்லை. அவள் ஆள் உயரமா குட்டையா.. கருப்பா சிவப்பா.. அவள் முகம் எப்படி இருக்கும்? சத்தியமாக எதுவுமே ஞாபகம் இல்லை. ஆனால் என்னிடம் கடைசியாக அவள் பேசிப்போன வார்த்தைகள் இன்னும் என் காதில் கேட்டுக் கொண்டே இருக்கின்றன.

நான் அப்போது ஐந்தாம் வகுப்பு பரீட்சை எழுதியிருந்தேன். சுப்ரமணியபுரம் கல்லு சந்தில் நான்கு வீடுகள் இருந்த ஒரு காம்பவுண்டில் எங்கள் வீடு இருந்தது. எங்கள் வீட்டுக்கு அடுத்து இருந்த மீனாக்கா வீட்டுக்கு விடுமுறைக்கு வந்தவள்தான் மீனாட்சி. என்னை விட ஒரு வயது கம்மி. வந்து இரண்டு மூன்று நாட்களிலேயே அவள் எனக்கு நெருங்கிய தோழியாகிப் போனாள். அந்த விடுமுறை முழுவதும் நான் அவளுடனே விளையாடிக்கழித்தேன். சாப்பாடு, தூக்கம் எல்லாமே ஒன்றாகத்தான். மற்ற பசங்க எல்லாம் கோபம் கொண்டு என்னோடு சண்டைக்கு வந்தபோதும் நான் கண்டு கொள்ள வில்லை. வீட்டில் இருந்து திருப்பதி சுற்றுலா போனபோது கூட, அவர்களோடு போக மறுத்து மீனாக்கா வீட்டிலேயே தங்கிக் கொள்ளுமளவுக்கு மீனாட்சி மீதான என் பிரியம் ரொம்பவே அதிகமாக இருந்தது.

எந்த ஒரு ஆரம்பத்துக்கும் முடிவு என்ற ஒன்று உண்டல்லவா? அந்தக் கோடை விடுமுறையும் முடிவுக்கு வந்தது . சிறிது நேரத்தில் மீனாட்சி ஊருக்கு கிளம்பப் போகிறாள். நானும் அவளும் மொட்டை மாடியில் தனியாக இருக்கிறோம். அவள் கண்களில் இருந்து கண்ணீர் மாலை மாலையாக வழிந்து கொண்டே இருக்கிறது. "நீ இல்லாம நான் எப்படிடா இருப்பேன்.. நாம ரெண்டு பேரும் ஒண்ணாவே இருக்க முடியாதா..?" அவளுக்கான பதில் என்னிடம் இல்லை. அவளையே வெறித்துப் பார்த்தபடி நிற்கிறேன். "நான் அடுத்த லீவுக்கும் இங்க வருவேன்.. நாம மறுபடி பார்க்கணும்டா.. என்னை மறந்துட மாட்டியே..?" முதல் முறையாக ஒரு ஜீவன் நான் அவள் கூடவே இருக்க வேண்டும் என விரும்புவதாகச் சொன்னது அப்போதுதான். நான் அழுது கொண்டே கொண்டே தலை அசைத்தேன். அதுதான் நான் அவளைக் கடைசியாக பார்த்தது. கிளம்பிப் போய் விட்டாள். இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீனாக்காவின் குடும்பமும் வீட்டை காலி பண்ணிக் கொண்டு போய் விட்டார்கள். இன்று எங்கோ வாழ்ந்து வரும் மீனாட்சிக்கு என்னை நினைவிருக்குமா என்று தெரியவில்லை? ஆனால் அவள் சொல்லிச் சென்ற வார்த்தைகள் இன்று வரை எனக்குள் உயிர்ப்பாகவே இருக்கின்றன.

அய்யனார்

இவளும் என்னுடைய பால்ய கால சினேகிதிதான். நான் சற்றே வளர்ந்து ஏழோ எட்டோ படித்துக் கொண்டிருந்தபோது பழகியவள்.என் பிரியத்துக்குரிய தோழி. வேறுபாடுகள் ஏதுமின்றி என்னோடு விளையாடித் திரிந்தவள் என்றாலும் பெண் என்கிற ஒரு காரணத்தாலேயே என்னிடம் இருந்து பிடுங்கி எடுக்கப்பட்ட மற்றுமொரு அற்புதமான உறவு. சட்டெனத் தோன்றி மறையும் வானவில்லாய் என் வாழ்வில் வந்து காணாமல் போனவள். அய்யனாரும் நானும் ஒன்றாக சுற்றித் திரிந்த நாட்களைத்தான் "ஒரு கிழிஞ்ச சட்டையும் அய்யனாரின்நினைவுகளும் " என்கிற இடுகையாக எழுதி இருக்கிறேன்.

பிருந்தா, அனிதா மற்றும் திவ்யா

கல்லூரியில் என்னோடு படித்தவர்கள். நாங்கள் மொத்தம் ஏழு பேர். நான், தேவா, சற்குணம், மற்றும் மனோஜ்... நான்கு ஆண்கள் மற்றும் இந்த மூன்று பெண்கள். இவர்கள் மூவரின் பெயர்களின் முதல் எழுத்துகளைக் கொண்டே எங்களை "BAD guys" என்று அழைப்பார்கள். எங்கள் துறையில் மொத்தமே பனிரெண்டு பெண்கள்தான். அதுவும் இரண்டாம் வருடத்தில்தான் ஆண்களோடு சேர்ந்து படிக்க அனுமதிக்கப்பட்டார்கள். முதலாம் ஆண்டில் பெண்கள் எல்லோருக்கும் தனி செக்சன். யாருக்கும் யாரையுமே தெரியாத நிலையில் கல்லூரியில் இருந்து பெங்களூருக்கு சுற்றுலா ஏற்பாடு செய்து இருந்தார்கள். அனைவரும் பேருந்தில் ஏறி விட்ட நிலையில், நான் உட்கார இடமில்லாமல் நின்று கொண்டிருந்தபோது, "இங்கே வந்து அமர்ந்து கொள்ளுங்கள்" என்று தாங்கள் இருந்த இருக்கையில் என்னை அழைத்து அனிதா உட்கார வைத்ததில் எங்கள் நட்புக்கான விதை தூவப்பட்டது. அந்த சுற்றுலா எங்களுக்குள் நல்ல புரிதலையும், ஒரு நெருக்கத்தையும் உண்டு பண்ணியது.

மூவரில் பிருந்தா ரொம்பவே மெச்சூர்ட் ஆன பெண். பிரச்சினைகள் வரக் கூடிய சமயங்களில் தெளிவான முடிவுகளை எடுக்கக் கூடியவள். தற்போது கோவையில் இருக்கும் ஒரு பொறியியல் கல்லூரியில் வேலை பார்ப்பதாகக் கேள்வி. (கேள்வியா? ஏன்.. தொடர்பில் இல்லையா என்று கேட்பவர்களுக்கு.. பதிலை கடைசியில் சொல்கிறேன்..) அனிதா.. அவளை எப்படி மறக்க முடியும்? ஒரே ஒரு கேள்வியால் என் வாழ்வை புரட்டிப் போட்டவள். பள்ளியில் படிக்கும் காலங்களில் எனக்கு தீர்மானமாக ஒரு எண்ணம் உண்டு. "என்னுடைய நல்ல தோழிதான் எனக்கு சிறந்த மனைவியாக இருக்க முடியும்.." கோவை ரயில் நிலையத்தின் பிளாட்பாரம் ஒன்றில் வைத்து அனிதா என்னிடம் சொன்ன வார்த்தைகள் அந்த எண்ணத்தை அடியோடு மாற்றியது. "ஒரு பொண்ணு கிட்ட தோழின்னு சொல்லி கைய குடுத்த பின்னாடி, எப்படிடா அவள காதலிக்க முடியும்? காதல்னா உடம்பப் பார்க்கும்டா கார்த்தி.. ஆனா நட்பு மனசு சம்பந்தப்பட்டது.. அது காதல விடப் பெரிசு.." நெற்றிப்பொட்டில் அடித்த மாதிரி இருந்தது. நான் தெளிந்த நாள் என்று அதை சொல்லலாம். இப்போது அனிதாவுக்கு திருமணம் ஆகி பிரான்சில் இருப்பதாகத் தெரிகிறது. (இதுவும் சரியாத் தெரியாதா.. ஏன் என்றால்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க தல..) அமைதி என்றால் அது திவ்யா. ஆனால் ரொம்பவே தைரியசாலி. பார்ப்பதற்கு அனிதாவின் உடன்பிறந்த தங்கை போலவே தோற்றம். இப்போது திருமணம் முடிந்து லண்டனில் இருக்கிறார்.

சரி.. இத்தனை நெருக்கமாக இருந்த மக்களோடு ஏன் இன்று தொடர்புகள் இல்லை? உறவுகள் எல்லாமே திடமாக இருக்கும்.. இருந்தோம்.. அனைவரும் நட்பாக இருக்கும்வரை. அதைக் கொஞ்சம் மீறி ஒரு ஜோடிக்குள் காதல் பிறந்தபோது எங்கள் மொத்த குழுவுமே சிதைந்து போனது. என் உறவோடு நீ ஏன் பேசுகிறாய் என சந்தேகம், நீ செய்வது தப்பு நான் செய்வது சரி என.. ஹ்ம்ம்.. என் வாழ்வில் நான் மறக்க நினைக்கும் காலம் என என்னுடைய கல்லூரி இறுதி ஆண்டை சொல்லலாம். எத்தனைக்கு எத்தனை சந்தோஷமாக இருந்தேனோ, அத்தனைக்கு அத்தனை என் நிம்மதியை தொலைத்து திரிந்தும் இருக்கிறேன். இருந்தாலும் அவர்களோடு நான் இருந்த நினைவுகளை இப்போது நினைத்தாலும் நெஞ்சம் நெகிழ்கிறது.

காதலி (X)

நண்பர்களைப் பிரிந்து நான் தனியனாக சுற்றிக் கொண்டிருந்த கல்லூரி இறுதியாண்டு காலத்தில் எனக்கு அறிமுகம் ஆனவள். கோவையில் இருந்து மதுரை செல்லும் ரயிலில்தான் முதல் முதலில் அவளை சந்தித்தேன். (நானும், ரயிலில் வந்த பெண்ணும், நாசமாய்ப் போன ஜாதியும்.. இவளேதான்..) அருமையான பெண். குழந்தை போன்ற மனமுடையவள். ஆரம்பத்தில் விகல்பம் இல்லாமல்தான் பழகி வந்தோம். ஒரு சிவராத்திரி அன்று ஈஷா யோகா மையத்தில் இருவரும் அமர்ந்து இரவு முழுதும் பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் இருவருக்குமே மற்றவர் மீது ஈர்ப்பு இருந்ததை அப்போதுதான் அறிந்து கொண்டோம். அவளுடைய பெற்றோருக்கும் என் மீது ஆர்வம் இருந்தாலும் ஜாதி என்னும் ஒரு விஷயம் எங்களின் எல்லா கனவுகளையும் கலைத்துப் போட்டது.

பெற்றோர் கண்டிப்பாக ஒத்துக் கொள்ள முடியாது என்று சொல்லி விட நிறையவே அழுதாள். எங்காவது போய் விடலாம் என்று கூட சொன்னாள். படிப்பு முடியாத நேரம். பிழைக்க வழி இல்லாத சூழலும், என் குடும்பத்தின் நிலையும் என்னை தடுத்து விட்டன. கல்லூரி முடிந்து நான் கிளம்பியபோது கடைசியாக அவளைப் பார்த்து விடைபெற்றதை.. என் கைகளைப் பிடித்துக் கொண்டு அவள் அழுததை இன்று நினைத்தாலும் உள்ளம் கதறித் துடிக்கிறது. என் வாழ்வில் நான் தேடித் போன காதல் அவள். அவளுடைய திருமணத்துக்கு அழைப்பு வந்தும் போகவில்லை. அதை விடக் கொடுமை வேறு எதுவும் இருக்க முடியுமா என்ன?

தோழி (1 )

ஒரு ஆணும் பெண்ணும் காதல் இல்லாமல் நண்பர்களாக இருக்க முடியுமா என்கிற கேள்விக்கு பதிலாக வந்து சேர்ந்த என் பாசத்துக்கு உரிய தோழி. என் அக்காவின் மூலமாக எனக்கு அறிமுகம் ஆனவள். நண்பர்களோடு நடந்த தகராறில் வந்த கோபத்தால் எல்லாப் பெண்களுமே மோசமானவர்கள் என்று நான் உளறிக் கொண்டிருந்த காலம். இப்படி எனக்கு ஒரு தம்பி இருக்கிறான் என்று எனது அக்கா சொல்லப் போக "நீ எப்படி பெண்களைப் பற்றி தவறாக சொல்லலாம்? ஆண்கள் ரொம்ப யோக்கியமா..?" என்று கடிதம் எழுதியதுதான் எனக்கும் அவளுக்குமான உறவுக்கு அடிப்படை. எங்களுக்கிடையே இருந்த நல்ல புரிதலின் காரணமாக விரைவிலேயே நண்பர்கள் ஆகிப்போனோம். எல்லோரும் விலகி நின்ற நிலையிலும், என்னையும் ஒரு ஆளாக மதித்து என்னோடு நட்பு பாராட்டிய ஒரு ஜீவன்.

அது செல்போன்கள் வராத காலம். நான் கோவையிலும், அவள் விருதுநகரிலும் இருந்தோம். எல்லாத் தொடர்பும் கடிதங்கள் வாயிலாகத்தான். இன்றைக்கும் அந்தக் கடிதங்களை நான் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறேன். ஒரு பெண் தன் நண்பன் மீது எந்த அளவு நம்பிக்கையும், பாசமும் வைக்க முடியும்? தனிப்பட்ட பிரச்சினைகளின் காரணமாக யாரோடும் பழகாமல் ஒதுங்கியே இருக்கக்கூடியவள் என் தோழி. அப்படிப்பட்டவள் என்னோடு சிரித்துப் பேசுவதில் சுற்றி இருந்த மற்ற பெண்களுக்கு ஆச்சரியம். "கார்த்தி கூட பேசுறப்ப மட்டும்தான் நீ சந்தோஷமா இருக்க.. நீ அவன விரும்புறியா..?" கேட்ட பெண்ணுக்கு என் தோழி சொன்ன பதில்.."எனக்கு இந்த உலகத்துல ரொம்பப் புடிச்சது எங்கப்பா.. அதுக்காக அவரை நான் கல்யாணம் பண்ணிக்க முடியுமா.. கார்த்தியையும் நான் அந்த அளவுக்கு நேசிக்கிறேன்.. தயவு செஞ்சு அந்த உறவை கொச்சைப்படுத்தாதீங்க.." நீ என் வாழ்வில் கிடைக்க எத்தனை தவம் செய்திருக்க வேண்டும்? தற்போது அவளுக்கு திருமணம் ஆகி சென்னையில் வசித்து வருகிறாள். இன்று வரை என் மீதான அன்பு குறையாத, எனக்காக கவலைப்படுகிற உனக்கு நான் எப்படி நன்றி சொல்ல முடியும் தோழி?

காதலி (Y)

திண்டுக்கல்லில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது என்னைத் தேடி வந்த காதல். எங்கள் கல்லூரியில் புதிதாக வேலைக்கு வந்து சேர்ந்தவள் அவள். நிரம்பவே கஷ்டப்படும் குடும்பம். எனக்கும் அந்த வலி தெரியும் என்பதால் பல விஷயங்களில் தானாக முன்வந்து அவளுக்கு உதவினேன். அந்தக் கருணையே அவளுக்குள் காதலாக மாறும் என்று நினைக்கவில்லை. ஜூலை மாதத்தின் ஒரு மாலையில் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து தன் காதலைச் சொன்னாள். எனக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் வந்து விட்டேன். ஆனால் அவளைப் பிடித்து இருந்தது.

எனக்கான வாழ்வை என்னுடைய பெற்றோர் தான் அமைத்து தர வேண்டும் என நான் சொலி வந்த நேரத்தில், எங்கே என்னை மீறி காதலில் விழுந்து விடுவோமோ என்று எனக்கு பயம் வந்தது. இரண்டே மாதங்களில் அங்கிருந்து வேலையை மாற்றிக் கொண்டு பெருந்துறைக்குப் போய் விட்டேன். எனக்கு அவளைப் பிடித்து இருந்தது என்பது தெரிந்தால் அவள் மேலும் வருந்தக் கூடும் என்பதால் கடைசிவரை அவளிடம் காரணத்தை சொல்லவே இல்லை. "நான் வேண்டுமானால் போய் விடுகிறேன்.. நீங்கள் இருங்கள்" என்று அவள் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் அவளிடம் இருந்து விலகிப் போனேன். தற்போது ராஜபாளையம் பகுதியில் இருக்கும் ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் வேலை பார்த்து வருகிறாள். நானாகவே விரும்பி அவளிடம் இருந்து விலகி நிற்கிறேன் என்றாலும் என் வாழ்வில் செய்த மிகப் பெரிய தவறு என்று வருந்திக் கொண்டிருக்கிறேன் என்றால் அது அவளைப் பிரிந்ததுதான்.

தோழி (2 )

வாழ்வில் ஒரு சில உறவுகள் நாம் எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்ப்படும். ஆனால் நம் மொத்த வாழ்க்கையையும் ஒரேடியாக திருப்பிப் போட்டு விடும். அப்படிப்பட்ட ஒரு உறவு. கடந்த நான்கு வருடமாகத்தான் எனக்குப் பழக்கம். என்னை தன் விரோதியாக எண்ணிக் கொண்டிருந்தவள். இவனெல்லாம் ஒரு ஆளா என்றெண்ணிய மனிதனை என் எல்லாமே நீதான் என்று அவளே சொல்லுமளவுக்கு வாழ்க்கை மாற்றி விட்டதை அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும்.

என்னுடைய சந்தோசம், துக்கம் என எல்லாவற்றிலும் என் கூடவே இருப்பவள். உயிருக்குயிரான தோழி. அதே நேரத்தில் என் பிரியத்துக்குரிய எதிரியும் கூட. என்னை விடவும் என்னை அதிகமாக நேசிப்பவள்.என்னருகே இல்லாதபோதும் எப்போதும் என்னுடனே இருப்பவள். என் குழந்தை என்று தான் அவளை எண்ணிக் கொள்ளுகிறேன். ஆனாலும் நான் அவளை அம்மா என்றழைப்பதுதான் வழக்கம். அந்த அளவுக்கு என் மீது பாசத்தைப் பொழிபவள். வாழ்வின் கடைசிவரை என் கூட வரும் உறவு. திருமணம் ஆகி கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறாள். இந்த மகிழ்ச்சியும், உறவும் கடைசி வரை வாழ்க்கையில் நிலைத்து இருந்தால் அதை விட வேறு என்ன வேண்டும்?

என் வாழ்க்கையென்னும் டைரியின் ஒரு சில பக்கங்களைத்தான் நான் இங்கே உங்கள் பார்வைக்கு தந்திருக்கிறேன். இன்னும் சொல்லப்படாத.. சொல்லப்பட வேண்டிய எத்தனையோ பேர்.. எத்தனையோ விஷயங்கள் உள்ளன. வாழ்க்கை என்பது ஒரு இடுகைக்குள் அடங்கி விடக் கூடிய விஷயமா என்ன? நான் இந்த இடுகையை கிட்டத்தட்ட ஒரு வார காலமாக எழுதி வருகிறேன். ஒவ்வொருவர் பற்றி எழுதும்பொழுதும் காலத்தில் பின்னோக்கி பயணம் செய்பவனாக மீண்டும் ஒரு முறை அந்தத் தருணங்களில் வாழ்ந்து வந்தேன். சந்தோசம், துக்கம், ஆதரவு, வலி என.. அது ஒரு சுகமான அனுபவம். இப்படியொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த நண்பர் பிரபுவுக்கு மீண்டுமொரு முறை என் மனமார்ந்த நன்றி.

February 8, 2010

பார்த்து சூதானமா வண்டி ஓட்டுங்கப்பூ...!!!

இந்த வருஷம் புதுசா பொறந்த சமயத்துல, சனவரி மொத வாரத்த நம்ம தமிழ்நாடு அரசு "சாலை பாதுகாப்பு வாரமா" கொண்டாடுறதா அறிவிப்பு செஞ்சாங்க.. எதுக்காக? இன்னைக்கு இருக்குற அவசர உலகத்துல, சாலை விபத்துனால தினமும் இறந்து போறவங்க எண்ணிக்கை ரொம்ப ஜாஸ்தி ஆகிக்கிட்டே போகுது.. அத கம்மி பண்ணனும்.. அப்படிங்கிறதால.. இது பத்தி தோழி "இதயப்பூக்கள்" இயற்கை ஒரு இடுகை எழுதி இருக்காங்க.. அத்தோட என்னையும் தொடரா எழுத சொல்லிக் கூப்பிட்டாங்க.. ஆனா பாருங்க நாமதான்ஒண்ணாம் நம்பர் சோம்பேறி ஆச்சே.. இந்தா அந்தான்னு ஒரு மாசம் ஆகிப் போச்சு..

ஒரு குட்டி கத.. ஒரு அம்மா சக்கர சாப்பிடுரத கம்மி பண்ணனும்னு அறிவுரை சொல்லுங்கன்னு காந்திக்கிட்ட கூட்டிக்கிட்டு வந்தாங்களாம். அதுக்கு அவரு ரெண்டு நாள் கழிச்சு கூட்டிட்டு வரச் சொன்னாராம். ஏன்னா அவருக்கு சக்கரைய ஜாஸ்தி சாப்பிடுற பழக்கம் இருந்ததாம். அத கம்மி பண்ணிக்கிட்டு மத்தவங்களுக்கு அறிவுரை சொன்னாராம். அந்தக் கதைல வர மாதிரி இப்ப இத நான் எழுதுறதுக்கு ஒரு தனிப்பட்ட காரணம் இருக்கு.. அது என்னன்னா.. போன வாரம்தான் வண்டில இருந்து விழுந்து புதையல் எடுத்தேன். இப்போ நாம சொன்னாத்தான கரெக்டா இருக்கும். நாம பட்டுத்தான் தெரிஞ்சுக்குற கூட்டம்.. பட்டாச்சு.. அதனால் பத்திரமா இருங்கன்னு மத்தவங்களுக்கு சொல்றதுக்குத்தான் இந்த இடுகை..

ராத்திரி பத்து மணி. நண்பர் ஸ்ரீதர அவங்க வீட்டுல பார்த்துட்டு நம்ம ஏரியாக்கு திரும்பி வந்துக்கிட்டு இருக்கேன். நல்ல பசி. பைபாஸ் ரோடு. ரோட ரெண்டா பிரிச்சு இருக்காங்க. அதனால் ரோட்டோட ஒரு பக்கம் ஒன் வே மாதிரிதான். அவ்வளவா டிராபிக் வேற இல்லைன்னு வண்டிய கொஞ்சம் வேகமா பத்திக்கிட்டு வரேன். திடீர்னு எங்கிருந்து வந்ததுன்னு தெரியாம ஒரு லாரி - ரோட்டுக்கு நடுவுல இருக்குற ஒடப்பு வழியா உள்ளே வந்துட்டான். நான் எதிர்பார்க்கவே இல்ல.

இப்போ எனக்கு ரெண்டே வழிதான். ஒண்ணு நேராக் கொண்டு போய் லாரி மேல மோதலாம். இல்லைன்னா வண்டிய ரோட்ட விட்டுக் கீழ இறக்கணும். இறக்கிட்டேன். புல்லா மண்ணு. சரட்டி விட்டுருச்சு. வண்டியக் கீழ போட்டுட்டு தவ்விட்டேன். இருந்தாலும் முட்டிலையும், இடுப்புலயும் செம அடி. பின்னாடி வந்தவங்க லாரிக்கரானத் திட்டிக்கிட்டு இருந்தாங்க. என்னத் திட்டி என்ன பிரயோஜனம்? நாம விழுந்தது விழுந்தது தானே..

இதுல இருந்து என்ன தெரியுது? பசின்னு பறக்காவெட்டியா வண்டி ஓட்டக் கூடாது, கார்த்திக்கு ராத்திரின்னா கண்ணு தெரியாது.. இந்த மாதிரி எகத்தாளமா பதில் சொல்லக் கூடாது.

நான் சொல்ல வந்த விஷயம்.. நீங்க என்னதான் நல்லா வண்டி ஓட்டினாலும், ஒங்கள சுத்தி இருக்குறவங்க சரியா ஓட்டலைன்னாலும் நாம ஆபத்துல மாட்டிக்கிறது வாய்ப்பு இருக்கு. அதனால எப்பவுமே வண்டியில கொஞ்சம் வேகம் கம்மியா போறது நல்லது. தப்பித்தவறி விழுந்தாக்கூட அவ்வளவா அடிபடாது.

ஹெல்மட் போடுறத எல்லோருமே ஏதோ ஒரு பாரமா நினைக்கிறோம். (நானும்தான்..) அது தப்பு. விபத்தப்போ தலைல அடிபடுறதால தான் பல உயிரிழப்பு நேரிடுது. அந்த சமயத்துல தலைக்கவசம்தான் நம்ம உயிரக் காப்பாத்தும். சோ.. ஹெல்மட் முக்கியம்.

கோட்டுக்கு முன்னாடி நிக்கிறதுதான ரூல். அதை மதிப்போம். அதோட சிக்னல்களை மதிக்கப் பழகிக்குவோம். சிவப்பு போட்டதுக்கு அப்புறமும் போறது, பச்சை விழுறதுக்கு முன்னாடியே அவசர அவசரமா ஓடுறது.. இதெல்லாம் வேண்டாமே..

ஒரு கணவன் மனைவி வண்டில போய்க்கிட்டு இருந்தப்போ, மொபைல்ல பேசுறேன்னு குப்பை வண்டில விட்டு, மொத்தமா போய் சேர்ந்த கதை எல்லாம் இருக்கு. நானே பார்த்து இருக்கேன். அதனால, தயவு செஞ்சு வண்டில போகும்போது அலைபேசிய பயன்படுத்தாதீங்க.

குடும்பத்தோட ரொம்ப தூரம் போறதுக்கு பைக்க பயன்படுத்தாதீங்க. இன்னைக்கு காலைல காலேஜுக்கு வரப்ப பார்த்தேன். வீட்டுக்காரர் வண்டி ஓட்டுறார். முன்னாடி ஒரு பெரிய பேக். பின்னாடி வீட்டுக்காரம்மா. கையில ஒரு குட்டிக் குழந்த. நடுவுல சின்னப் பையன் வேற. இது போதாதுன்னு வண்டியோட பின்பக்கம் ஒரு பெரிய பைய வேறக் கட்டி வச்சிருந்தாங்க. அது என்ன வண்டியா இல்ல லோடு லாரியா? சின்ன பிசகு ஆனாக்கூட என்ன ஆகும்? இதை எல்லாம் யோசிக்கணும்.

கடைசியா மாணவர்கள். வேகம், ட்ரிபிள்ஸ்.. எல்லாமே த்ரில்லாத்தான் இருக்கும். ஆனா அதுல இருக்குற ரிஸ்கையும் மனசுல வச்சுக்கணும். ஏன்னா, மனுச உசிரு விலை மதிப்பில்லாதது. உங்க அப்பா, அம்மா உங்க மேல வச்சிருக்கிற நம்பிக்கைகளை காப்பாத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கு. எல்லாத்துக்கும் மேல, நீங்க தான் இந்த நாட்டின் வருங்காலத் தூண்கள். அத மனசுல நினைச்சுக்கிட்டுவண்டியத் தொடுங்க.

இதுல சொல்லி இருக்குற விஷயங்கள் உங்களுக்கு மட்டுமில்ல, எனக்கும் சேர்த்துத்தான். பார்த்து சூதானமா வண்டி ஓட்டுவோம். பத்திரமா இருப்போம். சரிதானுங்களே நான் சொல்றது?

( இந்த வாரம் வலைச்சரத்துலையும் எழுதுறேன்.. அங்கயும் உங்களோட ஆதரவை எதிர்பார்க்கிறேன் நண்பர்களே.. )

November 15, 2009

பிடிச்சது - ரொம்பப் பிடிச்சது - பிடிக்காதது..!!!

பதிவுலகில் அவ்வப்போது ஏதாவது ஒரு பதிவை சங்கிலிதொடராக எழுதச் சொல்லும் வழக்கம் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் இப்போது நம் மக்களை பிடித்து ஆட்டுவிப்பது "பிடித்தது, பிடிக்காதது" என்னும் பதிவு. கடந்த இரண்டு வாரங்களாகவே கல்லூரியில் கொஞ்சம் ஆணி ஜாஸ்தி என்பதோடு, இணைய வசதியும் இல்லாததால் நான் அதிகமாக பதிவுகளைப் படிக்கவில்லை. நேரமில்லாத சூழ்நிலையில் நம்மை யாரும் இந்த ஆட்டத்துக்கு இழுக்க வில்லை என்று சந்தோஷப் பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் நண்பர் "வானவில் வீதி" கார்த்திக் விடுவேனா பார் என்று கூப்பிட்டு விட்டார். சரி எழுதி விடுவோம் என்று சிறிதும் யோசிக்காமல் எனது மனதில் பட்டதை எழுதுகிறேன். பதிவையும் கொஞ்சம் மாத்தி இருக்கேன். எப்படி வருகிறதென்று பார்ப்போம்..

எழுத்தாளர்

பிடித்தது : சாரு நிவேதிதா, வாண்டுமாமா

ரொம்பப் பிடித்தது : எஸ்.ராமகிருஷ்ணன், ஆதவன்

பிடிக்காதது :ரமணிச்சந்திரன்

கவிஞர்

பிடித்தது : மனுஷ்யபுத்திரன், இசை

ரொம்பப் பிடித்தது : யூமா.வாசுகி, முகுந்த் நாகராஜன்

பிடிக்காதது :கொளஞ்சி (இந்த ஆளை யாருன்னு தேடிக்கிட்டுஇருக்கேன்), புரியாத கவிதை எழுதுற எல்லோரும்

இசையமைப்பாளர்

பிடித்தது : இளையராஜா, வித்யாசாகர், யுவன்ஷங்கர்

ரொம்பப் பிடித்தது : ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ்

பிடிக்காதது :ஸ்ரீகாந்த் தேவா

பாடலாசிரியர்

பிடித்தது : வாலி, நா.முத்துக்குமார்

ரொம்பப் பிடித்தது : தாமரை, வைரமுத்து

பிடிக்காதது : விவேகா (கந்தசாமி பாடல் வரிகளைக் கேட்டதில் இருந்து உடம்பின் சகல ஓட்டைகளில் இருந்தும் புகை வந்து கொண்டிருக்கிறது), கபிலன்

இயக்குனர்

பிடித்தது : மகேந்திரன், ஷங்கர்

ரொம்பப் பிடித்தது : பாலா, செல்வராகவன்

பிடிக்காதது :பேரரசு

நடிகர்

பிடித்தது : தனுஷ், ஜெயம் ரவி

ரொம்பப் பிடித்தது : ரஜினி, அஜித்

பிடிக்காதது :விஜய்

நடிகை

பிடித்தது : ஷாலினி, அசின்

ரொம்பப் பிடித்தது : ஐஸ்வர்யா, ரம்பா

பிடிக்காதது :சிம்ரன்

அரசியல்வாதி

பிடித்தது : நன்மாறன், கலைஞர்

ரொம்பப் பிடித்தது : யாருமில்லை

பிடிக்காதது :ராமதாஸ்

பதிவர்

உங்க திட்டம் பலிக்காது.. அஸ்கு புஸ்கு.. இதுக்கு நான் பதில் சொல்ல மாட்டேனே.. :-)))))))))

November 1, 2009

தீபாவளி சிறப்புப் பதிவு - 2009..!!!


‌‌
சீனா ஐயா அவர்கள் என்னை இந்தத் தொடர்பதிவுக்கு அழைத்து இருந்தார். அவருக்கு நன்றி. தொடர் இடுகையின் விதிமுறைகள் பற்றி மேலும் தகவல்கள் அறிய இங்கே சொடுக்குங்கள்.

1) உங்களைப் பற்றி சிறு குறிப்பு ?

மதுரைக்காரன். வீட்டுக்கு ஒரே பிள்ளை. பள்ளிப்படிப்பை மதுரையிலும், பொறியியல் இளநிலை படிப்பை கோவையிலும் முடித்தேன். ஆசிரியராக வேண்டும் என்பது லட்சியம். கொடைக்கானலில் முதல் முறையாக ஆசிரியப்பணி. பின்னர் திண்டுக்கல். அங்கேயே முதுநிலை படிப்பு. பின்பு பெருந்துறையில் வேலை. தற்போது மதுரையில் ஒரு பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளர்.

2)தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம்?

எனக்கும் நண்பர்களுக்கும் தீபாவளிக்கு முந்தைய நாள் இரவுகள் எப்போதுமே விசேஷமானவை. நன்றாக என்ஜாய் செய்வோம். அதுபற்றி நான் முன்னரே எழுதிய பதிவு இங்கே. சமீபத்தில் மறக்க முடியாத நிகழ்வு என்றால், நான்கு வருடங்களுக்கு முன்பு, மூன்று மணி நேரம் காத்திருந்து, மழையில் நனைந்து "ஆஞ்சநேயா' என்ற பெயரில் எனக்கு நானே தண்டனை கொடுத்துக் கொண்டது.

3)2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

எந்த ராசா எந்தப் பட்டிணம் போனாலும், தீபாவளி அன்னைக்கு நாங்க மதுரைலதாண்ணே இருப்போம் / இருந்தோம் / இருக்கோம். மதுரையைச் சுத்துன கழுத வேறெங்கும் போகாதுன்னு சொல்வாங்க.. ஹி ஹி ஹி..

4)த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

பண்டிகை என்றால் முன்பிருந்த உற்சாகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து கொண்டு வருகிறதோ எனத் தோன்றுகிறது. எனக்கு மட்டுமல்ல, பொதுவாகவே. குறிப்பாக டிவி வந்த பின்பு மக்கள் நிறையவே மாறி விட்டதைப் போன்றதொரு உணர்வு எனக்கு வெகு நாட்களாக உண்டு.

5)புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

கல்லூரியில் சேர்ந்த பிறகு ஆடைகளை தைத்து போடும் பழக்கம் கிடையாது. ரெடிமேட்தான். எப்போதும் மதுரை ஏ.கே.அகமெதில் தான் வாங்குவேன். இந்த வருடம் அகமேத் + போத்திஸ்.

6)உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

வீட்டில் எதுவும் செய்யவில்லை. எல்லாம் கடையில்தான். இனிப்பும், காரமும் பக்கத்து வீட்டாருக்கு பகிர்ந்து கொடுப்பதற்காக வாங்கியதே தவிர, வீட்டில் உள்ளவர்களுக்கு என ஸ்பெஷலாக எதுவும் வாங்கவில்லை.

7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

உறவினர்களையும் ஊரில் இருக்கும் நண்பர்களையும் நேரில் சந்தித்து விடுவேன். வெளியூரில் இருக்கும் நண்பர்களுக்கு அலைபேசி மூலமாகவும் மாணவ நண்பர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் வழியாகவும் வாழ்த்துகள் சொல்வேன்.

8)தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

வீடு தங்க மாட்டேன். முழுக்க முழுக்க ரவுண்ட்ஸ் தான்.

9)இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

ஆதரவு இல்லாதவர்களின் இல்லங்களுக்கு ஆடைகள், பட்டாசு வாங்கிக் கொடுப்பது என்று ஒரு சில உதவிகள் செய்வதுண்டு.

10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?

வானம் வெளித்த பின்னும்
- ஹேமா

வானவில் வீதி - கார்த்திக்

சிவசைலம் - அத்திரி

தினசரி வாழ்க்கை
- Mayvee காசி விஸ்வநாத்


யப்பா.. நான் கூப்பிட்டு இருக்குற மகராசங்க எல்லாம் பத்து நாளுக்குள்ள எழுதிடுங்கப்பா.. அடுத்த தீபாவளி வரைக்கும் ஆக்கிப்புடாதீங்க..தாங்காது...:-))))))


September 26, 2009

அழகு,காதல்,பணம்,கடவுள் - ஆசையும் உண்மையும்.. !!!

சில பல நாட்களுக்கு முன்பாக நண்பர் "தினசரி வாழ்க்கை" mayvee இந்தத் தலைப்பில் என்னை சங்கிலித் தொடராக எழுதும்படி அழைத்து இருந்தார். அந்த நேரத்தில் தான் காலேஜில் இருக்கும் புண்ணியவான்களின் தயவால் ப்ளாகர் ப்ளாக் செய்யப்பட்டது. சரி, பொறுமையாக எழுதிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். பின்னர் நண்பர் "இலக்கியா" அன்புமணியும் எழுதும்படி கேட்டுக் கொண்டார். "பசங்கள மட்டும் ஒழுங்கா அசைன்மென்ட் எல்லாத்தையும் நேரத்துல சப்மிட் பண்ண சொல்றீங்க.. நீங்க ரொம்ப யோக்கியமா?"ன்னு கண்டனக் குரல்கள் வேற வந்தாச்சு. இதற்கு மேல் ஓப்பியடிக்க முடியாது என்பதால்.. இதோ இடுகை.


அழகு,காதல்,கடவுள்,பணம் - நான்கு விஷயங்களைப் பற்றி எழுத சொல்லி இருக்கிறார்கள். நான்குமே கொஞ்சம் விவகாரமான விஷயங்கள். கடவுளைத் தவிர மற்ற மூன்றும் ஒன்றுக்கொன்று ஏதோ ஒரு வகையில் தொடர்புடையவை. இவை எப்படி இருக்க வேண்டும் என நான் ஆசைப்படுவதையும், உண்மையில் இன்றைய உலகில் நிதர்சனம் என்ன என்பதையும் சொல்ல விரும்புகிறேன். பதிவர்களின் மாறுபட்ட கருத்துக்களை அறிந்து கொள்ளும் வகையில் இந்த தொடரை ஆரம்பித்து வைத்த தோழி ஹேமாவுக்கு நன்றி.

அழகு

ஆசை: புற அழகு என்பதை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு ஒருவரை அழகு என்று சொல்ல முடியாது. மனது தான் முக்கியம். வயது ஆகும்போது புற அழகு மாறிப்போகக் கூடும். ஆனால் நல்ல மனம் என்றும் மாறாது. உடம்பு அழகாக இருந்தும் உள்மனம் அழுக்காக இருந்தால் அதனால் என்ன பிரயோஜனம்? ரோட்டில் நடந்து போகும்போது யாரென்றே தெரியாத ஒருவர் அடிபட்டுக் கிடந்தால், அவருக்கு உதவ வேண்டும் என்று யோசிக்கிறது பாருங்கள்.. அந்த நல்ல மனதுதான் உண்மையான அழகு.

உண்மை: வடிவேலு ஜோக் ஒன்று நினைவுக்கு வருகிறது.."சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்.. இவன் கருப்பன்.. பொய் சொல்லுவான்.. இவனப் போட்டு அடிங்கடா.." இதுதான் இன்றைய மக்களின் மனநிலை. கருப்பு என்றால் ஏதோ அவலட்சணம் என்பதைப் போல உருவகப்படுத்துகிறார்கள். நின்று நிதானமாக மனதைப் பார்க்க யாருக்கும் நேரம் இல்லை. ஆடை பாதி, ஆள் பாதி என்பதெல்லாம் மாறி இன்றைக்கு ஆடையும் அழகும்தான் மதிப்பே என்பது போல ஆகி விட்டது.

காதல்

ஆசை: எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி, இரு மனங்கள் ஒன்றை ஒன்றை விரும்பி ஏற்றுக் கொண்டு, கடைசி வரை தங்கள் வாழ்கையை ஒன்றாக வாழ்வது தான் காதல். அழகைப் பார்த்தோ, அந்தஸ்தைப் பார்த்தோ வருவது கிடையாது. அது ஒரு நம்பிக்கை. என் வாழ்க்கை பூராவும் இவர் நம்மோடு இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்ற உணர்வு. உண்மையான காதலில் அழகு ரெண்டாம் பட்சமாகத்தான் இருக்கும்.

உண்மை: இன்றைக்கு காதல் ஒரு வியாபாரமாகிப் போய் விட்டது. ஒரு ஆண் நன்றாக சம்பாதிக்கிறானா, அவனிடம் கார் இருக்கிறதா, வீடு இருக்கிறதா.. இதை எல்லாம் பார்த்து தான் பெண்ணுக்கு காதல் வருகிறது. பெண் அழகாக இருக்கிறாளா, வீட்டில் எந்த இம்சையும் இருக்கிறதா.. இதைப் பார்த்து தான் ஆண் காதல் கொள்கிறான். அன்பு என்னும் ஆதாரமான விஷயத்தைத் தவிர இன்றைய காதலில் மற்ற எல்லாமே இருக்கிறது. காதல் இன்று பலருக்கு பொழுதுபோக்காக மாறிப் போனது இன்னும் கொடுமை.

பணம்

ஆசை: பணம் நம் வாழ்க்கைக்குத் தேவையான ஒன்றாக, அளவோடு இருக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. நம்மையும் நம்மைச் சார்ந்தோரையும் காப்பாற்றும் அளவுக்கு பணத்தை வைத்துக் கொண்டு, அதிகமாக இருப்பதை இல்லாத மக்களுக்கு கொடுக்க முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும்? அதன் பின்னர் உலகத்தில் யாருமே ஏழை என்று இருக்க மாட்டார்கள் இல்லையா?

உண்மை: காசைத் தேடி ஓடி ஓடி தங்கள் வாழ்வை தொலைத்தவர்கள் தான் இன்று உலகம் முழுதும் நிறைந்து இருக்கிறார்கள். "கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் நமக்கு எஜமானன்.." எத்தனை உண்மை? ஒருவனுக்கு காசு சம்பாதிக்கும் வெறி இல்லை என்றால் சமூகம் அவனுக்குத் தரும் பட்டம் "பிழைக்கத் தெரியாதவன்". பணம் இருந்தால் தான் இன்று உறவுகள் கூட மனிதனை மதிக்கின்றன. பணம் என்னும் விஷயத்தை ஏன் தான் மனிதன் கண்டுபிடித்தானோ என்று பலமுறை நொந்து இருக்கிறேன். பணம் இருந்தால் தான் மரியாதை. இல்லை என்றால் மனிதனுக்கு பிணத்துக்கு சமமாகத்தான் மதிப்பு.

கடவுள்

ஆசை: ஒரு சின்ன சம்பவம். என் பெற்றோருக்கு அதிகமான கடவுள் பக்தி உண்டு. என் தங்கையின் திருமணம் நல்ல படியாக முடிந்ததற்கு நேர்த்திக்கடன் செய்வதற்காக பட்டமங்கலம் (குருஸ்தலம், காரைக்குடி போகும் வழியில் உள்ளது) போயிருந்தோம். அங்கே அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு தம்பதியைப் பார்க்க நேர்ந்தது. குழந்தை இல்லை என்ற குறை நீங்க அவர்கள் போகாத மருத்துவமனை கிடையாதாம். அவர்களை சோதனை செய்த எல்லா மருத்துவர்களுமே இருவருக்கும் உடம்பில் எந்தக் குறையும் இல்லை என்று சொல்லி விட்டார்களாம். இருந்தும் பிள்ளை இல்லையே என்ற சோகத்தில் இருந்தவர்கள், யாரோ சொன்னதைக் கேட்டு, பட்டமங்கலம் சென்று வழிபட்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையோடு வந்து இருந்தார்கள். அவர்கள் கதையைக் கேட்டு நான் ஆடிப்போனேன். பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து அந்த தம்பதியை இந்தக் கோயில் வரை செலுத்திக் கொண்டு வந்தது எது? அவர்களுடைய நம்பிக்கை தானே.. அந்த நம்பிக்கைக்காகவாவது கடவுள் என்ற ஒன்று உண்மையாக இருக்க வேண்டும்.

உண்மை: மனிதர்களின் நன்மைக்காக என்பதை மீறி, இன்றைக்கு கடவுளின் பெயரால் சண்டைகளும் பிரச்சினைகளும் தான் நடக்கின்றன. அறிவியல் வளர வளர, மக்களுக்கு கடவுள் மீதான பக்தியும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதை பக்தி என்று சொல்லுவதை விட பயம் என்று சொல்லாம். "மரணத்துக்குப் பின் நாம் என்ன ஆவோம்? கடவுள் என்ற ஒன்று இருந்து, அதை நாம் மறுக்கப் போய், பின்னால் நரகத்தில் உழல நேரிட்டால்?" இந்த பயம் தான் இன்றளவும் மனிதனைக் கடவுளின் பால் செலுத்திக் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன். கஷ்டங்களின் போது மக்களுக்கு உதவாத கடவுள் இருந்துதான் என்ன பிரயோஜனம்? கடவுள் என்னும் விஷயத்தைப் பொறுத்தவரை நான் குழப்பவாதிதான். இதுபற்றி நான் ஏற்கனவே எழுதிய பதிவைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.

இதுதான் உண்மை நிலை என்று நான் இங்கே சொல்லி இருப்பவை என்னுடைய கருத்துக்கள் மட்டுமே.. நண்பர்களுக்கு ஏதேனும் மாற்றுக் கருத்துகள் இருந்தால் பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்.

இந்தத் தலைப்பில் தொடர்ந்து எழுத நான் மூன்று நண்பர்களை அழைக்கிறேன்.

தேனீ சுந்தர்

சொல்லரசன்

அ.மு.செய்யது


April 29, 2009

கேள்வியும் நானே..பதிலும் நானே..!!!

கொஞ்ச நாளைக்கு முன்னாடி நண்பர் அத்திரி இந்த தொடர்பதிவுக்கு கூப்பிட்டு இருந்தார். கிட்டத்தட்ட முப்பது கேள்வி. ரொம்ப யோசிக்க எல்லாம் இல்ல.. மனசுக்கு என்ன தோணுச்சோ, அதை அப்படியே எழுதுறேன்.. படிச்சு பாருங்க..
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
ஊருல இருக்குற எல்லா முருகன் கோவிலுக்கும், மதுரை பாண்டி கோவிலுக்கும் எங்கம்மா அலையா அலைஞ்சு பெத்தெடுத்த புள்ள நானு.. இப்படி ஒரு கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி வரும்னுதான் என்னோட அம்பதாவது பதிவுல என்னோட பெயர்க்காரணத்தை விரிவா சொல்லி இருக்கேன்.. முடிஞ்சா இங்கே க்ளிக்கி அதையும் படிங்க..
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
சமீபத்தில் என்னுடைய இறுதி ஆண்டு மாணவர்களின் பிரிவு உபச்சார விழாவில் அழுதேன்.. மூன்று வருடம் என்னுடைய நல்ல நண்பர்களாக இருந்தவர்கள்.. கண்டிப்பாக எங்கு போனாலும் அவர்களின் நினைவுகள் என்னைத் துரத்திக் கொண்டே இருக்கும்..
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
எங்க வாத்தியார் எல்லாம் அதை கையேழுத்துன்னே சொல்ல மாட்டாங்க.. கோழி கிண்டுறதுன்னுதான் சொல்வாங்க... இந்த லட்சணத்துல நீ எல்லாம் வாத்தியாரான்னு என் நண்பர்கள் எல்லாம் கிண்டல் பண்ணும் அளவுக்கு ரொம்ப மோசமா இருக்கும்.. ஆனா எனக்கு என் கையெழுத்து ரொம்ப பிடிக்கும் :-)
4).பிடித்த மதிய உணவு என்ன?
சிக்கன் பிரியாணி
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
வாழ்க்கையில நான் சம்பாதிக்கிற நினைக்கிறது மனிதர்களைத்தான்.. நல்லவங்கன்னு நம்பிக்கை வந்துட்டா கடைசி வரைக்கும் நட்பைத் தொடரனும்னு நினைப்பேன்.. உடனே பழகுனாலும் ரொம்ப நாள் ஆனாலும், அது வாழ்க்கை பூரா கூட வரதா இருக்கணும்.. அவ்வளவுதான்..
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
கடல்.. சின்ன வயசுல இருந்தே கடல் மேல சொல்ல முடியாத காதல் உண்டு.. குறிப்பா கன்னியாகுமரியும், புதுச்சேரி கடலும் ரொம்பப் பிடிக்கும்
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்ணத்தான் பார்ப்பேன்.. அதுல ஒரு உண்மை இல்லன்னா நெகிழ்வு தெரியும்..
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
என்னோட தன்னம்பிக்கை பிடிக்கும்.. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் வெளியே காட்டிக்க மாட்டேன்.. அந்தக் கஷ்டத்த எப்படி கடந்து வரலாம்னுதான் யோசிப்பேன்..

யார் என்ன சொன்னாலும் மூஞ்சிக்கு நேரா மறுத்துப் பேச தெரியாது.. எனக்குத் தெரிஞ்சே சில நேரங்களில் மக்கள் என்னை யூஸ் பண்ணிக்குவாங்க.. அப்போ மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
என் தேவதையை எங்கமா அப்பா தேடிக்கிட்டு இருக்காங்க.. கிடைச்சதுக்கு அப்புறம்தான் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியும்
10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
என்னுடைய உற்ற தோழி.. கிட்டக்க இல்லையேன்னு என்னை மிஸ் பண்ணக்கூடிய ஜீவன் அதுதான்.. பையனா பொரந்ததுக்காக என்னை ரொம்பவே வருத்தப்பட வச்சவங்க..
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
இளம்பச்சை நிறத்தில் சட்டை.. அடர்த்தியான பச்சையில் பேன்ட்..
12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
மொபைலில்..."ஒரு கல் ஒரு கண்ணாடி.. - சிவா மனசுல சக்தி.."
13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கடலலையின் நீல நிறம்
14.பிடித்த மணம்?
மளிகைக் கடையில போய் நிக்குறப்ப என்னன்னு சொல்ல முடியாத ஒரு மணம் வரும்.. அது ரொம்ப பிடிக்கும்
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
ஆதவா - இளைஞர்... கவிதைகளில் கலக்குபவர். சின்ன வயசுதான்னாலும் கருத்துக்களில் முதிர்ச்சி உண்டு..(பிஞ்சிலே பழுத்தவர்னு கூட சொல்லலாம்.. ஹி ஹி ஹி..) நல்ல நண்பரும் கூட..
டக்ளஸ்... - பாசக்கார பயபுள்ள.. நம்ம ஊரு வேற.. குசும்புக்கு குறைவே கிடையாது.. வந்து கொஞ்ச நாள்லயே நிறைய மக்களை பழகி வச்சிருக்கவர்..
குமரை நிலாவன் - மலேஷியாவில் இருந்து எழுதுபவர்.. அருமையான மனிதர்.. நட்பை மதிப்பவர்.. நாம இந்த சமுதாயத்துக்கு எதாவது செய்யணும் நண்பா என்று அடிக்கடி சொல்பவர்..
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
அத்திரியோட அரசியல் பதிவுகளில் இருக்கும் நையாண்டி ரொம்ப பிடிக்கும்.. குறிப்பா இந்தப் பதிவு..
17. பிடித்த விளையாட்டு?
கால்பந்து.. F1.. கிரிக்கட்.. டென்னிஸ்.. எல்லாமே பார்க்க பிடிக்கும்.. கிரிக்கட் விளையாடுவேன்.. ஷட்டிலும்..
18.கண்ணாடி அணிபவரா?
+2 படிக்குறப்பவே வலது கண்ணு அவுட்டு... அப்ப இருந்தே போட்டிருக்கேன்..
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
மனதைத் தொடும் விதத்தில் இருக்கணும்.. இல்லைன்னா போரடிக்காம போகணும்..
20.கடைசியாகப் பார்த்த படம்?
அது ஒரு சோகக் கதை.. அவ்வ்வ்.. மரியாதை..
21.பிடித்த பருவ காலம் எது?
வசந்த காலம்
22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
ஜெயமோகனின் "ஊமைச் செந்நாய்.." நான் படிக்குற அவரோட முதல் புத்தகம்.. வட்டார வழக்குல இருக்குறதால ரொம்பப் பொறுமையா படிச்சிக்கிட்டு இருக்கேன்..
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
நான் பயன்படுத்துறது காலேஜ் கம்ப்யூட்டர்.. அதனால அதை நோண்ட மாட்டேன்..
24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
குழந்தைகள் கிட்ட இருந்து வர எல்லா சத்தமும் பிடிக்கும்..

ரொம்ப எரிச்சல் தரது வாகனங்களோட ஹார்ன் சத்தம்
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
மதுரையில் இருந்து ஷிம்லா வரை.. எங்கப்பா ரயில்வேயில் இருக்குறதால அது ஒண்ணுதான் மிச்சம்.. மொத்த இந்தியாவையும் காசே குடுக்காம ரயில்ல சுத்தி இருக்கேன்.. கண்டிப்பா நம்ம மக்கள் எல்லாருமே ஒரு தடவையாவது கல்கா டூ ஷிம்லா ரயில்ல போய் பாருங்க.. அவ்வளவு அருமையா இருக்கும்..
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
மிமிக்ரி பண்ணுவேன்.. பாடுவேன்.. காலேஜ்ல தமிழ் மன்றத் தலைவரா இருந்திருக்கேன்..
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
சமுதாயத்துல இருக்குற ஏற்றத்தாழ்வு.. கொஞ்ச பேர் பணக்காரனாவும் மீதி எல்லாரும் சோத்துக்கே கஷ்டப்பட்டு.. என்னால இதை ஒத்துக்கவே முடியாது.. இந்த மாதிரி சமயங்கள்லதான் சாமின்னு ஒன்னு இருக்கானே கோபம் வரும்..
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
எல்லாரும் நம்மை கவனிக்கனும்னு ஏதாவது பண்ணிக்கிட்டே இருப்பேன்.. அது சரி கிடையாது..
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
வெளிநாடுகளை சுற்றிப் பார்க்கனும்னு ஆசை உண்டு.. இந்தியால எனக்கு நான் பார்த்த இடத்துல பிடிச்சது.. ஜெய்ப்பூர்..
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
சந்தோஷமா இருக்கணும்.. என்னை சுத்தி இருக்கவங்களையும் சந்தோஷமா வச்சுக்கணும்.. போதும்..
31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
கேள்வி நமக்கு செல்லாது..
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
நாம இங்க, இப்படி பொறக்கனும்னு நாம முடிவு பண்றது கிடையாது.. ஆனா நம்ம வாழ்க்கை இப்படித்தான் இருக்கணும்னு நாம்தான் தீர்மானம் பண்றோம்.. நாலு பேருக்கு நல்லது பண்ண முடியாட்டியும், யாருக்கும் கெட்டது செய்யாம வாழ்ந்தாலே பெரிசு..
இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது
1. ஆதவா
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)