March 9, 2016

மூன்று மொழிபெயர்ப்பு நூல்களுக்கான அறிமுகக் கூட்டம் (6.3.16)

கடந்த ஞாயிற்றுக்கிழமை 6-3-16 அன்று நெல்லை சிந்து பூந்துறையில் உள்ள மூட்டா அரங்கில் மூன்று மொழிபெயர்ப்பு நூல்களுக்கான அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. வலசை சிற்றிதழும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கமும் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்வை எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் தொகுத்தளித்தார்.
நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட மூன்று நூல்கள்...

நீர்க்கோழி - ஹருகி முரகாமி சிறுகதைகள்
வலசை வெளியீடு
தமிழில்: ஸ்ரீதர் ரங்கராஜ்

அஞ்சல் நிலையம் - சார்ல்ஸ் புகோவ்ஸ்கி
எதிர் வெளியீடு
தமிழில்: வி.பாலகுமார்

ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் - யுகியோ மிஷிமா
எதிர் வெளியீடு
தமிழில்: கார்த்திகைப் பாண்டியன்

கவிஞர் கைலாஷ் சிவன், கவிஞர் கிருஷி, கவிஞர் கடங்கநேரியான், பேராசிரியர் அ.ராமசாமி, மொழிபெயர்ப்பாளர் ஜெ.சாந்தாராம், ஓவியர் கதிர், நண்பர்கள் ஈஸ்வரன், சுப்ரா வே.சுப்ரமணியன், தீபா நாகராணி, விஜயன் மற்றும் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

நிகழ்வின் முதல் அமர்வாக மொழிபெயர்ப்பாளர் சா.தேவதாஸ் நீர்க்கோழி பற்றிய தன் கருத்துகளை முன்வைத்தார்.
“ஹருகி முரகாமி இன்று உலகளவில் புகழ்பெற்ற எழுத்தாளராக இருக்கிறார். வெகுசன அளவிலும் இலக்கிய ரீதியாகவும் தொடர்ந்து கவனம் பெற்ற மனிதராக அவர் இருக்கிறார் என்பது எப்படி சாத்தியம் ஆகிறது? மரபான ஜப்பானிய எழுத்திலிருந்து அவர் எப்படி வேறுபடுகிறார் என்பதை எல்லாம் நாம் பேச வேண்டியிருக்கிறது. வெகு சாதாரணமானதொரு விசயத்தை எடுத்துக் கொண்டாலும் உளவியல் ரீதியாக அவர் அதைக் கொண்டு செல்லும் விதம் வெகு அபாரமானது. அவருடைய எழுத்து இரு வேறு உலகங்களை இணைக்கிறது. கிட்டத்தட்ட நவீன இசையை ஒத்த அல்லது அதிலிருந்தே முரகாமியின் எழுத்துகள் உருவாகி வருகின்றன என்றும் சொல்லலாம். இது மிகத்தெளிவாக நேற்று என்கிற கதையில் வெளிப்படுகிறது. இந்தத் தொகுப்பில் உள்ள மற்றொரு முக்கியமான கதை 100% பெண்ணை என்கிற கதை. இது ஏற்கனவே வேறொருவரால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது. எனினும் அதில் சில சிக்கல்கள் இருந்தன. ஆனால் ஸ்ரீதர் அதனை மிகச்சரியாகவும் தெளிவாகவும் சரி செய்திருக்கிறார். ஆக ஒரு படைப்புகான வெவ்வேறு வடிவங்கள் கிடைக்கும்போதுதான் நம்மால் எது சரியானது என்பதை உணர முடிகிறது. போலவே ஸ்ரீதர் சில புதிய வார்த்தைகளை இந்த மொழிபெயர்ப்புக் கதைகளில் பயன்படுத்தியுள்ளார். அதில் ஓரின விரும்பி எனும் வார்த்தையை நான் மிகவும் ரசித்தேன். ஒரு மொழிபெயர்ப்பாளனுக்கு இதுபோன்ற புதிய வார்த்தைகளுக்கான தேடலும் அவசியம். மொத்தத்தில் இந்தத் தொகுப்பு எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் சந்தோசத்தையும் தந்தது என்பது உண்மை. அருமையாக மொழிபெயர்த்திருக்கும் ஸ்ரீதர் ரங்கராஜுக்கு வாழ்த்துகள்..”

நண்பர் ஸ்ரீதரின் ஏற்புரை...
“நான் ஏற்கனவே வேறு சில கதைகளை மொழிபெயர்த்திருந்தாலும் கூட முதல் தொகுப்பு எனும்போது எனக்கானதொரு நல்ல அடையாளமாக இருக்கும் என்றே முரகாமியைத் தேர்வு செய்தேன். அப்படித் தேர்வு செய்யும்போது இங்கு ஏற்கனவே பரவலாகப் பேசப்பட்டு வந்த மாய யதார்த்த கதைகளை விட்டு விலகி அவர் எழுதிய அற்புதமான யதார்த்தக் கதைகளை மட்டும் கொண்டு வருவது என முடிவு செய்து கொண்டேன். புதிய வார்த்தைகளைப் பயன்படுத்தியதும் கவனம் பெறுகிறது என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழாவுக்கு என்னால் வர முடியவில்லை. வெளிநாட்டில் இருந்தேன். ஆனால் இங்கு நெல்லையில் இந்த மூன்று புத்தகங்களுக்குக் கூட்டம் நடைபெறுவது சந்தோசமாக இருக்கிறது. மற்ற இருவரும் என்னுடைய நெருங்கிய நண்பர்கள் என்பதோடு மதுரையில் ஒன்றாகச் சுற்றித் திரிந்தவர்களின் புத்தகங்கள் ஒரே மேடையில் விவாதிக்கப்படுவதும் சிறப்பு. தொடர்ந்து உழைப்பதற்கான, புதிய விசயஙளைப் பேசுவதற்கான உற்சாகத்தை இந்தக் கூட்டம் எனக்களித்துள்ளது. நீர்க்கோழியை வெளியிட்ட வலசைக்கும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த தமுஎகசவுக்கும் என் நன்றிகள்...”

நிகழ்வின் இரண்டாவது அமர்வு பாலகுமார் மொழிபெயர்த்த அஞ்சல் நிலையத்துக்கான அறிமுகம். உடல்நிலை காரணமாக விமர்சகர் மணிமாறன் பங்கேற்க முடியாத சூழலில் கவிஞர் போகன் சங்கர் நூலை அறிமுகம் செய்து பேசினார்.
“இங்கு சிறிது நேரத்துக்கு முன்பு ஹருகி முரகாமியைப் பற்றியதொரு உரையாடல் நடைபெற்றது. முழுக்கவே ஜப்பானிய மரபிலிருந்து விலகி இன்றைய மேற்குலகத்துக்கு அணுக்கமான எழுத்துகளைப் படைப்பவர் முரகாமி. தனக்கான ஒழுங்குகளையும் விழுமியங்களையும் மிகத் தீவிரமாகக் கடைபிடிப்பவர். அந்தப் புள்ளியிலிருந்து விலகி முற்றிலும் எதிர்நிலையிலிருந்து இயங்கக்கூடியவர்தான் புக்கோவ்ஸ்கி. அவருடைய கலை கலகத்திலிருந்து பிறக்கிறது. அவருக்கு எந்த விழுமியங்களும் கிடையாது. குடி மற்றும் பெண்கள்தான் அவருடைய உலகம். அதைப் பற்றி விரிவாக எழுத அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. அவரைப் பொறுத்த மட்டில் அவருடனிருந்த அனைவருமே அவருடைய எழுத்துகளுக்கான ஊற்றுக்கண்கள்தான். தன்னோடு உடனிருந்த பெண்களின் நிர்வாணத்தை, உடல் மற்றும் மனதளவில், அவர் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு அவருடைய வாழ்க்கையை விரிவாகப் பேசும் ஒரு நூலை வாசிக்க முடிந்தது. அத்தனை வசீகரமான வெளிப்படையான மனிதனாயிருக்கிறார். ஒருவேளை பாலகுமார் இந்த நூலை சில பத்தாண்டுகளுக்கு முன்பு மொழிபெயர்த்திருந்தால் தொண்ணூறுகளில் அவரை நகல் செய்ய முயன்று தோற்ற தமிழ் இலக்கியவாதிகளிடமிருந்து நாம் தப்பியிருக்கலாம். இந்த புதினத்தின் ஆதாரமாய் இருப்பது புக்கோவெஸியின் மெல்லிய நகைச்சுவை உணர்வு. அதை எந்த விதத்திலும் பாதிக்காமல் கிட்டத்தட்ட நேரடியாகத் தமிழில் வாசிப்பதான உணர்வைத் தரும்படி பாலகுமார் இதனை மொழிபெயர்த்திருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள்..”

பாலகுமாரின் ஏற்புரை..
“இது திட்டமிட்டு செய்த விசயம் கிடையாது. அடிப்படையில் என்னை மொழிபெயர்ப்பாளன் என்று சொல்லிக் கொள்வதில் அத்தனை விருப்பம் இல்லாதவன் நான். ஆனால் அஞ்சல் நிலையம் எனக்கான ஒரு நல்ல தொடக்கமாக அமையும் என்று நம்புகிறேன். பொதுவாக என்னைப் பொறுத்தவரையில் எல்லாமே Reverse Engineering தான். எதிர் வெளியீட்டில் இருந்து இந்தப் புத்தகத்தைத் தந்தபோது எனக்கு புக்கோவ்ஸ்கியைத் தெரியாது. ஆனால் புத்தகம் கைக்கு வந்த பிறகு அவரைப் பற்றியும் பீட் ஜெனரேஷன் பற்றியும் அவர்கள் இயங்கிய தளம் பற்றியும் விரிவாக அறிந்து கொண்டேன். நான் கட்டுப்பாட்டுக்குப் பெயர் போனதொரு அரசுப்பணியில் இருப்பவன். ஆனால் இந்த நாவலை மொழிபெயர்த்த காலத்தில் மெல்ல மெல்ல எனக்குள் நிகழ்ந்த மாற்றங்களை என்னால் உணர முடிந்தது. அதிகாரத்துக்கு வெளியிலிருந்து அதிகாரத்துக்கு எதிராகப் பேசிய புக்கோவ்ஸ்கியை எனக்குள் நான் உணர்ந்த காலகட்டம் அது. அந்த உணர்வோடுதான் நான் ஆலன் கின்ஸ்பெர்கின் நீண்ட கவிதையான Howl-ஐயும் மொழிபெயர்த்துள்ளேன். இந்த நாவலை மொழிபெயர்க்கும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த நண்பர் கார்த்திகைப் பாண்டியனுக்கும் என் மீது நம்பிக்கை வைத்து வெளியிட்ட எதிர் வெளியீடு அனுஷுக்கும் நன்றி. நான் என்னுடைய முதல் மொழிபெயர்ப்பை வலசையில் தான் செய்தேன். என்னை அடையாளம் காட்டிய நண்பர் நேசமித்ரனுக்கும் என் மனதார்ந்த நன்றிகள்...”

நிகழ்வின் மூன்றாவது அமர்வு மிஷிமாவின் ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் பற்றிய அறிமுகம். தான் வர முடியாத சூழலில் கவிஞர் சமயவேல் தன்னுடைய கட்டுரையை அனுப்பி வைத்திருந்தார்.

மிஷிமா தன்னுடைய இளம் வாழ்வின் எல்லாவற்றையும் வெளிப்படையாக, ஒன்று விடாமல் கூறும் இந்த வாக்குமூலம் 1949ல் எழுதப்பட்டது. பால், பாலியல், வதைமரணம் முதலான மானுட வலியையும், மானுடம் தன் இயல்பில் சுகிக்கும் வன்முறையையும், மிக நுட்பமான உளவியல் கூறுகளாக படிப்படியாகக் கட்டமைப்பதின் மூலம் இந்த நாவலில் மிஷிமா செய்திருப்பது ஓர் உளவியல் சிகிட்சை என்றே கூறலாம். பிறப்பில் ஆண், பெண் என்ற கறாரான பால் பிரிவுகளை மட்டுமே அறிந்த, அங்கீகரிக்கிற பலருக்கும் இப்புதினம் பெரும் அதிர்ச்சியூட்டுவதாக இருக்கலாம். திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வும், ஒருபால் ஈர்ப்புகள் மற்றும் திருமணங்கள் குறித்த புரிதல்களும் அரும்பத் தொடங்கியிருக்கும் இக்காலத்திற்கு, 1949ல் எழுதப்பட்ட இந்தப் புதினம் ஆச்சர்யமூட்டும் வகையில் பேருதவியாக இருக்கிறதுஇயற்கை மிஷிமாவின் பால் நிர்ணயத்தில் செய்துவிட்ட துரோகத்தை அவர் மொத்த வாழ்வையுமே மறுதலிப்பதின் மூலம் (நிகிலிஸ்ட், நீட்சேயிஸ்ட் எனும் முத்திரைகள் வேண்டாம்) சரிசெய்து கொண்டார் என்றும் தோன்றுகிறது. 1949ல் ஜப்பான் மட்டுமல்ல, அனேக தேசங்கள் இறுகிய பண்பாடுகளால் ஆன சமூகங்களைக் கொண்டவையே. இறுகிய பண்பாடுகள் மட்டுமே ஸ்திரமான வாழ்க்கையைத் தரும் என்று நம்பினார்கள்/நம்புகிறார்கள். ஆனால் அவை கோச்சான் போன்ற எளிய சின்னஞ் சிறு மனிதர்களை கொடூரமாக நசுக்கிக் கொன்றுவிடுவதை மிஷிமாவின் நாவலாக நாம் அனுபவிக்கிறோம். ஆண்தன்மையற்ற ஒருவர் திருநங்கையாகவோ அல்லது முன்னேறிய அறுவைச் சிகிச்சைகள் மூலம் பெண்ணாகவோ மாறுவதை இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாத சமூகத்தில்தான் இன்னும் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால் அரசியல் மற்றும் கலாச்சார ரீதியாக, கடந்த காலத்தைக் கனாக் காணும் மீட்பாளர்களுக்கு மிஷிமாவின் வாழ்வும் எழுத்தும் ஒரு பாடம். குறிப்பாக மதச் சமூகங்களால் ஆன பழம்பெருமை கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் இன்று தலைதூக்கி நிற்கும் இந்தப் போக்கு மிதமிஞ்சிய வன்முறையையும் அழிவுகளையும்தான் கொண்டுவரும் என்பதை திட்டவட்டமாக நிரூபிக்கிறார் யுகியோ மிஷிமாபால்கடந்த (Transgender) ஜீவன்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களது ஒருபால் திருமணம் போன்ற ஆசைகளையும் அங்கீகரித்து பெரும் சமூக வாழ்வோடு இணைத்துக் கொள்வதில் நாம் இன்னும் தயங்க வேண்டியதில்லை என்பதுவே இந்த நாவலின் செய்தி. சிக்கலான இந்த உளவியல் நாவலைக் கண்டுபிடித்து அருமையாக மொழிபெயர்த்திருக்கும் கார்த்திகைப் பாண்டியனுக்கு எனது நன்றியும் வாழ்த்துக்களும்..."

கார்த்திகைப் பாண்டியனின் ஏற்புரை..
“சமயவேல் தன்னுடைய கட்டுரையில் நான் என்பது நானில்லை எனில் நான் என்பது யார் என்கிற கேள்வியை மிஷிமா தொடர்ந்து முன்வைப்பதாகச் சொல்கிறார். இதுதான் என்னை மிஷிமாவுடன் பிணைக்கிறது. தன்னைத்தானே நாடு கடத்திக் கொண்ட கலைஞர்களை வலசைக்காகத் தேடும்போது தான் மிஷிமா எனக்கு அறிமுகம் ஆனார். இன்றளவும் மரணம் குறித்து பெரும் அச்சம் கொண்டவனாயிருக்கும் எனக்கு அவருடைய தற்கொலை பிரமிப்பை உண்டாக்கியது. அதன் பிறகுதான் அவரைத் தேடி வாசிக்கத் தொடங்கினேன். ஒருவர் என்னவாக இருக்கிறாரோ அதை ஒத்தே அவருடைய தேர்வுகளும் அமையும். மிஷிமாவின் இந்த நாவல் அந்த வகையில் எனக்கு மிகவும் நெருக்கமானது. ஓரினச் சேர்க்கையாளன் என்பதைத் தவிர்த்து எனக்கும் கோச்சானின் பால்யத்துக்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. இந்த நாவல் மொத்தமும் இரண்டு தளங்களில் பயணிக்கிறது. உடல் மற்றும் மனம் என இரண்டு வகையிலும் வாசகனோடு தன் உரையாடலை நிகழ்த்துகிறது. அவ்வகையில் இந்த நாவலை மொழிபெயர்த்ததில் என்னால் ஒரு தன்னிறைவை உணர முடிகிறது. வலசையின் வழி என்னை வடிவமைத்த நண்பர் நேசமித்ரனுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். மூன்று நண்பர்களின் புத்தகங்களை ஒரே மேடையில் பேசும் வாய்ப்பை உருவாக்கித் தந்த நண்பர் நாறும்பூநாதனுக்கு என் நன்றி...”

இறுதியாக கவிஞர் நேசமித்ரன் நன்றியுரை வழங்கினார்.
“இந்த நிகழ்வு ரொம்பவே உணர்வுப்பூர்வமான ஒன்று. வலசையின் நீர்க்கோழி மற்றும் எதிர் வெளியீட்டின் இரு புத்தகங்கள். இது தகவல்களின் யுகம். வெவ்வேறு மொழிகளில் வரும் படைப்புகள் அனைவருக்கும் நேரடியாக கிடைக்கக்கூடிய காலகட்டம். மிகத் தெளிவாகவும் சரியாகவும் படைப்பாளிகள் புத்தகங்களை அறிமுகம் செய்து பேசினார்கள். அவர்களுக்கு என் நன்றி. என்னளவில் வலசை என்னுடைய மொழியை இலக்கியச் செறிவை வளர்த்துக் கொள்வதற்கான சாதனமாக இருந்தது. அதிலிருந்து உருவான மூன்று நண்பர்களை இங்கே ஒருங்கே காண்பதில் வலசை பெருமை கொள்கிறாள். வலசைக்கான மொழிபெயர்ப்புப் பணிகளின் போது படைப்புகளின் செறிவுக்காக நாங்கள் நிறைய மெனக்கெடுவோம். ஒரு சில படைப்புகளை மீண்டும் மீண்டும் மாற்றித் தரும்படி நண்பர்களை கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதற்கு இங்கு அமர்ந்திருக்கும் நண்பர்கள் ஒத்துழைத்தார்கள். அவர்கள் இன்று நல்லதொரு நிலைக்கு வந்ததற்கான காரணம் அதுவாகக் கூட இருக்கலாம். தங்கள் தவறுகளை சரி செய்து கொள்ள இவர்கள் ஒருபோதும் தயங்கியதில்லை என்பதுதான் உண்மை. இவர்கள் மூவருமே மொழிபெயர்ப்பில் தங்களுக்கென தனிப்பட்ட நிலைப்பாட்டினைக் கொண்டிருப்பவர்கள். ஸ்ரீதர் ஒரு படைப்பை எவ்வளவு எளிதாகத் தர முடியும் என்று யோசிப்பவர். பாலா புதிய வார்த்தைகளையும் சொல்முறைகளையும் கண்டடைய முயல்பவர். கார்த்தியை மரபு சார்ந்து இயங்குபவர் என்று சொல்லலாம். இவர்களைப் பாராட்டும் வேளையில் குறைகளைச் சுட்டிக்காட்டும் உரிமையும் எனக்குண்டு என்று நம்புகிறேன். ஸ்ரீதரின் மொழிபெயர்ப்பில் அவ்வப்போது அவர் வாய் வார்த்தையாகப் பேசுவதையும் பயன்படுத்துகிறார். மொழிபெயர்ப்பில் நாம் காலத்தையும் பொருட்படுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம். பாலா சில வார்த்தைகளை ஒன்றிணைத்து எழுதும்போது அவை வேறொரு வடிவம் கொள்வதை கவனிக்க வேண்டும். கார்த்தியைப் பொறுத்தவரை, நாம் இத்தனை கறாராக இருக்க வேண்டியதில்லை. மூலத்துக்கு நியாயம் செய்யும் அதே வேளையில் படைப்பை சரியான முறையில் வாசகனுக்குக் கடத்தவும் வேண்டியிருக்கிறது. மிக நீண்ட பயணத்தில் இவர்கள் போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது. அனைவருக்கும் என் வாழ்த்துகள். தமுஎகசவுக்கு வலசையின் நன்றியும்...”
நிகழ்வின் இறுதியில் கைலாஷ் சிவன் முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் பற்றிய தன் வாசிப்பனுவத்தைப் பகிர்ந்து கொள்ள கூட்டம் முடிவுற்றது.