June 29, 2012

உதிரிப்பூக்கள் - 14

கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்லும் பேருந்து. நண்பர் ஒருவரின் கல்யாணத்தில் கலந்து கொண்டு விட்டு தனிப்பட்ட அலுவல்களுக்காக சென்னை கிளம்ப வேண்டிய சூழல். திருமணத்திற்கு வந்திருந்த மற்றொரு நண்பர் தனக்கும் சென்னையில் வேலையிருப்பதாக உடன் சேர்ந்து கொள்ள இருவருமாகக் கிளம்பினோம். மட்ட மத்தியானம் பனிரெண்டு மணிக்கு நாங்கள் வண்டிக்குள் ஏறியபோது கிட்டத்தட்ட மொத்தப் பேருந்தும் காலியாக இருக்க வசதியான இடமாகப் பார்த்து அமர்ந்து கொண்டோம்.

எங்களுக்கு முன்சீட்டில் ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். அதிகபட்சம் முப்பத்தைந்து வயதிருக்கலாம். பார்த்தவுடன் சட்டென்று ஈர்த்துக் கொள்ளக்கூடிய அழகு. ஆனால் அவரது முகத்தில் சின்னதொரு குழப்பம் தேங்கியிருந்தது. அத்தோடு அவர் அணிந்திருந்த ஆடைகள் எல்லாம் நெகிழ்ந்திருக்க வேறெங்கோ தொலைந்தவர் போல அமர்ந்திருந்தார். அவ்வப்போது தனது மொபைலை அருகில் இருப்பவர்களிடம் கொடுத்து ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார். ஒரு பெண் தனது அலைபேசியை இத்தனை பகிரங்கமாக மற்றவர்களிடம் தருகிறாரே என்று எங்களுக்கு குழப்பம். ஒரு மாதிரியான பெண்ணாக இருப்பாரோ அல்லது சற்றே மனநலம் குன்றியவரோ என எங்களுக்குள் பேசிக்கொண்டோம்.

ண்ருட்டி அருகே ஒரு மோட்டலில் மதிய உணவுக்காக பேருந்து நின்றபோது மணி நான்கு. நாங்கள் இருவரும் உள்ளே சென்று வாய்க்கு விளங்காத தோசை இரண்டை பிய்த்துப்போட்டு வந்தபோது அந்த பெண்மணி அருகிலிருந்த கடையில் ஏதோ வாங்கிக் கொண்டிருந்தார். அவரைப் பற்றிப் பேசிச் சிரித்தபடி இருவரும் பேருந்துக்குள் ஏறினோம். வண்டி கிளம்பியபின்னரே வேகவேகமாக ஓடி வந்து ஏறியவரைப் பார்த்து ஏன் இவர் இத்தனை வினோதமாக நடந்து கொள்கிறார் என ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் நண்பருக்கு அலைபேசியில் அழைப்பு வந்தது.

சவுதியில் இருக்கும் நண்பரின் சகோதரர் அழைத்திருந்தார். பேச்சுவாக்கில் நண்பர் ஊரெல்லாம் எப்படி இருக்கிறது என சவுதி பற்றி விசாரிக்க முன்னாலிருந்த பெண்மணி இப்போது எங்களை ஆர்வமாகப் பார்ப்பதை நான் கவனித்தேன். நண்பர் பேசி முடிக்கும்வரை அமைதியாக இருந்த அந்தப் பெண் சட்டென்று நண்பரிடம் பேசினார்.

உங்களுக்கு சவுதில யாரையும் தெரியுமா சார்? ஊரெல்லாம் எப்படி? நானெல்லாம் அங்க போனா நிம்மதியா இருக்க முடியுமா..

யாரென்று தெரியாதவர் தானாக வழுவில் வந்து பேசுகிறாரே என்று எங்களுக்குக் குழப்பம். அவரோ எதையும் கவனிக்காமல் தொடர்ச்சியாக சவுதி பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். நண்பரும் சில வருடங்கள் சவுதியில் இருந்திருந்தபடியால் ஊரைப் பற்றி அந்தப் பெண்மணிக்கு பொறுமையாக சொல்லிக் கொண்டிருந்தார்.

ல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டபின்பு அந்தப்பெண் தன்னைப் பற்றிச் சொன்னார். ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றவராம். கும்பகோணம் அருகே இருக்கும் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியர் உத்தியோகம் பார்க்கிறார் போல. கணவருக்கு இன்ஸ்பெக்டர் வேலை. ஒரே மகன் சென்னையில் இறுதி ஆண்டு பொறியியல் படிப்பில் இருக்கிறான். இவர் ஹாஸ்டலில் தங்கி வேலை பார்ப்பதால் வார இறுதிகளில் சென்னை சென்று குடும்பத்தோடு இருப்பது வழக்கமாம். அவர் ஆசிரியர் என்று சொன்னதுதான் தாமதம். நண்பர் என்னைப் பார்த்து ரகசியமாகச் சிரித்தபடி அந்தப்பெண்ணிடம் சொன்னார்.

இவரும் வாத்தியார்தான். காலேஜ்ல.. இப்போத்தான் முனைவர் படிப்பு படிச்சுக்கிட்டு இருக்கார்.

அப்படியா சார்? ரொம்ப சந்தோசம். உங்களுக்குத் தெரியாதா என்ன? நானாவது ஸ்கூல்ல இருக்கேன். நீங்க காலேஜ். உங்களுக்குத் தெரியாததா.. எத்தனை அரசியல் இருக்கும் தெரியுமா இந்த முனைவர் பட்டம் வாங்குறதுக்குள்ள..

அவர் தொடர்ச்சியாகப் பேசியபடியே இருந்தார். தான் பட்ட கஷ்டங்கள், உடன் வேலை பார்க்கும் மக்களின் பொறாமை, பல்கலையின் இழுத்தடிப்பு.. நிறுத்தாமல் அவர் பாட்டுக்கு சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் அது நெருடலாக இருக்கவில்லை. ஒரு சிறுபிள்ளை கதை சொல்லுவது போல அத்தனை ஆவலுடன் சொல்லியபடியே இருந்தார். அந்நிய மனிதர்களிடம் பேசுகிறோம் என்கிற எந்த உணர்வும் இல்லாமல் அவர் பேசிக் கொண்டிருந்தது அவர் மீது எங்களுக்கு ஒரு ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் உண்டு பண்ணியிருந்தது. இன்றைக்கு ஊர் போய்ச் சேர பொழுதுபோக்கிற்கு ஆள் கிடைத்தாயிற்று என்பதாக அவர் பேசுவதைக் கவனித்தபடி இருந்தோம். அவருக்குத் தெரிந்த தோழி ஒருவர் சவுதியில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி இருந்தார் என்பதாலேயே எங்களிடம் சவுதி பற்றி விசாரித்ததாகக் கடைசியாகச் சொன்னார். எல்லாம் கேட்டுவிட்டுப் பொறுமையாகச் சொன்னேன்.

உங்களுக்கு பணம் பெரிசாத் தேவையில்லைன்னா நீங்க இப்பப் பார்த்துக்கிட்டு இருக்குற வேலையை விடாதீங்க மேடம். இதுவும் கவர்மெண்ட் வேலைதானே? அதனால இதுலயே இருக்கலாம். எங்கேயோ ஒரு நாட்டுல ஊர் பேர் தெரியாம யாருக்காக சம்பாதிக்கிறீங்களோ அவங்களை விட்டு விலகிக் கிடக்குறது நல்லாவா இருக்கும்? அதை விட முக்கியம்.. உங்களை மாதிரி திறமையானவங்க கிராமப்புற பள்ளிகள்ள இருக்க மாணவர்களுக்கு செய்யுற சேவைதான் பெரிசு. அந்தப் பிள்ளைங்க பெரிய கல்லூரிகள்ல சேர்ந்து உற்சாகமா உங்கக்கிட்ட வந்து நன்றி சொல்றதை விட என்ன பெரிய சந்தோசம் வாழ்க்கைல கிடைக்கப் போகுது?

ஆமாம் என்பதாக சந்தோசமாகத் தலையை அசைத்தவர் நீங்க சொல்றது சரிதான் சார் நான் இங்கேயே இருந்துடப் போறேன் என்று ஒரு குழந்தையின் குதூகலத்துடன் சொன்னார். நிமிடத்துக்கு நிமிடம் சட்டென்று மாறும் அவருடைய மனநிலை எனக்கு சுத்தமாகப் புரிபடவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று சிரித்து வைத்தேன்.

ற்று நேரம் ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தவர் திடீரென ஏதோ ரகசியம் பேசுவது போல என்னை அருகில் வரும்படி அழைத்தார். நான் அவர் அருகே நகர்ந்தேன்.

உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? நான் இன்னைக்கு சென்னை போறது எங்க வீட்டுல யாருக்கும் தெரியாதே..

சிரித்தபடி சொன்னவரை நான் அதிர்ச்சியாகப் பார்த்தேன். பேருந்து சென்னையை அடையும்போது எப்படியும் இரவு பத்து மணியாகி விடும். அந்நேரத்துக்கு மேல் இவர் எங்கே போவார்? என்ன சொல்கிறார் இவர்?

என்னோட ஸ்கூல்ல படிச்ச ஃபிரெண்டு ஒருத்தி அமெரிக்காவுல இருந்து வந்திருக்கா சார். அவளைப் பார்க்கத்தான் போய்க்கிட்டு இருக்கேன். என் வீட்டுல சொன்னா அவர் அலோ பண்ண மாட்டாரு. அதான் சொல்லாமப் போய்க்கிட்டு இருக்கேன்.

நான் ஏதும் பேசாமல் இருக்க அவரே தொடர்ந்தார்.

கல்யாணம் ஆனப்போ எனக்கு பதினேழு வயசு சார். அவ்வளவா விவரம் இல்லாத வயசு. அவர்தான் எனக்கு எல்லாம்னு இருந்தேன். அவரும் நல்லவருதான். ஆனா ரொம்ப பொசசிவ் டைப் சார் அவரு. நான் வேற யார்கூடயும் பேசிறக்கூடாது. உடனே கோபம் வந்திரும். என்னையப் போட்டு அடிப்பாரு. உன்னோட அன்பு எல்லாம் மொத்தமா எனக்குத்தான். வேற யாரும் இருக்கப்போய்த்தானே நீ அவங்க கூட பழகுறன்னு சொல்லி யார்கூடவும் அண்ட விட மாட்டாரு. எங்க அம்மா அப்பாக்கிட்ட கூட பேச வேண்டாம்னு சொல்லிட்டாருன்னா பாருங்க. நானும் அப்படியே இருந்து பழகிட்டேன். ஒருநாள் எங்கம்மா எல்லாத்தையும் மீறி வீட்டுக்கு வந்திருந்தாங்க. நான் அவங்க மடியில படுத்துட்டு இருக்குறதை அவர் பார்த்துட்டாரு. மறுநா அம்மா போன பிறகு என்ன பண்ணினாரு தெரியுமா..

பேசிக்கொண்டே இருந்தவர் தனது இடைச்சீலையை சற்றே நகர்த்திக் காட்ட நாங்கள் அதிர்ந்து போனோம். நீளக்கோடு போல சூடு போட்ட மிகப்பெரிய தழும்பு அங்கே இருந்தது. அந்த மனிதரின் ரவுத்திரம் ஒரு புறம் என்றால் இந்தப்பெண் இத்தனை வெட்ட வெளிச்சமாக நம்மிடம் ஏன் இதை எல்லாம் சொல்ல வேண்டும் என்கிற அதிர்ச்சி ஒரு புறமுமாக நானும் நண்பரும் பேச்சற்று அமர்ந்திருந்தோம்.

இப்படித்தான் சார் ஏதாவது அறிவில்லாம செஞ்சிடுவாரு. அப்புறம் கெடந்து சாரி சாரின்னு கெஞ்சிக்கிட்டு இருப்பாரு. ஏதோ பொம்பளைப் பிள்ளைங்க படிக்கிற ஸ்கூல்ங்கிறதால என்னை வேலைக்கு விட்டுருக்கார். இல்லைனா அவ்ளோதான். இதுல ஃபிரெண்டு வர்றா பாக்கப்போறேன்னு சொன்னா என்னை விட்டுட்டுத்தான மறுவேலை பாப்பாரு. அதான் சொல்லாமப் போறேன். அவர்கிட்ட நாளைக்குத்தான் கும்பகோணத்துல இருந்து வர்றேன்னு சொல்லி இருக்கேன். எனக்கு ரொம்ப தைரியம்தான். இல்லை சார்?

நானும் நண்பரும் சங்கடமாக சிரித்து வைத்தோம். பேச்சை மாற்றுவோம் என நண்பர் அவரிடம் கேட்டார். ஸ்கூல் நேரம் போக மத்த நேரம் ஹாஸ்டல்ல என்னங்க பண்ணுவீங்க? இதைக் கேட்டபோது அந்தபெண்ணின் கண்களில் ஒரு ஒளி தோன்றி மறைந்தது.

உங்கக்கிட்ட ஒரு விசயம் சொல்லலையே? நான் நல்லாப் பாடுவேன் சார். ஹாஸ்டல்ல ஒரு வீணை வச்சிருக்கேன். அதுதான் என்னோட ஒரே ஃப்ரெண்டு. மனசு சந்தோசமா இருந்தாலும் சோகமா இருந்தாலும் நமக்கு பாட்டுத்தான் சார் எல்லாமே. இப்போ ஒரு பாட்டு பாடட்டுமா..

நாங்கள் என்ன ஏதென்று சொல்வதற்குள் அவர் கண்களை மூடி ஹம் பண்ண ஆரம்பித்து இருந்தார். தன்னுடைய கட்டுப்பாட்டில் அவர் இல்லை என்பது போலாக கண்கள் செருகி இருந்தன. சற்று நேரத்தில் இனிமையான குரலில் அற்புதமாகப் பாடத் தொடங்கினார். இரவும் நிலவும் வளரட்டுமே... எங்களைத் தவிர்த்து பேருந்தில் இருந்த வெகு சிலரும் என்ன இது என்பதாக அவரைப் பார்த்தபடி இருந்தார்கள். தன்னைச் சுற்றி யார் இருக்கிறார்கள் என்கிற எந்தப் பிரஞ்கையும் இல்லாமல் அவர் பாடிக் கொண்டிருந்தார். பாடல் முடிந்தபோது எங்களையும் அறியாமல் நாங்கள் கைகளைத் தட்டிக் கொண்டிருந்தோம். அவருடைய குரல் அத்தனை அருமையாக இருந்தது.

ரொம்ப அற்புதமாப் பாடுறீங்க.. சான்சே இல்லைங்க..

அதனாலத்தாங்க அவர் என்னைப் பாடக்கூடாதுன்னு சொல்லிச் சொல்லி அடிப்பாரு. பத்து வருசம் கழிச்சு வெளியாளுங்க முன்னாடி நான் பாடுறது இதுதான் முதல் தடவை தெரியுமா... ரொம்ப நன்றிங்க..

இதைச் சொன்னபோது அவரது கண்களில் நீர் கோர்த்திருந்தது. நான் இன்னும் கொஞ்சம் பாடட்டுமா என்றவரிடம் சரி என்றோம். கிட்டத்தட்ட அரை மணி நேரம் அருமையான பழைய பாடல்களைப் பாடியபடி வந்தவர் வெகுநேரம் கழித்தே ஆசுவாசமானார்.

ந்தப்பயணத்துல இப்படி ஒரு மனுசியைச் சந்திப்போம்னு நினைச்சுக்கூடப் பார்க்கலீங்க என்றார் நண்பர். ஆமாங்க, நல்லாப் படிச்சு இருக்கீங்க. வாழ்க்கைல கஷ்டப்பட்டாலும் இன்னைக்கு சமூகத்துல ஒரு கவுரமான இடத்துக்கு வந்திருக்கீங்க. இனியாவது உங்களுக்கு பிடிச்சமான விசயங்களை செஞ்சுக்கிட்டு நல்லா சந்தோசமா இருக்க முய்ற்சி பண்ணுங்க என்று அவரிடம் சொன்னேன். பதிலுக்கு அவர் விரக்தியாய் சிரித்தபடி சொன்னார்.

சந்தோசமாவா.. இந்த சமூகம் விடும்னா நினைக்கிறீங்க.. ஒரு பொண்ணு சங்கடத்துல இருந்தா அதை எப்படி பயன்படுத்த முடியும்னு தான் சார் இந்த உலகம் பார்க்கும். போன வருசம் எங்க ஸ்கூலுக்கு ஒரு சீஃப் ஆபிசர் வந்திருந்தார். என்னை விடப் பத்து வயசு சின்னப்பையன் தான். ஸ்கூல் பத்தி நான் கொடுத்த பிரசெண்டேஷன் அவருக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. நம்ம டவுன் ஸ்கூலுக்கும் இதே மாதிரி ஒண்ணு ரெடி பண்ணனும்னு சொல்லி என்னைக் கூப்பிட்டார். சரின்னு நானும் போனேன்.

ராத்திரி ஏழு மணிக்கு மேல காட்டு வழில கார்ல போய்க்கிட்டு இருக்கோம். அவர் ஓட்டிக்கிட்டு வர நான் பக்கத்துல உக்கார்ந்து பேசிக்கிட்டு இருக்கேன். திடீர்னு பார்த்தா ஏசியோட அளவு ஏகமாக் கூடுது. பயங்கரக் குளிர். என்னமோ பேசிக்கிட்டே இருந்தவரு சட்டுன்னு என் கையப் பிடிச்சுக்கிட்டாரு. எனக்கு ஒண்ணும் புரியலை. ஆனா கொஞ்சம் சந்தோசமா இருந்தது. அதுக்கப்புறம் அவரோட பேசுறதுக்கு ஒரு செல்போன் வாங்கித் தந்தாரு. கொஞ்ச நாள் சந்தோசமாப் பேசிக்கிட்டு இருந்தோம். என்னோட கஷ்டங்களை எல்லாம் பகிர்ந்துக்க நான் சாஞ்சுக்க ஒரு தோள் கிடச்சாச்சுன்னு சந்தோசமா இருந்தேன்.

ஆனா அவன் அப்படி மட்டும் நினைக்கலைன்னு பிறகுதான் தெரிஞ்சுது. எப்பப் பேசினாலும் ரூம் போடலாமான்னுதான் கேப்பான். நான் என்னோட வலிகளை பகிர்ந்துக்கணும்னு சொன்னா ஒதுங்கிப் போயிடுவான். ஒரு கட்டத்துல எனக்குப் புரிஞ்சு போச்சு. நான் அவனை முழுசா நேசிச்சேன். ஆனா அவன் என் உடம்பு மேல தான் குறியா இருந்திருக்கான். அவனைச் சும்மா விடக்கூடாது. அன்னைக்கு நடந்தது ஒரு கனவுதான்னு முடிவு பண்ணினேன். அந்த ராத்திரில அவன் எனக்கு முத்தம் கொடுத்தது ஒரு அம்மாவுக்கு குழந்தை குடுத்த மாதிரி இருந்துட்டுப் போகட்டும். ஏண்டா தேவுடியா பையா.. உனக்கு உடம்பு வேணும்னா யாருக்கிட்டயாவது போறதுதானே? எதுக்குக் காதல்னு சொல்லி என்னை ஏமாத்தணும். அவனைத் தலை முழுகினதோட சரி.. அதுக்கப்புறம் யாரையும் நம்புறது கிடையாது சார்...

சரசரவென மழை பெய்வது போல அவர் சொல்லி முடித்தபோது நானும் நண்பரும் பேய் அறைந்தது போல அமர்ந்திருந்தோம்.

ரொம்ப சந்தோசமா இருக்கு சார். என் மனசுல இருக்க கசட எல்லாம் யாருகிட்டயாவது சொல்லி அழாம உள்ளயா வெச்சு வெந்து போயிருப்பேன். ஆனா நல்லவேளையா இன்னைக்கு உங்க ரெண்டு பேரையும் பார்த்தேன். ஒரு பொண்ணுக்கு தனியா மனசு இருக்குனு என்னை மதிச்சு யாரோ ஒருத்தி பேசுறதை நீங்க ரெண்டு பேரும் இவ்ளோ நேரம் கேட்டதே பெரிசு சார். நாம எல்லாரும் ஒரே வேவ்லென்த்ல இருக்குறதால நீங்க என்னைப் புரிஞ்சுக்கிட்டீங்க. உங்ககிட்ட என் பாரம் எல்லாம் எறக்கி வச்சுட்டேன்னு நிம்மதியா இருக்கு சார்..

ங்களுக்கு அவரிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவருடைய எல்லா செயல்களையும் சரி என்று சொல்ல முடியாதென்றாலும் அவருடைய நிலையில் இருந்து பார்த்தால் மட்டுமே அவருடைய செயல்களுக்கான நியாயம் புரியவரும். அவருடைய சூழல் அவரை இதை எல்லாம் செய்ய வைத்திருக்கிறது என்று நாங்கள் எங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க பேருந்து நிலையம் வந்து விட்டது. எங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டதோடு அவரும் இறங்க உதவி செய்தோம். ரொம்ப அயர்ச்சியாக இருப்பதால் ஒரு காபி வாங்கித் தர முடியுமா எனக்கேட்டார். கேண்டினில் போய் காபி வாங்கிக் கொண்டு வந்தேன். ஏதும் பேசாமல் மெதுவாக அதை அருந்தி முடித்தவர் கிளம்பினார்.

போயிட்டு வர்றேன். கடைசி வரைக்கும் என் பேரைக் கூட நீங்க கேக்கலை பாருங்க.. ரொம்பப் பெருமையா இருக்கு சார். பிரயாணத்துல பார்த்தோம். பேசுனோம். சந்தோசமா அப்படியே பிரிஞ்சுடலாம். வர்றேன் சார்..

எங்களை நீங்கி அந்தப்பெண் நடக்கத் தொடங்கினார். காருக்குள் நடந்த சம்பவத்தைக் கேட்டபின்பு அவருடைய அலைபேசி எண்ணை வாங்கலாமா என் எனக்குத் தோன்றியதை அவரிடம் கூப்பிட்டு சொல்லலாமா என்று நினைத்தேன். வேண்டாம். யாரேனும் ஒரு சிலராவது அவருடைய உலகத்தில் நல்லவராக இருக்கட்டும் எனத் தோன்ற அமைதியாக நின்றிருந்தேன். அவர் பேருந்து நிலையத்தில் ஜனத்திரளுக்குள் நுழைந்து காணாமல் போனார்.

June 15, 2012

உதிரிப்பூக்கள் - 13

விவரம் தெரிந்து சினிமா பார்க்க ஆரம்பித்த காலத்தில் நான் ரஜினி ரசிகனாயிருந்தேன். காலம் காலமாய் நிலவி வரும் தமிழ் சினிமாவின் இரண்டு முன்னணி நடிகர்களின் பின்னால் அணிவகுத்து நிற்க வேண்டிய அடிப்படைக் கலாச்சாரப்படி எம் ஜி ஆர் - சிவாஜி என்கிற வரிசையில் ரஜினியா கமலா என வந்தபோது ரஜினி ரசிகனாக இருப்பதே எனக்குப் பெருமையாகவும் வசதியாகவும் இருந்தது. ஏன் என்றால் ரஜினி படத்தை வீட்டில் அனைவரோடும் உட்கார்ந்து பார்க்கலாம். சிரிப்பு சண்டை என்று ஜாலியாகப் போகும். ஆனால் கமல் படமோ பாதிக்கு மேல் புரியாது. அத்தோடு அவர் கதாநாயகிகளைக் கண்டபடி கட்டிப்பிடிப்பார் முத்தம் குடுப்பார் என்பதால் குடும்பத்தோடு பார்க்கவும் முடியாது.

அடுத்ததாக
சினிமாவைத் தாண்டி பொது வாழ்விலும் ரஜினி ரொம்ப நல்லவர். எல்லோருக்கும் உதவி செய்பவர். வெளிப்படையான மனிதர். மொத்தத்தில் ரஜினி அப்படியே எம் ஜி ஆர் மாதிரி. கமலோ இதற்கு நேர் எதிர். இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொண்டு கல்யாணம் செய்தவர். யாருக்கும் உதவ மாட்டார். நடிப்பிலும் வாழ்விலும் சிவாஜி மாதிரியே. இப்படியாகக் காதில் விழும் செய்திகள் எல்லாமே ரஜினிக்கு ஆதரவாகவே இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக ரஜினி படம் ன்றாகவே இல்லை என்றாலும் நூறு நாட்கள் ஓடும். கமல் படம் எவ்வளவு நன்றாக இருந்தாலும் ஓடித் தொலையாது. மாமாங்கத்திற்கு ஒரு படம் கமலுக்கு ஓடினால் அதுவே ஆச்சரியம். ஓடும் குதிரையின் மீதுதானே உலகம் பணம் கட்டும் என்கிற நிலையில் ஊருக்குள் பத்து பேர் இருந்தால் அதில் எட்டு பேர் ரஜினி ரசிகராக இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லையே?

உறுப்பினராகச் சேர்ந்தால் ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் ஓசி டிக்கெட் கிடைக்கும் என யாரோ சொன்னதை நம்பி நான் போய் இணைந்து கொண்ட சுப்பிரமணியபுரம் ஸ்டைல் கிங் ரஜினிகாந்த் மன்றத்தின் அருகிலேயே சகலகலா வல்லவன் கமல்ஹாசன் நற்பணி மன்றமும் இருந்தது. கடைசிவரைக்கும் எனக்கு ஒரு டிக்கெட் கூட காசு கொடுக்காமல் கிடைக்கவில்லை என்பது வேறு விசயம். ஆனால் தினமும் ஜாலியாகப் பொழுது போக மன்றம் பெரிதும் உதவியது.

மன்ற உறுப்பினர்கள் வீட்டில் விசேசங்கள் நடக்கையில் பேர் போட்டு போஸ்டர் அடிக்க, தெருத்தெருவாய்ப் போய் ஒட்ட, மைக் அன்வுன்ஸ் பண்ண, பள்ளிக்கூடம் திறக்கையில் மாணவர்களுக்கு நல உதவித் திட்டங்கள் என்று ஏதாவது ஒன்று நடந்தபடி இருக்கும். அப்படி எந்த வேலையும் இல்லாத, பொழுது போகாத நேரங்களில், எதிர்ப்பக்கம் போய் கமல் ரசிகர்களை வம்பிழுப்பதென்பது நமது நண்பர்கள் செட்டுக்கு மிகவும் பிடித்தமான விசயங்களில் ஒன்று. எங்கள் ஆள் நடிப்பு அப்படி இப்படி என்றெல்லாம் முரண்டினாலும் கடைசியில் எத்தனை படம் ஓடியது எனும் ஒரே கேள்வியில் எதிர்த்தரப்பு மொத்தமாக ஆஃப் ஆகி விடுவார்கள். ஏதேதோ சொல்லிப் பார்த்து ஒன்றும் முடியாமல் போக அவர்கள் பயன்படுத்தும் கடைசி அஸ்திரம் போங்கடா மெண்டல் ரசிகய்ங்களா என்பதாக இருக்கும். இதற்காகத்தான் காத்திருந்தோம் என்பதுபோல நாங்கள் அவர்கள் மேல் தாவ அதுவரைக்கும் வாய் வார்த்தையாக இருந்தது கைகலப்பாக மாறி யாருடைய மண்டையாவது உடைவதில் போய் முடியும்.

91 தீபாவளி என்று நினைவு. ரஜினியின் தளபதியும் கமலின் குணாவும் நேருக்கு நேர் மோதின. தினமலரோடு மண்டையில் கொண்டை போட்ட சாமுராய் ரஜினி போஸ்டரை இலவசமாகத் தந்தார்கள். அந்தப் போஸ்டரை வாங்கவே அடிதடி ஊருக்குள் தூள் பறந்தது. முதல்முறையாக மணிரத்னத்தோடு ரஜினி இணையும் படம் என்று ரசிகர்களிடையே ஏக அலப்பறை. அந்தப்பக்கம் தலையில் மஞ்சள் துண்டை கட்டிக்கொண்டு பப்பரப்பா என்று கைகளை நீட்டியபடி லட்டு வாங்க நிற்கும் கமல் போஸ்டர் வெளியாக கமல் ரசிகர்கள் மொத்தமாக மண்டை காய்ந்தார்கள்.

படங்கள் வெளியான முதல் நாளே நிலவரம் தெரிந்து போனது. ரஜினி படமாக இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு குன்சாக இருந்தது தளபதி. தேவாஆஆஆ சூர்யாஆஆஆ என்று ஒரே உற்சாக வெள்ளம் தியேட்டர்களில். ரஜினி சாவது கிளைமாக்ஸ் என்றிலிருந்து மாறி மம்முட்டி சாக ரஜினி ரசிகர்கள் அனைவருக்கும் ஏக சந்தோசம். கண்டிப்பாக படம் ஓடிவிடும் எனத் தெரிந்து விட்டது. ஆனால் குணா பார்த்த பாதி பேர் அபிராமி அபிராமி என்று அய்யோ பாவமாக கலங்கிப்போய் வெளியே ஓடிவர உற்சாகம் பிய்த்துக் கொண்டது எங்களுக்கு.

நமது படம் நன்றாக இருப்பதைக் காட்டிலும் எதிராளியின் படம் ஊத்திக் கொள்வது என்பது அளவில்லா சந்தோசம்தான் இல்லையா? இன்றைக்கு அதே குணாவை மீண்டும் மீண்டும் தேடிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பது வேறு விசயம். ஆனால் குணாவின் தோல்வி ஒரு ரஜினி ரசிகனாக அன்றைக்கு ரொம்பக் கொண்டாட்டமாக இருந்தது. என் நினைவுக்கு ரஜினியும் கமலும் நேரடியாக திரையில் மோதியதில் அதுதான் கடைசி. அதன் பின்பாக இருவருமே படங்கள் நடிப்பதை வெகுவாக குறைத்துக் கொண்டதும் ஒரே நாளில் அவர்களுடைய படங்கள் வெளியாவதும் இல்லாமல் போனபின் இந்த ரசிகர்கள் சண்டை வெகுவாகக் குறைந்து போனது.

ரஜினி இரண்டு வருடங்களுக்கு ஒரு படம், கமல் பல பரிசோதனை முயற்சிகள் எனத் தடம் மாறியதால் இவர்கள் வரிசையில் அடுத்தது யார் என்பதே அப்போதைக்கு என்னைப்போன்ற சாதாரண ரசிகனின் கேள்வியாய் இருந்தது.

நாளைய தீர்ப்பு வெளியானபோது குரங்கு என்றும் தகரடப்பா முகம் என்றும் பத்திரிக்கைகளால் நேரடியாகக் கேலி செய்யப்பட்ட விஜய் தமிழின் அடுத்த பெரிய நடிகராக வருவார் என யாராவது அன்று சொல்லியிருந்தால் நிற்காமல் சிரித்திருப்பேன். பெரிய இயக்குனரின் மகன் ஆசைக்கு ஒரு படம் நடிக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் அவருடைய இரண்டாவது படமான ரசிகன் வெளியானது. மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றி. பம்பாய் குட்டி சுக்கா ரொட்டி ஒத்தப்பாட்டுக்காக அந்தக் கருமாந்திரம் பிடிச்ச படத்தை நாலஞ்சு தடவை தியேட்டர்ல பார்த்தேண்டா தம்பி என என் அப்பா அடிக்கடி பெருமையாக சொல்வார்.

அடுத்தடுத்து வெளியான விஜய் படங்களின் ஃபார்முலா ரொம்ப எளிமையானது. பேருக்கு ஒரு கதை. நாலு சண்டை கொஞ்சம் காமெடி. ஆனால் பட்டாசான ஒரு கதாநாயகியும் கண்டிப்பாக ஒரு மழைப்பாட்டும் இருக்கும். கூடவே ஒரு கவர்ச்சி நடிகையின் குத்தாட்டப்பாடலும். சுவாதி, சங்கவி, யுவராணி என்று பலரை அறிமுகம் செய்து தங்கத்தமிழ் ரசிகனின் மனதினை எஸ் ஏ சி குளிரச் செய்தார். வயதுக்கு வந்து பிட்டுப்படங்கள் பார்க்க ஆரம்பித்திருந்த காலகட்டம் என்பதால் நானும் மிக எளிதாக விஜய் படங்களை நோக்கி ஈர்க்கப்பட்டேன்.

ஆனால் பூவே உனக்காக வெளியாகி விஜய்க்கு வேறொரு பாதை அமைத்துக் கொடுத்தது. காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய் எல்லாம் வெளியாகி மெகா ஹிட்டாக விஜய் எங்கேயோ போய் விட்டார். படங்கள் ஓடுவது போக தானும் ஒரு ரஜினி ரசிகர் என்று கிடைக்கும் கேப்பில் எல்லாம் விஜய் அடித்து விட்டது எனக்கு இன்னும் வசதியாகிப் போனது. ரஜினி வழியில் அடுத்து நமக்குப் பிடித்தது விஜய்தான் என்று தீர்மானம் ஆனது.

ஜித்துக்கு அப்போது பத்திரிக்கைகள் வைத்திருந்த பெயர் வாய்க்கொழுப்பு நடிகர். ஏடாகூடமாக பேட்டி கொடுப்பது அவருடைய ஸ்பெசாலிட்டி. பாசமலர்கள், ராஜாவின் பார்வையிலே என்று சின்ன சின்ன கச்சடா ரோல்களில் நடித்துக் கொண்டிருந்தவரை முதலில் அடையாளம் காட்டியது ஆசையின் வெற்றி. அதன் பின்பு ஹீரா மற்றும் சுவாதியின் காதல், திமிர்த்தனமான பேட்டிகள் என்று ஆரம்ப கட்டங்களில் அஜித்தை எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. ராசி என்றொரு படம். தானைத்தலைவி ரம்பாவுக்காகப் போய்ப் பார்த்தது. அஜித் வரும் காட்சிகளில் பெரும்பாலும் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தேன்.

தொடர்ச்சியாக படங்கள் ஊத்திக் கொண்டிருந்த நேரத்தில்தான் எதிர்பாராமல் காதல் கோட்டை வெளியாகி சக்கைபோடு போட்டது. படத்துக்கு தேசிய விருதும் கிடைக்க அஜித்துக்கென ஒரு அடையாளம் உருவாகத் தொடங்கியது. அதில் தொடங்கி உன்னைத்தேடி, வாலி எனத் தொடர்ச்சியாக ஆறேழு படங்கள் ஹிட். அடுத்தாக அஜித்துக்கு நேர்ந்த நல்ல விசயம் ஷாலினி. அமர்க்களம் படத்தில் நடிக்கையில் இருவரும் காதல் வயப்பட அஜித் பொறுமையான மனிதனாக மாறத் தொடங்கினார். அதுவரைக்கும் மோசமானவராகப் பார்த்து வந்த மனிதனை சினிமா உலகம் சட்டென்று அற்புதமான மனிதர் என்று கொண்டாடத் தொடங்கியது. வாய்ப்புக் கேட்டு வரும் புதிய இயக்குனர்கள் எல்லாம் அஜித்தை கடவுள் ரேஞ்சுக்குப் புகழ அவரும் மேல்நோக்கி நகர ஆரம்பித்தார். தன்னை விஜய்க்குப் போட்டியாளானாக அஜித் அறிவித்துக் கொண்டதும் இந்த காலகட்டத்தில்தான் நேர்ந்தது.

சத்தமே இல்லாமல் உள்ளே வந்த இரண்டு நடிகர்கள் சட்டென்று வளர்ந்து நாங்கள்தான் அடுத்த தலைமுறை போட்டியாளர்கள் என உருவாகி நின்றிருந்தார்கள். போட்டியில் நான் விஜயின் பக்கமிருந்தேன். அதே நேரத்தில் வாலி, கார் ரேஸ், ஷாலினியுடனான அமைதியான வாழ்க்கை என்று அஜித்தின் மீது சின்னதொரு சாஃப்ட் கார்னரும் உருவாகத் தொடங்கி இருந்தது.

நிலாவே வா ரிலீஸ். சோலைமலை தியேட்டரில் காலை எட்டு மணிக்கெல்லாம் ரசிகர்கள் குவிந்து விட்டோம். அந்தத் தியேட்டரில் ஒரு நல்ல விசயம் - சைக்கிள் டோக்கனுக்கு டிக்கெட் தருவார்கள். முண்டியடித்து முன்னால் போய் வரிசையில் நின்றால் மதியம் மூணு மணி வரைக்கும் பொட்டி வரவில்லை. வந்து படம் போட்டபின்பு ஏண்டா பொட்டி வந்தது என்றாகி விட்டது. நாலு கிமீ கடலுக்குள் போன விஜயை சிலுவ என்று கத்தி சுவலட்சுமி கூப்பிட்டுக்கொண்டிருந்தபோது நாங்கள் நாற்பது கிமீ வேகத்தில் தியேட்டரை விட்டு ஓடிக் கொண்டிருந்தோம். அங்கே ஆரம்பித்தது சனியன்.

காதல்னா என்னன்னு தெரியுமா என வாயசைக்காமல் ஒவ்வொரு படத்திலும் விஜய் வசனம் பேசித்தள்ள எனக்கு வாயில் நுரை தள்ள ஆரம்பித்தது. நெஞ்சினிலே, நேருக்கு நேர், என்றென்றும் காதல் என வரிசையாகப் படங்கள். வருவியா வருவியா தியேட்டருக்கு வருவியா என்று கண்ணில் பட்டவர்களை எல்லாம் இழுத்து வைத்து அறைந்து கொண்டிருந்தார் மனுசன். எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல வந்தது கண்ணுக்குள் நிலவு. படம் பார்த்த அத்தனை பேரும் பைத்தியம் பிடித்து வெளியே வந்தோம். ஆணியே பிடுங்க வேண்டாம் என மண்டை காய்ந்து சுத்திக் கொண்டிருந்தபோது தான் அஜித்துக்கு முகவரி வெளியானது.

நான் இதுவரைக்கும் பார்த்த படங்களில் மிகப்பிடித்தவை எனச் சொன்னால் அதில் கண்டிப்பாக முகவரிக்கும் இடமிருக்கும். ரொம்பவே இயல்பான கதை. வாழ்வில் வெற்றி பெறத் துடிக்கும் ஒரு இளம் கலைஞனின் வலியை அச்சு அசலாகப் பிரதிபலித்து இருந்தார் அஜித். அந்தப் படத்தோடு நான் கட்சி மாறிவிட்டேன். அதன் பிறகு வெளியான தீனா அஜித்தை ”தல” ஆக்கியது. சிட்டிசன், ரெட் என்று ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் வித்தியாசம் இருந்ததே அஜித்தை ஆதரிக்க எனக்குப் போதுமானதாக இருந்தது.

ஆக்சிடண்ட் ஆகியும் சிரமப்பட்டு நடிக்கிறார், தனிப்பட்ட முறையில் நேர்மையானவர், மனதில் பட்டதை தயங்காமல் பேசுபவர், ரசிகர்களை தன் சுயலாபத்துக்குப் பயன்படுத்தாதவர் என்றெல்லாம் பத்திரிக்கைகள் தலைக்கு மேல் தூக்கிப்பிடிக்க அஜித் இப்போது எனக்கு மிகவும் நெருக்கமானவராகவும் அதே நேரத்தில் அரசியலுக்காக தன் ரசிகர்களைத் தயார் செய்து வந்த விஜய் பிடிக்காதவராகவும் மாறி இருந்தார். வேறு எந்த நடிகரின் படபூஜைகளுக்கும் வராத ரஜினி அஜித் பட பூஜைகளுக்கு வந்தது தன்னுடைய வாரிசு அவர்தானென சொல்வதாகவே நாங்கள் எடுத்துக் கொண்டோம்.

ஜித் படங்களை பார்த்து ரசிப்பதைக் காட்டிலும் முதல் நாளே விஜய் படங்களைப் பார்த்துக் கிண்டலடிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. புறாவுக்கு பெல் அடிக்கிறாண்டா என்று ஆரம்பித்து உண்மைக் காதல்னா சொல்லு ****க்கூடத் தர்றேன் என்று சகட்டுமேனிக்கு ஓட்டினால் உடன் இருக்கும் விஜய் ரசிகர்களுக்கு பொறி பறக்கும். படம் வெளியாகும் முதல் நாள் கூட்டமாகப் போய் விஜய் ரசிகர்களோடு ஒரண்ட இழுப்பது ஒரு சுகமான அனுபவம்.

மதுர படம் ரிலீசான நேரம். முதல் நாள் இரவுக் காட்சி. உடுமலைப்பேட்டையில் நண்பர்களோடு படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வாய் பேச முடியாத பெண் ஒருத்தியை விஜய் பேச வைக்கும் காட்சி. என்னால் சிரிப்பை அடக்கமுடியாமல் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தேன். உடன் இருந்த நண்பர்களில் ஒருவன் தீவிர விஜய் ரசிகன். அதான் படம் பிடிக்கல்லீல்ல அப்புறம் என்ன டாஷுக்கு மொத நாளே பார்த்துட்டு வயிறெறியணும் என்று காய்ந்து தள்ளி விட்டான். எனக்கு சுருக்கென்று ஆகி விட்டது. ஆமாம்தானே? பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு ஏன் முதல் நாளே பார்க்க வேண்டும்? இடைவேளையோடு வெளியேறினேன். அதுதான் நான் கடைசியாக விஜய் படம் பார்த்தது. பெருந்துறையில் இருந்து மதுரை வரும் வழியில் பஸ்ஸில் சிவகாசி போட்டான் என்று டிக்கெட் எடுத்திருந்தும் பாதி வழியிலேயே இறங்கிக் கொள்ளும் அளவுக்கு இன்றைக்கும் கொள்கைப் பிடிப்போடு இருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஜித் விஜய் போட்டியில் மிகவும் சுவாரசியமான விசயம் ரசிகர்கள் பட வெளியீட்டன்று ஒட்டும் போஸ்டர்கள்தான். கடவுளைப் பார்த்தது எவண்டா தலயை ஜெயிச்சது எவண்டா இளைய தலைவலியே உனக்கு நாங்கதான் எமன்டா என்பது ஒருபக்கம் இருக்கும். தளபதி தான் வெயிட்டு தறு”தல” எல்லாம் வேஸ்ட்டு என இன்னொரு பக்கம் களைகட்டும். இவர்கள் என்ன போஸ்டர் ஒட்டுகிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காகவே படம் வெளியாகும் தினத்தில் வண்டியை எடுத்துக்கொண்டு ரவுண்ட்ஸ் போய்வருவோம். நமது நேரம் நன்றாக இருந்தால் தியேட்டரிலேயே அடிதடிகள் நடப்பதைப் பார்க்கும் அதிர்ஷ்டமும் கிடைக்கும். படம் நன்றாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் ரசிகர்களின் அக்கப்போரு பார்க்கப் பார்க்க சலிக்காது. ஆகமொத்தம் படம் வெளியாகும் நாளில் நமக்கு நன்றாகப் பொழுதுபோகும். சமீபமாக இரண்டு நடிகர்களும் ஒன்றாக சேர்ந்து போஸ் கொடுப்பது, நண்பர்கள் என்று பேட்டி கொடுப்பது என்றிருந்தாலும் ரசிகர்களுக்கு நடுவே இருக்கும் பகை தீரும் என எனக்குத் தோன்றவில்லை. நடிகர்களிடையே போட்டி இருக்கலாம் பொறாமை இருக்கக்கூடாது என்று மைண்ட் வாய்ஸ் கேட்டாலும் அதை எல்லாம் பார்த்தால் தொழில் பண்ண முடியுமா பாஸ்?

சரி இவர்களோடு இந்தக் கச்சாயத்து எல்லாம் முடிந்துவிடும் என்று நினைத்தால்... சில நாட்களுக்கு முன்பு வாலு டீசர் வெளியானது. சிம்புவைப் பார்த்து ஹன்சிகா சொல்கிறார். ஒரு சில பசங்களப் பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும். உன்னமாதிரிப் பசங்கள பார்த்தவுடனே பிடிச்சிரும். சுத்தம்.

யில்வே காலனியில் ”ரஜினி” ராமனாதன் என்றால் எல்லோருக்கும் தெரியும். ரசிகர் என்பதைக் காட்டிலும் வெறியர் என்று சொல்லலாம். எங்களுக்கு சீனியர் செட். எனக்குப் பதினைந்து வயது மூத்தவர். எல்லா மன்ற வேலைகளிலும் முதல் ஆளாக நிற்பவர். தலைவர் மட்டும் அரசியலுக்கு வரட்டும் அப்புறம் நம்ம ராஜ்ஜியம்தான் என்று எந்நேரமும் பினாத்திக் கொண்டிருந்த மனிதர். இளம் வயதில் வேஇலைக்குப் போனதைக் காட்டிலும் மன்ற வேலைகளுக்காக அவர் அலைந்தது அதிகம். போனவாரம் அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். பழைய விசயங்களை எல்லாம் தன்னை மறந்து பேசிக் கொண்டிருந்தார். கோச்சடையான் வரட்டும் பட்டையக் கிளப்பிருவோம் தம்பி எனச் சொல்லும்போது அவருக்கு அத்தனை சந்தோசம்.

கடைசி வரைக்கும் தலைவர் அரசியலுக்கு வரலைன்னு உங்களுக்கு வருத்தமே இல்லையாண்ணே

அது கெடக்கு தம்பி. அவர் வரலைன்னாலும் எத்தனை பேருக்கு நல்லது செய்றாரு. போதாதா

அப்படி இல்லைண்ணே.. சரி விடுங்க.

அப்போதுதான் கவனித்தேன். அவர் உடம்பில் அங்கங்கே காயங்கள்.

என்னண்ணே இது.. ஒரே காயமா இருக்கு..

அதுவா தம்பி.. நம்ம தலைவருக்கு உடம்பு சரியில்லாமப் போச்சுல.. சிங்கப்பூர் போனாரே.. அவர் கொரல அப்பக் கேட்டீங்களா தம்பி.. எனக்கு சாகலாம் போல இருந்துச்சு.. அந்த மனுசன் நல்லபடியாத் திரும்பி வரணும்ல.. அதான் திருப்பரங்குன்றதுக்கு அலகு குத்தி காவடி எடுத்தேன். எப்படி.. நம்ம பிரார்த்தனைதான். ஆள் ஜம்முன்னு துள்ளிக் குதிச்சு வந்தார் பார்த்தீங்களா

எனக்கு என்னமோ செய்தது. கண்கள் கொஞ்சம் ஈரமாகி இருந்தன. திரையில் நடிப்பவர்கள் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் திரைக்கு முன்னிருப்பவர்கள் நடிப்பதில்லை என்பது மட்டும் தெரிகிறது. அவ்வளவுதான்.