November 1, 2011

கோணங்கி

ஒரு எழுத்தாளனுடைய வேர்கள் அவன் வாழும் மண்ணில் இருக்கிறது. இந்த உலகத்தில் இருக்கும் எல்லாவற்றையும் அவன் எழுதித் தீர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. மாறாக தான் வசிக்கும் கிராமத்தின் எல்லையில் இருக்கும் மலையை அவன் பார்த்தபடியே இருக்கிறான். அம்மலை அவனுக்குள் எப்போதும் வளர்ந்தபடி உள்ளது. தான் பார்த்துணர்ந்த மலையின் சிறு துகள்களை காற்றில் அலைந்தபடி இருக்கும் அதன் வாசனைகளை அந்த எழுத்தாளன் எழுதினாலே போதுமானது.

- கோணங்கி

***************

சங்க காலப் பாடல்களில் மட்டுமே நீங்கள் அப்படி ஒரு கதாப்பாத்திரத்தைப் பற்றிக் கேள்விப்பட முடியும். யாதும் தனது ஊரே என்றபடி சுற்றியலைந்து பாடித் திரியும் ஒரு பாணன் - நாம் வாழும் இந்தக் காலகட்டத்திலும் அப்படி ஒரு மனிதன் இருக்க முடியும எனச் சொன்னால் நம்ப இயலுமா? ஆனால் அது மாதிரியானதொரு மனிதர்தான் கோணங்கி. சிறுபத்திரிக்கை என்னும் விஷயத்தில் நம்பிக்கை கொண்டிருக்கும் மக்கள் அனைவருக்கும் இன்னும் மீதமிருக்கும் ஒரே நம்பிக்கை அவர்தான்.

இப்போது இந்த இடத்திலே நாம் நின்று கொண்டிருக்கிறோம். இங்கே சுவற்றில் ஒரு மரப்பல்லி பறந்து திரியும் தட்டானைப் பிடிக்கக் காத்திருக்கிறது. இதைக் கூட ஒரு புனைவாகப் பார்க்கும் மனிதர்தான் கோணங்கி. அவரைப் பொறுத்தவரை எல்லாமே புனைவுதான். இந்த மொத்த உலகையுமே அவர் ஒரு புனைவாகவே பார்க்கிறார். அந்தப் புனைவில் நீங்கள், நான், அவர் காணும் மனிதர்கள் தொடங்கி உயிரற்ற பொருட்கள் வரை.. ஏன்.. தன்னையும் கூட ஒரு புனைவாகவே பார்க்கக் கூடியவர்.

(நண்பர் திருச்செந்தாழையுடனான உரையாடலில் இருந்து)

***************

சாத்தூரில் மாது அண்ணன் வீட்டின் மொட்டை மாடியில்தான் நான் முதல் முதலாகக் கோணங்கியைச் சந்தித்தது. ஒரு வாசகர் என்கிற முறையிலே வெகு சம்பிரதாயமான சந்திப்பாக அது இருந்து. அதன் பிறகான சில நாட்களுக்குப் பின்பு நண்பர் சந்துரு காரைக்குடிக்கு வரும்படி நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அப்போது கோணங்கியை மதுரையில் இருந்து காரைக்குடிக்கு அழைத்துப் போகும் பொறுப்பு என்னை வந்தடைந்தது. தன்னுடைய எழுத்து என்னவாக இருக்கிறது என்பது பற்றியும் தன் பயணங்கள் பற்றியும் அந்த இரண்டு மணி நேரமும் கோணங்கி உரையாடியபடியே வந்தார். அவரை எனக்கு வெகு நெருக்கமானவராக மாற்றியது அந்தப்பயணம்தான்.

காரைக்குடியில் நாங்கள் மொத்தம் ஆறு பேர் ஒன்று கூடினோம். சந்துரு, அழகுராஜா, நேசன், ஸ்ரீ, நான் மற்றும் கோணங்கி. எங்கு போவதென்ற வெகு நீண்ட குழப்பத்துக்குப் பின் அனைவரும் திருமயம் கோட்டையைச் சுற்றிப் பார்க்கலாம் எனக் கிளம்பினோம். ஆனால் வண்டி கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே ஒரு தெப்பக்குளத்தின் அருகில் நிற்க வேண்டியதானது. இளவயதில் நண்பர்களோடு தான் ஓடி விளையாடிய இடம் எனப் பழங்கதைகளுக்குள் மூழ்கிப்போன கோணங்கி டேய் சின்னச் சிதம்பரம் நீ எங்கடா இருக்க எனத் தன் பால்ய நண்பனைத் தேடி குளத்துக்குள் ஓடத் துவங்கினார். காலத்துள் பின்னோக்கிப் பிரயாணித்துக் கொண்டிருந்த ஒரு மனிதனின் தேடலுக்கு நாங்கள் அனைவரும் அங்கே சாட்சியாக நின்று கொண்டிருந்தோம்.

நினைவுகளில் தேங்கிப் போனவரைத் திருப்பியழைத்து ஆசுவாசப்படித்திக் கிளம்பிய எங்கள் வண்டி அடுத்ததாக நின்ற இடம் ஒரு இடுகாடு. அதன் அருகிலேயே ஒரு சிறுதெய்வக் கோவிலும் அதன் முகப்பில் உடைந்து போன மண்குதிரைகளும் நின்றிருந்தன. இதுதாண்டா நம்ம மண்ணு தம்பி எனக் கோணங்கி அந்த இடுக்காடின் உள்ளே போய் படுத்துக் கொண்டார். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தவரின் கண்களில் சின்ன அளவிலான சிறு காய்கள் மணலில் கிடப்பது தென்பட மினுங்கும் கண்களோடு ஓடிப்போய் அவற்றை எடுத்துக் கொண்டார்.

இது என்னன்னு தெரியுமாடா தம்பி..

இல்லண்ணே..

இது ஒரு மரத்தோட காய்.. இதுல என்ன விசேசம்னா இதுல பேய்கள் தங்கும். நாம இப்போ இந்தக் காய்களைக் கொண்டு போய் நம்ம வீட்டுல விதைக்கிறோம். மரம் வளர்ந்து அதுல நிறைய பேய்கள் தங்கும். அப்படித் தங்கினாத்தான் நாம் இன்னும் நல்லா எழுத முடியும்.

இதுதான் எனக்குத் தெரிந்த கோணங்கி. அந்த அற்புதமான தினத்தின் முடிவில் இன்று இங்கிருக்கும் அனைவரும் என் தம்பிகள்டா என்று எங்களை அவர் கட்டியணைத்துக் கொண்டது எப்போதும் நினைவில் இருக்கும். குழந்தமைத்தன்மைக்கும் பித்துநிலைக்கும் பெரிய அளவில் வித்தியாசங்கள் கிடையாது. தனது குழந்தைமையைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதுதான் கோணங்கியை இன்னும் தீவிரமாக செலுத்திக் கொண்டிருக்கிறதென நான் நம்புகிறேன்.

***************

நண்பர்கள் என்னிடம் சொன்னது இது. இதுவும் காரைக்குடியில் நடைபெற்றதுதான். ஒரு நாள் இரவில் தன்னுடைய நண்பர் ஒருவரின் வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறார் கோணங்கி. திடீரென நடு இரவில் விழித்துக் கொண்டவர் நணபரை எழுப்பி இருக்கிறார். என்ன என்று கேட்ட மனிதரிடம் நகரில் பசித்த புலியொன்றின் நகக்கீறல்கள் எழுப்பும் ஒலியையும் அது தனித்தலைவதையும் தன்னால் உணர முடிகிறதெனச் சொல்லி இருக்கிறார். நகரத்துக்கு நடுவே எங்கிருந்து புலி வர முடியும் என சொல்லிய நண்பர் அது கோணங்கியின் பிரம்மை என்று சொல்லித் தூங்கி விட்டார். மறுநாள் தான் அங்கிருந்து சற்றுத் தொலைவில் புதிதாக வந்திருந்த சர்க்கஸ் கூட்டம் ஒன்று கூடாரம் அடித்திருந்ததும் அங்கே ஒரு புலி இருந்ததும் நண்பருக்குத் தெரிந்திருக்கிறது. தன்னுடைய புலன்களில் தன் மண்ணையும் காட்டின் வாசத்தையும் உணர்ந்த மனிதொருவராலேயே இது சாத்தியமாகக் கூடும் என அவர் சொல்லிச் சொல்லி வியந்திருக்கிறார். தான் பேசும் விஷயங்களுக்குத் எத்தனை நேர்மையாக இருக்கிறார் கோணங்கி என்பதற்காக நண்பர்கள் என்னிடம் இந்த நிகழ்வை அடிக்கடி சொல்வதுண்டு.

***************

காரைக்குடி பயணத்துக்குப் பிறகு பலமுறை கோணங்கியைச் சந்திக்கவும் கோவில்பட்டியில் அவர் வீட்டில் தங்கவும் செய்திருக்கிறேன். ஒவ்வொரு சந்திப்பும் எனக்குள் அவர் மீதான அன்பையும் மதிப்பையும் அதிகப்படுத்தியே வந்திருக்கிறது. எப்போது அலைபேசியில் அழைத்தாலும் தம்பி பாண்டியன் என்று பாசமாய் அழைத்து கோணங்கி என்னிடம் கேட்கும் முதல் விசயம் வீட்டில் இன்னும் பூ தொடுக்கிறார்களா என்பதுதான். அவர் முதல்முறை என் வீட்டுக்கு வந்தபோது அம்மா பூ தொடுத்துக் கொண்டிருந்தார். அதை எடுத்துக் கொண்டு போய் என் பாட்டியிடம் கொடுத்த கோணங்கி என்னிடம் சொன்னது - இவர்கள்தான் இந்த வீட்டின் உண்மையான அடையாளம். இவர்களை நீங்கள் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். இலக்கியம் என்பதையும் தாண்டி இன்றைக்கு என்னுடைய உறவுகளில் ஒன்றாக பிரியமான அண்ணனாக மாறி இருக்கும் கோணங்கிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

***************

நீங்கள் அவரை வியந்தோதலாம். விமர்சிக்கலாம். அன்பைப் பொழியலாம். திட்டித் தீர்க்கலாம். எதுவாயினும்.. தன்னைப் பற்றிய பாராட்டோ விமர்சனமோ.. அவை அனைத்தையும் சின்னதொரு புன்னகையோடு கடந்து போய் விடுவார். நம்மோட வேலை எழுதுறதுதான் தம்பி. அதை நம்மைச் சரியா செஞ்சாப் போதாதா? என்று முடித்து விடுவார். எல்லாவற்றுக்கும் ஒரு சிரிப்பு. அவ்வளவே. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாத அந்தப் பேரன்புதான் கோணங்கி.

வெகு நாட்களாகவே கோணங்கி பற்றி எழுத வேண்டுமென இருந்தேன். இன்றைக்கு அதற்கான நேரம் கூடி வந்ததில் ரொம்பவே மகிழ்ச்சி. காரணம் - இன்று (1-11-11) கோணங்கியின் பிறந்த நாள். மரியாதைக்கும் பிரியத்துக்கும் உரிய கோணங்கி அண்ணனுக்கு என் மனமார்ந்த அன்பும் வாழ்த்துகளும்..:-))))