Showing posts with label சுயதம்பட்டம். Show all posts
Showing posts with label சுயதம்பட்டம். Show all posts

November 3, 2010

ஹேப்பி பர்த்டே டு மீ :-)))

இன்றோடு "பொன்னியின் செல்வனு"க்கு இரண்டு வயது பூர்த்தி ஆகிறது. இந்த வலைப்பூவ சின்னப்புள்ள விளையாட்டு மாதிரி ஆரம்பிச்சது. இப்போப் பார்த்தா ரெண்டு வருஷம் ஆகிடுச்சுன்னு சொல்லும்போது ஆச்சரியமாவும் பிரமிப்பாவும் இருக்கு. நான் இவ்வளவு ஜல்லி அடிப்பேன்னு சத்தியமா நினச்சு கூட பார்த்தது இல்ல.. மனசுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது நண்பர்களே.











சொந்தக்கதை சோகக்கதை, சினிமா, வாசிக்குற புத்தகம், சமூகத்துல என்னை பாதிக்குற விஷயங்கள், மொக்கைன்னு ஒண்ணு பாக்கி விடாம உள்ள தோணுற எல்லாமே எழுதி இருக்கிறேன். புரியற மாதிரி எழுதணும், சுவாரசியமாவும் இருக்கணும். இதைத்தான் என் அளவுகோலா வச்சிருக்கேன். என்னோட எழுத்துகள் மூலமா உங்ககூட நான் பேசுறேன். அவ்வளவுதான்..

நண்பர் திருச்செந்தாழை ஒரு விஷயத்த அடிக்கடி சொல்வாரு.. "உன் மனசுல தோணுற விஷயங்கள எந்த பாசாங்கும் இல்லாமநேர்மையா எழுது நண்பா.." அதன்படி இருக்கத்தான் முயற்சி பண்றேன். ஆரம்பத்துல இருந்த ஹிட்ஸ், பாலோவர் மோகம்லாம் இப்போ குறைஞ்சு போச்சு. ஓரளவு உருப்புடியா எழுதுறோமான்னு மட்டும்தான் பாக்குறேன்.

வலையுலகம் எனக்குத் தந்திருக்குற மிகப்பெரிய பொக்கிஷம் - என்னுடைய நட்புகள். நட்புங்கிறத மீறி உறவுன்னு சொல்லக் கூடிய மனிதர்கள். கிட்டத்தட்ட என் வாழ்வின் ஒரு அங்கமாகிப்போன அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். அத்தோட பதிவுலக ரெண்டு வருஷத்துல நிறைய புது விஷயங்கள் கத்துக்கிட்டு இருக்கேன். வாசிக்குற பழக்கம் கொஞ்சமா அதிகரிச்சு இருக்கு. நிறைய உலகப்படங்கள தேடி தேடி பார்க்க ஆரம்பிச்சு இருக்கேன். ரொம்ப நிறைவாக உணருகிறேன்.

இந்த நேரத்துல மொதமொத என்னைக் கண்டுபிடிச்சு ஊக்கம் சொன்ன பிரேமை நினச்சு பார்க்கிறேன். “பிரேம்.. நீங்க மட்டும் இல்லைன்னா ஆளில்லாத கடையில யாருக்குடா டீ ஆத்தணும்னு அன்னைக்கே கடைய சாத்திட்டு கிளம்பி இருப்பேன். ரொம்ப நன்றி நண்பா..”

என்னோட ரம்பத்த தாங்கிக்கிட்டு இருக்குற, தாங்கப்போற அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி. என்னோட இந்த சந்தோஷத்த உங்க எல்லார்கூடவும் சேர்ந்து பகிர்ந்துக்குறதுல ரொம்ப மகிழ்ச்சி நண்பர்களே..





சுவீட் எடு.. கொண்டாடு... ஹேப்பி பர்த்டே டு “பொன்னியின்செல்வன்”..!!!

பின்குறிப்பு 1: புதிய தலைமுறையில் வலைத்தளங்கள் பற்றிய கட்டுரையில் என்னையும் குறிப்பிட்டு இருக்கும் லக்கிக்கும், தகவலைப் பகிர்ந்து கொண்ட அண்ணன் ஜாக்கி சேகருக்கும் நன்றிகள் பல..

பின்குறிப்பு 2: நண்பர்கள் அனைவருக்கும் (அட்வான்ஸ்) தீபாவளி நல்வாழ்த்துகள்..

August 2, 2010

நாங்களும் ரவுடிதாண்டியேய்..!!!

கிட்டத்தட்ட ஒன்றரை வருஷமா இணையத்துல எழுதிக்கிட்டு இருக்கோமே.. இதனால் நமக்கு என்ன கிடைச்சிருக்குன்னு யோசிச்சு பார்த்தா, சட்டுன்னு ரெண்டு விஷயத்த சொல்லலாம்ணே... மனசு நெறைய சந்தோசம், நட்புங்குரதையும் மீறி நம்ம மேல அன்பு செலுத்துற நல்ல உள்ளங்கள். இது போதாதா? சின்னதா ஒரு அயர்ச்சி வரும்போதெல்லாம் உங்க அன்புதாண்ணே நம்மள நிக்காம ஓட வச்சுக்கிட்டு இருக்கு.. அதுக்கு உங்க எல்லோருக்கும் முதல்ல நன்றி சொல்லிக்கிறேன்.

சரி.. எதுக்குடா இப்போ இந்த பில்டப்புன்னு கேகுறீங்களா? எல்லாம் ஒரு சின்ன சூதுதாண்ணே. நம்ம பதிவுலக நண்பர்கள் பலரும் அவவங்க தளத்துல வாசகர் கடிதம்னு போடுவாங்க. எனக்கு அதையெல்லாம் பாக்குறப்ப கொஞ்சம் மனசுக்கு கஷ்டமா இருக்கும். என்னடா.. நாமளும் எழுதுறோம்.. ஆனா இது வரைக்கும் ஒரு வாசகர் கடிதம் கூட வந்தது இல்லையே.. ஏன்?

சரி விடுடா பாண்டியா.. நமக்கு துபாய், ஓமன், அண்டார்டிகா முதலான பல நாடுகள்லதான் வாசகர்கள் இருக்குறாங்க.. அவங்களுக்கு தமிழ் எழுதத் தெரியாததனால கடிதம் வரலன்னு நம்மள நாமளே சமாதனம் பண்ணிக்கிறது.. ஒரு சில சமயம் நமக்கு நாமே திட்டத்த பயன்படுத்திக்குவோம்மான்னு நினைப்பேன். அப்புறம்.. ச்சே ச்சே.. இந்த இலக்கியவாதி எழுத்தாளப் பயலுகதான் அப்படி பண்ணுரானுங்கன்னா, நம்மளுமா? வேண்டாம்னு விட்டாச்சு. ஹி ஹி ஹி.. கானா பானா வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்தான..

ஆனாலும் ஒரு சின்ன சோகம் உள்ளுக்குள்ளியே இருந்துச்சுண்ணே. இப்போ விஷயம் என்னன்னா.. அந்த சின்ன சோகமும் நமக்கு இல்லாம போச்சு. வந்துருச்சுல வந்துருச்சுல.. எங்களுக்கும் வாசகர் கடிதம் வந்திருச்சுல.. அந்தக் கடிதங்களையும், சந்தோஷத்தையும் உங்களோட பகிர்ந்துக்கத்தான் இந்த இடுகை.

கடிதம் 1:

அன்புள்ள கார்த்தி,

நான் மகி. என் பெயர் வேண்டுமானால் இளமையாக இருக்கலாம். ஆனால் உண்மையில் நிரம்ப வயதானவள். பல நாட்களாக உங்களுடைய தளத்தை (சத்தமில்லாமல்) வாசித்து வருகிறேன். இதுவரை எந்தப் பின்னூட்டமும் போட்டது கிடையாது. நானும் ஒரு ஆசிரியர். என்னைப் போன்ற ஆசிரியர் ஒருவர் தமிழின் மீது ஆர்வம் கொண்டு எழுதுவதைக் காணும்போது சந்தோஷமாக இருக்கிறது. ஒரு தமிழ்ப் பழமொழியைச் சொல்லி உங்களை வாழ்த்த விரும்புகிறேன். "ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்.." அதேதான். நீங்கள் மற்றவர்களுக்கு நல்லது செய்ய செய்ய தங்களுக்கான நல்ல விஷயங்கள் தானே நடந்தேறும். தொடர்ந்து எழுதுங்கள். விரைவில் உங்கள் திருமணம் நடந்தேற வாழ்த்துக்கள்.

ரொம்ப நன்றிங்க.. அந்த கடைசி வரிய நோட் பண்ணுங்கப்பா..:-)))))

கடிதம் 2:

அண்ணே வணக்கம். உங்க தம்பி பாசத்துடன் எழுதும் சாரி டைப் பண்ணும் மெயில். உங்க வலைப்பூவோட அதிதீவிர ரசிகன் நான். உங்க பதிவுகள் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு. நானும் மதுரைக்காரன்தாண்ணே. மதுரைய ஒட்டி வர உங்கப் பதிவுகளை ரொம்ப விரும்பி படிப்பேன்.

உங்க பதிவுலையே எனக்கு ரொம்பப் பிடிச்சது, ரயில்ல உங்களை மாப்பிள்ளை பார்த்ததா வருமே.. அதுதாண்ணே. இப்போ நினைச்சாக்கூட சிரிப்பு வருது. என்னோட மொபைல ஸ்பீட் டயல் ஒண்ணுல உங்க பதிவுதான் இருக்குண்ணே.. மத்த வலைப்பதிவே எல்லாம் புக்மார்க் பண்ணி வச்சிருக்கேன் அண்ணே. ஆனா உங்க பதிவு நானே டைப் பண்ணிடுவேன். மனப்பாடமாத் தெரியும். உங்க பதிவுன்னா எனக்கு அவ்வளவு பிரியம்.

நான் தினமும் உங்க ப்ளாகை பார்ப்பேன். ஆனா நீங்க தினமும் எழுதுறது இல்ல. அது எனக்கு வருத்தம்தான். நீங்க எவ்ளோ பிசியா இருந்தாலும் எனக்காக தினமும் ஒரு பதிவு போடணும்.செய்வீங்களா?

அண்ணே.. நானும் ஒரு லெக்சரர் தான் .. உங்க கூட பேசணும்னு ஆசையா இருக்கு.. உங்க நபரைத் தர முடியுமா? உங்கள் பதிலை எதிர்பார்க்கும அன்புத்தம்பிஅன்பு.

இதைப் படிச்சதும். எனக்கு ஒரே குழப்பம். ஒரு வேளை நம்ம மாணவர்கள் யாரும் நம்ம கூட விளையாடுறாங்களோன்னு? சரி எதுக்கும் இருக்கட்டுமேன்னு ஒரு பதில் மடல் அனுப்புனேன்.

அன்பின் அன்பு..

உங்கள் அன்புக்கு நன்றி.. நீங்க என்னை ஓட்டுறீங்கன்னு ரொம்ப நல்லாத் தெரியுது.. சந்தோஷம்.. என்னைய நல்லாத் தெரிஞ்ச யாரோதான் நீங்க.. நானும் ஒரு லெக்சரர்னு சொல்றீங்க.. அது உண்மையில்லைன்னு நினைக்கிறேன்....அப்படி இல்லாமல் நீங்கள் சொல்வது உண்மைனா ரொம்ப மகிழ்ச்சி.. தமிழ் மீது ஆர்வம் கொண்ட இன்னுமொரு ஜீவன்னு மனசு கொண்டாடும்.. என்னோடு பேச நினைத்தால் உங்கள் அலைபேசி எண்ணை அனுப்புங்கள்.. நானே தொடர்பு கொள்கிறேன். மீண்டும் உங்கள் அன்புக்கு நன்றி..

பிரியமுடன்,
மா.கார்த்திகைப்பாண்டியன்

சற்றே நேரத்தில் பதட்டமான பதில் வந்து சேர்ந்தது.

அண்ணே.. உங்க மேல ஒரு இனம்புரியாத நெருக்கம். அதனாலத்தான் விளையாட்டா மெயில் அனுப்பினேன். தப்பா எடுத்துக்காதீங்க. என்னோட நம்பர் $%^&$#@. உங்களோட பேச ஆர்வமா இருக்கேன்.

கூப்பிட்டேன். தம்பி அன்பு புதுக்கோட்டை அதுகே இருக்கும் ஒரு பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிகிறாராம். என்னுடைய நீண்ட நாள் வாசகர். கூச்சத்தின் காரணமாக இத்தனை நாள் பேசாமல் இருந்ததாகச் சொன்னார். நிறைய பேசினோம். அடுத்த முறை நேரில் சந்திக்கலாம் என்று சொல்லி விடைபெற்றுக் கொண்டார்.

பதிவுலகில் நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும்போது, நாமும் சில மனிதர்களைச் சம்பாதித்து இருக்கிறோம் என்று கொஞ்சம் பெருமையாக இருக்கிறது. அதே நேரம்.. போக வேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கிறது. எதையில் மண்டையில் ஏற விடாத வரைக்கும் நல்லது என்பதையும் உணர்ந்தே இருக்கிறேன். இந்த வலைப்பூவுக்குத் தங்கள் ஆதரவைத் தந்து கொண்டிருக்கும், எப்போதும் தரப்போகும் பதிவுலக நண்பர்கள் மற்றும் வாசகர்களுக்கு மீண்டும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்..!!!