May 31, 2010

கற்றது களவு - திரைப்பார்வை..!!!

ஏம்ப்பா... இந்த டக்ளஸ் பய கூட சேர்ந்து "கற்றது களவு" படம் பார்க்க போனியே? யாரு படம்? எப்படிப்பா இருந்துச்சு?

சும்மா பந்தயக்குதிரை கணக்கா வேகமா ஆரம்பிக்கிற படம் கொஞ்சம் கொஞ்சமா நொண்டியடிக்க ஆரம்பிச்சு, வெற்றிக்கோட்டை தொடுறதுக்கு முன்னாடியே சொங்கிப் போய் விழுந்தா எப்படி இருக்கும்? "கற்றது களவு" பார்த்தப்போ அப்படித்தான் இருந்துச்சு."அலிபாபா"வுக்குப் பிறகு இயக்குனர் விஷ்ணுவர்தனோட தம்பி கிருஷ்ணா ஹீரோவா நடிச்சு இருக்கிற படம். அவங்கப்பா சேகர்தான் தயாரிப்பாளர். (வேற யாரும் எடுக்க மாட்டேனுட்டானுங்களோ?)



அது சரி.. படத்தோட கதை இன்னாபா?

ஒரு ஊருல.. சரி சரி... ஹீரோ கிருஷ்ணா மாணவர்களுக்கான ஒரு வங்கி பத்தின நல்ல திட்டத்தோட அமைச்சரை சந்திக்கிறாரு. ஆனா அவர ஏமாத்தி எல்லாப் பேரையும் அமைச்சரு தட்டிக்கிட்டு போயிடுறாரு. தன்ன ஏமாத்துன இந்த சமுதாயத்த தான் ஏமாத்தி சம்பாதிக்க முடிவு பண்றாரு ஹீரோ. அவருக்கு துணையா நாயகி விஜயலட்சுமி வராங்க. சின்ன சின்ன தப்புகளத் தாண்டி, ஒரு தாட்டிக்கு, இவங்க கைல மத்திய அமைச்சர் பத்தின ஒரு வீடியோ கிடைக்குது. அதனால மத்திய அமைச்சரு இவங்கள கொல்ல ஆளு அனுப்புறாரு. நல்ல போலீசான ஒருத்தர் இவங்கள காப்பாத்துறாரு. வில்லன் கிட்ட இருந்து தப்பிச்சு கடைசில இவங்க திருந்தி வந்தாங்களான்னு சொல்றதுதான்ப்பா படத்தோட கதை...



இந்த நடிக மக்கள் எல்லாம் எப்புடி நடிச்சு இருக்காக?

கிருஷ்ணா நல்லா நடிச்சு இருக்குறாப்ல.. ஆளும் பாக்குறதுக்கு ஆரம்ப கால எஸ்.ஜே.சூர்யா மாதிரி இருக்குறாப்டி.. டான்ஸ் எல்லாம் எதோ தினுசு தினுசா பறந்து பறந்து ஆடுறாரு.. பேசுறதுதான் மணிரத்னம் படம் மாதிரி புரியாமப் பேசுறாரு.. விசயலட்சுமி தான் கதாநாயகி.. குச்சி கணக்கா இருக்கு.. என்னமோ நடிக்குது.. பெரிசா வேலை ஒண்ணும் இல்ல.. நல்ல போலீசா கெத்தா நடிச்சு இருக்கிறது நம்ம சம்பத் தான்.. மனுஷன் மெரட்டி இருக்காரு.. டான்ஸ் மாஸ்டர் கல்யாண்தான் படத்தோட காமெடி பீஸ்.. ஏதோ பெரிசா பண்ணப்போற மாதிரி பில்டப் கொடுத்து கடைசில சப்பையா போறாரு.. கஞ்சா கருப்பு லொள்ளு சபா டீமோட வந்து மொக்க போட்டு மனுஷன கொலையாக் கொல்றாரு.. எதுக்குன்னே தெரியாம முமைத்கான் ஒரு பாட்டுக்கு ஆடுது... அது போக சந்தானபாரதி, மறைந்த நடிகர் நம்ம ஹனீபா, சின்னி ஜெயந்த் எல்லாம் வந்து போறாங்கப்பா..


மீஜிக், போட்டோ புடிச்சதெல்லாம் நல்லா இருக்கா?

தலைமகன்னு சரத்தோட நூறாவது படத்துக்கு இசை அமைச்ச புண்ணியவான் பால்.ஜே தான் இந்தப் படத்துக்கும்.. இன்னுமா இந்த மனுஷன ஊரு நம்புது? தம்மு அடிக்காதவன் கூட பாட்டு வந்தா வெளில தலைதெறிக்க ஓடுறான்.. ஒரு பாட்ட கூட வெளங்கல.. அதுலயும் "கற்றது களவு"ன்னு ஒரு ராப் பாட்டு வேற.. தமிழ்தானான்னு சந்தேகம்.. முடியலைடா சாமி.. பின்னணி இசை போட்டிருக்கிற சபேஷ்-முரளி கொஞ்சம் நல்லா பண்ணி இருக்காங்க.. இந்தப் படத்துக்கு எல்லாம் நீரவ் ஷா தன்னோட உழைப்பை வீணடிக்கனுமா? மொதப்பாதி கொஞ்ச நேரத்துக்கு அவரும் கேமராவத் தூக்கிட்டு லொங்கு லொங்குன்னு சுத்துறாரு.. பார்ஸ்ட் சீன்.. ஒரு சேஸ்.. அட்டகாசம்.. அதுக்கு அப்புறம் அவரும் ஓஞ்சு போயி அக்கடான்னு உக்கார்ந்துட்டார் போல.. ரெண்டாம் பாதில பாதிபடத்துக்கு மேல வெறும் இருட்டுத்தான்..



கடைசியா இயக்கத்த பத்தி சொல்லுப்பா?

பாலாஜி தேவி பிரசாத்... இவருதான்ப்பா இயக்குனரு.. இவரோட பெரிய கொழப்பமே.. இத சீரியஸ் த்ரில்லர் படமா எடுக்குறதா இல்ல காமெடி படமா எடுக்குறதான்னுதான் நினைக்கிறேன்.. ஹீரோவும் ஹீரோயினியும் கல்யாணம் பண்ணிக்கிற மொத செஸ்ல எல்லோரும் மிருந்து உக்காருறோம்.. அவங்களக் காப்பாத்துனது ஒரு போலிஸ் ஆபிசரான்னு ஆச்சரியப்படுற நேரத்துல.. அடுத்து வர காட்சி எல்லாம் புஸ்ஸ்ஸ்... அதுவும் ஹீரோ எப்படி எல்லோரையும் ஏமாத்தி சம்பாதிக்கிறாருன்னு காட்டுறாங்க பாரு.. கவுண்டமணி மாதிரி நம்ம காதுல வாழைப்பூவையே கூடை கூடையா சொருகுறாங்க.. அது சரி.. காசு குடுத்து போற நம்மள சொல்லணும்.. ரெண்டாம் பாதில போடுறாரு பாரு ஒரு பிளேடு.. போகுது போகுது போய்க்கிட்டே இருக்கு ஜில்லட்டு கணக்கா.. அம்மாம்பெரிசு பிளேடு.. நல்ல கதைக்கான பிளாட்ட திரைக்கதைல கலக்குறேன் மகனேன்னு மொத்தமா காலி பண்ணிட்டாரு.. அம்புட்டுத்தா...

படத்தப் பத்தி ஒரு வார்த்தை.. ஒரே ஒரு வார்த்தைல சொல்லு பார்ப்போம்..

கற்றது களவு - கருமம் பிடிச்ச எழவு (நன்றி - டக்ளஸ்)

May 26, 2010

உக்கார்ந்து யோசிச்சது (26-05-10)..!!!

பிரியத்துக்குரிய பதிவுலக நண்பர் "அப்பாவி முரு" என்கிற முருகேசனின் திருமணம் இன்று சின்னாளபட்டியில் இனிதே நடைபெற்றது. அவருக்கும் மணமகள் ரேவதி அவர்களுக்கும் உள்ளங்கனிந்த நல்வாழ்த்துகள்.



(பயபுள்ளைய ஏதாவது பற்பசை விளம்பரத்துக்கு பயன்படுத்திக்கலாமோ?)

மதுரையில் இருந்து நானும் சீனா ஐயாவும் போயிருந்தோம். சென்னையில் இருந்து ரம்யாக்கா, கலை அக்கா மற்றும் சித்தர் ஆகியோர் வந்திருந்தார்கள். பதிவுகளில் வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் தன்னுடைய சார்பில் நன்றியை சொல்லும்புடி அண்ணன் முருகேசன் ஆணையிட்டதற்கு இணங்க, ஒரு பெரிய நன்றிங்கோவ்....

***************

இன்றைக்கு திருமண பந்தத்தில் அடி எடுத்து வைக்கும் மற்றொரு நண்பர்.. நவீன தமிழ் கவிதைகளில் தனக்கான ஒரு இடத்தை உருவாக்கி இருக்கும் நண்பர் நரன். நேற்றைக்கு அவருடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி விருதுநகரில் நடைபெற்றது. ஸ்ரீதரும் நானும் போயிருந்தோம். இசை, செல்மா ப்ரியதர்ஷன், யவனிகா ஸ்ரீராம், மணிவண்ணன், தேவேந்திர பூபதி, ஸ்ரீஷங்கர் எனப் பல இலக்கியவாதிகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கவிஞர் தேவதச்சனும் வந்து இருந்தார். நிறைய விஷயங்களை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும், அறிந்து கொள்ளவும் முடிந்தது. பூவோடு சேர்ந்த நாரும் என்பது போல மேடையில் நாங்கள் அனைவரும் ஒன்றாக ஏறியபோது “இவர்கள் என்னுடைய எழுத்தாள நண்பர்கள்” என்று நரன் தனது துணைவியாரிடம் அறிமுகம் செய்தபோது ரொம்ப வெட்கமாக இருந்தது. கூகிலாண்டவருக்கும் பிளாகருக்கும் நன்றி.

வந்து இருந்தவர்களில் படு ஜாலியான மனிதராக பட்டையைக் கிளப்பியவர் செல்மா ப்ரியதர்ஷன். லீனா மணிமேகலை, யவனிகா ஆகியோரின் கவிதைகளை செல்மா வாசித்த விதம் அட்டகாசம். என்னை மிகவும் ஆச்சரியம் கொள்ள வைத்தவர் யவனிகாதான். இளைஞர்களோடு இயைந்து செயல்படக்கூடிய உள்ளமும் நட்பு நிறைந்த நெஞ்சமும் எல்லாருக்கும் வாய்த்து விடாது. அந்த வகையில் யவனிகா கொடுத்து வைத்த மனிதர். நாங்கள் விடை பெற்றுக் கிளம்பும்போது மனிதர் அமைதியாக இரண்டே வரிகளில் சொன்னார்.. "இங்கே எதற்குமே அர்த்தங்கள் கிடையாது.. நம்முடைய நட்பும் அர்த்தங்களை மீறிய ஒன்றாக இருக்கட்டும்..சந்திப்போம்.." அருமையான பொழுதுகள்.

நரன்.. நன்றி நண்பா.. உனக்கு என் வாழ்த்துகள்..:-))))

***************

இரண்டு நாட்களுக்கு முன்பு.. மட்ட மத்தியான வேலை. கல்லூரி பணிகளுக்காக அலைந்து திரிந்து கொண்டிருந்தேன். சரியான தாகம். சரி ஒரு இளநியைக் குடிப்போம் என்று ஒரு தள்ளுவண்டிக் கடையில் ஒதுங்கினேன்.

"எவ்வளவுண்ணே..?"

"பதினஞ்சு, இருபதுங்க.."

"சரிண்ணே.. நிறைய தண்ணி இருக்கிற மாதிரி இருபதுல ஒண்ணு கொடுங்க.."

"வேண்டாம் சார்.. தண்ணி நிறைய வேணும்னா பதினஞ்சுலையே வாங்கிக்குங்க.. இருபதுல எல்லாம் தேங்காதான் சார்.."

உண்மையைப் பேசி வியாபாரம் செய்யும் அந்த மனிதரைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.

"எளனி வரத்து எல்லாம் எப்படிண்ணே இருக்கு..?"

"எங்க தம்பி.. நேரடியா எடுக்கலாம்னா மதுரைல எங்கயும் தோப்பு இல்ல.. எல்லா இடத்தையும் பிளாட் போட்டு வித்துட்டாங்க.. தேனீ, போடி இங்க இருந்துதான் எளனி வருது.. அதனால எல்லாரும் புரோக்கர் பயலுக கைல மாட்டி சீரழியுறோம்.. காலைல இருந்து வெயிலுல காஞ்சாலும் காய்க்கு ரெண்டு ரூபா கூட கிடைக்கிறது இல்ல.. என்ன பண்ண சொல்லுங்க.."

அவர் தன்னுடைய பிரச்சினையை சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார். எனக்கோ அவர் சொன்ன இன்னொரு விஷயம்தான் பெரிதும் உதைத்தது. மதுரையில் இருக்கிற தோப்புகள் எல்லாமே காலியா? இதே நிலை எல்லா ஊர்களுக்கும் பரவ எததனை நாள் ஆகப் போகிறது? ஏற்கனவே ஒவ்வொன்றாக காலி பண்ணிக் கொண்டிருக்கிறோம்.. ஹ்ம்ம்ம்.. என்னமோ போடா மாதவா..

***************

சில நேரங்களில் நாம் எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல விஷயம் கிடைக்கும் அல்லவா? அதுதான் அம்பாசமுத்திரம் அம்பானியில் நடந்து இருக்கிறது. கருணாஸ் இசையில் "பூப்பூக்கும்" என்ற வெஸ்டன் டைப் பாட்டும், "தண்ட தண்ட பாணி.. " பாட்டும் டாப். "ஒத்தக்கல்லு" போன்ற கிராமத்து பாடல்களையும் அழகாக கொடுத்து இருக்கிறார். நன்றாக இருக்கும் என நம்பிய "பாணா காத்தாடி"யில் யுவன் கோல் போட்டிருக்கிறார். பாடல்கள் ஓகே ரகம்தான். அதே நேரத்தில்.. சிங்கம் படத்தின் பாடல்களையும் ரொம்பவே எதிர்பார்த்தேன். ஆனால் தேவி ஸ்ரீ பிரசாத் அல்வா கொடுத்து விட்டார். அத்தனையும் வெளங்காத பாட்டு. சன் டிவி புண்ணியத்தில் ஏதாவது ஒன்றிரண்டு ஹிட் ஆகலாம். டிரைலர் பார்க்கும்போதே மனிதனுக்கு கண்ணைக் கட்டிக் கொண்டு வருகிறது. யூ டூ சூர்யா?

***************

இந்த மாத உயிர் எழுத்து இதழில் வெளியான நரனின் கவிதை ஒன்று உங்கள் பார்வைக்கு..

வைஸ்ராய் மார்ஷலின் டைரிக்குறிப்பு - 1

வைஸ்ராய் மார்ஷலின் டைரிக்குறிப்பில்
1853 சூன் 7 ஆம் தேதி
137 ஆம் பக்கம்
வேட்டையில் அவர் சுட்டு வீழ்த்திய
வங்கப் புலியொன்றின் குறிப்பு இருந்தது.
7 வயது நிரம்பியிருந்த தருணத்தில்
அது வீழ்த்தப்பட்டது.
கொல்கத்தா அருங்காட்சியகத்தில் இப்பவும்
வைஸ்ராயின் டைரி இருக்கிறது.
இரண்டு அறைகள் தாண்டி
கீழே குறிப்புகள் ஒட்டப்பட்ட
கண்ணாடி பேழைக்குள்
வரியோடிய அப்புலியின் உடல்
பாடம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
டைரிக் குறிப்பில்
சுட்டு வீழ்த்தப்படதைச் சொல்லும் வரிக்கு
இரண்டு வரிக்கு முன்னால்
உறுமலுடன்
புலி இன்னமும் உயிருடன் இருக்கிறது.
வைஸ்ராயின் வேட்டையை புகழ்ந்துரைப்பவனையும்
முகத்திற்கு நேராய் வைத்து புகைப்படம் எடுப்பவனையும்
பேழையை உடைத்து தாக்க நினைக்கிறது புலி.
பல நூறு மைல்கள் தாண்டி கானகத்திற்குள்
அதன் எலும்புகளை வைத்துப் பழங்குடியோருவன்
தோல் கருவியொன்றை இசைக்கிறான்.
எலும்புகளற்ற புலியால் அசையாமல்தான்
அசைய முடிகிறது.

***************

முடிக்கிறதுக்கு முன்னாடி.. கொஞ்சம் லொள்ளு..

கல்யாணம் ஆன புதுசுல மாப்பிள்ளைப் பையன் தன்னோட பொண்டாட்டி நம்பரை செல்லுல இப்படி பதிவு பண்ணினான்.. "என்னோட உயிர்.."

ஒரு வருஷத்துக்குப் பிறகு "என்னோட மனைவி.."

அஞ்சு வருஷம் கழிச்சு "வீடு.."

பத்து வருஷம் கழிச்சு "ஹிட்லர்.."

இருபது வருஷம் கழிச்சு "ராங் நம்பர்.."

ஹி ஹி ஹி.. என்னடா மேல எல்லாருக்கும் திருமண வாழ்த்து சொல்லிட்டு கீழே இப்படி ஒரு சூது இருக்கேன்னு யாரும் யோசிச்சா.. அதுக்கு கம்பெனி பொறுப்பல்ல..

இப்போதைக்கு அவ்ளோதான் நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-)))))

May 21, 2010

ஜாதகம்..!!!

"அம்மா.. ஏன் இப்படி பேசுற? என்ன சொல்றோம்னு தெரிஞ்சுதான் பேசுறியா?"

ஆத்திரத்தோடு கத்திய பிரபுவை அம்மா சுகுமாரி நிதானமாக நிமிர்ந்து பார்த்தாள்.

"தெரியும்டா.. நல்லா யோசிச்சுதான் சொல்றேன்.. அந்தப் பொண்ண மறந்திடு.."

"நான் எனக்கு விருப்பம்னு சொன்னப்போ நீயும் அவளைப் பார்த்திட்டு பிடிச்சு இருக்குன்னுதானே சொன்ன.. அப்புறம் ஏன் இப்படி மாத்திப் பேசுறம்மா?"

"அப்போ நான் அவளோட ஜாதகத்தைப் பார்க்கல.. ஆனா இப்போ பார்த்துட்டேன்.. உனக்கும் அவளுக்கும் பொருத்தம் இல்ல.. அவள விட்டிரு.."

"அப்படி ஜாதகத்துல என்னதான்மா பிரச்சினை?"

"ரஜ்ஜு பொருத்தம் இல்லடா.. நட்சத்திரம் பொருந்தல.. உங்களுக்கு கல்யாணம் பண்ணினா கொழந்த பொறக்காதாம்.. வம்சவிருத்தி இல்லாத கல்யாணம் எதுக்குடா.. அதனாலத்தான் சொல்றேன்.. அவ உனக்கு வேண்டாம்.. மறந்துடு.."

"ஐயோ அம்மா.. இதுக்குத்தான் இவ்ளோ பயந்தியா.."

சிரித்தபடியே தன் அருகே வந்து உட்கார்ந்த மகனைப் பார்க்க சுகுமாரிக்கு வியப்பாக இருந்தது.

"தப்பா எடுத்துக்காதம்மா.. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி அத்தை வீட்டு விசேஷத்துக்கு விழுப்புரம் போயிருந்தீங்கள்ள.. அப்போ மீனா இங்க வந்திருந்தா.. அந்த சமயத்துல ரெண்டு பேரும் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு.. இப்போ உன் மருமக முழுகாம இருக்கா.."

அடுத்த இரண்டாவது வாரம் மீனா மற்றும் பிரபு கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது.

இந்தக் கதையை இங்கே முடித்தால் அது ஒரு பக்கக் கதையாக குமுதத்தில் வரக்கூடும்.

முதலிரவு அறை. அலங்கரிக்கப்பட்ட கட்டிலில் அமர்ந்து விசும்பிக் கொண்டிருந்த மீனாவைத் தேற்றிக் கொண்டிருந்தான் பிரபு.

"ஏங்க உங்க அம்மாக்கிட்ட அப்படி ஒரு பொய் சொன்னீங்க?"

"என்னம்மா பண்ண சொல்ற? அம்மாவுக்கு ஜாதகத்துல நம்பிக்கை அதிகம்னு உனக்குத் தெரியும்.. அவங்கள சரி பண்ண எனக்கு வேற வழி தெரியல.. அதனாலத்தான் நீ கர்ப்பம்னு ஒரு பொய்ய சொன்னேன்.. நம்ம சூழ்நிலைய புரிஞ்சுக்கிட்ட எங்க குடும்ப டாக்டரும் நமக்கு உதவ ஒத்துக்கிட்டு அதே பொய்ய அழுத்தமா சொன்னாரு.. எனக்கு நீ வேணும்மா.. உனக்காக என்னன்னாலும் செய்வேன்மா.." சொல்லும்போதே பிரபுவின் கண்கள் ஈரமாகி விட்டன.

"எனக்காக? ரொம்ப நன்றிங்க.." ஆதரவாக அவன் கைகளைப் பற்றிக் கொண்டாள் மீனா. "ஆனா இந்த பத்து மாசத்துக்குள்ள புள்ள பொறக்கலைன்னு உங்கம்மா சந்தேகப்பட்டா?"

"அது உங்க கைலதான் இருக்கு.. கூச்சம் அது இதுன்னு சொல்லாம இப்படி பக்கத்தில வந்தீங்கன்னா, அதற்கு உண்டான முயற்சிய ஆரம்பிச்சுடலாம்.." பேசிக்கொண்டே மீனாவை அணைத்தான் பிரபு. அவள் "ச்சீ" என்று சிணுங்கியவாறே அவன் தோள்களில் சாய்ந்தாள்.

கதையை இங்கே முடித்தால் அது குடும்பக்கதையாக தேவியிலோ, குடும்பமலரிலோ ஒன்றரை பக்கத்துக்கு வரக்கூடும்.

விளக்கை அணைத்துவிட்டு மீனாவை நெருங்கினான் பிரபு. பிறகு..

இதற்கு மேல் கதை வளர்த்துக் கொண்டு போனால் அது சரோஜா தேவி புத்தகத்திலோ, மஜா மல்லிகா கதையாகவோ மாறி விடக்கூடிய அபாயம் இருப்பதால்.. இத்தோடு கதைய முடிச்சுக்கிறேன் சாமியோவ்...

May 20, 2010

பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.. ரம்யாக்கா..!!!


பதிவுலகைப் பொறுத்தவரை, தன்னம்பிக்கை என்ற வார்த்தைக்கு அர்த்தம்.. ரம்யா அக்கா. அவருடைய தளத்தின் பெயரான "Will To Live" என்பதே அதற்கு சாட்சி. எத்தகைய இக்கட்டான சூழலில் இருந்தாலும் வாழ்க்கை வாழ்வதற்கே என்று சந்தோஷமாக சொல்லக்கூடிய தைரியமான மனுஷி. நட்பு என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை நான் ரம்யாக்கா, கலை அக்கா மற்றும் சித்தரின் நட்பு மூலமாக புரிந்து கொண்டேன் என்று கூட சொல்லலாம். அத்தனை நல்ல, அன்பான மனிதர்கள். எந்த விதமான எதிர்பார்ப்பும் இன்றி அன்பை மட்டும் தரக்கூடிய பிரியத்துக்குரிய ரம்யா அக்காவிற்கு இன்று பிறந்த நாள்.. என்னோடு இணைந்து நீங்களும் வாழ்த்துங்கள் நண்பர்களே..!!!

***************

நேற்று பிறந்தநாள் கொண்டாடிய சேட்டைக்கார நண்பர் தினசரி வாழ்க்கை "மேவிக்கும்" அன்பான வாழ்த்துகள்..!!!

May 18, 2010

அந்த அம்மா செஞ்சது சரியா..?!!

என்னுடைய வெகு நாள் ஆசை.. அதை ஒரு கனவு என்று கூட சொல்லலாம். ஆம் நண்பர்களே.. திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்தில் முனைவர் படிப்புக்கு விண்ணப்பம் அனுப்பி இருக்கிறேன். மாணவனாக மீண்டும் படிக்கப் போகிறோம் என்பதே மனதுக்கு சுகமாக இருக்கிறது. இந்த சந்தோஷமான தருணத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

***************

ரயில்வே காலனி. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் நான் குடியிருந்த இடம். சந்தோஷமாக இருக்கிறோமா? குழாயடியில்தான் டாப்பு. நண்பர்களும் சேர்ந்து கொண்டால் களை கட்டும். சோகமா? ரெண்டு நடை தெரு முக்கு வரை போய் வந்தால் மனம் அமைதியாகி விடும். மதுரையின் பரபரப்புகளுக்கு இடையே இன்னமும் இங்கேதான் கொஞ்சம் அமைதி ஒட்டிக் கொண்டிருக்கிறது. ஊருக்கு மத்தியில் இப்படி ஒரு இடம் இருக்கிறது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அவ்வளவு அருமையான ஏரியா.

வெகு நாட்களுக்குப் பிறகு நேற்று மாலை காலனியில் இருந்த பூங்காவில் உட்கார்ந்து நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். அப்போது ஐந்து வயதிருக்கக்கூடிய குழந்தை ஒன்று அதன் தாயோடு உள்ளே வந்தது. செம சேட்டை. அங்கே ஓட, இங்கே ஓட என்று ஒரே அலப்பறை. பேசிக் கொண்டிருந்தவர்கள் எல்லாரும் அந்தக் குழந்தையை ரசிக்கத் தொடங்கி விட்டோம். ஆனால் அந்த அம்மாவோ "ஒரு இடத்துல நிக்கிறியா.. சனியனே.." என பிள்ளையைத் திட்டிக் கொண்டே பின்னாடி ஓடிக் கொண்டிருந்தார். கடைசியாக பிள்ளை ஊஞ்சல் அருகே வந்து நின்றது. அதில் ஏறி விளையாட வேண்டும் என்று அதற்கு அத்தனை ஆசை. அதன் அம்மாவோ கூடாது என்று ரொம்ப கறாராக சொல்லிக் கொண்டிருந்தார். அப்படி இப்படி அம்மாவை ஐஸ் வைத்து ஊஞ்சலில் விளையாட ஆரம்பித்தது குழந்தை.

சந்தோஷமாக ஆடிக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக வேகம் கூட... திடீரென ஊஞ்சலில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டது குழந்தை. நல்ல வேளையாக மணலில் விழுந்ததால் அடி எதுவும் படவில்லை என்றாலும் அதிர்ச்சியில் அழத் தொடங்கி விட்டாள். அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அதன் அம்மா வேக வேகமாக குழந்தையை வந்து தூக்கி விட்டார். சரி அதை ஆறுதல் படுத்தப் போகிறார் என்று பார்த்தால்.. அடுத்து அவர் செய்ததுதான் அதிர்ச்சி. அவர் பாட்டுக்கு பிள்ளையை போட்டு அடி அடி என்று அடிக்க ஆரம்பித்து விட்டார்.

"மொதல்லேயே சொன்னேனே.. கேட்டியா கேட்டியா .." என்று குமுறி விட்டார். அருகில் இருந்த மக்கள்தான் பெரும் பிரயாசை செய்து குழந்தையை மீட்க வேண்டியதாகிப் போனது. குழந்தையின் முகம் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டது. கீழே விழுந்ததை விடத் தனது தாய் அப்படி நடந்து கொள்வார் என்று அது சற்றும் எதிர்பார்த்திருக்க வில்லை. மிட்டாய், விளையாட்டு என்று பல விஷயங்கள் செய்துதான் அதனை ஆசுவாசப்படுத்த முடிந்தது. குழந்தையை இத்தனை கடுமையாக கையாள வேண்டாம் என்று அதன் அம்மாவோடு மன்றாடி கேட்டுக் கொண்டு அனுப்பி வைத்தோம்.

"சுறுசுறுப்பா இருந்தாத் தானடா கொழந்த.. சூட்டிகையான புள்ள.. அதப் போட்டு இப்படி அடிச்சுட்டாங்களே.. பாவம்ல அந்தக் குழந்தை" என்று நண்பனிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அதற்கு அவன் "சும்மா புலம்பாதே.. அவங்க பிள்ளையோட நல்லது பத்தி அவங்களுக்கு அக்கறை இருக்கப்போய்தான அடிக்கிறாங்க.."என்றான். நான் அமைதியாகிப் போனேன். அப்படியானால் அந்தக் குழந்தையை அடித்ததை அவனால் யதார்த்தமாக எடுத்துக் கொள்ள முடிகிறது, அந்தப் பெண்மணி செய்ததை நியாயப்படுத்த முடிகிறது என்றுதானே அர்த்தம்?

எனக்கு எழுந்த கேள்விகள் இதுதான். மனரீதியாக இந்த விஷயம் அந்தக் குழந்தையை பாதிக்காதா? கீழே விழுந்து யாருடைய ஆதரவுக்காக நாம் ஏங்குகிறோமோ , அவர்களே நம்மைப் போட்டு அடித்தால்? தான் செய்யும் எந்த செயலும் நம் அம்மாவுக்குப் பிடிக்கிறதோ என்று குழந்தைக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை வந்து விட்டால்..? சரி தவறு என்பதை குழந்தைகளுக்கு புரிய வைக்கும் முறை என்பது இதுதானா? கண்டிப்பு வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் எப்படி கண்டிக்கிறோம் என்பது முக்கியம் இல்லையா? எனக்கு என்னமோ "நான் சொன்னதை மீறிப் போய் விளையாண்டாய் அல்லவா, இப்போது அவஸ்தைப்படு" என்று அந்த அம்மா சந்தோஷப்பட்டது போலத்தான் தோன்றியது. ஒரு வேளை நான் நினைப்பது தவறா? இது ஒரு சின்ன விஷயம். இதை இத்தனை பெரிதுபடுத்த வேண்டுமா என்று நீங்கள் கேட்கலாம். இது போன்ற சிறு விஷயங்கள் குழந்தையை ஒன்றும் செய்யவில்லை என்றால் சரி. ஆனால் ஒரு வேளை.. குழந்தை பாதிக்கப்பட்டால்? அதுதான் என்னுடைய கவலை.

அந்தப் பெண்மணி செய்தது சரியா? என்ன செய்திருக்க வேண்டும்? நீங்களே சொல்லுங்கள்..

(இந்த நிகழ்வு பற்றி கண்டிப்பாக எழுத வேண்டும் என்றென்னைத் தூண்டிய நண்பர் மேவிக்கு நன்றி..)

***************

கார்த்தி ஓவரா குடும்பம், குழந்தைன்னு எழுதுறானேன்னு பின்னூட்டம் போட வேண்டாம் என்று அண்ணன் அத்திரிக்கு அன்பான எச்சரிக்கைகள் விடப்படுகிறது.. :-))))

***************

சமீபத்தில் நான் வாசித்த நண்பர் எட்வினின் இடுகைக்கான சுட்டி இங்கே.. வாசித்துப் பாருங்கள்.. கோடை விடுமுறை மற்றும் மாணவர்கள் பற்றி மனிதர் அருமையாக எழுதி இருக்கிறார்..

May 15, 2010

கால் முளைக்கும் கதைகளும்.. புத்தகத்தின் ருசியும்..!!!

பிரியத்துக்குரிய எஸ்ரா எழுதிய கட்டுரை ஒன்றை சமீபமாக குமுதத்தில் வாசிக்க நேரிட்டது. ஏன் நமது பள்ளிகளில் கதை சொல்வதற்கான வகுப்போ, கதை சொல்லும் கோமாளியோ இருப்பதில்லை என்கிற கேள்வியை அந்தக் கட்டுரையின் வாயிலாக எழுப்புகிறார் எஸ்ரா. யோசித்துப் பாருங்கள்.. நம்முடைய குழந்தைகளுக்கு பள்ளியில் பாடங்கள் எல்லாவற்றையும் சொல்லித் தருகிறோம். விளையாட்டு, இசை, உடற்பயிற்சி என அத்தனைக்கும் நேரம் ஒதுக்கப்படுகிறது. ஆனால் அவர்களின் தானாக சிந்திக்கும் திறனை வளர்க்க நமது பள்ளிகள் என்ன செய்கின்றன?

இன்றைக்கு இருபது முப்பது வருடங்கள் முன்பு வரை நாம் எப்படி இருந்தோம்... இரவானால் கதை கேட்காமல் தூங்கியவர்களே இருக்க மாட்டார்கள். என்னுடைய பத்தாவது வயதில் நான் குடியிருந்த சுப்புரமணியபுரம் கல்லு சந்தில் வீரையன் தாத்தா என்றொருவர் இருந்தார். அவரை நாங்கள் கதை தாத்தா என்றுதான் அழைப்போம். இரவு ஏழு மணியானால் அனைவரும் அவர் வீட்டு திண்ணையில் கூடி விடுவோம். பத்து மணி வரை கதை ஓடும். மாயமந்திரங்கள், குட்டி தேவதைகள், ராஜா ராணி, திருடன் கதை.. அவருக்குத் தெரியாத கதைகளே கிடையாது. அவரால் எப்படி இத்தனை கதைகளை ஞாபகம் வைத்து சொல்ல முடிந்தது என்று யோசிக்கும்போது ஆச்சரியமாக இருக்கும். முதல் நாளிரவு கேட்ட கதை மறுநாள் பள்ளியில் வேறொரு வடிவத்தில் ஒளிபரப்பாகும். ஒவ்வொரு குழந்தையின் நெஞ்சின் உள்ளே சென்று வெளிவரும்போது ஒவ்வொரு புது வடிவம் கொண்டிருக்கும்.

சில தினங்களுக்கு முன்பு என்னுடைய நண்பரின் வீட்டுக்கு சென்றிருந்தேன். அவருடைய பிள்ளைக்கு இரண்டரை வயதுதான் ஆகிறது. சிறிது நேரம் அதோடு விளையாடிக் கொண்டிருந்தேன். "மாமாவுக்கு ஏதாவது கதை சொல்லுங்க பார்ப்போம்" என்றவுடன் அது ஒரு கதை சொல்லத் தொடங்கியது. மனைவியின் ஆசைக்காக தன் நண்பனான குரங்கை கொல்லத் துணியும் முட்டாள் முதலையின் கதை அது. ஆனால் குழந்தை அதை வேறு விதமாக சொன்னாள். எங்கெங்கோ பயணித்து கடைசியாக தப்பு செய்த முதலையைக் குரங்கு போட்டு அடி அடியென்று அடித்ததாக கதை முடிந்தது. இதை கேட்டுக் கொண்டிருந்த நண்பரின் மனைவி குழந்தையைத் திட்ட ஆரம்பித்து விட்டார். "எத்தனை தடவை சிடிய போட்டுக் காமிச்சு இருப்பேன், இப்படித் தப்பா சொல்றியே" என்று புலம்ப ஆரம்பித்து விட்டார். அவரைப் பார்க்க பாவமாக இருந்தது. "குழந்தையை குழந்தையாக இருக்க விடுங்கள்.. சொந்தமாக சிந்திக்க கற்றுக் கொடுங்கள்.. உண்மையில் தானாக யோசித்து அவள் இப்படி ஒரு கதை சொன்னாள் என்று நீங்கள் பெருமை கொள்ள வேண்டும்" என்றெல்லாம் பொறுமையாக எடுத்து சொன்ன பின்புதான் சமாதானம் ஆனார்.

கதைகள் வளர்ந்து கொண்டே போகக் கூடியவை. கண்ணுக்குத் தெரியாத இறக்கைகளைத் தனக்குள் கொண்டவை. அடைபடும் குடுவைக்குத் தகுந்தாற்போல தன்னை மாற்றிக் கொள்ளும் நீரைப்போல தான் போய்ச்சேரும் மனங்களின் எண்ணத்திற்கு ஏற்றார்போல கதைகள் உருமாற்றம் அடைகின்றன. கேட்கும் கதைகளை தங்களுக்குள் உருவகம் செய்து பார்க்கும்போது குழந்தைகள் தாங்களாகவே சிந்திக்கத் தொடங்குகிறார்கள். ஆனால் இன்றைக்கு.. கதை சொல்லவும் ஆள் இல்லை.. அதைக் கேட்பதற்கு குழந்தைகளுக்கு நேரமும் இல்லை.

சரி.. குழந்தைகளுக்கான வாசிப்பதற்கான புத்தகங்கள் என்று ஏதாவது இருக்கிறதென்றால் அதுவும் இல்லை என்பதுதான் வருத்தப்பட வேண்டிய உண்மை. தன்னுடைய குழந்தைகளுக்கு கதை சொல்லும் பெற்றோர் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று என்னால் அணுமானிக்க முடிவதில்லை. ஆசை ஆசையாக கம்ப்யூட்டர், விளையாட்டு சாமான்களை வாங்கித் தரும் பெற்றோர் எவரும் புத்தகங்கள் வாங்கித்தர தயாராக இருப்பதில்லை. தன்னுடைய பிள்ளைக்கு வாசிக்கும் பழக்கமே கிடையாது என்பதை பெருமையாக சொல்லும் பெற்றோர் சிலரை நான் சந்தித்து இருக்கிறேன். எங்கு போய் முட்டிக் கொள்வது?

90 - களின் இறுதி வரை குழந்தைகளுக்கான நிறைய புத்தகங்கள் வந்து கொண்டிருந்தன. குழந்தைகளுக்காக எழுதிய வாண்டுமாமா ஆசிரியராக இருந்த பூந்தளிர், பார்வதி சித்திரக் கதைகள், பாப்பா மலர், எக்கச்சக்கமான கதைகளைத் தாங்கி வந்த ரத்னபாலா, பாலமித்ரா மற்றும் விக்கிரமாதித்தனை பெரும்புகழ் கொள்ள செய்த அம்புலிமாமா கதைகள் என்று எத்தனையோ புத்தகங்கள் இருந்தன. யுவராஜா என்றவர் எழுதிய மாயாஜாலக் கதைகளை மட்டும் வெளியிட்டு வந்த கலைப்பொன்னி பதிப்பகம் இருந்த இடத்தில் இன்று ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் இருக்கிறது. ராணி காமிக்ஸ், முத்து மற்றும் லயன் காமிக்ஸ் எல்லாம் அவ்வளவு பரபரப்பாக இருந்த காலமெல்லாம் இன்று மலையேறி விட்டது. வாசிக்கும் பழக்கம் குறைந்து போனதால் இவை எல்லாம் காணாமல் போயினவா? எனக்கு சொல்லத் தெரிவில்லை.

இலக்கியத்தில் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே குழந்தைகளுக்கான புத்தகங்கள் காணக் கிடைக்கின்றன. அப்படி எழுதப்படும் புத்தகங்களும் குழந்தைகளின் உலகத்தின் வாயிலாக பெரியவர்களுக்காக எழுதப்பட்ட கதைகளாகவே இருக்கின்றன என்பது நிதர்சனம். அவற்றைப் புரிந்து கொள்வதென்பது குழந்தைகளுக்கு கடினமானதாகவே இருந்து வருகிறது. வெகு சில புத்தகங்களே குழந்தைகளின் உள்ளத்துக்கு நெருக்கமானதாக இருக்கின்றன. இந்த நிலை மாற வேண்டும். நிறைய குழந்தைகளுக்கான புத்தகங்கள் வர வேண்டும். வாய்வழியாக சொல்லப்படும் கதைகள் ஊரெங்கும் பரவிக் கிடக்கின்றன. இதுவரை அம்மாதிரியான கதைகளை யாரேனும் தொகுத்து இருக்கிறார்களா என்று தெரியவில்லை. அப்படி இல்லையெனில் அதை உடனே செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை கற்றுத் தர வேண்டும். கதைகள் மற்றும் புத்தகங்களின் ருசி அறிந்து கொண்டாலே போதும்.. குழந்தைகள் அவற்றை நன்றாகப் பற்றிக்கொண்டு விடுவார்கள்.

இவை எல்லாம் குழந்தைகளை இயல்பாக, சந்தோஷமாக வைக்ககூடிய விஷயங்கள் என்பதை பெற்றோரும் உணர வேண்டும். பள்ளிகளில் கூட.. எஸ்ரா சொன்னது போல, கதை சொல்ல ஒரு நேரத்தை ஒதுக்கலாம். குழந்தைகளை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கக்கூடிய கோமாளிகளும் இருக்க வேண்டும். வாசிக்கும் பழக்கம் வளர வேண்டும். இல்லையெனில் நாளைய சமுதாயம் என்பது சாவி கொடுத்தால் இயங்கும் ஒரு இயந்திர பொம்மையாக, தானாக சிந்திக்க இயலாத ஒரு ஆட்டுமந்தைக் கூட்டமாக மாறிப் போகும் சாத்தியம் நிரம்பவே இருக்கிறது. அவ்வாறு நடக்காது என நம்புவோம்...!!!

May 12, 2010

கல்வி - வியாபாரம் - பாடாய்ப்படும் பிள்ளைகள்..!!!

என்னுடைய நெருங்கிய நண்பரவர். மதுரையில் இருக்கும் மற்றுமொரு பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிபவர். நேற்று மதியம் போல எனக்கு போன் செய்திருந்தார்.

"சொல்லுங்க நண்பா.. வணக்கம்.. எப்படி இருக்கீங்க..?"

"கார்த்தி.. கார்த்தி.."

அவர் குரலில் மிகுந்த பதட்டமும் கோபமும் இருந்தது நன்றாகத் தெரிந்தது. எனக்கு பயமாகிப் போனது.

"என்னாச்சு நண்பா.. ஏதும் பிரச்சினையா? நான் கிளம்பி வரட்டா? எங்க இருக்கீங்க?"

"அதெல்லாம் ஒண்ணும் வர வேண்டாம் கார்த்தி.. என்னோட குழந்தைய ஸ்கூல்ல சேக்குறதுக்காக வந்து இருந்தேன்.. இப்போ அந்த ஸ்கூல் வாசல்ல இருந்துதான் உங்ககிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்.."

"என்ன நண்பா.. பிள்ளைக்கு ஏதாவது முடியலையா.."

"அவ நல்லாத்தான் இருக்கா.. இங்க ஒரு விஷயத்தப் பார்த்து எனக்குத்தான் மனசு பொறுக்கல.. வலிக்குதுப்பா.."

"என்னம்மா.. என்ன நடந்தது பொறுமையாக சொல்லுங்க.."

தன்னைத் தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டு சொல்ல ஆரம்பித்தார்.

"இது என்னோட வீட்டுக்குப் பக்கத்துல இருக்குற ஸ்கூல்தான் தலைவரே.. கொஞ்ச நாள் முன்னாடிதான் ஆரம்பிச்சாங்க.. ரொம்பப் பெரிய பள்ளிக்கூடம்னு எல்லாம் சொல்ல முடியாது.. கேள்விப்பட்ட வரைக்கும் கோச்சிங் நல்லாயிருக்குன்னு சொன்னங்க.. இந்த வருஷம் பிள்ளைய இங்க பர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் சேர்க்கலாம்னு வந்தேன்.. ஆனா வந்த இடத்துல மண்ட காஞ்சு போச்சுப்பா.."

"..?"

"மொதல்ல பிள்ளைக்கு இன்டர்வியூ வைக்கணும்னு சொன்னங்க.. சரி.. ஏதோ ,பி,சி,டி சொல்ல சொல்லுவாங்கன்னு பார்த்தா அஞ்சு டெஸ்ட் வச்சாங்க.. ஐநூறு மார்க்குக்கு.. தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், அப்புறம் இன்னொண்ணு எதுவோ.. அஞ்சு வயசு பிள்ளைப்பா.. அதுக்கிட்ட போய்? இவங்க எல்லாம் மனுஷங்களா?"

"ஓஓ.. பாப்பா பரிட்சையில ஏதும் சரியா பண்ணலையா நண்பா?"

"கருமம்.. அவ அப்படி பெயிலா போகிருந்தா கூட சந்தோஷப்பட்டிருப்பேனே.."

"பாப்பாதான் பாஸ் ஆகிட்டாளே.. அப்புறம் என்னண்ணே?"

"இப்போ பிரச்சினை அவ இல்லப்பா.. எம்பொண்ணு கூடவே பரிட்சை எழுதுன இன்னொரு பையன்.. பெயிலாகிட்டான்.. பச்ச மண்ணு.. அவங்க அப்பா அந்த இடத்துலயே அவனப் போட்டு அடி அடின்னு அடிச்சு.. தாங்க முடியலப்பா.. தடுக்கப் போன என்ன அவங்கப்பா ஒரே வார்த்தைல ஒதுக்கிட்டாரு.. சார் உங்க பிள்ள பாஸ் ஆகிட்டால்ல.. நான் என்ன பண்ணினா உங்களுக்கு என்னன்னு.. செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது.. அந்தப் பையன் அழுது அழுது ஓஞ்சு போய் ஓரமா உட்கார்ந்துட்டான்.. மழைல நனைஞ்ச கோழிக்குஞ்சு மாதிரி.. இன்னமும் அப்படியே கண்ணுக்குள்ள நிக்கிறான்ப்பா.. அவங்கப்பா ஆட்டோ டிரைவராம்.. நாமதான் படிக்கலை நம்ம பிள்ளையாவது படிக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டு அது நடக்கலைன்னு தெரிஞ்சதும் பிள்ளையப் போட்டு அடிச்சுட்டு.. அப்புறம் அந்த ஆளும் அழுதுக்கிட்டே போனாரு.. மனுஷன் கெஞ்சுறாரு.. ஸ்கூல்காரங்ககிட்ட.. எவனும் கண்டுக்க கூட இல்ல.."

"வருத்தம்தாண்ணே.."

"சரியாப் படிக்காத பிள்ளைய எடுத்துக்க மாட்டாங்களாம்.. ஏன்டா.. அப்புறம் என்ன ம**த்துக்குடா பள்ளிக்கூடம்? நல்லா படிக்கிறவங்க மட்டும்தான் ஸ்கூலுக்கு எடுப்போம்னா, சொல்லி கொடுக்க நீ எதுக்கு? அவனே படிச்சுப்பானே.. அப்போ பரவாயில்லாம படிக்கிற பசங்க எல்லாம் தெருவுலதான் நிக்கணுமா? என்னடா சொல்ல வர்றீங்க?"

அத்தனையும் நிதர்சனம். என்ன சொல்வதெனத் தெரியாமல் அமைதியாக இருந்தேன்.

"இன்னொண்ணையும் கேளு.. டெஸ்ட்ல பாஸ் பண்ணினா அடுத்து பெத்தவங்கள கூப்பிட்டு விசாரிக்கிறாங்க.. நீங்க படிச்சு இருக்கீங்களா? வீட்டுல உங்க பிள்ளைக்கு பாடம் சொல்லித் தரமுடியுமா? ஏன்டா வெண்ணைகளா.. நாங்களே எல்லாம் சொல்லித் தரணும்னா அப்புறம் நீங்க எதுக்குடா இருக்கீங்க..? என்னையும் கூப்பிட்டு இப்படித்தான் கேட்டாங்க.. நம்ம பிள்ளைய கூட்டிட்டு வந்திருக்கோம்.. அது ஏற்கனவே அந்தப் பையன் அடி வாங்குனதப் பார்த்து பயந்து போய் கிடக்கு.. மேல பிரச்சினை பண்ணக் கூடாதுன்னு அமைதியா கேட்டுக்கிட்டு இருக்கேன்.. எல்லாத்தையும் விட பெரிய கொடுமை அதுக்கு அப்புறம் தான் நடந்தது.."

"என்னண்ணே ஆச்சு..?"

"ஸ்கூல் ஹெட்மாஸ்டர்.. கூப்பிட்டு பேசினாங்க.. உங்க பொண்ணு ரொம்ப நல்லா மார்க் வாங்கி இருக்கு.. அறிவியல்ல எம்பது.. கணக்குல தொண்ணூறு.. இங்கிலீஷ்ல அறுபத்து அஞ்சு.. தமிழ்லதான் முப்பத்து அஞ்சு.. அது ஒண்ணும் பிரச்சினை இல்ல.. பார்த்துக்கலாம்னு.. அடப்பாவிகளா.. தாய்மொழில பிள்ளைக்கு மார்க் கொறஞ்சு இருக்கு.. அத சரி பண்ணனும்னு சொன்னா அது ஒரு நியாயம்.. ஆனா அத ஒரு விஷயமாவே மதிக்காம இருந்தா..? என்ன லட்சணத்துல இருக்குதுன்னு பாரு.."

"இன்னைக்கு எல்லாமே அப்படித்தானே அண்ணே இருக்கு.. யாரு தமிழா மதிச்சு படிக்கிறா சொல்லுங்க.. நாம மட்டும் தனியா கத்திக்கிட்டு இருந்தோம்னு வைங்க.. நீங்களும் நானும் மட்டும் அப்புறம் லூசுன்னு ஆகிடுவோம்.."

"எனக்கு ஒண்ணுமே புரியலைப்பா.. ஏன் இப்படி? எல்லாத்தையும் சொல்லிட்டு கடைசியா அந்தம்மா ஒரு வார்த்தை சொல்லுச்சு.. இந்த ஏரியாவுலேயே நாங்கதான் கம்மியா பீஸ் வாங்குறோம்னு.. எனக்கு மயக்கமே வந்துருச்சு.. கொள்ளைக்கு இப்படி ஒரு பேரா.. பேப்பர்ல ஜோக்ஸ் படிக்கும்போது .. மத்தவங்க சொல்றபோதெல்லாம்.. எல்லாரும் மிகைப்படுத்தி சொல்றாங்கன்னு நினைப்பேன்.. ஆனா இன்னைக்கு அது எனக்கே நடந்து இருக்கு தலைவரே... நான் என்னோட மொத்த படிப்புக்கும் செலவு பண்ணினத பிள்ளையோட ஒரு டெர்ம் பீசா கட்ட சொல்றாங்க.. நான் பரவாயில்ல.. கொஞ்சம் பணம் வச்சிருக்கேன்.. அது இல்லாதவனோட கதி? இனிமேல் படிப்புங்கிறது காசு இருக்கிறவனுக்கு மட்டும்தானா ? நடுத்தர மக்கள், ஏழைங்க எல்லாம் என்ன பண்ணுவாங்க?"

""கஷ்டம்தாண்ணே.. ஆனா நாம என்ன பண்ண முடியும்?"

"இப்படியே எல்லாரும் சொல்லிக்கிட்டு இருந்தா எப்படி தலைவரே? அந்த சின்னப் பையன மாதிரி இந்த ஊரு பூரா அத்தனை பேரு இருப்பாங்க? அந்த ஆட்டோ டிரைவர் மாதிரி எத்தனை பெற்றோரோட கனவுகளோட இவங்க விளையாண்டுக்கிட்டு இருக்காங்க..? இந்தக் கல்வித்திட்டம் மாறணும்.. பள்ளிகள் ஒழுங்கு படுத்தப்பட்டு நியாயமான கட்டணம் வசூலிக்கப்படனும்.. இதுக்கெல்லாம் அந்நியனும் ஜென்டில்மேனும் வர மாட்டாங்க தலைவரே.. இப்போ என்னோட வேதனைய நான் உங்ககிட்ட பகிர்ந்துக்கிட்டேன் இல்ல? இதை உங்க பதிவுல எழுதுங்க.. அதை படிக்கிறவங்கள இதைப் பத்தி எழுதச் சொல்லுங்க.. உங்க பதிவர்கள் அத்தனை பேரையும் எழுதச் சொல்லுங்க.. இதனால் என்ன மாறும்னு எனக்குத் தெரியாது.. ஆனா இந்த மாதிரியான அநியாங்கள் நடக்குதுன்னு மக்களுக்குத் தெரியவாவது வேணுமா இல்லையா?"

"கண்டிப்பா எழுதுறேன் நண்பா.. நீங்க ரிலாக்ஸ் ஆகுங்க.. பாப்பா?"

"இந்தா கிட்டத்துலதான் நிக்குறா.. அவள இந்த ஸ்கூல்ல சேர்த்தா என்னோட நிம்மதி போயிடும்.. அதனால வேற நல்ல ஸ்கூலா.. மக்களை மதிக்கக் கூடியவங்களா.. பார்க்கணும்.."

"சரி நண்பா.. பார்த்து பத்திரமா வீட்டுக்குப் போங்க.. "

"ரைட்டு தலைவரே.. மறந்துடாதீங்க.. கண்டிப்பா எழுதுறீங்க.."

இதோ.. எழுதி விட்டேன். அவரைப் போன்ற உள்ளக்குமுறல்கள் நம்மில் நிறைய பேருக்கு இருக்கும். ஏதோ ஒரு விடிவு பிறக்கும் என்னும் நம்பிக்கையோடு.. பிறக்க வேண்டும் என்ற ஆசையோடு.. முடிந்தால் நீங்களும் எழுதுங்கள் நண்பர்களே..!!!

May 8, 2010

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் - திரைப்பார்வை..!!!

காமிக்ஸ் புத்தகங்களின் மூலமாகத்தான் எனக்கு கௌபாய்களின் உலகம் அறிமுகமானது. டெக்ஸ் வில்லர், கிட் கார்சன், டைகர், சிஸ்கோ கிட்... எத்தனை எத்தனை சாகச நாயகர்கள்? பின்பு அறுபதுகளில் வந்த ஹாலிவுட் கௌபாய் படங்களைப் பார்த்தபோது அவர்களின் மேதான காதல் இன்னும் அதிகமாகியது. அனல் கக்கும் துப்பாக்கிகள், பறக்கும் குதிரைகள், தொப்பி மற்றும் நீண்ட காலணிகள் என அவர்களுக்கான ஒரு உடை, பறந்து விரிந்த பாலைவனங்கள், போர்வெறி கொண்ட செவ்விந்தியர்கள் என கௌபாய் கதைகள் தரும் அனுபவமே அலாதியானது. ஸ்பெயின், வட அமெரிக்கா என்று பல்வேறு இடங்களில் வாழ்ந்த கௌபாய்கள் போல தமிழ்நாட்டிலும் கௌபாய்கள் இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்ததன் விளைவுதான் "இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்". இம்சை அரசன், அறை எண் கடவுள் என்று பட்டையைக் கிளப்பிய சிம்புதேவனின் மூன்றாவது படம். கல்பாத்தி.எஸ்.அகோரம் தயாரித்து இருக்கிறார்.


இரும்புக்கோட்டையை ஆளும் வில்லன் கிழக்குகட்டை (நாசர்). அருகில் இருக்கும் ஊர்களை எல்லாம் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார். அவரை எதிர்த்து போராடும் மக்கள் தலைவன் சிங்கம் (லாரன்ஸ்). திடீரென சிங்கம் ஒரு நாள் காணாமல் போக, அவரைப் போலவே இருக்கும் சிங்காரத்தை மக்களுக்காக சிங்கமாக நடிக்க வைக்கிறார்கள். மக்களுக்கு எதிரிகளாக இருக்கும் செவ்விந்தியர்களையும் தன் சாமர்த்தியத்தால் நண்பர்களாக்கி கொள்கிறான் டூப்ளிகேட் சிங்கம். அவர்களின் துணையோடு வில்லனை எதிர்த்துப் போராடுகிறான். நடுவில் சில காதல்கள். சில மோதல்கள். புதையல் தேடி ஒரு பயணம். கடைசியில் மக்கள் சக்தி ஜெயித்ததா? உண்மையான சிங்கம் என்ன ஆனான்? கோழையான சிங்காரம் தன்னைத் தானே உணர்ந்தானா? இதுதான் படத்தின் கதை.

வழக்கம் போல லாரன்ஸ் ரஜினியின் மேனரிசங்களோடு வருகிறார். அது போதாதென்று இந்தப் படத்தில் கூடுதலாக "ஷாங்காய் நூன்" ஜாக்கிசானையும் காப்பி அடித்திருக்கிறார். படத்தில் எதற்கெனத் தெரியாமலே மூன்று நாயகிகள். கிராமத்து டாக்டராக பத்மப்பிரியா, செவ்விந்திய இளவரசியாக சந்தியா, வில்லனின் கையாளாக லட்சுமிராய். ஓரளவுக்காவது தேறுகிறார் என்றால் அது லட்சுமிராய்தான். சொல்லி வைத்தது போல மூன்று பேருக்குமே லாரன்சை பார்த்ததுமே காதல் வருகிறது. அட போங்கப்பா..


ஒற்றைக்கண் வில்லனாக நாசரும், அவருடைய அல்லக்கை "உலக்கை"யாக சாய்குமாரும் நடித்திருக்கிறார்கள். இரண்டு பேரின் வசன உச்சரிப்புமே எரிச்சல். படத்தில் தூள் கிளப்பி இருப்பவர்கள் செவ்விந்தியத் தலைவனாக வரும் எம்.எஸ்.பாஸ்கரும், அவருடைய மொழிபெயர்ப்பாளராக வரும் சாம்சும்தான். பட்டாசு காமெடியால் மனதை அள்ளிக் கொள்ளுகிறார்கள். மனோரமா, வி.எல்.ராகவன், மவுலி, இளவரசு, வையாபுரி, ரமேஷ் கண்ணா, செந்தில் என்று ஒரு பெரிய பட்டாளமே படத்தில் இருக்கிறார்கள்.

பதினெட்டாம் நூற்றாண்டில் நடக்கும் கதையை நம் கண் முன்னே தத்ரூபமாக கொண்டு வந்திருப்பதில் மூன்று பேருக்கு பெரும்பங்கு உண்டு. ஒளிப்பதிவாளர் அழகப்பன், உடைகள் வடிவமைத்து இருக்கும் சாய் மற்றும் அருமையான கலை இயக்கத்தின் மூலம் நம்மை வேறொரு உலகத்துக்கு அழைத்து சென்றிருக்கும் முத்துராஜ்தான் அந்த மூன்று பேர். ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறார்கள். நிகழ்காலத்தின் சாயல் எங்கும் தென்படாத இடங்களைத் தேர்வு செய்வதற்குள்ளேயே மக்களுக்கு மண்டை காய்ந்து இருக்கும். அதையும் மீறி லோகேஷன்களையும் அருமையாகத் தெரிவு செய்திருக்கிறார்கள். படத்தின் பெரிய மைனஸ் ஜி.வி.பிரகாஷின் இசை. எந்தப் பாட்டுமே தேறவில்லை. அதை விடக் கொடுமை.. பின்னணி இசையில் மேக்கேனாஸ் கோல்டில் ஆரம்பித்து சமீபத்திய பைரேட்ஸ் ஆப் த கரீபியன் வரை காப்பி அடித்திருக்கிறார். அவ்வவ்.. என்ன கொடுமை சார் இது?



இரும்புக்கோட்டை என்ற பெயர் கொண்ட "USA புரம்" மக்களோடு போடும் அணுசக்தி ஒப்பந்தம்.. கைதட்டணும்னா கூட எனக்கு தெரியாம தட்டக் கூடாது என்ற ஷரத்து.. தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை புரட்சி.. தமிழனுக்கு ஒரு பிரச்சனைனா தமிழனே உதவ மாட்டான்.. உடன்குடி மக்கள் செத்துக் கொண்டிருக்கும்போது டீக்கடையில் உட்கார்ந்து அரசியல் பேசிக் கொண்டிருப்பது.. மக்கள் வலிமையோடும் நம்பிக்கையோடும் போராட தலைவன் இறந்ததை மறைத்து விடுங்கள் என்பது என.. நிறைய இடங்களில் அரசியலை தொட்டுச் செல்கிறார் சிம்பு.

ஊருக்குப் பெயர் ஜெயஷங்கர்புரம் மற்றும் ஷோலேபுரம், வில்லனுக்குப் பெயர் கிழக்குகட்டை (EASTWOOD), இரும்புக்கோட்டையில் இருக்கும் அசோகனின் சிலை, தொப்பி வைத்தபடி பூஜை செய்யும் அர்ச்சகர், குடி குடியை ரேப் செய்யும் என்னும் அடைமொழியோடு இருக்கும் பாஸ்மார்க், இங்கே குரல்வளை நெறிக்கப்படும் என்ற பெயர்ப்பலகையோடு இருக்கும் தூக்குமேடைகள், நிழலை விட வேகமாக சுடும் மற்றும் காலில் விழும் நாயகன், செவ்விந்திய மொழியில் ஒலிக்கும் வாராயோ தோழி பாட்டு என நிறைய சின்ன சின்ன விஷயங்களைப் பார்த்து பார்த்து செய்திருக்கிறார் இயக்குனர். வசனங்கள் பல இடங்களில் குபீர் சிரிப்பு. ஆனால் அத்தனையும் மீறி ஏதோ ஒன்று குறைகிறது என்றால்.. அது வேகம். திரைக்கதையில் நிறையவே தடுமாறி இருக்கிறார் சிம்பு. முதல் பாதி நத்தை வேகத்தில் போகிறது. இரண்டாம் பாதியிலும் புதையல் தேடித் போகும் அரை மணி நேரம் மட்டும்தான் கலக்கல். இடைவேளையில் "இனி டிரவுசர் கிழியும்" என்று போட்டபோது அருகிலிருந்த ரசிகர் ஒருவர் "இதுக்கு மேலயா" என்று நொந்து கத்தும் அளவுக்கு நிலைமை மோசம். தனித்தனி காட்சியாக பார்க்கும்போது வரும் சிரிப்பு மொத்தப் படமாக பார்க்கும்போது வருவதில்லை என்பது மிகப்பெரிய குறை.

தமிழில் இதுபோல ஒரு முழுநீள கௌபாய் படம் வந்ததில்லை என்ற வகையில் இது ஒரு நல்ல முயற்சி. (தயவு செய்து கர்ணன் படங்களை எல்லாம் கௌபாய் கணக்கில் சேர்க்க வேண்டாமே பிளீஸ்..) எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போனால் ஒரு முறை பார்த்து விட்டு வரலாம்.

நிதானமான சிங்கம்

May 6, 2010

இரவில் உலாவும் கழுகுகள் (200வது இடுகை)..!!!

கோயம்பேடு பேருந்து நிலையம். இரவு பத்து மணி. எறும்புக்கூட்டம் போல மனிதர்கள் அங்கும் இங்கும் சுறுசுறுப்பாக ஓடிக் கொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் ஏதோ ஒரு வேலை. பயணம் செய்வதற்கான ஏதோ ஒரு காரணம்.

அம்மா ஒருத்தி "சனியனே, தின்னு தொலை" என்று தன் குழந்தைக்கு பாசமாக உணவு ஊட்டிக் கொண்டிருந்தாள். அதீத மேக்கப்புடன் சுற்றிக் கொண்டிருந்த பெண்கள் தங்களுக்கான வாடிக்கையாளரைத் தேடிக் கொண்டிருந்தார்கள். "எந்த ஊர் சார்.. சொல்லு சார்.." என்று குலையாத நம்பிக்கையோடு ஒவ்வொருவரின் பின்னாடியும் ஓடிக் கொண்டிருந்த பஸ் புரோக்கர்கள்.

எதையும் லட்சியம் செய்யாதவனாக அவன் ஓரமாக நின்று பாஸ்ட் புட் கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். வயது முப்பது - நாற்பது வரை இருக்கலாம். அவன்.. அல்லது அவர்?.. சரி, அவன் என்றே வைத்துக் கொள்வோம். மாநிறம். கொஞ்சம் குள்ளம். ஒல்லியாக இருந்தான்.தரையில் இருந்த கைப்பை அவன் ஏதோ ஒரு பாடாவதி கம்பெனியின் ரெப் என்பதை சொல்லாமல் சொல்லியது. ஒரே ஒரு ராத்திரி நம்மோடு பயணம் செய்யப் போகிறவனைப் பற்றி... இந்த விபரங்கள் போதும்.

அவன் முன்பே பதிவு செய்திருந்த சேலம் போகும் பஸ் வந்து நின்றது. ஏறினான். தன்னுடைய இருக்கை எண்ணைத் தேடி ஜன்னல் ஓரமாக அமர்ந்தான். மென்மையான காற்று முகத்தை வருடியது. மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக பஸ்ஸில் ஏறத் தொடங்கி இருந்தார்கள். இன்னும் எத்தனை நேரம் ஆகுமோ என்ற மெல்லிய சலிப்போடு அவன் தலையைத் திருப்பியபோது.. அவளைப் பார்த்தான்.

தேவதை என்றொரு ஒற்றை வார்த்தைக்குள் அவளை அடைக்க முடியாது. அதையும் மீறிய அழகு.. (ச்சே.. இதற்கு மேல் வர்ணிக்க ஆரம்பித்தல் உடனே கார்த்திக்கு கல்யாணாம் பண்ணி வையுங்கள் என்று ஒரு கூட்டமே கிளம்பி வந்து ஓட்டும் அபாயம் இருப்பதால்.. இத்தோடு நிப்பாட்டிக்குவோம்) சோ.. அவள் ரொம்ப அழகாக இருந்தாள். கூடவே ஒரு குட்டி தேவதை. மகள்? கழுத்தில் இருந்த தாலி அதை உறுதி செய்தது. பெரியதொரு டிராவல் பேகை தூக்க முடியாமல் இழுத்து வந்து அவனுக்கு முன் இருக்கையில் வைத்தாள். அவன் வைத்த கண் வாங்காமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"கொஞ்சம் எந்திரிக்கிறீங்களா? அது என்னோட சீட்.."

சட்டெனக் கேட்ட குரல் அவனை மீண்டும் நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தது. திரும்பிப் பார்த்தால்.. திடகாத்திரமாக ஒரு மனிதன். யார் இந்த பூஜை வேளைக் கரடி? அவள் கணவனாகஇருப்பானோ?

"சார்?.."

"நீங்க உட்கார்ந்து இருக்குற ஜன்னல் சீட் என்னோட நம்பர் சார்.."

"சாரி.."

நகர்ந்து அமர்ந்தான். மற்றவன் உள்ளே சென்று சீட்டில் சாவகாசமாக சாய்ந்து கொண்டான். முன்சீட் தேவதை இன்னமும் அந்தப் பையைத் தூக்கி மேலே வைக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள்.

"எக்ஸ்க்யூஸ் மீ.. நான் ஹெல்ப் பண்றேன்.."

எழுந்து பையை சிரமப்பட்டு உள்ளே சொருகினான். அவள் பார்வையினால் நன்றி சொன்னாள். சந்தோஷமாக தன் இருக்கைக்கு மீண்டும் திரும்பியபோதுதான் கவனித்தான். பக்கத்து சீட்டில் இருந்த மற்றவன் அவனையே முறைத்துக் கொண்டிருந்தான். இவன் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டான். சற்று நேரத்தில் பஸ்கிளம்பியது.

எப்போது தூங்கிப் போனான் என்று தெரியவில்லை. சட்டென்று முழிப்பு வந்தது. ரேடியம் வாட்சின் முட்கள் மணி இரண்டு என்றன.

"போச்சுடா.. இனிமேல் தூக்கம் அவ்வளவுதான்" என்று மனசுக்குள் சொல்லியவனாக சுற்றும் முற்றும் பார்த்தான். எல்லாரும் எட்டாம் ஜாமத்தில் இருந்தார்கள். அவனருகே இருந்த கரடியும் நன்றாக அசந்து தூங்கிக் கொண்டிருந்தது. என்ன செய்வதெனத் தெரியாமல் கைகளை நீட்டி சோம்பல் முறித்தான்.

உடம்பை முறுக்கியபோது அவனுக்கேத் தெரியாமல் கால்கள் முன் இருக்கைக்குக் கீழே போயின. மெத்தென எதன் மீதோ இடித்த மாதிரி இருந்தது. சடாரென்று கால்களை உள் இழுத்துக் கொண்டான். அந்த தேவதையின் கால்களோ? அவனுக்கு உடம்பு சிலிர்த்தது. லேசாக சூடாவது போல இருந்தது.

யாரும் தன்னை கவனிக்க வில்லையே என்பதை உறுதி செய்து கொள்வது போல சுற்றிப் பார்த்தான். மெதுவாக, அறியாமல் கால்களை விடுகிறவன் போல முன்னே நீட்டினான். சற்று நேரத்தில் அவனால் ஸ்பரிசத்தை உணர முடிந்தது. மெல்லிய சதைப்பகுதியின் மீது அவன் கால்கள் உரசிக் கொண்டிருந்தன.

அவள் பாட்டுக்கு எழுந்து குய்யோ முய்யோ என்று கத்தி விட்டால்? அவனுக்கு பயமாக இருந்தது. இருந்தும் கால்களை எடுக்க மனம் வரவில்லை. மெதுவாக கால்களைக் கொண்டு உரசத் தொடங்கினான்.

அவன் பயந்தாற்போல அவள் எந்தக் கூப்பாடும் போடவில்லை. அசந்து தூங்குகிறாளோ? இல்லை அவளுக்கும் இது பிடித்து இருக்கிறதோ? கேள்விகள் அவனுக்குள் சுழன்று அடித்தன. தைரியம் பெற்றவனாக அந்த உடலின் மீது தன் கால்களைப் படர விட்டான். போதை.. மயக்கம்..

அவனுக்கு அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. தெரியாமல் தவற விடுவதைப் போல தன்னுடைய வாட்சை தவற விட்டான். வெளியே குனிந்து அதை எடுக்க முயல்பவன் போல முன்னாடி இருக்கையை பார்த்தபோது.. அவனுக்கு சுரீர் என்று மின்னல் தாக்கியது.

அந்தப் பெண் தன்னுடைய இரு கால்களையும் நன்றாக மடக்கி வைத்து இருக்கைகளுக்குள் அடங்கியவளாக அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அப்படியானால் கீழே இருந்தது?

மெதுவாகக் குனிந்து பார்த்தான். இத்தனை நேரம் எந்த எதிர்ப்பும் வராததன் அர்த்தம் புரிந்து போனது. அங்கே அந்தப் பெண் குழந்தை படுத்துக் கிடந்தது. அவனுக்கு குப்பென்று வேர்த்து விட்டது. இத்தனை நேரம் அந்தப் பத்து வயது பெண் குழந்தையிடம் தான்..? அவன் முகம் இருண்டு போனது. கண்களை மூடியவனாக படுத்துக் கொண்டான்.

பதினைந்து நிமிடங்கள் போயிருக்கும். கண்களை மெதுவாகத் திறந்து பார்த்தான். எதுவும் தெரியாமல் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். உடம்பு இன்னும் தணலாக தகித்துக் கொண்டிருந்தது. ஒரு தீர்மானத்துக்கு வந்தவனாக, மெதுவாக.. தன் கால்களை முன் இருக்கைக்குள் நுழைத்தான்.

பஸ் சேலம் பேருந்து நிலையத்துக்கும் நுழைந்த போது விடிந்து இருந்தது.

"விலகிக்கிறீங்களா.. நான் எறங்கணும்.."

பக்கத்து இருக்கை கரடியின் குரல் கேட்டு கண் முழித்தான். விலகினான். அந்த ஆள் பின் கதவு வழியாக இறங்கிப் போனான். முன் சீட் பெண் மேலே இருந்த தன்னுடைய பையோடு போராடிக் கொண்டிருந்தாள். அப்படி ஆனால்.. அவன் இவளுடைய கணவன் இல்லையா?

"இருங்க, நான் எடுத்து தரேன்.."

அந்த டிராவல் பேகையும் தன்னுடைய பையையும் எடுத்துக் கொண்டு பஸ்ஸை விட்டு இறங்கினான். குழந்தையை கூட்டிக் கொண்டு அந்தப் பெண்ணும் இறங்கினாள்.

"புஜ்ஜிமா.. அங்கிளுக்கு தாங்க்ஸ் சொல்லு.."

"தாங்கயூ அங்கிள்.." அந்தக் குழந்தை வெள்ளந்தியாக சிரித்தப்படி சொன்னது.

"ஒரு நிமிஷம்.. இந்தப் பையைப் பிடிங்க.."

அவளிடம் பையைக் கொடுத்து விட்டு ஓடினான். அருகில் இருந்த கடையில் இருந்து இரண்டு சாக்லேட்டுகளை வாங்கிக் கொண்டு திரும்பி வந்தான். குழந்தையிடம் நீட்டினான். அது தன் அம்மாவின் முகத்தை பார்த்தது.

"பரவாயில்ல.. வாங்கிக்கோ.."

அது சந்தோஷமாக வாங்கிக் கொண்டது. குனிந்து குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டான்.

"நான் வர்றேங்க.."

திரும்பி நடக்கத் தொடங்கினான்.