July 29, 2013

பட்டத்து யானை




பட்டத்து யானை – போலச் செய்தலின் துயரம்”னு தான் ஆரம்பிக்கலாம்னு இருந்தேன். ஆனா சாரி, இந்தப்படம் அதுக்கெல்லாம் வொர்த் இல்லை. கொஞ்ச நாள் முன்னாடி – வேட்டைக்காரன் வெளியான சமயம் – ஆனந்த விகடன்ல விஜய் ரசிகர்கள் கடிதம் எழுதின மாதிரி ஒரு மேட்டர் பண்ணியிருந்தாங்க. போஸ்டர்ல இருக்க கதாநாயகியோட முகமும், பாட்டும் வேற வேறயா இருக்குறத வச்சுத்தான் தலைவா உங்க படங்களுக்கு நடுவுல இருக்க வித்தியாசங்களைக் கண்டுபிடிக்க முடியுதுன்னு எழுதி இருப்பாங்க. அது விஷாலோட பட்டத்து யானைக்கும் பொருந்தும். நாம நடிச்ச படத்தோட கதைலயே மறுபடியும் நடிக்கிறோமேன்னு சின்ன குற்றவுணர்ச்சி கூட இவங்களுக்கு எல்லாம் வராதா?


அந்நியன் – கந்தசாமி


மலைக்கோட்டை – பட்டத்து யானை


விக்ரம் – விஷால் – விளங்கிரும் (இதுல இன்னொரு வி-யும் வரும்.... அதான் ஊருக்கே தெரியுமே)


வெடி, சமர்னு ரெண்டு பிளாக்பஸ்டருக்குப் பிறகு இந்தப்படமாவது ஓடாதான்னு விஷால் ஏங்கிப் போயிருக்காரு. சாரி பாஸ், பாண்டியநாடு எதையாவது மாத்துதான்னு பார்ப்போம். வெளிறிப் போன வெள்ள காக்கா (அல்லது) வேக வைக்காத கருவாடு மாதிரி இருக்காங்க ஐஸ்வர்யா அர்ஜுன். அவங்களுக்கு ரெண்டு பாட்டு + நாலு சீன் = கேமிராமேன் இஸ் வெரி பாவம். படம் முழுக்க வந்தும் சந்தானத்தால யாரையும் சிரிக்க வைக்க முடியலைன்னா அவர் கேரக்டர் எவ்வளவு மொக்கைன்னு பார்த்துக்கோங்க. கலர் ஜெராக்ஸ் போட்ட காட்ஸில்லா, காடையை வறுத்து கல்லாவுல உட்கார வச்சது எவண்டான்னு டிரைலர் காமெடியைப் பார்த்து ஏமாந்து படத்துக்கு போன நமக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும். விஷால் கிட்ட அடி வாங்கிச் சாகுறதுக்கு ஒரு சீரியஸ் வில்லன், சில பல காமெடி வில்லன்கள்னு பலர் வந்து போறாங்க.. வந்து… போறாங்க.. அவ்வளவே. எப்பவும் போல ரெண்டு சீனே வந்தாலும் மயில்சாமி பட்டாசு.


இண்டெர்வல் ப்ளாக்ல வருது பாருங்க ஒரு ட்விஸ்டு.. யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டோம். வில்லன் காண்டாகிக் கத்துறாரு.. “ஆஃப்டர் ஆல் ஒரு சமையக்காரன் நீ.. என்ன அடிச்சிட்டியா..” ஒடனே விஷால் அடிக்கிறாரு பாருங்க ரிபீட்டு.. “ஆமாண்டா.. நா சமையக்காரன் தான்.. ஆனா நா சமையல் கத்துகிட்டது எங்க தெரியுமா.. மதுர ஜெயில்லடா..” எனக்கோ ஒரே பயம். “நான் சாணக்கியன் இல்ல.. சத்திரியண்டா...” ஹோ ஹோ ஹோன்னு பேக்கிரவுண்டு முசீக் போட்டு மீனாட்சி அம்மன் கோயிலைக் காட்டிருவாய்ங்களோன்னு. நல்ல வேளை தப்பிச்சோம்டா சாமி. இப்படித்தான் போகும்னு தெரிஞ்சாலும் ஃபிளாஷ்பேக்குல வர்ற குழந்தையோட கதை – அந்தப் பத்து நிமிஷம் மட்டும்தான் கொஞ்சமாவது படத்தோட டிராவல் பண்ண முடிஞ்சது.     


ஹாரிஸ் ஜெயராஜுக்கு ஒரு அருள் மாதிரி தமனுக்கு இந்தப்படம். ஒரு பாட்டு கூட வெளங்கலை. என்னவொரு என்னவொரு அழகியடா பாட்டு மட்டும் பரவாயில்லை ரகம். ஆனா அதையும் இதுக்கு முன்னாடி எங்கயோ கேட்ட மாதிரியே இருக்கு. படமே சரியில்லைன்னு ஆன பிறகு ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, எடிட்டிங் பத்தியெல்லாம் தனித்தனியா பேசி என்ன ஆகப்போவுது? விடுங்க.. பூபதிபாண்டியனோட காதல் சொல்ல வந்தேன் கான்செப்ட் மோசம்னாலும் படம் பார்க்க நல்லா இருந்தது. ஆனா திரைக்கதை சொதப்பினதால பட்டத்து யானைல சுத்தமா உட்காரவே முடியலை. டைரக்டர் சார்.. முடிக்கிறதுக்கு முன்னாடி ஒரே ஒரு டவுட்டு.. இந்தப்படத்துக்கு எதுக்கு சார் பட்டத்து யானைன்னு பேர் வச்சீங்க?

July 22, 2013

மரியான்


ஆப்பிரிக்காவில் தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொண்ட மனிதொருவர் ஒரு மாத வாழ்வா சாவா போராட்டத்திற்குப் பின்பு அவர்களிடமிருந்து மீண்டு வந்த செய்தினை அடிப்படையாகக் கொண்டு தனது மரியானை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் பரத்பாலா. ஒரு சாதாரணன் தான் வேலை பார்க்கச் சென்ற இடத்தில் மரணத்தின் பிடியில் சிக்கி மீளுவதை இயல்பாகக் காட்ட வேண்டிய கதை இது. ஆனால் கண்டம்  விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளைக் கண்டு உள்ளம் உவக்கும் தமிழனுக்கு இது மட்டும் போதுமா என்ன? ஆக நாயகனுக்கு ஒரு முன்கதை அவசியமாகிறது. சாதாரணன் எனும் பதம் மறைந்து அங்கே ஒரு சாகச நாயகனுக்கான தேவை வலுக்கட்டாயமாக உருவாக்கப்படுகிறது.

கடல்புறத்தில் தனுஷ் அறிமுகமாகும் காட்சியில் யாராலும் எளிதில் பிடிக்க முடியாத சுறா மீனை ஆழ்கடலில் அனாயாசமாகச் சென்று பிடித்து வருகிறார். மீனவர் ஒருவர் பின்னணியில் கத்தியபடியே ஓடுகிறார். “இருபது வருஷத்துக்கு முன்னாடி அவங்க அப்பனால முடியாததை மரியான் செஞ்சுபுட்டாண்டா..” இந்த இடத்திலேயெ தனுஷ் ஒரு சராசரி மீனவன் அல்ல என்பது சொல்லப்பட்டு விடுகிறது. பின்பாக இதை மேலும் வலுவாக்கும் வண்ணம் இன்னொரு காட்சியும் இருக்கிறது. 

படகில் மீன் பிடிக்கச் செல்லும்போது தனுஷிடம் நாயகியின் தந்தை என்பதாகச் சொல்லப்படும் சலீம்குமார் தீக்குச்சி இருக்கிறதா எனக் கேட்கிறார். தன்னிடம் இல்லாத தீப்பெட்டிக்காக அருகிலிருக்கும் படகுக்கு கடலில் குதித்து நீந்தி செல்லும் தனுஷ் தன் வாயில் அந்தப் பெட்டியினை அதக்கியபடி மீண்டும் படகுக்கு வருகிறார். இப்போதும் பின்னணியில் ஒரு குரல் ஒலிக்கிறது. “இவன் அடங்க மாட்டானே?” 

மீனவ கிராமத்திலேயே மிகுந்த அழகுடையவளான நாயகி தன்னைத் துரத்தினாலும் அவளிடமிருந்து விலகிச் செல்வதும் அவள் நன்மைக்காகவே தான் அவளை வெறுப்பதாகவும் தனுஷ் சொல்கிறார். முதல் பாதி முழுக்க இப்படியான காட்சிகளால் தனுஷின் மரியானை எல்லாரையும் முந்திச் செல்லும் சாகச நாயகனாக நிறுவிட இயக்குனர் முயன்றிருக்கிறார். இதற்கான தேவை என்ன? ஏன் நாம் எப்போதும் தலைமைப் பண்புகள் நிறைந்தவர்கள் மட்டுமே நாயகனாக இருக்க முடியும் என நம்புகிறோம்? இவை ஏதும் இல்லாமல் சாதாரண மனிதனால் தன் சாவோடு போராடி வெல்ல முடியாதா எனும் கேள்விகள் இங்கே தொக்கி நிற்கின்றன.

பூ படத்தின் மாரி இப்போது பனிமலராக மாறி மரியானில் மறுபிரவேசம் செய்திருக்கிறார். உயிர்ப்பாய் நடித்திருந்தாலும் எத்தனை தூரம் பனியால் ஒரு ஏழை மீனவப்பெண் பாத்திரத்துக்கு நியாயம் செய்ய முடிந்திருக்கிறது? மார்புப்பிளவுகள் காட்டும் பாவாடை சட்டை, மையப்பிய த்ரெட்டிங் செய்யப்பட்ட விழிகள் என யாவும் அவளை அச்சூழலுக்கு ஒரு அந்நியளாகவே உணர்த்துகின்றன. “நீ உயிரோட வந்திட்ட.. அது போதும்..” என உருகும் காட்சி மட்டும் இப்போதும் கண்ணுக்குள். கதாபாத்திரங்களை அவற்றுக்கான நியாயத்துக்குத் தகுந்தாற்போல நடிகர்களைத் தேர்வு செய்ய இயக்குனர் தவறி இருப்பதற்கான அத்தாட்சிகள் சலீம் குமாரும், உமா ரியாசும்.

சர்வதேச அளவில் இயங்கும் மனிதர்களை ஒரு பிராந்தியத்துக்கான் படத்தில் வேலை பார்த்திட அழைத்து வரும்போது அவர்களால் இங்குள்ள தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாமல் போகும் என்பதை நிரூபிக்கிறது கோனிக்ஸின் ஒளிப்பதிவு. கடலோர கிராமம் எனும்  நிலம் சார்ந்த எந்த அடிப்படை தகவல்களும் இல்லாமல் பெரும்பாலும் கிளிஷே எனச் சொல்லப்படும் காட்சிகளாகவே முதல் பாதி முழுக்க அமைந்திருக்கிறது. 

அவருக்கான உண்மையான களத்தை இரண்டாம் பாதியில் வரக்கூடிய பாலைவனக் காட்சிகள் மட்டுமே தரவியலும். அங்கும் இயக்குனரின் குழப்பமே மேலோங்கி நிற்க அங்கும் ஒளிப்பதிவு வெகு சாதாரணமாகவே அமைந்து விடுகிறது. இடைவேளையின் போது நீண்ட பாறையின் மீது நின்றபடி கத்திக்கொண்டிருக்கும் பார்வதியை தனுஷ் திரும்பிப் பார்க்காமல் போவதை லாங் ஷாட்டில் எடுத்திருப்பார். இறுதியில் தனுஷ் திரும்பி வரும்போது பார்வதி அதே பாறையில் காத்திருக்கு தனுஷ் மெதுவாக நடந்து வருவதை மீண்டும் காட்டும் லாங் ஷாட் ஒன்று மட்டுமே உணர்வுகளைச் சரியாய் வெளிப்படுத்துவதாக இருந்தது.

ரஹ்மானின் இசை நன்றாக இருக்கிறது என்றபோதும் பாடல்கள்படமாகப் பார்க்கும்போது அயர்ச்சி தரக் காரணம் அவை இடம்பெறும் தருணங்கள் மட்டுமே. பெரிதும் எதிர்பார்த்த கடல் ராசாவும் ஏமாற்றம் தருகிறது. பின்னணி இசையில் பெரும்பாலும் தனது பாடல்களின் ஹம்மிங்கைப் பயன்படுத்துவது ரஹ்மானின் வழக்கம். அது சில நேரங்களில் அற்புதமாக அமைந்து விடும், கண்டுகொண்டேன் இறுதிக் காட்சியைப் போல. பல நேரங்களில் அது எதிர்மாறான விளைவை ஏற்படுத்தவும் கூடும் என்பதற்கு மரியான் எடுத்துக்காட்டு. 

குட்டி ரேவதி - ஜோ டி குருஸ் - வாழை இலை வெட்டுறதுக்கு என்னத்துக்குடே அருவா?

பல விளம்பரப் படங்கள் இயக்கியிருந்தாலும் திரைப்படம் என வரும்போது இன்னும் அதிகமாக சிரத்தை எடுத்துக் கொண்டிருக்கலாம் பரத்பாலா. கடற்படையினர் சுட்ட உடல்கள் மிகச்சரியாக அவர்கள் கிராமத்தைத் தேடி வந்து மிதப்பது, படத்தின் ஆரம்பத்தில் வரும் ஆப்பிரிக்க இடை பின்னர் தீவிரவாதிகளின் கூடாரத்திலும் இசைப்பது முதலான லாஜிக் இடறல்கள் தொடங்கி வெகு மெல்லமாக குழப்பங்களோடு நடைபோடும் திரைக்கதை, நாயகியின் செருப்பை உரசும் அந்தர கால வில்லன் உலாவும் முதல் பாதி எனப் பல இடங்களில் சருக்கி இருக்கிறார் இயக்குனர். “3” படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு முறை தனுஷின் அற்புதமான நடிப்பு வீணாகி இருக்கிறது.

படம் முடியும்போது “இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாத்தான் என்ன” என்கிற பாடல் ஒலிக்க ஆரம்பிக்கிறது. ஆனால் உங்க படம் அதுக்குத் தோதா இல்லையே இயக்குனர் சார்....