Showing posts with label அவனும் அவளும். Show all posts
Showing posts with label அவனும் அவளும். Show all posts

October 7, 2010

காதல் அழிவதில்லை

அவர்கள் அந்த மலை சிகரத்தின் உச்சியில் நின்றிருந்தார்கள். அவன் அவள் அவர்கள். அவன் அவளுடைய கைகளை இறுகப் பற்றியிருந்தான். இருவரின் முகத்திலும் வேதனையின் கசப்பு மிகுந்திருந்தது. அவர்கள் குதிக்கத் தயாரான நேரத்தில்தான் அந்தக் குரல் கேட்டது.

"ஹேய்ய்ய்ய்ய்ய்ய்...."

அவர்கள் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள். அங்கே அந்தப் பெண் சிரித்தபடி நின்றிருந்தாள்.

"எக்காரணம் கொண்டும் நீங்கள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்க மாட்டேன். ஆனால் அதற்கு முன்னர் உங்களோடு சிறிது நேரம் உரையாட முடியுமா?"

அவள் பேச்சில் இருந்த உறுதி அவர்களை என்னமோ செய்தது. அவர்கள் குழப்பத்தோடு இறங்கி வந்தார்கள். இப்போது அந்தப் பெண்ணை நெருக்கத்தில் பார்க்க முடிந்தது. சற்றே வித்தியாசமாக உடை அணிந்திருந்தாள். களையான யாரையும் எளிதில் கவரக்கூடிய முகம். உதடுகளின் ஓரம் ஒட்டியிருந்த அந்தப் புன்னகை இன்னும் அழகு.

"இப்படி இந்த மரத்தின் கீழே அமர்ந்து கொள்வோமா?"

அமர்ந்தார்கள்.

"எதற்காக இந்த தற்கொலை முடிவு?"

"வேறன்ன.. எல்லாம் இந்த பாழாப்போன காதல்தாங்க.."

"உங்களைப் பற்றி நான் தெரிந்து கொள்ளலாமா?"

"சொல்றேங்க... இவங்கப்பா ஊர்லையே பெரிய பணக்காரரு.. நாங்களும் வசதியான குடும்பம்தான்.. இவளக் காலேஜ்ல பார்த்து லவ் பண்ணினேன்.. இவ இல்லாம நான் இல்லைன்னு ஆகிப்போச்சு.. ரெண்டு பேர் வீட்டுலையுமே வசதி ஜாஸ்திங்கிரதால பிரச்சினை வராதுன்னு நம்பினோம்.."

"பிறகு..?"

"ஆனா எல்லாத்துக்கும் மேல தமிழன் கண்டுபிடிச்ச ஒரு விஷயத்த நாங்க மறந்துட்டோம்.. அது சாதி.. நான் கீழ்சாதியாம்.. அதனால பொண்ணு தர மாட்டேன்னு இவங்கப்பா சொல்லிட்டாரு.. நம்ம சாதியப் பத்தித் தப்பாப் பேசுனவன் பொண்ணு உனக்கு அவசியமான்னு எங்கப்பாவும் ஆட ஆரம்பிச்சுட்டாரு.. அதனால் வீட்டை விட்டு வந்தாச்சு.. என்ன பண்றதுன்னு தெரியல.. அதான் சாவுலையாவது ஒண்ணு சேருவோமேன்னு.. "

"நீங்கள் சொல்வதும் நியாயம்தான்.. ஆனால் ஒரே ஒரு கேள்வி.. செத்துப் போவதன் மூலம் நீங்கள் என்ன சாதிக்க முடியும் என நினைக்கிறீர்கள்?"

""எங்க அப்பாக்களுக்கு வலிக்கும்ல.. ஏன்டா இவங்களை சேர்த்து வைக்கலைன்னு காலம் பூரா அவங்க வருத்தப்படணுங்க.."

"ஹ்ம்ம்.. வீட்டை விட்டு வந்து எத்தனை நாளாகிறது?"

"ஒரு வாரமாச்சு.. ஏன் கேக்குறீங்க.."

"இந்த ஒரு வாரத்தில் எப்போதாவது உங்கள் வீட்டில் உங்களைத் தேடிக்கொண்டு வந்தார்களா?"

முதன்முறையாக அவன் முகத்தில் சிறிய குழப்பம் தோன்றியது.

"ம்ஹூம்.. இல்லைங்க.."

"உங்களை வருத்திக் கொள்வதை நான் தவறு சொல்ல மாட்டேன். ஆனால்.. உங்கள் கஷ்டத்தால் எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என்று சொல்பவர்களுக்காக நீங்கள் உங்களை அழித்துக் கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது..?"

"..."

"இப்படிப்பட்ட, உங்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாத மக்களுக்காக நீங்கள் மாய்ந்து போகத்தான் வேண்டுமா? உலகிலேயே அதிக தைரியம் தற்கொலை செய்து கொள்ளத்தான் தேவைப்படும்.... உங்களுக்கு அதற்கான தைரியமே இருக்கும்போது வாழ வேண்டும் என்றால் போராடுவதா முடியாது?"

"ஆமாங்க.. இவங்க சொல்றதுலயும் நியாயம் இருக்கு.."அந்தப் பெண் முதல் முறையாகப் பேசினாள்.

"இந்த வாழ்க்கை எத்தனை அழகானது தெரியுமா?" அவள் பேசத் தொடங்கினாள். பேசி முடித்தபோது அவர்கள் அழுது கொண்டிருந்தார்கள்.

"நல்ல நேரத்துல வந்து எங்களைக் காப்பாத்துனீங்க.. ரொம்ப நன்றி.. இவங்க முன்னாடி நாங்க கண்டிப்பா வாழ்ந்து காட்டுவோம்.."சொல்லும்போதே அவன் நா தழுதழுத்தது.

"இந்த நம்பிக்கை என்றைக்கும் இருக்க வேண்டும். எனக்கு அது போதும். புதிய வாழ்க்கையைத் தொடங்க இருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துகள்.. "

அந்தப் பெண் திரும்பி நடக்கத் தொடங்கினாள். சட்டென ஞாபகம் வந்தவனாக அவன் அவளைக் கூப்பிட்டான். அவள் நின்றாள்.

"எங்களுக்கு இவ்ளோ உதவி பண்ணினீங்க.. உங்களைப் பத்தி சொல்லவே இல்லையே.."

அவள் விரக்தியாகச் சிரித்தாள்.

"நானும் உங்களைப் போல தகுதி பார்க்காமல் காதலித்தவள்தான். என் அதீத அன்பே என் காதலரின் மரணத்துக்கு காரணமாகிப் போனது. நானும் ஒரு சில மருந்துகளை ஒன்றாகக் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றேன். ஆனால் என் கேட்ட நேரம் பிழைத்துக் கொண்டேன். ஒவ்வொருவர் வாழ்விற்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். அன்று முதல் என்னால் இயன்றவரை காதல் ஜோடிகளை ஒன்று சேர்த்து வாழ வைத்து வருகிறேன். நான் காப்பாற்றும் 3 ,88 ,76,543 ஆவது ஜோடி நீங்கள்.."

அவன் முழித்தான்.

"புரியலையே.."

"சில விஷயங்கள் புரியாமலிருப்பதே நல்லது.. நான் கிளம்புகிறேன்.."

"ஹலோ.. உங்க பேரென்னன்னு சொல்லவே இல்லையே.."

அவள் மெல்லிய புன்னகையோடே சொன்னாள்.

"அமராவதி.."

October 7, 2009

அன்பென்ற மழையிலே - அவனும் அவளும்(8)...!!!

"ஹலோ.."

"......"

"ஹலோ.."

"சொல்லுப்பா.."

"என்னம்மா.. தூக்கமா.."

"இல்லடா.. சொல்லு.."

"என்னம்மா.. என்ன ஆச்சு.. ஏன் வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு?"

"அதெல்லாம் ஒண்ணும் இல்ல.. சொல்லுப்பா.."

"அம்மாடி.. என்னம்மா.. அழுதியா?"

"....."

"என்னன்னு கேக்குறேன்ல.. அழுதியா?"

"ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்.."

"அம்மா.. அம்மா.. அழாதடி.. என்னமா.. ஏன் அழுகுற.. வேணாம்டிமா.."

"எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல. நான் எங்கப்பாகிட்ட போறேன்.. என்ன விட்டுருங்க.. எனக்கு யாரும் வேண்டாம்.."

"அம்மா.. கோபத்துல அர்த்தங்கெட்டதனமா பேசாத.. என்னடி ஆச்சு..?"

"ம்.ம்.ம்.ம்ம்.. போன வாரம் என்னை வந்து பொண்ணு பார்த்துட்டு போனாங்க இல்ல?"

"ஆமாம்.. அதுக்கு?"

"அந்தப் பையனுக்கு என்னைப் பிடிக்கலையாம்.."

"சரி விடுடி..அவனுக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான்னு விடுவியா.. இதுக்குப் போய் அழுதுக்கிட்டு.."

"உனக்கு என்னடா.. இதெல்லாம் உனக்குப் புரியப் போறதே இல்ல.. அவன் என்னைப் பார்க்க வந்த மூணாவது பையன்.. பார்க்க குட்டையா ஒல்லியா இருந்தான்.. அவனுக்கே எண்ணப் பிடிக்கலேன்னா..? நான் என்ன அத்தனை அழகில்லாமலா இருக்கேன்? எனக்கு வேண்டாம்.. என்ன விட்டுருங்க.. நான் செத்துப் போறேன்.. எங்கப்பாகிட்ட போகணும்.."

"சும்மா லூசு மாதிரி பேசாதடி.. ஒரு பையனுக்கு உன்னைப் பிடிக்கலேன்னா அவ்ளோதானா? வாழ்க்கைனா என்ன உனக்கு விளையாட்டா இருக்கா? உங்க அப்பா மட்டும் உசிரோட இருந்தா நீ பேசுறதுக்கு உன்னை தூக்கி போட்டு மிதிச்சு இருப்பார்..பார்த்துக்கலாம்டிமா.. ரிலாக்ஸ்டி.."

"........."

"சாகறதுன்னா ஒரு நிமிஷம் போதும்டி.. ஆனா நீ விட்டுட்டுப் போன வலி எங்களை எத்தனை பாதிக்கும்னு யோசிச்சியா? நான் எல்லாம் உனக்கு என்னன்னு இருக்கிறேன்? இல்லை கேக்குறேன்.. ரெண்டு வாரம் முன்னாடி வண்டில போறப்ப பஸ்ல போய் அடிபட்டு விழுந்து கிடந்தைல.. உடனே யாருக்கு போன் பண்ணுன?.."

"....."

"யாருக்குடி பண்ணுன..."

"உனக்குத்தான்.."

"ஏன்.. உங்க அம்மா இருக்காங்க.. அக்கா? அவங்களுக்கு எல்லாம் போன் பண்ணாம ஏன் எங்கயோ தூரத்துல இருக்குற எனக்கு பண்ணின?"

"....."

"பதில் சொல்ல முடியலைல... அதுதாண்டி நான் உனக்கு.. உங்க அப்பா திடீர்னு இறந்து போனப்ப சாமிக்கு என்ன பண்ணன்னு தெரியாம என்னை அனுப்பிச்சாரு.. கடைசி வரைக்கும் இந்தப் பிள்ளைய நல்லா பார்த்துக்கப்பான்னு.. புரிஞ்சுதா? இது ஏதோ உனக்குத் தெரியாத மாதிரி.. நான் இருக்குறப்ப, நீ செத்துருவியா? உன்னை அப்படி விட்டா அப்புறம் நான் என்னடி மனுசன்? ம்.ம்.."

"அம்மா.. டேய்.. நீ ஏன்டா அழற?"

"அப்புறம் நீ பேசுறதைக் கேட்டு உன்னை என்ன மடில போட்டுக் கொஞ்சவா முடியும்? என்னை நானே நொந்துக்க வேண்டியதுதா.."

"சரிம்மா... சாரிப்பா.. தெரியாம சொல்லிட்டேண்டா.. நீ இருக்குறப்பா நான் ஏன்டா கவலைப்படணும்?"

"இப்ப இருக்குற புத்தி பேசுறப்ப எங்க போச்சாம்? சுட்டுத் தின்னுட்டியா?"

"ஐயா சாமி.. தெரியாம பேசிட்டேன்..மன்னிச்சுடுங்க.."

"அறிவு கேட்ட முண்டம்.. எரும மாடு.. நாயே.."

"தாங்க்ஸ்.. அப்புறம்..?"

"திட்டினா தாங்க்ஸ் சொல்வியா?"

"தாங்க்ஸ் திட்டினதுக்காக இல்ல.."

"பின்ன..?"

"எனக்கு எதுன்னாலும் கவலைப்பட ஒருத்தன் இருக்கியே.. எங்க அப்பா ஸ்தானத்துல.. அதுக்கு.."

"இருப்பேன்டி அம்மு.. சாகுறவரைக்கும்.. Friends for life"

"தாங்க்ஸ்டா.."

"அப்பாடா.. இப்போதான் பிள்ளை சிரிக்கிறா.. இப்போ எவ்வளவு நல்லா இருக்கு?"

"நான் இங்கே ஈரோட்டுல சிரிக்கிறது உனக்கு சென்னைல தெரியுதாக்கும்?"

"அதெல்லாம் பீலிங்க்ஸ் dog.. கண்டிப்பா கண்ணை மூடி பார்த்தா நீ தெரியுரம்மா.."

"எப்பவும் இப்படியே இருக்கணும்டா.."

"கண்டிப்பா.. நீ சிரிச்சிக்கிட்டே இரும்மா.. சந்தோஷமா.. ஒழுங்காத் தூங்குவியா.. நான் நிம்மதியா இருக்கலாமா?"

"சரிம்மா.. நான் நல்லாத்தான் இருக்கேன்.. நீயும் நிம்மதியா தூங்குடா.."

"thats my girl..good night..take care.."

"bye da.. good night.."

September 19, 2009

அவன், அவள், அது - அவனும் அவளும் (7)..!!!

இரவு பதினோரு மணி. அந்த பேருந்து நிறுத்தத்தில், இரவின் கருமையை மட்டும் துணையாகக் கொண்டவனாய், அவன் நின்று கொண்டிருந்தான். ஆள் அரவமே இல்லாத அந்த சாலையும், அந்த சூழ்நிலையுமே அச்சம் தருவதாக இருந்தது. ஆனால் அவன் கவலை ஏதும் அற்றவனாக ஒரு பாட்டை சீட்டி அடித்துக் கொண்டு பஸ்சுக்கு காத்து இருந்தான்.

"டக்.. டக்.. டக்.."

யாரோ நடந்து வரும் அரவம் கேட்டு திரும்பினான். அவன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை. அழகான பெண்ணொருத்தி அவனருகில் வந்து நின்றாள்.

அவளைப் பார்க்கும் யாருக்கும் மறுமுறை பார்க்கும் ஆசை தோன்றும். பார்த்தான்.

வட்ட முகம். வில்லாய் வளைந்த அடர்த்தியான புருவங்கள். அதன் ஊடாக குட்டிப் பாம்பொன்று நெளிந்து கொண்டிருப்பதை போல பொட்டு. கருணை நிறைந்த கண்கள். சட்டென்று நீண்ட நாசி. செதுக்கியதைப் போல உதடுகள். உடம்பில் கருநீல நிறத்தில் இறுக்கமாக சுடிதார் அணிந்து இருந்தாள். அவள் உடம்பின் வளைவுகள் அவனை சூடாக்கின.

மீண்டும் நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தான். அவளும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் திகைத்துப் போய் முகத்தை திருப்பிக் கொண்டான்.

சற்று நேரம் கழித்து தைரியம் வரப் பெற்றவனாய் மீண்டும் அவளைப் பார்த்தான். அவள் வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் சிரித்த மாதிரி அவனுக்குத் தோன்றியது.

"இவள் ரூட்டாக இருப்பாளோ?"அவள் கண்களில் ஒரு அழைப்பு இருந்தது.

அவள் திரும்பி நடக்கத் தொடங்கினாள். ஏதோ ஒரு சக்தியால் இயக்கப்பட்டவன் போல அவனும் அவளை பின்தொடர்ந்தான். செல்லும் வழியில் திரும்பிப் பார்த்து அவன் வருவதை உறுதி செய்து கொண்டாள். என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று அவனும் தொடர்ந்தான்.

ரொம்ப தூரம் நடந்து ஒரு பாழடைந்த பங்களாவின் முன்பாக அவள் நின்றாள். அவனும் நின்றான். சுற்றி முற்றி பார்த்தான். ஏதோ ஒரு சுடுகாட்டுக்குள் வந்ததைப் போல உணர்ந்தான். முதல் முறையாக நெஞ்சுக்குள் பயம் எட்டிப் பார்த்தது. கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளை அழைத்தான்.

"என்னங்க.. என்னங்க.."

அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அவனுக்கு முதுகைக் காட்டியவளாக அமைதியாக நின்று கொண்டிருந்தாள். அவன் வயிற்றுக்குள் ஒரு பயப்பந்து உருளத் தொடங்கியது.

" இவ பொண்ணுதானா? தெரியாத்தனமா இங்க வந்து மாட்டிக்கிட்டோமா? ஒருவேளை இது மோகினிப் பிசாசா இருக்குமோ? நாம இங்க இருந்து உசிரோடத் திரும்ப முடியுமா?"

திடீரென அவள்.. இல்லை .. அது.. திரும்பியது. கருணை நிறைந்த கண்களாக அவனுக்கு தோன்றிய இடத்தில் இப்போது வெறும் குழிகள் மட்டுமே இருந்தன. கையில் ஒரு நீளமான கத்தி. கால்கள் தரையில் பாவாமல் இவனை நோக்கி நகர்ந்து வரத் தொடங்கியது.

அவன் அதிர்ச்சியில் உறைந்தவனாக நின்று கொண்டிருந்தான். இதயம் பயங்கர வேகமாக துடித்தது. ஓவெனக் கத்த எண்ணி வாயைத் திறந்தான். சத்தமே வரவில்லை. நாக்கு மேலன்னத்தோடு ஒட்டிக் கொண்டது.

வியர்த்துக் கொட்டியது. எதற்கோ ஆசைப்பட்டு வந்து கடைசியில் இப்படி மாட்டிக் கொண்டோமே என தன்னைத் தானே நொந்தான் . என்ன செய்வதெனத் தெரியாமல் கண்களை இறுக மூடிக் கொண்டான்.

சற்று நேரம் கழித்து அவன் கண்களை திறந்தபோது அது அவன் முன்னே அமைதியாக நின்று கொண்டிருந்தது. தன்னை அது ஏன் கொல்லவில்லை என்று குழம்பியவனாக அதைப் பார்த்தான். அது முதல் முறையாக வாயைத் திறந்து பேசியது.

"மன்னிக்க வேண்டும். இது உங்கள் கனவு. அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.."

அவன் சட்டென விழித்துக் கொண்டான்.

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

June 15, 2009

மாட்டுத்தாவணி... அவனும் அவளும்...(6)!!!

"நாமளே எவ்வளவு நேரம் தான்ப்பா பேசுறது... பொண்ணும் பையனும் கொஞ்ச நேரம் தனியாப் பேசட்டும்.. அதுதானே முக்கியம்.." கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர் சொன்னார். அவனும் அவளும் ஒரு அறையில் தனியாக விடப்பட்டார்கள்.
அவன் அவளைப் பார்த்தான். ஒல்லியாகச் சின்னப் பெண்ணாக இருந்தாள். பட்டுச் சேலை மட்டுமே அவளைக் கொஞ்சம் பெரிய ஆளாக காட்டியது. கூரான நாசி. அழகான கண்கள். உதடுகள் மெல்லிதாக துடித்துக் கொண்டு இருந்தன. சின்னதொரு பயமாக இருக்கக் கூடும். அவனுக்கும் வயிற்றை எதோ பண்ணியது. இது போல பெண்ணோடு பேசுவது அவனுக்கும் முதல் தடவை. தயங்கியவனாக அவள் எதிரே அமர்ந்தான்.
அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளுக்கு பிடித்த அரைக்கை சட்டை, ஜீன்ஸ் அணிந்து இருந்தான். நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தாள். அவன் அவளையே பார்த்துக் கொண்டு இருப்பது தெரிந்தது. வெட்கத்துடன் தலையை குனிந்து கொண்டாள். அவன் பேரழகன் இல்லை என்றபோதும் பார்க்க கம்பீரமாக இருந்தான். உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள்.
"நீங்க என்ன படிச்சு இருக்கீங்க, குடும்பம் எல்லாம் பத்தி தரகர் சொன்னாரு... என்னப் பத்தியும் உங்க வீட்ல எல்லாரும் சொல்லி இருப்பாங்க.. உங்களுக்கு எதுவும் கேட்கனும்னா கேளுங்க.." அவன் பேச்சை ஆரம்பித்தான்.
"உங்களுக்கு வீடு, நிலம் ஏதாவது இருக்கா?" அவள் மெதுவாக கேட்டாள்.
"இல்லைங்க.. என்னோடது ஒரு பக்கா மிடில் கிளாஸ் பேமிலி.. நான் இப்போ வேலைக்கு போய் சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகுதான் கொஞ்சம் தலை தூக்கி இருக்கோம்.. அப்பாவோட ரிடயர்மெண்ட பொருத்து ஒரு வீடு வாங்கலாம்னு இருக்கேன்.."
"நான் படிச்சு இருக்குறதால வேலைக்கு போகணும்னு விருப்பப்பட்டா போகலாமா?"
"கண்டிப்பா.. எந்தப் பொண்ணும் வேலைக்கு போகணும்னு தான் நான் சொல்லுவேன்.. யாரையும் சார்ந்து இருக்கக் கூடாதுங்கறது தான் என்னோட எண்ணம்.."
"தாங்க்ஸ்.. உங்களுக்கு.. என்ன பிடிச்சிருக்கா?.." தயங்கியவாறே கேட்டாள்.

"எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லைங்க.. நிஜமாவே உங்களை பிடிச்சு இருக்கு.. குறிப்பா வெளிப்படையா பேசுற உங்க குணம்..இப்போ நீங்க சொல்லுங்க.. உங்களுக்கு என்ன பிடிச்சு இருக்கா..?"
"ம்ம்ம்..நிறைய..."
அவனுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. வெளியில் வந்து பெற்றோரிடம் தன் சம்மதத்தை சொன்னான். அவளுடைய சொந்தக்காரர்கள் உள்ளே சென்று அவள் சம்மதத்தை கேட்டு வந்தார்கள். திருமணத்தை தையில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவாகியது.
பெண்ணின் சொந்தக்காரர் ஒருவர் ஆரம்பித்தார். "அப்புறம் மத்த விஷயங்கள் எல்லாம் பேசிடுவோம்.. பொண்ணுக்கு என்ன செய்யணும்னு எதிர்பாக்குறீங்க.?"
"ஒத்தப் பொண்ணு.. உங்களுக்கு என்ன விருப்பமோ செய்ங்க.."அவனுடைய அம்மா சொன்னார்.

"அப்படி இல்லீங்க.. நீங்க என்ன நினைக்குரீங்கன்னு சொன்னாதான் நல்லா இருக்கும்.."

"ஒரு நாப்பது பவுன் பொண்ணுக்கு போடுங்க.. பையனுக்கு அஞ்சு பவுன்"

'இது ரொம்ப ஜாஸ்திங்க.. இன்னைக்கு தங்கம் விக்குற விலை என்ன? நாங்க இருபது பவுன் போடலாம்னு இருக்கோம்."
"இது ரொம்பக் குறைச்சல்.. என் பையன் படிச்ச படிப்புக்கு ஆளாளுக்கு போட்டி போட்டுக்கிட்டு வருவாங்க.."

பேரம் வளர்ந்து கொண்டே போய் கடைசியில் பொண்ணுக்கு முப்பது பவுனும் பையனுக்கு ஐந்து பவுன் என்றும் முடிவானது. அப்புறம் கல்யாண செலவு பற்றிய பேச்சு ஆரம்பித்தது. பையனின் அம்மா கல்யாண செலவில் ஆளுக்கு பாதி என்றார். பெண்ணின் அப்பாவோ அம்பதாயிரம் மட்டுமே தன்னால் தர முடியும் என்றார். அதை வைத்து ஒண்ணுமே செய்ய முடியாது என்று வாதிடத் தொடங்கினர் பையன் வீட்டுக்காரர்கள். பேச்சு வளர்ந்து கொண்டே போனது.

"உங்க பையனுக்கு என்ன கவர்மென்ட் உத்தியோகமா.. ரொம்ப ஓவரா பேசாதீங்க.. எங்க பொண்ணு முகத்துக்காக பாக்குறோம்.." கடைசியாக வாய் விட்டது ஒரு பைத்தியக் கிழம்.

பையனின் அம்மா முகம் சிவந்து போனது. "நீங்க இவ்வளவு பேசினதுக்கு அப்புறமும் உங்க பொண்ணை கட்டணும்னு எங்களுக்கு அவசியம் இல்ல.. வாடா போகலாம்.."
இரு வீட்டாரும் அடித்துக் கொண்டதில் கடைசியில் அவர்களின் ஆசை கருகிப் போனது. அந்தப் பெண் அவனை பாவமாக பார்த்தாள். ஏதும் செய்ய இயலாதவனாக அவன் நடக்கத் தொடங்கினான்.
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

February 26, 2009

அவனும் அவளும் (5)....!!!

கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு பிறகு அவன் அவளை சென்னையில் பார்த்தான். கண்டிப்பாக அவளேதான். மறக்கக் கூடிய முகமா அவளுடையது? ஆள் முன்னைக்கு இப்போது இன்னும் இளைத்து இருந்தாள். கையில் ஒரு குழந்தை வேறு இருந்தது. அவள் அவனைப் பார்க்கும்முன் திரும்பி விட எத்தனித்தபோது, அவள் அவனுடைய பெயரைச் சொல்லி கூப்பிட்டாள். மெதுவாக திரும்பி அவளை நோக்கி சென்றான். அவள் கண்களில் ஆச்சர்யம் தேங்கி நின்றது.
"நீ இங்க எப்படி..? சென்னைக்கு எப்போ வந்த?"
"நான் இங்க வந்து எட்டு மாசம் ஆகுதும்மா.. பக்கத்துல ஒரு கம்பனிலதான் வேலை பாக்குறேன்"
"அதிசயமா இருக்கு.. நானே எப்பயாவதுதான் கடைத்தெருவுக்கு வருவேன்.. இன்னைக்கு என் நல்ல நேரம்.. உன்னப் பார்த்துட்டேன்.. எங்க தங்கி இருக்க?"
"கோடம்பாக்கத்துல ஒரு பிரென்ட் கூட ரூம் எடுத்து தங்கி இருக்கேன்"
"சரி வா.. இங்க கிட்டக்கத்தான் என் வீடு.. போய் அங்க பேசிக்கலாம்"
"பரவா இல்ல.. நான் இன்னொரு நாள் வரேனே."
"எத்தன நாள் கழிச்சு பாக்குறோம்? உன்ன அவ்வளவு சீக்கிரம் போக விட்டுடுவேனா? சொன்னா கேளு.. வா.. கிளம்பு.. ஒண்ணும் பேசக் கூடாது". அவள் எப்போதுமே அப்படிதான். ரொம்ப பிடிவாதக்காரி. அவள் சொன்னால் அது நடக்க வேண்டும். இன்னமும் மாறவில்லை போல என்று நினைத்துக் கொண்டான்.
அவர்கள் இருவரும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். அவனுடைய அப்பா தென்மாவட்ட நகரம் ஒன்றில் சொந்தமாகக் கடை வைத்திருந்தார். அவன் அருமையாக கவிதை எழுதுவான். எந்தக் கல்லூரியில் போட்டி நடந்தாலும் அதில் கலந்து கொள்வான். அவனுக்கு என்று அவனது கல்லூரியில் ஒரு ரசிகர் மன்றமே இருந்தது. அவள் அவனுக்கு ஒரு வருடம் ஜுனியர். நிறைய புத்தகங்கள் படிப்பவள். அருகில் இருந்த ஒரு கிராமத்தில் வசித்து வந்தாள். இருவருக்குமே அலைவரிசை ஒத்துப் போனதால் எளிதாகப் பழக முடிந்தது. கடைசியில் வழக்கம் போல் காதலில் போய் முடிந்தது.
அவர்களைப் பார்த்து வியக்காத மக்கள் கல்லூரியில் கிடையாது. அப்படி ஒரு அழகான, அன்பான காதலர்கள். ஆனால் யாரும் நன்றாக இருந்தால்தான் விதிக்குப் பிடிக்காதே. ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் அவள் காணாமல் போனாள். காற்றில் கரைந்த கற்பூரம் போல் சுவடே இல்லாமல் மறைந்து விட்டாள். அவன் அவளுடைய ஊருக்கு போனபோது பூட்டி இருந்த வீடுதான் அவனை வரவேற்றது. அவளுடைய அக்கா யாரையோ காதலித்து ஓடிபோனதாகவும், அவமானம் தாங்காமல் அவர்கள் குடும்பத்தோடு ஊரைக் காலி செய்து விட்டுப்போய் விட்டதாகவும் பக்கத்து வீட்டுப் பெண் சொன்னாள். அதுதான் அவன் அவளைப்பற்றி கடைசியாகக் கேள்விப்பட்டது. அதன் பிறகு இன்றுதான் அவளைப் பார்க்கிறான்.
சிறிய வீடு. அழகாக வைத்து இருந்தாள். கணவர் வேலைக்கு சென்று விட்டார் எனவும் இரவு லேட்டாகத்தான் வருவார் என்றும் சொன்னாள். நிறையப் பேசினாள். கணவரை பற்றி, அவருடைய குடும்பம் பற்றி, வேலை பற்றி எல்லாம் சொன்னாள். அவளுடைய அக்கா இப்போது மீண்டும் அவர்களுடைய குடும்பத்தோடு சேர்ந்து விட்டதையும் சொன்னாள். அவளுடைய பையன் அங்கும் இங்கும் ஓடி விளையாண்டுக் கொண்டிருந்தான். வெகு நேரம் பேசி விட்டு அவள் ஓய்ந்து போனாள். அவன் எதுவுமே பேசவில்லை. கொஞ்ச நேரம் அங்கே நிசப்தமாக இருந்தது.
"ஒருத்தர பிரியுறதை விடக் கொடுமையானது என்ன தெரியுமா... அவுங்களோட மௌனம்.. பக்கத்துல இருந்துகிட்டும் ஏன் இப்படி அமைதியா இருக்க.. என்கிட்டப் பேச மாட்டியா..?" கேட்டபோது அவளுடைய குரல் கம்மியது. அவன் அப்போதும் அமைதியாக இருந்தான்.
"என்ன ரொம்பத் தேடி இருப்ப இல்ல? என்மேல கோபம் இருந்தாத் திட்டிடு.. இப்படி அமைதியா இருக்காத.. ப்ளீஸ்..".
அவன் முதல் தடவையாகப் பேசினான். "உன்னைக் கஷ்டப்படுத்தனும்னு என்னைக்குமே நான் நினைக்க மாட்டேன்.. எங்க இருந்தாலும் நீ நல்லா இருந்தாப் போதும். உன்னோட சூழ்நிலையில நான் இருந்தாலும் அப்படித்தான் பண்ணி இருப்பேன்.. நீ சங்கடப்படாதே..".
"உனக்கு எம்மேல வருத்தமே இல்லையா?"
"கண்டிப்பா இல்ல" அவன் சொல்லிக் கொண்டே எழுந்தான். "அப்போ நான் கிளம்புறேன்".
"இன்னொருநாள் அவர் இருக்கறப்ப கண்டிப்பா வரணும்.."
"சரி.." சொல்லிக்கொண்டே வாசலில் இருந்த செருப்புகளை அணிந்து கொண்டான். "நான் போயிட்டு வரேம்மா.."
"ஒரு நிமிஷம்.. "வாசலில் நின்றபடி அவள் கேட்டாள்." உனக்கு....கல்யாணம் ஆகிடுச்சா... ?"
அவன் ஒரு நிமிஷம் அவளை நிமிர்ந்து பார்த்து சிரித்தான். திரும்பி நடக்கத் தொடங்கினான். பஸ்சைப் பிடித்து ரூமுக்கு வந்து சேர்ந்தான். ஓரமாகப் போய் அமர்ந்து கொண்டு ஓவென அழத்தொடங்கினான். அன்று இரவு முழுவதும் அந்த அறையில் இருந்து விசும்பல் ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது.

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

January 7, 2009

அவனும் அவளும்...(4)!!!

அன்று அவளுடைய பிறந்த நாள். முதல் வாழ்த்து அவனுடையதுதான். காலையில் இருவரும் கோவிலுக்கு சென்றார்கள். சாமி தரிசனம் முடிந்து வெளியே வந்து பிரகாரத்தில் அமர்ந்தார்கள். அவன் அவளிடம் கேட்டான்.
"என்ன வேண்டிக்கிட்டீங்க சாமிக்கிட்ட..?"
"எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லனுமா.. முடியாது.. போடா.."
"அட.. என்கிட்டே சொல்லாம வேற யார்கிட்ட சொல்லப் போறியாம்.. சும்மா சொல்லும்மா.."
"எல்லாரும் நல்லா இருக்கணும்னு வேண்டிக்கிட்டேன்... "
"வேற?"
"இந்த வருஷம் மாதிரியே ஒவ்வொரு வருஷமும் எனக்கு வர முதல் வாழ்த்து உன்னோடதா தான் இருக்கணும்..அது வேண்டிக்கிட்டேன்"
"அடேங்கப்பா.. அப்புறம்?"
"நான் என்ன கதையா சொல்றேன்? நல்லா உம் கொட்டி கேட்குற..?"
"சரி.. மேல சொல்லுடிம்மா.. "
"கடைசியா.. நீ நல்லா இருக்கணும்டா.. எனக்கு உன்ன விட்டா யாரு இருக்கா.. கடைசி வரைக்கும் நீயும் நானும் இதே மாதிரி சந்தோசமா இருக்கணும்னு வேண்டிக்கிட்டேன்.. அவ்ளோதான்.."அவள் குரல் தழுதழுத்து விட்டது.
"அம்மாடி.. என்னம்மா இது.. கண்டிப்பா இருப்போம்மா.. சரியா.." அவன் அவளை தேற்றினான்.
"சரி.. சரி.. நீ என்ன வேண்டிக்கிட்ட.. சொல்லு.."
"வேண்டாம்டிமா.."
"எனக்கு ஒரு நியாயம்.. உனக்கு ஒண்ணா? சொல்லு..."
"அது.. நான் அப்புறமா சொல்றேனே..."
"ச்சுப்.. சொல்லுன்னா சொல்லணும்.. இல்லனா நான் கோபக்காரி ஆகிடுவேன்.. சொல்லு"
"நான் கடவுள வேண்டிக்கிட்டதேல்லாம் ஒண்ணே ஒண்ணு தான். சாகுற வரைக்கும் நாம இப்படியே இருக்கணும். என்னைக்காவது சாவு வந்தா.. எனக்கு முன்னாடி நீ செத்து போய்டணும். என்னால உன்னோட நினைவுகளை மட்டும் வச்சிகிட்டு வாழ்ந்திட முடியும். ஆனா.. உனக்கு முன்னாடி நான் போய்ட்டா.. அத உன்னால தாங்க முடியாதுடி.. நீ என்மேல அந்த அளவுக்கு பாசம் வச்சிருக்கேன்னு எனக்கு தெரியும்டிமா..." சொல்லி முடித்தபோது அவன் கண்களில் கண்ணீர் திரண்டு இருந்தது.

அவளால் எதுவும் பேச முடியவில்லை. வாயடைத்து போய் இருந்தாள். சிறிது நேரத்திற்கு பின் அவனை கட்டி கொண்டாள். அவளுடைய அழுகை வெகு நேரத்திற்கு பின் தான் ஓய்ந்தது.
அன்று அவன் அவளை பல இடங்களுக்கு கூட்டிப் போனான். அன்றிரவு அவன் அவள் மடியில் நிம்மதியாக தூங்கினாள்.
இது நடந்த நான்கு நாட்களுக்கு பிறகு, அவள் ஒரு பேருந்து விபத்தில் செத்துப்போனாள்.அவன் பைத்தியம் போல் ஆனான். தற்கொலைக்கு முயன்று அவன் நண்பர்களால் காப்பாற்றப்பட்டான். இன்றும் அவள் நினைவுகளில் நடைபிணமாக வாழ்ந்து வருகிறான்.
(இது என் நண்பனின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்)
lum

January 2, 2009

அவனும் அவளும்...(3)!!!


"நீ கவிதை எல்லாம் கூட எழுதுவியா?" அவனுடைய பழைய டைரி ஒன்றை புரட்டிக் கொண்டு இருந்தபோது அவள் கேட்டாள்.

"ம். அப்பப்போ. சும்மா தோணுனத எழுதி வைப்பேன்"

"அடேங்கப்பா. எல்லாம் ஒரே காதல் கவிதையால்ல இருக்கு"

"தபூஷங்கர்னா ரொம்ப பிடிக்கும். விகடன்ல அவரோட கவிதைகள படிச்ச எபக்ட் மேடம்"

"அப்ப நீங்களும் பெரிய கவிஞர் தான்னு சொல்லுங்க"

"சேச்சே.. அப்படில்லாம் இல்லம்மா.. பட்... நான் உனக்குத்தான் நன்றி சொல்லணும். நான் இந்த கவிதைகள எழுதுறேன்னா அது உனக்காகத்தானே. சோ.. தாங்க்ஸ்.. "

"அதுக்கும் நான்தானா.. என் நேரம்" அவள் சலித்து கொண்டாள்.

அவன் சிரித்து கொண்டு இருந்தான்.

அவன் அவளுக்காக எழுதிய கவிதைகளில் சில...

தொடங்கினால்
முடிந்து விடும்
என்பதாலேயே...
உனக்கான - என்
கவிதைகள்
எழுதப்படாமலே
இருக்கின்றன!!!

*******

நீ அருகில்
இல்லாத
நேரங்களில் கூட
என் வீடெங்கும்
நிரம்பி
வழிகின்றன...
உன் நினைவுகள்!!!

*******

ஏன் என்னைப்
பார்த்து அடிக்கடி
சிரிக்கிறாய் என
நான் உன்னைக்
கேட்டபோது -
"ச்சும்மா" என்று
சொல்லி.. அதற்கும்
சிரித்துச் சென்றாய்!!!

*******

நீ யார்
எனத் தெரியாத
நிலையிலும்....
நீ - என்
எல்லாமுமாக
இருக்கிறாய்..!!!

(இது அவன் அவளை பார்ப்பதற்கு முன் எழுதியது)!!!

December 25, 2008

அவனும் அவளும்....(2)!!!!!



நேரம் காலை பத்து மணி. அவள் அலுவலகத்தில் மும்முரமாக வேலை பார்த்துக்கொண்டு இருந்த போது அவனிடமிருந்து போன் வந்தது.


"ஹலோ.. சொல்லுப்பா..."


"என்னடிம்மா, வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு.. உடம்புக்கு எதுவும் முடியலியா?"


"இல்லப்பா... ஒன்னும் இல்ல.. இங்க ஆபீஸ்ல ஒரு சின்ன பிரச்சினை.. அவ்ளோதான்.. நீ சொல்லு.. "


"ஏம்மா... என்ன ஆச்சு?"


"உனக்கு தான் தெரியும்ல.. நமக்கும் மானேஜருக்கும் நல்ல நாள்லயே ஆகாது... இன்னைக்கு இன்னொரு ஆள் பண்ண தப்புக்கு நான் மாட்டிக்கிட்டேன்.. அத விடு.. நீ எதுக்கு கால் பண்ணின.. அத சொல்லு..."


"ஒண்ணும் இல்லமா... பழைய தோஸ்த் ஒருத்தன் ஊருக்கு வந்து இருக்கான்...சாயங்காலமா அவன மீட் பண்ணலாம்னு ஒரு பிளான். மத்த பசங்ககிட்டையும் சொல்லி இருக்கேன். அப்படியே ஒரு படத்துக்கும் போயிட்டு வரலாமேனு ஐடியா...அது தான் மேடம்கிட்டே சொல்லிட்டு..."


"சரி.. சரி.. ரொம்ப இழுக்காத.. போயிட்டு வாப்பா.."


"நீங்க ஜாயின் பண்ண முடியாதா..."


"இல்லப்பா..சாரி.. வேல ஜாஸ்தி.. அதோட மானேஜர் பிரச்சினை வேற இருக்கு... நீ போயிட்டு வா..."


"ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையே..."


"லூசே..நான் தான் போயிட்டு வான்னு சொல்றேன்ல..ஒண்ணும் பிரச்சினை இல்ல.. ஹவ் எ நைஸ் டைம் பா..."


"ஓகேமா... டேக் கேர்... "


நேரம் நாலு மணி. அவன் நண்பர்களோடு இருந்த பொது அவளது அலுவலகத்தில் இருந்து போன் வந்தது.


"ஹலோ.. நான் ஆபீஸ் கிளார்க் பேசுறேன்.. சார் இருக்காங்களா?"

"நான் தான் பேசுறேன்.. சொல்லுங்க..."


"சார், இங்க மேடம்க்கு ஒரு சின்ன அக்சிடென்ட்..."


"என்னப்பா ஆச்சு..: அவன் பதறிப்போனான்.


"பயப்படுறமாதிரி ஒண்ணும் இல்ல சார்.. வண்டில இருந்து கீழ விழுந்துட்டாங்க.. கைல மட்டும் சின்ன காயம்..மருந்து போட்டாச்சு..."


"இப்போ அவங்க எங்கே இருக்காங்க.."


"பக்கத்திலேதான் இருக்காங்க. பேசுங்க சார்..." போனை அவள் வாங்கி கொண்டாள்.


"சொல்லுப்பா..பிரெண்ட பார்த்துட்டயா?"


"இப்போ அது தான் முக்கியமா.. என்னமா ஆச்சு.. கொஞ்சம் பத்திரமா இருக்க வேண்டாமா.. அடி ஏதும் படலியே?"


"இரு.. இரு.. இரு.. நீ டென்சன் ஆகுற அளவுக்கு ஒண்ணும் சீரியஸா எல்லாம் அடி படலப்பா.. லைட்டாதான்.. நான் போன் பண்ண வேண்டாம்னு தான் சொன்னேன்,.. ஆபீஸ்ல தான் கேக்காம போன் பண்ணிட்டாங்க.."


"நீ அங்கேயே இரு..நான் கிளம்பி வரேன்.."


"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்..நீங்க போய் படத்த பார்த்திட்டு வாங்க.. வண்டிய இங்கயே விட்டுட்டு நான் ஆட்டோ பிடிச்சி வீட்டுக்கு போறேன்.. நீ பிரெண்ட்ஸ் கூட கொஞ்ச நேரம் என்ஜாய் பண்ணிட்டு வா.."


"இல்லமா..நான் சொல்றத கொஞ்சம் கேளு.."

"முடியாது..நான் சொல்றத நீ கேளு.. ஓடு.. ஓடு..நான் கிளம்பி வீட்டுக்கு போறேன்..சீ யு..பாய்.. "போனை வைத்து விட்டாள்.


அவள் வீட்டுக்கு வந்து இறங்கியபோது கதவு திறந்து இருந்தது. வெளியே அவனுடைய பைக் நின்றது. உள்ளே போனால் அவன் இருந்தான்.


"எங்க அடிபட்டுச்சிமா.. சொல்லு.. மருந்து போடலாம்.."அவன் அவளை நெருங்கி வந்தான்.


"படத்துக்கு போகலையா..?"


"இல்ல..தியேட்டர் வாசல் வரைக்கும் போனேன்.. மனசு சரில்ல..அதனால டிக்கெட் வாங்கி பசங்கள உள்ள அனுப்பிட்டு நான் வந்துட்டேன்.."


"நான் தான் ஒண்ணும் இல்லன்னு சொன்னேன்ல.. ரொம்ப நாள் கழிச்சு வந்த பிரென்ட்னு சொன்ன.. கூட போய்ருக்கலாம்ல..நான் சொல்றத கேக்கவே கூடாதுன்னு முடிவே ஏதும் பண்ணிருக்கியா?"


"அப்படி எல்லாம் இல்லடிமா.."


"பின்ன..பாவம்ல உன் பிரெண்ட்ஸ் எல்லாம்..என்னதான் திட்டி இருப்பாங்க.."


"அதெல்லாம் இல்லடி.. அவங்களுக்கு தெரியும்.. சொல்லிட்டுதான் வந்தேன்.. காலைல இருந்து ஆபீஸ்ல பிரச்சினை..இப்போ இந்த அக்சிடென்ட் வேறே..நீ இங்க எப்படி இருப்பனு எனக்கு தெரியும்டிமா... இதுல போய் என்னால நிம்மதியா படம் பார்த்துகிட்டு உக்கார்ந்து இருக்க முடியாது.. அதுதான் கிளம்பி வந்துட்டேன்.."


"என்ன சொன்னாலும் ஒரு பதில் வச்சுருப்பியே.. உன்ன திருத்தவே முடியாது.."


"பரவாயில்லடிமா.. நீ என்ன எவ்ளோ திட்டினாலும்... நமக்கு ஒண்ணுனு சொன்னவுடனே இந்த பய துடிச்சி போய் ஓடிவந்துட்டான் பார்த்தியான்னு உள்ளுக்குள்ள சந்தோஷந்தான்படுவன்னு எனக்கு தெரியும்டி.." அவன் சிரித்துக்கொண்டே சொன்னான்.


"பரதேசி..நாயே..பன்னி..என்னோட வீக்பாயிண்ட் தெரிஞ்சுக்கிட்டு, என் உயிரை வாங்குறதுக்கே வந்திருக்கடா.."செல்லமாக அவன் தோள்களில் குத்தியவாறே மார்பில் சாய்ந்து கொண்டாள்.


அவன் சந்தோஷமாக அவளை அணைத்துக்கொண்டு பாட ஆரம்பித்தான்."உனக்கென நான்.. எனக்கென நீ.."!!!!!!

November 13, 2008

அவனும் அவளும்.....!!!!

அவன் கதவைத் திறந்து கொண்டு மெதுவாக வீட்டுக்குள் நுழைந்தான். டிவியில் டாம் அன்ட் ஜெர்ரி ஓடி கொண்டு இருந்தது. அவள் சமையலறையில் பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்தாள். மெதுவாக சென்று பின்னால் இருந்து அணைத்து கொண்டான்.

"ஐயோ.. என்ன இது.. விடு விடு.. ஐயா ரொம்ப நல்ல மூட்ல இருக்கீங்க போல?"

"ஆமாம்மா.. இன்னைக்கு ...... புத்தகம் பார்த்தியா? அதுல என்னோட கதை வந்திருக்கு.. ஆபீஸ்ல எல்லாரும் பார்த்திட்டு கூப்பிட்டு பாராட்டினாங்க தெரியுமா?"

"ம்ம்ம்ம்ம்.. அப்படியா? சரிப்பா..."

"ஏம்மா... மேடம் ரொம்ப சலிச்சுக்கற மாதிரி தெரியுது?... நீ படிச்சியா?"

"படிச்சேன்..ஆனா..எனக்கு பிடிக்கல.."

"பிடிக்கலியா?..ஏன்?.."

"சொல்ல தெரியல.. ஆனா பிடிக்கல"

"என் பிரெண்ட்ஸ் எல்லோரும் பிடிச்சிருக்குனு தானே சொன்னாங்க.. ஆபீஸ்ல கூட அதே தான் சொன்னாங்க.."

"அதுக்காக.?எனக்கு பிடிக்கலேனா பிடிக்கலைனு தான் சொல்லுவேன்"

"அது தான் ஏன்னு கேட்குறேன்.. ஏதாவது ஒரு காரணம் சொல்லு.."

"இங்கே பார்..உனக்கு என்ன பிடிக்குமோ அது எல்லாம் எனக்கும் பிடிக்கணும்னு எந்த கட்டாயமும் இல்ல.. அது எல்லாத்தையும் உன்கிட்ட நான் சொல்லி தான் ஆகணும்னு எந்த சட்டமும் கிடையாது.. பிடிக்கலைனு சொன்னா விடேன்.. ஏன் என் உயிரை வாங்குற?..."

விளையாட்டாக ஆரம்பித்தது.... வினையாகப் போனது. அவன் அமைதியாக நடந்து சென்று சோபாவில் அமர்ந்தான். டிவியில் இப்போது டாம் ஜெர்ரியை கண்டு பயந்து ஓடிக்கொண்டு இருந்தது. அவள் சமையலறையின் உள்ளேயே இருந்தாள். அங்கே விவரிக்க முடியாத ஒரு மௌனம் மட்டுமே இருந்தது.

சற்று நேரத்திற்கு பின் அவள் மெதுவாக நடந்து வந்து அவன் முன் அமர்ந்தாள். அவன் கண்களை பார்த்து சொன்னாள்..

"நீ எழுதுறது எனக்கு பிடிக்குதோ இல்லையோ.. உன்னோட விருப்பங்கள் எனக்கு படிக்குதோ இல்லையோ..அதெல்லாம் தாண்டி.. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் டா.. உன்னோட அன்பு தாண்டா எனக்கு எல்லாமே.."

அவள் கண்களில் நீர் திரண்டிருந்தது. அவன் அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டான். "நானும் அப்படித்தான்மா.."என்றவாறே அழத் தொடங்கினான். அங்கே காதல் அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தது!!!!