February 26, 2011

வலி


என் கனவுகளின் வனாந்திரங்களில்
அலைந்து திரிகிறதுன் நினைவுகள்
வன்மம் கொண்ட மிருகமென
இருள் சூழ்ந்த பாதைகளில்
இலக்கற்று சுற்றிக் கொண்டிருக்கிறேன்
இ(எ)ன்றேனும் மழை வரக்கூடுமென
காத்திருக்கிறது நிலம்
ரகசியமாய் காற்றுடன் உரையாடும்
மரங்களின் வேர்களில் வழிந்தோடுகிறது
தொலைந்துபோன காதலின் ஸ்பரிசங்கள்
தோல்வியின் வேதனைகளை தாங்கியபடி
கருமேகங்களென சிறகடித்துப் பறக்கும்
கறுப்பு நிறக் கொக்குகள் வானில்
குருதியின் ருசியறிந்த ஓநாய்கள்
காத்திருக்கின்றன தருணத்தை எதிர்நோக்கி
எங்கிருந்தோ கசியத்தொடங்குகிறது
துரோகத்தின் கொடிய நெடி
மாயமானின் நாபியில் இருந்து
பெருகிப்பெருகி மூச்சடைக்கும்
அந்நெடியில் இருந்து வெகுண்டோடி
கனவுகள் கிழித்து கண்விழித்தவன்
என் படுக்கையில் கிடந்தேன்
இருந்தும் அதிகாலைப் பனியென
உடம்பின் மீது உறைந்து போயிருந்தது
துரோகத்தின் தீரா நெடி

February 23, 2011

இரு பூதங்கள் - 2

இரு பூதங்கள் - 1

“முனியம்மா.. கதவைத்திற.. டிங்டிங்டிங் டிடிக்டிடிங்”

காசு பணம் சம்பாதிக்கணும்னு வேலை தேடி போன புருஷன் ரெண்டே நாள்ல திரும்பி வந்துட்டானேன்னு முனியம்மாளுக்கு மண்டை காய்ஞ்சு போச்சு.

“நான் உனக்கு என்ன கொண்டாந்திருக்கேன் பாரு..”

தன்கிட்ட இருக்க மண்தட்ட எடுத்துக் காமிச்சான் முனியன். முனியம்மாவுக்கு புஸ்ஸுன்னு ஆகிப்போச்சு. இதுக்குத்தானா இந்தக் கேனையன் இந்த ஆட்டம் ஆடினான்? புருஷன எளக்காரமாப் பார்த்தா. முனியனுக்கு அவ என்ன நினைக்கிறான்னு புரிஞ்சு போச்சு.

“அடிப்பாவி.. இது மாயத்தட்டுடி..”

தனக்கு அந்தத் தட்டு கிடச்ச கதைய முனியன் சொன்னவுடனே முனியம்மாவுக்கு தலைகால் புரியல. நம்ம கஷ்டகாலம்லாம் ஓடிப்போச்சுன்னு ஒரே குஷியாயிட்டா.

“ஏன்யா.. எனக்குத்தான் அல்வான்னா ரொம்பப் பிடிக்கும்னு உனக்குத் தெரியுமே.. வர வச்சுக் கொடுய்யா..”

முனியனும் சந்தோஷமா தட்ட எடுத்து அல்வா கொடுன்னு நினச்சான். ஒண்ணும் வரல. பூந்தி கொடு தட்டே. சேவு கொடு. தட்டே எனக்காகக் கொடு. ஒரு மண்ணும் வரல. அவ்வ்வ்.. பூதம் நம்மள நல்லா ஏமாத்திருச்சோ?

“ஏய்.. அப்படிப் பார்க்காத புள்ள.. அது.. நேத்திக்கு தட்டு ரொம்ப நேரம் வேலை பார்த்துச்சுல.. அதனால இப்போ ஓய்வா இருக்கு.. இன்னும் கொஞ்ச நேரத்துல சரியாப் போயிடும்..”

முனியனும் தன்னல முடிஞ்ச மட்டுக்கும் கெஞ்சுனான் கதறுனான். ஆனா ஒண்ணும் வேலைக்காகல. வெறும் மண்தட்டு என்னத்தக் கொடுக்கும்?

முனியம்மாவுக்கோ உச்சி மண்டைல சுர்ருன்னு ஏற ஆரம்பிச்சுருச்சு. நம்ம புருஷன மனுஷங்கதான் ஏமாத்துறாய்ங்கன்னு பார்த்தா இப்போ பூதங்க கூட ஏமாத்த ஆரம்பிச்சுருச்சே. ஒரு மனுஷன் இம்புட்டு கேனையனாவா இருக்குறது? சுத்தி முத்தி பார்த்தா. ஒரு நீட்ட கழி கிடந்தது. எடுத்து புருஷனுக்கு போட்டா ஒரு பூசை.

அடியப் பூரா வாங்கிக்கிட்டு நின்ன முனியன் ஒரு முடிவுக்கு வந்தான். மறுநாள் ஒரு தூக்குச் சட்டில ரெண்டு களி உருண்டைய எடுத்துக்கிட்டு காட்டுக்குள்ள நடந்து பூதம் இருக்க மரத்துக்கு வந்து சேர்ந்தான்.

“ஏய்.. உங்க ரெண்டு பேரையும் இப்போ நான் சாப்பிடப் போறேன்..”

ஆகா அந்த மந்திரவாதி ஏன் திரும்பி வந்தான் நாம்தான் அவனுக்கு மாயத்தட்டு தந்தோமேன்னு பூதங்களுக்கு ஒரே குழப்பம். குடுகுடுன்னு கீழ எறங்கி முனியன் முன்னாடி வந்து நின்னுச்சுங்க.

“அய்யா மந்திரவாதி.. இன்னும் என்ன பிரச்சினை?”

முனியன் நடந்தத சொன்னான். பூதங்களுக்கு ஒரே குழப்பம்.

“சரி.. எங்கேயோ தப்பு நடந்து போச்சு தலைவரே.. விடுங்க அத சரி பண்ணிடுவோம்..”

ஒரு பூதம் கண்ண மூடி மந்திரம் சொல்ல ஆரம்பிச்சது. ஜூலோ கூலோ அபால் டுபால் பம் பஜக். டஸ்.. புகைக்கு நடுவுல ஒரு ஆடு மேன்னு கத்திக்கிட்டு நின்னுச்சு.

“இந்த ஆடு இருக்கே.. இது ஒரு மந்திர ஆடு. நீங்க கொஞ்சம் புல்லு வெட்டி போட்டாப்போதும்.. தங்கமா புழுக்க போடும்..”

“இந்தத் தடவை என்னை நீங்க ஏமாத்தலயே..”

“அய்யய்ய.. என்ன தலைவரே.. நீங்க எம்புட்டுப் பெரிய மந்திரவாதி.. உங்கள நாங்க ஏமாத்த முடியுமா?”

முனியனுக்குப் பெருமை தாங்கல. சரி சரின்னு இளிச்சுக்கிட்டே ஆட்ட இழுத்துக்கிட்டு கெளம்பிட்டான்.

வழக்கம் போல இருட்டிப்போனதால வழில இருந்த கெழவி வீட்டுல முனியன் தங்குனான். போன தடவை மாயத்தட்டு. இந்த தடவை ஆடா? இதுல என்னா இருக்குன்னு கெழவி கேட்டா. முனியனும் வெள்ளந்தியா ஆடு தங்கப்புழுக்க போடும்னு ஒளரிட்டுத் தூங்கப் போயிட்டான். அன்னைக்கு ராத்திரி கெழவி முனியனோட ஆட்டக் கழட்டி ஒளிச்சு வச்சுட்டு ஒரு சாதா ஆட்ட கட்டி விட்டுட்டா. காலையில் கெளம்பி வீட்டுக்கு வந்தான் முனியன்.

“முனியம்மா.. கதவைத்திற.. டிங்டிங்டிங் டிடிக்டிடிங்..”

கதவைத் தொறந்த முனியம்மா கைல வெளக்குமாறோட நின்னா. இப்போ நம்ம புருஷன்காரன் என்ன கூத்து பண்ணப்போறானோ?

“இன்னைக்கு என்னா கதை சொல்லப்போற?”

அடியே இது மந்திர ஆடுன்னு ஆரம்பிச்சு முனியன் ஆட்டப் பத்தி சொன்னான். முனியம்மாவுக்கு இந்தத்தடவ கொஞ்சம் நம்பிக்கை வந்துச்சு. சரின்னு சொல்லி ஊரு பூரா சுத்தி புருஷனும் பொண்டட்டியும் புல்லறுத்துக் கொண்டு வந்து ஆட்டுக்குப் போட்டாங்க. அந்த ஆடும் நல்லாத் தின்னுபுட்டு வீடு பூரா வெறும் புழுக்கையா போட்டு வச்சது. தங்கப்புழுக்கையா இது? முனியம்மா பத்திரகாளியா மாறி வெளக்கமாத்த கொண்டு புருஷன சாத்து சாத்துன்னு சாத்திட்டா.

கடைசியா ஒரு முயற்சி. முனியன் திரும்பவம் பூதங்ககிட்ட போனான். அதுங்களுக்கு புரிஞ்சு போச்சு. யாரோ வெளயாடுறாங்க. சரி.. இதுக்கு ஒரு வழி பண்ணுவோம்னு மந்திரத்த சொல்லுச்சு பூதம். இஸ்தலக்கடி லாலா சுந்தரி கோலா கொப்புறங்கொய்யா.. முனியன் கைல ஒரு கம்பும் கயிறும் மாயமா வந்திருச்சு.

“தலைவரே.. இத எடுத்துக்கிட்டு போங்க.. உங்க பிரச்சினை எல்லாமே தீர்ந்துடும்”

சரின்னு கெளம்பி வந்த முனியன் எப்பவும்போல பாட்டி வீட்டுக்கு வந்தான். அசதியா இருக்குன்னு சீக்கிரமாவே தூங்கிட்டான். ஒவ்வொரு தடவையும் ஏதச்சும் மாயமந்திரப் பொருளைக் கொண்டுவருவானே இந்தத் தடவை கயிறும் கம்பும் கொண்டு வந்திருக்கானேன்னு பாட்டிக்கு ஒரே சம்சயம். ராத்திரி சத்தமில்லாமப் போய் கம்பக் கைல தொட்டுச்சு.

அடுத்த நிமிஷம்.. கயிறு கெழவியக் கட்டிருச்சு. கம்பு போட்டு டம் டம்முன்னு கெழவிய அடி நொறுக்குது. அவ குய்யோ முய்யோன்னு கத்த ஆரம்பிச்சுட்டா. சத்தம் கேட்ட முனியன் முழிச்சு வந்தான்.

“தம்பி.. தெரியாத்தனமா உன் பொருளைப் பூரா திருடிட்டேன். என்ன மன்னிச்சுடு. உன் தட்டையும் ஆட்டையும் திருப்பித் தந்திடுறேன். என்ன விட்டுடச் சொல்லு”ன்னு கெழவி கதறுது. முனியன் கம்பை பார்த்துக் கைய அசச்சான். அது அடிக்கிறத நிப்பாட்டி கயிரும் அவுந்துச்சு. கெழவி ஓடிப்போய் அவன்கிட்ட இருந்து எடுத்தத எல்லாம் திருப்பிக் கொடுத்தான்.

“எப்பவும் அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்படக்கூடாது.. புரிஞ்சுதா?”

பாட்டிக்கிட்ட சொல்லிட்டு வீட்டுக்குக் கெளம்பி வந்தான் முனியன். அவன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும்னு புரிஞ்சுக்கிட்ட முனியம்மா அவனோட சேர்ந்து சந்தோஷமா வாழ ஆரம்பிச்சா.

தன்கிட்ட இருந்த மாயப்பொருட்களோட உதவியோட எல்லாருக்கும் நல்லது பண்ணி ரொம்ப நாளைக்கு ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ்ந்தாங்க.

February 21, 2011

இரு பூதங்கள் - 1

ஒரு ஊருல முனியன், முனியம்மான்னு புருஷன் பொண்டாட்டி இருந்தாங்க. இதுல முனியன் ரொம்ப நல்லவன். அப்பாவி. யாரு எந்த வேல சொன்னாலும் சலிக்காம செய்வான். அத அந்த ஊருக்காரனுங்க நல்லா பயன்படுத்திக்குவாங்க. நாள் பூரா முனியன்கிட்ட வேல வாங்கிட்டு கொறஞ்ச கூலி கொடுத்து அனுப்பி விட்டுடுவாங்க.

முனியம்மாளும் நல்லவதான். ஆனா ஊருல இருக்குற எல்லாரும் தம்புருஷன நல்லா வேல வாங்கிக்கிட்டு ஏமாத்துறாங்களேன்னு அவளுக்கு ரொம்ப வருத்தம். நம்ம புருஷன் சரியான ஏமாளியா இருக்கானேன்னு பொலம்பிக்கிட்டே இருப்பா. இப்படியே விட்டா தன்னால முன்னேறவே முடியாதுன்னு தெரிஞ்சுகிட்டு ஒரு முடிவுக்கு வந்து தன் புருஷனக் கூப்பிட்டு சொன்னா.

“இந்தா பாரு. இந்த ஊருலயே இருந்தா இப்படியே கூலியாத்தான் இருக்கணும். இவய்ங்க உந்தலையில மொளகா அரச்சுக்கிட்டேதான் இருப்பாய்ங்க. நாளப்பின்ன நமக்குன்னு ஒரு புள்ளகுட்டி ஆச்சுன்னா அதுக்கு நாலு காசு பணம் சேர்த்து வைக்க வேணாமா? அதனால நீ நாளைக்கு வேற வேல தேடி வெளியூரு போற.. அங்கயாச்சும் காரியமா பொழக்கப் பாரு.. சரியா?”

முனியனால ஒண்ணும் மறுத்துப் பேச முடியல. சரின்னுட்டு மறுநாளு மூட்டயக் கட்டிட்டான். வழில சாப்பிடுறதுக்கு ரெண்டு களி உருண்டைய சட்டில போட்டுத் தந்தா முனியம்மா. வாங்கிக்கிட்டு காட்டு வழில நடக்க ஆரம்பிச்சான்.

எவ்வளோ நேரம் நடந்திருப்பான்னு அவனுக்கே தெரியாது. நல்ல பசி. சரி எங்கேயாவது உக்கார்ந்து சாப்பிடுவோம்னு ஒரு மரத்து நிழல்ல உக்கார்ந்தான். சட்டியத் தொறந்தா உள்ள மினுமினுட்டு ரெண்டு களி உருண்ட. அதப் பார்த்து முனியனுக்கு நாக்குல எச்சி ஊற ஆரம்பிச்சது. சிரிச்சுக்கிட்டே சந்தோஷமா கத்துனான்.

“ஏய்.. உங்க ரெண்டு பேரையும் நான் இப்போ சாப்பிடப்போறேன்.. ஹா ஹா ஹா”

அவன் கத்துனது அந்த மரத்து மேல உக்கார்ந்து இருந்த ரெண்டு பூதங்க காதுல விழுந்துச்சு. ஆகா கண்ணுக்குத் தெரியாம இருக்குற நம்மள சரியாக் கண்டுபிடிச்சுட்டானே.. அதோட நம்மள சாப்பிடப் போறேன்னு வேற சொல்றானே.. அப்போ இவன் பெரிய மந்திரவாதியாத்தான் இருக்கணும்னு அதுங்களுக்கு ரொம்பப் பயமாப்போச்சு.

டபால்னு எறங்கி முனியன் முன்னாடி வந்துச்சுங்க. “அய்யா மந்திரவாதி.. எங்கள ஒண்ணும் பண்ணிடாதீங்க..”

பொசுக்குன்னு தன் முன்னாடி வந்து நிக்கிற பூதங்களப் பார்த்தவுடனே முனியனுக்கு கையும் ஓடல காலும் ஓடல. இருந்தாலும் தைரியத்த வர வச்சுக்கிட்டு அதுங்கள நிமிர்ந்து பார்த்தான்.

“சரி.. சொல்லுங்க..”

“நீங்க எங்கள சாப்பிடப் போறதா சொன்னீங்க. வேண்டாம். எங்கள விட்டுருங்க..”

முனியனுக்கு புரிஞ்சு போச்சு. ஆகா நம்ம களி உருண்டைய சொன்னத இந்த முட்டா பூதங்க தங்கள சொல்றோம்னு நினச்சுக்கிடுச்சு போல. சரி இதை நாம பயன்படுத்திக்குவோம்னு நினச்சுக்கிட்டான்.

போனாப் போகுதுன்னு விடுறேன். அதுக்குப் பதிலா எனக்கு நீங்க என்ன தருவீங்க..?”

“இதோ..”

ஒரு பூதம் கண்ண மூடி ஜெய் அலக் பலக் டபக் நிரஞ்சன்னு ஒரு மந்திரத்த சொல்லுச்சு. புஸ்ஸுன்னு புகை. முனியன் கண்ணத் தொறந்து பார்த்தா அவன் கைல ஒரு மண் தட்டு இருந்துச்சு.

“இத வச்சு நான் என்ன பண்ண?”

“குருவே.. இது மந்திரத்தட்டு.. நீங்க சாப்பிடுறதுக்கு எதக் கேட்டாலும் கொடுக்கும்..”

முனியனுக்கு குஷியாயிடுச்சு. தட்ட எடுத்துக்கிட்டு பூதங்ககிட்ட சொல்லிட்டுக் கெளம்பிட்டான். ஊருக்குத் திரும்பி நடக்குறப்போ ராத்திரி ஆகிடுச்சு. இந்நேரத்துக்கு மேல இருட்டுல நடக்க முடியாது. என்ன பண்ணலாம்னு யோசிச்சப்போ வழில ஒரு வீட்டைப் பார்த்தான். சரி இங்க தங்கிட்டு காலைல போவோம்னு நெனச்சான். அங்க போய்ப் பார்த்தா ஒரு கெழவி வந்து கதவைத் தொறந்தா.

“பாட்டி.. பாட்டி.. இன்னைக்கு ராத்திரி மட்டும் நான் இங்க தங்கிக்கலாமா?”

“அதுக்கென்னப்பா.. தாராளமா.. ஆனா இங்க சாப்பிட எதுவும் இல்லையே..”

“நீ கவலப்படாத பாட்டி.. இப்போப் பாரு..”

அப்பாவி முனியன் தன்னோட தட்ட வெளில எடுத்து லட்டு கொடு பூந்தி கொடுன்னு சொல்ல ஆரம்பிச்சான். அவன் சொல்லச்சொல்ல எல்லா சாப்பாடும் மாயமா வர ஆரம்பிச்சது. கெழவிக்கு ஒரே ஆச்சரியம். இது எப்படி தம்பின்னு கேட்டா. முனியனும் தன்னோட கதைய சொன்னான்.

ரெண்டு பேரும் நல்லா சாப்பிட்டுப்புட்டு தூங்கப் போயிட்டாங்க. முனியனுக்கு சரியான அசதி. அடிச்சுப் போட்ட மாதிரித் தூங்கிட்டான். ஆனா கெழவிக்குத் தூக்கமே வரல. அந்த தட்டு ஞாபகமாவே இருந்துச்சு. நடுராத்திரில மெதுவா எந்திரிச்சு முனியனோட அறைக்குப் போனா. அங்க இருந்த மாயத்தட்ட எடுத்துட்டு ஒரு சாதாரண தட்ட வச்சுட்டு சத்தமே இல்லாம வந்து படுத்துக்கிட்டா.

அடுத்த நாள் காலையில ரொம்ப சீக்கிரமாவே எந்திரிச்சுட்ட முனியன் பாட்டிக்கிட்ட சொல்லிக்கிட்டு தன்னோட தட்டயும் எடுத்துக்கிட்டு கெளம்பிட்டான். வீட்டுக்கு வந்து சந்தோஷமா கதவத் தட்டினான்.

“முனியம்மா.. கதவத்திற.. டிங்டிங்டிங் டிடிக்டிடிங்..”

(தொடரும்..)

February 18, 2011

நினைவுகளில் பின்சுழலும் ஒலிநாடாக்கள் (2)

நினைவுகளில் பின்சுழலும் ஒலிநாடாக்கள் (1)

சிம்லாவில் இருந்து ஊருக்குத் திரும்பும் வழியில் சென்னையில் ஹால்ட். மதுரை செல்லும் டிரைனுக்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருந்ததால் ஊர் சுற்றலாம் என முடிவு பண்ணிக் கிளம்பியானது. தனியாக சுற்றக் கிளம்பியவன் நேராக எக்மோருக்கு முன்பாக இருக்கும் ஒரு குட்டி கேசட் கடையின் வாசலில் போய் நின்றேன். மரத்தாலான ஒரு பலகையில் கேசட்டுகளை பகுதி வாரியாகப் பிரித்து அழகாக அடுக்கி இருந்தார்கள். நான் வெகு நாட்களாக ஆசையாக கேட்டுக் கொண்டிருந்த "சாஜன் சலே சசுரால்" (ஹிந்தி வீரா) கேசட்டும் அதில் இருந்தது.

அப்போதெல்லாம் கேசட்டின் விலை முப்பது ரூபாய்தான். ஆனால் அதை வாங்கக்கூட என்னிடம் காசு கிடையாது. அன்று நடந்தது என்ன, எப்படி என்பது இன்று வரை எனக்குப் புரியவில்லை. கேசட்டுகளை வாங்குபவன் போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன் கடைக்காரர் அசந்த வேளையில் அந்தக் கேசட்டை எடுத்து பேன்ட் பைக்குள் போட்டு விட்டேன். பிறகு எதுவுமே தெரியாதவன் போல கொஞ்சம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுக் கிளம்பினேன். இரண்டு அடிதான் நடந்திருப்பேன்.

"தம்பி நில்லுங்க.." எனக்கு பகீரென்றது.

" இங்க ஒரு கேசட் குறையுது.. எடுத்தீங்களா..?"

"இல்லண்ணே.."

சந்தேகத்தோடு நெருங்கி வந்தவர் என்னை சோதனை செய்வதாக பாக்கெட்டுக்குள் கை விட்டால் அங்கே கேசட்.

"பளார்ர்.." அவர் விட்ட அறையை என்னால் இப்போதும் உணர முடிகிறது. திக்பிரம்மை பிடித்தவன் போல நின்று கொண்டிருந்தேன்.

"இந்த வயசுலேயே திருட்டு வேண்டிக் கிடக்குதா.. பரதேசி.. காசு குடுத்து கேசட்ட எடுத்துட்டுப் போடா.."

என்னிடம் காசு இல்லை என்று சொன்னால் அவர் நம்பவோ ஏற்றுக் கொள்ளவோ இல்லை. ஏற்கனவே ஒரு மணி நேரம் ஆகி விட்டிருந்தது. சீக்கிரம் ஸ்டேஷனுக்குப் போக வேண்டும் இல்லையென்றால் வீட்டில் தேட ஆரம்பித்து விடுவார்கள். அப்படி யாரும் தேடிக் கொண்டு வந்து நான் திருடி மாட்டியது தெரிந்து விட்டால் அது இன்னும் அசிங்கம். என்ன செய்வதென்றே தெரியவில்லை. அழுதபடியே கடையின் ஓரமாக நின்று கொண்டிருந்தேன். அப்போது யாரென்றே தெரியாத ஒரு பெரியவர் என்னருகே வந்தார்.

"ஏம்ப்பா இந்த சின்னப்பையன் அழுதுக்கிட்டு இருக்கான்." (அப்போது நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்தேன் என்பதை நினைவில் கொள்க..)

கடைக்காரர் நடந்ததை சொன்னார். பொறுமையாகக் கேட்டவர் பணத்தைக் கொடுத்து அந்தக் கேசட்டை வாங்கி என்னிடம் தந்தார்.

"என்னைக்கும் திருடுறது தப்புப்பா.. பணம் இல்லன்னா வாங்காமக் கூட இருந்திடலாம். ஆனா தெரியாம எடுக்கக் கூடாது.. சரியா..?"

என் வாழ்வில் நான் தெளிந்த ஒரு முக்கியமான நாள் அது. நெருப்பைத் தொட்டால் சுடும் என்பதை தொட்டு நான் தெரிந்து கொண்ட நாள். முகம் தெரியா அம்மனிதருக்கு இந்நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதன் பின்பு கேசட்டுகளின் மீதான காதல் இன்னும் அதிகமானது. நியாயமாக காசு சேர்த்து வாங்க வேண்டுமென வீட்டில் கொடுக்கும் ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் காசுகள் எல்லாவற்றையும் மிச்ச்சப்படுத்தத் தொடங்கினேன். முப்பது ரூபாய் சேர்ந்தால் ஒரு கேசட். அது பெரும்பாலும் ஹிந்தி பாப் பாடலாகத்தான் இருக்கும். தலேர், பாபா சேகல், பங்கஜ் உதாஸ், அத்னான் சாமி, லக்கி அலி என்று பிரியமானவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போனது.

தமிழில் ஒரிஜினல் கேசட் வாங்குவேன் என்றால் அது ஏ.ஆர்.ரகுமான் மட்டுமே. பாடல்கள் வெளியாகும் தினமே வாங்கி விடுவேன். கேட்டு வாங்க வேண்டும் என்ற கணக்கெல்லாம் கிடையாது. ரகுமான் என்றால் கண்டிப்பாக நன்றாக இருக்கும். அவ்வளவே.. முப்பது ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த கேசட்டுகளின் விலையை ஏற்றி விட்ட பெருமையும் ரகுமானுக்கே. முதல் முதலாக ஜீன்ஸ் கேசட்டை நாற்பத்து ஐந்து ரூபாய்க்கு விற்றார்கள். (கூடவே ஒரு ட்ரிக்கர் ஜீன்ஸ் ஆபெரோடு..) பின்பு வந்த வந்தே மாதரம் அறுபது ரூபாய் என ஒரேடியாக ஹை-டெக்கானது.

நான் பாட்டு கேட்க வந்த காலத்தில் ராஜாவின் அலை ஓய ஆரம்பித்திருந்தது. எனவே அவருடைய பழைய பாடல்கள் எல்லாம் ரெக்கார்டிங் தான். கல்லூரியில் வார்டனுக்குத் தெரியாமல் வைத்திருந்த பிளேயரில் ராவெல்லாம் எங்களைத் தாலாட்டி தூங்க வைப்பது இளையராஜாதான். ஒரு 90 கேசட் நிறைய மெலடி பாடல்களாக போட்டு விட்டால் போதும். ராத்திரி பூராவும் ஓடிக் கொண்டே இருக்கும்.

இது தவிர்த்து எனக்குப் பிடித்த இன்னொரு இசையமைப்பாளர் வித்தியாசாகர். அவருடைய பாடல்கள் மற்றும் ஹிந்தி படப்பாடல்கள் எல்லாம் 15 ரூபாய் ட்யூப்ளிகட் கேசட்டாக வாங்கி விடுவேன். நல்ல பாட்டு போட்டால் சரியாகப் பாடாத எங்கள் வீட்டு டெல்லி செட் டேப் ரெக்கார்டர் (பிறிதொரு டெல்லி பயணத்தில் வாங்கியது) இந்த கேசட்டுகள் என்றால் ஜம்மென்று பாடும். டவுன் ஹால் ரோட்டில் இருந்த ஒரு தள்ளு வண்டிக் கடையில் அந்தக் கேசட்டுகளை வாங்குவேன். பதினைந்து வருடங்களாக இந்தக் கடையை நடத்தி வரும் அக்காவுக்கு மாறுகண். அவரும் காலத்துக்குத் தகுந்த மாதிரி மாறி இப்போது அதே இடத்தில் சி.டி. கடை போட்டிருக்கிறார்.

1996 -2000 .. இதுதான் நான் ரொம்பத் தீவிரமாக கேசட்டுகள் வாங்கிய காலம். மிகச்சரியாக 2000 ஆம் ஆண்டு நெருங்கி வந்த நேரத்தில் ஹிந்தியில் ரீமிக்ஸ் என்னும் அரக்கன் புகுந்து பாப் உலகத்தைக் கிழித்துப் போட்டான். அத்தோடு சி.டி மற்றும் இணையத்தின் வீச்சு அதிகமாகத் தொடங்கிய நேரமும் அதுதான். மெதுமெதுவாக என் கேசட்டுகள் வாங்கும் வேகம் குறைய ஆரம்பித்தது. கடைசியாக வாங்கியது 2006 வாக்கில் என நினைக்கிறேன். அத்னான் சாமியின் "கிசி தின்" ஆல்பமும் கைலாஷ் கேரின் "கைலாச"வும் வாங்கினேன்.

2008 கொங்கு கல்லூரியில் வேலை பார்த்தவரை பிளேயரில் தொடர்ச்சியாகக் கேட்டு வந்தேன். மதுரை வந்து கொஞ்ச நாட்களில் டேப் ரிப்பேராகிப் போக மொத்தமாக எல்லாம் முடிந்து போனது. கேசட்டுகளை எல்லாம் ஒரு பையில் போட்டு பரணில் ஏற்றி விட்டாயிற்று. அந்தப் பையைத்தான் இப்போது தேடி எடுத்து பார்த்துக் கொண்டிருந்தேன். உள்ளே சொல்ல முடியாத துயரம். எளிதில் கிடைக்காத எத்தனையோ பாடல்கள் இந்தக் கேசட்டுகளில். ஏன் இவற்றை இப்படிப் போட்டு வைத்திருக்கிறேன்? மீண்டும் டேப்பை சரி செய்து கேட்க வேண்டும் எனத் தோன்றுகிறது. ஆனால் இதை எல்லாம் ரிப்பேர் வேலை பார்க்கும் கடைகள் இன்னும் இருக்கிறதா எனத் தெரியவில்லை.

காலம் நம் கண்முன்னே நிறைய விஷயங்களை கலைத்துப் போட்டிருக்கிறது. நாம் பொக்கிஷமாக நம்பிய சில விஷயங்கள் ஒன்றும் இல்லாததாக மாறிக் கொண்டிருக்கின்றன. அதில் இந்த கேசட்டுகளும் உண்டு. இன்னும் கொஞ்ச வருடங்களில் இவை சுத்தமாக இல்லாமலும் போகலாம். எனினும், என்னைப் போல ஒரு சில நண்பர்களின் மனதில், எப்போதும் இந்த ஒலிநாடாக்கள் நினைவுகளின் வழியே சுழன்று கொண்டேயிருக்கும்.

பின்குறிப்பு: இது என்னுடைய முன்னூறாவது பதிவு. சிறுபிள்ளை விளையாட்டென ஆரம்பித்த இந்தப் பதிவு இத்தனை தூரம் வந்திருக்கிறது எனில் அது உங்கள் அனைவரின் அன்பாலும் ஆதரவாலும்தான். நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்தநன்றிகள்.

February 17, 2011

நினைவுகளில் பின்சுழலும் ஒலிநாடாக்கள் (1)


பாலு மகேந்திராவின் பழைய திரைப்படங்கள் ஏதேனும் கிடைக்குமா என விசாரிப்பதற்காக கீஷ்டுகானம் வரை போயிருந்தேன். உள்ளே நுழையும்போதே ஒரு மாதிரியாக இருந்தது. கடைசியாக அந்தக் கடைக்குப் போனது எப்போது என்றே நினைவில்லை. இத்தனைக்கும் ஒரு காலத்தில் அந்தக் கடையே பழியாகக் கிடந்திருக்கிறேன். இணையம் வந்தபின்பு வீட்டிலேயே தேவையான விஷயங்களை தரவிறக்கம் செய்து கொள்வதால் அங்கு போவதற்கான தேவைகளே இல்லாமல் போயிருந்தன.

கடை நிறையவே மாறி இருந்தது. எங்கு பார்த்தாலும் டி.வி.டி.க்கள். பெரும்பாலும் ஆங்கில, ஆங்கில டப்பிங் மற்றும் பழைய காலத் தமிழ்ப்படங்கள். அங்கங்கே ஓரமாக சில இடங்களில் மட்டும் பாட்டு சி.டி.க்கள். ஒரு முக்கியமான விஷயம் கண்ணில் தட்டுப்படவே இல்லை. மெதுவாகத் தயங்கியபடியே கடைக்காரரிடம் கேட்டேன்.

"இப்ப கேசட்டுங்க எல்லாம் வர்றது இல்லையாண்ணே?"

வித்தியாசமாக என்னை ஏற இறங்கப் பார்த்தவர் உள்ளே வரும்படி அழைத்துப் போனார். ஒரு மூடிய கதவின் பின்னே அந்த ரேக்கு இருந்தது. அத்தனையும் பழைய கேசட்டுகள்.

"புதுப்படம் கேசட் எல்லாம் கம்பெனிலேயே போடுறது கிடையாது தம்பி. சி.டி. மட்டும்தான். அதுவும் எல்லாப்பயலும் நெட்லே எடுத்துடுறாங்க. அப்புறம் எங்கிட்டு? போன வருஷம் நல்லாப் போன படம்னா எந்திரந்தான். ஆனா அதுவுமே மொத நாள் எத்தன போச்சு தெரியுமா? வெறும் நாப்பது சிடி. அதுதான் இன்னிக்கு வரைக்கும் ஒரே நாள்ல ஜாஸ்தியா வித்த ரெக்கார்டு. இந்த நிலமையில இன்னும் கேசட்டு பத்தி கேட்டுக்கிட்டு இருக்கீங்களே? சரியாப் போச்சு போங்க. ஏதோ இந்த லாரிக்காரன், கார்னு ஒண்ணு ரெண்டு பேரு கேப்பாங்களேன்னு இதை எல்லாம் மிச்சம் வச்சிருக்கோம். ஹ்ம்ம்.."

புலம்பியபடி அவர் வெளியே போக நான் அந்தக் கேசட்டுகளையே பார்த்துக் கொண்டிருந்தேன். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தங்களைப் பலி கொடுத்து, வயதாகிப் போனபின்னும் யாரேனும் வரமாட்டார்களா என்னும் நப்பாசையோடு தெருவில் காத்துக் கிடக்கும் வேசையரைப்போல, யாருக்காக இவை காத்து நிற்கின்றன? ஏதோ கொஞ்சம் பாரமாக இருக்க எதுவுமே வாங்காமல் வீடு வந்து அமைதியாக உட்கார்ந்து விட்டேன்.

வெகு நேரம் கழித்து வீட்டு பரணில் அந்தப் பையைத் தேடிப்பிடித்து எடுத்தேன். உள்ளே கிட்டத்தட்ட முன்னூறு கேசட்டுகள். இரண்டு வருடங்களுக்கு முன்பு டேப் ரெக்கார்டர் பழுதாகிப் போன நாள் முதலாக பயன்படுத்தப்படாமலே முழுக்க தூசியடைந்து கிடைந்தன. அவற்றைப் பார்க்க பார்க்க ஏதோ ஒரு குற்றவுணர்வு என்னை வெகு ஆழமாகப் பீடிக்கத் தொடங்கியது.

இசை மீதான என்னுடைய காதல் என் பத்தாம் வகுப்பு விடுமுறையில் துவங்கியது. அப்பா ரயில்வேயில் இருந்ததால் ஒவ்வொரு வருட முடிவிலும் மே மாதம் இலவசமாக ஊர் சுற்றி வருவோம். அந்த வருடம் சிம்லா போகலாம் என முடிவானது. வழியில் பாம்பேயில் ஒரு நாள் தங்குவதாக இருந்தது. ஒரு கொலைவழக்கில் தமிழ்நாட்டை விட்டு ஓடிப்போயிருந்த என் மாமா பையன் அங்குதான் இருந்தான் என்பதால் அவனை சந்திப்பதற்காக இந்த ஏற்பாடு.

அந்தப் பயணத்தில் அவன் எனக்கென ஒரு பரிசு வாங்கி வந்திருந்தான். அது ஒரு விடியோகான் வாக்மேன். எனக்கு சந்தோசம் தாங்கவில்லை. நான் பாட்டு கேட்பதற்காக எனக்கே எனக்கென ஒரு வாக்மேன். வாவ்...என்னுடைய செட்டு பசங்களுக்கு மத்தியில் அருமையாக கெத்து காட்டலாம். அதுநாள் வரை எனக்குப் பிடிக்காதவனாக இருந்த அவன் ஒரே நாளில் எனக்கு நெருங்கின மாமனாகிப் போனான். அதில் ஒரு பிரச்சினை. வாக்மேன் இருக்கிறது. ஆனால் கேசட்? ஒன்றுகூட இல்லை. அதை அவனிடமே சொன்னேன்.

"நான் வாங்கித் தர்றேண்டா.. சொல்லு.. உனக்கு என்ன கேசட் வேணும்?"

அப்போதெல்லாம் தமிழ்ப்பாடல்களை விட ஹிந்திப் பாடல்களை அதிகம் விரும்பிக் கேட்பேன், குறிப்பாகப் பாப் பாடல்கள். எம் டிவியும், சானல் வியும் தமிழ்நாட்டில் அறிமுகமாகி இருந்த காலம். எனவே அவனிடம் சொல்லி நான் ஆசை ஆசையாக வாங்கிய முதல் கேசட் "made in india - alisha chinai". பயணம் முழுதும் அந்த ஒரே கேசட்டையே திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருந்தேன். வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் நான் செய்ய வேண்டிய வேலை எதுவெனவும் முடிவு செய்து விட்டேன். அது - கேசட்டுகள் வாங்கிக் குவிப்பது.

(தொடருவேன்..)

February 15, 2011

காட்சிப்பிழை


கனவுகளில்
எத்தனையோ லட்சம் மனிதர்களால்
எத்தனையோ கோடி முறை
விதவிதமாய்
புணரப்பட்ட அவ்வுடல்
உத்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது
லாரியின் முன்தொங்கும்
கறுப்புக்கயிற்றின் வெண்சங்கு
அல்லது
அறுந்து தொங்கும்
சிலந்தி வலையின்
ஒற்றையிழையில்
ஊசலாடிக் கொண்டிருக்கும்
பூச்சியொன்றை நினைவுறுத்தியபடி
காதல் தோல்வியென சிலரும்
தீராத நோயென சிலரும்
நம்பிக்கைத் துரோகமென சிலரும்
படங்களின் தோல்வியே காரணமென சிலரும்
எல்லாம் தெரிந்திருந்தும்
ஏதும் தெரியாதவன் போல்
கூட்டத்தில் ஒருவனாய் நின்றிருந்தேன்
அன்றிரவென் சம்போகத்தில்
தொடர்ச்சியாய் வந்து போன
முகங்களின் ஊடே
திடீரெனத் தோன்றிய அவள் முகத்தில்
கண்கள் இருக்குமிடத்தில் வெற்றுக்குழிகளும்
வாயில் இரு கோரைப்பற்களும் - அதில்
உறைந்து போனதொரு சிரிப்பும்
இருந்தன

(புகைப்படம் - auniakahn.com)

February 11, 2011

ஒளியேந்திய பெண் - ஈரோம் சர்மிளா

நேற்று மாலை ஆறு மணி அளவில் காந்தி மியூஸியத்தில் ஈரோம் சர்மிளாவின் வாழ்வையொட்டி அமைக்கப்பட்ட "ஒளியேந்திய பெண்" என்கிற ஒரு நபர் நாடகம் நடத்தப்பட்டது. ஈரோம் சர்மிளா யாரெனக் கேட்பவர்களுக்கு... கடந்த பத்து வருடங்களாக இந்திய அரசை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மணிப்பூரைச் சேர்ந்த பெண். ஆயுதப்படையினர் சிறப்பு அதிகாரச் சட்டம் - 1958 தன்னுடைய மாநிலத்திலிருந்து திரும்பிப் பெறப்பட வேண்டும் என்கிற கோரிக்கையோடு இவர் போராடி வருகிறார். பத்தாண்டுகளாக தொடர்ந்து வரும் இந்த அறப்போராட்டத்தை கலைக்க அரசால் மூக்கின் வழியே கட்டாயமாக உணவு செலுத்தப்பட்டு வருகிறது. அப்பாவி மக்களை தேசத்துரோக குற்றச்சாட்டின் பேரில் சுட்டுக் கொன்று சித்திரவதை செய்யும் ராணுவத்தை எதிர்த்து சர்மிளா போராடி வருகிறார்.

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஓஜெஸ் என்கிற இளம்பெண் சர்மிளாவின் பாத்திரத்தை ஏற்று இந்த நாடகத்தை நடத்துகிறார். மணிப்பூரின் வரலாறு, வடகிழக்கு மாகாணங்கள் மீதான அரசின் மெத்தனம், ராணுவத்தின் பாலியல் அத்துமீறல்கள், சர்மிளாவின் தொடர்கைதுகள் என எல்லாமே நாடகத்தின் வாயிலாக அருமையாக சொல்லப்படுகிறது. நாடகத்தில் இருந்து சில துளிகள் உங்களுக்காக..

** உங்களை நான் இப்போது மணிப்பூருக்கு அழைத்துப் போகப்போகிறேன். அதற்கு முதலில் நாம் ரயில் டிக்கட் புக் செய்ய வேண்டும். ஆனால் எங்கள் மாநிலத்தின் தலைநகரான இம்பாலில் ரயில் நிலையம் கிடையாது. மிக அருகில் இருக்கும் வேறொரு ஊரின் ரயில் நிலையமோ 260 கிமீ தொலைவில் உள்ளதே.. உங்கள் நேரம் நன்றாக இருந்தால் அங்கிருந்து சாலைவழிப்பயணமாக எட்டு மணி நேரத்தில் வந்து விடலாம்.

** உங்களுக்கு ஒரு நாளைக்கு இருபத்து நாலு மணி நேரமும் மின்சாரம் உண்டு. எங்களுக்கு அது வெறும் கனவு. பெட்ரோல் ஒரு லிட்டர் 150 ரூபாய். அதற்கும் மூன்று மணி நேரங்கள் க்யூவில் காத்திருக்க வேண்டும். இந்தியாவோடு எங்களை இணைக்கும் சாலையான NH31 இருந்தும் இல்லாத கதைதான்.

** எங்கள் தீஸ்தா - பிரம்மபுத்திரா நதிக்கரைகளில் மின் திட்டங்கள் எத்தனையோ செயல்படுத்தபடுகின்றன. மொத்த இந்தியாவும் எங்களால் ஒளிரக்கூடும். ஆனால் எங்கள் வாழ்வோ.. என்றும் மீள முடியாத இருளிலேயே இருக்கிறது.

** இந்த நாட்டின் தேசிய கீதத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். புவியியல் ரீதியாக எல்லா மாநிலங்களுக்கும் இடமுண்டு. ஆனால் ஒரு வடகிழக்கு மாகாணம் கூட இல்லையே.. இதை எப்படி எங்களால் தேசியகீதமாக ஏற்றுக் கொள்ள முடியும்? உஷ்ஷ்ஷ்.. இதையெல்லாம் கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை கிடையாது.

** எங்கள் சமூகம் தாய்வழி சமூகம். இங்கெ இருக்கக் கூடிய மார்க்கெட்டுகள் எல்லாமே பெண்களால் நடத்தப்படுபவை. நாட்டிலேயே ரொம்பப் பெரிய இந்த மார்க்கெட்டுகளை “இமா மார்க்கெட்” என்றழைப்பார்கள். இதைத்தான் இந்திய அரசு மொத்தமாக இடித்து விட்டு பெருவணிக அரக்கர்களை இறக்குமதி செய்யத் துடிக்கிறது.

** பள்ளியில் நாம் படிக்கும்போது புத்தகங்களோடு எனக்கு சிநேகம் உண்டானது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் எத்தனை எத்தனை பேர்.. அற்புதம். ஆனால்.. அவர்களில் ஒருவர் கூடவா எங்கள் மாநிலத்தில் இருந்து வரவில்லை? ஏன் அவர்கள் சரித்திரம் இருட்டடிக்கப்படுகிறது? இந்தியாவுக்கு வெகு முன்னரே எங்களுக்கு சுதந்திரம் கிடைத்தது என்பதை நீங்கள் அறிவீர்களா?

** வளர்ந்து பெரியவளாகி ஒரு மனித நல இயக்கத்தில் என்னை இணைத்துக் கொண்டேன். கிராமங்களுக்குச் சென்ற போது எனக்கு பல அதிர்ச்சிகள். வன்புணர்ச்சிகள், காரணமே இல்லாத ஆள் கடத்தல்கள், கொலைகள்.. இந்த சட்டம் எதை எல்லாம் தவறு என்று சொல்கிறதோ, அது எல்லாமே. எங்கள் கிராமங்களில் சர்வசாதரணமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

** ௨000 ஆம் ஆண்டின் ஒரு கறுப்பு தினம். அந்த கிராமத்தில் பஸ்ஸுக்காக காத்துக் கொண்டு சிலர் நின்றுந்தார்கள். ஆனால் அங்கே வந்ததோ ஆயுதம் ஏந்திய வீரர்களைத் தாங்கிய ஒரு கவச வண்டி. சட் சட் சட்... துப்பாக்கிகள் அதிர்ந்து அடங்கின. பத்து சவங்கள். அந்த சாலையின் நடுவில் கிடந்தது. ஏன் இந்தப்படுகொலைகள்? தெரியாது. மறுநாள் செய்தித்தாளில் அதைச் செய்தது அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் என்கிற இந்திய ராணுவப்பிரிவு எனத் தெரிந்தது. இறந்து போனவர்களில் சிறுவயதிலேயே வீரச்செயல் புரிந்ததற்காக விருது வாங்கிய ஒரு சிறுவனும் இருந்தான். என்ன மாதிரியான கொடுமை இது?

** நான் யோசிக்க ஆரம்பித்தேன். எம்மாதிரியான செயலில் ஈடுபட்டால் இந்த நிலை மாறும்? நான் என்னுடைய எந்தப் பொருளை பணயம் வைத்தால் என் மக்களுக்கு நன்மை செய்ய முடியும்? நான் அந்த தீர்மானத்துக்கு வந்தேன். அது அற வழியிலான உண்ணாவிரதம். என் முடிவைப் பார்த்து நிறைய பேர் சிரித்தார்கள். இந்த அரசாங்கம் கல்லைப் போன்றது. உன்னை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள் என்று கேலி செய்தார்கள். ஆனால் உண்ணாவிரதம் ஆரம்பித்த இரண்டே நாட்களில் நான் கைது செய்யப்பட்டேன். எனக்கு நம்பிக்கை வந்தது. நான் சரியான பாதையைத்தான் தேர்ந்தெடுத்து இருக்கிறேன்.

** போராட்டம் அதிகமாக இந்திய ராணுவம் எங்கள் ஊரைச் சூழ்ந்து கொண்டது. சொல்ல முடியாத அட்டூழியங்கள். ஜூலை 2004, எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த சகோதரி மனோரமா இரவோடிரவாக ராணுவத்தால் வீட்டை விட்டு இழுத்துச் செல்லப்பட்டார். “ஏ பெண்ணே.. வீணாக சத்தம் போடாதே. அரசியல் உனக்கெதற்கு? நீ வெறும் சதைக்கோளம் மட்டுமே.. இரண்டு வட்ட மார்புகளும் ஒரு யோனியும் கொண்ட பெண் அவ்வளவே..” இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு காட்டுப்பகுதியில் அவருடைய பிணம் கிடைத்தது. அவருடைய யோனியில் ஐந்து துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து இருந்தன. அவள் பெண்ணாக இருந்ததற்கான விலையைக் கொடுத்திருந்தார் மனோரமா.

** இதன் எதிர்வினையாகவே மணிப்பூரிப் பெண்கள் அஸ்ஸாம் ரைஃபிள்களின் அலுவலகம் முன்பு நிர்வாணமாக போராடினார்கள். “Indian Army Rape Us". நாங்கள் உங்கள் முன்பு திறந்த மார்புகளோடு இருக்கிறோம். வந்து உங்கள் மூவர்ணக்கொடியை எங்கள் உடம்புகள் மீது பொறித்துச் செல்லுங்கள் என அறைகூவல் விடுத்தார்கள்.

** பண்டிகைகள் வந்துபோவது போல நானும் வருடா வருடம் கைது செய்யப்படுவதும் விடுவிக்கப்படுவதுமாக இருந்தேன். என்னுடைய ஆதர்ஷமான காந்தி மகாத்மாவின் சமாதியில் நான் சங்கல்பம் எடுத்துக் கொண்டேன் தொடர்ந்து போராட. அதற்குப் பிறகு நான் தற்கொலைக்கு முயன்றதாக கைது செய்யப்பட்டேன். ஆனால் அது உண்மையல்ல. நான் என்னையும் என் உயிரையும் ரொம்பவே நேசிக்கிறேன். அதனாலேயெ அதை என் பகடைக்காயாக பயன்படுத்த விழைகிறேன். எனவேதான் என் உடம்பையும் உயிரையும் வருத்திக் கொண்டு போராடி வருகிறேன். நான் ஏற்றியிருக்கும் இந்த நெருப்பு பெரிதாகப் பரவும். கடைசியில் உண்மை வென்றே தீரும் என நான் தீவிரமாக நம்புகிறேன். கண்டிப்பாக ஒரு நாள் எனது ஊருக்கான விடிவுகாலம் பிறந்தே தீரும். அதுவரை நான் பொறுமையாகக் காத்துக் கிடப்பேன். நான் ஈரொம் சர்மிலா...

ரொம்ப அருமையாக நடந்த நாடகத்தின் முடிவில் சர்மிளாவுக்கு மதுரை நண்பர்களின் சார்பாக சால்வை அணிவிக்கப்பட்டது. அதை ஈரோம் சர்மிளாவிடம் கொண்டு போய் சேர்ப்பிப்பதாக அவர் சொன்னதால் அதில் நண்பர்கள் அத்தனை பேரும் கையொப்பம் இட்டார்கள். அதன் பின்பாக கேள்வி பதில் நேரமும் சில அரசியல் விஷயங்களும் பகிரப்பட்டன. தன் மக்களின் நலனுக்காக போராடி வரும் சர்மிளாவின் கனவாகும் என நாமும் நம்புவோம்.

நாடகத்தை காண இங்கே சொடுக்குங்கள்..

குறிப்பு: இதை வசிக்கும் நண்பர்கள் தங்கள் வலைப்பதிவுகளில் இதை எழுத முடிந்தால் இன்னும் நிறைய பேரைப் போய்ச்சேரும் வாய்ப்பு இருக்கிறது. பஸ்ஸிலும் ரீஷேர் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

February 6, 2011

யுத்தம் செய் மிஷ்கின்

தமிழ் சினிமா உலகில் தங்களுக்கென பிரத்தியேக அடையாளங்களை உருவாகிக் கொண்ட இயக்குனர்கள் என்றால் வெகு சிலரை மட்டுமே சொல்ல முடியும். அவர்களில் முக்கியமானவர்கள்... மனித மன உணர்வுகளை துல்லியமாக படம் பிடித்த மகேந்திரன், கிராமப்புறம் சார்ந்த படங்கள் என்றால் பாரதிராஜா, சிக்கலான உறவுமுறைகள் சார்ந்து இயங்கிய பாலச்சந்தர், படத்துக்கு சம்பந்தமே இல்லாத பிரம்மாண்டப் (என்று நம்பப்படுகிற) படங்களை எடுத்த ஷங்கர், இருண்மையும் மூர்க்கனத்தனமும் நிரம்பிய பாத்திரங்களை அச்சு அசலாக உலவவிட்ட பாலா. இவர்கள் எல்லாருமே தாங்கள் உண்டாக்கிய புறச்சூழல் மூலமாகவும் தாங்கள் காட்டிய மனிதர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த உலகம் காரணமாகவும் தனித்துத் தெரிபவர்கள்.

ஆனால், இதிலிருந்து விலகி, கதை சொல்லும் உத்தியிலும் தங்களுக்கான பிரத்தியேகமானதொரு திரை மொழியை உருவாக்குவதிலும் தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றவர்கள் என்னால் மூன்று பேரை சொல்ல முடியும். குற்றவுணர்வு இல்லாத காமத்தை திரையில் காட்சிப்படுத்திய பாலு மகேந்திரா அதில் முதன்மையானவர். அவர் படங்களில் நாயகனுக்கு இடுப்புக்கு மேலேயும் நாயகிக்கு இடுப்புக்குக் கீழேயும் உடையிருக்காது என்பது எழுதப்படாத விதி. அடுத்ததாக மணிரத்னம். படம் இருட்டுக்குள் நடக்கிறது என்றால் சிறு குழந்தை கூட அது மணியின் படம் என சொல்லிச் செல்லும். அதே போல அவர் படத்தின் பாத்திரங்கள் பேசும் ஒற்றை வார்த்தை வசனங்களைத் தனது அடையாளமாக மாற்றிக் கொண்டவர். அந்த வரிசையில் அடுத்தவராக என்னால் இப்போது மிஷ்கின் என்றே சொல்ல முடிகிறது.

காமிரா ஒரு இடத்தில் அசையாமல் நிற்கிறது. அதன் கோணத்தில் ஒரு செயல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எதிர்பாரா ஒரு தருணத்தில் காமிரா திடீரென பயணிக்கத் தொடங்க நாமும் அதன் கூட சேர்ந்து ஓடுகிறோம். டாப் ஆங்கிளில் காட்டப்படும் வைட் ஆங்கிள் ஷாட்டுகள். கால்களின் வழி கதை சொல்லும் உத்தி. ஒரு காட்சி முடியுமிடத்தில் சடாரென ஆரம்பிக்கும் அதிரடிக் காட்சி. சுவர் இருக்குமிடம் மூலமாக இரண்டு அறைகளுக்கும் நடுவே பயணிக்கும் காமிரா. சொல்லிக் கொண்டே போகலாம். கண்டிப்பாக சில வருடங்களுக்குப் பிறகு பெயர் சொல்லாமல் வெறும் காட்சிகளை மட்டும் போட்டுக் காட்டினால் கூட இது மிஷ்கின் படம் என நம்மால் சொல்ல முடியும். தமிழில் அப்படியானதொரு திரை மொழியை உருவாக்கி இருப்பதுதான் மிஷ்கினின் வெற்றி என நான் தீவிரமாக நம்புகிறேன்.

கோபம் வரும்போது பதட்டம் அதிகமாக இருக்கும். பதறிய காரியம் சிதறும் என்று சொல்வார்கள். ஆனால் மிஷ்கினைப் பொறுத்தவரை இது அப்படியே உல்டா. சித்திரம் பேசுதடி முடிந்து நல்ல இயக்குனர் என்று பெயரெடுத்தும் படம் கிடைக்காத காரணத்தால் வெந்துபோய் செய்ததுதான் அஞ்சாதே. அதேபோல மிகப்பெரிய நம்பிக்கையுடன் எடுத்த நந்தலாலா இரண்டு வருடங்களாக வெளியாகாமல் பெட்டியில் இருந்ததன் கோபமே அவரை “யுத்தம் செய்”யத் தூண்டியிருக்கிறது. இந்தப்படத்தை அஞ்சாதே படத்தின் இரண்டாம் பாகம் எனப் பலரும் சொன்னார்கள். ஆனால் சத்தியமாக இதற்கும் அஞ்சாதேக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. போலிஸ் பின்புலம் சார்ந்து இரண்டு நண்பர்களின் கதையைப் பேசியது “அஞ்சாதே”. ஆனால் முழுக்க முழுக்க நகரில் நடக்கும் தொடர்கொலைகளையும் அது பற்றிய போலிஸ் விசாரணையையும் மிகத் துல்லியமாகப் பதிவு செய்யும் “யுத்தம் செய்” தமிழின் முதல் முழுமையான இன்வெஸ்டிகேட்டிவ் படம் என்று சொல்லலாம்.



“கிகுஜிரோ”வை உருவி நந்தலாலா செய்து விட்டு “tribute,tribute" என்று சொல்லிக் கொண்டிருந்த மிஷ்கின் இந்தப் படத்தில் உண்மையாகவே ஒரு அற்புதமான சமர்ப்பணத்தை செய்திருக்கிறார். கதையின் கடைசிக் காட்சியில் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தின் பெயர் "மகேஷ் முத்துசாமி". தன்னுடைய முதல் மூன்று படங்களிலும் தனக்குக் கண்ணாக விளங்கிய நண்பருக்கு இதைவிட அழகாக யாரும் "tribute" செய்துவிட முடியாது. அதேபோல இந்தப்படத்தில் இன்னொரு முக்கியமான விஷயம் - படத்தில் எந்த இடத்திலும் மிஷ்கினின் பெயர் வரவேயில்லை.

இசையமைப்பாளர் கே பற்றி கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டும். இசையை எங்கே பயன்படுத்த வேண்டும் என்பதைக் காட்டிலும் எங்கெல்லாம் அமைதியாக இருக்க வேண்டும் என்பதை இந்த இளைஞர் கூர்ந்து கவனத்தில் கொண்டு மிக அருமையாக செய்திருக்கிறார். படத்தின் பின்னணியில் ஒலிக்கும் இசைக்கோர்வைகள் அட்டகாசம். பேண்டோரா பாக்ஸ் என்கிற பெயரில் வரும் இசைத்துணுக்கு கிகுஜிரோவின் “சம்மரை” நினைவுபடுத்துவதை மட்டும் சற்றே தவிர்த்திருக்கலாம். முக்கியமான இன்னொருவர் அறிமுக ஒளிப்பதிவாளர் சத்யா. மகேஷ் முத்துசாமி என்கிற மனிதர் இந்தப் படத்தில் இல்லை என்பதான குறை தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்.

காணாமல் போகும் சேரனின் தங்கை, தொடர்ச்சியாக நகரின் முக்கிய இடங்களில் கண்டெடுக்கப்படும் வெட்டுப்பட்ட கைகள், தற்கொலை செய்து கொண்ட ஒரு குடும்பம், காணாமல் போகும் பெண்கள் என தொடர்ச்சியாக கேள்விகள் நம்மை நோக்கி வந்து கொண்டே இருக்கின்றன. முதல் பாதி முழுதுமே ரொம்பக் குழப்பமாக ஏன் இவை எல்லாம் நடக்கிறது என்கிற ஒரு புதிர்ப்பயணமாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் ஒவ்வொரு கண்ணியாக விடுவிக்கப்பட்டு காரண காரியங்களை நாம் கண்டு கொள்ளும் இடத்தில் திகைத்துப் போகிறோம். படத்தின் கடைசி இருபது நிமிடங்கள் சற்றே நாடகத்தனமாக இருப்பதாகத் தோன்றலாம். ஆனால் கண்டிப்பாக அந்த நாடகத்தனம்தான் இந்தப்படத்தின் பலமே.

மாயக்கண்ணாடி, பொக்கிஷம் என்றெல்லாம் சுழன்று சுழன்று நம்மை கொலையாய்க் கொன்ற சேரனுக்கு இந்தப்படம் ஒரு லைஃப்லைன். இறுக்கமான முகத்தோடு சுற்றும்போதும் சரி, தங்கையின் குரலைக் கேட்டு பதட்டம் கொள்ளும்போதும் சரி.. பாத்திரம் உணர்ந்து அளவாக நடித்து இருக்கிறார். இடைவேளைக்கு முன்பு நெயில்கட்டரோடு அவர் போடும் சண்டைக்கு தியேட்டரில் விசில் கிழிகிறது . படத்தின் அடுத்த முக்கிய நடிகர் ஜெயப்பிரகாஷ். பிணங்களைக் கூறு போடும் டாக்டராக அவர் வரும்போது நல்ல நடிகரை வீணடிக்கிறார்களே என்று மண்டை காய்ந்தது. ஆனால் கதையின் போக்கை மாற்றும் பாத்திரமாக அவர் மாறும் இடம் பளிச். “ஓடிக்கிட்டே இருந்தோம்.. அவனுங்க தொரத்துனானுங்க.. முடியல.. எவ்ளோ தூரம் ஓட.. அதான் இப்ப நாம தொரத்துறோம். அவனுங்க ஓடுறானுங்க..” சாகும் தறுவாயில் அவர் பேசும் வசனங்கள் பட்டாசு. ஒய்.ஜி.மகேந்திரா மற்றும் லக்ஷ்மி நரசிம்மனின் கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டு இருக்கும் விதம் ரொம்பவே தீவிரம்.

படத்தில் எனக்குப் பிடிக்காத ஒரே விஷயம் அந்தக் கருமம் பிடிச்ச “கன்னித்தீவு பொண்ணா” பாட்டு. வால மீனுக்கும் பாட்டுக்கும், கத்தாழ கண்ணால பாட்டுக்கும் ஏணி வச்சாக்கூட இந்தப் பாட்டால எட்ட முடியாது. மாளவிகாவோட கிரேஸ் என்ன, ஸ்நிக்தாவோட டான்ஸ் என்ன.. இங்க நீத்து சந்திரா வெறும் பம்மாத்து. அதை விடக் கொடுமை சாருவோட நிலமை. நாலு செகண்டு மேனிக்க ரெண்டு தடவை ஆளக் காட்டுறாங்க. அதுபோக பாட்டு பூராவும் அவரொட விரல்கள். ஆர்மோனியம் மேல நளினமா நடனம் ஆடுதாம். அந்தாளு தலையில இடி விழ.. தன்னைத்தானே அசிங்கப்படுத்திக்கிட்டாரு மனுஷன். படத்துல ஒட்டவே செய்யாத இந்தப்பாட்ட மிஷ்கின் எடுத்திருக்க வேண்டிய அவசியமே இல்ல.

ஆக மொத்தத்தில் அதகளம் பண்ணும் மிஷ்கினின் இன்னொரு படம்தான் “யுத்தம் செய்”. ஒரே மாதிரியாப் படம் எடுக்கிறார். கொஞ்சம் அலுப்பா இருக்குன்னு எல்லாம் ஒரு சில நண்பர்கள் சொல்றாங்க. எனக்கு அப்படி எதுவும் தெரியல. கடந்த பத்தாண்டுகளில் உருவான தமிழ் இயக்குனர்கள்ல ரொம்ப முக்கியமானவர்கள்னு நாம பேசணும்னா அதுல நம்மால மிஷ்கினை நிராகரிக்கவே முடியாது.

ஏ மிஷ்கின்.. ஐயாம் லவ் யூ..:-))))

February 2, 2011

சாவடி - மதுரை இலக்கிய சந்திப்பு (2)

சாவடி - மதுரை இலக்கிய சந்திப்பு (1)

கா.பா - நான் கே.என்.செந்திலுடைய மூன்று கதைகளை மட்டுமே வாசித்து இருக்கிறேன். கதவு எண், கிளைகளில் இருந்து, மேய்ப்பர்கள்.. இவற்றை முன்வைத்தே உரையாட விரும்புகிறேன். கதைகள் சொல்லும் கதைகள் உண்டு, அதே போல கதை சொல்லாத கதைகளும் உண்டு. இதில் கே.என்.செந்தில் இரண்டாம் வகையைச் சார்ந்து கதையல்லாத கதைகளைப் பேசுவதாகவே நான் நம்புகிறேன். கதை சொல்லி என்று சொல்லுவதை விட அவரை ஒரு தேர்ந்த சித்திரக்காரர் எனச் சொல்லலாம். சூழலையும் மனிதர்களையும் வர்ணித்துப் போகும் இடங்களில் அவர் அருமையான நேரனுபவத்தைத் தரக்கூடிய சித்திரங்களை உருவாக்குகிறார். முதல் கதையான கதவு எண்ணில் ஒரு மனிதன் மூத்திர சந்தின் உள்நுழைந்து போகிறான். இதை வாசிக்கும்போது நான் என்னமோ அந்தத் தெருவுக்குள் நடந்து போவதைப் போன்ற ஒரு அருவெருப்பையும் அசூயையும் என்னால் உணர முடிந்தது. அதுவே அந்த எழுத்துகளின் வெற்றி. ஹவி சொன்ன சில விஷயங்களில் எனக்குக் கருத்து வேறுபாடும் உண்டு. ஒரே கேன்வாசுக்குள் பல விஷயங்களை சொல்லித்தான் ஆக வேண்டுமா? கண்டிப்பாக... ஏன் என்றால் அங்கேதான் வாசகன் சிந்திப்பதற்கான ஒரு வெளி உண்டாகிறது. இதை நீங்கள் கிளைகளில் இருந்து கதையில் நன்கு உணரலாம். சில மனிதர்கள், அவர்களைப் பற்றிய சில தகவல்கள் என சொல்லிக் கொண்டே கதை வேறு இடங்களுக்கு நகர்ந்து போய் விடுகிறது. அதன் பிறகு அவர்கள் என்ன ஆனார்கள்? அதை வாசகர்களின் முடிவுக்கு விட்டு விடுகிறான் கதை சொல்லி. கடைசி கதையான மேய்ப்பர்கள் விளிம்பு நிலை மனிதர்களின் யதார்த்த வாழ்க்கையை பேசிப் போகிறது. குற்றவுணர்வை ஏற்படுத்தாத காமம் இந்தக் கதையில் கொண்டாட்டமாக வெளிப்பட்டு இருக்கிறது. ஆக எனக்கு செந்தில் கதையுலகம் ரொம்பவே பிடித்து இருக்கிறது.

ஹவி: நண்பர் சொன்ன விஷயத்தை என்னால் சற்றும் ஒத்துக் கொள்ள முடியாது. கதை சொல்லாத கதைகள் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வர்ணனைகள், சித்திரங்கள் எனப் பேசுவதெல்லாம் சரிதான். ஆனால் நாம் எதற்காக சிறுகதைகள் எழுதுகிறோம்? ஏதாவது ஒரு விஷயத்தைச் சொல்வதற்காக.. அதைச் செய்யவில்லை என்றால் மற்ற எல்லாம் வீணாகிப் போய் விடும். ஆக கதை என்கிற அடிநாதம் ரொம்ப முக்கியமானது. கண்டிப்பாக எழுத்தாளனுக்கு என ஒரு பொறுப்பு இருக்கிறது. அதை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. நம்மைச் சுற்றி இருக்கக் கூடிய எல்லா விஷயங்களையும் நம்மை பாதிக்கிற சங்கடங்களையும் நாம் கண்டிப்பாக பதிவு செய்யும்போது அதற்கு நேர்மையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. இன்றைய கண்காணிக்கப்படும் சூழலிலும் இதை நாம் தீவிரமாக செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதை விடுத்து வெறும் தகவகழி மட்டும் சொல்லிப் போவது சரி கிடையாது என்றே நம்புகிறேன்.

கே.என்.செந்தில் - பொதுவாக என்னுடைய கதைகள் ஒரு நேரடி அனுபவத்தைத் தருவதாக நிறைய பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதையேதான் இந்த நண்பரும் சொன்னார். ஆனால் ஹவி சொன்னதுபோல நான் எந்த இடத்திலும் என்னுடைய கொள்கைகளை என் பாத்திரங்களின் மீது திணிக்க முயற்சிப்பதில்லை. அதைப் போலவே தான் தகவல்கள் அதிகம் என்பது பற்றிய குற்றச்சாட்டும். இது கதைக்குத் தேவை என நான் நம்புவதை மட்டுமே எழுதி வருகிறேன்.

இந்திரா - எனக்கு உங்களுடைய இரவுக்காட்சி கதை ரொம்பப் பிடித்து இருந்தது. ஆனால் ஒரு சில இடங்களில் காமம் சார்ந்து எழுதும்போது சில நெருடல்கள் இருக்கின்றன. நண்பர் ஒருவர் சொன்னார் காமம் கொண்டாட்டமாக வெளிப்படுகிறது என்று. அவன் ஒரு கூலித் தொழிலாளி. மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள். இந்த மாதிரியான நேரத்தில் அவனால் எப்படி எந்த மனக்கிலேசமும் இல்லாமல் உறவு வைத்துக் கொள்ள முடிகிறது? மிருகங்கள் மட்டுமே அதுமாதிரியான செயல்பாடுகளில் ஈடுபடும். இது எல்லாம் தவிர்த்து மொத்தமாக உங்களின் தொகுப்பு எனக்கு பிடித்து இருக்கிறது.

கே.என்.செந்தில் - நான் முன்னரே சொன்னதுபோல கதைக்குத் தேவையானதையே நான் எழுதுகிறேன். காமம் என்பதை வலிந்து எழுத முயற்சிப்பதில்லை. அந்தக் கதாப்பாத்திரம் அந்த சூழலில் அவ்வாறே நண்டந்து கொள்ளும் எனக் கதைதான் தீர்மானிக்கிறது.

கதைகளில் இன்று உரையாடல்களைத் (dialogue) தவிர்த்து வர்ணனைகளின் மூலமாகக் கதை சொல்வது என்பது அதிகரித்து வருகிறது. இது சரிதானா என்ற கேள்வி கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. கதை சொல்லும் உத்தி என்னவாக இருந்தாலும் கதையை முன்னகர்த்தி செல்லவும் அடர்த்தியைக் கூட்டவும் உதவுமெனின் கண்டிப்பாக வர்ணனைகள் தேவையே என்பதை எல்லா படைப்பாளிகம் ஆமோதித்தனர். இதன் பின்பான உரையாடல் மற்றொரு கேள்வியை முன்வைத்து ஆரம்பித்தது.

பா.திருச்செந்தாழை - எல்லாரும் எழுதிய உலகத்தையே நாம் மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருக்கிறோம். இதை விடுத்து நாம் ஏன் இன்னொரு தளத்துக்கு நகரக் கூடாது? நம்மைச் சுற்றி இருக்கும் பொருட்களின் மேல் நாம் ஏன் கவனம் கொள்வதில்லை? அவையும் நம் வாழ்வில் முக்கியப் பங்கு ஆற்றத்தானே செய்கின்றன? எளிதாகச் சொல்ல வேண்டுமானால், நமக்குப் பிடித்தமான ஒரு சட்டையைப் போட்டுக் கொள்ளும்போது அன்றைய நாள் முழுதும் சந்தோஷமாக உணருகிறோம். இது போல நிறைய.. ஆக பொருட்கள் நமக்கு ஏதோ ஒரு வகையில் சில உணர்வுகளை உண்டாக்கிப் போகின்றன அல்லவா.. ஏன் அவற்றைப் பற்றி நாம் பேசக் கூடாது?

கே.என.செந்தில் - பொருட்களை முன்னிறுத்தி கதைகள் எழுதுவதில் தவறில்லை. ஆனால் அவை உயிரற்றவை. அவை மனிதனால் பயனபடுத்தபடுகின்றன. ஆக சார்புநிலை என்று வரும்போது அங்கும் நாம் மனிதர்களைப் பற்றித்தான் பேச வேண்டி இருக்கிறது.

பா.திருச்செந்தாழை - நான் சொல்ல வருவதை இன்னும் கொஞ்சம் தெளிவாக்க முயலுகிறேன். வண்ணநிலவனின் மிருகம் எனக்கு ரொம்பப் பிடித்த கதை. நிறைய திறப்புகள் (opening) கொண்ட கதை சூழல். ஒரு மனிதன் அடுக்களைக்குள் நுழையும்போது எங்கும் சாம்பல் மணம் வீசியது என்கிற ஒரு வரி வரும். திறந்து கிடக்கும் வீட்டுக்கள் இருந்த புகைப்படங்கள் எல்லாமே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தன என்கிற ஒரு இடமும் உண்டு. இங்கே உயிரற்ற அந்தப் பொருட்கள் நமக்குள் ஏற்படுத்தக் கூடிய அதிர்வுகளை நாம் கவனிக்க வேண்டும். அப்புறம் இன்னொரு கதை.. சமீபமாக எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியது. ஆணி என்று நினைக்கிறேன். ஒரு சுவரில் இருக்கும் ஆணையைப் பற்றிய அவருடைய சிந்தனைகள். அவ்வளவேதான். இந்தக் கதையை எழுதும்போது, தன்னுடைய பொது எழுத்துலகை விட்டு வெளியேறி, வேறொரு தளத்தில் இயங்குவதன் மூலம் அவர் மிகுந்த ஆசுவாசத்தை உணர்ந்திருக்கக் கூடும் என நம்புகிறேன். எனவேதான் பொருட்களின் மீது இயங்கக் கூடிய இன்னொரு வெளியைப் பற்றி ஏன் யோசிக்கக் கூடாது என கேட்கிறேன்.

கே.என்.செந்தில் - நீங்கள் சொல்வது சரிதான் என்றாலும் முப்பது வருடங்களுக்கு முன்பு வண்ணநிலவன் இந்தக் கதையை எழுதும்போது இந்த விஷயங்களை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டிருப்பாரா என்றால் இருக்காது என்றுதான் சொல்ல வேண்டும். எழுதும் விஷயங்கள் பிற்காலத்தில் வாசகர்களாலேயே இன்னதென்று தீர்மானிக்கபடுகிறது. எனவே பொருட்கள் சார்ந்து எழுதுவதென்பது திட்டம் போட்டு செய்ய முடியாததாகவே இருக்கும். கதைக்குத் தேவையெனில் நாம் அந்த உத்தியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

கா.பா- பொருட்கள் சார்ந்த கதை எனச் சொல்லும்போது எனக்கு ஜி.முருகனின் காண்டாமிருகம் ஞாபகத்துக்கு வருகிறது. அது ஒரு உண்டியல். திடீர் தித்தர் என காணாமல் போய் மீண்டும் கிடைக்கிறது. கிட்டத்தட்ட வாசகனோடு ஒரு விளையாட்டாக இந்தக் கதையை அவர் எழுதி இருக்கிறார். உயிரற்ற அந்த பொருள் மொத்தக் கதையயும் தாங்கிப் பிடிக்கிறது என்பதை நாம் கண்டுகொள்ளலாம். ஆகவே கதையின் தேவை குறித்தே பொருட்களின் மீதான கவனம் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.

அதன் பிறகும் அங்கங்கே அலைந்து திரிந்து இறுதியாக உரையாடல் முடிவுக்கு வந்தது. ஆக மொத்தத்தில் அருமையானதொரு நிகழ்வு. பா.திருச்செந்தாழை ஒருவர் மட்டுமே செந்திலின் கதையுலகம் பற்றிய கட்டுரை எழுதி வந்து வாசித்தார் என்பது ஒரு சிறு குறை. இன்னும் மூன்று நான்கு கட்டுரைகளாவது வாசிக்கப்பட்டு இருக்க வேண்டும். அதையே கே.என்.செந்திலும் தன் நன்றியுரையில் குறிப்பிட்டார். அதே போல நிறைய விஷயங்கள் பொதுவாக பேசப்பட்டன. அப்படி இல்லாது படைப்பாளியின் படைப்புலகை முன்னிறுத்தி பேசுவது இன்னும் இந்த சந்திப்புகள் காத்திரமாக அமைய உதவக்கூடும். நிகழ்வை சாத்தியமாக்கிய அத்தனை நண்பர்களுக்கும் நன்றி.