Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

June 22, 2011

கலைடாஸ்கோப் மனிதர்கள்

பெரியார் பேருந்து நிலையத்தின் வளைவில் இருக்கும் அந்த பைக் ஸ்டாண்டுக்குள் அவன் நுழைந்தபோது சாயங்காலம் மணி ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது. மொத்த இடத்தையும் அடைத்துக் கொண்டு நின்றிருந்த பைக்குகள் சிதறிப்போன சங்கிலியொன்றின் கண்ணிகளை ஞாபகப்படுத்தின. காலையில் விட்டுப்போன இடத்தில் தனது பைக்கைக் காணாமல் தேடத் துவங்கியவன் ஒரு ஓரமாக தூக்கி கடாசப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தான்.

ஊரின் மொத்த தூசியையும் எடுத்து அப்பியது போல பைக்கின் சீட் அலங்கோலமாக இருந்தது. இது போன்ற தருணங்களில் பயன்படுத்தவென எப்போதும் பைக்கில் சொருகி வைத்திருக்கும் துணியையும் காணவில்லை. யாரோ ஒரு நாதாரி எடுத்து விட்டிருக்கலாம். என்ன செய்வதெனத் தெரியாமல் அருகில் இருந்த வண்டிகளை நோட்டம் விட்டான். டிவிஎஸ் 50 ஒன்றில் நீட்ட துணி ஒன்று இருந்தது. அதை எடுத்து வண்டியைத் துடைத்தவன் சத்தமில்லாமல் தன் பைக்குள் போட்டுக் கொண்டான். இனிமேல் கிழிந்த துணியை வண்டியில் வைக்கக் கூடாது என்று தனக்குத்தானே சொல்லியபடி வண்டியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.

அம்மாவுக்கு மாதாமாதம் கொடுக்க வேண்டிய ஹோமியோபதி மாத்திரைகளை வாங்க கீழவாசல் வரை போக வேண்டி இருந்தது. காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்டின் வழியே வண்டியை செலுத்தத் தொடங்கினான். வாகனங்களின் நெரிசல் ரொம்பவே அதிகமாக இருந்தது. மாலை வேளைகளில் இந்த சாலையில் வண்டியோட்டுவது போன்ற மடத்தனம் வேறெதுவும் இருக்க முடியாது என நினைத்துக் கொண்டவனை சூமென ஒரு ஸ்கூட்டி கடந்து போனது. அந்த வண்டியை ஓட்டிப்போன பெண் பின்னோக்கிய கோணத்தில் பார்க்க வெகு வடிவானவளாகத் தெரிந்தாள். அவள் முகத்தைப் பார்க்க வேண்டுமென்கிற ஆவல் இவனுக்குள் தோன்றியது. வண்டியை விரட்டினான்.

வேகத்தைக் கூட்டி வண்டியை அவளுக்கு முன்னால் கொண்டு சென்றவன் கண்ணாடியில் அவள் முகத்தைப் பார்த்தான். களையான முகம். மூக்கு குத்தியிருந்தது அவளுக்கு ஒரு தனி அழகைக் கொடுத்தது. பகலில் பார்த்தால் இத்தனை அழகாக தெரிவாள் என அவனுக்குத் தோன்றவில்லை. ஆனால் இரவும் அந்த சோடியம் விளக்கின் மஞ்சள் ஒளியும் அவளை ஒரு தேவதையென மாற்றியிருந்தன. சாதாரணமான ஒருவரைக் கூட அழகியாக மாற்றி விடும் ஆற்றல் அந்த பொன்மஞ்சள் நிறத்துக்கு இருக்கிறதென்பது அவன் நம்பிக்கை. இயற்கையின் மிக அற்புதமான படைப்பும் மிக மோசமான படைப்பும் எப்படி ஒன்றாக அமைந்தது என்கிற சந்தேகம் எப்போதும்போல அப்போதும் வர தனக்குள் சிரித்துக் கொண்டான்.

அவள் தெற்குவாசல் நோக்கிப்போக இவன் மேலமாசி வீதிக்குள் வண்டியைத் திருப்பினான். பெருமாள் கோவில் சந்தில் சாலையின் ஓரமாக இருந்த ”லலிதா பேப்பர் ஸ்டோர்ஸ்” கடையின் பெயர்ப்பலகையைப் பார்த்தபோது அவனுக்குத் தன் கல்லூரி ஞாபகம் வந்தது. அவன் புதிதாக ஒரு கல்லூரியில் வேலைக்கு சேர்ந்திருந்ததால் கூட வேலை பார்ப்பவர்கள் பற்றிய எந்த விவரமும் சரியாகத் தெரியாத சூழல். புதியவனான அவனோடு பேச யாரும் தயாராக இல்லாத நிலையில் ஓரளவுக்காவது மதித்துப் பேசிய ஜீவன்களில் லலிதாவும் ஒருவர். கணிதத்துறையில் பேராசிரியை. எனவே அவர் மீது அவனுக்கு நிறைய மதிப்பு இருந்தது.

அன்றைக்கு அவர்கள் இருவரும் சேர்ந்து முடிக்க வேண்டும் என்று ஒரு வேலையை முதல்வர் அவர்களுக்குத் தந்திருந்தார். கணிணியில் ஒன்றாக அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதுவரை செய்துமுடித்த எதையும் சேவ் செய்து பாதுகாக்காத நிலையில் அத்தனையும் தொலைந்து போயிருக்கும் என்பதை உணர்ந்த லலிதா மேடம் “அய்யா சேசுவே எல்லாம் போச்சே..” என்று தலையில் அடித்துக் கொண்டாள். இவன் வினோதமாக அவளைப் பார்த்தான். சற்று நேரம் கழித்து அவளிடம் கேட்டான்.

“நீங்க கிறிஸ்டினா மேடம்..”.

“இல்ல சார்.. மதமெல்லாம் மாறலை. ஆனா ஏசு மீது நம்பிக்கை உண்டு..”

அதன்பிறகு அவனால் லலிதாவோடு இயல்பாகப் பேச முடியவில்லை. பொதுவில் அவனுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது என்றபோதும் இது மாதிரியான விஷயங்களில் அவனுக்கெனத் தனியாக சில கோட்பாடுகள் இருந்தன.

கடவுள் உண்டென நம்புகிறீர்கள் என்றால் அவருடைய முடிவையும் நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்? ஒருவரே உண்மையான கடவுள் அனைவரும் அவருக்குப் பிரியமானவர் என்றால் எதற்காக இத்தனை மதங்கள்? எதற்காக நீங்கள் வேறு மதத்தில் பிறக்க வேண்டும் பின்பு உண்மையை உணர்ந்து கடவுளை அடைய வேண்டும்? நீங்கள் யார் எங்கே பிறக்க வேண்டும் என்பதை முடிவு செய்தபின்புதானே பிறக்கிறீர்கள் பின்பு எதற்காக மதம் மாற வேண்டும்?

அது போல இருக்கும் மனிதர்கள் மீது கடும் வெறுப்பு அவனுக்குண்டு என்பதால் அதன் பிறகு லலிதா மேடமோடு அவனால் இயல்பாகப் பேச முடியவில்லை. என்ன ஏதென்றே புரியாமல் தன்னை அவன் ஒதுக்குவதில் அவருக்கு ரொம்பவே வருத்தம். அதை இன்று அவனிடம் நேரில் சொல்லவும் செய்து விட்டார். ஆனால் இவன் ஏதும் பேசாமல் வந்துவிட்டான்.

பேப்பர் கடையில் அவர் பெயரைப் பார்த்தவுடன் இவையெல்லாம் நினைவுக்கு வர தன் மீது அன்பு செலுத்தும் ஒருவரிடம் இதுபோலத்தான் நடந்து கொள்வது சரிதானாவென்கிற குழப்பம் அவனைப் பெரிதும் இம்சை செய்தபடி இருந்தது. ஏதேதோ யோசித்தவன் கடைசியாக தான் செய்வது சரிதானென சொல்லிக் கொண்டும் யாருக்காவும் எதற்காகவும் தன் கொள்கைகளை விட்டுத் தரமுடியாது என்று தனக்குள் சமாதானம் சொல்லியபடியும் வண்டியை செலுத்தினான்.

வழியில் வாடிக்கையாக அவன் புத்தகங்கள் வாங்கும் கடையின் முன்பாக வண்டியை நிறுத்தினான்.

“சுபா, இந்திரா எதுவும் வந்திருக்கா அண்ணே?”

“இல்லயே தம்பி..”

“சரி.. அப்போ ஒரு விகடன் மட்டும் கொடுங்க..”

“குமுதம்?”

“வேண்டாம்ணே.. விகடன் போதும்...”

தீவிரமாக புத்தகத்தின் கடைசிப் பக்க நையாண்டியில் பார்வையை ஓட்டியபடி வண்டியில் மீதமர்ந்தவனை அந்தக் குரல் கலைத்தது.

“தம்பி.. தம்பி..”

நிமிர்ந்து பார்த்த இடத்தில் அந்தப் பெரியவர் நின்று கொண்டிருந்தார். குறைந்தது அறுபது வயதிருக்கும். தலையில் மிச்சமிருந்த கொஞ்ச நஞ்ச முடியும் பங்கரையாகப் பறந்து கொண்டிருந்தது. அணிந்திருந்த கண்ணாடி எப்போது வேண்டுமானாலும் கீழே விழலாம் என்பது போல தொடுக்கிக் கொண்டிருந்தது. வாயில் வெகு சில பற்களே மிச்சமிருந்தன. கையில் துணிமணி போல ஏதோ வைத்திருந்தார்.

ஏதேனும் தர்மம் கேட்கப் போகிறாரோ என அவன் அவர் முகத்தைப் பார்த்தான். அவர் நடுங்கிய குரலில் பேசினார்.

“ஒரு சின்ன உதவி தம்பி. எனக்குக் தவுட்டு சந்தைல வீடு. வியாபாரம் எதுவும் இன்னைக்கு சரியில்லை. கொஞ்சம் கொண்டு போய் விடுறியா? பசி நேரம் கண்ண இருட்டிக்கிட்டு வருது..”

அந்தக் கடைசி வரிகள் அவனை உலுக்கிப் போட்டது. பசி ஒரு மனிதனை என்னவாக மாற்றுகிறது? யாரெனத் தெரியாதவனிடம் கூட உதவி கேட்பதை அது பொருட்படுத்துவதே இல்லை. அவருக்கு உதவலாம் என்றாலும் இவனுக்கு தன் வேலைகளை என்ன செய்வது என்று கவலையானது.

“இல்லைங்கைய்யா.. நான் அந்தப்பக்கம் போகல.. கீழவாசல்தான் போறேன்.. அங்கே விடட்டுமா..”

“அப்படிச் சொல்லாத தம்பி. கொஞ்சம் சுத்திப்போனா சரியாப்போச்சு..”

இப்போது அவனுக்கு எரிச்சலாக வந்தது. பெரியவர் தன்னை அதிகாரம் செய்வதைப்போல உணர்ந்தான். நான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்ல நீங்கள் யாரென்கிற கேள்வி வந்தது. ஆனாலும் அவரை அப்படியே விட்டுப்போகவும் மனதில்லை. குழம்பியவனாக நின்றவன் சரியென ஒரு முடிவுக்கு வந்தவனாக அவரிடம் சொன்னான்.

“ஏறுங்க அய்யா.. போகலாம்..”

அவர் தடுமாறியபடி வண்டியில் ஏறிக் கொண்டார். வண்டியை ஓட்டினாலும் அவனுக்குள் அலைஅலையாக கேள்விகள் வந்தபடியே இருந்தன. எதற்காக நான் இவருக்கு உதவ வேண்டும்? எத்தனை பேரிடம் இவர் கேட்டிருப்பார்.. அவர்கள் எல்லாம் மாட்டேன் என்று சொல்லிவிட்டு போகும்போது என்னால் ஏன் அது முடியவில்லை? ஏன் என்னை ஒரு குற்றவுணர்ச்சி துரத்துகிறது? சரி இவருக்கு நான் உதவுகிறேன். ஆனால் இவரை மாதிரி எத்தனி பேர் இருக்கிறார்கள்.. அவர்களுக்கு எல்லாம் யார் உதவுவது? என்னாலும் எல்லாருக்கும் உதவ முடியுமா? ஒருவேளை இவரையும் என் தாத்தாவையும் ஒன்றாக உள்மனது ஒப்பிட்டுப் பார்ப்பதாலேயே நான் இப்படி நடந்து கொள்கிறேனா? அவனுக்கு குழப்பமாக இருந்தது. சில நேரங்களில் எதையும் யோசிக்காமல் விடுவதே நல்லதென கவனத்தை சாலையில் திருப்பினான்.

செயிண்ட் மேரிஸ் ஸ்கூலை வண்டி தாண்டியபோது பெரியவர் “நிறுத்துங்க தம்பி” என்று அவசரமாக சொன்னார்.

“ஏங்க.. தவுட்டு சந்தைன்னு சொன்னீங்க..”

“இல்ல தம்பி..” என்று அருகிலிருந்த ஹோட்டலைக் காண்பித்தவர்..."அங்கே போனா தெரிஞ்ச ஹோட்டல்.. ஏதாவது சாப்பிடக் குடுப்பாங்க.. சாப்பிட்டுப் போயிருவேன்..” என்றார்.

“வீட்டுல அவ மட்டும்தான் இருப்பா.. பிள்ளைங்க எல்லாம் வெளியூரு.. பொழப்புக்கு இந்த டவுசரு, ஜட்டி விக்கிற தொழிலப் பாக்குறேன். எல்லா நாளும் நாம் நினைக்கிற மாதிரி இருக்குறதில்லையே.. அது மாதிரி நாள்ல இப்படித்தான் ஓட்டிக்கிடுறது..”

வாய் சற்றே கோணியிருக்க இளித்தபடி அவர் சொன்னதக் கேட்டு அவனுக்கு என்னமோ செய்தது.

“ரொம்ப நன்றி தம்பி.. நான் வர்றேன்..” என்றபடி அவர் சாலையைக் கடந்து போனார். இவன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சட்டென்று ஏதோ ஞாபகம் வந்தவனாக தன் பின்புறத்தைத் தொட்டுப் பார்த்தான். பர்ஸ் பத்திரமாக இருந்தது. சட்டைப்பைக்குள் மொபைல் பத்திரமாக இருக்கிறதாவெனப் பார்த்தான். இருந்தது. நிம்மதியாக வண்டியைத் திருப்பினான்.

March 29, 2011

ஒரு கனவின் கதை

அவன் மெதுவாகப் புரண்டு படுத்தான். கண்களை திறக்க விரும்பாதவனாக இருந்தவனால் தன்னைச் சுற்றி ஏதோ மெல்லியதொரு வாசனையை உணர முடிந்தது. மெதுமெதுவாக அந்த வாசம் தனக்குள் நுழைந்து நெஞ்சம் நிறைப்பதை அவனால் தடுக்க முடியவில்லை. மாறாக அவன் அந்த வாசத்தை பெரிதும் விரும்புபவனாக தன்னையும் அறியாமல் மேலும் ஆழமாக மூச்சை இழுத்து உள்வாங்கத் துவங்கினான். ஒரு கட்டத்தில் காற்றால் முழுக்க நிரம்பிய நெஞ்சுக்கூட்டில் வேறேதும் இடமில்லாமல் போக அவன் ப்ஹா என்று அலறியபடியே கண்கள் விழித்து எழுந்தான். அவன் வாழ்வின் அதிர்ச்சி அங்கே அவனுக்காக காத்து இருந்தது.

முந்தைய தினத்தின் இரவில் தன் படுக்கையில் வீழ்ந்து கிடந்த அவன் இப்போது ஒரு வனத்தின் பெரிய மரத்தின் கீழே நின்று கொண்டிருந்தான். எங்கும் இருள் சூழ்ந்து கிடந்தது. அது என்ன இடம் என்பது வனுக்கு மிகப்பெரும் குழப்பமாகவும் ஏதும் புரியாமலும் இருந்தது. தான் எப்படி அங்கே வந்திருக்க முடியும் அது சாத்தியமே இல்லை இது வெறும் பிரம்மை எனவும் தான் காணும் கனவெனவும் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். அந்தக் கனவிலிருந்து வெளியேற விரும்பியவனாக கண்களை மூடி அந்த மரத்தின் கீழேயே படுத்துக் கொண்டவன் இன்னும் சற்று நேரத்தில் எல்லாம் சரியாகி விடும் என் தனக்குத் தானே சொல்லிக் கொண்டு உறங்க முயற்சித்தான்.

இத்தனை நேரமாக அவனை இம்சித்துக் கொண்டிருந்த வாசனை சுத்தமாக காணாமல் போயிருந்தது அவனுக்கு ஆசுவாசமாக இருந்தது. கண்கள் இறுக மூடியபடியே விடிந்து விட வேண்டுமென எதிர்பார்த்துக் கிடந்தான். சிறிது நேரம் கழித்து எங்கோ தொலைவில் யாரோ அழும் ஓசை கேட்கத் தொடங்கியது. ஒரு சிறுகுழந்தையின் குரலை ஒத்த அந்த அழுகை இப்போது மெதுவாக காற்றோடு ஊர்ந்து வந்து அவனருகே சப்பணமிட்டு அமர்ந்து கொண்டது. நேரம் ஆக ஆக அந்த ஒலி இரண்டாக பத்தாக நூறாக பல்கிப்பெருகி அவனை பெரும்பாரமென அழுத்தத் துவங்கியது. நாராசம் தாங்காமல் அவன் கண்கள் திறவாமலே காதுகளை இறுகப் பொத்திக் கண்டான். இன்னும் சிறிது நேரம் கழித்து அந்த குழந்தைகளின் ஒலி பூனைகளின் சத்தமாக மாறி ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. அலறலை இதற்கு மேலும் தாங்க முடியாதெனும் கணத்தில் அவன் அலறியபடி எழுந்து திக்குத் தெரியாமல் ஓடத் தொடங்கினான்.

அந்தக்காட்டில் எந்தப்பக்கம் போவதென அவன் அறிந்திருக்க வில்லை. எங்கு பார்த்தாலும் பெரிதாக கிளைகள் விரித்து நின்ற மரங்கள் அடர்த்தியாய் இருக்க பாதை தேடி ஓடுவதென மிகவும் கடினமாக இருந்தது. பூமியில் அழுந்தப் பதிந்திருந்த வேர்கள் தடுக்கி கீழே விழுந்த சிராய்ப்புகள் வந்தது எதையும் அவன் பொருட்படுத்தவேயில்லை. எந்த வாசனையும் குரலும் தன்னை தீண்ட முடியாதவொரு இடத்துக்குப் போய் விட வேண்டுமென்பதே அவனுடைய ஒரே எண்ணம். திரும்பிப் பார்க்காமல் ஓடியபடியே இருந்தான். எத்தனை நேரம் ஓடினோம் என்றோ எத்தனை தூரம் வந்திருப்போம் என்பதோ தெரியாமல் மூச்சிரைத்து அவன் இறுதியாக பிசாசென நின்று கொண்டிருந்த ஒரு பெரிய மரத்தினடியில் வந்து நின்றான். தனக்கு என்ன நடக்கிறது என்பது தெரியாத பீதி அவனுக்குள் ஒரு கசப்பையும் பயத்தையும் சுரக்கச் செய்திருந்தது.

தான் மட்டும்தான் அந்தக்காட்டில் இருக்கிறோமோ இல்லை வேறு ஏதேனும் மனிதர்களோ மிருகங்கள் உண்டா இது என்ன மாதிரியான இடம் உண்மையா மாயமா என அவனுக்கு சந்தேகமாக இருந்தது. கடவுள்கள் மீதோ மாயங்கள் மீதோ நம்பிக்கை இல்லாத அவனிடம் யாரேனும் உனக்கு இப்படி நடக்கக் கூடும் என்று முன்னரே சொல்லியிருந்தால் அவன் விழுந்து விழுந்து சிரித்திருப்பான். ஆனால் இன்று அவனிருக்கும் நிலை கண்டு அவனுக்கு ஆச்சரியமாகவும் இன்னொரு புறம் அழுகையாகவும் இருந்தது. அடுத்து தான் செய்ய வேண்டுவது என்ன என்பதோ இந்த மாயக்காட்டில் இருந்தோ அல்லது கனவில் இருந்தோ எப்படி வெளியேறுவது என்பதை அறியாமல் திகைத்துப் போய் செயலற்றவனாக நின்று கொண்டிருந்தான்.

அந்த வேளையில் அவன் முதுகுக்குப் பின்னால் அந்த சத்தம் கேட்டது. மெதுவாக திரும்பிப் பார்த்தவன் அதிர்ந்து போனான். அங்கிருந்த புதருக்குள் இருந்து வெளியேறி அவர்கள் இவனை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். குறைந்தது பதினைந்து பேர்களாவது இருப்பார்கள். வெகு வினோதமாக கற்கால மனிதர்கள் போல் உடையணிந்து இருந்த அவர்களை அவன் இதற்கு முன்னமே எங்கோ பார்த்திருந்த ஞாபகம் இருந்தது. தன் நினைவுகளின் அடுக்குகளில் தேடிப் பார்த்தவன் திக்பிரம்மை அடைந்தவன் போலானான். அவர்கள் எல்லோருமே அவனுடைய வெகு நெருக்கமான நண்பர்கள்.

சிறுவயது தோழர்கள் முதல் கல்லூரி நண்பர்கள்வரை இவன் வெகுவாக நேசித்த பலரும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். அவர்கள் முகத்தில் பயங்கரமான வெறி இருந்தது. அனைவருமே தங்கள் கைகளில் ஏதேதோ ஆயுதங்களைத் தாங்கியபடி இவனை நோக்கி முன்னேறி வந்தார்கள். யாரிடமும் இவனை அடையாளம் கண்டுகொண்டதற்கான சுவடே இல்லை மாறாக அடித்துக் கொல்லும் வெறியே இருந்தது. இவன் அவர்களுடைய பெயர்களைச் சொல்லி அலறினான். அதைக் கண்டுகொள்ளாமல் முகங்கள் எல்லாம் கல்லாக இறுகிப் போயிருந்த அவர்கள் இவனை நோக்கி முன்னேறுவதிலேயே குறியாக இருந்தனர். அவர்கள் கையில் அகப்பட்டால் கண்டிப்பாகத் தன்னால் தப்பமுடியாது என்பதை உணர்ந்தவனாக அவன் மீண்டும் ஓடத் தொடங்கினான்.

திரும்பி திரும்பி பார்த்தபடி வெகு நேரம் நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தவனின் கண்களில் சட்டென்று அந்த ஒளி தட்டுப்பட்டது. நெருப்பு மூட்டப்பட்டதற்கான அந்த அடையாளம் அவனுக்கு ரொம்ப ஆதரவாக இருந்தது. அங்கு சென்றுவிட்டால் யாரேனும் மனிதர்கள் இருக்கலாம் எனவும் அவர்கள் உதவியோடு இங்கிருந்து தப்பிவிடலாம் என்றும் அவன் நம்பி நெருப்பை நோக்கி ஓடத் தொடங்கினான். இன்னும் இருபதடி போனால் அந்த நெருப்பை அடைந்து விடலாம் எனும் சூழலில் அவன் கால்கள் தேய்த்து நின்றான். எதிர்பாரா பல கஷ்டங்களைத் தந்திருந்த அந்த இரவு அவனுக்குள் நிறையவே எச்சரிக்கை உணர்வை உருவாக்கி இருந்தது. நெருப்பை நெருங்குமுன் அங்கிருப்பவர்கள் யாரெனத் தெரிந்து கொள்ள விரும்பியவனாக ஒரு மரத்தின் பின்னே நின்று கொண்டு கவனிக்கத் தொடங்கினான்.

சிலுவை வடிவிலிருந்த ஒரு மரக்கட்டை தரையில் நடப்பட்டு தீப்பந்தம் போல கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அதைச் சுற்றி சில மனிதர்கள் நின்று கொண்டிருந்தார்கள். எல்லாருமே முகத்திலிருந்து கால்வரை மூடிய ஒரு நீள அங்கியை அணிந்து இருந்தார்கள்.அதைப் பார்த்துக் கொண்டிருந்த இவனுக்குத் தான் மேற்கத்தைய காமிக்ஸுகளில் படித்திருந்த குக்ளாஸ்க்ளான் இயக்கத்தின் நினைவு வந்தது. குழம்பியவனாக அவர்களை பார்த்தபடி இருந்தான். அந்தக் கூட்டத்தின் தலைவன் போல இருந்தவன் சிறிது நேரம் கழித்து தலையசைக்க யாரோ ஒருவனை சிலர் கைகள் கட்டி இழுத்து வந்தார்கள். நெருப்பு வெளிச்சத்தில் முகம் மூடாமலிருந்த அவன் யாரெனப் பார்க்க இவன் முயற்சித்தவன் அவர்கள் அழைத்து வந்தது இவனைத்தான் என அடையாளம் தெரிந்தபோது மிரண்டு போனான்.

இங்கிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் தான் எப்படி அவர்கள் கையில் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்று அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அது தான் தானா இல்லை தன்னைப் போலவே வேறாருமா என சந்தேகமும் பீதியும் அவனை சூழ்ந்து கொண்டன. முகத்தில் சிரிப்போடும் கொலைவெறி கும்பலிடம் மாட்டியிருக்கிறோமே என்ற பயமும் சிறிதுமில்லாத அவன் யாராக இருக்கக் கூடும் என இவன் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் அவன் இவனைக் கண்டு கொண்டான். அதோ நான் அங்கிருக்கிறேன் என்னைத் தப்ப விடாதீர்கள் பிடியுங்கள் என்னைப் பிடியுங்கள் எனத் தொடர்ச்சியாக கத்த ஆரம்பித்த அவன் குரல் கேட்டு இவன்பக்கம் திரும்பிய அவர்களைக் கண்டு அரண்டுபோய் இவன் வேறொரு திசையில் ஓடத் தொடங்கினான்.

முடிவு 1:

இதற்கு மேலும் ஒடமுடியாதெனும் கணத்தில் அவன் அந்த வனத்தின் இருளில் தொலைந்து போனவனாக தள்ளாடி நடந்து வந்து அந்த மரத்தின் அடியில் விழுந்தான். பயமும் அசதியும் போட்டழுத்த தன்னை மறந்தவனாக தூங்கிப் போனான். எத்தனை நேரம் அப்படி கிடந்திருப்பான் எனத் தெரியவில்லை. வெகு நேரத்துக்குப் பிறகு அவன் மெதுவாகப் புரண்டு படுத்தான். கண்களை திறக்க விரும்பாதவனாக இருந்தவனால் தன்னைச் சுற்றி ஏதோ மெல்லியதொரு வாசனையை உணர முடிந்தது.

முடிவு 2:

இதற்கு மேலும் ஒடமுடியாதெனும் கணத்தில் அவன் அந்த வனத்தின் இருளில் தொலைந்து போனவனாக தள்ளாடி நடந்து வந்து அந்த மரத்தின் அடியில் விழுந்தான். பயமும் அசதியும் போட்டழுத்த தன்னை மறந்தவனாக தூங்கிப் போனான். சிறிது நேரம் கழித்து மெதுவாக அந்த மரம் தன் கிளைகளை இறக்கி அவனைத் தூக்கிக் கொண்டது. உயர்ந்து வளந்திருந்த அதன் நடுமரம் சட்டெனப் பிளந்து கொள்ள கர்ப்ப சிசு போல மெதுவாக அவனை உள்ளிறுத்தி தன் பிளவை மூடிக் கொண்டது. எங்கும் நிசப்தம். மறுநாள் காலையில் அவன் அம்மா அவனுடைய அறையைத் திறந்தபோது அவனுடைய படுக்கையின் மேல் சில இலைகள் மட்டுமே கிடந்தன.

முடிவு 3:

இந்தக் கதை உங்களுடையதாகக் கூட இருக்கும் பட்சத்தில் இதற்கான முடிவை நீங்களே எனக்குச் சொல்லலாம்.


March 17, 2011

என்னா ஒரு வில்லத்தனம்

மதுரையின் ரொம்பப் புகழ்பெற்ற தமுக்கம் மைதானத்தின் முன்பாக யாருக்குமே தெரியாமல் ஓரமாக இருந்த அந்த டீக்கடையின் வாசலில் அவர்கள் ஆறு பேரும் குழுமி இருந்தார்கள். அனைவருமே 22 வயத்தைத் தாண்டாத இளைஞர்கள். நாளைய உலகை ஆளத் துடித்துக் கொண்டிருப்பவர்கள். அதாவது.. இன்றைக்கு வெட்டி ஆபிசராக இருப்பவர்கள்.

கூட்டத்தில் நடுநாயகமாக இருப்பவன்தான் அவுங்களோட பாஸ். (ஏன்யா இது என்ன கொள்ளைக் கூட்டமா?) ஓகே ஓகே தலைவன்னு வச்சுக்குவோம். கார்த்தின்னு பேரு. அவன் ஏன் தலைவனா இருக்கான்னா.. மிச்ச பயபுள்ளைகளுக்கு எதுனாச்சும் வாங்கிக் கொடுக்குறதுக்கு காசு அவன்கிட்ட மட்டும்தான் உண்டு. அப்பன் சம்பாதிச்ச காசை கரைக்கிரதை விட புள்ளைகளுக்கு வேற ஏதும் முக்கியமான வேலை கிடையாதுன்னு ரொம்பத் தீவிரமா நம்புறவன்.

"இன்னும் எத்தனை நாளைக்குடா இப்படியே இருக்குறது? எல்லாப்பயலும் நம்மளப் பார்த்து வாயப் பொளக்கணும். அந்த மாதிரி கூடிய சீக்கிரம் ஏதாவது செய்யணும்டா மாப்ள.."சொல்லிய பாலு சிகரட்டை கீழே போட்டு நசுக்கினான்.

“ம்ம்.. ஆமாடா.. வீட்டுல இருக்குறய்வங்க நொச்சு தாங்க முடியல..” - உமர்.

இதே கருத்தை மீதியிருந்த மணி, கண்ணன், ஸ்டீபன் (பார்த்துக்கோங்கப்பா.. மத நல்லிணக்கம்) ஆகியோரும் சொல்ல என்ன செய்யலாம் என யோசிக்க ஆரம்பித்தார்கள். சட்டென மண்டைக்கு மேலே பல்பு எரிய பாலுதான் அந்த ஐடியாவைச் சொன்னான்.

“நாம ஏண்டா ஒரு பாப் ஆல்பம் போடக் கூடாது?”

“நாம எப்புடிடா ஆல்பம் போடுறது? நமக்கு என்ன தெரியும்?” கண்ணன் குழம்பியவனாகக் கேட்டான்.

“அது ஒரு மேட்டரே இல்ல மச்சி. இன்னைக்கு ஃபேஷனே ஆல்பம் போடுறதுதான். இப்போ பாரு... நம்ம ஸ்டீபனுக்கு அருமையா கவிதை எழுத வரும். அவன் நமக்காகப் பாட்டு எழுதட்டும். என்னடா ஓகேவா?”

ஸ்டீபன் லைட்டாக வானில் மிதந்து கொண்டிருந்தான். பாக்யாவில் கொடுத்து இருந்த ஒரு போட்டோவைப் பார்த்து “ஏ பெண்ணே நீயே ஒரு கட்டை உன் கண்களோ என் மனதை எரிக்கும் கொள்ளிக்கட்டை”ன்னு எழுதின ஒரு கவிதைக்கு 75 ரூபா சன்மானம் வந்த நாள் முதலாவே தன்னை தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாத்தப்போற கவிஞன்னு நம்பிக்கிட்டு இருக்குறவன்.

“செஞ்சுடலாம் மாப்ள. இது ஒரு மேட்டரா..”

“அது.. அப்புறம் நம்ம உமர் அருமையா கிடார் வாசிப்பான். யூஸ் பண்ணிப்போம். மணி ஃப்ளுட்ட பார்த்துப்பான். நானும் கண்ணனும் பாடலாம். அப்புறம்.. நம்ம கார்த்திதான் ப்ரொடியூசர். சரியாப் போச்சா?”

ஆக இப்படியாகத்தான் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்த பாப் ஆல்பம் ரெக்கார்டிங்கான விதை தூவப்பட்டது. மிகச்சரியாக ஒரு வாரத்துக்குப் பிறகு சினிப்பிரியா தியேட்டரின் முன்பாக இருந்த ரெக்கார்டிங் தியேட்டரின் வாசலில் நிலாவுக்கு ராக்கெட் ஏறப் போகும் ரேஞ்சுக்கு முனைப்போடு அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.

"நில்லுங்கடா நல்ல காரியம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி பூஜையைப் போட்டுருவோம்.."

வீட்டிலிருந்து தூக்கிக் கொண்டு வந்திருந்த ஓஞ்சு போன பூசணிக்காயைத் தொம்மென தரையில் போட்டு உடைத்தான் கார்த்தி. தாக்குங்கள் என்று கத்தாத குறையாக அனைவரும் திமுதிமுவென தியேட்டருக்குள் பாய்ந்தார்கள். அவர்களைப் பார்த்த உரிமையாளருக்கு பக்கென்று இருந்தது.

"என்ன தம்பி.. வாசல்ல பூஜை எல்லாம்? ஏதாவது கோயில் கும்பாபிஷேக கலெக்ஷனா?"

"ஊய்.. யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொன்னீங்க. நாங்க தான் நாளைக்கு இசை உலகையே ஆளப்போற M.M.B குழு. புரியுதா?" (மதுரை மேட் பாய்சாமாம்.. கருமம்..)

"ரெக்கார்டிங் பண்ண வந்தவங்களா நீங்க.. கிழிஞ்சது.. சரி சரி.. வாங்க.."

அவருக்குப் பார்த்துவுடனேயே தெரிந்து கொண்டார் இது அல்லக்கை கூட்டம்னு. அதனாலென்ன காசு வந்தா சரி. நாய் வித்த காசு குரைக்கவா போகுது?

"போங்கப்பா.. போய் அந்த ரூம்புக்குள்ள எல்லாம் போய் அவங்கவங்க இடத்துல நில்லுங்க.."

ஒவ்வொருத்தரும் ஜம்மென்று காதில் ஹெட்போனையும் மாட்டிக்கொண்டு நின்றபிறகுதான் அடுத்த பிரச்சினை ஆரம்பமானது.

"ஏண்டா.. என்ன பாட்டுடா பாடுறது?"

நாசாமப் போச்சுன்னு தலைல கை வச்சு உக்கார்ந்துட்டார் ஓனர். "இனிமே தான் பாட்டே முடிவு பண்ணனுமா?"

"ஏண்டா ஸ்டீபா.. டக்குன்னு ஒரு பாட்ட சொல்லேண்டா.."

"ஏய்.. பாட்டுன்னா என்ன சும்மாவா? வான்னா ஒடனே வந்துருமா.. அது ஒரு பீல்டா.. அது எப்படின்னா.."

"டேய் மூடுறா.. சட்டுபட்டுன்னு ஏதாவது பாடுங்கடா.."

"தம்பி.. ஒரு மணி நேரத்துக்கு ரெண்டாயிரம் ரூபா வாடகை.. இருக்குல்ல.."

"ச்சே.. நடு நடுவுல இந்த ஆளு வேற.. அண்ணே கொஞ்சம் யோசிக்க விடுங்க அண்ணே.. கலைண்ணே.. அருவி மாதிரி பொங்கிட்டு வரும்போது தடுக்காதீங்க..”

குசுகுசுவென தங்களுக்குள் பேசி கடைசியாக அந்த முடிவுக்கு வந்தார்கள். "மடை திறந்து ஆடும் இளங்குயில்.. இந்தப் பாட்டே பாடிரலாம்டா.."

"இதுக்குத்தான் இவ்ளோ பில்டப்பா.. பாடித் தொலைங்க.." ஓனர் மனசுக்குள் கருவியபடியே இருந்தார். அவர்கள் பாட ஆரம்பித்து இருந்தார்கள்.

"மடை திறந்து தாவும் நதியலை நான்..
மனம் திறந்து கூவும் சிறுகுயில் நான்...
இசைக்கலைஞன் என் தனதன தனன
தனதன தனன தனன.."

"கருமம்.. இந்தப்பாட்டும் முழுசா தெரியாதா" என்று மனசுக்குள் ஓனர் திட்டிக் கொண்டிருந்த வேளையில் பாலு அந்த வினோதமான காரியத்தை செய்தான். வேகமாக மைக்குக்கு அருகில் வந்தவன் தன் கையைக்கொண்டு போய் தொடையிடுக்கில் வைத்துக்கொண்டு ஏதேதோ இங்கிலிஷில் பேத்த ஆரம்பித்தான். ஓனர் பதறிப்போனார்.

"ஏய் ஏய் தம்பி.. என்னய்யா பண்ற.."

"அண்ணே.. இது ராப்புண்ணே.."

"அதெல்லாம் சரிப்பா.. அதுக்கு எதுக்கு கையக் கொண்டு போய் குஞ்சாமணில வச்சுக்கிட்டு ஏதோ வயித்துக்கடுப்பு வந்தவன் மாதிரி அவதிப்படுற?”

“அய்யய்ய.. அப்படி இல்லண்ணே.. நான் எம் டிவில பார்த்திருக்கேன்.. எமினம்னு ஒருத்தரு.. அவரு இப்படித்தான் பாடுவார்.. ராப்புன்னா இப்படித்தான் பாடணும்ணே..”

“என்ன எழவோ செஞ்சு தொலைங்கடா..”

நல்லபடியாக ரெக்கார்டிங் முடிந்தது.

“ஆக மாப்ள.. ஒரு பாட்டு முடிச்சுட்டோம். அடுத்தது என்னைக்கு?”

“அது என்னைக்கு வேணும்னாலும் இருக்கலாம். மொதல்ல இன்னைக்கு பாடுனதுக்கு ரெண்டாயிரம் ரூபாய எடுங்கப்பா..” ஓனர் - சிவபூஜைக் கரடி. கார்த்தி தன் பைக்குள் கை விட்டு காசை எடுத்தான். 1500 இருந்தது.

“இம்புட்டுத்தாண்டா இருக்கு..”

எல்லாப்பயலும் கையில் கிடைத்த காசை போட்டு பார்த்தபோதும் ரெண்டாயிரத்துக்கு நூறு குறைந்தது.

“அஜ்ஜஸ் பண்ணுண்ணே.. அடுத்த ரெக்கார்டிங்குக்கு வெயிட்டா கவனிப்போம்..” மண்டை காய்ந்து போனவராக ஓனர் அதை வாங்கிக் கொண்டு உள்ளே போனார்.

“இப்போ வீட்டுக்கு எப்படிடா போறது.. கைல பத்து காசு கூட இல்லையே..”

“வேற எப்படி.. நடராஜா சர்வீஸ்தான்..”

புலம்பிக்கொண்டே கலைந்து போனவர்களில் உமரும் கண்ணனும் அண்ணா நகர் ஆர்ச்சுக்கு அருகே இந்தக் கதைசொல்லியை சந்தித்து தாங்கள் பாடல் பதிந்த கதையைச் சொல்கிறார்கள். அவனும் வெகு சுவாரசியமாகக் கேட்பதைப் போல நடிக்க வேண்டியதாகிறது.

“அடப்பாவிகளா.. கலை மேல இருக்குற ஆர்வத்துல இப்படியா பஸ்ஸுக்குக் கூட காசு இல்லாம நடந்து வருவீங்க? பரவாயில்லடா.. நல்லா வருவீங்க..”

“ஆமாம்ணே.. நீ அடுத்த பதிவுக்குக் கண்டிப்பா வரணும் சரியா?” சொல்லி விட்டு நடக்கத் தொடங்கினார்கள். (ஆகா.. என்னா ஒரு வில்லத்தனம்? ) நடந்தவர்களில் ஒருவன் திரும்பி வந்து மெதுவாக கதைசொல்லியிடம் கேட்டான்.

“அண்ணே.. காலைல இருந்து ஒண்ணுமே சாப்பிடல.. பசிக்குது.. ஒரு டீ சொல்றியா?”

March 16, 2011

மழை விளையாட்டு

இத்தனை நேரமாக ஓடாமல் நின்று போயிருந்த அந்த கடிகாரம் மீண்டும் ஓடத் துவங்கியிருந்தது. மழை நின்று போயிருந்தது.

அலுவலகம் விட்டு வெளியே வந்த அவன் வெகுவாக களைத்துப் போயிருந்தான். அன்றைய தினத்தின் ஏமாற்றங்கள் அவனுக்குள் ஏதேதோ நினைவுகளைக் கிளர்த்தி மிகவும் பலவீனமாக உணரச் செய்தபடியே இருந்தன. நேரம் ரொம்ப ஆகியிருக்காவிட்டாலும் எங்கும் இருள் சூழத் துவங்கியிருந்தது. நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். ஆங்காங்கே தென்பட்ட மேகங்களின் கூட்டம் மழையின் வருகையை முன்னறிவிப்பு செய்து கொண்டிருந்தது. அவன் மிகுந்த அச்சத்துடன் தன் வண்டியை நோக்கி விரைந்தான்.

பொதுவில் அவன் மழையை மிகவும் வெறுக்கக் கூடியவனாக இருந்தான். ஒரு மழைநாளின் இரவில்தான் அவன் தந்தை தூக்கு போட்டுக்கொண்டு இறந்தார் என்பதும் அவன் காதலி நிறைய பணம் சம்பாதிக்க இயலாத அவனைப் பிரிவதே சரியாக இருக்கும் எனச் சொல்லிபோனதும் கொடியதொரு மழைநாள்தான் என்பதும் அதற்கான காரணமாக இருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக மழை பேய்ந்து ஓய்ந்த பின்பான தனிமை அவனுக்குத் தாங்கவொண்ணா துக்கத்தை தரக்கூடியதாக இருந்தது. பித்துபிடித்தவன் போல ஏதோவொரு மாயலோகத்தில் சிக்கி சுழலச்செய்யும் அந்தத் தனிமையையும் அதற்கு காரணமான மழை இரவுகளையும் அவன் அறவே வெறுத்தான்.

நீண்ட ஷெட்டின் கடைசியில் அவனுடைய வண்டி நின்று கொண்டிருந்தது. பத்து வருடங்களுக்கு முன்பாக ஒரு சேட்டிடம் இருந்து இவன் கைக்கு மாறி வந்த வண்டி. செகண்ட் ஹாண்டில் வாங்கி இருந்தாலும் இன்று வரைக்கும் அவனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் பட்டியலில் அவன் அம்மாவுக்குப் பிறகு அந்த வண்டியைத்தான் அதிகமாக நேசித்தான். இதுவரை ஆறேழு முறை அந்த வண்டி விபத்தில் சிக்கியிருந்தாலும் ஒருமுறை கூட அவனுக்கு ரொம்ப ஆபத்தான காயம் ஏதும் பட்டதே கிடையாது என்பது தன் வண்டியின் மீதான அவனுடைய அன்பை இன்னும் அதிகமாக பெருக்கி விட்டிருந்தது.

வாஞ்சையோடு வண்டியில் ஏறி அமர்ந்து அதைக் கிளப்பினான். மழை பிடிக்குமுன் வீட்டுக்குப் போய்விட வேண்டும் என தனக்குத் தானே பேசியபடி அவன் கிளம்பிய சிறிது நேரத்திலேயே மழை பிடித்துக் கொண்டது. மழையையும் தன் மேலதிகாரியையும் சபித்தபடியே கண்முன் தென்பட்ட பேருந்து நிறுத்தத்தின் முன் வண்டியை நிப்பாட்டி விட்டு நிழற்குடையின் கீழே நனையாத இடத்தில் போய் நின்று கொண்டான். உடம்பில் மழை பட்ட இடங்கள் எல்லாமே அமிலம் தெரித்தாற் போலொரு உணர்வு அவனுக்குள் நிரம்பி இருந்தது. கைக்குட்டையையை எடுத்து மொத்தமாக துடைத்துக் கொண்டு நிமிர்ந்தான்.

அந்த நிறுத்தத்தில் அவனைத் தவிர்த்து மூன்று பேர் நின்று கொண்டிருந்தார்கள். அவனுக்கு இடப்புறம் நின்றிருந்த நீல நிறச் சேலையணிந்த இளம் வயதுப் பெண்ணொருத்தி அங்கு வேறு சிலரும் இருக்கிறார்கள் என்பதே அறியாதவள் போல அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள். வட்ட முகமும் மிகச் சிறிய கண்களும் கொண்டிருந்த அவள் மூக்கு குத்திக் கொண்டிருந்தது அவனுக்கு அவளை இன்னும் அழகாகக் காட்டியது. அவள் தன்னை கவனிக்க வேண்டும் என்பதாய் லேசாக இருமுறை இருமினான். ஆனால் அவள் பக்கம் திரும்பக் கூட இல்லை என்பது அவனுக்கு சங்கடமாக இருக்கவே முகத்தை திருப்பிக் கொண்டான்.

நிறுதத்தில் இருந்த மற்றவர்களில் பைத்தியம் போலிருந்த மனிதரொருவர் சாலையை வெறித்து பார்த்தபடியே இருந்தார். அங்கிருந்த இன்னொரு ஆண் உலகமே இன்னும் சிறிது நேரத்தில் அழிந்துவிடுமோ எனக் கவலை கொண்டவன்போல வெகு சிரத்தையாக புகைபிடித்துக் கொண்டிருந்தான். மழை கிளப்பி விட்டிருந்த மண்வாசனையையும் மீறி சிகரெட்டின் நொடி இவன் நாசிக்குள் புகுந்து நெஞ்சை நிறைத்தது ரொம்ப இதமாக இருந்தது. இவனுக்கு புகைப்பழக்கம் கிடையாது என்றாலும் முதல்முறையாக அதை தான் பழகாமல் விட்டுவிட்டோமே என்பதாக வருத்தம் கொண்டான். தன்னைத்தானே பழித்தபடி மழை எப்போது நிற்குமென யோசித்துக் கொண்டே சாலையை வேடிக்கை பார்க்கத் துவங்கினான்.

அப்போதுதான் அவன் அந்தச் சிறுவனைப் பார்த்தான். சோவென பெய்யும் மழையைப் பொருட்படுத்தாது வெகு சந்தோஷமாக பாட்டொன்றை பாடியபடியே சைக்கிள் மிதித்து போய்க் கொண்டிருந்தான் சிறுவன். தன்னுடைய வலது கையால் கைப்பிடியை திடமாகப் பிடித்து, இடது கையோ பாதி இல்லாமல முழங்கையோடு முடிந்து போயிருக்க, ஒற்றைக்கையால் வண்டியோட்டி போய்க் கொண்டிருந்த அவனைப் பார்த்த இவனுக்குள் இன்னதென்று சொல்ல முடியாத குற்றவுணர்ச்சி தோன்றியிருந்தது. தன் கஷ்டங்கள் மறந்து மழையைக் கொண்டாடியபடி செல்ல அந்த சிறுவனால் முடியும்போது தான் ஏன் மழையை வெறுக்கிறோம் என யோசிக்கத் துவங்கினான். சாலையில் விளையாடிபடி போய்க் கொண்டிருந்த குழந்தைகளின் கூட்டமொன்று அவனை மொத்தமாக கலைத்துப் போட்டது.

மிகுந்த யோசனைக்குப்பின் தன் கையை வெளியே நீட்டினான். மழைத்துளிகள் அபாரமான வேகத்தோடு அவன் கைகளில் பட்டு தெறித்து விழுந்தன. மெல்ல மெல்ல நகர்ந்து வந்து மொத்தமாக நனையும்படி மழையில் நின்றான். மழையின் குளிர்ச்சி மெல்ல மெல்ல உடலை நிரப்பத் துவங்கியிருந்தது. சந்தோஷமாக உணர்ந்தான். மழை மீது அவன் சேமித்து வைத்திருந்த கசப்பு அத்தனையும் கரைந்து நீரோடு ஓடுவதாக உணர்ந்தவன் உற்சாகம் கொண்டவனாக வண்டியில் ஏறிக் கிளம்பினான்.

மழையின் ஊடாக வண்டி சீரான வேகத்தில் போய்க் கொண்டிருந்தது. அவன் தன்னை புதிதாக பிறந்தவன் போல உணர்ந்தான். மழை அவன் பார்க்கும் காட்சிகளை எல்லாம் இன்னும் அழகாக மாற்றி விட்டிருந்தது. ஒரு ஆட்டோ சாலையில் இவனைக் கடந்து போனது. அதன் உள்ளே அமர்ந்து இருந்தவன் தன் கைகளில் சைக்கிள் ஒன்றை வைத்திருந்தான். ஆட்டோவின் இரு பக்கங்களிலும் சக்கரங்கள் முளைத்திட்ட புதிய வாகனமென அது போய்க் கொண்டிருந்தது வித்தியாசமான காட்சியாக அவனுக்குப் பட்டது. தனக்குள் சிரித்துக் கொண்டான்.

வழியில் குறுக்கிட்ட வண்டி ஒன்றுக்காக வேகத்தை குறைத்தபோதுதான் அவன் அதை கவனித்தான். வண்டியின் வேகம் குறைந்தபோது மழையின் வேகம் கூடி இருந்தது. எதிரே இருக்கும் எதுவும் இவனுக்கு தெரியாத வண்ணம் மழை சோவெனப் பெய்யத் துவங்கியது. மழையைத் தோற்கடிப்பவன் போல இவன் வண்டியின் வேகத்தைக் கூட்டினால் மழையின் வேகம் கம்மியானது. தன்னோடு மழை நடத்தும் விளையாட்டு அவனுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. வேகத்தைக் குறைப்பதும் கூட்டுவதும் என அதற்கு தகுந்தாற்போல மழையும் மாறுவது அவனுக்கு மிக வேடிக்கையாக இருந்தது.

வெகு நேரம் தொடர்ந்த அந்த விளையாட்டு முடிவே பெறாதோ என அவனுக்குத் தோன்றிய கணத்தில்தான் அது சட்டென உரைத்தது. பொதுவாக இத்தனை நேரம் அவன் வண்டியில் வீட்டுக்கே வந்திருக்கக் கூடும். ஆனால் இன்று இதுவரைக்கும் அவன் அத்தனை பரிச்சயம் இல்லாத சாலைகளில் பயணித்தபடியே இருந்தான். அவனுக்கு சற்றே குழப்பமாக இருந்தது. தன்னுடைய கடிகாரத்தைப் பார்த்தான். அது மிகச்சரியாக அவன் பேருந்து நிறுத்தத்தில் மழைக்குள் நுழைந்த கணத்தோடு நின்று போயிருந்தது. எதிர்கடந்து போகும் மனிதர்கள் எல்லாரும் சாதாரணமாகப் போக தன்மேல் மட்டும்தான் மழை பெய்து கொண்டிருக்கிறதோ என அவன் ஐயம் கொள்ளத் துவங்கினான். மழை நிற்காமலே போய்விடுமோ எனும் அச்சம் மெதுவாக அவனுள் பரவத் தொடங்கியது.

அவன் சாலையை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான். சிறிது நேரத்துக்குப் பிறகு மீண்டும் மீண்டும் தான் ஒரே சாலையிலேயே பயணித்துக் கொண்டிருப்பதை வழியில் பார்த்த காத்து நிற்கும் மழைப்பெண் ஒருத்தியின் மூலமாக உறுதி செய்து கொண்டான். பயம் ஒரு மிருகமென அவனுக்குள் புகுந்து கொண்டு இம்சிக்க ஆரம்பித்தது. உறைந்து போய்க் கிடக்கும் காலத்தின் ஒரு துளியில் தான் சிக்கிக் கொண்டு விட்டோம் என்பதை அவனால் ஒத்துக் கொள்ளவே முடியவில்லை. சின்னதொரு கணத்தின் தாக்கத்தில் மழையில் வண்டியை செலுத்த முடிவு செய்த தன் மீதே அவனுக்கு கோபம் கோபமாக வந்தது. தந்திரமாகத் தன்னை மழை ஏமாற்றி விட்டதென உரக்கக் கத்தத் தொடங்கினான். மழையைக் கண்டபடி திட்டிய அவனுடைய கதறல்களை எல்லாம் காற்று தனக்குள் புதைத்துக் கொண்டது.

மழை உண்டாக்கிய அந்த மாயவெளியில் இருந்து வெளியேறும் வாசல் தெரியாதவனாக அவன் அழுது அரற்றியபடியே வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான். வீட்டில் தனக்காக காத்திருக்கும் அம்மாவின் முகம் அவன் கண்முன்னே வந்து வந்து போனது. எப்பாடியாவது தான் இந்த சுழலில் இருந்து தப்பி விடுவேன் என்று தனக்குத்தானே நம்பிக்கை சொல்லிக் கொண்டிருந்த வேளையில் திடீரென அவன் எதிர்பார்த்திராதாவொரு கணத்தில் பெரிய லாரியொன்று அவன் முன்னே திரும்பியது. நேராக அவன் வண்டி போய் அந்த லாரியிலேயே மோதியது. அவன் தூக்கி எறியப்பட்டான்.

சாலையில் இருந்து சற்று விலகி அந்த வண்டி முற்றிலுமாக உருக்குலைந்து கிடந்தது. பத்தடி தூரத்தில் தூக்கி எறியப்பட்ட அவன் விழுந்து கிடந்தான். தலையில் இருந்து வழிந்து கொண்டிருந்த ரத்தம் அவனைச் சுற்றி குளமாகத் தேங்கி நின்றது. அவன் விழுந்து கிடந்த இடம் நோக்கி மக்கள் குழுமத் தொடங்கி இருந்தார்கள். இத்தனை நேரமாக ஓடாமல் நின்று போயிருந்த அந்த கடிகாரம் மீண்டும் ஓடத் துவங்கியிருந்தது. மழை நின்று போயிருந்தது.

February 23, 2011

இரு பூதங்கள் - 2

இரு பூதங்கள் - 1

“முனியம்மா.. கதவைத்திற.. டிங்டிங்டிங் டிடிக்டிடிங்”

காசு பணம் சம்பாதிக்கணும்னு வேலை தேடி போன புருஷன் ரெண்டே நாள்ல திரும்பி வந்துட்டானேன்னு முனியம்மாளுக்கு மண்டை காய்ஞ்சு போச்சு.

“நான் உனக்கு என்ன கொண்டாந்திருக்கேன் பாரு..”

தன்கிட்ட இருக்க மண்தட்ட எடுத்துக் காமிச்சான் முனியன். முனியம்மாவுக்கு புஸ்ஸுன்னு ஆகிப்போச்சு. இதுக்குத்தானா இந்தக் கேனையன் இந்த ஆட்டம் ஆடினான்? புருஷன எளக்காரமாப் பார்த்தா. முனியனுக்கு அவ என்ன நினைக்கிறான்னு புரிஞ்சு போச்சு.

“அடிப்பாவி.. இது மாயத்தட்டுடி..”

தனக்கு அந்தத் தட்டு கிடச்ச கதைய முனியன் சொன்னவுடனே முனியம்மாவுக்கு தலைகால் புரியல. நம்ம கஷ்டகாலம்லாம் ஓடிப்போச்சுன்னு ஒரே குஷியாயிட்டா.

“ஏன்யா.. எனக்குத்தான் அல்வான்னா ரொம்பப் பிடிக்கும்னு உனக்குத் தெரியுமே.. வர வச்சுக் கொடுய்யா..”

முனியனும் சந்தோஷமா தட்ட எடுத்து அல்வா கொடுன்னு நினச்சான். ஒண்ணும் வரல. பூந்தி கொடு தட்டே. சேவு கொடு. தட்டே எனக்காகக் கொடு. ஒரு மண்ணும் வரல. அவ்வ்வ்.. பூதம் நம்மள நல்லா ஏமாத்திருச்சோ?

“ஏய்.. அப்படிப் பார்க்காத புள்ள.. அது.. நேத்திக்கு தட்டு ரொம்ப நேரம் வேலை பார்த்துச்சுல.. அதனால இப்போ ஓய்வா இருக்கு.. இன்னும் கொஞ்ச நேரத்துல சரியாப் போயிடும்..”

முனியனும் தன்னல முடிஞ்ச மட்டுக்கும் கெஞ்சுனான் கதறுனான். ஆனா ஒண்ணும் வேலைக்காகல. வெறும் மண்தட்டு என்னத்தக் கொடுக்கும்?

முனியம்மாவுக்கோ உச்சி மண்டைல சுர்ருன்னு ஏற ஆரம்பிச்சுருச்சு. நம்ம புருஷன மனுஷங்கதான் ஏமாத்துறாய்ங்கன்னு பார்த்தா இப்போ பூதங்க கூட ஏமாத்த ஆரம்பிச்சுருச்சே. ஒரு மனுஷன் இம்புட்டு கேனையனாவா இருக்குறது? சுத்தி முத்தி பார்த்தா. ஒரு நீட்ட கழி கிடந்தது. எடுத்து புருஷனுக்கு போட்டா ஒரு பூசை.

அடியப் பூரா வாங்கிக்கிட்டு நின்ன முனியன் ஒரு முடிவுக்கு வந்தான். மறுநாள் ஒரு தூக்குச் சட்டில ரெண்டு களி உருண்டைய எடுத்துக்கிட்டு காட்டுக்குள்ள நடந்து பூதம் இருக்க மரத்துக்கு வந்து சேர்ந்தான்.

“ஏய்.. உங்க ரெண்டு பேரையும் இப்போ நான் சாப்பிடப் போறேன்..”

ஆகா அந்த மந்திரவாதி ஏன் திரும்பி வந்தான் நாம்தான் அவனுக்கு மாயத்தட்டு தந்தோமேன்னு பூதங்களுக்கு ஒரே குழப்பம். குடுகுடுன்னு கீழ எறங்கி முனியன் முன்னாடி வந்து நின்னுச்சுங்க.

“அய்யா மந்திரவாதி.. இன்னும் என்ன பிரச்சினை?”

முனியன் நடந்தத சொன்னான். பூதங்களுக்கு ஒரே குழப்பம்.

“சரி.. எங்கேயோ தப்பு நடந்து போச்சு தலைவரே.. விடுங்க அத சரி பண்ணிடுவோம்..”

ஒரு பூதம் கண்ண மூடி மந்திரம் சொல்ல ஆரம்பிச்சது. ஜூலோ கூலோ அபால் டுபால் பம் பஜக். டஸ்.. புகைக்கு நடுவுல ஒரு ஆடு மேன்னு கத்திக்கிட்டு நின்னுச்சு.

“இந்த ஆடு இருக்கே.. இது ஒரு மந்திர ஆடு. நீங்க கொஞ்சம் புல்லு வெட்டி போட்டாப்போதும்.. தங்கமா புழுக்க போடும்..”

“இந்தத் தடவை என்னை நீங்க ஏமாத்தலயே..”

“அய்யய்ய.. என்ன தலைவரே.. நீங்க எம்புட்டுப் பெரிய மந்திரவாதி.. உங்கள நாங்க ஏமாத்த முடியுமா?”

முனியனுக்குப் பெருமை தாங்கல. சரி சரின்னு இளிச்சுக்கிட்டே ஆட்ட இழுத்துக்கிட்டு கெளம்பிட்டான்.

வழக்கம் போல இருட்டிப்போனதால வழில இருந்த கெழவி வீட்டுல முனியன் தங்குனான். போன தடவை மாயத்தட்டு. இந்த தடவை ஆடா? இதுல என்னா இருக்குன்னு கெழவி கேட்டா. முனியனும் வெள்ளந்தியா ஆடு தங்கப்புழுக்க போடும்னு ஒளரிட்டுத் தூங்கப் போயிட்டான். அன்னைக்கு ராத்திரி கெழவி முனியனோட ஆட்டக் கழட்டி ஒளிச்சு வச்சுட்டு ஒரு சாதா ஆட்ட கட்டி விட்டுட்டா. காலையில் கெளம்பி வீட்டுக்கு வந்தான் முனியன்.

“முனியம்மா.. கதவைத்திற.. டிங்டிங்டிங் டிடிக்டிடிங்..”

கதவைத் தொறந்த முனியம்மா கைல வெளக்குமாறோட நின்னா. இப்போ நம்ம புருஷன்காரன் என்ன கூத்து பண்ணப்போறானோ?

“இன்னைக்கு என்னா கதை சொல்லப்போற?”

அடியே இது மந்திர ஆடுன்னு ஆரம்பிச்சு முனியன் ஆட்டப் பத்தி சொன்னான். முனியம்மாவுக்கு இந்தத்தடவ கொஞ்சம் நம்பிக்கை வந்துச்சு. சரின்னு சொல்லி ஊரு பூரா சுத்தி புருஷனும் பொண்டட்டியும் புல்லறுத்துக் கொண்டு வந்து ஆட்டுக்குப் போட்டாங்க. அந்த ஆடும் நல்லாத் தின்னுபுட்டு வீடு பூரா வெறும் புழுக்கையா போட்டு வச்சது. தங்கப்புழுக்கையா இது? முனியம்மா பத்திரகாளியா மாறி வெளக்கமாத்த கொண்டு புருஷன சாத்து சாத்துன்னு சாத்திட்டா.

கடைசியா ஒரு முயற்சி. முனியன் திரும்பவம் பூதங்ககிட்ட போனான். அதுங்களுக்கு புரிஞ்சு போச்சு. யாரோ வெளயாடுறாங்க. சரி.. இதுக்கு ஒரு வழி பண்ணுவோம்னு மந்திரத்த சொல்லுச்சு பூதம். இஸ்தலக்கடி லாலா சுந்தரி கோலா கொப்புறங்கொய்யா.. முனியன் கைல ஒரு கம்பும் கயிறும் மாயமா வந்திருச்சு.

“தலைவரே.. இத எடுத்துக்கிட்டு போங்க.. உங்க பிரச்சினை எல்லாமே தீர்ந்துடும்”

சரின்னு கெளம்பி வந்த முனியன் எப்பவும்போல பாட்டி வீட்டுக்கு வந்தான். அசதியா இருக்குன்னு சீக்கிரமாவே தூங்கிட்டான். ஒவ்வொரு தடவையும் ஏதச்சும் மாயமந்திரப் பொருளைக் கொண்டுவருவானே இந்தத் தடவை கயிறும் கம்பும் கொண்டு வந்திருக்கானேன்னு பாட்டிக்கு ஒரே சம்சயம். ராத்திரி சத்தமில்லாமப் போய் கம்பக் கைல தொட்டுச்சு.

அடுத்த நிமிஷம்.. கயிறு கெழவியக் கட்டிருச்சு. கம்பு போட்டு டம் டம்முன்னு கெழவிய அடி நொறுக்குது. அவ குய்யோ முய்யோன்னு கத்த ஆரம்பிச்சுட்டா. சத்தம் கேட்ட முனியன் முழிச்சு வந்தான்.

“தம்பி.. தெரியாத்தனமா உன் பொருளைப் பூரா திருடிட்டேன். என்ன மன்னிச்சுடு. உன் தட்டையும் ஆட்டையும் திருப்பித் தந்திடுறேன். என்ன விட்டுடச் சொல்லு”ன்னு கெழவி கதறுது. முனியன் கம்பை பார்த்துக் கைய அசச்சான். அது அடிக்கிறத நிப்பாட்டி கயிரும் அவுந்துச்சு. கெழவி ஓடிப்போய் அவன்கிட்ட இருந்து எடுத்தத எல்லாம் திருப்பிக் கொடுத்தான்.

“எப்பவும் அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்படக்கூடாது.. புரிஞ்சுதா?”

பாட்டிக்கிட்ட சொல்லிட்டு வீட்டுக்குக் கெளம்பி வந்தான் முனியன். அவன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும்னு புரிஞ்சுக்கிட்ட முனியம்மா அவனோட சேர்ந்து சந்தோஷமா வாழ ஆரம்பிச்சா.

தன்கிட்ட இருந்த மாயப்பொருட்களோட உதவியோட எல்லாருக்கும் நல்லது பண்ணி ரொம்ப நாளைக்கு ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ்ந்தாங்க.

February 21, 2011

இரு பூதங்கள் - 1

ஒரு ஊருல முனியன், முனியம்மான்னு புருஷன் பொண்டாட்டி இருந்தாங்க. இதுல முனியன் ரொம்ப நல்லவன். அப்பாவி. யாரு எந்த வேல சொன்னாலும் சலிக்காம செய்வான். அத அந்த ஊருக்காரனுங்க நல்லா பயன்படுத்திக்குவாங்க. நாள் பூரா முனியன்கிட்ட வேல வாங்கிட்டு கொறஞ்ச கூலி கொடுத்து அனுப்பி விட்டுடுவாங்க.

முனியம்மாளும் நல்லவதான். ஆனா ஊருல இருக்குற எல்லாரும் தம்புருஷன நல்லா வேல வாங்கிக்கிட்டு ஏமாத்துறாங்களேன்னு அவளுக்கு ரொம்ப வருத்தம். நம்ம புருஷன் சரியான ஏமாளியா இருக்கானேன்னு பொலம்பிக்கிட்டே இருப்பா. இப்படியே விட்டா தன்னால முன்னேறவே முடியாதுன்னு தெரிஞ்சுகிட்டு ஒரு முடிவுக்கு வந்து தன் புருஷனக் கூப்பிட்டு சொன்னா.

“இந்தா பாரு. இந்த ஊருலயே இருந்தா இப்படியே கூலியாத்தான் இருக்கணும். இவய்ங்க உந்தலையில மொளகா அரச்சுக்கிட்டேதான் இருப்பாய்ங்க. நாளப்பின்ன நமக்குன்னு ஒரு புள்ளகுட்டி ஆச்சுன்னா அதுக்கு நாலு காசு பணம் சேர்த்து வைக்க வேணாமா? அதனால நீ நாளைக்கு வேற வேல தேடி வெளியூரு போற.. அங்கயாச்சும் காரியமா பொழக்கப் பாரு.. சரியா?”

முனியனால ஒண்ணும் மறுத்துப் பேச முடியல. சரின்னுட்டு மறுநாளு மூட்டயக் கட்டிட்டான். வழில சாப்பிடுறதுக்கு ரெண்டு களி உருண்டைய சட்டில போட்டுத் தந்தா முனியம்மா. வாங்கிக்கிட்டு காட்டு வழில நடக்க ஆரம்பிச்சான்.

எவ்வளோ நேரம் நடந்திருப்பான்னு அவனுக்கே தெரியாது. நல்ல பசி. சரி எங்கேயாவது உக்கார்ந்து சாப்பிடுவோம்னு ஒரு மரத்து நிழல்ல உக்கார்ந்தான். சட்டியத் தொறந்தா உள்ள மினுமினுட்டு ரெண்டு களி உருண்ட. அதப் பார்த்து முனியனுக்கு நாக்குல எச்சி ஊற ஆரம்பிச்சது. சிரிச்சுக்கிட்டே சந்தோஷமா கத்துனான்.

“ஏய்.. உங்க ரெண்டு பேரையும் நான் இப்போ சாப்பிடப்போறேன்.. ஹா ஹா ஹா”

அவன் கத்துனது அந்த மரத்து மேல உக்கார்ந்து இருந்த ரெண்டு பூதங்க காதுல விழுந்துச்சு. ஆகா கண்ணுக்குத் தெரியாம இருக்குற நம்மள சரியாக் கண்டுபிடிச்சுட்டானே.. அதோட நம்மள சாப்பிடப் போறேன்னு வேற சொல்றானே.. அப்போ இவன் பெரிய மந்திரவாதியாத்தான் இருக்கணும்னு அதுங்களுக்கு ரொம்பப் பயமாப்போச்சு.

டபால்னு எறங்கி முனியன் முன்னாடி வந்துச்சுங்க. “அய்யா மந்திரவாதி.. எங்கள ஒண்ணும் பண்ணிடாதீங்க..”

பொசுக்குன்னு தன் முன்னாடி வந்து நிக்கிற பூதங்களப் பார்த்தவுடனே முனியனுக்கு கையும் ஓடல காலும் ஓடல. இருந்தாலும் தைரியத்த வர வச்சுக்கிட்டு அதுங்கள நிமிர்ந்து பார்த்தான்.

“சரி.. சொல்லுங்க..”

“நீங்க எங்கள சாப்பிடப் போறதா சொன்னீங்க. வேண்டாம். எங்கள விட்டுருங்க..”

முனியனுக்கு புரிஞ்சு போச்சு. ஆகா நம்ம களி உருண்டைய சொன்னத இந்த முட்டா பூதங்க தங்கள சொல்றோம்னு நினச்சுக்கிடுச்சு போல. சரி இதை நாம பயன்படுத்திக்குவோம்னு நினச்சுக்கிட்டான்.

போனாப் போகுதுன்னு விடுறேன். அதுக்குப் பதிலா எனக்கு நீங்க என்ன தருவீங்க..?”

“இதோ..”

ஒரு பூதம் கண்ண மூடி ஜெய் அலக் பலக் டபக் நிரஞ்சன்னு ஒரு மந்திரத்த சொல்லுச்சு. புஸ்ஸுன்னு புகை. முனியன் கண்ணத் தொறந்து பார்த்தா அவன் கைல ஒரு மண் தட்டு இருந்துச்சு.

“இத வச்சு நான் என்ன பண்ண?”

“குருவே.. இது மந்திரத்தட்டு.. நீங்க சாப்பிடுறதுக்கு எதக் கேட்டாலும் கொடுக்கும்..”

முனியனுக்கு குஷியாயிடுச்சு. தட்ட எடுத்துக்கிட்டு பூதங்ககிட்ட சொல்லிட்டுக் கெளம்பிட்டான். ஊருக்குத் திரும்பி நடக்குறப்போ ராத்திரி ஆகிடுச்சு. இந்நேரத்துக்கு மேல இருட்டுல நடக்க முடியாது. என்ன பண்ணலாம்னு யோசிச்சப்போ வழில ஒரு வீட்டைப் பார்த்தான். சரி இங்க தங்கிட்டு காலைல போவோம்னு நெனச்சான். அங்க போய்ப் பார்த்தா ஒரு கெழவி வந்து கதவைத் தொறந்தா.

“பாட்டி.. பாட்டி.. இன்னைக்கு ராத்திரி மட்டும் நான் இங்க தங்கிக்கலாமா?”

“அதுக்கென்னப்பா.. தாராளமா.. ஆனா இங்க சாப்பிட எதுவும் இல்லையே..”

“நீ கவலப்படாத பாட்டி.. இப்போப் பாரு..”

அப்பாவி முனியன் தன்னோட தட்ட வெளில எடுத்து லட்டு கொடு பூந்தி கொடுன்னு சொல்ல ஆரம்பிச்சான். அவன் சொல்லச்சொல்ல எல்லா சாப்பாடும் மாயமா வர ஆரம்பிச்சது. கெழவிக்கு ஒரே ஆச்சரியம். இது எப்படி தம்பின்னு கேட்டா. முனியனும் தன்னோட கதைய சொன்னான்.

ரெண்டு பேரும் நல்லா சாப்பிட்டுப்புட்டு தூங்கப் போயிட்டாங்க. முனியனுக்கு சரியான அசதி. அடிச்சுப் போட்ட மாதிரித் தூங்கிட்டான். ஆனா கெழவிக்குத் தூக்கமே வரல. அந்த தட்டு ஞாபகமாவே இருந்துச்சு. நடுராத்திரில மெதுவா எந்திரிச்சு முனியனோட அறைக்குப் போனா. அங்க இருந்த மாயத்தட்ட எடுத்துட்டு ஒரு சாதாரண தட்ட வச்சுட்டு சத்தமே இல்லாம வந்து படுத்துக்கிட்டா.

அடுத்த நாள் காலையில ரொம்ப சீக்கிரமாவே எந்திரிச்சுட்ட முனியன் பாட்டிக்கிட்ட சொல்லிக்கிட்டு தன்னோட தட்டயும் எடுத்துக்கிட்டு கெளம்பிட்டான். வீட்டுக்கு வந்து சந்தோஷமா கதவத் தட்டினான்.

“முனியம்மா.. கதவத்திற.. டிங்டிங்டிங் டிடிக்டிடிங்..”

(தொடரும்..)

January 5, 2011

கூடு

தினமும் இரவு எட்டு மணிக்கு மேல் அந்த டாக்சி ஸ்டாண்டில் கூடுவதை நானும் எனது இரண்டு நண்பர்களும் வாடிக்கையாகிக் கொண்டிருந்தோம். நாளெல்லாம் வயிற்றுப்பாட்டுக்காக நகரத்தின் சந்து பொந்தெல்லாம் அலைந்து திரிந்து சோர்ந்து வரும் எங்களுக்கு, ஒன்றாய்ப் பேசி மகிழும் அந்தப் பொழுதுகள், கூண்டுப் பறவைகள் வானத்தின் வாசம் தேடும் சிற்சில கணங்கள்.

இந்த ஊரைச் சுத்துன கழுதைக்கு வேறெந்த ஊரும் பிடிக்காது என்று கொண்டாடப்படும் மதுரையின் குடிமக்கள் நாங்கள். மதுரையும் நகரம் எனவோ கிராமம் என்றோ வரையறுக்க முடியாததொரு ஊர். நவீன பாணி கட்டிடங்களும் நூற்றாண்டு பழமையான வீடுகளும் மாறி மாறி காணக் கிடைக்கும். ஊரின் பழமைக்கு சாட்சியாக இன்னும் ரயில்வே ஸ்டேஷனின் எதிர்ப்புறம் இருக்கும் மங்கம்மாள் சத்திரம் பல கதைகள் சொல்லும். ஆனால் தூங்கா நகரம் இன்றைக்கு தூசி நகரம்.

சத்திரத்தின் பக்கவாட்டில் போகும் டவுன் ஹால் ரோட்டின் காலேஜ் ஹவுஸ்க்கு எதிரில் நாங்கள் கூடும் டாக்சி ஸ்டாண்டு இருந்தது. பச்சை நிற வர்ணமடித்த நான்கைந்து இரும்புக் கம்பங்கள் தாங்கிப் பிடிக்கும் ஒரு ஆஸ்பெடாஸ் கூரை. ஓரமாக குவிந்து கிடக்கும் நைந்து போன பழைய ட்யூபுகள். கூரையின் கம்பிகளில் தன்னுடைய கூட்டை அமைத்துக் கொண்டிருந்த குருவியின் குவிக் குவிக் சத்தம் மட்டும் எப்போதும் கேட்டுக் கொண்டேயிருக்கும்.

ஸ்டாண்டின் உள்ளே சீருடையணிந்த பள்ளிப் பிள்ளைகளென வரிசையாக அணிவகுத்து நிற்கும் வெள்ளை நிற அம்பாசிடர்கள். விதவிதமான வசதிகளோடு எத்தனை கார்கள் வந்தாலும் நெடுந்தூரப் பயணம் என்றாலே மக்களுக்கு அது அம்பாசிடர்தான். அதிகபட்சமாக ஒரே நேரத்தில் ஐந்து கார்களை நிப்பாட்டுவதற்கான இடம் அந்த ஸ்டாண்டில் இருந்தது.

எப்போது பார்த்தாலும் மூன்று அல்லது நான்கு வண்டிகள் ஸ்டாண்டில் நின்று கொண்டே இருக்கும். வண்டியின் டிரைவர்களுக்கும் எங்களுக்கும் இடையே நல்லதொரு நேசபாவம் இருந்தது. எப்போது பார்க்கும்போதும் அவர்கள் முகத்தில் எங்களுக்கான சிரிப்பை ஒளித்து வைத்திருந்தார்கள். அந்த டிரைவர்களில் சிலர் தங்கள் மனைவிமாரை விடவும் அதிகமாக அந்தக் கார்களை காதலிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். தாம் குளிக்கிறோமோ இல்லையோ கார்களை அழகாகக் கழுவி துடைத்து பராமரிக்கும் வழக்கம் அவர்களுக்கு இருந்தது.

எங்களுக்கு ரொம்பவும் நெருக்கமான தன்ராஜ் அண்ணனுக்கு வீடென்று ஒன்று உண்டாவெனவே யாருக்கும் தெரியாது. அவருடைய கார்தான் அவருக்கு வீடு. சவாரி இல்லாத நாட்களில் ஸ்டாண்டு படு பயங்கரமாக களை கட்டும். சீட்டாட்டம், கோலி என விளையாட்டுகளில் டிரைவர்களுக்கு பொழுது போகும். தோற்பவர்கள் மற்றவர்களுக்கான சாப்பாட்டு செலவுகளையும் சரக்குக்கான தேவையையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் ஆட்டத்தின் விதிமுறை. இது மாதிரியான தினங்களில் அதிகம தோற்பது தன்ராஜ் அண்ணனாகத் தான் இருக்கும். எல்லாருக்கும் அவர் சரக்கு வாங்கும்போது அவர்களோடு நாங்களும் கலந்து கொள்ளும் அளவுக்கு எங்களுக்கும் அவர்களுக்கும் நெருக்கம் இருந்தது.

ஸ்டாண்டின் டிரைவர்களுக்கு எல்லாம் கமலாதான் அன்னலட்சுமி. அவளுடைய இட்லிக்கடை ஸ்டாண்டின் இடப்புறமாக இருந்தது. கடை என்று சொல்லி விட்டதாலேயே பெரிதாக எதுவும் கற்பனை செய்து கொள்ள வேண்டாம். ஒரு தார்ப்பாலின் சீட்டு, அதன் கீழே இரண்டு பேர் கல்லில் குத்த வைத்து உட்காருவதற்கான வசதி, இட்டிலிக்குண்டா, நான்கைந்து தட்டுகள், ஒரு இத்துப்போன வாளி (கை கழுவ) மற்றும் ஒரு பிளாஸ்டிக் குடம் (குடிக்க). சின்னக் கடையாக இருந்தாலும் அந்தப் பகுதியில் கூலி வேலை பார்க்கும் எல்லோருக்கும் அதுதான் ஸ்டார் ஹோட்டல்.

கமலாவுக்கு சொந்த ஊர் தூத்துக்குடி என்பதை விசாரித்து தெரிந்து கொண்டிருந்தோம். இருபது ஆண்டுகளுக்கு முன்பு காதலென நம்பி யார் கூடவோ மதுரைக்கு ஓடி வந்தவள். கூட வந்தவன் சகலத்தையும் கறந்து விட்டு கழண்டு கொள்ள நடுத்தெருவில் நின்றிருக்கிறாள். வயிற்றுப்பாட்டுக்கு உதவிய சிலரால் இந்தக்கடை வைத்து இன்றைக்கு சொல்லிக் கொள்ளும்படியான வாழ்க்கை.

அவள் கடையின் மீதங்களைத் திண்டு உயிர் வாழ கற்றுக் கொண்டிருந்தது ஒரு கறுப்பு நாய். தெனக்கரத் தின்று விட்டு ஸ்டாண்டிலேயே படுத்துக் கிடக்கும். தெரியாத ஆட்கள் கடையை நெருங்கினாலோ ஸ்டாண்டுக்கு உள்ளே வந்தாலோ அது போடும் கூச்சலில் ஊரே அதிரும். கமலா ஒருத்தியின் குரலுக்குத்தான் அடங்கும். இரவு நேரங்களில் அதுதான் கடைக்கு காவல்.

நாலு வருஷம் முன்பு வரை கடைதான் அவளுடைய வீடாகவும் இருந்து வந்தது. இப்போது காக்காத்தோப்பில் வாடகைக்கு வீடு. (எத்தனை நாள் தான் தெருவிலேயே கிடக்குறது?) அங்கேயே சில பெண்களை வைத்து தொழில் செய்து வருவதாகவும் கேள்வி. ஆனால் அதை அவளிடம் கேட்கும் தைரியம் எங்களில் யாருக்கும் இல்லை.

டாக்சி டிரைவர்கள் தவிர்த்து கமலாவின் மிக முக்கியமான கஸ்டமர் முருகேசன். டாக்சி
ஸ்டாண்டின் எதிரே இருந்த புதிய உலகம் புத்தகக்கடையின் உரிமையாளர். அவருக்கு அறுபது வயதுக்கு மேலிருக்கும். பிள்ளைகள் எல்லாரும் வெளிநாட்டில் போய் தங்கிவிட இவர் பொழுது போகாமல் இந்த புத்தகக்கடையை நடத்தி வந்தார். ரோட்டில் உள்தள்ளி இருக்கும் அந்தக் கடைக்கு புத்தகம் வாங்க ஆட்கள் வந்து யாரும் பார்த்து இல்லை. ஆனால் அதைப் பற்றி முருகேசன் என்றைக்குமே கவலைப்பட்டது கிடையாது.

அவரிடம் இல்லாத புத்தகங்களாக விசாரித்துக் கொண்டு சில தோழர்கள் அவரது கடைக்கு வருவார்கள். அவர்களே அவருடைய மிகப்பெரிய பேச்சுத்துணையாக இருந்தார்கள். டாக்சி ஸ்டாண்டின் டிரைவர்களுக்கும் அவர்களை நன்றாகத் தெரிந்திருந்தது. பகல் பொழுதை எல்லாம் பேசிக் கழிக்க அவர்களுக்கு அந்த ஸ்டாண்டும் கமலாவின் கடையும் மிக உதவியாக இருந்தன.

ஆரம்பம் முதலே எங்களுக்கும் முருகேசனுக்கும் ஏழாம் பொருத்தம்தான். பொதுவில் அவர் யாரையும் நம்பாதவராகவே இருந்தார். இரவில் கடையைப் பூட்டுவதில் அவருக்கு வித்தியாசமானதொரு பழக்கம் இருந்தார். முதலில் ஷட்டரை இறக்கிப் பூட்டுவார். சிறிது தூரம் செல்வார். பிறகு மீண்டும் வந்து பூட்டை ஒரு முறை பரிசோதித்துப் பார்ப்பார். திருப்தி இல்லாதவராக கடையைத் திறந்து ஒரு முறை மீண்டும் எல்லாவற்றையும் சரி பார்ப்பார். கடைசியாக கடையை பூட்டிக் கொண்டு புறப்படுவார். இதைத் தன் தினசரி கடமையாகவே அவர் கொண்டிருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பிருந்து அவனை நாங்கள் ஸ்டாண்டில் பார்த்து வருகிறோம். கிழிந்த உடைகள். எப்போதும் வானத்தையே வெறிக்கும் பார்வை. வாயைத் திறந்து ஏதும் பேசவோ கேட்கவோ மாட்டான். எப்போதாவது பசித்தால் அருகில் இருக்கும் கடைகளில் சென்று கையை நீட்டுவதொடு சரி. யாரவன் எங்கிருந்து வந்தான் என்பதை யாரும் அறிந்திருக்க வில்லை. ஆனால் அவனும் ஸ்டாண்டைத் தன் வசிப்பிடமாகிக் கொண்டான்.

இரவு நேரத்தில் நடைபாதைக்கும் முருகேசனின் கடைக்கும் இருக்கும் இடைவெளியில் அவன் படுத்துக் கொள்ளுவதைப் பார்த்திருக்கிறோம். சிறிது நேரத்திலேயே அனிச்சை செயலாக அவனுடைய கைகள் கால்சராய்க்குள் போய் விடும். ஆரம்பத்தில் டிரைவர்கள் அவனைக் கடுமையாகத் திட்டுவதோடு இழுத்துப் போட்டு அடித்தது கூட உண்டு. ஆனால் அவன் எதையும் பொருட்படுத்தாதவனாக இருந்தான். காலப்போக்கில் அதுதான் அவனுடைய இயல்பென ஏற்றுக் கொள்ள டிரைவர்களும் பழகி விட்டார்கள்.

நாங்கள் கதை பேசி பிரியும்போது மணி பத்தைத் தாண்டி விடும். அதன் பிறகான பின்னிரவில் டாக்சி ஸ்டாண்டின் நிறமே மாறி விடும் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். கார்களின் பின்புற இருளில் அசைவுகளும் சிரிப்பொலியும் பெருகும். பஸ் ஸ்டாண்டிலும், ரயில்வே ஸ்டெஷனிலும் தங்களுக்கான கிராக்கிகளைக் கண்டுகொள்ளும் ரூட்டுகளும் அஜக்குகளும் செலவின்றி ஒதுங்குவதற்கான இடமாக அந்த ஸ்டாண்டையே பயன்படுத்தி வந்தார்கள். சிறுவர்கள் பொட்டலங்களோடு சுற்றுவதையும் வேணுமா அண்ணே என கிண்டலாக எங்களைக் கேட்பதும் வெகு இயல்பான விஷயமாக இருந்தது.

எதைத் தேடித் திரிகிறோம் எனத் தெரியாமலே அலைந்து திரியும் நாங்கள், டிரைவர்கள், கமலா உட்பட நாங்கள் அறிந்த மனிதர்கள் என எல்லோருமே ஒருவருக்கொருவர் தொடர்பு இல்லாதவர்களாகவே இருந்தோம். ஆனால் எங்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் சின்னதொரு இழையாக அந்த டாக்சி ஸ்டாண்டு இருந்து வந்தது.

அந்த
டாக்சி ஸ்டாண்டைத்தான் சாலையை அகலமாக்குவதாக சொல்லி இரண்டு நாட்களுக்கு முன்பாக இடித்து விட்டார்கள்.

ஏதும் பேச இயலாதவர்களாக சாலையின் முனையில் நின்று கொண்டிருந்தோம். கண்களில் யாருமில்லா வெறுமை மட்டுமே நிறைந்து கிடந்தது. எப்போதும் அங்கே நிற்கும் கார்கள் இன்று இல்லை. காற்றில் கரைந்தவர்களாக அந்த டிரைவர்கள் காணாமல் போயிருந்தார்கள். கமலாவின் கடை இருந்த இடத்தில் தார்ப்பாலின் கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது. அந்தக் கருப்பு நாய் மட்டும் அங்கே சுற்றி சுற்றி வந்தது. புத்தகக்கடை மூடி கிடக்க அதன் வாசலில் இருந்த கிறுக்கனையும் காணவில்லை.

குருவியின் கூட்டிலிருந்து பிய்த்து எறியப்பட்ட முற்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக சிதறிக் கிடந்தன. ஒவ்வொரு முறை காரை கிளப்பும்போதும் வெளிவரும் புகையினால் உண்டான கறுப்புக் கறை மட்டுமே ஸ்டாண்டின் பின்புற சுவரில் பாக்கி இருந்தது. இன்னும் சில நாட்களில் அதுவும் இல்லாமல் போய்விடக் கூடும்.

December 23, 2010

செல்லமே ( 3/4 பக்க கதை)

"ஹலோ.. வணக்கம்.. யார் பேசுறீங்க?"

"...."

"ஹலோ.."

"பிரியத்துக்குரிய என் செல்லம் நிஷாக்குட்டிக்கு இனிய மாலை வணக்கம்.."

"ஹையோ.. சுமதி அக்கா.. எப்படி இருக்கீங்க?"

"நல்லா இருக்கேன்மா.. நீங்க எப்படி இருக்கீங்க?"

"சூப்பரா இருக்கேன்.. போங்கக்கா.. உங்க மேல எனக்கு கோபம்.. ஒரு வாரமா ஏன் பேசவே இல்ல?"

"அப்படி சொல்லாதடா கண்ணு... ஒரு வாரமா லைனே கிடைக்கல தெரியுமா? உன்கூட பேசாம நான் மட்டும் சந்தோஷமாவா இருப்பேன்.."

"அதான பார்த்தேன்.. சொல்லுங்க.. இன்னைக்கு என்ன பண்ணப் போறீங்க?"

"பாட்டு பாடப் போறேன்மா.."

பூவே பூச்சூடவா
என் நெஞ்சில் பால் வார்க்கவா..

"அருமை.. ரொம்ப அழகா பாடினீங்க.. அட்டகாசமா பாடி அசத்திய சைதை சுமதி அக்காவுக்காக ஒரு பாடல் வந்துக்கிட்டே இருக்கு.. பார்க்கலாம் வாங்க.."

போனை வைத்து விட்டு திரும்பினாள் சுமதி. நான்காம் வகுப்பு படிக்கும் அவள் பிள்ளை ரிதின்யா கையில் நோட்டோடு நின்று கொண்டிருந்தாள்.

"அம்மா.. இந்த கணக்கு புரியல.. கொஞ்சம் சொல்லித் தாயேன்.."

"சனியனே.. அதான் மாசா மாசம் ஸ்கூலுக்கு ஆயிரக்கணக்குல கொட்டிக் கொடுக்குறோம்ல.. அங்க ஒழுங்கா சொல்லித் தர மாட்டாங்களா? இங்க வந்து என் உயிரை வாங்கிக்கிட்டு? ச்சீ.. இந்த வீட்டுல அஞ்சு நிமிஷம் நிம்மதியா இருக்க முடியுதா? எல்லாம் என் தலையெழுத்து.. வந்து தொலை.."

சுமதி பிள்ளையை இழுத்து உக்கார வைக்க டிவியில் அவளுக்கான பாடல் சமர்ப்பணம் ஆகிக் கொண்டிருந்தது.

அன்பென்ற மழையிலே
அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே..

November 20, 2010

மூர்த்தியும் மேட்டர் புத்தகங்களும்

”ஏய்யா.. தங்கம்.. கொஞ்சம் எந்திரிய்யா..”

மூர்த்தி புரண்டு படுத்தான்.

“போங்கம்மா.. காலங்கார்த்தால மனுஷனத் தூங்க விடாம நொச்சு பண்ணிக்கிட்டு..”

வாரயிறுதி நாட்களில் மூர்த்திக்கு காலை என்பது பதினோரு மணிக்குத்தான் விடியும். அதற்கு முன்பான எல்லா நேரமுமே அவனுக்கு அதிகாலைதான்.

“ஒரே ஒரு நிமிஷம்ப்பா.. அம்மா கேக்குறதுக்கு பதில் சொல்லிட்டு தூங்கு சாமி.. நம்ம வீட்டுக்குள்ள கண்ட கண்ட அசிங்கமான புத்தகம்லாம் கிடக்குது. நீ ஏதும் கொண்டு வந்தியாப்பா?”

அவன் போர்வையை இழுத்து மூடிக்கொண்டு எரிச்சலாக சொன்னான்.

“எனக்கு ஒரு வெங்காயப் புத்தகமும் தெரியாது. தூங்க விடுங்கம்மா..”

அவன் எழுந்தபோது மணி பதினொண்ணரை. மெதுவாக நடந்து பின்கட்டுக்குப் போனவன் பேஸ்டை பிரஷ்ஷில் ஈசிக்கொண்டு முன்வாசலுக்கு வந்தான். அந்த நேரத்துக்கு அவன் வாயில் பிரஷ்ஷோடு நிற்பது அந்தக் காலனிவாசிகளுக்கு பழகிப்போன ஒன்று. தண்ணி எடுத்துக் கொண்டு போன பக்கத்து வீட்டு நர்ஸ் ஃபிகர் இவனைப் பார்த்து சிரித்துப் போனது.

இவனும் பதிலுக்கு சிரித்து வைத்தபோதுதான் அது சரக்கென்று ஞாபகம் வந்தது. வீட்டுக்குள் ஏதோ புத்தகம் கிடப்பதாக அம்மா காலையில் எழுப்பினார்களே? அதுவாகத்தான் இருக்குமோ? அவனுக்கு வியர்க்க ஆரம்பித்தது.

மூர்த்திக்கு சென்னையில் பொறியியல் கல்லூரிப்படிப்பு. அப்பாவுக்கு ரயில்வே வேலை என்பதால் ஓசி பாஸ். வார இறுதியில் மதுரைக்கு ஓடிவந்து விடுவான். கல்லூரியில் படிக்கும் தன்னுடைய நண்பர்கள் கேட்டார்களே என அலையோ அலையென அலைந்து கடைசியாக மது தியேட்டர் வாசலில் இரண்டு சீன் புத்தகங்களை வாங்கி இருந்தான். மறுநாள் ஊருக்குக் கிளம்பும்வரை பத்திரமாக இருக்கட்டும் என்று அவற்றை பீரோவின் மேலே ஒளித்து வைத்திருந்தான். அதைத்தான் பூனையா பெருச்சாளியோ தட்டி விட்டிருக்க வேண்டும்.

என்ன சொல்லி அம்மாவை சமாளிப்பெதன யோசித்துக் கொண்டே உள்ளே போனவன் தொட்டியிலிருந்து தண்ணியை மோந்து வாய் கொப்பளிக்கத் தொடங்கினான். அம்மா அடுப்படியில் சமைத்துக் கொண்டிருந்தார்.

"தோசை ஊத்தட்டுமாய்யா.."

"உம்ம்..உம்ம்..”

கொடியிலிருந்த துண்டில் முகத்தை துடைத்துக்கொண்டே மெதுவாகக் கேட்டான்.

“என்னமோ தூங்கும்போது புத்தகம் அது இதுன்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்க? என்னம்மா?”

“நெஜமாவே உனக்கு ஒண்ணும் தெரியாதா?”

“சத்தியமா இல்லம்மா..”

“ரெண்டு புத்தகம்யா.. அசிங்க அசிங்கமா ஆம்பள பொம்பள படம் போட்டது.. கண்டமேனிக்கு எழுதி இருந்துச்சு. நம்ம வீட்டு உள்ரூம்ல கிடக்கு. எனக்கு ஒரு நிமிஷம் உடம்பெல்லாம் பதறிப் போச்சு. நம்ம பையனா இப்படின்னு? இப்போ நீ இல்லைன்னு சொன்னபிறகுதான் நிம்மதியா இருக்கு..”

எதுவும் பேசமுடியாமல் மென்று முழுங்கியபடி மூர்த்தி வீட்டுக்குள் திரும்பினான். பின்னாடி அம்மா சொல்வது காதில் விழுந்தது.

”காலம் போன காலத்துல உங்க அப்பாவுக்கு ஏந்தான் புத்தி இப்படிப் போகுதோ? இன்னைக்கு அந்த மனுஷன் வீட்டுக்கு வரட்டும் பேசிக்கிறேன்...”

மூர்த்திக்கு யாரோ அடிவயிற்றில் கத்தியை சொருகினாற்போல இருந்தது. தன் மீது அம்மா வைத்திருக்கும் நம்பிக்கை ஒரு பக்கம் என்றால் எந்தத் தப்புமே செய்யாத அப்பாவைப் போய் அம்மா சந்தேகப்பட வைத்து விட்டோமே என்ற குற்றவுணர்வு ஒரு புறம். அவனுக்கு தன்மீதே கோபம் கோபமாக வந்தது.

வெகு நேரம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவனாக மீண்டும் அடுப்படிக்குப் போனான்.

"அம்மா.."

"என்னய்யா.."

"அந்த புத்தகங்களை உள்ளே கொண்டு வந்து வச்சது நாந்தாம்மா.. பசங்க கேட்டாங்கன்னு.. "

அம்மா வேலையை ஒரு நிமிஷம் நிப்பாட்டிவிட்டு அவனைப் பார்த்தார். பிறகு சகஜமாகி வேலையைத் தொடர ஆரம்பித்தார். அவருடைய அமைதியின் அர்த்தம் மூர்த்திக்குப் புரியவில்லை.

"ஏதாவது திட்டுறதுன்னா திட்டிருங்கம்மா.. ஆனா இப்படி அமைதியா இருக்காதீங்க.."

கிட்டத்தட்ட அழுதுவிடுபவன் போல சொன்னான். அம்மா வேலையை நிப்பாட்டிவிட்டு அவனருகே வந்து நின்றார்.

"தம்பி.. நாம கறி சாப்புடுறோம்னு எல்லோருக்குமே தெரியும். அதுக்காக யாரும் எலும்ப மாலையா கோர்த்து போட்டுக்கிறோமா? இல்லையே.. அதுமாதிரித்தான் இதுவும்.. சாப்பிடுற மாதிரி.. தூங்குற மாதிரி.. செக்சும் ஒரு பீலிங்க்தான்.. அது எல்லார்கிட்டயும் இருக்கு.. அது தெரிஞ்சுக்கிற காலத்துல தானாத் தெரிஞ்சிக்கணும். அத விட்டுட்டு இப்படி பச்சை பச்சையா புத்தகம் எல்லாம் எதுக்குப்பா? நீ படிச்சவன். புரிஞ்சுக்குவன்னு நினைக்குறேன்.."

".."

"தோசை ஊத்திட்டேன். வா சாப்பிடு.."

வெகு கண்ணியமாகவும் பொறுமையாகவும் அம்மாவால் அதைத் தாண்டிப் போக முடிந்ததென்பது மூர்த்திக்கு ஆச்சரியமாகவும், கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது. தெளிந்தவனாக சாப்பிட உட்கார்ந்தான்.

அதற்குப் பிறகு அவன் வீட்டுக்கு மேட்டர் புத்தகங்களை கொண்டு போவதேயில்லை.

October 7, 2010

காதல் அழிவதில்லை

அவர்கள் அந்த மலை சிகரத்தின் உச்சியில் நின்றிருந்தார்கள். அவன் அவள் அவர்கள். அவன் அவளுடைய கைகளை இறுகப் பற்றியிருந்தான். இருவரின் முகத்திலும் வேதனையின் கசப்பு மிகுந்திருந்தது. அவர்கள் குதிக்கத் தயாரான நேரத்தில்தான் அந்தக் குரல் கேட்டது.

"ஹேய்ய்ய்ய்ய்ய்ய்...."

அவர்கள் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள். அங்கே அந்தப் பெண் சிரித்தபடி நின்றிருந்தாள்.

"எக்காரணம் கொண்டும் நீங்கள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்க மாட்டேன். ஆனால் அதற்கு முன்னர் உங்களோடு சிறிது நேரம் உரையாட முடியுமா?"

அவள் பேச்சில் இருந்த உறுதி அவர்களை என்னமோ செய்தது. அவர்கள் குழப்பத்தோடு இறங்கி வந்தார்கள். இப்போது அந்தப் பெண்ணை நெருக்கத்தில் பார்க்க முடிந்தது. சற்றே வித்தியாசமாக உடை அணிந்திருந்தாள். களையான யாரையும் எளிதில் கவரக்கூடிய முகம். உதடுகளின் ஓரம் ஒட்டியிருந்த அந்தப் புன்னகை இன்னும் அழகு.

"இப்படி இந்த மரத்தின் கீழே அமர்ந்து கொள்வோமா?"

அமர்ந்தார்கள்.

"எதற்காக இந்த தற்கொலை முடிவு?"

"வேறன்ன.. எல்லாம் இந்த பாழாப்போன காதல்தாங்க.."

"உங்களைப் பற்றி நான் தெரிந்து கொள்ளலாமா?"

"சொல்றேங்க... இவங்கப்பா ஊர்லையே பெரிய பணக்காரரு.. நாங்களும் வசதியான குடும்பம்தான்.. இவளக் காலேஜ்ல பார்த்து லவ் பண்ணினேன்.. இவ இல்லாம நான் இல்லைன்னு ஆகிப்போச்சு.. ரெண்டு பேர் வீட்டுலையுமே வசதி ஜாஸ்திங்கிரதால பிரச்சினை வராதுன்னு நம்பினோம்.."

"பிறகு..?"

"ஆனா எல்லாத்துக்கும் மேல தமிழன் கண்டுபிடிச்ச ஒரு விஷயத்த நாங்க மறந்துட்டோம்.. அது சாதி.. நான் கீழ்சாதியாம்.. அதனால பொண்ணு தர மாட்டேன்னு இவங்கப்பா சொல்லிட்டாரு.. நம்ம சாதியப் பத்தித் தப்பாப் பேசுனவன் பொண்ணு உனக்கு அவசியமான்னு எங்கப்பாவும் ஆட ஆரம்பிச்சுட்டாரு.. அதனால் வீட்டை விட்டு வந்தாச்சு.. என்ன பண்றதுன்னு தெரியல.. அதான் சாவுலையாவது ஒண்ணு சேருவோமேன்னு.. "

"நீங்கள் சொல்வதும் நியாயம்தான்.. ஆனால் ஒரே ஒரு கேள்வி.. செத்துப் போவதன் மூலம் நீங்கள் என்ன சாதிக்க முடியும் என நினைக்கிறீர்கள்?"

""எங்க அப்பாக்களுக்கு வலிக்கும்ல.. ஏன்டா இவங்களை சேர்த்து வைக்கலைன்னு காலம் பூரா அவங்க வருத்தப்படணுங்க.."

"ஹ்ம்ம்.. வீட்டை விட்டு வந்து எத்தனை நாளாகிறது?"

"ஒரு வாரமாச்சு.. ஏன் கேக்குறீங்க.."

"இந்த ஒரு வாரத்தில் எப்போதாவது உங்கள் வீட்டில் உங்களைத் தேடிக்கொண்டு வந்தார்களா?"

முதன்முறையாக அவன் முகத்தில் சிறிய குழப்பம் தோன்றியது.

"ம்ஹூம்.. இல்லைங்க.."

"உங்களை வருத்திக் கொள்வதை நான் தவறு சொல்ல மாட்டேன். ஆனால்.. உங்கள் கஷ்டத்தால் எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என்று சொல்பவர்களுக்காக நீங்கள் உங்களை அழித்துக் கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது..?"

"..."

"இப்படிப்பட்ட, உங்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாத மக்களுக்காக நீங்கள் மாய்ந்து போகத்தான் வேண்டுமா? உலகிலேயே அதிக தைரியம் தற்கொலை செய்து கொள்ளத்தான் தேவைப்படும்.... உங்களுக்கு அதற்கான தைரியமே இருக்கும்போது வாழ வேண்டும் என்றால் போராடுவதா முடியாது?"

"ஆமாங்க.. இவங்க சொல்றதுலயும் நியாயம் இருக்கு.."அந்தப் பெண் முதல் முறையாகப் பேசினாள்.

"இந்த வாழ்க்கை எத்தனை அழகானது தெரியுமா?" அவள் பேசத் தொடங்கினாள். பேசி முடித்தபோது அவர்கள் அழுது கொண்டிருந்தார்கள்.

"நல்ல நேரத்துல வந்து எங்களைக் காப்பாத்துனீங்க.. ரொம்ப நன்றி.. இவங்க முன்னாடி நாங்க கண்டிப்பா வாழ்ந்து காட்டுவோம்.."சொல்லும்போதே அவன் நா தழுதழுத்தது.

"இந்த நம்பிக்கை என்றைக்கும் இருக்க வேண்டும். எனக்கு அது போதும். புதிய வாழ்க்கையைத் தொடங்க இருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துகள்.. "

அந்தப் பெண் திரும்பி நடக்கத் தொடங்கினாள். சட்டென ஞாபகம் வந்தவனாக அவன் அவளைக் கூப்பிட்டான். அவள் நின்றாள்.

"எங்களுக்கு இவ்ளோ உதவி பண்ணினீங்க.. உங்களைப் பத்தி சொல்லவே இல்லையே.."

அவள் விரக்தியாகச் சிரித்தாள்.

"நானும் உங்களைப் போல தகுதி பார்க்காமல் காதலித்தவள்தான். என் அதீத அன்பே என் காதலரின் மரணத்துக்கு காரணமாகிப் போனது. நானும் ஒரு சில மருந்துகளை ஒன்றாகக் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றேன். ஆனால் என் கேட்ட நேரம் பிழைத்துக் கொண்டேன். ஒவ்வொருவர் வாழ்விற்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். அன்று முதல் என்னால் இயன்றவரை காதல் ஜோடிகளை ஒன்று சேர்த்து வாழ வைத்து வருகிறேன். நான் காப்பாற்றும் 3 ,88 ,76,543 ஆவது ஜோடி நீங்கள்.."

அவன் முழித்தான்.

"புரியலையே.."

"சில விஷயங்கள் புரியாமலிருப்பதே நல்லது.. நான் கிளம்புகிறேன்.."

"ஹலோ.. உங்க பேரென்னன்னு சொல்லவே இல்லையே.."

அவள் மெல்லிய புன்னகையோடே சொன்னாள்.

"அமராவதி.."

September 23, 2010

ஆபரேஷன் புளூ டைமண்ட் (சவால் சிறுகதை)

பாங்காக்கில் இருந்து சென்னை வரும் விமானம். 23ஆம் எண் இருக்கையில் அமைதியாக அமர்ந்து இருப்பவள்தான் காமினி.. நம் கதையின் நாயகி.

"இதுவரை எல்லாமே சுமூகமாகப் போய்க் கொண்டிருக்கிறது.. கடைசி வரை இப்படியே இருந்தால் சந்தோசம்.."

இருந்தாலும் மனதுக்குள் ஏதோ ஒரு குறுகுறுப்பு. வெகு நேரமாகத் தன்னை யாரோ உற்று கவனிப்பது போல.. சடாரென்று உள்ளுணுர்வு உந்தித் தள்ள திரும்பிப் பார்த்தாள்.

"இவ்வளவு நேரமாக அந்த சர்தார் தன்னைத்தான் பார்த்துக் கொண்டிருந்தானோ? ச்சே ச்சே இருக்காது..." தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். விமானம் இன்னும் சற்று நேரத்தில் தரையிறங்கும் என ஒலிபெருக்கி அழகி அறிவித்துக் கொண்டிருந்தாள்.

விமானத்தின் வெவ்வேறு இடங்களில் இருந்து அவர்கள் நால்வரும் எழுந்தார்கள். எங்கிருந்து முளைத்ததெனத் தெரியாமல் அதிநவீன துப்பாக்கிகள் அவர்கள் கரங்களில் இருந்தன. ஒருவன் கேப்டனின் கேபினுக்குள் போக மற்றவன் ஓங்கிக் கத்தினான்.

"இப்போது முதல் இந்த விமானம் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. எங்களுடைய கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும்வரை நீங்கள் எல்லாரும் எங்களுடைய கைதிகள். எந்த வீம்பும் பண்ணாதவரை யாருக்கும் ஆபத்தில்லை."

காமினிக்கு லேசாக வியர்த்தது. இது என்ன எதிர்பார்க்காத சிக்கல்?

ரண்டு மணி நேரங்களாக விமானம் ஓடுதளத்தில்தான் நின்று கொண்டிருக்கிறது. பயணிகள் எல்லாரும் பீதியில் அமிழ்ந்து போய்க் கிடந்தார்கள். சிறிது நேரம் கழித்து கேப்டனின் கேபினுக்குள் இருந்த தீவிரவாதி ஆர்ப்பாட்டத்தோடு வெளியே வந்தான்.

"அரசு ஒத்துக் கொண்டு விட்டது. நம் நண்பர்கள் எல்லோரும் விடுதலை செய்யப்பட்டு விடுவார்கள்.."

அவன் பேசிக் கொண்டிருந்தபோதே விமானத்தின் உள்ளே புதியதோர் நறுமணம் எழுந்தது. எங்கிருந்து இந்த வாடை வருகிறது என பிரயாணிகள் ஆச்சர்யத்தோடு பார்த்துக் கொண்டிருக்கும்போதே கூரைவழி வெண்ணிறப் புகைமண்டலம் ஒன்று விமானத்தின் உள்ளே பரவத் தொடங்கியது.

"தோழர்களே.. நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம. ஏதோ சூது.." பேசிக் கொண்டிருந்த தீவிரவாதி மயங்கி விழுந்தான். கூடவே பயணிகளும்..

காமினி மெதுவாக சிரமப்பட்டுத் தன கண்களைத் திறந்தாள். கால்மாட்டில் ஓர் உருவம் மங்கலாகத் தெரிந்தது. டாக்டர்? அந்த அறையில் அவளைப் போலவே நிறைய பேர். கண்களை மீண்டும் மூடிக் கொண்டாள்.

"எத்தனை சீக்கிரம் முடியுமோ இங்கிருந்து கிளம்பி விட வேண்டும்"

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

அது ஒரு நீண்ட வராண்டா. அதன் கடைசியில் இருந்த அறைக்குள் எல்லாருடைய உடைமைகளும் கிடந்தன. தன்னுடையதைத் தேடி எடுத்துக் கொண்டாள். அங்கிருந்த களேபரத்தில் யாரும் அவளைக் கவனிக்கவில்லை. சத்தம் போடாமல் மெதுவாக நடந்து வெளியே வந்தாள். சாலையில் போன ஆட்டோவை நிப்பாட்டி ஏறிக் கொண்டாள்.

"எக்மோர்.."

துரை. ஹோட்டல் பிரேம் நிவாஸ். ரூம் நம்பர் 206.

"ஹலோ.. ரிசப்ஷன்?"

"எஸ் மேடம்"

"எனக்கொரு கார் வேண்டும். அவசரமாக.."

"ஏற்பாடு செய்து விடலாம். டிரைவர்?"

"தேவையில்லை"

"நல்லது.. பதினைத்து நிமிஷம்."

காமினி குளித்து முடித்து வந்தபோது போன் ரிங்கிக் கொண்டிருந்தது.

"உங்களுக்கான கார் கீழே காத்துக் கொண்டிருக்கிறது. போர்ட் ஐகான். இளம்பச்சை நிறம்.."

"நன்றி"

காமினி லிப்டில் இருந்து வெளிப்பட்டாள். ரிஷப்ஷனில் இருந்து திரும்பும்போது காலில் ஏதோ இடறியது. குனிந்தாள்.

"டிஸ்யூங்"

தலைக்கு மேலே கண்ணாடி சிதறியது. "ஓ மை காட்.. யாரோ நான் இங்கே வந்திருப்பதை அறிந்திருக்கிறார்கள்.." சட்டெனக் குனிந்து ஓடி காருக்குள் ஏறினாள். விர்ரூம்.. பயங்கர வேகத்தில் கார் கிளம்பியது.

ஏதோ ஒரு மாடியில் ஒளிந்திருந்து சுட்டிருக்கிறார்கள. யாராக இருக்கும்? அவளுக்கு பிளாட்டில் பார்த்த சர்தார்ஜியின் ஞாபகம் வந்தது. அவனாக இருக்குமோ? சிந்தனை செய்தபடியே காரின் ரியர்வியூ மிரரைப் பார்த்தவள் திடுக்கிட்டாள்.

அவளுடைய காரின் வாலைப் பிடித்தபடியே ஒரு புல்லட். அதில் இருந்த இரண்டு பேரின் முகத்திலும் நாங்கள் நல்லவர்கள் இல்லை என்று தெளிவாக எழுதி இருந்தது. காரின் வேகத்தைக் கூட்டினாள்.

துரையின் குறுகிய ரோடுகளில் காரை அத்தனை வேகமாக ஓட்டுவது சிரமமாக இருந்தது. இருந்தும் காமினி சமாளித்து ஓட்டினாள். அவர்களும் விடாமல் துரத்தி வந்தார்கள். அபாயகரமான ஒரு வளைவில் காமினி காணாமல் போனாள்.

புல்லட் நின்ற இடம் ஒரு சந்தின் முனை. அங்கிருந்து ரோடு மூன்று வழிகளில் பிரிந்தது. அவர்கள் குழம்பிப் போனவர்களாக நின்றார்கள். அந்தப் பெண் எந்த பக்கமாகப் போனாள்? அவர்கள் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தபோது பின்னாடி இருந்து அந்த சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் விக்கித்துப் போனார்கள்.

காமினியின் கார் வேகமாக அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. நடப்பதை உணர்ந்து அவர்கள் விலகுவதற்குள்.. டம்ம்.. அவர்கள் புல்லட் இரண்டு மூன்ற குட்டிக் கரணம் அடித்து சாலையின் ஓரமாக விழுந்தது. அவர்கள் தூக்கி வீசப்பட்டார்கள். கார் நிற்காமல் போய் விட்டிருந்தது.

ந்த டெலிபோன் பூத்தின் முன் காமினி தன காரை நிப்பாட்டினாள். மனப்பாடம் செய்திருந்த நம்பரை அழைத்தாள்.

"ஹலோ.."

".."

"வானவில்லின் நிறம் நீலம்.."

".."

"பத்திரமாக இருக்கிறது."

".."

"தெரியும்.. தப்பித்துக் கொண்டு விட்டேன்.."

".."

"சரி.. இன்னும் அரை மணி நேரத்தில் அங்கிருப்பேன்.."

காருக்குள் ஏறி உட்கார்ந்து வண்டியைக் கிளப்பினாள்.

"வண்டியைக் கொஞ்சம் ஓரமா நிப்பாட்ட முடியுமா?"

அதிர்ச்சியாகி பின்னால் திரும்பினாள். அங்கே இருந்தவன்.. இவன் தானே சர்தார்ஜி வேசத்தில் வந்தவன்?

“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

"நீ பொம்பளைப்பிள்ள.. உன்னையக் கஷ்டப்படுத்தக்கூடாது.. உனக்குத் தெரியாமலே வைரத்தை எடுத்திரணும்னுதான் முயற்சி பண்ணினேன். ஆனா அந்தத் திடீர் விமானக் கடத்தல்னால எல்லாம் மாறிப் போச்சு.. தயவு செஞ்சு பிரச்சினை பண்ணாம அந்த வைரத்தக் கொடுத்திரு.."

"சரி.. தரேன்.."

எதையோ எடுப்பவள் போலக் கீழே குனிந்தாள் காமினி. சின்னதொரு ஆர்வத்தில் சிவாவும் கீழே பார்க்க, அந்த நேரம் அவளுக்குப் போதுமானதாக இருந்தது. சராரென்று ரிவர்சில் கியரைப் போட்டு காரைக் கிளப்பினாள். அந்த வேகத்தில் சிவாவின் கையிலிருந்த துப்பாக்கி தவறி விழுந்தது. அவன் சுதாரிப்பதற்குள் வண்டியைக் கொண்டு போய் அருகில் இருந்த சுவரில் வேகமாக மோதினாள்.

காரின் கதவைத் திறந்து கொண்டு இறங்கினாள் காமினி. பின்சீட்டில் சிவா மயங்கிக் கிடந்தான். அவளுக்கும் காலில் அடி பட்டிருந்தது. நொண்டியபடியே அங்கிருந்து விலகி நடக்கத் தொடங்கினாள்.

ழகர்மலையின் அடிவாரத்தில் நின்று கொண்டிருந்தாள் காமினி. சரியான நேரத்துக்கு வந்தாயிற்று. இதுதான் அவர்கள் வர சொன்ன இடம்?

சிறிது நேரம் கழித்து ஒரு சுமோ அவளருகே வந்து நின்றது. உள்ளே இருந்தவன் கேட்டான். "காமினி?"

"ஆம்.."

"உள்ளே ஏறிக் கொள்.."

உள்ளே போனவுடன் அவள் கண்கள் கட்டப்பட்டன. அரைமணி நேரப் பயணம்.

வள் கண்களின் கட்டு அவிழ்க்கப்பட்டபோது ஒரு பிரமாண்டமான வீட்டின் உள்ளே நின்றிருந்தாள். எதிரே ஜிப்பா போட்ட ஒரு பெரிய மனிதர்.

"வைரம் எங்கே.."

அவள் மென்மையாகச் சிரித்தாள். கீழே குனிந்து தனது வலது காலின் செருப்பைக் கழட்டினாள். அதன் குதிகால் பாதியை தனியாக் பிரித்து உள்ளே இருந்த வைரத்தை எடுத்தாள். ஒரு பெரிய சைஸ் கோலிகுண்டைப் போல இருந்த அது நீல நிறத்தில் டாலடித்தது.

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

"இதை நாம் கொண்டாடியே ஆக வேண்டும். என்ன பண்ணலாம் சொல்.." பரந்தாமன் பேசிக் கொண்டிருக்கும்போதே டிஷ்யூங் என்று சுட்டுக் கொண்டே உள்ளே ஒரு பெரிய போலிஸ் படையே நுழைந்தது.

பரந்தாமனால் நம்ப முடியவில்லை. "எப்படி.. எப்படிக் கண்டுபிடித்தீர்கள்" என்று அலறியபடியே காமினியைப் பார்த்தார். அவள் இப்போது சிரித்துக் கொண்டே தன்னுடைய இடது காலின் செருப்பைக் கழட்டினாள். அதன் உள்ளே "பீப் பீப்" என்றபடி ஒரு ரேடியோ டிரான்ஸ்மீட்டர்.

"வாழ்த்துகள் காமினி.. உங்களால ரெண்டு மூணு கடத்தல் கும்பலை வளைச்சுப் பிடிச்சிருக்கோம்.. " கமிஷனர் சொன்னதைக் கேட்டு சிரித்தபடி உட்கார்ந்து இருந்தாள் காமினி.

"பை தி வே.. உங்களுக்கு இன்னொரு முக்கியமான மனிதரை நான் அறிமுக செய்ய வேண்டியிருக்கு.."

"யார் சார்.."

"இவர்தான்..உங்களை மாதிர்யே நம்ம டிபார்ட்மேண்டின் இன்னொரு அண்டர்கவர் ஆபிசர்.. மிஸ்டர்.சிவா.."

கமிஷனர் கைகாட்டிய திசையில் சிரித்தபடியே உள்ளே வந்தான் சிவா.

"ஏங்க ஒரு மனுஷன இப்படியாப் போட்டு அடிப்பீங்க.."

"அய்யய்யோ.. சாரிங்க.."

எழுந்து கைகுலுக்கிய காமினியின் முகம் வெட்கத்தில் சிவந்திருந்தது.

July 31, 2010

ஊறுகா - ஒரு தெய்வீகக் காதலின் கதை (நிறைவு)..!!!

ஊறுகாயின் முதல் பகுதி இங்கே..

தூஸ்ரா பார்ட் இக்கட..

யார் அந்த ராகினி.. ராகினி.. ராகினி..

நீ எதுக்கு அவளுக்கு கார்டு போட்ட.. போட்ட.. போட்ட..

அது எப்படி அந்தக் குரங்குகிட்ட போச்சு.. போச்சு.. போச்சு..

பிளாஷ்பேக் ஸ்டார்ட்..

அது பாருங்க.. சின்ன வயசுல இருந்தே நமக்கு பொம்பளப் பிள்ளைங்கன்னா ஒரு இது.. அட.. இதுன்னா அதுதாங்க.. இப்போக்கூட எங்கம்மா பெருமையா சொல்லுவாங்க.. சிறுசுல எல்லாரும் ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு ரொம்ப அடம் பிடிப்பாங்கள்ள.. நான் மட்டும் குடுகுடுன்னு ஓடிப்போய் ரிக்ஷாவுல ஏரி உக்காந்துக்குவேனாம்.. ஆனா அது ஏன்னு எனக்கு மட்டுதான் தெரியும். ஏன்னாக்க, அந்த ரிக்ஷாவுல ஒரே ஆம்பளப்பையன் நான்தான். அப்போ பார்த்துக்குங்க.. எந்த அளவுக்கு பிஞ்சுலேயே பழுத்த கேசுன்னு..

ஆள் வளர வளர, உல்டாவா அறிவு மங்கித்தான் போச்சு. கூட சேந்த டிக்கெட்டுகளும் அந்தக் கேசுதான். அப்புறம் எங்குட்டு உருப்பட? ஆறில் இருந்து அறுபது வரை.. அட படம் இல்லைங்க.. அந்த வயசுக்குள்ள இருக்குற ஒரு பிகரையும் விடுறது கிடையாது. ஆனா ஒரு கொள்கை. எதையும் எட்ட நின்னு ரசிக்கலாம்.. அவ்வளவுதான். தேவை இல்லாம தொந்தரவு பண்ணக் கூடாது.. நல்லா இருக்கில்ல?

ஓகே.. இன்னும் கதைக்குள்ளையே போகாம ஏண்டா இப்படி கழுத்த அறுக்குற - இது வாசிக்குரவங்களோட மைன்ட்வாய்ஸ். சோ.. இனி கதை..

ஒன்பதாம் கிளாஸ் தொடங்குற முத நாளன்னைக்கு அவளைப் பார்த்தேன். புதுசா வந்து எங்க கிளாஸ்ல சேர்ந்தா. ராகினி.. பாருங்க.. பேரை சொல்லும்போதே சிலிர்க்குது. அவளைப் பத்தி ஒரே ஒரு வாக்கியம். அவ்ளோ அழகு.

ஒழுசப் படத்துல வந்த ஒரே ஒரு நல்ல பிட்டு மாதிரி, அமாவாசைல வந்த நிலா மாதிரி.. எங்க கிளாஸ்ல இருந்த அத்தனை பிகரையும் அவ தூக்கி சாப்டுட்டா. அவக்கிட்ட பேச மாட்டோமான்னு எல்லாரும் ஏங்க ஆரம்பிச்சாச்சு. ஆனா அவ கொஞ்சம் ரிசர்வ்ட் டைப். பொம்பளப் பிள்ளைங்க கிட்டக் கூட யோசிச்சுத்தான் பேசுவா.

இப்பவும் நல்லா ஞாபகம் இருக்கு. அன்னைக்கு ஒரு நிறைஞ்ச சனிக்கிழமை. முந்தின நாள் சாயங்காலம் பார்த்த "காதலுக்கு மரியாதை" பாட்டை முனங்கிக்கிட்டே பியூரட்டைக் கழுவிக்கிட்டு இருக்கேன். பின்னாடி இருந்து யாரோ "ஹாய்"னு கூப்பிட திரும்புறேன். பார்த்தா.. அப்டியே ஷாக் ஆகிட்டேன். அங்கே ராகினி. கிளாசே பேசணும்னு நினைக்கிற ராகினி தானா வந்து என்கிட்டே பேசுறா.. ஐயோ.. ஐயோ.. இது கனவா இல்லை நிஜமா?

ஏன் எப்படின்னு தெரியல. ஆனா அங்க ஆரம்பிச்சு அவ எனக்கு நல்ல பிரண்ட் ஆகிட்டா. பசங்களுக்கு எல்லாம் ஒரே காண்டு. அவனுங்கள எவன் மதிச்சான்? கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஓடிப் போச்சு. உள்ளுக்குள்ள உருவாகிட்ட என்னோட காதலை எப்போ அவக்கிட்ட சொல்றது?

அந்த நாள் தானா வந்துச்சு. என்கிட்டே அவளே எதேச்சியா கேட்டா.

"ஏன்டா.. என்னைய உனக்கு ரொம்பப் புடிக்குமா?"

"ஆமா ராகினி.. நிறைய.. நிறையப் புடிக்கும்.."

"எனக்காக என்ன வேணும்னாலும் செய்வியா?"

"கண்டிப்பா.. சொல்லு.. என்ன பண்ண? ஹோம் வொர்க் பண்ணலன்னு உன்ன அடிச்சானே வாத்தி.. அவன் மூஞ்சில பிளேட் போட்டுரவா? இல்ல வேற ஏதாவது?"

"ஏய்.. அதெல்லாம் வேண்டாம்.. நீ தைரியசாலிதான்.. ஒத்துக்குறேன்.. ஆனா அத எனக்கு புரூப் பண்ணனும்.."

"எப்புடி?"

"எங்க வீட்டுக்கு, என் பேருக்கு ஒரு கிரீட்டிங் கார்டு போடணும்.. அவ்வளவுதா.."

ஆகா.. மூர்த்தி.. இப்படி ஒரு வாய்ப்புக்குத்தாண்டா ஏங்கிக்கிட்டு இருந்த. யூஸ் பண்ணிக்கோ. கடை கடையா அலஞ்சு ஒரு பிரண்ட்ஷிப் கார்டு (அவங்க வீட்டுல மாட்டிக்கிட்டா சமாளிக்கனும்ல) வாங்கி.. அதுல அழகா கையெழுத்தும் போட்டு அனுப்பினா.. அதுதான் இப்போ ஒரு கொரங்கு கையில சிக்கி, அது வந்து என்னைய மிரட்டிட்டு போகுது. இது எப்படின்னு நாளைக்கு ராகினிக்கிட்ட கேட்டுரணும்.

பிளாஷ்பேக் ஓவர்.. இட்ஸ் டைம் டு கம் பேக் டு நார்மல்..

மறுநாள் ஸ்கூலுக்குப் போறேன். எனக்காக ராகினி படபடப்பாக் காத்துக்கிட்டு இருக்கா.

"என்னடா ஆச்சு? நேத்து ஸ்கூலுக்கு வரல?"

"அது.. அது.. அம்மா கூட கோயிலுக்குப் போயிட்டேன்.."

"அப்பாடா.. அவ்வளவுதான? நான் கூட யாரும் மிரட்டுனதால நீ மெரண்டு போய் வரலையோன்னு ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா?"

டமார் டுமீர்.. எனக்குள்ள ஒரு டிரான்ஸ்பாமர் வெடிக்குது. என்னது.. என்னை ஆளுங்க மெரட்டினது இவளுக்கு தெரியுமா?

"உனக்கு எப்படி..?"

அவள் தலையைக் குனிந்து கொண்டாள்.

"நேத்து சாயங்காலம் ராஜா வந்து என்கிட்ட பேசினான்.."

ராஜா? அது யாரு? ஓ.. ஓவரா ஆடுனானே அந்த ஒல்லிப்பிச்சான்.. அவனா? சரி..?

"இல்லடா.. தப்பா எடுத்துக்காத.. அவன் ரொம்ப நாளா என் பின்னால சுத்திக்கிட்டு இருக்கான்.. ஆனா அவன் என்ன விரும்புறானா இல்ல விளையாட்டுக்கு சுத்துறானான்னு தெரியல.. அதனாலத்தான்.."

"அதனால..?"

"உன்னை எனக்கு ஒரு கார்டு போடச் சொன்னேன்.. தெரியாத மாதிரி அந்தக் கார்ட நானே அவன் கண்ணுல படுற மாதிரி ரோட்டுல போட்டுட்டு போனேன்.. அதைப் பார்த்துட்டுத்தான் அவன் உன்னை மிரட்டினான்... அப்புறமா என்கிட்டே வந்து பேசிட்டான்.."

"ஐயையையோ.. அதுக்கு நீ என்ன சொன்ன?"

"சீ போடா.. எனக்கு வெக்கமா இருக்கு.." ஓடியே போயிட்டா.

அடப் பாதகத்தி.. அவன லவ் பண்றாளா? அப்போ நானு?

இப்போ இந்தக் கதையோட தலைப்ப நல்ல அழுத்திப் படியுங்க மக்களே..

ஊறுகா..

இப்படியாக ஒரு தெய்வீகக் காதல் ஊத்தி மூடப்பட்டது..!!!