***************
நேற்று ஈரோட்டில் பதிவர் சங்கமம் இனிதே நடந்து முடிந்தது. ஒவ்வொரு வருடமும் எழுத்தின் மூலம் மட்டுமே நாம் அறிந்த நண்பர்களை நேரடியாய்ச் சந்தித்துப் பேசி அளவளாவும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும் சங்கமம் அற்புதமான விசயம். இந்த வருடம் இன்னுமொரு சிறப்பாக பதிவுலகில் இயங்கி வரும் மக்களில் பதினைந்து நண்பர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை கவுரவித்தது ஈரோட்டு நண்பர்களின் நல்ல மனதுக்கு எடுத்துக்காட்டு. வழக்கம்போல விருந்தோம்பலும் உணவு ஏற்பாடுகளும் அட்டகாசம் என களைகட்டியது. என்னை அவர்களில் ஒருவன் என உணரச்செய்யும் ஈரோடு தமிழ்ப்பதிவர் குழுமத்திற்கு எப்போதுமிருக்கும் எனதன்பும், வாழ்த்துகளும், நன்றியும்.
**************
ஆதி - பரிசல் - யுடான்ஸ் இணிந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்களுக்குப் பரிசு வழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்று இருக்கிறது. பதிவுலக மக்களை ஊக்குவிக்கத் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமும் சவால் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் நம் நண்பர்களுக்கும், வெற்றி பெற்ற சக பதிவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
***************
அசோகமித்திரனின் ஒற்றன் நாவலை வாசித்தேன். அமெரிக்காவில் அவர் தங்கியிருந்த சில மாதங்களின் அனுபவத்தை புனைவு கலந்து தந்திருக்கிறார். கிட்டத்தட்ட பயணக்கட்டுரை வடிவத்தில் வந்திருக்கக் கூடிய விசயத்தைப் புனைவாக மாற்றுகிற இடத்தில் ஜெயிக்கிறார் மனிதர். அலட்டிக்கொள்ளாத வெகு சாதாரணமான மொழி. சற்றே நான் லீனியராக சொல்லப்படும் அத்தியாயங்கள். வாசிக்கும்போது பெரிதாக ஏதும் தாக்கமில்லை. ஆனால் கடைசி அத்தியாயத்தில் அனைவரிடம் இருந்தும் அவர் விடைபெறும் காட்சியில் லேசாக எனக்கும் பாரமாக இருந்தபோதுதான் நானும் அவரோடு பயணித்தபடியே இருந்ததையும் நாவல் என்மீது ஏற்படுத்தி இருந்த பாதிப்பையும் உணர முடிந்தது. மாஸ்டர்ஸ்..:-))
***************
பாலாவின் அடுத்த படம் எரிதணல் என்பதாகச் சொல்கிறார்கள். 1930களில் ஆனைமலைத் தேயிலைத் தோட்டங்களில் கொடுமையான வாழ்க்கையை வாழ்ந்த கூலித் தொழிலாளர்களின் கதை என்பதாகக் கேள்வி. இது உண்மையானால் கண்டிப்பாக அது பி.ஹெச்.டேனியலின் எரியும் பனிக்காடு நாவலின் அடிப்படையில் எடுக்கப்படும் படமாகத்தான் இருக்கும். ஏழாம் உலகம், நெடுங்குருதி (திருடர்களின் கிராமம்) எனத் தொடர்ச்சியாக நாவல்களைப் படமாக்கத் துணியும் பாலாவுக்கு வாழ்த்துகள்.
***************
யுவனுக்கு அவ்வளவாக நேரம் சரியில்லை என நினைக்கிறேன். கழுகு படத்தில் அசத்தியவர் ராஜபாட்டையிலும் வேட்டையில் பெரிதாகக் கோட்டை விட்டிருக்கிறார். பாடல்கள் எனக்கு அத்தனை பிடிக்கவில்லை. அடுத்த வாரம் மூன்று மற்றும் நண்பன் பாடல்கள் வெளியாக இருக்கின்றன. ஏழாம் அறிவில் சொதப்பிய ஹாரிஸ் என்ன செய்கிறார் எனப் பொறுத்திருந்து பார்ப்போம். என்னுடைய இந்த வார டாப் - 5 பாடல்கள்..
* ஹே அனாமிக்கா - மௌனகுரு
* பப்பப்பா பாப்பப்பா - வேட்டை
* பாதகத்தி - கழுகு
* எந்த உலகில் - 18 வயசு
* பொடிப்பையன் போலவே - ராஜபாட்டை
***************
நண்பர் ஒருவரைப் பார்ப்பதற்காக சாரதா ராஜன்ஸ் ஹோட்டலுக்குப் போயிருந்தேன். அணிந்திருந்தது கறுப்பு நிற வட்டக்கழுத்து தேநீர்ச்சட்டையும் (அதான்யா ரவுண்டு நெக்கு டி-ஷர்ட்) வெளிர்நீல நிற ஜீன்சும். அவரோடு பேசிவிட்டு வெளியே வரும் வழியில் நான்கைந்து இளைஞர்கள், இருபது இருபத்து இரண்டு வயதுக்குள் இருப்பவர்கள், வழியை மறித்து நின்றிருந்தார்கள். விலகிக் கொள்ளும்படி சொல்லிவிட்டுத் தாண்டி வருகையில் அவர்களில் ஒருவன் சொன்னது காதில் கேட்டது.
எப்படிப் போகுது பாரு.. மனசுக்குள்ள அடிதடி சத்யராஜ்னு நினைப்பு..
அடப்பாவிகளா... நினைச்ச மாதிரி உடுத்தக்கூட விடமாட்டீங்களா? நானும் யூத்துதான்யா.. நம்புங்கப்பா..:-)))
இப்போதைக்கு அவ்ளோதான். நெக்ச்டு மீட் பண்ணுவோம்..:-)))