December 31, 2011

நேசம் - புற்றுநோய் விழிப்புணர்வு அமைப்பு

வணக்கம் நண்பர்களே

பொன்வேண்டேன்,
பொருள் வேண்டேன்
மண் வேண்டேன்
மனை வேண்டேன்
நோயற்ற வாழ்வே நான் வாழ வேண்டும்
என்பதே அனைவரின் பிராத்தனையாக இருக்கும்


அரிது அரிது மானிடராய் பிறப்பதரிது, அதனிலும் கூன் குருடும் உடல் குறைபாடுகளும் இல்லாமல் பிறத்தல், அதையும் விட இன்று வாழ்நாள் முழுதும் எந்த வித உடல் பிணிகளும் இன்றி நல்நெடும்வாழ்வு வாழ்வதைவிட பெரிய செல்வம் ஏதும் இல்லை. எண்ணற்ற நோய்கள் வாழ்க்கை முறைகளினால் வந்தாலும் பெரும்பாலும் அவைகள் லைஃப்ஸ்டைல் எனப்படும் வாழ்வுமுறை நோய்களே.

இவ்வகை நோய்களின் ஏன் எதற்கு எப்படி என்றே அறியும் முன் உடலை அரித்து விடும் நோய்களில் ஒன்று கேன்சர் எனப்படும் புற்றுநோய். இன்று உலகம் எங்கும் இதனால் உயிர் விடுவோர் எண்ணிக்கை மற்ற அனைத்தையும் விட அதிகம். புற்றுநோய் வரக்காரணம் எவ்வளவோ இருக்கலாம், யாருக்கு வேண்டுமானாலும் வரலாம், ஆனால் வந்த பின் அதனுடைய பாதிப்பின் அளவையும் நோயின் தீவிரத்தைப்பொறுத்தும் நிறைய சிகிச்சை முறைகள் உள்ளது.

எல்லா நோயைப்போலவும் இதனையும் நாம் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் நூறு சதவீத குணப்படுத்தலாம். எப்படி கண்டறிவது என்பதே விழிப்புணர்வு.

இந்த புது வருடத்தில் சில நண்பர்கள் இணைந்து உருவாக்கிய அமைப்பு நேசம், முழுக்க முழுக்க புற்றுநோய் குறித்த விழிப்புணர்வும் அதுகுறித்த நிகழ்வுகளுமாக இணையத்தில் உங்களின் ஆதரவுடன் ஆரம்பிக்கிறோம்.


நேசம் - அமைப்பில் இருந்து முதல் விழிப்புணர்வு அறிவிப்பு ஜனவரி முதல் அன்று வெளிவரும். புற்றுநோயை கண்டறிந்து களைவோம், போராடி வெல்வோம்






நல்லதொரு முயற்சிக்கு ஆதரவாக நாமும் கைகொடுப்போம் நண்பர்களே.. இந்தப்பதிவை வாசிக்கும் மக்கள் ரீஷேர் செய்து உதவுங்க சாமிகளே...

December 29, 2011

மௌனகுரு - திரைப்பார்வை

கிரிக்கெட் ஆட்டத்தில் முதல்தர பேட்ஸ்மேன்கள் எல்லாம் சொதப்பி எடுக்க டெயில் எண்டர்கள் அடி பின்னி எடுத்தால் எப்படி இருக்கும்? இந்த வருடம் வெளியான பெருந்தலைகளின் படங்கள் எல்லாம் மக்களை கொத்தி எடுக்க எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்து சிக்சர் அடித்திருக்கிறது மௌனகுரு. இந்த வருட ஆரம்பத்தில் யுத்தம் செய் அடுத்த காட்சிகள் என்னவாக இருக்கும் என்கிற ஒரு திரில்லர் ஃபார்மட்டில் வந்து மிரட்டியது என்றால் வருட இறுதியில் அதை எல்லாம் ரொம்பச் சாதாரணமாகத் தூக்கிச் சாப்பிட்டிருக்கிறது இந்தப்படம். அரசாங்கமும் அதிகாரமும் சேர்ந்தால் ஒரு மனிதனை எந்த அளவுக்குப் போட்டுத் தள்ள முடியும் என்பதைப் பேசுகிற கதைதான். ஆனால் திரைக்கதையும் சொன்ன விதமும் கிளாஸ்.



ஒரு பக்கம் எந்த வம்புக்கும் போகாத வந்த வம்பை விடாத இளைஞன் கருணா. கல்லூரிப் படிப்புக்காக மதுரையிலிருந்து சென்னைக்கு வருகிறான். வந்த இடத்தில் மச்சினியோடு காதல். அதே நேரம் விடுதியில் கூடப்படிக்கும் இன்னொரு மாணவனோடும் அவனுக்கு முட்டிக் கொள்கிறது. இன்னொரு பக்கம் ஒரு சாலை விபத்தில் கிடைக்கும் கோடிக்கணக்கான பணத்தை நான்கு போலிஸ்காரர்கள் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்கிறார்கள். அது சம்பந்தமான வீடியோ ஆதாரம் பற்றிய பிரச்சினை ஒன்றில் கருணா எதிர்பாராமல் சிக்கிக் கொள்ள கடைசியில் என்ன ஆகிறது என்பதுதான் படத்தின் கதை.

பெரிய அளவில் நடிக்கத் தேவையில்லாத கதை என்பது இந்தப்படத்தில் அருள்நிதிக்கு நிறைய கைகொடுத்திருக்கிறது. அமைதியாக வந்து போவதும் போதை நிலையில் வெறித்துப் பார்ப்பதும் என்று படம் நெடுக ஒரே மாதிரியாக சுற்றுகிறார். ரவுடியை ஒரே அடியில் வீழ்த்துவது, போலிஸை அடித்து விட்டு ஸ்டேசனுக்குப் போவது, நடுரோட்டில் தனி ஆளாய் நின்று மனு தருவது, பேச முடியாத குழந்தைகளுடன் சைகையில் உரையாடுவது என ஹீரோயிசம் தெரியாத ஆனால் ஹீரோயிசம் சார்ந்த காட்சிகள் எல்லாமே நிறைவு. கடைசி காட்சியில் தான் என்ன தப்பு செய்தோம் என அலறும்போதுதான் வசனங்கள் அவருக்கு ஒட்டவே இல்லை. காதல் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் இயல்பாக இருப்பது போலத் தோன்றியது. குறிப்பாக காபி நன்றாக இருந்தது என்று அண்ணி பார்க்காதபோது இனியாவிடம் சொல்லும் சீன், அப்புறம் அம்மாவுக்குத் தெரியாது என்று நினைத்து இனியா அருள்நிதியின் தலையைக் கோதி விட்டு செல்லும் காட்சி. நாயகிக்கு பெரிய அளவில் வேலையில்லை என்றாலும் மாடர்ன் உடையிலும் இனியா அழகு என்பதைப் பதிவு செய்ய வேண்டியது நம் முக்கியக் கடமையாகிறது.



ஓரம்போவின் சன் ஆஃப் கன் இந்தப்படத்தின் மெயின் வில்லன் ஜான் விஜய். அடக்கி வாசித்து அதகளம் செய்திருக்கிறார். செல்வம், ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி என்று கூட வரும் போலிஸ்காரர்களும் பெர்ஃபெக்ட். மனநோய் விடுதியில் இருந்து நாயகனின் நண்பனாகும் பாத்திரத்தில் மணல்மகுடி முருகதாஸ் நாடக நிலத்தின் நடிப்பை வெள்ளித்திரைக்குக் கடத்தி இருக்கிறார். தமிழ் சினிமாவில் எனக்குத் தெரிந்து இதுவரை யாரும் பயன்படுத்தி இராத பாத்திரத்தில் உமா ரியாஸ். கர்ப்பிணியாக இருக்கும் போலிசாக வரும் அவர் பார்வையில் கதை நகர்வது அருமையான உத்தி.

சின்ன சின்ன விசயங்களில் கவனம் செலுத்தி இருக்கும் இயக்குனரின் உழைப்புக்குக் கிடைத்திருக்கும் வெற்றிதான் இந்தப்படம். மதுரை என்றவுடன் தெப்பக்குளத்தை காண்பிக்காமல் கீழக்குயில்குடி அழகர் கோயில் என்று போயிருப்பது, அட்டகாசமான அந்த இடைவேளைக்காட்சி, யார் திருடியது என்று எல்லாரையும் யோசிக்க வைத்து நினைக்காத இடத்தில் கொண்டு போய் அந்த முடிச்சினை அவிழ்ப்பது, நாயகன் அசாத்திய பலசாலி என்றெல்லாம் அடித்து விடாமல் தன்னால் இயன்ற வழியில் எதிரிகளைத் தாக்கிவிட்டு இயல்பாய் தன் முடிவினைத் தீர்மானிப்பது என படம் முழுக்க இயக்குனர் சாந்தகுமார் தன்னை நிரூபித்திருக்கிறார். ஒரு திரில்லர் படத்துக்கு ஒரு பாட்டுப் போதும் என்கிற அவர் தைரியத்தையும் பாராட்டலாம். ஆனால் அதில் தமனின் அனாமிகா பாட்டு அடியாகிப் போனதில் எனக்கு வருத்தமே.



சின்ன சின்ன ப்ளூப்பர்கள் , தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படும் பெண்ணின் கால்கள் உயரமாய் மிதப்பது, டாக்டருக்குப் படிக்கும் நாயகி எந்த நொட்டையும் சொல்லாமல் நாயகனை மனநோயாளி என நம்புவது, சற்றே தொய்வடையும் இரண்டாம் பாதி - இவற்றை எல்லாம் ரொம்பக் கஷ்டப்பட்டு யோசித்தால்தான் கண்டேபிடிக்க முடிகிறது. Edge of the seat thriller என்கிற வகையில் படம் பார்த்து வெகு நாட்கள் ஆகி விட்டன என்று சொல்லும் மக்கள் எல்லோரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம். அமைதியாக அசத்தி இருக்கும் சாந்தகுமார் தனது அடுத்தப்படத்தை தலைக்கோ தளபதிக்கோ செய்யாமல் இருந்தால் சந்தோசம்.


December 19, 2011

உக்கார்ந்து யோசிச்சது (19-12-11)

கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்குப் பிறகு நானெழுதும் “உக்கார்ந்து யோசிச்சது” இது. கடைசியாக இதனை எழுதியது மார்ச் 19 - மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கும் இன்றைக்கும் 19 என்பதொரு சின்ன ஆச்சரியம். கடுமையான வேலைப்பளு மற்றும் வலசை இதழுக்கான வேலைகள் என ஓடிக் கொண்டிருந்ததில் வலைப்பக்கத்தில் எழுதுவது வெகுவாகக் குறைந்து போய் விட்டது. பஸ்ஸில் வம்பளந்து கொண்டிருந்ததும் இன்னொரு காரணம். நல்ல வேளையாக இப்போது பஸ்ஸை இழுத்து மூடி விட்டார்கள். எனவே, என்னை நானே திருத்திக் கொண்டு இனித் தொடர்ச்சியாக எழுதும் எண்ணம். (நீ எழுதலைன்னு யாருடா அழுதான்னு சொல்லும் மக்களுக்கு கண்டிப்பாக கும்பிபாகம்தான்). நான் சந்தித்த மனிதர்கள் மற்றும் என் அனுபவங்கள் சார்ந்து தொடரொன்று எழுதவும் ஆசை இருக்கிறது. பார்க்கலாம்.

***************

நேற்று ஈரோட்டில் பதிவர் சங்கமம் இனிதே நடந்து முடிந்தது. ஒவ்வொரு வருடமும் எழுத்தின் மூலம் மட்டுமே நாம் அறிந்த நண்பர்களை நேரடியாய்ச் சந்தித்துப் பேசி அளவளாவும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும் சங்கமம் அற்புதமான விசயம். இந்த வருடம் இன்னுமொரு சிறப்பாக பதிவுலகில் இயங்கி வரும் மக்களில் பதினைந்து நண்பர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை கவுரவித்தது ஈரோட்டு நண்பர்களின் நல்ல மனதுக்கு எடுத்துக்காட்டு. வழக்கம்போல விருந்தோம்பலும் உணவு ஏற்பாடுகளும் அட்டகாசம் என களைகட்டியது. என்னை அவர்களில் ஒருவன் என உணரச்செய்யும் ஈரோடு தமிழ்ப்பதிவர் குழுமத்திற்கு எப்போதுமிருக்கும் எனதன்பும், வாழ்த்துகளும், நன்றியும்.

**************

ஆதி - பரிசல் - யுடான்ஸ் இணிந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்களுக்குப் பரிசு வழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்று இருக்கிறது. பதிவுலக மக்களை ஊக்குவிக்கத் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமும் சவால் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் நம் நண்பர்களுக்கும், வெற்றி பெற்ற சக பதிவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

***************

அசோகமித்திரனின் ஒற்றன் நாவலை வாசித்தேன். அமெரிக்காவில் அவர் தங்கியிருந்த சில மாதங்களின் அனுபவத்தை புனைவு கலந்து தந்திருக்கிறார். கிட்டத்தட்ட பயணக்கட்டுரை வடிவத்தில் வந்திருக்கக் கூடிய விசயத்தைப் புனைவாக மாற்றுகிற இடத்தில் ஜெயிக்கிறார் மனிதர். அலட்டிக்கொள்ளாத வெகு சாதாரணமான மொழி. சற்றே நான் லீனியராக சொல்லப்படும் அத்தியாயங்கள். வாசிக்கும்போது பெரிதாக ஏதும் தாக்கமில்லை. ஆனால் கடைசி அத்தியாயத்தில் அனைவரிடம் இருந்தும் அவர் விடைபெறும் காட்சியில் லேசாக எனக்கும் பாரமாக இருந்தபோதுதான் நானும் அவரோடு பயணித்தபடியே இருந்ததையும் நாவல் என்மீது ஏற்படுத்தி இருந்த பாதிப்பையும் உணர முடிந்தது. மாஸ்டர்ஸ்..:-))

***************

பாலாவின் அடுத்த படம் எரிதணல் என்பதாகச் சொல்கிறார்கள். 1930களில் ஆனைமலைத் தேயிலைத் தோட்டங்களில் கொடுமையான வாழ்க்கையை வாழ்ந்த கூலித் தொழிலாளர்களின் கதை என்பதாகக் கேள்வி. இது உண்மையானால் கண்டிப்பாக அது பி.ஹெச்.டேனியலின் எரியும் பனிக்காடு நாவலின் அடிப்படையில் எடுக்கப்படும் படமாகத்தான் இருக்கும். ஏழாம் உலகம், நெடுங்குருதி (திருடர்களின் கிராமம்) எனத் தொடர்ச்சியாக நாவல்களைப் படமாக்கத் துணியும் பாலாவுக்கு வாழ்த்துகள்.

***************

யுவனுக்கு அவ்வளவாக நேரம் சரியில்லை என நினைக்கிறேன். கழுகு படத்தில் அசத்தியவர் ராஜபாட்டையிலும் வேட்டையில் பெரிதாகக் கோட்டை விட்டிருக்கிறார். பாடல்கள் எனக்கு அத்தனை பிடிக்கவில்லை. அடுத்த வாரம் மூன்று மற்றும் நண்பன் பாடல்கள் வெளியாக இருக்கின்றன. ஏழாம் அறிவில் சொதப்பிய ஹாரிஸ் என்ன செய்கிறார் எனப் பொறுத்திருந்து பார்ப்போம். என்னுடைய இந்த வார டாப் - 5 பாடல்கள்..

* ஹே அனாமிக்கா - மௌனகுரு
* பப்பப்பா பாப்பப்பா - வேட்டை
* பாதகத்தி - கழுகு
* எந்த உலகில் - 18 வயசு
* பொடிப்பையன் போலவே - ராஜபாட்டை

***************

நண்பர் ஒருவரைப் பார்ப்பதற்காக சாரதா ராஜன்ஸ் ஹோட்டலுக்குப் போயிருந்தேன். அணிந்திருந்தது கறுப்பு நிற வட்டக்கழுத்து தேநீர்ச்சட்டையும் (அதான்யா ரவுண்டு நெக்கு டி-ஷர்ட்) வெளிர்நீல நிற ஜீன்சும். அவரோடு பேசிவிட்டு வெளியே வரும் வழியில் நான்கைந்து இளைஞர்கள், இருபது இருபத்து இரண்டு வயதுக்குள் இருப்பவர்கள், வழியை மறித்து நின்றிருந்தார்கள். விலகிக் கொள்ளும்படி சொல்லிவிட்டுத் தாண்டி வருகையில் அவர்களில் ஒருவன் சொன்னது காதில் கேட்டது.

எப்படிப் போகுது பாரு.. மனசுக்குள்ள அடிதடி சத்யராஜ்னு நினைப்பு..

அடப்பாவிகளா... நினைச்ச மாதிரி உடுத்தக்கூட விடமாட்டீங்களா? நானும் யூத்துதான்யா.. நம்புங்கப்பா..:-)))

இப்போதைக்கு அவ்ளோதான். நெக்ச்டு மீட் பண்ணுவோம்..:-)))

December 15, 2011

ஈரோடு பதிவர் சங்கமம் - 18.12.2011

பதிவுல தோழர்களே அனைவருக்கும் வணக்கம்..

கடந்த வருடம் ஈரோட்டில் பதிவர்கள் சந்திப்பு அற்புதமாக நடைபெற்றது. அதில் நிறைய பதிவர்கள் பங்கேற்று ஒரு சிறப்பான சந்திப்பு உருவாக்கி கொடுத்தீர்கள்..

இந்த வருடம் ஈரோடு வலைப்பதிவு குழுமம் சார்பாக மீண்டும் ஓர் அற்புத சந்திப்பிற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. நட்புக்கள் எல்லாம் ஈரோடு வாங்க வாங்க...


பதிவர் சந்திப்பு வருகிற 18.12.2011 ஞாயிறு அன்று ஈரோட்டில் நடைபெற உள்ளது.

இடம் : ரோட்டரி சி.டி ஹால், பழையபாளையம், ஈரோடு.


பதிவர்களே இந்த அற்புமான சந்திப்பிற்கு வாங்க சங்கமிக்கலாம்...


மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்....

தாமோதர் சந்துரு 93641-12303
ஆரூரன் - 98947-17185
கதிர் - 98653-90054
கார்த்திக் - 97881-33555
பாலாசி - 90037-05598
வால்பையன் - 99945-00540
ஜாபர் - 98658-39393
ராஜாஜெய்சிங் - 95785-88925
சங்கவி - 9843060707

December 13, 2011

ஏழாம் அறிவு

(மாத இதழ் ஒன்றுக்காக எழுதிய பதிவு. அவர்கள் எதிர்பார்த்த விமர்சனமாக தமிழுணர்வைப் பேசும் படத்தைப் பாராட்டும் விதமாக எதுவும் இல்லையென்று பிரசுரிக்கவில்லை.)

ஏழாம் அறிவு

கஜினி என்கிற மிகப்பெரிய வெற்றிப்படத்துக்குப் பிறகு முருகதாஸ் - சூர்யா - ஹாரிஸ் ஜெயராஜ் மீண்டும் கூட்டணி சேர்ந்திருக்கும் படம் ஏழாம் அறிவு. இந்த வருடம் வெளியான எந்தத் தமிழ்ப் படத்துக்கும் இந்த அளவுக்கு விளம்பரமும் எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. "தமிழனே மறந்த ஒரு தமிழரின் பெருமையைப் பேசி இருக்கிறோம். படம் பார்த்து வெளியே வரும் ஒவ்வொருவரும் நானொரு தமிழன் என மார் தட்டிச் சொல்லிக் கொள்ளலாம்" என பாடல் வெளியீட்டு விழாவில் முருகதாஸ் கொளுத்திப்போட பக்கென்று பற்றிக் கொண்டது நெருப்பு. இந்த பிரமாண்ட எதிர்பார்ப்பை படம் நிறைவேற்றி இருக்கிறதா?



படம் ஐந்தாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கிறது. பல்லவ இளவரசனான போதிதர்மர் தற்காப்புக் கலைகளிலும் மருத்துவத்திலும் தேர்ந்த பயிற்சி உடையவர். அஷ்டமா சித்துகளில் ஒன்றான ஐம்பூதங்களையும் கட்டுப்படுத்தும் அசித்துவம் கற்றவர். தன் குருமாதாவின் கட்டளையை ஏற்று சீனதேசம் செல்கிறார். கொள்ளை நோயிலிருந்தும் தீய சக்திகளிடம் இருந்தும் சீன மக்களைக் காப்பாற்றுகிறார். அவர்களுக்கு தன் வித்தைகளையும் மருத்துவத்தையும் பயிற்றுவிக்கிறார். அவர் தங்கள் மண்ணில் புதைக்கப்பட்டால் நாடு நலமாக இருக்கும் என நம்பும் சீன மக்களின் வேண்டுகோளை ஏற்று விஷம் உண்டு அங்கேயே மரித்துப் போகிறார். தாமோ என்று இன்றைக்கும் சீன மக்கள் புத்தருக்கு இணையாக அவருக்குக் கோயில் கட்டி வழிபாட்டு வருகிறார்கள்.

நிகழ்காலத்தில் சுருதி ஒரு ஆராய்ச்சி மாணவி. போதிதருமரைப் பற்றியும் அவரது மரபணுக்கள் பற்றியும் அறிந்து கொண்டு அவரது வம்சாவழித் தோன்றலான சூர்யாவைத் தேடி வருகிறார். சர்க்கஸில் பணிபுரியும் சூர்யா சுருதியக் காதலிக்கத் தொடங்குகிறார். ஆனால் சுருதியோ ஆராய்ச்சிக்காகவே சூர்யாவை பயன்படுத்த நினைக்கிறார். இந்நிலையில் இந்தியாவில் தொற்று நோயைப் பரப்பவும் போதிதருமரை மீண்டும் கொண்டு வரத் துடிக்கும் சுருதியைக் கொல்லவும் ஒரு சீன உளவாளியை அவர்களது அரசாங்கம் அனுப்பி வைக்கிறது. கடைசியில் நீதி வென்றதா என்பதும் போதி தருமர் மீண்டும் வந்தாரா என்பதும்தான் ஏழாம் அறிவின் கதை.



போதிதருமர் என்கிற இதுவரை யாரும் அதிகம் பேசாத விஷயத்தைப் பேசத் துணிந்த இயக்குனருக்குப் பாராட்டுகள். ஆனால் ஒரு படத்தின் வெற்றிக்கு அது மட்டும் போதாது. மிக அருமையான கதைக்களன், எந்த செலவும் செய்யத் தயாராக இருக்கும் தயாரிப்பாளர், தமிழ் சினிமாவின் தலைசிறந்த தொழில்நுட்ப வல்லுனர்கள், அர்ப்பணிப்புடன் கூடிய நடிகர்கள் என எல்லாம் கூடி வந்திருக்கும் நிலையில் ஏழாம் அறிவு தமிழின் மிக முக்கியமான படமாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் அது நிகழவில்லை என்பதே சோகமான விஷயம். படத்திற்கு செய்யப்பட விளம்பரமே அதற்கு எதிராக மாறி இருக்கிறது. இது வெறுமனே ஒரு வணிகப்படம் என வெளியாகி இருந்தால் இத்தனை ஏமாற்றம் இருந்திருக்காது. தமிழின் முதல் படம் என்கிற தொனியில் பேசிவிட்டு வெகு சாதாரணமானதொரு படத்தைத் தந்திருக்கிறார் முருகதாஸ்.

படத்தில் நம்பகத்தன்மை சார்ந்து எக்கச்சக்கமான கேள்விகள். படத்துக்காக நிறைய ஆராய்ச்சி செய்த மாதிரியெல்லாம் தெரியவில்லை. இணையத்தில் கிடைத்த ஒன்றிரண்டு தகவல்களை வைத்தே ஒப்பேற்றி இருக்கிறார்கள். போதிதருமரைப் பற்றிய பகுதி கதையோடு ஒன்றி வராமல் ஒரு ஆவணப்படம் போல வருகிறது. அவர் எதற்கு சீனாவுக்குப் போகிறார் என்பதற்கு நோய் இந்தியாவுக்குப் பரவாமல் இருக்க என சுருதி சொல்லும் ஒரு காட்சி இருக்கிறது. அப்படியானால் நோய் பரவும் என்பது தீர்க்கதரிசனமா? சர்க்கஸில் சூர்யா வேலை செய்கிறார் என்கிறார்கள். எந்தவொரு சர்க்கஸும் ஒரு மாதத்துக்கு மேல் ஒரே ஊரில் இருக்காது. பிறகெப்படி சூர்யா மூன்று மாதங்களாக சென்னையில் சுருதியின் பின்னால் திரிந்து கொண்டிருக்கிறார்? சமகால நவீன இளைஞனாக வரும் சூர்யா சர்க்கஸில் வேலை செய்பவர் என்பதை நம்பவே நமக்கு கஷ்டமாக இருக்கிறது. நோக்குவர்மம் மூலமாக மொத்தக் கூட்டத்தையும் வில்லன் கட்டுப்படுத்துவதும் ஓரளவுக்கு மேல் சலிப்படைய வைக்கிறது. பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு கற்ற குங்க்பூ கலையை ஒருவர் பார்ப்பதன் மூலமே சண்டை போட வைக்க முடியுமானால் என்னாவது? முன்னூறு கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு இந்திய அரசாங்கத்தையே காட்டிக் கொடுக்கும் பேராசிரியர் தன் தகவல்களை அடுத்தவர் பார்க்கும் வண்ணம் கணினியில் இத்தனை எளிதாக விட்டுச் செல்லுவாரா? பதில் தெரியாத கேள்விகள்.



படத்தில் சுவாரசியமான விஷயங்களும் இல்லாமல் இல்லை. நோய் தாக்கிய குழந்தையை போதிதருமர் காப்பாற்றும் காட்சியும் தன் குழந்தை உயிரோடு வருவதைக் கண்டு மகிழ்ச்சி பொங்க ஓடி வரும் தாயும் கொள்ளை அழகு. யானைக்கு வைத்தியம் பார்க்க அண்ணா சாலையில் அழைத்துப் போகும் சூர்யா சுருதிக்கு உதவுவது, அலைபேசியின் மூலம் சுருதியின் காதலை அறிந்து கொள்வது முதலியன ரசனையான காட்சிகள். ஒருவனின் மனதை மட்டும் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என ஜானி சொல்லி தாமோ என மதகுரு உறுமும் காட்சியும், கண்பார்வையின் மூலம் தனக்குத் தேவையான விஷயங்களை வாங்கி சூர்யாவைத் தேடி ஜானி வரும் காட்சிகளும் அட்டகாசம். ஆனால் இது போன்ற காட்சிகள் படத்தில் வெகு குறைவாகவே இருக்கின்றன.

முதல் பாதி கதை நாயகியின் பார்வையில் சொல்லப்படுகிறது. இரண்டாம் பாதி எதிர்நாயகனான சீன உளவாளியின் பார்வையில் செல்கிறது. இது மாதிரியானதொரு படத்தின் கதை நாயகனாக சூர்யா. போதிதருமன் வேடத்துக்காக நிறைய உழைத்து இருக்கிறார். உடம்பை இரும்பாக்கி கண்களில் வழியும் கருணையோடு அந்தக் கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார். தற்காப்புக் கலைகளில் பயிற்சி எடுத்து, சர்க்கஸ் கலைஞனாக நடிக்க பயிற்சி மேற்கொண்டு என நிறைய சிரமப்பட்டு இருக்கிறார். கமலின் மகள் சுருதி தமிழ் பேசத்தெரிந்த அழகான பெண் என்றாலும் அவருடைய தமிழ் உச்சரிப்பு பார்க்கும் மக்களை எரிச்சல் கொள்ள வைக்கிறது. படத்தின் அட்டகாசமான அம்சம் எதிர்நாயகனாக வரும் ஜானி திரையன். தீவிரமான தன் பார்வையின் மூலமே மிரட்டி எடுக்கிறார்.



படத்தின் மிகப்பெரிய ஏமாற்றம் ஹாரிஸ் ஜெயராஜின் இசை. டாக்சி டாக்சி பாடலை வேறு வடிவில் ரிங்கா ரிங்காவாகத் தந்திருக்கிறார். குழந்தைகளுக்கான பாடலைப்போல ஒலிக்கிறது சீனப்பாடல். உணர்வுகளை தட்டி எழுப்பவேண்டிய இன்னும் என்ன தோழா சுத்தமாக எடுபடவில்லை. முன் அந்திச் சாரல் நீ, யம்மா யம்மா ஆகிய பாடல்கள் கேட்க நன்றாக இருந்தாலும் படத்தில் தவறான இடங்களில் புகுத்தப்பட்டு இருக்கின்றன. பின்னணி இசை கடும் இரைச்சல் கூடவே எரிச்சலும். ரவி சந்திரனின் ஒளிப்பதிவு போதிதருமர் பகுதியினை மேலும் அழகாக்குகிறது. ஒரு தமிழ்ப்படத்தில் எந்த அளவுக்குச் சிறப்பாக முடியுமோ அந்தளவுக்கு சிறப்பாக சண்டைக் காட்சிகளை வடிவமைத்து இருக்கிறார் பீட்டர் ஹெயின். என்றாலும் பல ஆங்கில குங்க்பூ படங்கள் பார்த்த மக்களுக்கு இது அத்தனை ரசிக்காது. முதல் பாடலுக்கு ஆயிரம் நடனக்கலைஞர்கள், யம்மா யம்மா பாடலுக்கு போட்ட இரண்டு கோடி ரூபாய் அரங்கம் என வீணான பணத்தை சண்டைக் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் வரைகலையை மெருகூட்டப் பயன்படுத்தி இருக்கலாம்.

சின்னதொரு கதைக்கரு, நாட்டுக்கு நீதி சொல்வது, காட்சிகளில் தேவையில்லாத பிரமாண்டம் என எல்லாவற்றையும் வணிகரீதியாகக் கலந்து தரும் ஷங்கரின் சூத்திரத்தை முயன்று பார்த்திருக்கிறார் முருகதாஸ். ஆனால் தடுமாறும் திரைக்கதையால் பாதிக்கிணறு தான் தாண்டி இருக்கிறார். படத்தில் தமிழுணர்வு பற்றி நிறைய பேசினாலும் உணர்வு ரீதியாக அதைப் பார்வையாளனுக்குக் கடத்த முடியாத வியாபார நோக்கமே இருப்பதாகப் படுகிறது. கடைசியாக படத்தைப் பற்றி என்ன சொல்வது? எதிர்ப்பார்ப்புகளை மறந்துவிட்டு சாதாரண வணிகப்படம் என்கிற ரீதியில் ஏழாம் அறிவை ஒரு முறை பார்க்கலாம்.


December 9, 2011

ஒஸ்தி - திரைப்பார்வை

ஹிந்தியில் ஒரே அடிதடி வன்முறைப் படங்களாக வந்து கொண்டிருந்த நேரத்தில் வெளியானது தபாங். அலட்டிக் கொள்ளாமல் சாகசங்கள் செய்யும் கோமாளி போலிஸ்காரராக சல்மான் பின்னியெடுக்க படமும் பட்டையைக் கிளப்பியது. ஆனால் தபாங் ஓடியதற்கு முக்கிய காரணம் - எப்போதாவதுதான் ஹிந்தியில் இதுமாதிரி படம் வரும். ஆனால் தமிழில் வெளிவரும் மூன்றில் நான்கு படங்கள் இந்த மாஸ் மசாலா வகையறா என்பதால் தமிழில் இந்தப்படத்தை மறுவுருவாக்கம் செய்தால் நன்றாக இருக்காது என நினைத்திருந்தேன். ஆனால் அந்த எண்ணத்தைப் பொய்யாக்கி ஒஸ்தியை நன்றாகவே தந்திருக்கிறார்கள் சிம்புவும் தரணியும்.



கெட்டவர்களிடம் திருடி ஏழைகளுக்கு உதவும் ரவுடி போலிஸ் சிம்பு. தன் தாயின் மீது பிரியம் கொண்டிருந்தாலும் அவருடைய இரண்டாவது கணவரையும் தம்பியையும் போட்டியாகக் கருதி வெறுப்பவர். தேர்தலில் மக்களுக்குப் பணம் கொடுத்து ஜெயிக்க ஆசைப்படும் அராஜக அரசியல்வாதி சோனு சூத். இருவருக்கும் இடையே நடக்கும் ஆடுபுலி ஆட்டத்தில் சிம்பு எப்படி ஜெயிக்கிறார் என்பதே ஒஸ்தி.

நான் கண்ணாடி மாதிரிலே என்று வசனம் பேசியபடி படம் முழுமைக்கும் கூலர்ஸ் போட்டுத் திரியும் சிம்பு. அலட்டலான உடல்மொழியில் அப்படியே சல்மானைக் கொண்டு வர முயன்று ஜெயித்தும் இருக்கிறார். செமையாக டான்ஸ் ஆடுகிறார் (வானம் படத்தில் அனுஷ்காவின் தொடைகளைப் பிடித்து ஆடிய சிம்பு இந்தப்படத்தில் இரண்டு ஜீப்களை நிறுத்தி அந்தரத்தில் ஆடியிருப்பது முன்னேற்றம்). பறந்து பறந்து அடிக்கிறார். பைக் ஜீப் என்று வித்தை காட்டுகிறார். இறந்து போன அம்மாவைப் பார்த்துத் துடிக்கையிலும் மருத்துவமனையில் இருக்கும் அப்பாவிடம் பேசும் காட்சியிலும் நன்றாக நடிக்கிறார். இப்படி படம் பூராவுமே சிம்பு நிறையக்கிறார்”. திருநெல்வேலி ஸ்லாங் சிம்புவுக்கு அருமையாகப் பொருந்துகிறது. ஆனால் ஒரு சில இடங்களில் சிம்பு பேசும்போது குறளரசன் ஞாபகம் வந்து தொலைக்கிறது. கதாநாயகி நல்லா நடிச்சாத்தான் ஆச்சுன்னு யாரு சொன்னா. ச்சும்மா வந்து நின்னே மனதை அள்ளுகிறார் ரிச்சா. மனுஷனாப் பொறந்துதுக்கு அவர் இடுப்புக்கு கொலுசாப் பொறந்திருக்கலாம் எனத் தியேட்டருக்குள் பெருமூச்சு விட்ட பலருள் அடியேனும் ஒருவன்.



அடுத்ததாக சந்தானம். முதல் பாதியில் சிம்புவுக்கு முட்டுக் கொடுக்கும் இன்னொரு நாயகன். நெடுவாலி பாட்டில் சிம்புவைப் போலவே ஆடிக் கலாய்க்கிறார். யாரு இவன்.. கோவா பட பிரேம்ஜி மாதிரியே இருக்கான். அவர் பேசும் ஒரு வரி வசனங்கள் எல்லாமே நச். வில்லனாக சோனு சூத். உப்புக்கு சப்பாணி. சிம்புவிடம் அடிவாங்கச் சாக ஒரு வில்லன் வேண்டும் என்பதற்காக படத்தில் இருக்கிறார். கிளைமாக்சில் சிம்புவின் சிக்ஸ் பேக்கை காட்ட வேண்டும் என நினைத்தவர்கள் இவரை சட்டை போடச் சொல்லி இருந்தால் சிம்பு கொஞ்சம் எடுபட்டிருப்பார். ஜித்தன் ரமேஷ் சிம்புவின் தம்பியாக நிறைவாக நடித்து இருக்கிறார். போக படத்தில் நாசர், ரேவதி, சரண்யா மோகன், மயில்சாமி, தம்பி ராமையா எனப் பெரிய பட்டாளமே உண்டு.

படத்தின் பாடல்கள் எல்லாமே செம குத்து. ஒரே மாதிரியாக இசையமைக்கும் தமனிடம் கூடத் தன்னால் நல்ல பாடல்கள் வாங்க முடியும் எனக் காட்டி விட்டார் சிம்பு. பாடல்களைப் படமாக்கிய விதத்திலும் அசத்தி விட்டார்கள். குறிப்பாக நெடுவாலியும் க்யூட் பொண்டாட்டியும். வசனம் எழுதிய புண்ணியவான் யார் என்று தெரியவில்லை. தபாங்கிலிருந்து விலகி தமிழுக்கு பொருந்தும்படியாக நீட்டாக எழுதி இருக்கிறார். நிறைய டபுள் மீனிங்கும் உண்டு. அலம்பல் சாதாரணமாகவே சிம்புவிடம் ஜாஸ்தி என்பது அவர் பேசும் வசனங்களுக்கு இன்னும் அதிகமாகப் பொருந்துகிறது. உங்கள் கடமை உணர்வைப் பார்த்து காவல்துறை வியக்கிறது. எப்போதும் போல ஒளிப்பதிவாளர் கோபிநாத் தரணியின் ஆள் என்பதை நிரூபித்து இருக்கிறார்.



ஹிந்திப் படத்திலிருந்து சண்டைக் காட்சிகள் தவிர்த்து வேறு எதையும் பெரிய அளவில் மாற்றாமல் அப்படியே படமாக்கி இருக்கிறார் தரணி. குருவிக்கு முன்புவரை மாஸ் கதநாயாகர்களின் டார்லிங்காக இருந்தவர். சின்னதொரு சறுக்கலுக்குப் பிறகு இந்தப்படத்தில் விட்டதைப் பிடித்திருக்கிறார். லாஜிக், இது எப்படி வந்தது, ஒரு குண்டு கூட சிம்பு மீது படாதா எனக் கேள்வி கேட்பவர்கள் எல்லாம் ஒதுங்கிப் போங்கள். இது உங்களுக்கான படமல்ல. இரண்டு மணி நேரம் ஆட்டம் பாட்டம் சண்டை எனக் கொண்டாட நினைக்கும் மக்களுக்கான படம் - ஒஸ்தி. ஒரு அழகான மசாலா எண்டெர்டெயினராகப் படத்தை எடுத்திருக்கும் தரணிக்கு வாழ்த்துகள்.

December 7, 2011

விஷ்ணுபுரம் விருது விழா 2011

வணக்கம். தமிழின் மூத்த படைப்பாளுமைகளை கவுரவிக்கும் பொருட்டுவிஷ்ணுபுரம் விருதுகள்கடந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த விருது பாராட்டு கேடயமும், ரூ.50,000/- ரொக்கப் பணமும் உள்ளடக்கியது.

கடந்த ஆண்டு இவ்விருது எழுத்தாளர் . மாதவன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இயக்குனர் மணிரத்னம் தலைமையில் கோவையில் நிகழ்ந்த விழாவில் .மாதவன் படைப்புலகம் குறித்து ஜெயமோகன் எழுதியகடைத்தெருவின் கலைஞன்எனும் நூலும் வெளியிடப்பட்டது.

2011ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. டிசம்பர் 18ம் தேதி கோவையில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா அவர்களின் தலைமையில் விருது வழங்கும் விழா நடைபெற இருக்கிறது. விழாவில் ஜெயமோகன், நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்கள் கலந்துகொண்டு பூமணியை வாழ்த்த இருக்கிறார்கள். விழா அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளோம்.

தாங்கள் வருகை தந்து விழாவினைச் சிறப்பிப்பதோடு, விழா குறித்த செய்தியினை தங்களது பத்திரிகை / தொலைக்காட்சி / வலைதளம் / முகநூல் வெளியிடச் செய்து உதவுமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

மிக்க அன்புடன்,
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.




தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது

மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு

ஜெயமோகன் எழுதிய பூமணி படைப்புகளின் விமர்சன நூல்

பூக்கும் கருவேலம் நூல் வெளியீடு

டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி- கீதா ஹால்,ரயில்நிலையம் எதிரில் , கோவை

கலந்துகொள்ளும் ஆளுமைகள்


எழுத்தாளர் ஜெயமோகன்,
வே.அலெக்ஸ் – அயோத்திதாசர் ஆய்வு நடுவம்
எழுத்தாளர் யுவன் சந்திரசேகர்,
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்,
எழுத்தாளர் நாஞ்சில்நாடன்
கன்னட கவிஞர் பிரதீபா நந்தகுமார்,
இயக்குனர் பாரதிராஜா
எழுத்தாளர் பூமணி

உள்ளிட்ட ஆளுமைகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வுக்கு நண்பர்களை அன்புடன் அழைக்கிறோம்
அன்புடன் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் – தொடர்புக்கு 094421 10123
(குறிப்பு:நிகழ்ச்சி குறித்த நேரத்தில் துவங்கும்)

November 1, 2011

கோணங்கி

ஒரு எழுத்தாளனுடைய வேர்கள் அவன் வாழும் மண்ணில் இருக்கிறது. இந்த உலகத்தில் இருக்கும் எல்லாவற்றையும் அவன் எழுதித் தீர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. மாறாக தான் வசிக்கும் கிராமத்தின் எல்லையில் இருக்கும் மலையை அவன் பார்த்தபடியே இருக்கிறான். அம்மலை அவனுக்குள் எப்போதும் வளர்ந்தபடி உள்ளது. தான் பார்த்துணர்ந்த மலையின் சிறு துகள்களை காற்றில் அலைந்தபடி இருக்கும் அதன் வாசனைகளை அந்த எழுத்தாளன் எழுதினாலே போதுமானது.

- கோணங்கி

***************

சங்க காலப் பாடல்களில் மட்டுமே நீங்கள் அப்படி ஒரு கதாப்பாத்திரத்தைப் பற்றிக் கேள்விப்பட முடியும். யாதும் தனது ஊரே என்றபடி சுற்றியலைந்து பாடித் திரியும் ஒரு பாணன் - நாம் வாழும் இந்தக் காலகட்டத்திலும் அப்படி ஒரு மனிதன் இருக்க முடியும எனச் சொன்னால் நம்ப இயலுமா? ஆனால் அது மாதிரியானதொரு மனிதர்தான் கோணங்கி. சிறுபத்திரிக்கை என்னும் விஷயத்தில் நம்பிக்கை கொண்டிருக்கும் மக்கள் அனைவருக்கும் இன்னும் மீதமிருக்கும் ஒரே நம்பிக்கை அவர்தான்.

இப்போது இந்த இடத்திலே நாம் நின்று கொண்டிருக்கிறோம். இங்கே சுவற்றில் ஒரு மரப்பல்லி பறந்து திரியும் தட்டானைப் பிடிக்கக் காத்திருக்கிறது. இதைக் கூட ஒரு புனைவாகப் பார்க்கும் மனிதர்தான் கோணங்கி. அவரைப் பொறுத்தவரை எல்லாமே புனைவுதான். இந்த மொத்த உலகையுமே அவர் ஒரு புனைவாகவே பார்க்கிறார். அந்தப் புனைவில் நீங்கள், நான், அவர் காணும் மனிதர்கள் தொடங்கி உயிரற்ற பொருட்கள் வரை.. ஏன்.. தன்னையும் கூட ஒரு புனைவாகவே பார்க்கக் கூடியவர்.

(நண்பர் திருச்செந்தாழையுடனான உரையாடலில் இருந்து)

***************

சாத்தூரில் மாது அண்ணன் வீட்டின் மொட்டை மாடியில்தான் நான் முதல் முதலாகக் கோணங்கியைச் சந்தித்தது. ஒரு வாசகர் என்கிற முறையிலே வெகு சம்பிரதாயமான சந்திப்பாக அது இருந்து. அதன் பிறகான சில நாட்களுக்குப் பின்பு நண்பர் சந்துரு காரைக்குடிக்கு வரும்படி நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அப்போது கோணங்கியை மதுரையில் இருந்து காரைக்குடிக்கு அழைத்துப் போகும் பொறுப்பு என்னை வந்தடைந்தது. தன்னுடைய எழுத்து என்னவாக இருக்கிறது என்பது பற்றியும் தன் பயணங்கள் பற்றியும் அந்த இரண்டு மணி நேரமும் கோணங்கி உரையாடியபடியே வந்தார். அவரை எனக்கு வெகு நெருக்கமானவராக மாற்றியது அந்தப்பயணம்தான்.

காரைக்குடியில் நாங்கள் மொத்தம் ஆறு பேர் ஒன்று கூடினோம். சந்துரு, அழகுராஜா, நேசன், ஸ்ரீ, நான் மற்றும் கோணங்கி. எங்கு போவதென்ற வெகு நீண்ட குழப்பத்துக்குப் பின் அனைவரும் திருமயம் கோட்டையைச் சுற்றிப் பார்க்கலாம் எனக் கிளம்பினோம். ஆனால் வண்டி கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே ஒரு தெப்பக்குளத்தின் அருகில் நிற்க வேண்டியதானது. இளவயதில் நண்பர்களோடு தான் ஓடி விளையாடிய இடம் எனப் பழங்கதைகளுக்குள் மூழ்கிப்போன கோணங்கி டேய் சின்னச் சிதம்பரம் நீ எங்கடா இருக்க எனத் தன் பால்ய நண்பனைத் தேடி குளத்துக்குள் ஓடத் துவங்கினார். காலத்துள் பின்னோக்கிப் பிரயாணித்துக் கொண்டிருந்த ஒரு மனிதனின் தேடலுக்கு நாங்கள் அனைவரும் அங்கே சாட்சியாக நின்று கொண்டிருந்தோம்.

நினைவுகளில் தேங்கிப் போனவரைத் திருப்பியழைத்து ஆசுவாசப்படித்திக் கிளம்பிய எங்கள் வண்டி அடுத்ததாக நின்ற இடம் ஒரு இடுகாடு. அதன் அருகிலேயே ஒரு சிறுதெய்வக் கோவிலும் அதன் முகப்பில் உடைந்து போன மண்குதிரைகளும் நின்றிருந்தன. இதுதாண்டா நம்ம மண்ணு தம்பி எனக் கோணங்கி அந்த இடுக்காடின் உள்ளே போய் படுத்துக் கொண்டார். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தவரின் கண்களில் சின்ன அளவிலான சிறு காய்கள் மணலில் கிடப்பது தென்பட மினுங்கும் கண்களோடு ஓடிப்போய் அவற்றை எடுத்துக் கொண்டார்.

இது என்னன்னு தெரியுமாடா தம்பி..

இல்லண்ணே..

இது ஒரு மரத்தோட காய்.. இதுல என்ன விசேசம்னா இதுல பேய்கள் தங்கும். நாம இப்போ இந்தக் காய்களைக் கொண்டு போய் நம்ம வீட்டுல விதைக்கிறோம். மரம் வளர்ந்து அதுல நிறைய பேய்கள் தங்கும். அப்படித் தங்கினாத்தான் நாம் இன்னும் நல்லா எழுத முடியும்.

இதுதான் எனக்குத் தெரிந்த கோணங்கி. அந்த அற்புதமான தினத்தின் முடிவில் இன்று இங்கிருக்கும் அனைவரும் என் தம்பிகள்டா என்று எங்களை அவர் கட்டியணைத்துக் கொண்டது எப்போதும் நினைவில் இருக்கும். குழந்தமைத்தன்மைக்கும் பித்துநிலைக்கும் பெரிய அளவில் வித்தியாசங்கள் கிடையாது. தனது குழந்தைமையைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதுதான் கோணங்கியை இன்னும் தீவிரமாக செலுத்திக் கொண்டிருக்கிறதென நான் நம்புகிறேன்.

***************

நண்பர்கள் என்னிடம் சொன்னது இது. இதுவும் காரைக்குடியில் நடைபெற்றதுதான். ஒரு நாள் இரவில் தன்னுடைய நண்பர் ஒருவரின் வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறார் கோணங்கி. திடீரென நடு இரவில் விழித்துக் கொண்டவர் நணபரை எழுப்பி இருக்கிறார். என்ன என்று கேட்ட மனிதரிடம் நகரில் பசித்த புலியொன்றின் நகக்கீறல்கள் எழுப்பும் ஒலியையும் அது தனித்தலைவதையும் தன்னால் உணர முடிகிறதெனச் சொல்லி இருக்கிறார். நகரத்துக்கு நடுவே எங்கிருந்து புலி வர முடியும் என சொல்லிய நண்பர் அது கோணங்கியின் பிரம்மை என்று சொல்லித் தூங்கி விட்டார். மறுநாள் தான் அங்கிருந்து சற்றுத் தொலைவில் புதிதாக வந்திருந்த சர்க்கஸ் கூட்டம் ஒன்று கூடாரம் அடித்திருந்ததும் அங்கே ஒரு புலி இருந்ததும் நண்பருக்குத் தெரிந்திருக்கிறது. தன்னுடைய புலன்களில் தன் மண்ணையும் காட்டின் வாசத்தையும் உணர்ந்த மனிதொருவராலேயே இது சாத்தியமாகக் கூடும் என அவர் சொல்லிச் சொல்லி வியந்திருக்கிறார். தான் பேசும் விஷயங்களுக்குத் எத்தனை நேர்மையாக இருக்கிறார் கோணங்கி என்பதற்காக நண்பர்கள் என்னிடம் இந்த நிகழ்வை அடிக்கடி சொல்வதுண்டு.

***************

காரைக்குடி பயணத்துக்குப் பிறகு பலமுறை கோணங்கியைச் சந்திக்கவும் கோவில்பட்டியில் அவர் வீட்டில் தங்கவும் செய்திருக்கிறேன். ஒவ்வொரு சந்திப்பும் எனக்குள் அவர் மீதான அன்பையும் மதிப்பையும் அதிகப்படுத்தியே வந்திருக்கிறது. எப்போது அலைபேசியில் அழைத்தாலும் தம்பி பாண்டியன் என்று பாசமாய் அழைத்து கோணங்கி என்னிடம் கேட்கும் முதல் விசயம் வீட்டில் இன்னும் பூ தொடுக்கிறார்களா என்பதுதான். அவர் முதல்முறை என் வீட்டுக்கு வந்தபோது அம்மா பூ தொடுத்துக் கொண்டிருந்தார். அதை எடுத்துக் கொண்டு போய் என் பாட்டியிடம் கொடுத்த கோணங்கி என்னிடம் சொன்னது - இவர்கள்தான் இந்த வீட்டின் உண்மையான அடையாளம். இவர்களை நீங்கள் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். இலக்கியம் என்பதையும் தாண்டி இன்றைக்கு என்னுடைய உறவுகளில் ஒன்றாக பிரியமான அண்ணனாக மாறி இருக்கும் கோணங்கிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

***************

நீங்கள் அவரை வியந்தோதலாம். விமர்சிக்கலாம். அன்பைப் பொழியலாம். திட்டித் தீர்க்கலாம். எதுவாயினும்.. தன்னைப் பற்றிய பாராட்டோ விமர்சனமோ.. அவை அனைத்தையும் சின்னதொரு புன்னகையோடு கடந்து போய் விடுவார். நம்மோட வேலை எழுதுறதுதான் தம்பி. அதை நம்மைச் சரியா செஞ்சாப் போதாதா? என்று முடித்து விடுவார். எல்லாவற்றுக்கும் ஒரு சிரிப்பு. அவ்வளவே. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாத அந்தப் பேரன்புதான் கோணங்கி.

வெகு நாட்களாகவே கோணங்கி பற்றி எழுத வேண்டுமென இருந்தேன். இன்றைக்கு அதற்கான நேரம் கூடி வந்ததில் ரொம்பவே மகிழ்ச்சி. காரணம் - இன்று (1-11-11) கோணங்கியின் பிறந்த நாள். மரியாதைக்கும் பிரியத்துக்கும் உரிய கோணங்கி அண்ணனுக்கு என் மனமார்ந்த அன்பும் வாழ்த்துகளும்..:-))))

October 18, 2011

வாகை சூட வா - திரைப்பார்வை

2005-06 வாக்கில் நான் திண்டுக்கல்லில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயம். அப்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச் சாவடி அதிகாரியாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. வேடசந்தூரில் இருந்து கரூர் போகும் வழியில் இருந்த சின்ன ஊர் அது. காட்டுக்கு உள்ளே நாலைந்து கிலோமீட்டர் தாண்டி அங்கே போக வேண்டும். மின்சாரம் தவிர்த்து வேறெந்த வசதியும் கிடையாது. ஊரில் மொத்தம் 150 பேர்களே இருந்தார்கள். அனைவருமே வயதானவர்கள்தான். என்னவென்று விசாரித்தால் இளைஞர்களும் சிறுவர்களும் கூலி வேலை தேடி வெளியூர் போய் விடுவார்களாம். வருடத்துக்கு ஒரு முறை பண்டிகைக் காலத்தில் மட்டுமே வருவார்களாம். படிப்பு என்பதெல்லாம் சுத்தமாகக் கிடையாது. வசதிகள் எல்லாம் பெருகி விட்ட, ஊடகங்கள் மறைமுகமாக ஆட்சி புரியத் தொடங்கி விட்ட இந்தக் காலத்திலும் இப்படி ஒரு கிராமமா என எனக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. நவீனங்கள் பெருகிய இந்த சமயத்திலும் கூட இப்படி ஒரு கிராமம் இருக்க முடியுமென்றால் எந்த வசதியுமற்ற அறுபதுகளில் நம் தமிழ் கிராமங்கள் என்னவாக இருந்திருக்கும்? அது மாதிரியான ஒரு கிராமத்தின் கதையை அச்சு அசலாக நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது வாகை சூட வா.



படிப்பறவற்ற கிராமம் ஒன்றில் வாத்தியார் ஒருவரின் வருகையாலும் கல்வி கற்ற பிள்ளைகளாலும் ஏற்படும் மாற்றங்கள்தான் வாகை சூட வாவின் கதை. கிராமங்கள் என்றாலே பச்சைப் பசேலென இருக்கும் என்பதான கற்பிதங்களை உடைத்து உள்ளதை உள்ளபடி காண்பிக்கும் திரைப்படங்கள் வர ஆரம்பித்து இருப்பது ஆரோக்கியமான விஷயம். ஒரு செங்கல் சூளை - அதை ஒட்டிய கிராமம் எப்படி இருக்கும்.. அங்கிருக்கும் மனிதர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை நேர்மையாகக் காண்பித்து இருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படத்தில் காட்டப்பட்டிருக்கும் மிக முக்கியமான கதாபாத்திரம் - குருவிக்காரனுடையது. தமிழகத்தின் எல்லா கிராமங்களிலும் மூப்பன் என்று ஒருவர் உண்டு. அந்த மக்களுக்கு வழிகாட்டியாக, ஊரின் வரலாறு தெரிந்த முக்கியமான மனிதராக அவர் இருப்பார். அத்தகைய மூப்பன்தான் வாகை சூட வாவின் குருவிக்காரன். அந்த மண்ணின் சுவை அறிந்து மக்களை அங்கே கொண்டு வந்து சேர்த்தாலும் மனிதர்களின் வருகை காரணமாக அழிந்த வனங்களின் பொருட்டு தன் தவறை உணர்ந்து புத்தி பேதலித்த நிலையில் இருப்பவன். குருவி சத்தம் கேட்குது என்று அலறியபடியும், மழை வரப்போவதை அறிவித்துக் கொண்டும், நான் போகப்போறேன் நீ இருப்பியா எனத் தன் மரணத்தை உணர்ந்து விமலிடம் சொல்லும்போதும்.. தொன்மையான, மாயம் நிறைந்ததொரு கதாபாத்திரமாக அது மாறி விடுகிறது. இதுவரை தமிழ்த் திரையில் அதிகம் பேசப்பட்டிராத இத்தகைய பாத்திரத்தி இயக்குனர் கையாண்டிருப்பது மிக முக்கியமானது.



இரண்டாவதாக, காதலை வெகு துல்லியமாக இந்தப்படம் போல சமீபத்தில் வேறு எந்தப்படமும் பேசியதில்லை என்று சொல்லலாம். ஊருக்குப் புதிதாக வந்த வாத்தியாரிடம் எத்தனை பணம் கறக்கலாம் எனத் திட்டம் போடுகிற நாயகி. ஆனால் போகப்போக, தான் வாழும் இடமும் தன்னைச் சுற்றி இருக்கும் மக்களோடும் ஒப்பிடும்போது, நாயகனின் உருவ அழகு சார்ந்தும் பொருளாதாரரீதியாகவும் ஈர்க்கப்பட்டுஅவன்பால் காதல் கொள்கிறாள். நாயகனின் நிலை இதற்கு முற்றிலும் நேர்மாறானது. அவள் தன்னை மணந்து கொள்ளும்படி நேரடியாகக் கேட்டும் கூட, படத்தின் இறுதி வரைக்கும், அவனுக்கு அவளின் மீது காதலென எதுவும் கிடையாது. கடைசியில் அந்தக் கிராமமே தனது வாழ்க்கை என்றானபிறகு தன்னைப் பார்த்துக் கொள்ளவும் உறவாடவும் ஒரு துணை தேவையாக இருக்கிறது. இத்தகைய சூழலில் தனக்காகக் காத்து நிற்கும் நாயகியின் மீது அவனுக்கு காதல் உண்டாகிறது. ஆக, உணர்வுகள் அன்பு என்பதெல்லாம் தாண்டி, தேவைகள் சார்ந்து மனிதன் காதலிக்கத் தொடங்கி விட்டதை வெகு அழகாக இந்தப் படம் பதிவு செய்கிறது.

படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் எல்லாமே தங்களுடைய பங்களிப்பை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். குறிப்பாக கிராமத்துக் குழந்தைகளாக வரும் சிறுவர்கள். கால் நடக்க முடியாமல் ஆட்டின் முன் பாய்ந்து நிற்கும் சிறுவனில் தொடங்கி மண்ணைத் தின்று விட்டு விமலைத் தன் தந்தையிடம் மாட்டிவிடும் சிறுவன் கிராமத்து வெள்ளந்திப் பிள்ளைகள் நம் மனதை அள்ளிக் கொள்கிறார்கள். குழந்தைகளின் படிப்புக்காக தன் வாழ்வையே தியாகம் செய்யும் வாத்தியாராக விமல். விதைக்காமலே அறுவடை செய்வது தவறு என்பதை உணர்ந்து பிள்ளைகளுக்குத் தன்னால் இயன்றதைச் சொல்லித் தரும் பாத்திரத்தில் இயல்பாகப் பொருந்துகிறார். கொஞ்சம் கஸ்துரியும் கொஞ்சம் ரஞ்சிதாவும் கலந்து செய்த நாயகி இனியா. குறும்புக்கார கிராமத்துப் பெண். அலங்காரம் எதுவுமில்லாமல் அழுந்த வாரிய கூந்தல், இழுத்துச் சுற்றிய தாவணி, கதை பேசும் கண்கள், சார் சார் எனக் கொஞ்சி நம் மனதை கொள்ளை கொள்கிறார். கணக்குப் போடும் டூநாலெட்டாக வரும் தம்பி ராமையா, குருவிக்காரனாக வரும் குமரவேல், பத்திர எழுத்தாளர் பாக்கியராஜ் என எல்லாருமே தங்கள் பங்களிப்பை அழகாகச் செய்திருக்கிறார்கள்.



கதையில் என்னால் ஏற்றுக் கொள்ள இயலாத ஒரே பாத்திரம் ஆண்டையாக வரும் பொன்வண்ணன். செங்கல்களை எறிந்து தம் பெருமை சொல்வதும் ஆரம்பத்தில் கண்டுகொள்லாமல் இருந்துவிட்டு பின்பு வாத்தியாரை அடித்து விரட்டுங்கள் என்பதும் அத்தனை ஒட்டவில்லை. அத்தனை பெரிய பண்ணையார் ஒரு சாதாரண பத்திர எழுத்தர் சொன்னதும் தனக்கு பொன்முட்டையிடும் வாத்துகளென இருக்கும் கிராமத்து மக்களை ஒன்றும் சொல்லாது கிளம்பிப் போவதும் நம்ப முடியாத ஒன்ரு. இருந்தபோதும், இங்கே படம் கல்வி என்பது ஒரு சமூகத்தை எப்படி மாற்றும் என்பதைப் பேசுகிறதே தவிர, அதிகாரத்தை எதிர்க்கும் மக்கள் சமூகம் குறித்தல்ல என்னும் சூழலில் நாம் இதை எளிதில் கடந்து போக முடிகிறது.

கதையில் காட்டியிருக்கும் கவனத்தைத் தாண்டி தொழில்நுட்ப ரீதியாகவும் இதுவொரு முக்கியமான படம். 60களில் நடக்கும் கதை என்பதால் கலை இயக்குனர் ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறார். தோல் வார் மாட்டிய ரேடியோ பொட்டி, சிலோன் ரேடியோ ஒலிபரப்பும் பாடல்கள், கையால் காப்பிப்பொடி அரைக்கும் இயந்திரம், அந்தக்காலத்தின் பத்திரிக்கைகள், லொட லொட என உருண்டு வரும் பிளஷர் கார் என பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள். புது இசையமைப்பாளர் ஜிப்ரானின் பின்னணி இசையும் பாடல்களும் படத்துக்கு இன்னும் பலம். சர சர சாரைக் காத்து பாடலும், அது படமாக்கப்பட்டு இருக்கும் விதமும் திரையில் ஒரு கொண்டாட்டம். நான் பெரிதும் எதிர்பார்த்த போறானே பாடல் ரொம்ப சாதாரணமாகப் படம் பிடிக்கப்பட்டு இருப்பது சின்னதொரு வருத்தம். இயக்குனரின் கண்களாகச் செயல்பட்டு வெகு அழகாகப் படத்தை நகர்த்திப் போகிறது ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு.

சென்ற வருடம் பலத்த ஆரவாரத்தோடு வெளியான பல படங்களுக்கு மத்தியில் சத்தமே இல்லாமல் வந்து பெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படம் களவாணி. என்றாலும், சாதாரணமானதொரு நகைச்சுவைப்படம் என்பதைத் தாண்டி, அந்தப்படம் என்னை பெரிதும் ஈர்க்கவில்லை. ஆனால் வாகை சூட வா மூலமாகத் தன்னை தமிழின் தனித்துவமிக்க படைப்பாளிகளில் ஒருவராகப் பதிவு செய்திருக்கிறார் சற்குணம். திரைக்கதையின் முதல் பாதி நாயகியின் காதலையும் நாயகனின் குழப்பமான மனதையும் பேச, இரண்டாம் பாதி கிராமத்தில் நாயகனால் ஏற்படும் விழிப்புணர்வைப் பேசுகிறது. மெதுவாகவும் அழுத்தமாகவும் தான் சொல்ல வந்த விஷயத்தை மிகச் சரியாக சொல்லிப் போகிறார் இயக்குனர். அந்த ஊரில் இப்படி எடுக்கிறார்கள், இவர்கள் அப்படி எடுக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்களைப் பார்த்து நாமும் நம் மண்ணை அற்புதமாகப் படம் பிடிக்கலாம் என்று செய்து காட்டி இருக்கும் இயக்குனர் சற்குணத்துக்கு நன்றியும் வாழ்த்துகளும்.

October 5, 2011

நான் அமைதியாக இருக்கிறேன்

என் வீட்டின் வரவேற்பறையில்
நாம் இருவரும் நாற்காலிகளில்
எதிரெதிரே அமர்ந்திருக்கிறோம்
அருந்திய பின்னும் நிரம்பி வழிந்தபடியே
இருக்கிறது உங்கள் தேநீர்க்கோப்பை
எரியம்புகளென பாய்ந்து கொண்டே
இருக்கின்றன வார்த்தைகள்
நான் அமைதியாக இருக்கிறேன்
நதியிலிருந்து பிடுங்கி எறியப்பட்ட மீனென
உங்களுடைய நான் என் முன்பாக
தத்தளித்துத் துடித்தபடி கிடக்கிறது
சின்னதொரு பார்வை
ஆதுரமாய் சில வார்த்தைகள்
தோள்சாய்க்கும் பேரன்பு
ஏதேனும் ஒன்று உங்களை
மீட்டெடுக்கக்கூடும் என்பதாய்
என் கண்களில் ஊடுருவிப் பார்க்கிறீர்கள்
அப்போதும்
நான் அமைதியாகவே இருக்கிறேன்
யுகங்களாய் கடந்துபோன சில
கணங்களுக்குப் பின் வேறென்ன
என்பதாய் என்னைப் பார்க்கிறீர்கள்
ஒன்றுமில்லை எனத் தலையசைக்கிறேன்
பின்பாக
எதுவும் பேசாமல்
நீங்கள் எழுந்து போனபின்னும்
நுரைத்துச் சுழன்றபடியே இருக்கிறது
பேசப்படாத வார்த்தைகளின்
அமில நீரூற்று

September 25, 2011

ஒரு இலக்கியப் பேரொளியும் பின்னே ஞானும்

ஹலோ. கார்த்திகைப்பாண்டியன் இருக்காரா?

வணக்கம். நாந்தான் சார் பேசுறேன். சொல்லுங்க.

வணக்கம் தம்பி. உங்களுக்கு அந்தியைத் தெரியுமா?

ஓ தெரியுமே. சாயங்காலம் சூரியன் மறையறதுக்கு முன்னாடி..

தம்பி தம்பி.. அது இல்லை தம்பி..

அப்புறம்?

நான் சொல்றது எழுத்தாளர் அந்தி. கேள்விப்பட்டது இல்லையா?

இல்லீங்களே?

என்ன தம்பி இப்படிச் சொல்லிட்டீங்க? அவர் ஒரு இலக்கியப் பேரொளிப்பா. இதுவரைக்கும் 22 தொகுப்பு வந்திருக்கு. எட்டு சிறுகதைத் தொகுதி, பனிரெண்டு கவிதைத் தொகுப்பு.. கூடவே ரெண்டு நாவலும்.

ஓகோ. சரிங்க..

இருங்க.. நீங்க புத்தகம் எல்லாம் வாசிப்பீங்க தான?

நல்லாவே வாசிப்பேங்க..

என்ன வாசிப்பீங்க?

குமுதம், விகடன், கல்கி, அப்புறம்..

தம்பி தம்பி. நான் சொல்றது இது இல்லைப்பா. இது இலக்கியப் பத்திரிக்கை. இ ல க் கி ய ப் பத்திரிக்கை. புரியுதா?

ஏதோ புரியுது. ஆனா புரியலீங்க.

புரியலையா? ஹ்ம்ம்ம்.. அப்புறம் எதுக்கு உங்க நம்பர் தந்து பேசச் சொன்னாங்க. எங்கேயோ ஏதோ தப்பு நடந்து போச்சே.

என்னங்க நீங்களாப் பேசுறீங்க?

அதில்லை தம்பி. நாங்க ஒரு இலக்கியப் பத்திரிக்கை கொண்டு வரப் போறோம். உழைப்பால் உயர்வோம்னு பேரு. தனிச் சுற்றுக்கு மட்டும். அது பத்தி பேசலாம்னுதான் கூப்பிட்டேன். சரி விடுங்க. நீங்க அதுக்குச் சரிப்பட்டு வர மாட்டீங்க.

அப்படிங்களா அய்யா.. மன்னிச்சுக்கோங்க.. அப்புறம் ரொம்ப நேரமா ஒரு இலக்கியப் பேரொளி... அந்தி பத்தி சொன்னீங்களே? அவர் யாருங்க அய்யா..

அட அது நாந்தாப்பா.. போனை வை சாமி..

எல்லாம் முடிஞ்சு போச்சு. தப்பிசாண்டா பாண்டியன்.

September 20, 2011

அற்றைத் திங்கள் - அம்ஷன் குமார் சந்திப்பு

கடந்த 18-09-11 அன்று மாலை ஆறு மணிக்கு மதுரை மருத்துவக் கல்லூரி அரங்கத்தில் காலச்சுவடு மற்றும் கடவு இணைந்து நடத்தும் "அற்றைத் திங்கள்" கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மாத சிறப்பு விருந்தினராக திரைப்பட மற்றும் ஆவணப்பட இயக்குனரான அம்ஷன் குமார் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் ஆரம்பமாக அம்ஷன் குமார் பேசினார். அதன் பின்பாக அவருடைய படங்களில் இருந்து சில காட்சிகள் திரையிடப்பட்டன. இறுதியாக வாசகர்களுடனான கலந்துரையாடல் நடந்தது.



முதலில் அம்ஷன் குமாரின் உரை..

"என்னுடைய சொந்த ஊர் திருச்சி. சின்ன வயதில் இருந்தே வாசிப்பும் திரைப்படமும் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களாக இருந்தன. திருச்சியில் இருக்கக்கூடிய எல்லா நூலகங்களிலும் புத்தகங்களைத் தேடிதேடிப் படித்திருக்கிறேன். குறிப்பாக திரைப்படங்கள் சார்ந்த புத்தகங்களை விரும்பி வாசிப்பேன். வளர்ந்து வெகு நாட்களுக்கு ஏதும் இலக்கின்றி சுற்றித் திரிந்த பின்பு ஒரு வங்கிப்பணியில் சேர்ந்து சென்னை வந்து சேர்ந்தேன். இந்தக் காலகட்டத்தில், திரைப்படங்கள் தயாரிப்பு பற்றி நிறைய புத்தகங்கள் இருந்தாலும் ஒரு திரைப்படம் பார்ப்பது எப்படி, என்கிற ரசனை சார்ந்த புத்தகம் ஒன்றை நான் எழுதினேன்.

சில நாட்களுக்குப் பிறகு, என்னுடைய நண்பர் ஒருவர் தான் எடுக்கப் போகும் விளம்பரப் படம் குறித்து என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது நான் அவர் சொன்ன விளம்பரப்படத்தின் கதை அத்தனை நன்றாக இல்லை எனச் சொல்லி நானே ஒரு கருவைச் சொன்னேன். அதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த அவர் அந்தப்படத்தை என்னையே எடுத்துத் தரும்படி சொன்னார். ஏதோ ஒரு தைரியத்தில் நானும் ஒத்துக் கொண்டேன்.

அது விளம்பரப் படங்களுக்கு ரொம்பப் பெரிய மதிப்பு இருந்த காலம். என்னுடைய விளம்பரத்துக்கு .ஆர்.ரகுமான் தான் இசை. நான் ஏற்கனவே திரைப்படம் சார்ந்து நிறைய வாசித்து இருந்ததால் படத்தளத்தில் ஒளிப்பதிவாளரிடம் எல்லா விஷயங்களையும் சொல்லிக் கொண்டே இருப்பேன். கருவியின் கோணம் இப்படி இருக்க வேண்டும் அது இதுவென. அவருக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் வெறுமனே புத்தகத்தில் படித்தது நிதர்சனத்தில் உதவாது என்பதை நிரூபிப்பதாக ஒரு சம்பவம் நடந்தது.

படப்பிடிப்பின் முதல் நாள். அப்போது இருந்த வழக்கம என்னவெனில், முதலில் இயக்குனர் ஸ்டார்ட் எனச் சொல்ல வேண்டும். உடனே ஒளிப்பதிவு கருவியை ஒளிப்பதிவாளர் இயக்குவார். அப்போது ரன்னிங் என்று சொல்வார். பிறகு இயக்குனர் ஆக்ஷன் எனச் சொல்ல வேண்டும். எனக்கு இதெதுவும் தெரியாது. எடுத்தவுடனே ஸ்டார்ட், ஆக்ஷன் என்று சொல்ல ஒளிப்பதிவாளருக்குக் கடும் கோபம். பின்பு அந்த வழிமுறைகளை எல்லாம் வேகமாகக் கற்றுக் கொண்டேன். இப்படியாகத்தான் எனது திரையுலக அனுபம் ஆரம்பித்தது.

என்னுடைய விளம்பரங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று, அத்துறை என்னை இழுத்துப்போக, என்னால் முழுமையாக வங்கிப்பணியில் கவனம் செலுத்த இயலவில்லை. பொறுத்து பொறுத்துப் பார்த்த அவர்களும் சில நாட்களில் என்னைக் கூப்பிட்டுச் சொல்ல வேலையை விட்டு வெளியே வந்தேன். மீண்டும் விளம்பரப் படங்கள் எடுப்பதில் எனக்கு ஆர்வமில்லை. இந்த சமூகத்துக்குப் பயனளிக்கும் வகையில் ஏதெனும் செய்ய ஆசை. எனவே ஆவணப்படங்கள் எடுக்கத் துவங்கினேன்.

பொதுவாக என்னுடைய படங்களில் அரசியல் இருக்காது. ஆனால் நான் எடுப்பவை எல்லாமே மக்களின் வாழ்க்கை பற்றிய அரசியல் சார்ந்த படங்களாக, மக்களின் உள்ளத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான படங்களாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். புதிது புதிதான அனுபவங்களோடு இந்தப் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. என்னைப் பற்றி இத்தோடு போதும் என நினைக்கிறேன். அடுத்ததாக படங்களைப் பார்க்கலாம்.”

அடுத்ததாக அம்ஷன் குமார் இயக்கிய திரப்படங்களில் இருந்து சில காட்சிகள் திரையிடப்பட்டன. சுப்பிரமணிய பாரதி பற்றிய ஆவணப்படம், சாகித்ய அகாதெமி விருது பெற்ற அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடு பற்றிய அவரது அனுபவங்கள், சர்.சி.வி.இராமன், நவீன நாடகத்தில் புரட்சி செய்த பாதல் சர்க்கார் பற்றிய படம், கி.ராஜநாராயணனின்கிடைஎன்கிற சிறுகதையை ஒட்டி எடுக்கப்பட்டஒருத்தி”, தமிழ் நவீன கலை - சிற்பங்கள் பற்றிய படம் என ஆறு படங்களில் இருந்து சில காட்சிகள் திரையிடப்பட்டன. பிறகு அப்படங்கள் சார்ந்து வாசகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தப்பட்டது. அவற்றில் சில துளிகள்..

தமிழில் மாற்று சினிமாவுக்கான களம் இருக்கிறதா?

இல்லை. ஆங்காங்கே சில கீற்றுகள் நம்பிக்கை தந்தாலும் சமரசம் செய்து கொள்ளாமல் படம் எடுப்பது என்பது இன்னும் சாத்தியமாக வில்லை. நாம் இன்னும் வியாபார சினிமாவில்தான் இருக்கிறோம். இதோ - 2011 வந்தால் நம் தமிழ் சினிமாவுக்கு வயது நூறு ஆண்டுகள் ஆகப் போகிறது. 1914 இல் கீசகவதம் நம் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதுதான் உண்மையான துவக்கம். நிறைய பேர் காளிதாசன்தான் ஆரம்பம் எனச் சொல்லுவார்கள். அது சரி கிடையாது. நூறு ஆண்டுகள். நாம் என்ன சாதித்து இருக்கிறோம்? எல்லாரும் இரானியப் படம் அப்படி எடுக்கிறார்கள் என்றெல்லாம் பேசுகிறார்கள். அங்கே அந்தப் படங்களுக்கான சந்தை இருக்கிறது. மக்கள் பார்க்கிறார்கள். ஆனால் நம்மூரில் இது சாத்தியமா என்றால் இல்லை. மாற்று சினிமா என்பதற்கான களாம் இங்கே உருவாகவில்லை என்பதுதான் வருத்தத்தோடு ஒத்துக் கொள்ள வேண்டிய உண்மை.

பாரதி - அனுபவம் குறித்து? இந்த ஆவணப்படம் முதலில் வந்ததா அல்லது பாரதி திரைப்படமா?

முதலில் வந்தது இந்த ஆவணப்படம்தான். படத்தில் சில புனைவுகளும் இருந்தன. இந்த ஆவணப்படத்தில் வெகு அரிதான ஆவணங்களை எல்லாம் தேடி எடுத்து பயன்படுத்தி இருக்கிறோம். பாரதியார் கைது செய்யப்பட்டபோது பதிவு செய்த கோப்புகள், 1919 - 1921 வரை மூன்று வருட காலத்தில் எடுக்கப்பட்ட அவருடைய ஐந்து புகைப்படங்கள் என நிறைய விஷயங்கள். பாரதியை நேரில் பார்த்த, அவர் வாழ்ந்த கடையத்தில் இருந்த, மனிதரொருவரின் பேட்டியும் உள்ளது.

அசோகமித்திரனுடனான அனுபவம்?

அவர் தன்னுடைய பால்யத்தில் வாழ்ந்த ஹைதை நகரத்துக்குப் போய் எசுக்க வேண்டிய படம். நாற்பது ஐம்பது வருடங்கள் கடந்து விட்ட நிலையில் அவர் வசித்த ரயில்வே குடியிருப்பு நிறையவே மாறி இருந்தது. அவர் குடியிருந்த வீட்டைத் தேடிக் கண்டுபிடிக்கவே வெகு நேரமானது. படம் எடுக்கையில் அவர் அந்த வீட்டுக்கு உள்ளே போக மாட்டேன் எனச் சொல்லி விட்டார். தேவையில்லாத ஞாபகங்கள் வருமெனச் சொல்லி உள்ளே போகவேயில்லை. அவரோடு இருக்க முடிந்த காலங்கள் இனிமையானவை.

ஒருத்தி?

தமிழில் தலித்துகள் பற்றிய படங்கள் வந்தாலும் அவை மற்றவரின் பார்வையிலேயே வந்திருக்கின்றன. ஆனால் தலித்துகளின் பார்வையில் வரவில்லை. அப்படியானதொரு முயற்சியாகத்தான் ஒருத்தியை எடுத்தேன். முதல் வாரம் சத்யத்தில் ஹவுஸ்ஃபுல்லாகப் போனாலும் புதுப் படங்கள் வந்ததெனத் தூக்கி விட்டார்கள். அது முதல் திரைப்பட விழாக்கள், கல்லூரி நிகழ்வுகள் எனத் தொடர்ச்சியாகப் போய்க் கொண்டிருக்கிறது.

தற்போது நீங்கள் பணிபுரியும் படம்?

மணக்கால் எஸ். ரங்கராஜன் என்றொரு கர்நாடக இசைக்கலைஞர். அற்புதமாகப் பாடக்கூடியவர்.ஆனால் அவருக்கானசரியான அங்கீகாரம் வழங்கப்படவில்லை. அவரைப் பற்றித்தான் தற்போது ஆவணப்படம் எடுக்கிறேன்.

தொடர்ச்சியாக தனிப்பட்ட முறையிலும் அம்ஷன் குமார் அவர்களுடன் வாசகர்கள் உரையாடிப் போக நிகழ்வு நிறைவு பெற்றது.