April 30, 2012

உதிரிப்பூக்கள் - 11

நான் வேலை பார்க்கும் கல்லூரிக்குப் பின்புறம் ஒரு பெரிய பொட்டல்காடு இருக்கிறது. எந்நேரம் பார்த்தாலும் அங்கே ஏதாவது ஒரு குரூப் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும். டவுசர் போட்ட சின்னப்பையன் முதல் கைலி கட்டிய பெரிய மனிதன் வரை எந்த பாகுபாடும் இல்லாமல் அந்தக் கூட்டத்தில் இருப்பார்கள். மதிய நேரத்து மொட்டை வெயிலோ மழையோ அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இருக்காது. எந்நேரமும் கிரிக்கெட்தான். எந்தக் கவலையும் இன்றி நாமும் அவர்களைப் போல விளையாட முடியவில்லையே என்று பொறாமையாக இருக்கும்.

இந்தியாவில் இன்று ஜாதி மற்றும் கரப்பான்பூச்சிக்கு அடுத்தபடியாக கிரிக்கெட் ஒன்றுதான் எல்லா இடங்களிலும் பரவலாக விரவிக் கிடக்கிறது. வெளியூர் மற்றும் வெளிமாநிலப் பயணங்களின் போதும் தெருவில் எனக்கு அதிகம் பார்க்கக் கிடைக்கும் விளையாட்டு கிரிக்கெட் தான். குறிப்பாக பி எல்லின் வருகை கிரிக்கெட்டை விளையாட்டு என்பதிலிருந்து வேறொரு இடத்துக்கு நகர்த்தி இருக்கிறது. சச்சினைத் தங்கள் கடவுள் எனக் கொண்டாடிய மக்களை, அவரை வீழ்த்தி விட்டால் போதும் கண்டிப்பாக நாம் ஜெயித்து விடலாம், எனப் பிரார்த்திக்க வைக்கும் நிலை இன்றைக்கு வந்தாகி விட்டது.

ரு மட்டையைக் கொண்டு பந்தை அடிக்க வேண்டும் என்பதாக எனக்கு கிரிக்கெட் அறிமுகம் ஆனபோது ஏழு அல்லது எட்டு வயது இருக்கும். அடுப்பெரிக்க வைத்து இருக்கும் விறகும் பிளாஸ்டிக் பந்தும்தான் நான் முதன்முதலில் கிரிக்கெட் ஆடிய உபகரணங்கள். யார் அதிகம் பேட் செய்வது என்கிற தகராறில் விறகு பேட் வாளாய் மாறி சண்டை போட்டு கட்டை விரல் நகத்தைப் பெயர்த்துக் கொண்டதுதான் எனது முதல் விழுப்புண். ஆறாவது படிக்கும் காலத்தில் சுப்பரமணியபுரம் ஏரியாவுக்கு மாறிய பிறகுதான் நான் சீரியசாக கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தது.

பாலகுருகுலம் ஸ்கூல் பக்கத்தில் இருந்து ரைஸ்மில் கிரவுண்ட் தான் எங்கள் பிளேகிரவுண்ட். எதிர் வீட்டு ராஜசேகர் அண்ணனின் டீமில் என்னைச் சேர்த்துக் கொண்டார்கள். என்னுடைய பவுலிங்கும் ஃபீல்டிங்கும் ரொம்பக் கேவலமாக இருக்கும் பேட்டிங் கொஞ்சம் கேவலமாக இருக்கும் என்பதால் ஏழாவது அல்லது எட்டாவதாக இறக்கி விடுவார்கள். பெரும்பாலும் கீப்பருக்குப் பின்னால் நின்று பந்து பொறுக்கி போடுவதுதான் என்னுடைய முக்கியமான வேலை.

அன்றைக்கு பதினைந்து ஓவர்கள் கொண்டதொரு பால் மேட்ச். எங்கள் அணிதான் பேட்டிங். முதல் நான்கு ஓவருக்குள்ளேயே ஆறு விக்கெட் போயிந்தி. ஏழாவதாக நான் இறங்குகிறேன். எதிர் முனையில் இருக்கும் குட்டை குமார் நன்றாக விளையாடக் கூடியவன் என்பதால் எப்படியாவது அவுட் ஆகாமல் மட்டும் இருடா என்று என்னிடம் வந்து சொல்லிப் போனான். அன்றைக்குப் பார்த்து எனக்கு என்ன ஆனதோ தெரியவில்லை சன்னதம் வந்தாற்போல ஆடி விட்டேன்.

போடுகிற பந்தை எல்லாம் காலிலேயே குத்திக் கொண்டிருந்தது வசதியாகப் போக சிக்சும் ஃபோருமாகப் பறந்தது. எங்கள் ஆட்டம் முடிந்த போது நான் எண்பது ரன்னும் குமார் அறுபதும் அடித்து இருந்தோம். அபார வெற்றி. மக்கள் என்னைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். அன்றிலிருந்து நானும் குட்டை குமாரும் அணியின் முக்கியமான இணையாக மாறி விட்டோம். எல்லாம் நல்ல படியாகப் போய்க் கொண்டிருந்தது, நான் குட்டை குமாரின் தங்கைக்கு லவ் லெட்டர் கொடுக்கும் வரை.

யில்வே காலனிக்கு வந்த பிறகு வேறொரு டீம். ஆனால் இங்கு நான்தான் கேப்டன். ரப்பர் பந்திலிருந்து பீஸ்பாலுக்கு நாங்கள் புரமோஷன் வாங்கியது இந்தக் காலத்தில்தான். காலனியின் வீதிகளில் விளையாட தனித்திறமை வேண்டும். கடுமையான விதிகளுக்கு உட்பட்டு களம் இறங்குவோம். வாதாமரம் தான் ஸ்டம்ப். ஓட்டின் மீது அடித்தால் அவுட். வேலி கட்டிய வீடுகளுக்குள் பந்து நேராய்ப் போய் விழுந்தாலும் அவுட். அதுவும் பந்து போய் விழும் வீடு துரைசானிகளின் வீடாய் இருந்தால் பந்தைத் திருப்பி வாங்குவதற்குள் தாவு தீர்ந்து விடும். நிறைய பேர் பந்தை அறுத்துத்தான் திருப்பித் தருவார்கள். திட்டிக் கொண்டே திரும்பி வருவோம்.

கல்லூரியில் சேர்ந்தபின்பாக கிரிக்கெட் விளையாடுவது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து போனது. இன்றைக்கு கல்லூரி ஆண்டு விழாக்களில் எப்போதாவது மாணவர் ஆசிரியர் போட்டி வைத்தால் மட்டும் கலந்து கொள்வது என்கிற நிலைக்கு விளையாட்டு என்பது குறைந்து போய் விட்டது. இருந்தாலும் பால்யத்தின் பல இனிமையான நினைவுகளுக்கு கிரிக்கெட் விளையாட்டும் ஒரு காரணம் என்பதை என்னால் மறுக்க முடியாது. அதே நேரத்தில் சின்ன வயது நினைவுகள் மற்றும் கொண்டாட்டங்கள் பற்றிப் பேசும்போது கிரிக்கெட் தவிர்த்து சொல்வதற்கும் எங்களுக்கு நிறைய விளையாட்டுகள் இருந்தன.

ள்ளிக்கூடத்தில் பி டி பீரியட் என்று தனியாக ஒரு ஹவர் இருக்கும். அந்த நேரத்தில் விளையாடுவதற்கு என்று எங்கள் பள்ளிக்கென ஒரு ஸ்பெஷல் விளையாட்டு இருந்தது. மொத்த வகுப்பையும் இரண்டாகப் பிரித்து வரிசையாக ஆளுக்கொரு எண் கொடுத்து விடுவார்கள். இப்போது இரண்டு அணியிலும் தலா முப்பது எண்களைத் தாங்கிக் கொண்டு முப்பது பேர் இருப்போம். இரண்டு அணிக்கும் நடுவே ஒரு வட்டம் வரைந்து உள்ளுக்குள் ஒரு கர்ச்சீப்பை வைத்து விடுவார்கள். ஆட்டதுக்கு களம் ரெடி.

இப்போது நடுவராக இருக்கும் பி டி மாஸ்டர் ஒரு எண்ணை உரத்துச் சொல்வார். அந்த எண்ணுக்குரிய நபர்கள் இருவரும் வட்டதுக்கு அருகே வந்து விடுவார்கள். மற்றவர் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு அந்தக் கர்ச்சீப்பை எடுத்துக் கொண்டு மீண்டும் தங்கள் அணிக்குத் திரும்ப வேண்டும். அப்படி ஒருவர் எடுத்து வந்து விட்டால் அந்த அணிக்கு ஒரு பாயிண்ட். எடுத்தவர் அணியின் எல்லைக் கோட்டைத் தொடுவதற்குள் மற்றவர் இவரைத் தொட்டுவிட்டால் எதிரணிக்கு ஒரு பாயிண்ட். இப்படியாகப் போகும் ஆட்டத்தில் கிளுகிளுப்பே அழைக்கப்படும் எண்களுக்கு உரிய மக்கள் எதிர்பாலினத்தவர்களாக இருப்பதில்தான் இருக்கும். வாரம் பூராவும் இந்த ஒற்றை ஹவருக்காக காத்திருந்து விளையாடுவோம்.

ன்னுடைய நெருங்கிய சினேகிதிகள் எல்லாரும் எனக்கு சுப்பிரமணியபுரம் வந்த பிறகு கிடைத்தவர்கள். அங்கே இருந்த காலகட்டத்தில் நான் ஆண்பிள்ளைகளைக் காட்டிலும் பெண்களோடுதான் அதிகமாக விளையாடுவேன். தில்லி தில்லி பொம்மக்கா, கல்லா மண்ணா, கரண்ட் பாக்ஸ், வளையல் ஜோடி சேர்த்து ஆடுவது, சொட்டாங்கல், பிள்ளைப்பந்து, நாடு பிடிச்சு ஆடுவது என்று வித விதமான விளையாட்டுகளில் நேரம் போவதே தெரியாது. பசங்களோடு சேர்ந்து கொள்வதில்லை என்று பையன்கள் கண்ட மேனிக்கு வைவார்கள். இதை எல்லாம் பார்த்தால் பிழைப்பு நடக்குமா என்று போய்க் கொண்டே இருப்பேன்.

அந்தக் காலகட்டத்தில் எங்கள் ஏரியாப் பையன்களின் மத்தில் பிரபலமாக இருந்த விளையாட்டுக்களில் முக்கியமானது ரவுண்டு காத்து. ஏரியாவில் நின்று கொண்டிருக்கும் சைக்கிள்களில் எல்லாம் காற்றைப் பிடுங்கி விட்டுக் கொண்டே போவதுதான் விளையாட்டு. ஆட்டம் இரண்டு நாட்களுக்கு இரண்டு அணிகளுகு இடையே நடக்கும். முதல் நாள் டாசில் வென்ற அணி காத்துப் பிடுங்கப் போகும்போது எதிரணியில் இருந்து கணக்கெடுக்க ஒரு அம்பயரும் கூடவே போக வேண்டும். இரண்டாவது நாள் அடுத்த அணி வேட்டைக்குப் போகும். முடிவில் அதிகமான சைக்கிள் டயர்களைப் பதம் பார்த்தவர்களே வெற்றி பெற்றவர்கள். தோற்ற அணி மற்றவர்களுக்கு வடையும் டீயும் வாங்கித்தர வேண்டும். இன்னொரு முக்கியமான ஆட்டம் ரவுண்டு கண்ணாமூச்சி. ஏரியாவில் இருக்கும் பனிரெண்டு தெருக்களில் எங்கு வேண்டுமானாலும் ஒளிந்து கொள்ளலாம். தேடி வருபவன் எல்லாரையும் கண்டுபிடிக்க சில சமயங்களில் ஏழு எட்டு மணி நேரங்கள் ஆகும்.

விளையாட்டுகள் எல்லாவற்றுக்குமே சீசன் உண்டு. ஒரு விளையாட்டு அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வரை ஓடும். பிறகு வேறொரு விளையாட்டு ஆரம்பித்து விடும். பெரும்பாலும் முழுப்பரிட்சை விடுமுறையில் பம்பர சீசனில் தான் எல்லாம் ஆரம்பிக்கும். அபிட்டு, அங்கோஷு, சாட்டை மேல சாட்ட வச்சு சொடக்சைன் என்பதான சத்தங்கள் தெருவெங்கும் நிரம்பி வழியும். பம்பரத்தைப் பொறுத்தவரை ஆக்கர்பார்தான் சரியான ஆட்டம். பத்து ரவுண்டு வரை உருட்டி இறுதியாகச் சிக்கிய பம்பரத்தை சாக்கடையில் ஊறப்போட்டு கல்லைத் தூக்கிப் போட்டு உடைப்பதில் இருக்கும் சுகமே அலாதி.

பம்பரம் முடிந்து அடுத்ததாக கோலிகுண்டு சீசன் தொடங்கும். அதன் பின்பாக தீப்பெட்டி அட்டை, சிகரெட் அட்டை, லாட்டரி சீட்டு என்று விதம் விதமான ஆட்ட சீசன்கள் வந்தப்டியே இருக்கும். தெருதெருவாக சுற்றி ஒரு குப்பைத் தொட்டி விடாமல் பொறுக்கி தீப்பெட்டி அட்டைகளும் சிகரெட் அட்டைகளும் சேகரிப்பதில் நண்பர்களுக்கு இடையே அடிதடி கூட நடக்கும். அதிலும் வெளிநாட்டு சிகரட் அட்டைகளுக்குக் கூடுதல் மவுசு வேறு. அதன் மதிப்பு மட்டும் கோடிகளில் இருக்கும். உள்ளூர் சிசர்ஸின் மதிப்பு வெறும் ஐம்பதுதான். சேகரித்த அட்டைகளைக் கொண்டு சில்லாக்கில் செதுக்கி ஆடுவது, பூவா தலையா ஆடுவது என்று ஆட்டங்கள் களைகட்டும். நடுவே உலக்கோப்பை ஃபுட்பால் அட்டை, கிரிக்கெட் அட்டை, ரெஸ்லிங் அட்டை என்று வந்தால் அதற்கெனத் தனி சீசன்.

த்தனை விளையாட்டுகள். இதை எல்லாம் நாம் ஆடி இருக்கிறோம் இப்படி ஒரு வாழ்க்கை வந்து இருக்கிறோம் என்று நினைக்கும்போதே உற்சாகமாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது. அதே நேரத்தில் இன்றைக்குத் தெருக்களில் இவற்றில் எதையும் பார்க்க முடியவில்லை என்பதும் வருத்தமாக இருக்கிறது. ஹேண்ட் கிரிக்கெட்டிலும் வீடியோ கேம்சிலும் உட்கார்ந்து இருக்கும் இந்தக் காலப் பிள்ளைகளுக்கு மொட்டை மாடி நிலவில் அமர்ந்து காலாட்டுமணி கையாட்டுமணி ஒத்த முட்டையத் தின்னுட்டு ஊள முட்டையக் கொண்டுவா என்பதெல்லாம் வெறும் கதையாக மட்டுமே இருக்கும் என்று நினைக்கையில் பெருமூச்சு விடுவதைத் தாண்டி நாம் வேறென்ன செய்து விட முடியும்?

10 comments:

CS. Mohan Kumar said...

அருமைய்யா ! சின்ன வயசில் தெரு தெருவா விளையாடியதும் வேடிக்கை பார்த்ததும் நியாபகம் வந்துடுச்சு.

சனிகிழமை பத்திரிக்கையோட சென்னை வர்ரீங்கலாமே ! மதுரை ஸ்பெஷல் அல்வா பாக்கெட் ஒன்னு வாங்கிட்டு வரவும். உங்க திருமண செய்தியோடு நண்பர்கள் அந்த இனிப்பின் ஒரு வாயும் சாப்பிடுவோம்

Ravichandran Somu said...

அருமை....

A D Vishnu Prasad said...

அடடா அருமை . நானும் இந்த மாதிரி சீசன் விளையாட்டுகளை திருபரங்குன்றத்தில் இருக்கும்போது விளையாடினேன் . இன்று காலை நொண்டி என்ற விளையாட்டை சிறுமிகள் ஆடி கொண்டிருந்தார்கள் . கொஞ்ச நேரம் பாத்துட்டு வேலைக்கு கெளம்பிட்டேன் (பழைய நினைவுகளோடு).

சிவக்குமரன் said...

அருமை நண்பா!

Ponchandar said...

சிகரெட் அட்டையில “பாஸிங் ஸோ” அட்டைதான் மதிப்பே இல்லாதது. இப்போ அந்த சிகரெட்-டே இல்லை. பால்ய காலத்துக்கு சிறிது நேரம் சென்று வந்தேன்....

Unknown said...

நித்தியானந்தா மதுரைக்கு வந்து போனதுல இருந்து ஊரே பத்திக்கிட்டு எரியுது. உமக்கு கொசுவத்திச் சுருள் புகை கேட்கிறதா...வோய்!?

மதிகண்ணன் said...

அன்பு கார்த்திகைப் பாண்டியனுக்கு நன்றாக வந்திருக்கிறது. பருவகாலங்களுக்கேற்றபடி மாறும் விளையாட்டுகள், மாற்றம் மட்டுமே மாறாதது என்பதைச் சொன்னவை போலும். தங்கள் வார்த்தைகளின்படி கரப்பான்பூச்சிகளைப்போல் காலந்தோறும் மாறாத விளையாட்டாக கிரிக்கெட் இருந்து வருகிறது. என்ன செய்வது? நாமும் சொல்லிக் கொள்வோம் ‘எல்லாம் நன்மைக்கே’, இப்படிச் சொன்னால் நம்மை பழம் பஞ்சாங்கம் என்பார்கள். நவீனமாகச் சொல்வோம். 'All is Well' 'All is Well'. இந்தக் கட்டுரை வாசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இருந்தாலும் இணைப்பு http://maanudaviduthalai.blogspot.in/2012/04/blog-post.html

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
அது ஒரு கனாக்காலம்.
உங்கள் எழுத்து நடை அருமை.
இந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.

சித்திரவீதிக்காரன் said...

கோலிகுண்டு, பம்பரம், சில்லாக்கு, பாண்டி, ஒத்தையா ரெட்டையா, சொட்டாங்கல்லு, பூப்பறிக்க வருகிறோம், காலாட்டுமணி கையாட்டுமணி, எறிபந்து, கொலகொலயா முந்திரிக்கா, பச்சக்குதிர தாண்றது, ஓடிப்புடிச்சு ஒளிஞ்சுபுடிச்சு, தாயம், பரமபதம், ஆடுபுலியாட்டம், பல்லாங்குழி, கல்லா மண்ணா, டியாண்டோ டியாண்டோ, திருடன் போலீஸ், தீப்பெட்டிப்படம் சேக்கிறது, சடுகுடு, கிட்டி (கில்லி), எருவாட்டி, கண்ணாமூச்சி, கிறுகிறுவானம், ரயில்வண்டி, நொங்குவண்டி டயர்வண்டி ஓட்றது, குச்சி விளையாட்டு (சிலேட்டு குச்சிதான்), குலுக்குச்சீட்டு என இளமை பூராம் விளையாடித்திரிந்ததால் இன்று வரை விளையாட்டாய் இருக்கிறது வாழ்க்கை.

சினிமா எல்லா நாட்டுப்புறக்கலைகளுயும் அழித்து வருகிறது. கிரிக்கெட் எல்லாவிளையாட்டுக்களையும் அழித்து வருகிறது. மேலும் கிரிக்கெட் விளையாட்டே அல்ல. அது வியாபாரம். இந்தக் கிரிக்கெட் சனியன் ஒழிந்தால்தான் நல்லது நடக்கும். நம்புவோம்.

நல்ல பதிவு. பகிர்விற்கு நன்றி.

M.G.ரவிக்குமார்™..., said...

இதயம் நிறைந்த திருமண வாழ்த்துகள் நண்பா!