May 3, 2016

அம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே

சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், அல்லது அவரது நினைவாக நடைபெறும் கூட்டங்களின் கன பரிமாணம் ஆகிய அனைத்தும் மகத்துவத்தை அளவிடும் அலகுகள் என்றால், பாபாசாகேப் அம்பேத்கரோடு போட்டியிடும்படியான வேறு எந்தவொரு சரித்திர புருஷனும் இருக்க முடியாது. ஒவ்வொரு வருடமும் பிரார்த்தனைக்கூட்டங்கள் நடைபெறும்போதெல்லாம் புதிது புதிதான இடங்கள் அவரது நினைவுச்சின்னங்களின் பட்டியலில் இணைந்து கொள்கின்றன. அப்படியானதொரு அதிசயமாக அவர் இருக்கிறார், ஒரு காலகட்டத்திற்குப் பிறகு மக்களுக்கு இதை நம்புவதற்கு கடினமாகவும் இருக்கலாம், இத்தகைய மனிதர் – பூனைகளும் நாய்களும் அனுமதிக்கப்பட்டதொரு பொது நீராதாரத்தில் தண்ணீர் குடிக்க சிரமப்பட்டவர்– இந்த கிரகத்தில் எப்போதேனும் நடைபயின்றார் என்பது. சொர்க்கத்தில் இருக்கும் கடவுள்கள் கூட, ஒருவேளை அவர்கள் இருப்பார்களெனில், அவர் மீது பொறாமை கொள்ளக்கூடும். இந்த அதிசயத்திற்கு பின்னாலிருப்பது எது? அவர் தலித்துகளின் கடவுளாக இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆரம்பத்தில் அவர்களில் ஒரு பகுதியினருக்கு மட்டும், இப்போது, அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு. தனி மனிதனாகவும் தனித்த சிந்தனையோடும் அவர் அவர்களுக்கு செய்தவற்றுக்காக அவர்கள் நன்றியுடையவர்களாய் இருப்பது இயற்கைதான். ஆயினும் உண்மையில், இதனை மட்டுமே தனித்த மற்றும் ஒரே காரணமென்பதாய் நம்புவது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது. ஒரு புனிதபிம்பமாக அம்பேத்கரை கட்டமைப்பதிலும் முன்னிறுத்துவதிலும் வினையூக்கிகளாகச் செயல்படும் ஆளும் வர்க்கங்களின் பங்கு மிக முக்கியமானது, மேலும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் பலம் சேர்ப்பதும் கூட. அம்பேத்கரின் மீது உரிமை கோரும் சங்பரிவார்களின் சமீபத்தைய பிரஸ்தாபங்கள், அவற்றின் உள்ளார்ந்த அர்த்தங்களை தலித்துகள் புரிந்து கொள்ளும்படியாக, வெளிப்படையாக, ஒளிவுமறைவற்றே இருக்கின்றன.

புனிதபிம்பத்தின் உருவாக்கம்

அரசில்யல்ரீதியான இந்துவை பிரதிநித்துவப்படுத்திய காங்கிரஸ்தான் அம்பேத்கரின் பிரதான எதிரியாயிருந்தது. 1932 வட்ட மேசை மாநாடுகளின் போது தலித்துகளுக்கென தனித்த வாக்காளர் அடையாளங்களைப் பெறுவதற்கான அம்பேத்கரின் முயற்சிக்கெதிராக காந்தியின் முழுமூச்சான எதிர்ப்பையும், மேலும் தலித்துகளுக்கான எதிர்கால தனித்த அரசியல் அடையாளத்தை முற்றிலுமாய் அழித்தொழித்த பூனா ஒப்பந்தத்தில் அவரை பலவந்தமாக வற்புறுத்தி கையெழுத்திடச் செய்ததையும், நினைவுகூருங்கள். அதிகார மாற்றத்திற்குப் பிறகு, அம்பேத்கர் சட்டசபைக்குள் நுழைந்து விடக் கூடாதெனும் உள்நோக்கத்தோடு காங்கிரஸ் வெகு கவனமாகப் பார்த்துக்கொண்டது. ஆனால் விரைவில் அது எதிர்பாராதொரு அரசியல் குட்டிக்கரணம் போட்டது. நாட்டார் கதை பாணியிலான விளக்கங்களைப் போலிருந்தாலும், உள்ளே நுழைந்திட எந்த வழியும் இல்லாத நிலையில் அம்பேத்கர் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் பிறகு அதன் வரைவுக்குழுவுக்கான தலைவராக அவரைத் தெரிவு செய்ததும் காந்தியின் தந்திரம் நிரம்பிய நுண்ணறிவே. அரசியலமைப்பில் தலித்துகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மாற்றாக இராஜதந்திரத்தோடு அம்பேத்கர் நடந்து கொண்டாலும், புதிதாய் உருவான இந்த உறவு வெகுகாலம் நீடிக்கவில்லை. இந்து சட்ட மசோதா மீதான எதிர்ப்பு குறித்த பிரச்சினையில் நேரு மந்திரிசபையில் இருந்து அம்பேத்கர் பதவி விலக நேர்ந்தது. பிற்பாடு, தானொரு வாடகைக்குதிரையாகப் பயன்படுத்தப்பட்டதாகச் சொல்லி அம்பேத்கர் அரசியலமைப்பை நிராகரிக்கவும் கூட செய்தார் – அரசியலமைப்பால் யாருக்கும் எந்தப் பயனுமில்லை, மேலும் அதனை எரிக்கும் முதல் நபராக அவரே இருக்கக்கூடும். அவர் காங்கிரஸை தலித்துகள் தங்களுடைய ஆபத்தான காலங்களில் மட்டும் நுழையும்படியான ‘எரியும் வீடு’ என்றழைத்தார். ஆனால், ‘அம்பேத்காரிசத்தைக்’ காப்பதற்காக நூற்றுக்கணக்கான ‘அம்பேத்காரிஸ்டுகள்’ காங்கிரசில் இணைவதை, அதனால் தடுக்க முடியவில்லை.

காங்கிரஸ் வெகு திறமையாக நில சீர்திருத்தங்கள் மற்றும் பசுமைப் புரட்சி போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களின் வழியே கிராமப்புறப் பகுதிகளில் அடர்த்தியான மக்கள்தொகையினைக் கொண்டிருந்த சூத்திரர்களின் இனக்குழுக்களிலிருந்து பணம் நிரம்பிய விவசாயிகள் என்றொரு பிரிவை வார்த்தெடுத்தது. பெரும்பாலும் இந்தப் பிரிவு அவர்களின் கூட்டாளியாக இருந்தபோதும், பிராந்திய கட்சிகளை வளைத்தும் மெதுமெதுவாக உள்ளூர் மற்றும் மாநில அளவிலான அதிகார மையங்களை ஆக்கிரமித்தும் அது தனக்கான தனித்த அரசியல் லட்சியத்தை வளர்த்துக்கொண்டது. தேர்தல் அரசியல் மலிவடைய, முறையே சமூக நீதி மற்றும் மத சீரமைப்பு என்கிற பெயரால் அரசியலமைப்பில் வெகு திறமையாக பாதுகாக்கப்பட்ட சாதி மற்றும் இனக்குழு வடிவிலான ஓட்டு வங்கிகள் முன்னிலைக்கு வந்தன. இங்கிருந்து தான் வெகு கவனமாக, இயல்பாகவே, முதலாவதாக காங்கிரசிடமிருந்தே, அனைவரையும் ஒன்றிணைந்து தேர்ந்தெடுப்பதற்கான ஆளும் கட்சிகளின் இயக்கம் தொடங்கியது, அம்பேத்கரின் அடிப்படை கவலைகள் மூடிமறைக்கப்பட்டன, வெகு நேர்த்தியான முறையில் ஒரு தேசியவாதியாக, பாதி காங்கிரஸ்காரராக, அரசியல் நிபுணர் மற்றும் அரசியலமைப்பை உருவாக்கியவராக, அவர் உருவகப்படுத்தப்பட்டார். இந்த பிரச்சாரம் பல பறவைகளை ஒரே கல்லால் அடித்து வீழ்த்தியது: அம்பேத்காரிய மக்களின் மனதை வென்றது, காங்கிரஸை நோக்கிய சந்தர்ப்பவாத தலித் தலைவர்களின் வெளியேற்றத்தை துரிதப்படுத்தியது, தலித் இயக்கத்தை நிலைகுலைய வைத்து அடையாள அரசியலைத் தழுவும்படி செய்தது, மேலும், அம்பேத்கரை மெல்ல தீவிரமிழக்க வைத்தது. மெதுவாக, தங்களுக்கேயான தனித்த அம்பேத்கரின் புனிதபிம்பத்தை முன்னிறுத்த மற்ற கட்சிகளும் போட்டிக்குள் நுழைய வேண்டி வந்தது.

தங்கள் மீதான ஈர்ப்பை அதிகரிக்கவும் கருத்துருவங்களைப் பரப்பவும் சங்பரிவார் நுட்பமான மற்றும் புதிதாய் வெளிக்கிளம்பும் பிரச்சினைகளை கையாளக்கூடிய இரண்டாம் தலைமுறை இயக்கங்களைத் தொடங்கியது. தலித்துகளைத் தங்கள் கைப்பிடிக்குள் நைச்சியமாய்க் கொண்டு வர ‘சாமாஜிக் சமரசதா மன்ச்’ (சமூக ஒருங்கிணைப்புக்கான மேடை) தொடங்கப்பட்டது. 1925 இல்– தலித் மற்றும் சமூக இயக்கங்கள் தொடங்கப்பட்ட அதே காலகட்டத்தில்– தொடங்கப்பட்ட ஆர்எஸ்எஸ்- ஆரம்பத்தில் அதன் கற்பனையான இந்து பெரும்பான்மையினரை நம்பி இருந்தது, ஆனால் காங்கிரஸ் எதிர்ப்பலையை பயன்படுத்தி 1977 லோக்சபா தேர்தலில் 94 இடங்களைக் கைப்பற்றும் வரை சமூகரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் யாதொரு அடையாளத்தையும் ஏற்படுத்தவியலாது தோல்வியுற்றது.

அம்பேத்கரை ‘காவிமயமாக்குதல்’

தொடக்கத்தில், அம்பேத்கரின் இந்து எதிர்ப்பால் அவமதிக்கப்பட்டு அது மறைமுகமாக அவரை இகழ்ந்தது, மேலும், பிற்காலத்தில் பால் தாக்கரே பகிரங்கமாக ஒப்புக்கொண்டதைப் போல, அம்பேத்காரியரல்லாத தலித்துகளைச் சார்ந்திருந்தது. என்றாலும், அரசியல் அதிகாரமென்னும் மாமிசத்தின் ருசியை அறிந்திருந்ததால், அனைத்து இந்திய தலித்துகளுக்கானதொரு பிம்பமாய் வளர்ந்து விட்டிருந்த அம்பேத்கரை தன்னால் நிராகரிக்க முடியாதென்பதை அது புரிந்து கொண்டது. ஒன்றோடு ஒன்று சம்பந்தமில்லாத சிதறலான அவரது கூற்றுகளைத் திரட்டி அவற்றோடு கோயபெல்ஸ்தனமான பொய்களைக் கலந்து, அவரை காவிமயமாக்க திட்டம் தீட்டியது. அம்பேத்கர் மீதான காவி நிற தீற்றல்களில் முதலாவது இணையற்றதை ஒப்பிடுவதாக இருந்தது, அம்பேத்கரை ஹெட்கேவரோடு, ஏதோ, மெட்ரிகுலேசனுக்குப் பின்பாக வரும் டிப்ளமோவைக் கொண்டிருந்த அரசு அனுமதி பெற்ற மருத்துவ பயிற்சியாளரான ஹெட்கேவரும், உலகப் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்களிலிருந்து இரண்டு முனைவர் பட்டங்களைப் பெற்றிருந்த அம்பேத்கரும், ஒப்பிடத்தக்கவர்கள் என்பதைப் போல, அவர்களை “இரு மருத்துவர்கள்” என்றழைத்தார்கள். உண்மையாகவே அவர்கள் இருவருக்கும் மத்தியில் என்னதான் ஒற்றுமை இருக்கக்கூடும்? 
    
அம்பேத்கரின் நேரடித்தன்மை எண்ணற்ற முரண்பாடுகளை விட்டுச் சென்றாலும், யாராலும் அவரது வாழ்வின் மையப்பொருளை தவறவிட முடியாது, அவர் தனது சொந்த வார்த்தைகளில் சொன்னதைப்போல, ஒருங்கிணைப்பை வலியுறுத்தக்கூடிய ‘விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம்’ ஆகியவற்றின் அடிப்படையிலான மாதிரி சமுதாயத்தை உருவாக்குவது. சாதிகளை ஒழிப்பதையும் பொதுவுடைமையையும் (வர்க்கங்களை ஒழித்தல்) அவர் அதற்கான முன் நிபந்தனைகளாகப் பார்த்தார்; குடியரசு அவற்றின் மிக முக்கியமான அங்கம் மற்றும் பௌத்தம் அதனை நெறிப்படுத்தும் கொள்கை.

ஆர்எஸ்எஸ்-சின் உலகப்பார்வை என்பது இதற்கு எல்லா விதத்திலும் நேர் எதிரானது. காவிநிற அம்பேத்கர் ஒரு தேசியவாதி; சாதி குறித்த பிரக்ஞையின் காரணமாக இந்துக்களால் ஒரு தேசத்தை உருவாக்க முடியாது என உண்மையான அம்பேத்கர் வாதிட்டார், மேலும் மிகக்குறிப்பாக ‘இந்து ராஜ்ஜியம்’ என்பது பெரும் விபரீதம் என்று எச்சரிக்கவும் செய்தார். தானொரு இந்துவாக மரணிக்க மாட்டேன் என்கிற அவருடைய சத்தியத்தையும் மீறி ஆர்எஸ்எஸ்ஸின் அம்பேத்கர் ஒரு மகத்தான இந்து. பௌத்தத்தை, இந்துத்துவத்தைக் கைவிட்ட பின்பாக அம்பேத்கர் அரவணைத்துக் கொண்டதை, அது இந்துத்துவத்தின் ஒரு அங்கமாகவே முன்வைத்தது, இந்துத்துவத்திற்கு எதிரான சிரமண புரட்சியையும், அதற்கு எதிராக பின்னது நிகழ்த்திய, பௌத்தத்தை அது தோன்றிய நிலத்திலிருந்து முற்றிலுமாய் துடைத்தெறிந்த, குருதியில் தோய்ந்த எதிர் புரட்சியையும் – பௌத்தம் அடையாளப்படுத்திய மொத்த வரலாற்றையும் இதன் மூலமாக ஒதுக்கித் தள்ளியது.

அம்பேதர் சமஸ்கிருதம் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என விரும்பினார், தேசியக்கொடியாக காவிநிறக்கொடி, மேலும் ஆர்எஸ்எஸ்ஸை அதன் நல்ல முயற்சிகளுக்காகப் பாராட்டினார், மற்றும் ‘கர் வாப்ஸி’-ஐ’ (தாய் மதம் திரும்புதல்) ஆதரித்தார் என்பது போன்ற அறைகூவல்கள் அம்பேத்கரை விஹெச்பி குரங்குகளின் தரத்துக்கு சிறுமைப்படுத்த முயல்கின்றன, அவை குறித்து ஏதும் கருத்து சொல்லக்கூட தகுதியற்றவை. அவருடைய ‘பாகிஸ்தான் குறித்த சிந்தனைகளிலிருந்து’ தொடர்பற்ற வாக்கியங்களை எடுத்துக்காட்டி சங்பரிவார் அறிவுஜீவிகள் அம்பேத்கர் முஸ்லிம்களுக்கு எதிரானவராக இருந்தார் என்று சொல்லி வருகிறார்கள். வாக்குவாதம் செய்வதான நடையில் எழுதப்பட்ட புத்தகம் இது, இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இருவருக்குமான வழக்கறிஞரின் உடைகளை அம்பேத்கர் அணிகிறார். ஒருவர் வெகு சிரத்தையோடு வாசிக்காவிட்டால் அதன் முக்கியமான பல தர்க்கங்களை அவர் தவற விடக்கூடும். முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர் – கட்டுக்கதைகளும் உண்மைகளும் என்கிற எனது புத்தகத்தில், 2003-ல் நான் இந்தப் பொய்யை உடைத்தெறிந்திருக்கிறேன். ஆனால் மீண்டும், அவருடைய பரந்த குணத்தையும் மாற்றத்துக்கான அவருடைய தேர்வு இஸ்லாமாக இருக்கலாம் (முக்தி கோன் பதே 1936) எனச் சொல்லும்படியாக முஸ்லிம் சமூகத்தை அவர் பாராட்டியதாக கிடைக்கக்கூடிய எண்ணற்ற தரவுகளைக் கொண்டும் பார்க்கும்போது, அவரை ஒரு குறுகிய சிந்தனையாளராக, முஸ்லிம் எதிர்ப்பாளராக வரையறுக்கவியலாது. ஆர்எஸ்எஸ் இதனைப் புரிந்து கொள்வது நல்லது, சில தலித் அடிமைகளை அது தன்னுடைய மேடைகளில் தோன்றச் செய்யலாம், ஆனால் ஒருபோதும் அம்பேத்கரை ஒரு வகுப்புவாதியாக நிறுவிட முடியாது.

நவீன-தாராளமய நிர்ப்பந்தம்

பலதரப்பட்ட அரசியல் உற்பத்தியாளர்களால் இந்தியாவின் தேர்தல் சந்தையில் கையளிக்கப்பட்ட, தங்களுக்குள் போட்டியிடும் அம்பேத்கரின் புனிதபிம்பங்கள், உண்மையான அம்பேத்கரை முற்றிலுமாக மூடிமறைத்து தலித் விடுதலைக்கான சக்திவாய்ந்த ஆயுதத்தை அழித்து விட்டன. வெவ்வேறு நிறபேதங்களைக் கொண்டிருந்தாலும், இந்த புனிதபிம்பங்கள் எல்லாமே, அம்பேத்கரின் மீது நவீன-தாராளமயம் எனும் நிறத்தைப் பூசுகின்றன. ஒரு அம்பேத்கர் பிம்பம் அரசின் அதிர்ஷ்டவுருவாக, 1947இல் இருந்து 1980கள் வரை சரியாக வேலை பார்த்து வந்த காந்தியை, கிட்டத்தட்ட பதவியிழக்கச் செய்தது. ஆட்சி அமைப்பொழுங்கை நிர்வகிப்பதில், மக்களுக்கெதிரான அரசின் தந்திரங்கள், அவர்களின் நன்மைக்கானதாய்ச் சொல்லப்பட்ட பொய்த்தோற்றங்கள், மற்றும் அதன் இந்துத்துவ ரீதியிலான வளர்ச்சி ஆகியவற்றை மறைக்க, ஆட்சியாளர்களுக்கு, காந்தி மிகப்பொருத்தமானவராக இருந்தார். ஆனால் முதலாளித்துவ பிரச்சினைகள் அதிகரிக்க அரசு தன் பிரகாசத்தை இழக்கத் தொடங்கியது, ஆட்சியாளர்களை நவீன தாராளமய கொள்கைகளை நோக்கி உந்தித் தள்ளியது. அதிதீவிர முன்னேற்றம், நவீனமயமாக்கல், வெளிப்படையான போட்டி, சந்தைமயமாக்கல் போன்ற பசப்புரைகள், குறிப்பாக அவற்றால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் அடித்தட்டு மக்களிடம் தாராளமயமாக்கப்பட்ட சந்தைகளை ஏற்றுக்கொள்வதால் ஒன்றுமற்றவனாய் இருப்பதிலிருந்து பணக்காரனாய் மாறுவதற்கான சாத்தியங்களை வலியுறுத்த, மக்களை நம்ப வைக்கும் புதியதொரு பிம்பத்துக்கான தேவையை உருவாக்கின. மற்ற எல்லாரைக் காட்டிலும் அம்பேத்கர் இதற்கு மிகச்சரியாகப் பொருந்தி வந்தார். புதிதாய்ப் பிறந்த சவலைப்பிள்ளையான இந்தியாவுக்கென ஒரு அரசியலமைப்பை வடிவமைக்க வேண்டிய காலத்தில் காந்தி உணர்ந்த அதே தந்திரமான தேவை போன்றதுதான் இது. நவீன-தாராளமயத்தின் சமூக டார்வினிச பண்புகள் மேலதிகார ஆர்எஸ்எஸ்ஸின் கருத்தாக்கங்களோடு ஒரு குறிப்பிட்ட ஒத்திசைவைக் கொண்டிருந்தன, இதுதான் பிஜேபியை அரசியல் அதிகாரத்தின் வானளாவிய எல்லைக்கு உயர்த்தியது.

தலித்துகளைக் கவர எல்லா கட்சிகளுமே அம்பேத்கர் புனிதபிம்பத்தை பயன்படுத்தினாலும், 1990கள் தொடங்கி, பிஜேபியோடு இணைந்து ஆர்எஸ்எஸ் தான் மிக அதிகமான சுயநல நோக்கில் அதனை பயன்படுத்திக் கொண்டுள்ளது, காங்கிரஸைக் காட்டிலும் அதிகமான தனித் தொகுதிகளை வசப்படுத்தியுள்ளது. நவீன-தாராளமய அரசுக்கு தலித்துகளிடையேயிருந்து கதைப்பாடகர்கள் மிக அத்தியாவசியமாகத் தேவைப்பட்டார்கள், அவர்களும் அதற்கு கிட்டினார்கள். தங்களது நாயகர்களால் வழிநடத்தப்பட்ட குறிப்பானதொரு தலித் நடுத்தர வர்க்கம், எப்படி நவீன-தாராளமயம் அவர்களுக்குப் பயனுள்ளதாய் இருக்கும் என்பதாக தலித்துகளை நம்ப வைக்க ஆரம்ப காலகட்டங்களில் வெகு தீவிரமாக முயன்றார்கள், எவ்வாறு அம்பேத்கர் ஒரு நவீன-தாராளமயவாதி என்பதையும் எப்படி இந்தக் கொள்கைகள் விளைவித்த தலித் மத்திய வர்க்கத்தின் ‘புரட்சியால்’ தலித்துகளின் அபரிதமான முன்னேற்றங்கள் நிகழ்ந்தன என்பது குறித்தும் அவர்கள் மீண்டும் மீண்டும் பேசினார்கள். இந்த நடுத்தர வர்க்கம் பிஜேபியோடு பிரத்தியேகமானதொரு உறவைக் காண்கிறது, ஆகவே இதன் காரணமாகத்தான் பெரும்பாலான தலித் தலைவர்கள் இன்று பிஜேபி அணியில் இருக்கிறார்கள். (மேலதிகத் தகவல்களுக்கு எனது ‘மூன்று தலித் ராமர்கள் பிஜேபிக்காக அனுமார் வேடம் தரிக்கிறார்கள்’ என்கிற கட்டுரையை வாசிக்கலாம், EPW, 12 ஏப்ரல் 2014). இந்த வருடம், அசாதாரணமான திறனோடு, அம்பேத்கர் மாணவனாக அவற்றிலொரு விடுதியில் தங்கியிருந்தார் என்பதற்காக மட்டுமே, லண்டனில் இருக்கும் சாதாரணமானதொரு கட்டடத்தை 44 கோடிகளுக்கு பிஜேபி அரசாங்கம் விலைக்கு வாங்கியுள்ளது; மேலும் மும்பையில் மிகப்பெரிய அம்பேத்கர் நினைவிடம் கட்டுவதற்காக இந்து ஆலை நிலத்தை வழங்குவதிலிருந்த தடைகளை அகற்றியதோடு அதற்கு சமமான மிகப்பெரிய அம்பேத்கர் சர்வதேச நிலையத்தை டெல்லியில் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.  

இதுபோன்ற தந்திரமான நடவடிக்கைகள் அனைத்தும் தலித்துகளை மயக்குகின்றன, அவர்களில் 90% இன்னும் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் எப்படி இருந்தார்களோ அது போன்றதொரு வாழ்க்கைத் தரத்தில்தான் இப்போதும் வாழ்ந்து வருகிறார்கள், அல்லது இன்னும் மோசமாக, அப்போது அவர்களுக்கு நம்பிக்கைகள் இருந்தன ஆனால் இப்போது அவர்களிடம் எதுவுமில்லை. அம்பேத்கரின் ‘சமத்துவம்(சமதா)’ என்பது ‘சமூக நல்லிணக்கம் (சமரசதா)’ என்றாகாது அல்லது அம்பேத்கரின் உலகப்பார்வை என்பது அவர்களை ஒழித்துக் கட்ட முயலும் நவீன-தாராளமயமாகிய சமூக டார்வினிசம் கிடையாது என்பதையும், அவர்கள் அறியமாட்டார்கள். ஒரே ஒரு பதிற்றாண்டின் நிதிநிலை அறிக்கைகளில் அவர்களுக்கான ஒதுக்கீட்டிலிருந்து அரசாங்கத்தால் கையாடப்பட்ட ஐந்து லட்சம் கோடிக்கும் அதிகமான தொகையோடு ஒப்பிடும்போது அம்பேத்கர் நினைவிடங்களின் மீதான சில நூறு கோடிகள் என்பது பிச்சைக்காசு என்பது கூட அவர்களுக்குப் புரிவதில்லை.

ஆனந்த் தெல்தும்ப்தே


எழுத்தாளர், அரசியல் விமர்சகர் மற்றும் மனித உரிமை ஆர்வலர். இடதுசாரி மற்றும் தலித் இயக்கங்கள் சார்ந்து நிறைய நூல்களை எழுதியுள்ளார். சமகாலப் பிரச்சினைகள் குறித்து தொடர்ச்சியாக Outlook Inida, Tehelka, Mainstream, Seminar போன்ற பல பத்திரிக்கைகளில் எழுதி வருகிறார். இந்தக் கட்டுரை Economic and Political weekly-ல் அவர் எழுதும் பத்தியான ‘Margin Speak’-ல் 2.5.2015 அன்று வெளியானது.

(கொம்பு சிற்றிதழில் வெளியான மொழிபெயர்ப்பு கட்டுரை)

5 comments:

gourav said...

very nice ,keep on sharing
Happy pongal
Bulk SMS Service Provider in Kolkata
Bulk SMS Company in Kolkata
Bulk SMS Company

rson9841 said...

Thank you for sharing this information. It was useful and interesting. I am looking for a dell showroom in Chennai to buy a brand new dell Inspiron laptop.

Aditi Gupta said...

Excellent post gained so much of information, Keep posting like this. Agra Same Day Tour Package

Jon Hendo said...

you need to make the right decision in choosing the best suitable event technology partner for your Hybrid events. event marketing and thank you for your email

தருமி said...

2016. என்ன ஆச்சு அதன் பிறகு. “மறன்னு போயி..?”