April 7, 2010

தமிழ்ப்படம் - ஒண்ணு இல்ல.. பத்து..!!!

"அங்காடித் தெரு" பற்றிய என்னுடைய திரைப்பார்வையில் இப்படி எழுதி இருந்தேன் - "என் வாழ்வில் நான் பார்த்த மிகச் சிறந்த பத்து தமிழ்ப் படங்களின் வரிசையில் கண்டிப்பாக அங்காடித் தெருவும் இருக்கும்." இதைப் படித்தவுடன் நம்ம தருமி ஐயாவுக்கு ஒரு சின்ன ஆசை. எல்லோரும் தங்களுக்கு மிகவும் பிடித்த பத்து படங்களைப் பற்றி எழுதினால் என்ன என்பதுதான் அது. அவரே முதல் ஆளாக எழுதியும் விட்டார். சங்கிலிப்பதிவாக எழுதும்படி என்னை அழைத்ததற்கு நன்றி அய்யா.

தமிழில் வந்த சிறந்த பத்து படங்கள் என்றால் அது சிரமம். எனவே ரொம்பவெல்லாம் யோசிக்காமல் என் மனதுக்கு தோன்றிய, நான் ரசித்த படங்களைப் பற்றி எழுதுகிறேன்.

முள்ளும் மலரும்

சூப்பர் ஸ்டாரின் ஆகச் சிறந்த படம். ரஜினியின் தேர்ந்த நடிப்பு இந்தப் படத்தைப் போல வேறு எந்தப் படத்திலும் வெளிப்பட்டு இருக்கிறதா என்று தெரியவில்லை. மகேந்திரனின் யதார்த்தமான இயக்கம், இளையராஜாவின் அற்புதமான இசை என்று படம் பட்டையைக் கிளப்பும். குறிப்பாக கிளைமாக்ஸ். "வள்ளி.. இவனுங்க எல்லாம் யாரோ ஏதோ.. ஆனா நீ.. என் கூடப் பொறந்தவ.. என் தங்கச்சி.. நீ கூடவா என்ன விட்டுட்டுப் போற.." திமிரோடு பேசும் ரஜினியும், ஷோபாவின் கிளாஸ் நடிப்பும், "டுங் டக் டுங் டக் டுங்குடுங்கு டுங் டாக்" என்று இன்னதென்று சொல்ல முடியாத ஒரு வாத்தியத்தில் இசைக்கும் ராஜாவின் பின்னணி இசையும்.. சொல்லும்போதே புல்லரிக்கிறது.

முதல் மரியாதை

மத்திம வயதில் தோன்றும் காதலை கிராமத்துப் பின்னணியில் பாரதிராஜா சொன்ன விதம் ரொம்பவே பிடித்திருந்தது. குறிப்பாக சிவாஜியின் நடிப்பு. கல்லைத் தூக்கும் காட்சி, மீன் சாப்பிடும் காட்சி என்று சொல்லிக் கொண்டே போகலாம். படத்தில் பிடித்த இன்னொரு விஷயம் - வடிவுக்கரசி. இயல்பாக செய்திருப்பார். மறக்க நினைக்கும் ஒரே காட்சி - டேய்ய்ய்ய்ய் என்று கத்திக்கொண்டே ராதா சத்யராஜைக் கொல்லுவது. நிறைய சினிமாத்தனங்கள் இருந்தாலும் உள்ளத்தைத் தொட்ட படம்.

முகவரி

அஜித்துக்கு என்னை ரசிகனாக்கிய படம். இசையமைப்பாளர் ஆக விரும்பும் ஒருவனுடைய வாழ்க்கையை அழகாகப் படமாக்கி இருப்பார்கள். ரகுவரன், விஸ்வநாத், சித்தாரா, ப்ரீத்தா என்று அஜித்தின் குடும்பமும் அவர்களின் தியாகங்களும் நெஞ்சைத் தொடும். கிளைமாக்ஸ் நிதர்சனம். படத்தில் மனதில் நிற்கும் காட்சி - குடும்பத்தோடு வானவில் பார்க்கும் காட்சி.

பூவே உனக்காக

அப்பா தயாரிக்கும் சீன் படங்களில் மட்டும் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த விஜயை புதிய பாதைக்கு திருப்பிய விக்கிரமனின் படம். தமிழில் வெளிவந்த பல காதல் படங்களுக்கும் முன்னோடி. எக்கச்சக்கமான கிளேஷக்கள், மொக்கை நகைச்சுவை என்பதையும் மீறி நிறைவான படம். கிளைமாக்சும், காதல் பற்றிய வசனங்களும்.. டாப் கிளாஸ்.

உள்ளம் கொள்ளை போகுதே

சுந்தர்.சி இயக்கத்தில் பிரபுதேவா, கார்த்தி, அஞ்சலா நடித்த அருமையான காதல் படம். (இந்தப்படம் லிஸ்டில் இருப்பதில் ஒரு சூது இருக்கிறது..) கார்த்தி வந்து போகும் கொஞ்ச நேரத்தில் பட்டாசு கிளப்பி இருப்பார். தான் ஒரு நல்ல நடிகர் என்பதை பிரபுதேவா நிரூபித்த படம். கார்த்திக்ராஜா இசையில் எல்லாப் பாட்டுமே நன்றாக இருக்கும். ஆனாலும் படம் ஓடவில்லை...:-(((((

சேது

இப்படி ஒரு படம் எடுக்க முடியுமா என்று என்னை அதிர்ச்சிக்கு ஆளாக்கிய படம். பொருத்தமான நடிகர்கள், திகைக்க வைக்கும் திரைக்கதை, கண்கள் கலங்கும் கிளைமாக்ஸ் என பாலா தன்னை அறிமுகம் செய்து கொண்ட படம். ராஜாவின் பின்னணி இசைதான் இந்தப் படத்திலும் ஹைலைட். எல்லோருக்கும் விக்ரம் காதலை சொல்லும் காட்சிதான் படத்தில் பிடித்ததாக சொல்வார்கள். ஆனால் அதைவிட.. ஸ்ரீமன் விக்ரமிடம் பேசும் காட்சி எனக்கு ரொம்பப் பிடிக்கும். "அவங்களுக்கு நம்மள விட்டா யாருடா இருக்கா? நாம பிரண்ட்ஸ்டா.. இத்தனை வருஷமா நம்ம காலையே சுத்திக்கிட்டு இருக்கவங்க.." அட்டகாசம்.

அன்பே சிவம்

தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர் கமல் என்பதை யாராலும் மறுக்க முடியாது. படம் வெளிவரும்வரை கமலின் மேக்கப் பற்றி யாருக்குமே தெரியாது. அந்த தைரியம்தான் கமல். முதல் தடவை பார்த்தபோது அதிர்ந்து போனேன். தான் ரத்தம் தந்து காப்பாற்றிய சிறுவன் வழியிலேயே இறந்து போக மாதவன் ரோட்டில் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பார். அவர் அருகிலேயே கமல் உட்கார்ந்து இருப்பார். அப்போது கேமிரா கமலின் முகத்துக்கு பக்கவாட்டில் இருக்கும். பேசுவதில் சிரமம் காரணமாக அவருடைய கழுத்து நரம்புகள் எல்லாம் புடைத்துக் கொள்ளுவதை காட்டுவார்கள். அதன் பின்பு கமழும் மாதவனும் பேசும் வசனங்கள்.. மதன் பின்னி இருப்பார். அதே போல கிளைமாக்சும் அருமை.

நந்தா

சேது தந்த நம்பிக்கையோடு, மிகுந்த எதிர்பார்ப்புகளோடு நந்தாவுக்கு போனேன். அதுவும் அஜித் நடிக்க மறுத்து பின்பு சூரியா நடித்த படம். ஆர்வமாக பார்க்க ஆரம்பித்தால் படம் என்னவோ போல் இருந்தது. ஒன்றுமே பிடிக்கவில்லை. நல்லவேளை தல தப்பிச்சுட்டருடா என்று சொல்லியவாறு வீட்டுக்கு வந்தேன். ஆனால் ஏதோ ஒன்று எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. ஒரு தாயே தன் மகனை கொல்வாளா.. என்ன படம் இது என வருவோர் போவோர் எல்லோரிடமும் புலம்பி கொண்டிருந்தபோது, நண்பன் கேட்டான். "என்னடா படம் நல்லா இல்லன்னு சொல்லிட்டு ரெண்டு நாளா அதப்பத்திய புலம்பிக்கிட்டு இருக்க? " அப்போதுதான் எனக்கே உரைத்தது. நந்தா என்னை எந்த அளவுக்கு பாதித்தது என்று நானே பிறகு தான் உணர்தேன். பின்பு தான் கோவை பல்லவி திரை அரங்கத்தில் ஒரே நாளில் மூன்று காட்சிகள் பார்த்தேன். செம படம்.

தவமாய் தவமிருந்து

சின்ன வயதில் அப்பாவின் அன்பு என்பது கிடைக்கப் பெறாத எனக்கு, ஒவ்வொரு முறை இந்தப் படம் பார்க்கும்போதும், ஏன் நமக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிட்டவில்லை என்று கண்ணீர் முட்டிக் கொண்டு வரும். சேரன் எடுத்திலேயே இதுதான் பெஸ்ட் என்பது என் கருத்து. தீபாவளிக்கு முந்தின தினம் போஸ்டர் ஒட்டும் ராஜ்கிரணை எண்ணும்போதே கண்கள் ஈரம் ஆகின்றன.

பொற்காலம்

சேரனின் இன்னுமொரு அருமையான படம். மெதுவாக நகரும் அழகான திரைக்கதை, நல்ல நடிப்பு.. "நீ உன் தங்கச்சிக்கு நல்ல அழகான பையனாத்தான் பார்த்த.. எங்கள மாதிரி கருப்பன் எல்லாம் உன் கண்ணுக்குத் தெரியல இல்ல?" வடிவேலு பேசும் இந்த வசனம் ரொம்பப் பிடிக்கும். ஒத்துக் கொள்ள முடியாத கிளைமாக்ஸ் என்றாலும்.. என்னை ரொம்பவே பாதித்த ஒன்று.

எழுதி முடித்து விட்டு பார்த்தால், எல்லாமே உணர்வுப்பூர்வமான படங்கள். பொழுதுபோக்கு என்பதையும் மீறி, எதோ ஒரு விஷயத்தை சொன்ன படங்கள். (ஹ்ம்ம்.. உண்மையிலேயே நமக்கு வயசு ஆகிடுச்சோ?) இன்னும் லிஸ்டில் நிறைய இருந்தாலும், பத்து படங்கள் மட்டுமே சொல்லி இருக்கிறேன். இந்த சங்கிலிதொடரில் இணைந்து கொள்ளும்படி நான் அழைக்க விரும்புவது..

டக்ளஸ் "ராஜூ"

ஜெட்லி

முகிலன்

(பின்னூட்டம் போடும் நண்பர்களும் தங்களுக்குப் பிடித்த படங்களின் பட்டியலை சொல்லலாமே..)

23 comments:

Balakumar Vijayaraman said...

//எழுதி முடித்து விட்டு பார்த்தால், எல்லாமே உணர்வுப்பூர்வமான படங்கள்//

நாங்க வாசிக்க ஆரம்பிச்சதுமே பார்த்துட்டோம் :)

பனித்துளி சங்கர் said...

////////தமிழில் வந்த சிறந்த பத்து படங்கள் என்றால் அது சிரமம். எனவே ரொம்பவெல்லாம் யோசிக்காமல் என் மனதுக்கு தோன்றிய, நான் ரசித்த படங்களைப் பற்றி எழுதுகிறேன்.///////////


உண்மைதான் நண்பரே . உங்களின் தேர்வுகள் அனைத்தும் அருமை . வாழ்த்துக்கள் !

Raju said...

:-)

தருமி said...

பின்னீட்டீங்க .....

...........வழக்கம்போல ..

அப்பாவி முரு said...

அனேகமாக வரிசை மாறி இருக்கலாம்...

லோகு said...

முள்ளும் மலரும் செம படம் அண்ணா.. வேலை போன பின் ‘கெட்ட பையன் சார் இவன்’னு ரஜினி சரத்பாபுவிடம் சொல்லுமிடம் அட்டகாசமா இருக்கும்..

’அன்பே சிவம்’ எனக்கும் ரொம்ப பிடிச்ச படம்.

’அப்பா தயாரிக்கும் சீன் படங்களில் மட்டும் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த விஜயை ’ இந்த வரி எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது :)

கார்த்திகைப் பாண்டியன் said...

//வி.பாலகுமார் said...
நாங்க வாசிக்க ஆரம்பிச்சதுமே பார்த்துட்டோம் :)//

வயசு ஆகிப் போச்சுல.. :-))))))))

//♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said... உண்மைதான் நண்பரே . உங்களின் தேர்வுகள் அனைத்தும் அருமை . வாழ்த்துக்கள் !//

நன்றி நண்பா

//♠ ராஜு ♠ said...
:-)//

சிரிப்பான் போடுறது எல்லாம் வேலைக்கு ஆகாது தம்பி.. சீக்கிரம் எழுதுப்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//தருமி said...
பின்னீட்டீங்க ....வழக்கம்போல ..//

ஐயா.. நீங்க சொன்னீங்க.. நான் செஞ்சேன் :-)

//அப்பாவி முரு said...
அனேகமாக வரிசை மாறி இருக்கலாம்...//

ஒத்த ரசனை.. நைஸ்..:-)))
நான் வரிசைக்கிரமமா எழுதல தல... சும்மா அப்படியே அடிச்சு விட்டதுதான்

//லோகு said...
முள்ளும் மலரும் செம படம் அண்ணா.. வேலை போன பின் ‘கெட்ட பையன் சார் இவன்’னு ரஜினி சரத்பாபுவிடம் சொல்லுமிடம் அட்டகாசமா இருக்கும்.. //

அதுதான்யா தலைவரு..:-)))

ஜாபர் ஈரோடு said...

என்னாச்சு கா.பா

முகவரி
பூவே உனக்காக
உள்ளம் கொள்ளை போகுதே
தவமாய் தவமிருந்து

இதெல்லாம் எப்படி

kannamma said...

Ellame unarvukkathaigal.Nalla pagirvu
thozhare...

Unknown said...

கிட்டத்தட்ட அதே குட்டைதான்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//jaffer erode said...
என்னாச்சு கா.பா
முகவரி
பூவே உனக்காக
உள்ளம் கொள்ளை போகுதே
தவமாய் தவமிருந்து
இதெல்லாம் எப்படி//

ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பீலிங்க்ஸ் தல..:-))) நான் தான் சொன்னேனே.. ரொம்ப யொசிக்காம மனசுல பட்டத சொல்றேன்னு.. இது எல்லாமுமே எனக்கு பிடிச்ச படங்கள் தான்..

//kannamma said...
Ellame unarvukkathaigal.Nalla pagirvu thozhare..//

அடிக்கடி வர்றீங்க.. ஆனா நீங்க யாருன்னுதான் கண்டுபிடிக்க முடியல..:-)))

//திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...
கிட்டத்தட்ட அதே குட்டைதான்.//

:-)))))))

Anbu said...

எனக்கு பிடித்த, நான் அதிகம் பார்த்த பத்து படங்கள்:-

1.விண்ணைத்தாண்டி வருவாயா...
2.காக்க காக்க..
3.சேது..
4.பிதாமகன்..
5.அயன்...
6.வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
7.மௌனம் பேசியதே..
8.காதல்
9.சுப்ரமணியபுரம்..
10.நாடோடிகள்..

Unknown said...

ஒவ்வொரு படமும் ஒவ்வொரு உணர்வைத் தரும் படங்கள்..

அருமையான தொகுப்பு..

ரொம்ப நாள் கழிச்சி பதிவெழுத ஒரு வாய்ப்பு குடுத்ததுக்கு நன்றி..

Jackiesekar said...

ம் நல்ல வரிசை...

வெற்றி said...

//கார்த்தி வந்து போகும் கொஞ்ச நேரத்தில் பட்டாசு கிளப்பி இருப்பார். //

உ.கொ.போ ல கார்த்தியா?

நாங்க தப்பு பண்ணா வாத்தி கண்டுபிடிப்பாரு..ஆனா அந்த வாத்தியே தப்பு பண்ணினா.. :)

கார்த்திகைப் பாண்டியன் said...

@அன்பு..

பட்டியலுக்கு நன்றிப்பா..

//முகிலன் said...
ஒவ்வொரு படமும் ஒவ்வொரு உணர்வைத் தரும் படங்கள்.. அருமையான தொகுப்பு..ரொம்ப நாள் கழிச்சி பதிவெழுத ஒரு வாய்ப்பு குடுத்ததுக்கு நன்றி..//

எல்லாம் நமக்குள்ள கொடுத்து வாங்குறதுதான நண்பரே..

//ஜாக்கி சேகர் said...
ம் நல்ல வரிசை...//

நன்றி தல..

//வெற்றி said...
உ.கொ.போ ல கார்த்தியா?நாங்க தப்பு பண்ணா வாத்தி கண்டுபிடிப்பாரு.. ஆனா அந்த வாத்தியே தப்பு பண்ணினா.. :)//

ஏம்ப்பா.. சரியாத்தானே சொல்லி இருக்கேன்.. கார்த்தி செத்துப் போவாரு.. அவர மாதிரி பிரபுதேவா குரல் கொடுப்பாரு.. அதுதானே உள்ளம் கொள்ளை போகுதே?

malarvizhi said...

ரொம்ப நன்றாக உள்ளது.அனைத்தும் சரியான தேர்வு.

ஜெட்லி... said...

நந்தா...ஒரே நாளில் மூணு காட்சியா...??


நான் ஏற்கனவே பிடித்த படங்கள்னு எழுதிட்டேன்....
இருந்தாலும் உங்கள் அழைப்பின் பேரில் கூடிய விரைவில் இன்னொன்னு போட்டுடுறேன்.....

நேசமித்ரன் said...

//கார்த்தி செத்துப் போவாரு.. அவர மாதிரி பிரபுதேவா குரல் கொடுப்பாரு.. அதுதானே உள்ளம் கொள்ளை போகுதே?//

கா.பா கார்த்தி சிவகுமார் பையன்
கார்த்திக் முத்துராமன் பையன் ஒரு “க்” ன்னா வித்தியாசம்

ம்ம் ஒவ்வொருபடத்துக்கும் ஏதாச்சும் பின்புலம் இருக்கும்ல அப்பிடித்தான் சில படங்களும் சில மனிதர்களும் சில நினைவுகளும்

கார்த்திகைப் பாண்டியன் said...

// malarvizhi said...
ரொம்ப நன்றாக உள்ளது. அனைத்தும் சரியான தேர்வு.//

நன்றிங்க..

//ஜெட்லி said...
நந்தா...ஒரே நாளில் மூணு காட்சியா...??//

ஹி ஹி ஹி

//நான் ஏற்கனவே பிடித்த படங்கள்னு எழுதிட்டேன்....
இருந்தாலும் உங்கள் அழைப்பின் பேரில் கூடிய விரைவில் இன்னொன்னு போட்டுடுறேன்.....//

நன்றிப்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

// நேசமித்ரன் said...
கா.பா கார்த்தி சிவகுமார் பையன்
கார்த்திக் முத்துராமன் பையன் ஒரு “க்” ன்னா வித்தியாசம்//

ஓ.. அங்க கோட்டை விட்டுட்டோமோ?

//ம்ம் ஒவ்வொருபடத்துக்கும் ஏதாச்சும் பின்புலம் இருக்கும்ல அப்பிடித்தான் சில படங்களும் சில மனிதர்களும் சில நினைவுகளும்//

அதேதான் தல.. க.க.க.போங்க

M.G.ரவிக்குமார்™..., said...

எனக்குப் பிடித்த 10 படங்கள்:
1.அபூர்வ சகோதரர்கள்
2.அன்பே சிவம்
3.தில்லு முல்லு
4.மன்னன்
5.ஆண் பாவம்
6.சிந்து பைரவி
7.அழகன்
8.விடியும் வரை காத்திரு
9.இன்று போய் நாளை வா
10.தெனாலி