January 18, 2012

உதிரிப்பூக்கள் - 3

போன வாரம் புத்தகத் திருவிழாவுக்குப் போவதற்காக சென்னை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸில் டிக்கட் போட்டிருந்தேன். டிரையினில் என்னுடைய சீட்டைத் தேடிப்பிடித்து பையை வைத்து விட்டு ஆசுவாசமாக அமர்ந்தவன் என்னருகே இருந்த அந்தப் பெண்ணைப் பார்த்தேன். ஒரு சிலரைப் பார்த்தவுடன் என்ன ஏதேன்று தெரியாமலேயே பிடித்துப் போய்விடும் இல்லையா? அந்தப் பெண்ணும் அந்த ரகம்தான். வட்டமுகம். மாநிறம். ஒல்லி என்றோ தடிமன் என்றோ சொல்ல முடியாத இடைப்பட்ட உடல்வாகு. நீல வண்ணச் சுடிதாரும் அதே நிறத்தில் பூப்போட்ட துப்பட்டாவும் அணிந்திருந்தது அவளுக்கொரு தனி அழகைத் தந்தது. அதற்கும் மேலே அதே நிறத்தில் ஒரு ஜீன்ஸ் ஓவர்கோட் அணிந்து பார்க்க அத்தனை லட்சணமாக இருந்தாள்.

விளக்குகள் எல்லாம் அணைத்த பின்பாக அனைவரும் அவரவர் இருக்கைகளில் ஏறிப் படுத்துக் கொண்டோம். என்னுடையது அப்பர்பெர்த். எனக்கு எதிர்த்தாற்போல் இருந்த மிடில் பெர்த் அவளுக்கு. நான் இருந்த இடத்தில் இருந்து அவளை நன்றாகப் பார்க்க முடிந்தது. அவள் கையில் உயர்ரக செல்போன் ஒன்றை வைத்து வெகுநேரமாக என்னென்னமோ செய்து கொண்டிருந்தாள். அந்த இருட்டில் செல்போன் வெளிச்சத்தில் மின்னிய முகமும் அதில் உறைந்திருந்த சிரிப்பும் ஒருக்களித்து அவள் படுத்திருந்த வாகும் கோவில் சிலையென்று உயிர் பெற்று வந்ததென அவளை வேறொரு வடிவாய் மாற்றி இருந்தது. அவள் உறங்கிய பின்னரும் வெகுநேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். மறுநாள் காலை தாம்பரத்தில் அவள் இறங்கிப் போன பின்பும் அவளுடைய முகமும் சிரிப்பும் என்றும் அழியாத சித்திரமாய் என்னுள் தேங்கி விட்டதை என்னால் உணர முடிந்தது. கூடவே என்னுள் எப்போதும் உயிர்ப்புடன் இருக்கும் சில நினைவுகளையும் அவள் கிளர்த்தி விட்டிருந்தாள்.

நம் எல்லோருக்குமே இது மாதிரியான நிகழ்வுகள் நடந்திருக்கும் வாய்ப்புகள் உண்டு. எதேச்சையாக எங்காவது பார்த்திருப்போம். ஆனால் காலத்துக்கும் அவர்களை மறக்க முடியாமல் போய் விடும். யாரென்றே நாம் அறிந்திராத ஜீவன்கள் வெகு குறுகிய காலத்தில் நம் வாழ்வின் நினைவுகளில் ஒரு அங்கமாக மாறிப் போவதை என் வாழ்வில் நிறைய முறை அனுபவித்து இருக்கிறேன். பொதுவாகப் பெண்களே எப்போதும் எனக்குப் பிடித்தமானவர்களாகவும் நெருக்கமானவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். என்னுடைய வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஏதோ ஒரு பெண்ணின் பாதிப்பு என்னுடனே இருந்து வருகிறது. பதின்மத்தில், குறிப்பாய் என்னுடைய பள்ளிக்காலத்தில், நான் சந்தித்த பெண்களும் அவர்களுடைய நினைவுகளும் எப்போதும் என்னால் மறக்க முடியாதவை.

நான் அப்போது ஐந்தாம் வகுப்பு பரீட்சை எழுதியிருந்தேன். எனக்கு விவரம் புரிய ஆரம்பித்து இருந்த சமயம். சுப்ரமணியபுரம் கல்லு சந்தில் நான்கு வீடுகள் இருந்த ஒரு காம்பவுண்டில் எங்கள் வீடு இருந்தது. எங்கள் வீட்டுக்கு அடுத்து இருந்த மீனாக்கா வீட்டுக்கு விடுமுறைக்கு வந்திருந்தவளின் பெயர் மீனாட்சி. என்னை விட ஒரு வயது கம்மி. வந்து இரண்டு மூன்று நாட்களிலேயே அவள் எனக்கு நெருங்கிய தோழியாகிப் போனாள். அந்த விடுமுறை முழுவதும் நான் அவளுடனே விளையாடிக்கழித்தேன். சாப்பாடு, தூக்கம் எல்லாமே ஒன்றாகத்தான். மற்ற பையன்கள் எல்லாம் கோபம் கொண்டு என்னோடு சண்டைக்கு வந்தபோதும் நான் கண்டு கொள்ள வில்லை. எனது வீட்டில் திருப்பதி சுற்றுலாவுக்குப் போனபோது கூட அவர்களோடு போக மறுத்து மீனாக்கா வீட்டிலேயே தங்கிக் கொள்ளுமளவுக்கு மீனாட்சி மீதான என் பிரியம் ரொம்பவே அதிகமாக இருந்தது.

எந்த ஒரு ஆரம்பத்துக்கும் முடிவு என்ற ஒன்று உண்டல்லவா? அந்தக் கோடை விடுமுறையும் முடிவுக்கு வந்தது . சிறிது நேரத்தில் மீனாட்சி ஊருக்கு கிளம்பப் போகிறாள். நானும் அவளும் மொட்டை மாடியில் தனியாக இருக்கிறோம். அவள் கண்களில் இருந்து கண்ணீர் மாலை மாலையாக வழிந்து கொண்டே இருக்கிறது. "நீ இல்லாம நான் எப்படிடா இருப்பேன்.. நாம ரெண்டு பேரும் ஒண்ணாவே இருக்க முடியாதா..?" அவளுக்கான பதில் என்னிடம் இல்லை. அவளையே வெறித்துப் பார்த்தபடி நிற்கிறேன். "நான் அடுத்த லீவுக்கும் இங்க வருவேன்.. நாம மறுபடி பார்க்கணும்டா.. என்னை மறந்துட மாட்டியே..?" முதல் முறையாக ஒரு ஜீவன் நான் அவள் கூடவே இருக்க வேண்டும் என விரும்புவதாகச் சொன்னது அப்போதுதான். நான் அழுது கொண்டே கொண்டே தலை அசைத்தேன். அதுதான் நான் அவளைக் கடைசியாக பார்த்தது. கிளம்பிப் போய் விட்டாள். இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீனாக்காவின் குடும்பமும் வீட்டை காலி பண்ணிக் கொண்டு போய் விட்டார்கள். எங்கோ வாழ்ந்து வரும் மீனாட்சிக்கு என்னை இப்போதும் நினைவிருக்குமா என்று தெரியவில்லை.

ன்னுடைய எட்டாம் வகுப்புக்காலம். சோலைஅழகுபுரத்தில் நான் வசித்தபோது எனக்கு எதிர்வீட்டில் ஒரு அய்யர் வீட்டுப்பெண் இருந்தாள். என்னை விட ஐந்தாறு வயது மூத்தவள். மொட்டை மாடியில் வடகம் காய வைத்துக் கொண்டிருந்தபோதுதான் அவளை முதல் முதலாய்ப் பார்த்தது. பார்த்தவுடன் அவளை எனக்கு ரொம்பப் பிடித்துப் போனது. அவள் மீது எனக்கிருந்த ஈர்ப்பை இன்னதென்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் அவளை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் எனக்குள் உருவாகி இருந்தது. அதன் பின்பாக அவள் வீட்டுப்பக்கம் போகும்போதெல்லாம் அவள் வீட்டின் ஜன்னல்களைப் பார்த்தபடி நடப்பது என் வழக்கமாகிப் போனது. எங்கிருந்தாவது அவள் முகம் தெரிந்திடாதா என ஆவலாக இருக்கும். முகம் தெரிந்துவிட்டால் அன்றைய தினம் மிகுந்த சந்தோசத்துடன் கழியும்.

எல்லா நாட்களையும் போல அதுவும் ஒரு நாளெனத்தான் எண்ணியிருந்தேன். பள்ளியிலிருந்து திரும்பி உடைமாற்றிக் கொண்டு அவள் வீட்டின் முன்பாக நின்று கொண்டேன். வெகுநேரம் நான் அங்கேயே பார்த்துக் கொண்டிருக்க சற்றும் எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் கதவைப் படாரென்று திறந்து கொண்டு அவள் வெளியே வந்தாள். முகமெல்லாம் சிவந்து கண்களில் கோபத்தோடு என்முன் நின்றவளிடம் என்ன சொல்வதெனத் தெரியாமல் பேயடித்தவன் போல அவளையே பார்த்தபடி இருந்தேன். இத்தனை நாளாக என்னிடம் பேச மாட்டாளா என நான் ஏங்கியவள் வாய் திறந்து முதன்முறையாகப் பேசினாள்.

“நானும் தெனமும் பார்த்துக்கிட்டே இருக்கேன்.. போறப்பயும் வர்றப்பயும் இங்கனயே பாக்குற.. நாங்க என்ன அவுத்துப் போட்டாத் திரியிறோம்.. இன்னொரு தரம் உன்னைய இந்தப்பக்கம் பார்த்தேன், வீட்டுல சொல்லிக் கொடுத்து கெட்ட பிரச்சினை ஆகிப்போகும்.. ஆமா..”

சடசடவெனப் பேசிவிட்டு உள்ளே போய்விட்டாள். இதற்கு அவள் பேசாமலேயே இருந்திருக்கலாம். அவள் பேசியதன் சாரம் எனக்குப் புரியவே வெகுநேரம் ஆனது. அது புரிந்தபோது அவள் மீது வைத்திருந்த பிரியமும் காணாமல் போயிருந்தது. அது அவள் பேசிய விதமா இல்லை நான் எதிர்பார்த்தது நடக்காத ஏமாற்றமா எனப் புரியவேயில்லை.

ராகினி எல்கேஜி முதலே என்னோடு பள்ளியில் ஒன்றாகப் படித்தவள். என்னுடைய அம்மாவும் அவளுடைய அம்மாவும் நெருங்கிய தோழிகளும் கூட. அவளைப் பற்றி வித்தியாசமான எண்ணங்கள் ஏதும் எனக்குள் இருந்தது கிடையாது. ஆனால் பத்தாம் வகுப்பு விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கு வந்தபோது நான் அவளைப் பார்த்ததில் இருந்த வித்தியாசத்தை என்னால் உணர முடிந்தது. முன்னைப்போல அவளுடன் இயல்பாய் சிரித்துப் பேச முடியவில்லை. ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத தடை இருந்தாற்போல உணர்வு. ஆனாலும் அவளோடு பேச வேண்டும் எனவும் அவள் கூடவே இருக்க வேண்டும் என்றும் ஆசையாய் இருக்கும். அவள் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதாக என்னை வெகு தைரியமானவனாகவும் சரியானவனாகவும் அவள் முன்னே காட்டிக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கினேன். பட்டும் படாமலும் அவளுக்கும் அது புரிந்தே இருந்தது.

வருட முடிவில், இன்னும் சில தினங்களில் புத்தாண்டு எனும் சூழ்நிலையில், ராகினி தானாக என்னிடம் வந்து ஒரு பெட் கட்டினாள். உண்மையிலேயே எனக்குத் தைரியம் ஜாஸ்தி என்றால் என் பெயரில் அவளுக்கு ஒரு புத்தாண்டு வாழ்த்து அட்டை அனுப்ப வேண்டும். அவ்வளவுதானே மேட்டர் விட்டேனா பார் என்று அழகான ஒரு வாழ்த்தை அட்டையை வாங்கி யுவர்ஸ் ஒன்லி யுவர்ஸ் என்று கையெழுத்துப் போட்டு அனுப்பி விட்டு ஹாயாக இருந்தேன். கண்டிப்பாக இன்னும் சில நாட்களில் நல்லது ஏதாவது நடக்கும் என்றும் நம்பினேன். நான் நினைத்தது போலவே சில விசயங்கள் நடந்தது. ஆனால் அது அத்தனை நல்லதாக இல்லை என்பதுதான் சோகம்.

புத்தாண்டுக்கு இரண்டு நாட்கள் கழித்து இரண்டு பேர் காலை நேரத்தில் என் வீட்டுக்கு வந்து தனியே அழைத்துப் போனார்கள். ராகினிக்கு நான் அனுப்பிய அட்டை அவர்கள் கையில் இருந்தது. அவர்களில் ஒருவன் நான்கு வருடங்களாக அவளை விரும்பி வருகிறானாம். அவனிடம் என்னைக் கோர்த்து விடத்தான் அந்தப் பக்கி என்னை வாழ்த்து அட்டை அனுப்ப சொல்லியிருக்கிறாள். இது தெரியாமல் நானாக போய் சிக்கிக் கொண்டேன். ஒழுங்கா இருந்துக்க இல்லைன்னா வீட்டுல சொல்லி ஸ்கூல விட்டே தூக்கிடுவோம் என்று அந்தக் காட்டான்கள் மிரட்டி விட்டுப் போய் விட்டார்கள். திரும்பி வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்தில் உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டது. நல்ல காய்ச்சல். டாக்டரிடம் போனால் உடம்புக்கு ஒன்றுமே இல்லை என்கிறார். பிறகு குரு தியேட்டரில் போய் மின்சாரக் கனவு பார்த்து அந்தக் காய்ச்சலை அடக்க வேண்டியதாகி விட்டது. அதற்குப் பின்பு பள்ளி இறுதிவரை ராகினி இருந்த பக்கம் கூட நான் தலை வைத்துப் படுக்கவில்லை என்பதை நான் சொல்லவும் வேண்டுமா?

யில்வே காலனிக்கு நான் குடி போயிருந்த சமயம். ஜீவாநகரில் இருந்த எனது பள்ளிக்கு அரசரடியில்தான் பஸ் ஏற வேண்டும். விடுமுறை முடிந்து பள்ளிக்குப் போகவேண்டிய முதல் நாள். பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தபோதுதான் எதிர் ஸ்டாப்பில் அவளைப் பார்த்தேன். தேவதை. நந்தவனத்தேரு படத்தில் வரும் ஸ்ரீநிதி போலவே இருந்தாள். என்னமோ அவளை ரொம்பப் பிடித்திருந்தது. டக்கென்று பள்ளிக்குப் போகும் திட்டத்தைக் கைவிட்டு அந்தப் பெண் போன பஸ்ஸில் ஏறிவிட்டேன். தொடர்ந்து போய் அவள் குலமங்கலம் அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

மூன்று நாட்கள் தொடர்ச்சியாக இதே வேலைதான். காலையில் பஸ் ஏறி அவளைப் பள்ளியில் விடுவது. எங்காவது சுற்றிவிட்டு மாலை ஆனவுடன் அவள் திரும்பி வரும்போதும் கூட வருவது. நான்காம் நாள் காலை நான் பஸ் ஸ்டாப்புக்குப் போனபோது அவள் இல்லை. குழப்பமாக நின்றிருந்த என்னை ஒரு பைக் கடந்து போனது. அவள் அந்த பைக்கில் பின்னாடி உட்கார்ந்து இருந்தாள். வண்டியை ஓட்டிப்போனவன் என்னை முறைத்தபடியே போனதாக எனக்குள் ஒரு உணர்வு. வேறுபுறமாகத் தலையைத் திருப்பிக் கொண்டேன். அதன்பிறகு நான் அவளை அந்த பஸ் ஸ்டாப்பில் பார்க்கவே முடியவில்லை.

த்தனை முகங்கள். எத்தனை நினைவுகள். விட்டால் சிந்துபாத் கதை மாதிரி இந்த நினைவுகள் போய்க் கொண்டே இருக்கும் என்பதால் இதை இங்கேயே நிறுத்திக் கொள்ளுவோம்.

ஊரிலிருந்து திரும்பியபிறகு வண்டியில் பார்த்த பெண் பற்றியும் பழைய நினைவுகள் குறித்தும் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த சாமி சிரித்தபடி சொன்னான்.

“மாப்ள.. நாளப்பின்ன உனக்கு கல்யாணம் நிச்சயமானா ஆட்டோகிராஃப் சேரன் மாதிரிக் கிளம்பிடாதடா.. தாங்காது.. உன்ன வச்சு அந்தப் படத்த எடுத்தா முப்பதாறு மணி நேரம் ஓடும் போலயே.. தூ.. இதெல்லாம் ஒரு பொழப்பு..”

10 comments:

தருமி said...

நல்ல கோர்வை ...

இன்னும் இருக்கு ...

ராகவன் said...

அன்பு கார்த்தி,

சோலை அழகுபுரம், எம்.கே புரம், சுப்பிரமணியபுரம் என்று எல்லா இடங்களிலும் தேவதைகள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்... இப்போதும் இருக்கலாம் தேவதைகள் கிள்ளிப் போட்டு பிறந்த குட்டி தேவதைகள்.

நீங்க சொல்ல சொல்ல எனக்காய் சிரித்த, என்னோடு சிரித்த, சண்டையிட்ட, அழுத தோழிகள்... ஞாபகத்தில் வருகிறார்கள்... ஒரு பெண் எல்லா பெண்களுக்கும் உறவாய் இருக்கிறாள்... ஒருத்தியின் சாயலில் தான் எல்லோருமே இருக்கிறாள்கள்...

ஒருத்தி தான் எல்லோரும்...

அன்புடன்
ராகவன்

ரோஸ்விக் said...

யோவ் நண்பா எல்லாத்தையும் சொல்லிடாதையா...

Balakumar Vijayaraman said...

:) வரிசையா வந்துட்டே இருக்கே.

நல்லா இருக்கு.

அத்திரி said...

TOPPPPPPPPPPPPPUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUU

சித்திரவீதிக்காரன் said...

பொதுவாகப் பெண்களே எப்போதும் எனக்குப் பிடித்தமானவர்களாகவும் நெருக்கமானவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.//

நெருக்கமான வரிகள்.

யுவகிருஷ்ணா said...

பேயோனை படிக்கிற உணர்வு :-)

மதார் said...

Climax thøol padam edutha sollunga

மேவி... said...

செமையா இருக்கு... தொடர்ந்து எழுதும்.

நான் உங்க அளவுக்கு யாரையும் சைட் அடிச்சது இல்லை. படம் புஸ்தகம்ன்னு தான் சிறு வயசுல அதிகமிருந்தேன்

Sakthidevi.I said...

superb....padikka padikka sirippum, ungala paththi therinjathaala rasikka mudinjuthu..nice flow...