November 20, 2009

சாதிக் கழுதைகள்..!!!

"எலேய்.. அங்கிட்டு இங்கிட்டு பராக்கு பார்க்காம கழுதைய வெரசா ஓட்டிக்கிட்டு ஆத்தங்கரைக்கு போய் சேரு.. நானும் சீக்கிரமா வாறன்.. நான் வரப்ப நீ அங்க இல்ல.? மவனே தோல உரிச்சிடுவேன்.."

"செரிப்பா.. நான் வந்திடுறேன்" என்றவாறே தத்தக்கா புத்தக்கா என்று நடக்கும் கழுதைகளைப் பத்தியபடி கிளம்பினான் சின்னான்.

"ஒம்போது வயசு முடியப் போகுது.. பள்ளிக்கொடம் போயிருந்தா எப்படியும் மூணாங்கிளாசாவது படிச்சிட்டு இருந்திருப்பான்.." நடந்து போகும் மகனை பார்த்தபடி நின்றான் எசக்கி.

சிலுக்குவார்பட்டி மொத்த ஊருக்கும் அவன் ஒருத்தன் தான் சலவைத் தொழிலாளி. எசக்கியோட அப்பா, அவன் அப்பனுக்கு அப்பா என்று அவன் குடும்பமே பரம்பரை பரம்பரையாய் அந்த ஊரிலேயே சலவைத் தொழில் செய்பவர்கள். பரவையில் இருந்து எசக்கிக்கு வாக்கப்பட்டுவந்தவள் முத்துமாரி. ரெண்டு பேருக்கும் அஞ்சு வருஷமா பிள்ளையில்லாம இருந்து, கோவில் கோவிலாக அலைந்து பெற்ற பிள்ளைதான் சின்னான். தன்னை மாதிரி இல்லாமல் தன் பையன் நல்லா படிச்சு வாழ்க்கைல முன்னுக்கு வரணும்னு எசக்கிக்கு ஆசை.

சின்னானுக்கு ஐந்து வயது ஆகும்போது சுடலைமுத்து வாத்தியாரிடம் பேசினான். அவர் திகைத்துப் போனார். "நீ எதுக்கும் நம்ம நாட்டாமைக்கிட்டே ஒரு வார்த்தை கேட்டுரு" என்று மட்டும் சொன்னார்.

தன் மகனின் படிப்பைப் பற்றி எசக்கி சொல்வதைக் கேட்டு நாட்டாமை சிரித்தார்.

"ஏண்டா.. உனக்கு புத்தி எதுவும் பெசகிப் போச்சா? அழுக்கு எடுக்குற பயலுக்கு எதுக்குடா இந்த வேண்டாத வேல? பையனுக்கு தொழில் சொல்லி குடுப்பியா.. அதை விட்டுட்டு.. போடா.. போ.. போய் பொழப்ப பாரு.."

"அதுக்கு இல்ல சாமி.. புள்ள நல்ல சூட்டிகையா இருக்கான்.. அவன் ஆத்தாளும் அவன நாலெழுத்து படிக்க வெச்சு பார்க்கனும்னு ஆசைப்படுறா.. நீங்க மனசு வச்சா முடியும்.."

"அதெல்லாம் வேலைக்கு ஆவாது.. நீ கெளம்பு.."

"இல்லைங்கையா..அது வந்து.."

நாட்டாமைக்கு கோபத்தில் கண்கள் சிவந்து போனது.

"எடுபட்ட நாயே.. என்ன எகத்தாளமா? திமிரு ஜாஸ்தியாப் போச்சா? நானும் சொல்லிகிட்டே இருக்கேன்.. கேக்காம எதுத்து எதுத்து பேசிக்கிட்டு இருக்குற மயிரு.. ஏண்டா எம்புள்ளையும் உம்புள்ளையும் ஒரே பள்ளிகொடத்துல படிச்சா பொறவு எனக்கு என்னடா மருவாதி.. நான் சாதிமான்டா.. ஊரெல்லாம் சுத்திட்டு வந்தாலும் செருப்பத் தூக்கி சாமி ரூம்புக்குள்ள வைக்க முடியாது.. இன்னொரு தரம் இதப் பத்தி என்கிட்டே பேசினன்னு வையி.. நான் மனுஷனா இருக்க மாட்டேன்.. ஆமா.."

நினைக்கும் போதே எசக்கிக்கு கண்கள் ஈரமாயின. விதியை நொந்தவாறே குடிசைக்குள் நுழைந்து கஞ்சியைக் குடித்து விட்டுக் கிளம்பினான். அவன் ஆத்தங்கரைக்கு வந்தபோது சின்னான் இன்னும் வந்திருக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆற்றிலும் அவ்வளவாக கூட்டம் இல்லை.

"படிச்சு படிச்சு சொன்னேனே.. இன்னும் பயலைக் காணலியே.. பக்கி எங்கயாவது விளையாடப் பூயிட்டானா? இன்னும் கொஞ்ச நேரத்துல சூரியன் மண்டையப்பொளக்க ஆரம்பிச்சிடுமே.."
சாலையை பார்த்தபடி மகனுக்காக காத்திருந்தான். சற்று நேரம் கழித்து தூரத்தில் யாரோ ஓடி வருவது தெரிந்தது. நெருங்கி வந்தால்.. சங்கிலி. இவனுக்குப் பங்காளி முறை வேண்டும்.
"என்னடா மாப்புள.. இப்படி ஓடியார?"

"மச்சான்.. ஸ்ஸ்.. மச்சான்.. நம்ம சின்னான்.."

"என்னடா.. சின்னானுக்கு என்ன ஆச்சு?" பதறிப் போனான் எசக்கி.

"நம்ம சின்னான் நாட்டாம மண்டிய கல்லக் கொண்டு அடிச்சு ஒடச்சிட்டானாம்... மரத்துல கட்டிப் போட்டிருக்காங்க.. ஊரே பஞ்சாயாத்துல தெரண்டு நிக்குது.. "
எசக்கிக்கு கண்ககளை இருட்டிக் கொண்டு வந்தது. பாவிப் பய மகன் எதுக்கு இப்படி பண்ணினான்னு தெரியலையே.. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஊரை நோக்கி ஓடத் துவங்கினான்.
ஊர்ப் பஞ்சாயத்து நடக்கும் இடம். ஒரு வேப்பமரத்தில் சின்னானைக் கட்டி இருந்தார்கள். பக்கத்தில் கிடந்த பெஞ்சில் நாட்டாமையும் ஊர்த் தலையாரியும் உட்கார்ந்து இருந்தார்கள். நாட்டாமையின் தலையில் இருந்த வெள்ளைக்கட்டில் அங்கங்கே திப்பை திப்பையாய் ரத்தம். அவர் கண்கள் கோபத்தில் ரத்தமாகச் சிவந்து இருந்தது. ஓடி வந்த எசக்கி நேராக நாட்டாமையின் கால்களில் வந்து விழுந்தான்.
"ஐயா மகராசா.. எம்மவ என்ன தப்பு பண்ணினான்னு தெரியல.. அவன தயவு செஞ்சு மன்னிச்சுடுங்க.. சின்னப் பய.. தெரியாத்தனமா ஏதாவது செஞ்சிருப்பான்.. எஞ்சாமி.. அவன எதுவும் பண்ணிப்புடாதீங்க.."
நாட்டாமை அவனை ஓங்கி எத்தினார். "எண்டா.. ஒம்மவனா ஒண்ணும் தெரியாதவ.. பரதேசிப் பயலுகளா.. அப்பனும் மகனும் என்னமா நடிக்கிறீங்கடா.. போய் ஏன் இப்படி பண்ணினான்னு அவன்கிட்டவே கேளு.."
எசக்கி மரத்தில் கட்டப்பட்டுக் கிடந்த சின்னானை நெருங்கினான். அவன முகம் கல்லாய் இறுகிக் கிடந்தது.

"ஒனக்கு ஏதும் மற கழண்டு போச்சா? ஏண்டா இப்படி பண்ணின?"
சின்னான் வழக்கம் போலத்தான் கழுதைகளை மேய்த்துக் கொண்டு வந்தான். ஆத்தங்கரைக்கு போகும் வழியில்தான் பள்ளிக்கூடம் இருந்தது. அவனுக்கு வெகு நாளாகவே பள்ளிக்கு உள்ளே போய் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. பள்ளியில் படிக்கும் மற்ற மாணவர்கள் கண்ணில் படும் போதெல்லாம் அவனுக்கு ஏக்கமாகவே இருக்கும். சுற்றும் முற்றும் பார்த்தான். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அக்கம்பக்கம் யாரும் இல்லை. மெதுவாக வேலி ஏறி குதித்தான். வகுப்பறைக்குள் நுழைந்தான். வாத்தியார் அமரும் மேசையை ஆசையாய் தடவி பார்த்தான். கரும்பலகையில் கிறுக்கினான். எனக்கு மட்டும் ஏன் இப்படி? நா ஏன் படிக்கக் கூடாது? அவனுக்கு அழுகை அழுகையாக வந்தது.
குமுறிக் கொண்டே வந்த வழியே வெளியேறி கழுதைகளை கூட்டிக் கொண்டு மீண்டும் நடக்கத் தொடங்கினான். சற்று தூரம்தான் போயிருப்பான். எதிர்த்தாற்போல் யாரோ வருவது தெரிந்தது. நாட்டாமை தான் வந்து கொண்டிருந்தார். சின்னானின் உள்ளம் ஆத்திரத்தில் கொந்தளித்தது. ஒன்னாலே தான என்னோட ஆசையெல்லாம் மண்ணாப் போச்சு.. உன்ன விட மாட்டேண்டா.. கீழே குனிந்து கல்லை எடுத்தான்.
எசக்கிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சின்னானின் கண்கள் கலங்கி இருந்தன. மீண்டும் நாட்டாமையிடம் ஓடி வந்தான்.
"ஐயா.. அவன் செஞ்சது தப்புத்தே.. ஆனா அவன் சின்னப்புள்ள.. எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடுங்க.. அவன விட்டுடுங்க.."

நாட்டாமை திரும்பி தலையாரியைப் பார்த்தார். "என்னய்யா சொல்லுற.."

"நீங்க பார்த்து என்ன பண்ணினாலும் சரிதாங்கையா.."

நாட்டாமை சின்னானிடம் திரும்பினார். "சரிடா.. உன் குடும்பமே இந்த ஊருக்காக ஒழச்சு இருக்கீங்க.. அதனால ஒம்மவன விட்டுடுறேன்.. ஆனா அவனுக்கு பதிலா ஒனக்கு பத்து கசையடி.. சம்மதமா.." அவர் கண்கள் குரூரமாய் மின்னின.
எசக்கிக்கு சுரீரென்றது. மெளனமாக சரியென தலையசைத்தான். நாட்டாமை கண்ணசைக்க தண்டனை நிறைவேறியது. சங்கிலிதான் அவனைக் கைத்தாங்கலாக வீடு வரை கொண்டு வந்து விட்டான். முத்துமாரி வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதாள். சின்னான் ஒன்றுமே பேசாமல் இறுகிப் போய்க் கிடந்தான்.
சங்கிலி போனவுடன் எசக்கி வீட்டுக் கதவை மூடி விட்டு சின்னானிடம் வந்தான். "ஒன்னால என்ன ஆச்சுன்னு பார்த்தியா.. ஏண்டா இப்படி பண்ண.." பையனோ அமைதியாக நின்றான். "சொல்லுடா.." கோபம் வெறியாக மாறியது. "அறிவு கெட்ட நாயே.. இனிமே இப்படி பண்ணுவியா.. பண்ணுவியா." என்றவாறே சின்னானை போட்டு அடிக்கத் தொடங்கினான். நடுவில் புகுந்து தடுக்க முயன்ற மனைவிக்கும் மிதி. முடிந்த வரை அடித்து ஓய்ந்தவனாக கீழே உட்கார்ந்தான்.
பையனைப் பார்த்தான். சின்னான் கண்களில் தாரை தாரையாய் நீர் வழிய அழுது கொண்டிருந்தான். அவனை பார்க்க பார்க்க எசக்கியால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சட்டென்று போய் அவன் காலில் விழுந்தான். "என் ஊட்டுல போய் மகனாப் பொறந்த பாவத்துக்கு.. நானே ஒன்ன அடிச்சுப் போட்டேனே.. உனக்கு ஒண்ணும் பண்ண முடியாத இந்த அப்பன மன்னிச்சுடுப்பா.." சின்னான் அப்பனை கட்டிக் கொண்டு அழுதான். இரவு வெகுநேரம் வரை அவர்கள் அழுது கொண்டிருந்தார்கள்.
மறுநாள் காலை விடிந்தபோது அந்த வீட்டின் முன் கழுதைகள் மட்டுமே மேய்ந்து கொண்டிருந்தன.

26 comments:

Anbu said...

நல்ல கருத்துள்ள பதிவு அண்ணே..

வால்பையன் said...

இந்த மாடல் நிறைய வந்துருச்சு தல!

இருந்தாலும் உங்க வர்ணனையில படிக்க நல்லாருக்கு!

வால்பையன் said...

//நல்ல கருத்துள்ள பதிவு //

கடைசியில எல்லாரும் செத்து போறது உனக்கு நல்ல கருத்தாயா!?

குமரை நிலாவன் said...

நல்லாருக்கு!

வினோத் கெளதம் said...

நல்லா இருக்கு கார்த்தி..சாதி வெறியை அப்பட்டமாக சொல்லும் கதை அமைப்பு..கடைசி வரியை தவிர்த்து இருக்கலாம்..:)

vasu balaji said...

போங்க எனக்கு உங்க கூட கோவம். அவுங்கள சாவடிக்காட்டி என்னா?

கே.என்.சிவராமன் said...

நல்லா எழுதியிருக்கீங்க கார்த்தி... தொடர்ந்து எழுதுங்க.

முடிஞ்சா இமையத்தோட 'கோவேறு கழுதைகள்' படிச்சுப் பாருங்க...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

நையாண்டி நைனா said...

எப்பா... நல்லவங்களா... வாத்தியாரு எங்கையா அவங்களை கொன்னிருக்காறு...

இவ்ளோ நாளும் வெள்ளை, வெள்ளையா கட்டிக்கிட்டு திரிந்த மக்கள் மனசு அம்புட்டும் அழுக்குன்னு, அவன் தன பிள்ளைய படிக்க வைக்க பட்டணத்திற்கு பூட்டான்யா... அந்த நாட்டாமை கழுதையோட இந்த கழுதையும் ஒண்ணா சேர்ந்து இருக்கட்டும்னு விட்டுட்டு....

Anbu said...

\\\வால்பையன் said...

//நல்ல கருத்துள்ள பதிவு //

கடைசியில எல்லாரும் செத்து போறது உனக்கு நல்ல கருத்தாயா!?\\\\

தல அவங்க சாகலை தல...நையாண்டி நைனா அவர்கள் சொன்ன மாதிரி வேற ஊருக்கு போயிட்டாங்க...

அவ்வ்வ்வ்வ்

வால்பையன் said...

//தல அவங்க சாகலை தல...நையாண்டி நைனா அவர்கள் சொன்ன மாதிரி வேற ஊருக்கு போயிட்டாங்க...//

இத அவரு சொல்லலைனா!?

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//நல்ல கருத்துள்ள பதிவு அண்ணே..//
ரிப்பீட்டிக்கிரேன்.அப்புறம் தம்பி இதைப் பதிவுன்னு மொத்தமா சொல்லாம கருத்துள்ள கதைன்னு ஒரு வார்த்தை போட்டுருந்தீங்கன்னா பாவம் கானா பானா சந்தோசப் பட்டிருப்பாப்ல.

சிவக்குமரன் said...

ம் ம்...நல்லா வந்திருக்கு..

RAMYA said...

படிச்சு மனசு மிகவும் கனத்துப் போச்சு.

இன்னமும் இப்படி எல்லாம் நடக்குமா?

அப்புறம் உங்கள் ஸ்லாங் ரொம்ப நல்லா இருந்தது. மதுரை ஸ்லாங்தானே!!

முடிவை படிக்கறவங்க கிட்டேயே விட்டுடீங்க....

கார்த்திகைப் பாண்டியன் said...

//Anbu said...
நல்ல கருத்துள்ள பதிவு அண்ணே..//

நன்றி அன்பு (உதவிக்கும்.. )

//வால்பையன் said...
இந்த மாடல் நிறைய வந்துருச்சு தல! இருந்தாலும் உங்க வர்ணனையில படிக்க நல்லாருக்கு!//

நன்றி தல.. நம்ம இதை ஒரு மாதிரி சொல்லிப் பார்க்கலாமேன்னு ஆசைப்பட்டேன்.. அதுதான்.. உங்களுக்கு பிடிச்சது தானே.? அது போதும்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//குமரை நிலாவன் said...
நல்லாருக்கு!//

வாங்க நண்பா... நன்றி..

//வினோத்கெளதம் said...
நல்லா இருக்கு கார்த்தி..சாதி வெறியை அப்பட்டமாக சொல்லும் கதை அமைப்பு..கடைசி வரியை தவிர்த்து இருக்கலாம்..:)//

நன்றி நண்பா.. முடிவை கொஞ்சம் பூடகமா சொல்றதுக்காக அந்தக் கடைசி வரிய சேர்த்தேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//வானம்பாடிகள் said...
போங்க எனக்கு உங்க கூட கோவம். அவுங்கள சாவடிக்காட்டி என்னா?//

அவங்க செத்துட்டாங்கன்னு நான் சொல்லவே இல்லையே அண்ணே.. இதுக்கு சரியான முடிவ நீங்களே யோசிங்கன்னுதானே விட்டுட்டேன்..

//பைத்தியக்காரன் said...
நல்லா எழுதியிருக்கீங்க கார்த்தி... தொடர்ந்து எழுதுங்க.முடிஞ்சா இமையத்தோட 'கோவேறு கழுதைகள்' படிச்சுப் பாருங்க...//

நன்றி நண்பரே. படிக்க முயலுகிறேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//நையாண்டி நைனா said...
எப்பா... நல்லவங்களா... வாத்தியாரு எங்கையா அவங்களை கொன்னிருக்காறு...//

அது.. க க க போ..:-)))))))

கார்த்திகைப் பாண்டியன் said...

// ஸ்ரீ said...
ரிப்பீட்டிக்கிரேன்.அப்புறம் தம்பி இதைப் பதிவுன்னு மொத்தமா சொல்லாம கருத்துள்ள கதைன்னு ஒரு வார்த்தை போட்டுருந்தீங்கன்னா பாவம் கானா பானா சந்தோசப் பட்டிருப்பாப்ல.//

எப்படிப் பார்த்தாலும் அன்பு நம்ம பய தானேப்பா..இப்பவும் சந்தோஷம்தான்

//இரா.சிவக்குமரன் said...
ம் ம்...நல்லா வந்திருக்கு..//

நன்றி நண்பா..

//RAMYA said...
படிச்சு மனசு மிகவும் கனத்துப் போச்சு.இன்னமும் இப்படி எல்லாம் நடக்குமா?//

நடக்குது அக்கா.. நாம தெரியாம இருக்கோம்கிரதுதான் உண்மை..

நர்சிம் said...

எழுதிய விதம் மிகப் பிடித்திருந்தது நண்பா.

கார்த்திகைப் பாண்டியன் said...

//நர்சிம் said...
எழுதிய விதம் மிகப் பிடித்திருந்தது நண்பா.//

நன்றி தல..

இராகவன் நைஜிரியா said...

நல்ல நடை.. அருமையா எழுதியிருக்கீங்க...

கீப் இட் அப்...

படித்து முடித்தவுடன், அவர்கள் ஊரைவிட்டு போய்விட்டார்கள் என்றுதான் நான் நினைத்தேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//இராகவன் நைஜிரியா
படித்து முடித்தவுடன், அவர்கள் ஊரைவிட்டு போய்விட்டார்கள் என்றுதான் நான் நினைத்தேன்..//

ரொம்ப நன்றிண்ணே.. நாம்மொதல்ல அந்த முடிவைத்தான் யோசிச்சு எழுதினேன்.. பார்த்தா நம்ம ஆளுங்க ஒரு புது அர்த்தமே கொடுத்துட்டாங்க.. சரி.. எப்படி வேணும்னாலும் யோசிங்கன்னு விட்டுட்டேன்..

ஆ.ஞானசேகரன் said...

கதை நல்லா வந்துருக்கு கார்த்திகைப் பாண்டியன்...

பாலகுமார் said...

எழுத்து நடை கோர்வையா நல்லா இருக்கு, கார்த்தி..
இன்னமும் இப்படி நடக்குதா ,, தெரியல ???

அப்புறம், நானும், அவுங்க பட்டணம் போய் பிள்ளையை படிக்க வைக்கிறதா தான் கதையை முடிச்சேன்...

சிலுக்குவார்பட்டி.... மல்லிகைப் பந்து விற்பனைக்கு ஃபேமஸ் ல :)

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ.ஞானசேகரன் said...
கதை நல்லா வந்துருக்கு கார்த்திகைப் பாண்டியன்...//

நன்றி நண்பா

// பாலகுமார் said...
எழுத்து நடை கோர்வையா நல்லா இருக்கு, கார்த்தி..இன்னமும் இப்படி நடக்குதா ,, தெரியல ???அப்புறம், நானும், அவுங்க பட்டணம் போய் பிள்ளையை படிக்க வைக்கிறதா தான் கதையை முடிச்சேன்... சிலுக்குவார்பட்டி.... மல்லிகைப் பந்து விற்பனைக்கு ஃபேமஸ் ல//

நன்றி நண்பா.. இதை விடக் கேவலமான சூழ்நிலையில் கூட மக்கள் இன்னும் இருப்பதாகவே தெரிகிறது.. திண்டுக்கல்லில் இருந்து கரூர் போகும் வழியில் இருக்கும் ஒதுக்கப்பட்ட ஒரு ஊரில் தேர்தல் பணியாளராக செல்லும்போது இத்தகைய நிகழ்வுகளைப் பற்றி அறிய முடிந்தது.. சிலுக்குவார்பட்டி ஒட்டன்சத்திரம் போற வழியில இருக்கு பாலா.. நீங்க சொன்ன மாதிரி மல்லிக்கு பேமஸ்..:-))

"உழவன்" "Uzhavan" said...

சூப்பர் நண்பா :-)