July 19, 2010

நெடுங்குருதி - எஸ்ரா (2)

இந்நாவல் நீலகண்டப்பறவை போல, அக்னிநதி போல காலமாற்றத்தின் மீது உருவாகி இருக்கிறது. சிறந்த இந்திய நாவல்களின் தரத்தில் எழுதப்பட்டு இருக்கிறது. முதன்முறையாக இந்நாவலில்தான் தமிழ் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

பிரபஞ்சன்


வேம்பலை ஒரு கற்பனை கிராமம். சரி.. ஆனால் அங்கு இருப்பதாக சித்தரிக்கப்படும் மனிதர்கள் உண்மையானவர்கள். இந்த மண்ணில் நிஜமாகவே வாழ்ந்தவர்கள். அவர்கள் அந்த ஊருக்கு வந்ததெப்படி? கொற்கைப் பாண்டியனின் வீரர்களிடம் இருந்து தப்பி வந்தவர்கள் என்று ஆரம்பிக்கிறது அவர்களின் வரலாறு.

வெல்சி
துரை என்னும் ஆங்கில அதிகாரியால் சிறைப்பட்டு சாகும் வேம்பர்களால்தான் முதன் முறையாக வேம்பலையில் பயம் விதைக்கப்படுகிறது. அதன் பிறகு பதவி உயர்வு பெற்று வெளியூர் செல்லும் வெல்சியும் மனச்சிதைவுக்கு ஆளாகி செத்துப்போகிறான். ஆனால் அவன் விட்டுச் சென்ற சோகமும் துயரமும் எப்போதும் தீராததாக வேம்பலையை பீடித்துக் கொள்கிறது.

வேம்பலையின் சுவாரசியமான மனிதர்களில் ஒருவன் சிங்கி. வாலிபத்தில் அனைவரும் பயப்படும் திருடனாக இருந்தவன். இருந்தும் சிறு பிள்ளைகளிடம் திருடுவதில்லை எனத் தனக்கென சில கொள்கைகளைக் கொண்டவனாக இருக்கிறான்.

ஒரு முறை காலில் காயம்பட்டு சாகக் கிடப்பவனைப் பண்டார மகள் ஒருத்தி காப்பாற்ற, சொந்த ஊரையும் திருட்டையும் மறந்து அவளோடு தங்கி விடுகிறான். ஆனால் வயதாக வயதாக பண்டார மகள் மூர்க்கம் கொண்டவளாக மாறிப் போகிறாள். தொட்டதெற்கெல்லாம் சிங்கியை கரித்துக் கொட்ட ஆரம்பிக்கிறாள். எனவே அவளைப் பிரிந்து சிங்கி மீண்டும் வேம்பலைக்கே வந்து வாழத் துவங்குகிறான்.

நிகழ்காலத்தில் இரண்டு கண்ணிலும் பார்வை இழந்து போனவனாக தன மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறான் சிங்கி. அவ்வப்போது அவனுக்கு பழக்கமான குருவனின் குரல் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. சிங்கியும் குருவனும் ஆடு புலி ஆட்டம் ஆடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். குருவன் பத்து வருடங்களுக்கு முன்பே செத்துப் போனவன். எனவே இங்கே குருவனின் குரல் மரணத்தின் அடையாளமாகவே சொல்லப்படுகிறது என நினைக்கத் தோன்றுகிறது.

ஒவ்வொரு முறை ஆட்டம் ஆரம்பித்து முடியுமுன்னே குருவன் காணாமல் போகிறான். அத்தோடு சிங்கியும் குருவனை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதில் முனைப்பாகவே இருப்பது மனிதனுக்கு சாவின் மீதாக இருக்கும் பயத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

சில மாதங்களுக்கு முன்பு நண்பர் மேவி என்னை யூடியூபில் இருக்கும் இங்கமார் பெர்க்மானின் செவன்த் சீல் என்னும் படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று சொல்லி இருந்தார். மனிதனும் மரணமும் ஆடும் செஸ் ஆட்டம் என்பது போன்ற கதையது. சிங்கி பற்றிய நெடுங்குருதியின் மிக அற்புதமான இந்தப் பகுதியைப் படிக்கும்போது எனக்கு அந்தப்படம்தான் ஞாபகத்துக்கு வந்தது.

கடைசியாக ரத்னாவதி. பரத்தை என்றானபோதும் நாகுவை உண்மையாக நேசிப்பவள். பார்க்கும் மனிதர்களில் எல்லாம் நாகுவைத்தான் அவள் தேடித்திரிகிறாள். அவனுடைய பிள்ளையை தானாக விரும்பி பெற்றுக் கொள்ளுகிறாள். நாகு இறந்துபோன பின்பு மதுரைக்கு வந்து ஒரு பால்கடையை வைத்து வாழ ஆரம்பிக்கிறாள்.

தன் பிள்ளை திருமாலுக்காக வாழ முடிவு செய்தாலும், காமத்தின் நீண்ட நிழல் அவளை விடாமல் துரத்துகிறது. பூபாலனை மணம் முடிக்கிறாள். அவள் வாழ்வில் மகிழ்ச்சி திரும்பியதாக நம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் பூபாலன் அநியாயமாக செத்துப் போகிறான். காலம் அவளை மீண்டும் சேற்றுக்குள் வீசி எறிகிறது.

மகனைப் பிரிந்து திரும்பி வர இயலாத ஒரு பாதையில் ரத்னா பயணிக்கத் துவங்குகிறாள். இறுதியில், கடைசிவரைத் தன்னுடைய மகனின் முகத்தைக் கூடப் பார்க்காமல், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கிறாள். நிறைவேறாத ஆசைகளில் தங்களைத் தொலைத்த எல்லா மனிதர்களின் பிரதிநிதியாகவும் ரத்னாவதி இருக்கிறாள். கடை வைத்து கவுரவமாக வாழும் ரத்னாவை கோபுரத்தின் மீதிருந்து பார்க்கும் கந்தர்வனின் சிலை, அவள் மீண்டும் வேசித் தொழில் செய்யத் தொடங்கியவுடன் தன் முகத்தைத் திருப்பிக் கொள்வது.. அழகான படிமம்.

நாகுவின் அப்பாவோடு போய் என்ன ஆனான் என்றே தெரியாத பக்கிர், பிழைப்புத் தேடி வந்த இடத்தில் முறைதவறி வாழத் தொடங்கும் பக்கிரின் மனைவி, கால்கள் நடமாட இயலாத நிலையில் இருந்தாலும் ஊரில் நடக்கும் எல்லா விஷயங்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் ஆதிலட்சுமி, வேணியைக் காதலித்துத் தோற்கும் திருமா, நாகுவைத் தன் மகனைப் போல் வளர்க்கும் தரகர் தாத்தா, புதைத்து வைத்த புதையலை பூதம் காப்பது போல ஊர்ந்து திரியும் லட்சுமணன், ரத்னாவதியின் தோழி ஜெயராணி மற்றும் அவளின் அத்தை, சிறு வயதில் இருந்தே தாயின் அன்பு கிட்டாமல் வளரும் திருமால், தத்துவம் பேசித் திரியும் திருமாலின் நண்பன் பவுல், நாம் ரெண்டு பெரும் ஒரே ஆளை கட்டிக்கிடலாம் என்று கேட்கும் வசந்தாவின் தோழி ஜெயக்கொடி.. எத்தனை எத்தனை விதமான மனிதர்கள்? நாட்டார் தெய்வம் ஒன்றின் வருகையால் பணக்காரனாகும் காயாம்பூ, அதே தெய்வத்தால் ஒன்றுமில்லாதவனாக ஆகிப் போவதை என்னவென்று சொல்வது? வேம்பலையின் சாலைகளில் வழிந்தோடும் கசப்பு, அங்கு வாழும் மனிதர்களின் வாழ்க்கையிலும் நிரம்பி இருக்கிறது.

இந்த இசம், அந்த இசம் என்று நெடுங்குருதியை வகைப்படுத்த எனக்குத் தெரியாது. யதார்த்தம், கனவுலகம், மாய யதார்த்தம் என மூன்று வெவ்வேறு தளங்களில் பயணிக்கிறது கதை. அவ்வளவே. நாம் காணும் நிஜ வாழ்வின் நிதர்சனங்களை பதிவு செய்யும் அதே வேளையில், விவரிக்க இயலாத கனவுகளின் பக்கங்களையும் மீள்மாய உலகின் (நன்றி:ஜெயமோகன்) நம்ப முடியா சம்பவங்களையும் அழகியலோடு நம் பார்வைக்கு வைக்கிறார் எஸ்ரா.

பண்டார மகள் இறந்து போய் கிடக்கிறாள். அவள் உள்ளங்கையில் இருக்கும் தேள் சிங்கியின் உடம்பில் ஏறிக் கொள்ளுகிறது. அவனால் அந்தத் தேளின் உபத்திரவத்தைத் தாங்கவே முடிவதில்லை. அதேபோலத்தான் சிங்கியும் செத்துப் போன குருவனும் விளையாடும் காட்சிகளும். தானிய குலுக்கைக்குள் போட்டும் சாகாத மனுஷியாகவே இருக்கும் முதிர்ந்த சென்னம்மாவின் கதையும் ஒரு புதிர்த்த்தன்மையுடன் இருக்கிறது.

பாலைவனம் போல வெடித்து கிடக்கும் இடங்களின் நடுவே எப்போதும் குளிர்ந்த நீர் சுரந்து கொண்டே இருக்கும் துறவியின் சமாதி, ஊரில் இருக்கும் பெண்கள் பிடிக்கும் தண்ணீர் குடங்கள் எல்லாம் காலியாகிப் போவது, ஊருக்குள் பெயர் தெரியாத புழுக்கள் உண்டாவது, எங்கிருந்தோ வானில் இருந்து வரும் கொக்குக் கூட்டத்தால் அந்தப் புழுக்கள் அழிவது, மீன்களோடும் தவளையோடும் பேசித் திரியும் சின்னஞ்சிறு திருமால் என இந்திய நாட்டின் தொன்மையான கதைகளில் இருக்கும் மாயத்தன்மையை நாவலின் பல இடங்களில் நம்மால் காண இயலுகிறது.

இத்தனைக்குப் பிறகு, இந்த நாவலின் குறைகள் என்று எதைச் சொல்லலாம்?

முதலாவதாக நாவலின் கதை நடைபெறும் காலம் மற்றும் இடம். கதையின் பின்பாதியில் இருக்கும் விவரணைகளைப் பார்க்கும்போது இது மதுரையைச் சுற்றி நடக்கும் கதை என்பதை அறிந்து கொள்ளலாம். ஆனால் எப்போது நடைபெறுகிறது என்பதைத் தெளிவாக வரையறுத்துச் சொல்ல இயலவில்லை. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்பாக நடக்கும் கதை எனக் கொண்டால் ஒரு சில இடங்களில் இருக்கும் விவரங்கள் சற்றே வசதிகள் அதிகம் உள்ளதைப் போல சொல்வதால் சிறிது குழப்பம் ஏற்படுகிறது.

இரண்டாவதாக, கதையின் அடிநாதமாக இருக்கும் குற்றப்பரம்பரைச் சட்டம் பற்றி இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்லி இருக்கலாம். என்ன மாதிரியான நெருக்கடிகளுக்கு மக்கள் ஆளானார்கள்.. அவர்களுடைய எதிர்ப்பு எத்தகையதாக இருந்தது என்ற எந்தத் தகவல்களும் முழுமையாக சொல்லப்படவே இல்லை. அப்படி இருப்பின் இது சரித்திரத்தைப் பதிவு செய்யும் மிக முக்கியமான நாவலாக இருந்திருக்கும்.

மூன்றாவதாக, புற சூழல் பற்றிய வர்ணனைகள் இந்த நாவலில் மிகவும் கம்மியாகவே காணக் கிடைக்கிறது. மனிதர்களையும், அவர்களின் குணங்களையும் முக்கியமாகப் பேசுவதே எஸ்ராவின் எல்லாப் புத்தகங்களிலும் காணக் கிடைக்கும் யுத்தி. அதுவே இங்கும் நடந்து இருக்கிறது.

வேம்பிலை கள்வர்கள் வாழும் ஒரு மூர்க்கமான ஊர். சரி.. ஆனால் அங்கு வேம்பர்கள் மட்டும் இல்லையே? அது போக சாயக்காரர்கள்... மற்ற ஜனங்கள் எல்லாம் வந்ததெப்படி? அந்த ஊரின் அமைப்பு எப்படி இருக்கும்? நாவலில் இவற்றுக்கு பதில் இல்லை. ஒவ்வொரு ஊராகப் போய் தூங்கி, அந்த ஊரின் இயல்புகளைப் பேசும் மனிதனை உபபாண்டவத்திலும் சந்தித்ததாக ஞாபகம்.

கடையாக நாவலின் நீளம். என்னைப் பொறுத்தவரை நாகுவின் மரணத்தோடு நாவல் முற்றுப்பெறுகிறது. எனினும் காலம் காலமாக சாபம் நீடிக்கிறது என்பதைச் சொல்லும் விதமாக, நாகுவின் வாரிசுகளான திருமால் மற்றும் வசந்தாவின் பாடுகளைச் சொல்லும்போது சற்றே அயர்ச்சி ஏற்படுதைபோல எனக்கொரு உணர்வு.

"எந்தவொரு கதையின் முடிவையும் வாசகனே தீர்மானிக்கிறான்... கூடுதலாக சில பக்கங்களை எழுதிப் பார்க்கலாம்.. இல்லையெனில் முன்னதாகவே முடிக்கலாம்.." சமீபத்தில் எஸ்ரா எழுதிய ஒரு பத்தியில் சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. சிற்சில குறைகள் இருப்பினும், நாவலின் தெளிவான நடையும் எஸ்ராவின் கதை சொல்லும் முறையும் அவற்றை மறக்கடிக்கின்றன.

நாவலை வாசித்து முடித்தபின்னும் வேம்பலையும், அதன் மனிதர்களும் இன்னும் நெஞ்சை விட்டு நீங்க இயலாதவர்களாக இருக்கிறார்கள். ஏன் இத்தனை கஷ்டங்களை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது என்று மனம் அரற்றுகிறது.. அந்த உணர்வை உருவாக்குவதுதான் எஸ்ராவின் வெற்றி. கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டிய புத்தகம்.

நெடுங்குருதி
உயிர்மை வெளியீடு
இரண்டாம் பதிப்பு - செப்டம்பர் 2005
விலை - 275/-

15 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

நேற்று ஏற்கனவே எழுதியதுதான்.. ஏதோ பிரச்சினை காரணமாக உரலி ஓப்பன் ஆகாத நிலையில், மீண்டும் பப்ளிஷ் செய்துள்ளேன்..

மேவி... said...

பாஸ் .. தொடரை முடிச்சிடீங்களே ..வாழ்த்துக்கள் ..முடிக்க மாட்டீங்கன்னு ல எதிர்பார்த்தேன் :)

மேவி... said...

"கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டிய புத்தகம்."

காசு குடுக்காமல் வசிக்க முடியுமா தல ??? ஏதோ ஓசி ல இருக்கிற புஸ்தகத்தை வசிக்க சொல்லுற மாதிரி நீங்க பாட்டுக்கு சொல்லிட்டு போய்டீங்க


"எந்தவொரு கதையின் முடிவையும் வாசகனே தீர்மானிக்கிறான்..."

ஏன்ன அவன் தானே காசு குடுத்து புஸ்தகத்தை வாங்குறான். அந்த உரிமை கூட அவனுக்கு இல்லாட்டி எப்புடி ???

கார்த்திகைப் பாண்டியன் said...

//டம்பி மேவீ said...
பாஸ் .. தொடரை முடிச்சிடீங்களே ..வாழ்த்துக்கள் ..முடிக்க மாட்டீங்கன்னு ல எதிர்பார்த்தேன் :)//

சரித்திரத்தை மாத்திட்டோம்ல.. எப்பூடி..:-)))

//காசு குடுக்காமல் வசிக்க முடியுமா தல ??? ஏதோ ஓசி ல இருக்கிற புஸ்தகத்தை வசிக்க சொல்லுற மாதிரி நீங்க பாட்டுக்கு சொல்லிட்டு போய்டீங்க //

ஏன்யா.. இதென்ன ஓசில உண்டக்கட்டி வாங்கித் திங்குற மாதிரியா?

மேவி... said...

"பிரபஞ்சன்
நெடுங்குருதி - எஸ்ரா (1) படிக்க இங்கே கிளிக்குங்கள்.."

அப்ப நீங்க எழுதின படிக்க வேண்டாம்ன்னு சொல்லுறீங்களா ?? (எனக்கு இது ஏதோ ஒரு அபாய எச்சரிக்கை மாதிரி இருக்கு ..ஒடுங்க ஒடுங்க அது நம்பள நோக்கி வருது)

தேவன் மாயம் said...

Karthi ! Very nice!!

கார்த்திகைப் பாண்டியன் said...

//டம்பி மேவீ said...
அப்ப நீங்க எழுதின படிக்க வேண்டாம்ன்னு சொல்லுறீங்களா ?? (எனக்கு இது ஏதோ ஒரு அபாய எச்சரிக்கை மாதிரி இருக்கு ..ஒடுங்க ஒடுங்க அது நம்பள நோக்கி வருது)//

என்னையா இது? இங்கிலிஷ் டப்பிங் படம் பாக்குற மாதிரி இருக்கு?

//தேவன் மாயம் said...
Karthi ! Very nice!!//

நன்றி தேவா சார்..

அத்திரி said...

ஆனாலும் இந்த எலக்கியவாதிங்க தொல்லை தாங்க முடியல

Jegadeesh Kumar said...

நெடுங்குருதி பற்றின பதிவுக்கு நன்றி.
அடுத்து எஸ்.ரா எது வாங்கவேண்டுமென்று யோசித்துக் கொண்டிருந்தேன். நல்ல வழி காட்டினீர்கள். உப பாண்டவம்தான் பொறுமையைச் சோதிக்கிறது.

கார்த்திகைப் பாண்டியன் said...

//அத்திரி said...
ஆனாலும் இந்த எலக்கியவாதிங்க தொல்லை தாங்க முடியல//

உங்களுக்கு பொறாம..:-)))

//ஜெகதீஷ் குமார் said...
நெடுங்குருதி பற்றின பதிவுக்கு நன்றி.
அடுத்து எஸ்.ரா எது வாங்கவேண்டுமென்று யோசித்துக் கொண்டிருந்தேன். நல்ல வழி காட்டினீர்கள். உப பாண்டவம்தான் பொறுமையைச் சோதிக்கிறது.//

உபபாணடவம் ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் ஒவ்வொரு அனுபவத்தை தரக்கூடியது.. பொறுமையாக வாசியுங்கள் நண்பா

செ.சரவணக்குமார் said...

மிக நல்ல விமர்சனப் பார்வை நண்பரே.

Thamira said...

நாவலைப் பற்றிய மிக விரிவான அலசல். துணிச்சலாக அதில் நீங்கள் கண்ட குறைகளையும் முன்வைத்திருக்கிறீர்கள். எஸ்ரா பார்த்தால் மகிழ்வார். பெரும்பாலும் நாவலின் கதையை சொல்லிக் கொண்டிருந்ததை விட அது ஏற்படுத்திய தொடர் உணர்வுகளையும் கொஞ்சம் பகிர்ந்துகொண்டிருந்தால் விமர்சனம் முழுமையடைந்திருக்கும். நன்றி, வாழ்த்துகள்.

நான் என் பகிர்வில் இவ்வாறு சுருக்கமாக முடித்துக்கொண்டேன். :-)

//
வெயிலும், மழையும், காற்றும், பனியும் மாறி மாறி உச்சவேகத்தில் பொழிகிறது. வேம்பலை என்ற தென் தமிழகத்துக் கிராமமும் அதன் மனிதர்களும் தனி உலகமாய் நம் கண்முன்னே விரிகிறார்கள். ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறை மனிதர்களையும் நாம் காண்கிறோம். அவர்களின் துக்கமும் சந்தோஷமும் நம்முடையதைப்போல உடனிருந்து உணர்கிறோம். வேம்ப‌லையை இழந்து தவிப்ப‌வ‌ர்க‌ள் அதைக்க‌ண்டு ஆன‌ந்திக்க‌லாம், அத‌ன் புழுதித்தெருக்க‌ளில் ஓடி விளையாட‌லாம். வேம்ப‌லையைத் தெரியாத‌வ‌ர்க‌ள் சில‌ ப‌த்தாண்டுக‌ளுக்கு முன்ன‌ர் அவ‌ர்க‌ள் பெற்றோரோ அல்ல‌து அவ‌ர்க‌ளை பெற்ற‌வ‌ர்க‌ளோ வாழ்ந்த‌ இட‌த்தையும், வாழ்க்கையையும் தெரிந்துகொள்ள‌லாம், வாழ்ந்து பார்க்க‌லாம்.//

கார்த்திகைப் பாண்டியன் said...

//செ.சரவணக்குமார் said...
மிக நல்ல விமர்சனப் பார்வை நண்பரே//

நன்றி நண்பா..

//ஆதிமூலகிருஷ்ணன் said...
பெரும்பாலும் நாவலின் கதையை சொல்லிக் கொண்டிருந்ததை விட அது ஏற்படுத்திய தொடர் உணர்வுகளையும் கொஞ்சம் பகிர்ந்துகொண்டிருந்தால் விமர்சனம் முழுமையடைந்திருக்கும். நன்றி, வாழ்த்துகள்.//

கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விஷயம்.. நன்றி ஆதி.. அடுத்த முறை திருத்திக் கொள்ளுகிறேன்.. உங்களுடைய இடுகையையும் தேடி வாசித்து விடுகிறேன்..:-))

Thamira said...

நோநோ.. மொத்தமே அவ்வளவுதான்னு சொல்லிட்டேன்ல.. அப்புறம் எங்க போச்சு உங்க தொடர் உணர்வுகள்னு கேட்காதீங்க.. :-))))

கார்த்திகைப் பாண்டியன் said...

@ ஆதி..

ஆகா.. ரைட்டு தல.. சூது புரிஞ்சிடுச்சு..:-)))