November 20, 2010

மூர்த்தியும் மேட்டர் புத்தகங்களும்

”ஏய்யா.. தங்கம்.. கொஞ்சம் எந்திரிய்யா..”

மூர்த்தி புரண்டு படுத்தான்.

“போங்கம்மா.. காலங்கார்த்தால மனுஷனத் தூங்க விடாம நொச்சு பண்ணிக்கிட்டு..”

வாரயிறுதி நாட்களில் மூர்த்திக்கு காலை என்பது பதினோரு மணிக்குத்தான் விடியும். அதற்கு முன்பான எல்லா நேரமுமே அவனுக்கு அதிகாலைதான்.

“ஒரே ஒரு நிமிஷம்ப்பா.. அம்மா கேக்குறதுக்கு பதில் சொல்லிட்டு தூங்கு சாமி.. நம்ம வீட்டுக்குள்ள கண்ட கண்ட அசிங்கமான புத்தகம்லாம் கிடக்குது. நீ ஏதும் கொண்டு வந்தியாப்பா?”

அவன் போர்வையை இழுத்து மூடிக்கொண்டு எரிச்சலாக சொன்னான்.

“எனக்கு ஒரு வெங்காயப் புத்தகமும் தெரியாது. தூங்க விடுங்கம்மா..”

அவன் எழுந்தபோது மணி பதினொண்ணரை. மெதுவாக நடந்து பின்கட்டுக்குப் போனவன் பேஸ்டை பிரஷ்ஷில் ஈசிக்கொண்டு முன்வாசலுக்கு வந்தான். அந்த நேரத்துக்கு அவன் வாயில் பிரஷ்ஷோடு நிற்பது அந்தக் காலனிவாசிகளுக்கு பழகிப்போன ஒன்று. தண்ணி எடுத்துக் கொண்டு போன பக்கத்து வீட்டு நர்ஸ் ஃபிகர் இவனைப் பார்த்து சிரித்துப் போனது.

இவனும் பதிலுக்கு சிரித்து வைத்தபோதுதான் அது சரக்கென்று ஞாபகம் வந்தது. வீட்டுக்குள் ஏதோ புத்தகம் கிடப்பதாக அம்மா காலையில் எழுப்பினார்களே? அதுவாகத்தான் இருக்குமோ? அவனுக்கு வியர்க்க ஆரம்பித்தது.

மூர்த்திக்கு சென்னையில் பொறியியல் கல்லூரிப்படிப்பு. அப்பாவுக்கு ரயில்வே வேலை என்பதால் ஓசி பாஸ். வார இறுதியில் மதுரைக்கு ஓடிவந்து விடுவான். கல்லூரியில் படிக்கும் தன்னுடைய நண்பர்கள் கேட்டார்களே என அலையோ அலையென அலைந்து கடைசியாக மது தியேட்டர் வாசலில் இரண்டு சீன் புத்தகங்களை வாங்கி இருந்தான். மறுநாள் ஊருக்குக் கிளம்பும்வரை பத்திரமாக இருக்கட்டும் என்று அவற்றை பீரோவின் மேலே ஒளித்து வைத்திருந்தான். அதைத்தான் பூனையா பெருச்சாளியோ தட்டி விட்டிருக்க வேண்டும்.

என்ன சொல்லி அம்மாவை சமாளிப்பெதன யோசித்துக் கொண்டே உள்ளே போனவன் தொட்டியிலிருந்து தண்ணியை மோந்து வாய் கொப்பளிக்கத் தொடங்கினான். அம்மா அடுப்படியில் சமைத்துக் கொண்டிருந்தார்.

"தோசை ஊத்தட்டுமாய்யா.."

"உம்ம்..உம்ம்..”

கொடியிலிருந்த துண்டில் முகத்தை துடைத்துக்கொண்டே மெதுவாகக் கேட்டான்.

“என்னமோ தூங்கும்போது புத்தகம் அது இதுன்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்க? என்னம்மா?”

“நெஜமாவே உனக்கு ஒண்ணும் தெரியாதா?”

“சத்தியமா இல்லம்மா..”

“ரெண்டு புத்தகம்யா.. அசிங்க அசிங்கமா ஆம்பள பொம்பள படம் போட்டது.. கண்டமேனிக்கு எழுதி இருந்துச்சு. நம்ம வீட்டு உள்ரூம்ல கிடக்கு. எனக்கு ஒரு நிமிஷம் உடம்பெல்லாம் பதறிப் போச்சு. நம்ம பையனா இப்படின்னு? இப்போ நீ இல்லைன்னு சொன்னபிறகுதான் நிம்மதியா இருக்கு..”

எதுவும் பேசமுடியாமல் மென்று முழுங்கியபடி மூர்த்தி வீட்டுக்குள் திரும்பினான். பின்னாடி அம்மா சொல்வது காதில் விழுந்தது.

”காலம் போன காலத்துல உங்க அப்பாவுக்கு ஏந்தான் புத்தி இப்படிப் போகுதோ? இன்னைக்கு அந்த மனுஷன் வீட்டுக்கு வரட்டும் பேசிக்கிறேன்...”

மூர்த்திக்கு யாரோ அடிவயிற்றில் கத்தியை சொருகினாற்போல இருந்தது. தன் மீது அம்மா வைத்திருக்கும் நம்பிக்கை ஒரு பக்கம் என்றால் எந்தத் தப்புமே செய்யாத அப்பாவைப் போய் அம்மா சந்தேகப்பட வைத்து விட்டோமே என்ற குற்றவுணர்வு ஒரு புறம். அவனுக்கு தன்மீதே கோபம் கோபமாக வந்தது.

வெகு நேரம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவனாக மீண்டும் அடுப்படிக்குப் போனான்.

"அம்மா.."

"என்னய்யா.."

"அந்த புத்தகங்களை உள்ளே கொண்டு வந்து வச்சது நாந்தாம்மா.. பசங்க கேட்டாங்கன்னு.. "

அம்மா வேலையை ஒரு நிமிஷம் நிப்பாட்டிவிட்டு அவனைப் பார்த்தார். பிறகு சகஜமாகி வேலையைத் தொடர ஆரம்பித்தார். அவருடைய அமைதியின் அர்த்தம் மூர்த்திக்குப் புரியவில்லை.

"ஏதாவது திட்டுறதுன்னா திட்டிருங்கம்மா.. ஆனா இப்படி அமைதியா இருக்காதீங்க.."

கிட்டத்தட்ட அழுதுவிடுபவன் போல சொன்னான். அம்மா வேலையை நிப்பாட்டிவிட்டு அவனருகே வந்து நின்றார்.

"தம்பி.. நாம கறி சாப்புடுறோம்னு எல்லோருக்குமே தெரியும். அதுக்காக யாரும் எலும்ப மாலையா கோர்த்து போட்டுக்கிறோமா? இல்லையே.. அதுமாதிரித்தான் இதுவும்.. சாப்பிடுற மாதிரி.. தூங்குற மாதிரி.. செக்சும் ஒரு பீலிங்க்தான்.. அது எல்லார்கிட்டயும் இருக்கு.. அது தெரிஞ்சுக்கிற காலத்துல தானாத் தெரிஞ்சிக்கணும். அத விட்டுட்டு இப்படி பச்சை பச்சையா புத்தகம் எல்லாம் எதுக்குப்பா? நீ படிச்சவன். புரிஞ்சுக்குவன்னு நினைக்குறேன்.."

".."

"தோசை ஊத்திட்டேன். வா சாப்பிடு.."

வெகு கண்ணியமாகவும் பொறுமையாகவும் அம்மாவால் அதைத் தாண்டிப் போக முடிந்ததென்பது மூர்த்திக்கு ஆச்சரியமாகவும், கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது. தெளிந்தவனாக சாப்பிட உட்கார்ந்தான்.

அதற்குப் பிறகு அவன் வீட்டுக்கு மேட்டர் புத்தகங்களை கொண்டு போவதேயில்லை.

21 comments:

Balakumar Vijayaraman said...

//அதற்குப் பிறகு அவன் வீட்டுக்கு மேட்டர் புத்தகங்களை கொண்டு போவதேயில்லை.//

அவ்வளவு தானா, மொத்தமாலாம் திருந்தலையா?

எண்ணங்கள் 13189034291840215795 said...

நன்று..

சம்பத் said...

//அதற்குப் பிறகு அவன் வீட்டுக்கு மேட்டர் புத்தகங்களை கொண்டு போவதேயில்லை.//

அதை நீக்கிவிடுங்களேன் பாண்டியன். கதை நன்று...

Prabu M said...

//தம்பி.. நாம கறி சாப்புடுறோம்னு எல்லோருக்குமே தெரியும். அதுக்காக யாரும் எலும்ப மாலையா கோர்த்து போட்டுக்கிறோமா?//

இந்த வரி பளிச்!

சிவக்குமரன் said...

என்னா நண்பா இது? என்னாமோ கொறயுதே?

கார்த்திகைப் பாண்டியன் said...

ஜாலியா எழுதுறதா இல்லை சீரியசா கருத்து சொல்றதான்னு குழம்பி, குழப்பி இருக்கேன்... எனக்கே நல்லாத் தெரியுது.. சகிச்சுக்கோங்க மக்களே..

மேவி... said...

வாத்தியாரே .... பெரிய எழுத்தாளராகும் கனவுல இருக்கீங்க . இந்த மாதிரி மொன்னைய கதை எழுதிகிட்டிருந்த , கடைசில குமுதத்துல ஒரு பக்க கதை எழுத போக வேண்டியது தான்.

கடைசி வரிகள் நல்லாயிருக்கு

Unknown said...

அது மது தியேட்டரா? இல்லை வெற்றி தியேட்டரா??

நல்ல யோசனை.. வாழ்த்துக்கள்...

சுவாமிநாதன் said...

கதை நன்று... வாழ்த்துக்கள்...

தருமி said...

//அவ்வளவு தானா, மொத்தமாலாம் திருந்தலையா?//
//அதை நீக்கிவிடுங்களேன் பாண்டியன். கதை நன்று... //

ரிப்பீட்டேய்.......

அத்திரி said...

வாத்தியார், எலக்கியவாதி, எழுத்தாளர் என பன் முகம் கொண்ட அன்பு கா.பா உன் சேவை எங்களுக்கு தேவை......அவ்ப்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்்்வ்வ்வ்வ்வ்வ்வ்

அத்திரி said...

//டம்பி மேவீ said...
வாத்தியாரே .... பெரிய எழுத்தாளராகும் கனவுல இருக்கீங்க . இந்த மாதிரி மொன்னைய கதை எழுதிகிட்டிருந்த , கடைசில குமுதத்துல ஒரு பக்க கதை எழுத போக வேண்டியது தான்.//

தம்பி நீ வேணா ஒரு கதை எழுதிப்பாரேன்.......................

அத்திரி said...

// கார்த்திகைப் பாண்டியன் said...
ஜாலியா எழுதுறதா இல்லை சீரியசா கருத்து சொல்றதான்னு குழம்பி, குழப்பி இருக்கேன்... எனக்கே நல்லாத் தெரியுது.. சகிச்சுக்கோங்க மக்களே..//

எங்களுக்கு இதெல்லாம் தேவைதான்ன்ன்்்ன்ன்ன்்்ன்்்ன்்்்்்்்்ன்ன்ன்்்ன்ன்ன்ன்ன்ன்ன்

iniyavan said...

நண்பா,

நல்லா இருக்கு.

iniyavan said...

//அதற்குப் பிறகு அவன் வீட்டுக்கு மேட்டர் புத்தகங்களை கொண்டு போவதேயில்லை//

அப்போ வீட்டுக்கு வெளியில படிப்பான் அப்படிங்கற அர்த்தம் தெரியரதை தவிர்த்து இருக்கலாம்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//அதற்குப் பிறகு அவன் வீட்டுக்கு மேட்டர் புத்தகங்களை கொண்டு போவதேயில்லை.//
only cd and dvd

ALHABSHIEST said...

/அதற்குப் பிறகு அவன் வீட்டுக்கு மேட்டர் புத்தகங்களை கொண்டு
போவதேயில்லை./
"அதற்குப் பிறகு அவன் வீட்டுக்கு மேட்டர் புத்தகங்களை பற்றி யோசிப்பதேயில்லை".ன்னு இருந்திருந்தா நல்லாயிருக்குமா?

மதுரை சரவணன் said...

உங்க மேட்டர் சூப்ப்ர்... கதை அல்ல நிஜம் பாணியில் இருக்கிற உணர்வு.. அது சரி மேட்டர் முடிஞ்ச பாடில்லைபோல தோணுது.. மேட்டர் வீட்டுக்கு மட்டும் வருவதில்லை..!

மேவி... said...

@ அத்திரி : பாஸ் ...அந்த எலக்கிய பணியை எல்லாம் எப்பவோ ஆரம்பிச்சாச்சு....தினசரி வாழ்க்கை ல சிறுகதை போய் இப்ப தொடர்கதை வந்துகிட்டு இருக்கு ..படிச்சு பாருங்க ...அப்ப தெரியும் ஒரு இலக்கியவாதி உருவாகும் கதை ...காபா என்னையும் இலக்கியவாதி ஆக்கிடீங்களே (முதலவன் கிளைமாக்ஸ் ல வர மாதிரி வாசிக்கவும் )

மேவி... said...

@ sri : no. only downloads from internet...he he he

cheena (சீனா) said...

ம்ம்ம்ம்ம் - மூர்த்தி திருந்த வில்லையா - இல்லை கதாசிரியரின் திறமைக் குறைவா ? சொல்லவந்ததைச் சரியாகச் சொல்ல வில்லையா ? புத்தகங்களைப் படிப்பதே இல்லை எனச் சொல்ல நினைத்து வீட்டில் படிப்பதில்லை எனச் சொல்லி விட்டாரா ?