November 24, 2010

கீழக்குயில்குடியும் நாட்டார் கதைகளும்

கீழக்குயில்குடி - பசுமைநடை

கீழக்குயில்குடியில் இருக்கும் கீழவளவுமலை "சமணர்மலை" என்றுதான் அழைக்கபடுகிறது. மலை மீது ஏறிப் போவதற்கு படிகள் செதுக்கி இருக்கிறார்கள். ஆரம்பப் படிகளின் ஒரு ஓரமாக யானை உருவம் பொறிக்கப்பட்டு இருக்கிறது. இது எப்போது செதுக்கப்பட்டது என்று தெரியவில்லை. யானை "ஆசிவக" மதத்தின் குறியீடு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சற்றே சிரமப்பட்டு மலையேறிப் போனால் "பேச்சிப்பள்ளம்" என்ற இடத்தை அடைய முடிகிறது. இயக்கன் - இயக்கி என்பது யட்சியாக மாறி பின்பு பேச்சி என்றாகி இருக்கலாம். பள்ளமாக இருக்கும் சுனைப்பகுதி - அதை ஒட்டி இருக்கும் நீண்ட பாறைப்பகுதியில் தீர்த்தங்கரர்களின் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகக் காணக் கிடைக்கின்றன.


பேச்சிப்பள்ளம்

முக்குடையுடன் இருப்பவர் மகாவீரர். தலைக்கு மேலே ஐந்து தலை நாகம் இருப்பது பார்சுவநாதர் எனவும் தலைக்கு மேல் எழுதலை நாகம் இருப்பது கோமதிநாதர் என்றும் சொல்கிறார்கள். பார்சுவனாதரின் இயக்கிதான் பத்மாவதி. ஒரு முறை அவர் தவத்தில் இருக்கும்போது கமடன் என்கிற அரக்கன் அவருக்குத் தீங்கு செய்ய முற்படுகிறான். ஆபத்திலிருந்து காப்பதற்காக பார்சுவனாதரின் இயக்கனான தனந்தறேயன் ஐந்து தலை நாக வடிவில் வந்து காவல் செய்வதாகவும், மற்றொரு இயக்கியான பத்மாவதி சிங்கம் மீதேறிச் சென்று கமடனோடு போர் புரிந்ததாகவும் (செட்டிப்புடவில் இருக்கும் சிற்பம்) இந்த புடைப்புச் சிற்பங்கள் மூலமாக அனுமானிக்க முடிகிறது.


அச்சநந்தி கல்வெட்டு

இங்கே பேச்சிப்பள்ளத்தில் மிக முக்கியமானதொரு கல்வெட்டும் காணக்கிடைக்கிறது. “ஸ்ரீஅச்சநந்தியின் தாயார் செய்வித்த திருமேனிஎன்னும் பொருள்படும்படியாக வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு இருக்கும் இந்த கல்வெட்டு மிக முக்கியமான வரலாற்றுச் சான்றாகும். திருத்தக்கதேவர் எழுதிய சீவக சிந்தாமணியில் அச்சநந்தி என்பவர் சீவகனுடைய ஆசிரியராக வருபவர். சமணர் கழுவேற்றத்துக்குப் பிறகு எல்லா சமணப்பள்ளிக்கும் சென்று திருவுருவங்களை செதுக்கியதும் இவர்தான் என நம்பப்படிகிறது. தமிழ் இலக்கியமும் வரலாறும் ஒன்றொடொன்று பிணைந்து கிடைப்பதற்கான சான்றென இதைக் கொள்ளலாம்.


மாதேவி பெரும்பள்ளியின் மிச்சங்கள்

சிற்பங்களுக்கு சற்றுத் தள்ளி ஒரு பழங்காலக் கோவிலின் அடிவாரம் மட்டும் காணப்படுகிறது. இது ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டில் சமயப்பள்ளியாக விளங்கிய மாதேவி பள்ளி என்று சொல்கிறார்கள். மலையில் இன்னும் கொஞ்சம் மேலேறிப் போனால் வேறு சில மொழிகளில் எழுதப்பட்ட ஒரு கல்வெட்டும் காணக் கிடைக்கிறது. மலையிலிருந்து கீழிறங்கி வந்து நண்பர்கள் எல்லோரும் ஆலமர நிழலில் கூடினோம். பசுமை நடையின் இறுதி நிகழ்வாக நாட்டார்களின் வாய்வழி வழங்கும் கதைகள் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் பேரா.முத்தையா பேசினார்.

இன்றைக்கு வரலாற்றை ஒரே கோணத்தில் உற்றுநோக்கும் தவறு நிகழ்ந்து வருகிறது. வெறும் கல்வெட்டுகளையும் சங்கப்பாடல்களையும் மட்டும் வைத்து ஒரு இடத்தின் வரலாற்றை நாம் தீர்மானம் செய்து விடமுடியாது. அந்த இடத்துக்கு சம்பந்தப்பட்ட பொதுமக்கள் வாய்வழியாக சொல்லி வரும் விஷயங்களையும் நம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்து மரபின் ஆறு தரிசனங்கள் என்று குறிப்பிட்ட மதத்தை முன்னிருத்தும் வேலையை சிலர் செய்து வருகிறார்கள். உண்மையில் தமிழினத்தின் ஆதிமதம் சைவமாக இருக்க முடியாது. சைவத்துக்கு வெகு காலத்துக்கு முன்பே சமணமும் பவுத்தமும் நம்மண்ணில் வேரூன்றி விட்டன. இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டின்
ஆதிசமயம் என "ஆசீவகம்"தான் இருந்திருக்க வேண்டும். அந்த மதத்தின் மூன்று குருமார்களில் மிக முக்கியமானவர் பூர்ண காஷ்யபர்.

பிற சமயங்களின் ஊடுருவல் காரணமாக தமிழரின் வழிபாட்டு முறைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது. ஆசிவக பூர்ண காஷ்யபரின் மாறிய வடிவம்தான் இந்த மலையின் அடிவாரத்தில் கோவில் கொண்டிருக்கும் அய்யனார் என்று நம்பப்படுகிறது. இந்த அய்யனார் கோவிலின் முன்பிருக்கும் சிறு தாமரைக்குளத்துக்கு பூர்ண புஷ்கலை என்று பெயர். அய்யனாரின் இரு மனைவிகளின் பெயரும் பூரணி மற்றும் புஷ்கலை என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்தக்குளம் அவ்வாறு அழைக்கப்படுகிறது. அதேபோல தமிழ்நாட்டின் கோவில்களில் வெவ்வேறு பெயர்களில் வழங்கப்படும் அய்யனார்கள் எல்லாருமே ஆசிவக குருமார்களாக இருக்கக்கூடும்.


திரு.முத்தையா

இந்த மலையின் மேல் ஒரு கருப்பண்ணசாமி கோயில் இருந்ததாகவும் சொல்கிறார்கள். கள்ளர் இன மக்கள் அந்த சாமியைத்தான் தங்கள் குலதெய்வமாக வணங்கி வந்தார்களாம். ஆங்கிலேயர்கள் ரேகைச்சட்டம் கொண்டுவந்த காலத்தில் கள்வர்கள் அடங்க மறுத்து பிரச்சினை செய்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் மடக்கிப் பிடிக்க வழி தெரியாத ஆங்கில அரசு கடைசியாக இந்தக்கோவிலுக்கு கள்வர்கள் கூட்டமாக சாமி கும்பிட வந்தபோதுதான் அவர்களை தந்திரமாகக் கைது பண்ணியிருக்கிறார்கள்.

கள்வர் கூட்டத்தில்கரடியப்பன்என்கிற வல்லாளகண்டன் ஒருவன் இருந்திருக்கிறான். அவமைக் கடைசிவரை ஆங்கிலேயர்களால் பிடிக்க முடியவில்லையாம். அவனும் கடைசியில் தன்னுடைய பக்தியின் காரனமாகத்தான் சிக்கியிருக்கிறான். கோவில் திருப்பணிக்காக தினமும் தண்ணீர் கொண்டு வந்து தருபவனை குருக்களின் உதவியோடு பிடித்திருக்கிறார்கள். இவனுடைய சமாதி இப்போதும் கோவிலின் வாசலில் வேறு பேரில் காணக்கிடைக்கிறது. அவன் நினைவாகத்தான் அய்யனார் கோவிலின் உள்ளே தண்ணீர் சுமந்து வரும் ஒரு கரடியின் சிலை இருக்கிறது. இந்த ஊரைச் சுற்றி இருக்கும் மக்களில் பலருக்கு இவன் நினைவாக கரடி என்று வரும்படியான பெயர்களும் வைக்கப்பட்டுள்ளன.

மலை மீது இருந்த கருப்பண்ணன் கோவில் கீழே வந்ததெப்படி எனவும் ஒரு கதை இருக்கிறது. மீனாட்சி அம்மன் கோவில் வடக்கு கோபுரம். குதிரை மீது போய்க் கொண்டிருக்கும் வெள்ளைக்கார தௌரை தன்னை யாரோ கீழே தள்ளி விட்டதைப்போல விழுகிறான். திரும்பிப் பார்த்தால் யாரையும் காணவில்லை. மறுபடியும் குதிரையேற்றம் ஆனாலும் மீண்டும் கீழே விழுகிறான். தூரத்தில் யாரேனும் தெரிகிறார்களா என பைனாகுலர் கொண்டு பார்க்கும்போது கீழக்குயில்குடி மலை மீது நின்றபடி கருப்பு சிரித்துக் கொண்டிருந்தாராம். பயந்து போய் அந்த கோவில் குருக்களிடம் சொல்லி கோவிலைக் கீழே கொண்டுவர வேண்டும் என்கிறான். அவரோ பயப்படிகிறார். கோவிலுக்கு அருகில் இருக்கும் சிற்றூரில் நிலம் தருவதாகச் சொல்லி அவரை சம்மதிக்க வைக்கிறான். இதன் காரணமாகத்தான் இப்போது கூட வருடத்துக்கு ஒருமுறை கருப்பசாமி பக்கத்து சிற்றூர் கோவிலில் ஒரு மாதத்துக்கு எழுந்தருளுவதாக ஐதீகம்.

இப்படியாக ஒவ்வொரு ஊருக்கும் எத்தனையோ கதைகள் இருக்கும். இவை மறுவியிருக்கலாம், சற்றே மிகைப்படுத்தி சொல்லப்படிருக்கலாம் எனும்போதும் கண்டிபாக ஏதோவொரு முறையில் வரலாற்றை தனக்குள்ளே ஒளித்து வைத்துக் கொண்டிருக்கும். எனவே இந்தக் கதைகளையும் நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்என சொல்லி முடித்தார்.


உணவருந்தும் நண்பர்கள்

அதன் பிறகு நண்பர்கள் அனைவருக்கும் காலை உணவு பரிமாறப்பட்டது. சாப்பிட்டு விட்டு, அற்புதமானதொரு இடத்தை சுற்றிப் பார்த்த திருப்தியோடும், பல வரலாற்றுத் தகவல்களை அறிந்து கொண்ட மனநிறைவோடும் ஊருக்குத் திரும்பினோம். இந்த நிகழ்வை அருமையாக நடத்தி முடித்த நண்பர் .முத்துகிருஷ்ணனுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

மேலும் படங்களைப் பார்க்க முத்துக்கிருஷ்ணனின் முகநூல் பக்கத்தை சொடுக்குங்கள்..

7 comments:

செ.சரவணக்குமார் said...

பல புதிய தகவல்களை அறிய முடிந்தது நண்பா. நல்ல பயண அனுபவம். அ.முத்துகிருஷ்ணனின் பாலஸ்தீனப் பயணம் பற்றி எஸ்.ரா தளத்தின் வாயிலாக அறிந்தேன். அவருக்கு என் வாழ்த்துகள்.

பகிர்வுக்கு மிக்க நன்றி கா.பா.

குமரை நிலாவன் said...

பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

சரவணா..

ஆமா நண்பா.. பாகிஸ்தான் வழியா ஒரு ரவுண்டு ஆரம்பிச்சு இஸ்ரேல்ல முடிக்கிறார். அவருக்கு என்னோட வாழ்த்துகளும்..

நிலாவன்

நன்றி நண்பா..

நேசமித்ரன் said...

நல்ல தொகுப்பு கா.பா . எப்பவும் போல

நிலாமகள் said...

சுவையான தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி!

கார்த்திகைப் பாண்டியன் said...

@நேசன்

நன்றி தலைவரே

@நிலாமகள்

தொடர்ச்சியா வந்துக்கிட்டு இருக்கீங்க.. நன்றிங்க..

Karthik said...

Very interesting-na. Thanks for sharing.