July 25, 2011

இது என்ன ஊர் - சிங்கப்பூர் (5)

நண்பர் அப்பாவி முரு என்கிற முருகேசன் சின்னாளப்பட்டியைச் சேர்ந்தவரு. பிரியத்துக்குரிய ரம்யாக்கா மூலமாக எனக்குப் பழக்கம். முதல் முறை மதுரை காளவாசலில் இருக்கும் ஜெயராம் பேக்கரியில்தான் பார்த்துக்கிட்டோம். பிரியமான, எளிமையான மனுஷன். நானும் ஸ்ரீயும் ஒருமணி நேரம் மொக்கை போட்டு அப்புறமா அனுப்பி வச்சோம். அதுக்கப்புறமும் மனுஷன் நம்ம பக்கம் தலை வச்சு கூட படுக்க மாட்டார்னுதான் நினச்சேன். ஆனா விதி யார விட்டது? இரண்டாவது முறை நான் அவரப் பார்த்தது அவருக்கு ஆயுள் தண்டனை விதிச்சப்ப, அவரோட கல்யாணத்துல. ஒரு மனிதன் கடைசியாக சிரிச்சதுக்கு நாமளும் சாட்சியா இருந்ததில சின்ன சந்தோசம்.

சமீபமாக அவர் சென்னை வந்துட்டார்னு நான் நினச்சுக்கிட்டு இருந்ததால சிங்கை பயணத்தப்ப எனக்கு அவர் ஞாபகமே இல்லை. ஆனால் சிங்கை குழும மடலில் நான் வர்றது தெரிஞ்சவுடனே போன் செஞ்சு செல்லச் சண்டை போட்டாரு. நீ வாய்யா பார்த்துக்கலாம்னு சொன்னவரோடத்தான் புதன்கிழமை நான் சிங்கை ஜூவுக்குப் போறதுன்னு முடிவாச்சு. புதன் காலை சாவகாசமாக பஸ்ஸைப் பிடித்து முரு சொன்ன வாயில நுழையாத ஏதோ ஒரு ஸ்டேஷனுக்கு கிளம்புனேன். மனுசர் பாதிவழியிலேயே பஸ்ஸில ஏறிட்டார்.



முதலில் கொஞ்ச நேரத்துக்கு ஆளை அடையாளமே தெரியல. வீட்டு சாப்பாடு கல்யாண பூரிப்புனு மனுஷன் நல்லா சதை போட்டிருக்கார். ஊர்க்கதையெல்லாம் பேசிக்கிட்டு குறிப்பிட்ட இண்டர்சேஞ்சுக்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்த வங்கில சின்னதொரு வேலையை முடிக்க முரு போக நான் அங்கிருந்த ஷாப்பிங் மால்களில் சுத்திக்கிட்டு இருந்தேன். இருப்பதிலேயே டிவி தான் ரொம்பவே சல்லிசு. 42” டிவி எல்லாம் வெறும் முப்பதாயிரம் ரூபாய்க்குத் தர்றாய்ங்க. இருக்கப்பட்டவர்கள் பட்டாசு கிளப்பலாம். நாம எங்கிட்டு?

பப்பரப்பே என்று கடைகளையும் அங்கிருந்த அரையாடை மஞ்சள் மைனாக்களையும் சாவகாசமா பராக்கு பார்த்துக்கிட்டு இருந்தப்ப முரு வேலை முடிச்சு வந்தாரு. நண்பா இங்க இருக்குற ஹோட்டல்ல ஹக்கியான் - மீ அப்படின்னு ஒரு ஐட்டம் செமையா இருக்கும் வாங்க சாப்பிட்டுட்டு போவோம்னு இழுத்துட்டுப் போனார். ஏற்கனவே சீன உணவைப் பார்த்து டர்ராகிக் கிடந்தாலும் நண்பர் கூப்பிடும்போது மறுக்க முடியாதுன்னு போயாச்சு.

சூடா ரெண்டு பிளேட் வாங்கிட்டு வந்தார் மனுஷன். ஏதோ தொன்னைல வழிய வழிய கொடுத்த நூடுல்ஸ். ஆக்டோபஸ்ஸும் எறாலும் போட்டதாம். அதென்னமோ சீனாக்காரன் எல்லாம் நூடுல்ஸ தண்ணிவாக்குலதான் சாப்பிடுறாய்ங்க. நமக்கு அது ஆக மாட்டேங்குது. பரிதாபமா வேடிக்கை பார்க்கிறேன். தலைவன் பாட்டுக்கு சாப்ஸ்டிக் எடுத்து பட்டையக் கிளப்பிக்கிட்டு இருக்கார். மெதுவா எடுத்து வாயில போடுறேன். முடியல. எறா பச்சையா கெடக்கு. நூடுல்ஸ் ஒழுகுது. ங்கொய்யால.. பாண்டியா ஆசைக்கு வாங்கிட்டு இது உனக்குத் தேவையா? கொஞ்ச நேரத்துல அவரா நம்ம மூஞ்சி கொடுத்த எஃபெக்ட பார்த்துட்டு பிடிக்கலைன்னா வச்சிருங்கன்னு சொன்னாரு. அதுதாண்டா சான்சுன்னு எஸ்கேப்.



அங்க இருந்து கிளம்பி ஜூ. மொத்தம் மூணு விஷயம் - ஜூ, காட்டுக்குள்ள ராத்திரி சஃபாரி, பறவைகள் சரணாலயம். நேரமின்மை காரண்மா நாம் ஜூ மட்டும் பாக்குறதுன்னு உள்ள போயிட்டோம். இதுவரைக்கும் பொட்டக்காடுல அங்கனங்கன மிருகங்கள் நடமாடிக்கிட்டு இருக்குற ஜூவைத்தான் பார்த்து இருக்கேன். ஆனா சிங்கை ஜூ சான்சே இல்லை. சரணாலயமே ஏதோ மழைக்காடுகள் மாதிரித்தான் இருக்கு. அடர்காட்டுக்குள்ள நடந்து போற மாதிரியான உணர்வைக் கொண்டு வந்திடுறாங்க. நாங்க போன அன்னைக்கு மழையும் சேந்துக்க எடமே செமையா இருந்துச்சு. மத்தியானம் கேஎஃப்சியோட சாப்பாடு.

கண்ணாடிக்கு அந்தப்பக்கம் ரொம்ப நெருக்கத்துல போற மெகா சைஸ் முதலைகள், கிட்டக்க வந்து உருமுற சிறுத்தைகள் - சிங்கங்கள், நானூறு வருஷம் வாழுற ஆமைங்க, கொமோடோ டிராகன், வெள்ளைப்புலிகள், கங்காரு, மேலே வலையால் கூரை போடப்பட்ட பறவைகள் கூண்டு (ஜுராசிக் பார்க் எஃபெக்ட்), சிலந்தி மாதிரியான குட்டி இன்செக்ட்ஸ், வித விதமா நம்ம சொந்தக்காரங்க என எக்கச்சக்கமான மிருகங்கள். வழக்கம்போல பயத்தின் காரணமா பாம்புப் பண்ணைக்கு மட்டும் நான் போகலை. முருவுக்கு அதைச் சொல்லி என்னைக் கிண்டல் பண்ணினதுல அப்படியோரு குஷி.

மக்களைக் கவரக்கூடிய விதமா மூணு முக்கியமான ஷோ இருக்கு. “மழைக்காடுகள் திரும்பித் தாக்குகின்றன”ன்னு ஒரு நிகழ்ச்சி. காட்டை அழிக்குற மனுஷனோட பேராசைய மிருகங்கள் எதிர்த்து போராடுறதா கான்சப்ட். ராடண்ட்ஸ், குரங்குகள், பறவைகள்னு பட்டாசா இருந்தது. நாய்கள், கிளிகள் வச்சு குழந்தைகளுக்காகவே ஒரு நிகழ்ச்சி. அப்புறம் கடைசி நிகழ்ச்சிதான் எல்லாத்துலையும் டாப். சீல்களை வச்சு பண்றாங்க. அருமையா பழக்கப்படுத்துன கடல் சிங்கங்கள். நகைச்சுவையாவும் அதே நேரம் யோசிக்கிற மாதிரியான நல்ல நிகழ்ச்சிகள்.



சாயங்காலம் ஜூவுல இருந்து வெளியேறி முருவோட வீடு. கொஞ்ச நேரம் அங்க இருந்து நண்பர்களோட பேசிட்டு இருந்தேன். நம்ம ஊருல இருந்து காராச்சேவ வாங்கிட்டுப் போயி டப்பால போட்டுத் திங்கிற அளவுக்கு பயபுள்ளைங்க சாப்பாட்டுக்கு காஞ்சு கிடக்குதுங்க. ஒரு நல்ல டீ சாப்பிட்டுட்டு முருகிட்ட இருந்து விடைபெற்று அவரோட நண்பர் கூட காரேறி ஜம்முன்னு ஸ்டேஷனுக்கு வந்து எறங்கியாச்சு. வழில மலேஷியா எல்லைய வேற சுத்திக் காமிச்சாரு அந்த நல்ல மனுஷன். அவருக்கிட்டயும் சொல்லிக்கிட்டு அங்கயிருந்து கெளம்பி நேரா சைனாடவுன். அங்கன நண்பர் ரோஸ்விக் நம்மகூட சேர்ந்துக்கிட்டாரு.

க்யூட்டா சின்ன சின்ன கீ-செயின் எல்லாம் பொறுக்கிட்டு வந்தப்ப மழை வந்துருச்சு. அந்த ஏரியாவுல எக்கச்சக்கமான மசாஜ் பார்லர். வாழ்க்கைல நல்லவனா இருந்து என்னத்த சாதிச்சோம் பேசாம உள்ள நுழைஞ்சிடுவோமான்னு சின்ன நப்பாசை. ஹ்ம்ம்.. அதுக்கெல்லாம் துப்பு வேணும். நமக்கு அது துளி கூட கிடயாது. வேறென்ன. பெருமூச்சுதான். வர்ற வழியில சிங்கப்பூரோட சகல கில்மாக்களும் நடக்குற கிளார்க் குவே பகுதிய எட்டக்க நின்னு வெறிக்க வெறிக்க வேடிக்கை பார்த்துட்டுக் கெளம்பி வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். ரைட்டு.. வெற்றிகரமா மூணு நாள் முடிஞ்சது.

அடுத்தது எங்க ராசா ? செந்தோசா.

(பிரயாணிப்போம்..)

6 comments:

CS. Mohan Kumar said...

கடைசி போட்டோவில் உங்களை சுத்தி ஒளி வட்டம் தெரியுது !!

HajasreeN said...

ninga wacha noodles awarusapitara or apadiye wittutu wanthigalaa?

அப்பாவி முரு said...

//ninga wacha noodles awarusapitara or apadiye wittutu wanthigalaa?//

அதை அங்கேயே விட்டுட்டோம், கவலைப்படாம, நீங்க வாங்க சார், நான் புதுசாவே வாங்கித்தாறேன்.

Raju said...

முரு-வை இரண்டாவது முறை சந்தித்தது மதுரை ரேஸ்-கோர்ட்ஸ் மைதானத்தில்!
தகவல் பிழைகள் ஒடம்புக்காவாது வாத்தியாரே!!

கார்த்திகைப் பாண்டியன் said...

ராஜு @ நக்கீரா..
நாம் மதுரைல பார்த்தப்ப அவர யாருன்னே தெரியுது.. அதுதான் முதல் சந்திப்பு மாதிரி.. அப்பபோ வால்பையனப் பார்த்துட்டு ஓடிட்டாரு.. அதுக்குப்பொறவுதான் நாம அவர்கிட்ட பழகுனது..

தம்பி.. சூது எங்களுக்கும் தெரியும்ல..:-)))

Anonymous said...

வாழ்க! வளர்க! நலமா நண்பரே?