December 13, 2011

ஏழாம் அறிவு

(மாத இதழ் ஒன்றுக்காக எழுதிய பதிவு. அவர்கள் எதிர்பார்த்த விமர்சனமாக தமிழுணர்வைப் பேசும் படத்தைப் பாராட்டும் விதமாக எதுவும் இல்லையென்று பிரசுரிக்கவில்லை.)

ஏழாம் அறிவு

கஜினி என்கிற மிகப்பெரிய வெற்றிப்படத்துக்குப் பிறகு முருகதாஸ் - சூர்யா - ஹாரிஸ் ஜெயராஜ் மீண்டும் கூட்டணி சேர்ந்திருக்கும் படம் ஏழாம் அறிவு. இந்த வருடம் வெளியான எந்தத் தமிழ்ப் படத்துக்கும் இந்த அளவுக்கு விளம்பரமும் எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. "தமிழனே மறந்த ஒரு தமிழரின் பெருமையைப் பேசி இருக்கிறோம். படம் பார்த்து வெளியே வரும் ஒவ்வொருவரும் நானொரு தமிழன் என மார் தட்டிச் சொல்லிக் கொள்ளலாம்" என பாடல் வெளியீட்டு விழாவில் முருகதாஸ் கொளுத்திப்போட பக்கென்று பற்றிக் கொண்டது நெருப்பு. இந்த பிரமாண்ட எதிர்பார்ப்பை படம் நிறைவேற்றி இருக்கிறதா?



படம் ஐந்தாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கிறது. பல்லவ இளவரசனான போதிதர்மர் தற்காப்புக் கலைகளிலும் மருத்துவத்திலும் தேர்ந்த பயிற்சி உடையவர். அஷ்டமா சித்துகளில் ஒன்றான ஐம்பூதங்களையும் கட்டுப்படுத்தும் அசித்துவம் கற்றவர். தன் குருமாதாவின் கட்டளையை ஏற்று சீனதேசம் செல்கிறார். கொள்ளை நோயிலிருந்தும் தீய சக்திகளிடம் இருந்தும் சீன மக்களைக் காப்பாற்றுகிறார். அவர்களுக்கு தன் வித்தைகளையும் மருத்துவத்தையும் பயிற்றுவிக்கிறார். அவர் தங்கள் மண்ணில் புதைக்கப்பட்டால் நாடு நலமாக இருக்கும் என நம்பும் சீன மக்களின் வேண்டுகோளை ஏற்று விஷம் உண்டு அங்கேயே மரித்துப் போகிறார். தாமோ என்று இன்றைக்கும் சீன மக்கள் புத்தருக்கு இணையாக அவருக்குக் கோயில் கட்டி வழிபாட்டு வருகிறார்கள்.

நிகழ்காலத்தில் சுருதி ஒரு ஆராய்ச்சி மாணவி. போதிதருமரைப் பற்றியும் அவரது மரபணுக்கள் பற்றியும் அறிந்து கொண்டு அவரது வம்சாவழித் தோன்றலான சூர்யாவைத் தேடி வருகிறார். சர்க்கஸில் பணிபுரியும் சூர்யா சுருதியக் காதலிக்கத் தொடங்குகிறார். ஆனால் சுருதியோ ஆராய்ச்சிக்காகவே சூர்யாவை பயன்படுத்த நினைக்கிறார். இந்நிலையில் இந்தியாவில் தொற்று நோயைப் பரப்பவும் போதிதருமரை மீண்டும் கொண்டு வரத் துடிக்கும் சுருதியைக் கொல்லவும் ஒரு சீன உளவாளியை அவர்களது அரசாங்கம் அனுப்பி வைக்கிறது. கடைசியில் நீதி வென்றதா என்பதும் போதி தருமர் மீண்டும் வந்தாரா என்பதும்தான் ஏழாம் அறிவின் கதை.



போதிதருமர் என்கிற இதுவரை யாரும் அதிகம் பேசாத விஷயத்தைப் பேசத் துணிந்த இயக்குனருக்குப் பாராட்டுகள். ஆனால் ஒரு படத்தின் வெற்றிக்கு அது மட்டும் போதாது. மிக அருமையான கதைக்களன், எந்த செலவும் செய்யத் தயாராக இருக்கும் தயாரிப்பாளர், தமிழ் சினிமாவின் தலைசிறந்த தொழில்நுட்ப வல்லுனர்கள், அர்ப்பணிப்புடன் கூடிய நடிகர்கள் என எல்லாம் கூடி வந்திருக்கும் நிலையில் ஏழாம் அறிவு தமிழின் மிக முக்கியமான படமாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் அது நிகழவில்லை என்பதே சோகமான விஷயம். படத்திற்கு செய்யப்பட விளம்பரமே அதற்கு எதிராக மாறி இருக்கிறது. இது வெறுமனே ஒரு வணிகப்படம் என வெளியாகி இருந்தால் இத்தனை ஏமாற்றம் இருந்திருக்காது. தமிழின் முதல் படம் என்கிற தொனியில் பேசிவிட்டு வெகு சாதாரணமானதொரு படத்தைத் தந்திருக்கிறார் முருகதாஸ்.

படத்தில் நம்பகத்தன்மை சார்ந்து எக்கச்சக்கமான கேள்விகள். படத்துக்காக நிறைய ஆராய்ச்சி செய்த மாதிரியெல்லாம் தெரியவில்லை. இணையத்தில் கிடைத்த ஒன்றிரண்டு தகவல்களை வைத்தே ஒப்பேற்றி இருக்கிறார்கள். போதிதருமரைப் பற்றிய பகுதி கதையோடு ஒன்றி வராமல் ஒரு ஆவணப்படம் போல வருகிறது. அவர் எதற்கு சீனாவுக்குப் போகிறார் என்பதற்கு நோய் இந்தியாவுக்குப் பரவாமல் இருக்க என சுருதி சொல்லும் ஒரு காட்சி இருக்கிறது. அப்படியானால் நோய் பரவும் என்பது தீர்க்கதரிசனமா? சர்க்கஸில் சூர்யா வேலை செய்கிறார் என்கிறார்கள். எந்தவொரு சர்க்கஸும் ஒரு மாதத்துக்கு மேல் ஒரே ஊரில் இருக்காது. பிறகெப்படி சூர்யா மூன்று மாதங்களாக சென்னையில் சுருதியின் பின்னால் திரிந்து கொண்டிருக்கிறார்? சமகால நவீன இளைஞனாக வரும் சூர்யா சர்க்கஸில் வேலை செய்பவர் என்பதை நம்பவே நமக்கு கஷ்டமாக இருக்கிறது. நோக்குவர்மம் மூலமாக மொத்தக் கூட்டத்தையும் வில்லன் கட்டுப்படுத்துவதும் ஓரளவுக்கு மேல் சலிப்படைய வைக்கிறது. பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு கற்ற குங்க்பூ கலையை ஒருவர் பார்ப்பதன் மூலமே சண்டை போட வைக்க முடியுமானால் என்னாவது? முன்னூறு கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு இந்திய அரசாங்கத்தையே காட்டிக் கொடுக்கும் பேராசிரியர் தன் தகவல்களை அடுத்தவர் பார்க்கும் வண்ணம் கணினியில் இத்தனை எளிதாக விட்டுச் செல்லுவாரா? பதில் தெரியாத கேள்விகள்.



படத்தில் சுவாரசியமான விஷயங்களும் இல்லாமல் இல்லை. நோய் தாக்கிய குழந்தையை போதிதருமர் காப்பாற்றும் காட்சியும் தன் குழந்தை உயிரோடு வருவதைக் கண்டு மகிழ்ச்சி பொங்க ஓடி வரும் தாயும் கொள்ளை அழகு. யானைக்கு வைத்தியம் பார்க்க அண்ணா சாலையில் அழைத்துப் போகும் சூர்யா சுருதிக்கு உதவுவது, அலைபேசியின் மூலம் சுருதியின் காதலை அறிந்து கொள்வது முதலியன ரசனையான காட்சிகள். ஒருவனின் மனதை மட்டும் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என ஜானி சொல்லி தாமோ என மதகுரு உறுமும் காட்சியும், கண்பார்வையின் மூலம் தனக்குத் தேவையான விஷயங்களை வாங்கி சூர்யாவைத் தேடி ஜானி வரும் காட்சிகளும் அட்டகாசம். ஆனால் இது போன்ற காட்சிகள் படத்தில் வெகு குறைவாகவே இருக்கின்றன.

முதல் பாதி கதை நாயகியின் பார்வையில் சொல்லப்படுகிறது. இரண்டாம் பாதி எதிர்நாயகனான சீன உளவாளியின் பார்வையில் செல்கிறது. இது மாதிரியானதொரு படத்தின் கதை நாயகனாக சூர்யா. போதிதருமன் வேடத்துக்காக நிறைய உழைத்து இருக்கிறார். உடம்பை இரும்பாக்கி கண்களில் வழியும் கருணையோடு அந்தக் கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார். தற்காப்புக் கலைகளில் பயிற்சி எடுத்து, சர்க்கஸ் கலைஞனாக நடிக்க பயிற்சி மேற்கொண்டு என நிறைய சிரமப்பட்டு இருக்கிறார். கமலின் மகள் சுருதி தமிழ் பேசத்தெரிந்த அழகான பெண் என்றாலும் அவருடைய தமிழ் உச்சரிப்பு பார்க்கும் மக்களை எரிச்சல் கொள்ள வைக்கிறது. படத்தின் அட்டகாசமான அம்சம் எதிர்நாயகனாக வரும் ஜானி திரையன். தீவிரமான தன் பார்வையின் மூலமே மிரட்டி எடுக்கிறார்.



படத்தின் மிகப்பெரிய ஏமாற்றம் ஹாரிஸ் ஜெயராஜின் இசை. டாக்சி டாக்சி பாடலை வேறு வடிவில் ரிங்கா ரிங்காவாகத் தந்திருக்கிறார். குழந்தைகளுக்கான பாடலைப்போல ஒலிக்கிறது சீனப்பாடல். உணர்வுகளை தட்டி எழுப்பவேண்டிய இன்னும் என்ன தோழா சுத்தமாக எடுபடவில்லை. முன் அந்திச் சாரல் நீ, யம்மா யம்மா ஆகிய பாடல்கள் கேட்க நன்றாக இருந்தாலும் படத்தில் தவறான இடங்களில் புகுத்தப்பட்டு இருக்கின்றன. பின்னணி இசை கடும் இரைச்சல் கூடவே எரிச்சலும். ரவி சந்திரனின் ஒளிப்பதிவு போதிதருமர் பகுதியினை மேலும் அழகாக்குகிறது. ஒரு தமிழ்ப்படத்தில் எந்த அளவுக்குச் சிறப்பாக முடியுமோ அந்தளவுக்கு சிறப்பாக சண்டைக் காட்சிகளை வடிவமைத்து இருக்கிறார் பீட்டர் ஹெயின். என்றாலும் பல ஆங்கில குங்க்பூ படங்கள் பார்த்த மக்களுக்கு இது அத்தனை ரசிக்காது. முதல் பாடலுக்கு ஆயிரம் நடனக்கலைஞர்கள், யம்மா யம்மா பாடலுக்கு போட்ட இரண்டு கோடி ரூபாய் அரங்கம் என வீணான பணத்தை சண்டைக் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் வரைகலையை மெருகூட்டப் பயன்படுத்தி இருக்கலாம்.

சின்னதொரு கதைக்கரு, நாட்டுக்கு நீதி சொல்வது, காட்சிகளில் தேவையில்லாத பிரமாண்டம் என எல்லாவற்றையும் வணிகரீதியாகக் கலந்து தரும் ஷங்கரின் சூத்திரத்தை முயன்று பார்த்திருக்கிறார் முருகதாஸ். ஆனால் தடுமாறும் திரைக்கதையால் பாதிக்கிணறு தான் தாண்டி இருக்கிறார். படத்தில் தமிழுணர்வு பற்றி நிறைய பேசினாலும் உணர்வு ரீதியாக அதைப் பார்வையாளனுக்குக் கடத்த முடியாத வியாபார நோக்கமே இருப்பதாகப் படுகிறது. கடைசியாக படத்தைப் பற்றி என்ன சொல்வது? எதிர்ப்பார்ப்புகளை மறந்துவிட்டு சாதாரண வணிகப்படம் என்கிற ரீதியில் ஏழாம் அறிவை ஒரு முறை பார்க்கலாம்.


4 comments:

Unknown said...

சூப்பர் விமர்சனம் ,இதை முன்னரே வெளியிடாதது ஏனோ ?

நீச்சல்காரன் said...

படத்தின் ப்ரோமோ பார்க்காதவர்களுக்கு இந்தப் படம் அருமையாகயிருக்கும்

கார்த்திகைப் பாண்டியன் said...

//மழைதூறல் said...

சூப்பர் விமர்சனம் ,இதை முன்னரே வெளியிடாதது ஏனோ ?//

பத்திரிக்கைக்கு எழுதினேன் நண்பா. அதனால் புத்தகம் வர்ற வரைக்கும் போடலை. (கடைசில பார்த்தா அவங்களும் போடலை)

//நீச்சல்காரன் said...

படத்தின் ப்ரோமோ பார்க்காதவர்களுக்கு இந்தப் படம் அருமையாகயிருக்கும்//

அதேதான் நண்பா..:-))

rajesh kanna said...

velutham maathri dubbakkur padathoda compare pannittanga. inga vijay jaikkanum ninikkura rasikkarkal mathiyil 7aam ariuv yettathu

inga vimarsanam yenra perla kannea theriyatha kaluthai panniyerukkanga.
latest namma nattula patent rights ethukku vanki irukkanga thriuma?
manjal velaiyatha nadu ethu theruma?
oru tamilanaiye maranthuttom?