February 22, 2012

உதிரிப்பூக்கள் - 7

ங்கள் குழாயடி குரூப்சின் மிக முக்கியமான ஆள் - கதாநாயகன் என்று கூட சொல்லலாம்- வீனா கூனா என்றும் "but" குமார் என்றும் "பாபா" குமார் என்றும் இன்னும் பல பெயர்களாலும் அழைக்கப்படும் வீரக்குமார் தான். நாம் சொல்வது எதையாவது ஒத்துக்கொள்ள முடியவில்லை என்றால் நேரடியாகச் சொல்லாமல் மென்று முழுங்கி "நீ சொல்றது சரிதான், பட்..." என்று ஜல்லியடிப்பதால் "பட்" குமார். பாபா வெளியான நேரத்தில் நானும் போஸ் கொடுக்கிறேன் பேர்வழி என்று நடுரோட்டில் நட்டமாய் நிற்க வழியில் வந்த மாடொன்று மிரண்டு முள்ளுக்காட்டுக்குள் தவ்வி ஓடக் காரணமென்பதால் "பாபா" குமார். இப்படியாக நம்மாளுக்கு பல செல்லப்பெயர்கள்.

ரயில்வே காலனியில் எங்கள் வீட்டுக்கு ரெண்டு வீடு தள்ளித்தான் குமாரின் வீடு இருந்தது. அவனுடைய மொத்தக் குடும்பமுமே ரொம்ப வீரமான குடும்பம், பெயரில் மட்டும். வீரம்மா, வீரலட்சுமி, வீரவேல் என அவன் உடன்பிறந்தோர் தொடங்கி அவனது வீட்டில் வளர்க்கப்பட்ட நாயின் பெயர் கூட வீரராஜா தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது தங்கள் வீரத்தை வெளிக்காட்ட குடும்பமாக உட்கார்ந்து சீட்டு விளையாடுவார்கள். பெரும்பாலும் ஆஸ்தான். அதில் எப்படிப் பார்த்தாலும் தோற்பது குமாராகத்தான் இருக்கும். தோற்பவர்கள் எல்லாரையும் உப்பு மூட்டை சுமக்க வேண்டும் என்பதை அவன் வெகு சந்தோசமாகச் செய்வான். அதற்காக வேண்டுமென்றே தோற்றுப் போகுமளவுக்கு பாசக்காரப் பயபுள்ள அது.

ன் வீட்டு மக்கள் மீது குமாருக்கு ரொம்பப் பிரியம். தனக்கென எதையும் தனியாக வாங்காமல் என்ன வாங்கினாலும் மொத்த குடும்பத்துக்கும் சேர்த்துத்தான் வாங்குவான். வீட்டுக்கு ரொம்ப அடங்கிய பிள்ளை. நாங்கள் எல்லாம் பள்ளி விட்டு வந்து விளையாடப் போனால் அவன் தொரட்டி எடுத்துக்கொண்டு தாங்கள் வளர்க்கும் ஆடுகளுக்கு இலை வெட்டிப் போடப் போவான். வேலை எல்லாம் முடித்த பின்னும் கூட அவன் அம்மாவிடம் அனுமதி கேட்டு பின்பே எங்களோடு விளையாட வருவான். ஆக மொத்தம் குணங்களைப் பொறுத்தவரை குமார் அப்படியே எனக்கு நேர்மாறாக நல்லவனாக இருந்தான்.

இருந்தான் என நான் சொல்லக் காரணம் இருக்கிறது. இந்த நல்ல குணமெல்லாம் நான் அவனோடு சேரும் வரைதான். அதன் பின்பாக பன்றியோடு சேர்ந்த கன்றுக்கட்டியும் என்பதைப் போல. கொஞ்ச நாட்களிலேயே குமாரின் அம்மா கண்ணீரும் கம்பலையுமாக எனது அம்மாவிடம் வந்து நின்றார்.

"கார்த்தி அம்மா.. உங்க மவன்கிட்ட சொல்லி வைங்க.. எம்பையன் ரொம்ப நல்லவன். ஒண்ணுக்குப் போகணும்னா கூட என்கிட்டே கேட்டுட்டுத் தான் போவான். ஆனா நேத்திக்குச் சாயங்காலம் எனக்குத் தெரியாம முக்குக் கடையில உங்க பையன் கூட நின்னு டீ சாப்பிட்டுக்கிட்டு இருக்கான். பார்த்த நிமிஷம் எனக்குக் குலை எல்லாம் ஆடிப் போயிருச்சு.. எப்படி இருந்த பய.."

அப்புறம் எனது அம்மா என்னைக் கூப்பிட்டு திட்டி.. பின்பு குமாரைக் கூப்பிட்டு மிரட்டி.. இனிமேல் ஒழுங்காக அம்மாவிடம் சொல்லிக் கொண்டுதான் ஒன்றுக்குப் போகணும் சரியா என்று பயலை சம்மதிக்க வைத்தபின்தான் அவனது அம்மா அமைதியானார்.

குமார் ரொம்ப நல்லவந்தான். ஆனால் அவனிடம் ஒரே ஒரு சிக்கல் இருந்தது. மனசுக்குள் தானொரு மன்மதக்குஞ்சு என அவனுக்கு நினைப்பு. நண்பர்கள் எல்லாரும் நடந்து போய்க் கொண்டிருப்போம். ஏதாவது பிகர்கள் கடந்து போகும். தாண்டிப் போனவுடன் பயல் எங்களிடம் கிசுகிசுப்பாகச் சொல்லுவான்.

"மாப்ள.. இப்பப் போனவள்ள ஒருத்தி என்னையவே பார்த்துக்கிட்டுப் போனாடா.."

"அதெல்லாம் இல்ல.. நாங்களும் உன்கூடத்தானடா வர்றோம்.."

"போங்கடா.. உங்களுக்கு எல்லாம் பொறாம.... அவ எனக்குக் கை கூட காமிச்சுட்டுப் போனா தெரியுமா.."

நெனப்புத்தான் பொழப்ப.. சனியன் தொலையட்டும் என்று விட்டு விடுவோம்.

பெண்களைப் பொறுத்தவரைக்கும் குமாரின் ராசியே தனிதான். அவன் அவர்களை லவ் பண்ணக் கூட வேண்டாம். மாப்ள அவ அழகா இருக்காள்ல என்று ஒரு தரம் பார்த்தாலே போதும். மிகச் சரியாக மூன்று மாதத்துக்குள் அந்தப் பெண்ணுக்குத் திருமணம் நிச்சயம் ஆகிவிடும் இல்லையென்றால் அவள் யாரையாவது இழுத்துக் கொண்டு ஓடி விடுவாள். அதற்காகவே கல்யாணம் ஆகாத பெண்கள் எல்லாம் குமார் தங்களை பார்க்க மாட்டானா என ஏங்குவதாக குமாரின் தங்கை ஒரு தடவை சொல்லிவிட எங்கள் கூட்டமே அவனை ஓட்டி எடுத்து விட்டது. ஆனால் நடப்பது எதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்கிற யோகி போல குமார் தனது கலர் பார்க்கும் கடமையைத் தவறாமல் செய்து கொண்டுதானிருந்தான்.

காலனியில் நாங்கள் இருந்த லைனில் மொத்தமே இருபது வீடுகள். அதில் தேறக்கூடியது என்று பார்த்தால் நாலைந்து பிகர்கள் மட்டுமே. ஆனால் அதிலும் குமாருக்கு வித்தியாசமான ஒரு கொள்கை இருந்தது. "மாப்ள.. ஆறுல இருந்து அறுபது வரைக்கும்.. பாரபட்சம் இல்லாமப் பாக்கணும்டா" என்பான். எங்கள் குழாயடி குரூப்சில் ரொம்பத் தெளிவாகவே சொல்வார்கள்.

"நம்ம நெட்ட கார்த்தி இருக்கானே.. சூப்பர் பிகரக் கூட ஓகேன்னுதான் சொல்லுவான். கிழிஞ்சது கிழியாதது, பட்டன் வச்சது வைக்காதது கூட சூப்பர்னு சொல்றது நம்ம குமார்தாண்டா..."

நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது எங்கள் லைனுக்கு அந்தப் பெண் புதிதாக வந்து சேர்ந்தாள். எரிந்து ஓய்ந்த இரண்டு ஊதுபத்திகளை ஒன்றன் மீது ஒன்றாக வைத்த மாதிரி இருப்பாள். ஏதோ இத்துப் போன ஆஸ்பத்திரியில் பயிற்சி நர்சாகப் பணிபுரிந்து கொண்டிருந்தாள். எனவே எப்போதும் வெள்ளை சேலைதான். அவள் வந்தாலே நான் அரை கிலோமீட்டர் தூரம் ஓடி விடுவேன். ஆனால் குமாருக்கு அவளை ரொம்பப் பிடித்து விட்டது. வொயிட் ரோஸ் என அவளுக்குப் பெயரிட்டான். என் ஆவி பொருள் எல்லாமே அவளுக்குத்தான் எனச் சபதம் செய்து அவளைத் துரத்தத் தொடங்கினான். அந்தப் பெண் வேறு ஒன்றிரண்டு முறை இவனைப் பார்த்து சிரித்து வைக்க பயலைக் கையில் பிடிக்க முடியவில்லை.

நன்றாக சந்தோசமாக சுற்றிக் கொண்டிருந்தவன் ஒருநாள் முகம் பூராவும் களையிழந்து திரும்பி வந்தான். என்னடா ஆச்சு என நண்பர்கள் எல்லாரும் விசாரித்தோம். அந்தப் பெண்ணின் அத்தை பையன் ஒருவன் இவனை மார்க்கெட்டில் கத்தியைக் காட்டி மிரட்டி இருக்கிறான். அவனை உடனடியாக ஒருகை பார்க்க வேண்டும் என ஒரே பிடிவாதம். டேய் வேண்டாம்டா என்று சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறான். சரி என்று நண்பர்கள் அனைவரும் மார்க்கெட்டுக்குக் கிளம்பிப் போனோம். அங்கே அந்த அத்தை பையன் நண்பர்களோடு கேரம் ஆடிக் கொண்டிருந்தான். நண்பர்கள் எல்லாரையும் இருக்கச் சொல்லிவிட்டு நானும் குமாரும் அவனிடம் போனோம். என்ன என்பதாக என்னை நிமிர்ந்து பார்த்தவனிடம் நாலே வார்த்தைதான் பேசினேன்.

"ஏண்டா.. உனக்கு எல்லாம் வெக்கமா இல்லையா.. இவன்தான் கண்ணு தெரியாமப் போய் அவ பின்னாடி சுத்துறான்னா.. நீ கத்தி எல்லாம் வேற காமிச்சு மிரட்டி இருக்க. ஒரு நல்ல பிகருக்காக அடிச்சுக்கிட்டாக் கூட பரவாயில்ல.. அவளுக்கு இதெல்லாம் ரொம்ப ஓவர்டா.. இந்த லட்சணத்துல சண்டைக்கு பஞ்சாயத்து பண்ண நாங்க நாலு பேரு வேற.. தூ.."

அத்தை பையன் என்ன நினைத்தானோ ஏது நினைத்தானோ ஒன்றும் சொல்லாமல் போய் விட்டான். ஆனால் அன்றைக்கு குமார் என்னைப் பார்த்த பார்வை இருக்கிறதே.. அதன் பிறகு பெண்கள் சார்ந்த எந்த விசயத்துக்கும் அவன் என்னைக் கூப்பிடுவதே இல்லை. இது நடந்த சில நாட்களில் வொயிட் ரோஸ் கூட வேலை பார்த்த ஒருவனோடு எஸ்சாகிப் போன தகவலைக் குமார் சொல்லித் தெரிந்து கொண்டேன்.

குமாரின் அப்பாவுக்கு ரிட்டையராக இரண்டு வருடம் இருக்கும்போது கிரேடு - 1 ஆக பதவி உயர்வு கிடைத்தது. எனவே வீடு மாற்றிக் கொண்டு சென்ட்ரிங் வீடுகள் இருந்த பகுதிக்குப் போய் விட்டான். இருந்தாலும் அவ்வப்போது எங்கள் குழாயடி சந்திப்புகள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன. ஒருநாள் ராத்திரி பத்து மணிக்கு குமாரின் அம்மாவிடம் இருந்து கால் வந்தது.

"உடனே கிளம்பி வாடா.."

வீட்டுக்குப் போனால் எல்லாரும் ரொம்ப அமைதியாக இருந்தார்கள். குமார் தேமேவென ஓராமாக உட்கார்ந்து இருந்தான்.

"என்னக்கா ஆச்சு.."

"அத உன் பிரண்டுக்கிட்ட நீயே கேளு.."

பிரச்சினை இதுதான். குமார் வீட்டுக்கு எதிர்வீட்டில் ஒரு பெண். அதற்கு நம்மாள் வைத்திருந்த செல்லப் பெயர் லேசர் லைட். அவளைக் கல்யாணம் செய்ய வேண்டும் என ஒற்றைக் காலில் நிற்கிறான். அதில் அவன் அம்மாவுக்கு உடன்பாடு இல்லை. அவர்களுக்குத் தெரிந்தே அந்தப் பெண்ணுக்கு பலரோடு பழக்கம் உண்டு என்பதால் மாட்டேன் என்கிறார்கள்.

"நீயே அவன்கிட்டப் பேசி ஒரு முடிவெடுக்கச் சொல்லு.."

அங்கே பேச முடியாது என்பதால் அவனைக் கூட்டிக் கொண்டு சாமி வீட்டுக்குப் போனேன். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம். எவ்வளவு முடியுமோ அவ்வளவும் சொல்லி முடித்தேன். எல்லாம் கேட்டு விட்டு கடைசியாகச் சொன்னான்.

"நீ சொல்றது சரிதான். பட்.. நான் ஏன் அவளைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது.."

"நாசமாப் போச்சு.. ஏண்டா நாயே.. அதைத் தாண்டா ரெண்டு மணி நேரமா சொன்னேன்.. "

இரண்டே வாரத்தில் அவனுக்கு வேறொரு இடத்தில் பெண் பார்த்து நிச்சயம் செய்து விட்டார்கள். சோகம் எல்லாம் அடங்கி இருக்கும் என நான் நம்பிய சில நாட்களுக்குப் பிறகு பயலைப் பார்க்கப் போயிருந்தேன். சிரித்தபடி வாடா வாடா என்றவன் என் மொபைலைக் கேட்டு வாங்கிக் கொண்டான்.

"கொஞ்ச நேரம் அவக்கிட்ட பேசிட்டு வர்றேண்டா மாப்ள.."

அந்தக் கொஞ்ச நேரம் அவனது பாஷையில் இரண்டு மணி நேரம் என்பதாக இருந்தது. முன்னூறு ரூபாய் பாலன்ஸ் தீர்ந்த பிறகு போனை என்னிடம் கொடுத்து விட்டு ஒரு ரூபா காயின் போனைத் தேடித் போய் விட்டான்.

அப்ப லேசர் லைட்? அதுதான் குமார்.

போன மாதம் குமாரைப் பார்க்க அவன் வீட்டுக்குப் போயிருந்தேன். ஐயா இப்போது மதுரையின் பெரிய ஹோட்டல் ஒன்றில் வேலை பார்க்கிறார். ஆண் ஒன்று பெண்ணொன்று என இரண்டு பிள்ளைகள். வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்தன. வாங்கிப் போயிருந்த தின்பண்டங்களை அவனது மனைவியிடம் கொடுத்து விட்டு இரண்டு பேரும் வெளியே வந்தோம். சாவகாசமாக அருகில் இருந்த கம்பத்தில் சாய்ந்து நின்று பேசிக் கொண்டிருந்தவன் சட்டென்று ஷார்ப் ஆனான்.

"மாப்ள.. சட்டுன்னு திரும்பிடாத.. எதுத்த வீட்டுல புதுசா ஒரு ஆண்ட்டி குடி வந்திருக்கு.. வெளில நின்னு என்னையவே பார்த்துக்கிட்டு இருக்காடா.."

த்தாளி.. நீ திருந்தவே இல்லடா.

8 comments:

vasu balaji said...

:))

Unknown said...

//மாப்ள அவ அழகா இருக்காள்ல என்று ஒரு தரம் பார்த்தாலே போதும். மிகச் சரியாக மூன்று மாதத்துக்குள் அந்தப் பெண்ணுக்குத் திருமணம் நிச்சயம் ஆகிவிடும் இல்லையென்றால் அவள் யாரையாவது இழுத்துக் கொண்டு ஓடி விடுவாள்//
எல்லா இடமும் இப்பிடி ஒரு பயபுள்ள இருக்கும்போல எங்க செட்லயும் ஒருத்தன் இப்பிடி இருந்தான்! :-)

முரளிகண்ணன் said...

:-))))

Unknown said...

//இந்த லட்சணத்துல சண்டைக்கு பஞ்சாயத்து பண்ண நாங்க நாலு பேரு வேற.. தூ.."//

ஆகா நம்ம ஸ்டைல்லயே உல்டாவா அடிச்சு விட்ருவீங்களா?
பாஸ் எனக்குப் பழைய ஞாபகங்கள் வருது! அருமையான பதிவு!

கோபிநாத் said...

;-)))

Unknown said...

இப்போதுதான் முன்னைய பாகங்களைப் படித்து முடித்தேன். விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. புத்தகமாக வெளிவந்தவுடன் வாங்கி வாசிக்கும் ஆவலுடன் இருக்கிறேன்!

அகல்விளக்கு said...

வாவ்....
அட்டகாசம் அண்ணா... :)

ஸ்வர்ணரேக்கா said...

முக்குக் கடையில உங்க பையன் கூட நின்னு டீ சாப்பிட்டுக்கிட்டு இருக்கான்.

--- என்ன கொடுமை சார் இது..?

பசங்க பாடு ரொம்ப பாவம் தான்..