July 2, 2009

கடவு - எஸ்ரா, கோணங்கி மற்றும் தமிழ்நதியின் விவாதம்..!!!

சனிக்கிழமை இரவு மூன்று மணி வரை ஆட்டம் போட்டதால் ஞாயிறு அன்று காலை தாமதமாகத்தான் கிளம்ப முடிந்தது. அரங்கத்துக்கு நானும் ஸ்ரீதரும் போய் சேர்ந்தபோது காலை பதினோரு மணி ஆகி விட்டது. நாங்கள் உள்ளே நுழைவதற்கும் கோணங்கியின் கதைகள் பற்றிய கட்டுரை வாசிக்கப்பட்ட நேரத்திற்கும் சரியாக இருந்தது. அரங்கில் எஸ்ராவும் கோணங்கியும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.
உண்மையை சொல்வதானால் எனக்கு கோணங்கியின் எழுத்துக்கள் சுத்தமாக புரிபடுவது இல்லை. அம்ருதா வெளியீடான அவருடைய முத்துக்கள் பத்து என்னும் சிறுகதைத் தொகுப்பை படிக்க முயற்சித்து, கதைகள் புரியாமல் மூடி வைத்து விட்டேன். இதை நண்பர் நரனிடம் சொன்னபோது அவரின் கருத்து வேறு மாதிரி இருந்தது. நரன் என்னிடம் கோணங்கி பற்றி வெகுவாக சிலாகித்து சொன்னார். அவர் ஒரு உண்மையான தேசாந்திரி எனவும் அவருடைய எழுத்துக்கள் அனைவரையும் கட்டிப்போடக் கூடியவை என்றும் சொன்னார். ஆனால் கோணங்கியின் எழுத்துக்கள் ஆழ்ந்த வாசிப்பை வேண்டுவன என்பதையும் குறிப்பிட்டு இருந்தார். எனவே கோணங்கி பற்றிய கட்டுரையை கவின்மலர் வாசித்தபோது கூர்ந்து கவனித்தேன்.
கட்டுரையை பற்றி பேசுவதற்காக எஸ்ரா அழைக்கப்பட்டார். அருமையாகப் பேசினார். அவர் சொன்னதில் சில வரிகள்...
"கோணங்கியின் எழுத்துக்கள் நிறைய பேரை போய் அடைவதில்லை. காரணம் அவரின் மொழி. மொழியில் அவர் புதிய வார்த்தைகளை, புதிய தளங்களை உண்டாக்குகிறார். அவரின் கதைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். கதை சொல்லும் கதைகள். கதை சொல்லாத கதைகள். வாசகனையும் கதையின் ஒரு பாத்திரமாக இழுத்துச் செல்லும் உத்தி அவருடையது. ஆழ்ந்த வாசிப்பின் மூலம் நாம் அவற்றை புரிந்து கொள்ள முடியும். தமிழின் ஆகச் சிறந்த படைப்பாளிகளில் அவரும் ஒருவர்.
நான் சமீபத்தில் ஒரு ஸ்தபதியை சந்தித்தேன். அவர் ஆண், பெண் சிற்பங்களை உருவாக்குகிறார். ஆனால் கை, கால், தலை, உடம்பு என எல்லாவற்றையும் தனித்தனியே செய்கிறார். அவற்றை எவ்வாறு இணைப்பது என்பதை கடைசியில் முடிவு செய்கிறார். உதாரணமாக ஒரு ஆணின் காலையும், ஒரு பெண்ணின் காலையும் கொஞ்சம் இடைவெளி உடன் வைத்தால் அவை அண்ணன் தங்கையை குறிக்கின்றன. அதே கால்களை ஒன்றின்மேல் ஒன்றாக வைத்தால் அவர்கள் காதலர்கள். அந்த இடைவெளியை தீர்மானிப்பவன் கலைஞன். இதுதான் கோணங்கியின் சூத்திரமும் கூட. தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத இடம் அவருக்கு உண்டு."
எஸ்ராவைத் தொடர்ந்து கோணங்கி பேசினார். அவருடைய எழுத்தைப் போலவே பேச்சும் கொஞ்சம் குழப்பமாகவே இருந்தது. ஆதி மனிதன், பனிவாள் என்றெல்லாம் சொன்னார். கண்டிப்பாக அவருடைய புத்தகங்களைத் தேடித் படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். பின்பு சிறிது நேரம் பதிவுலக நண்பர் கும்கியுடன் செலவிட முடிந்தது. மனிதர் இலக்கியத்தில் தீவிர ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். சாரு, சமகால இலக்கியம் என்று நிறைய விஷயங்களை அவரிடம் இருந்து அறிய முடிந்தது. நண்பர் வால்பையன் புண்ணியத்தில் குழந்தை மனம் படைத்த கவிஞர் விக்கிரமாதித்யனின் அறிமுகமும் கிடைத்தது.
தோழி உமாஷக்தியிடமும், நண்பர் அமிர்தம் சூர்யாவிடமும் என்னை அறிமுகம் செய்து கொண்டேன். மதிய உணவுக்குப் பின் சிறுகதைகள் குறித்த உரையாடல்கள் தொடர்ந்தன. ஜி.முருகனின் "சாம்பல் நிற தேவதை" என்னும் புத்தகத்தை பற்றி இரா.சின்னசாமி என்பவர் பேசினார். புத்தகத்தை விமர்சனம் செய்ததை விட தான் எந்த வகையில் அந்தப் புத்தகத்தை விமர்சிக்கத் தகுதியானவன் என்பது பற்றியும், தன்னுடைய வாசிப்பு அனுபவம் பற்றியும் அதிகம் பேசினார். திருச்செந்தாழையின் "வெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரதேசம்" என்னும் புத்தகத்தை லக்ஷ்மி சரவணக்குமார் விமர்சித்தார். பாராட்டினை விடவும் புத்தகத்தின் குறைகளை பெரிதாகச் சொன்னார். மாலை நான்கு மணிக்கு உரையாடல் முடிவுக்கு வந்தது.
நிகழ்ச்சியின் நிறைவு விழாவுக்கு தலைமை தாங்க நாஞ்சில் நாடன் வந்து இருந்தார். அனைத்து எழுத்தாளர்களும் கலந்து கொண்ட ஒரு சிறு உரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இன்றைய இலக்கிய சூழல் குறித்த தன்னுடைய கவலைகளை நாஞ்சில் நாடன் பகிர்ந்து கொண்டார். பெண்கள் பெருமளவில் கலந்து கொள்ள முடியாததையும், அப்படி வரும் பெண்களுக்கு மற்றவர்களால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் பேசினார். கடந்த முப்பது வருடங்களில் தமிழின் எந்தப் புத்தகம் பற்றிய விமர்சனமும் ஆங்கிலப் பத்திரிக்கைகளில் வந்தது இல்லை என்பதை சுட்டிக் காட்டினார். (இதை சமீபத்தில் சாருவின் தளத்தில் படித்ததாக ஞாபகம்). இன்றைய சூழ்நிலையில் சிறுகதை எழுத்தாளர்களுக்கு இருக்கக் கூடிய சவால்கள் பற்றி பேசும்படி கேட்டுக் கொண்டார்.
எஸ்ரா, கோணங்கி, சுரேஷ்குமார் இந்திரஜித், ஜி.முருகன், ஆதவன் தீட்சண்யா, தமிழ்நதி ஆகியோர் இந்த கலந்துரையாடலில் பேசினார்கள். கடைசியாகப் பேசிய தமிழ்நதி வெகு நாட்களாக என் மனதில் இருந்த ஒரு கேள்வியை சபையில் போட்டு உடைத்தார். "இங்கே எல்லோரும் எழுதுவது பற்றி பேசினீர்கள். எனவே எழுதாமல் விட்டுப்போன ஒரு விஷயத்தை பற்றி நான் கேள்வி கேட்க விரும்புகிறேன். அருகாமையில் தமிழின மக்கள் கொத்துக்கொத்தாக செத்த பொது ஏன் தமிழ் எழுத்தாளர்கள் யாரும் அதைப் பதிவு செய்ய வில்லை?". இதற்கான ஒரு தெளிவில்லாத பதிலை கோணங்கியும், எஸ்ராவும் சொன்னார்கள். வருங்காலத்தில் கட்டாயம் இதைப் பற்றி எழுதுவோம் என்றார்கள்.
இந்த சூழ்நிலையில் ஆதவன் தீட்சண்யா பேசத்தொடங்கினார். "இலங்கை தமிழர்கள் எங்களை மதித்ததே கிடையாது. எங்கள் மக்கள் மேலவளவிலும், திண்ணியத்திலும் கஷ்டப்பட்டபோது அங்கிருப்பவர்கள் வருந்தினார்களா? நாங்கள் மட்டும் ஏன் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?". இந்த ரீதியில் போனது அவருடைய பேச்சு. எனக்கு கண்ணை கட்டிக் கொண்டு வந்தது. இது என்ன சின்னப் பிள்ளைகள் சண்டையா? அன்னைக்கு என்னைய கொட்டுனைல.. பாரு இன்னைக்கு உன்னைய கடிச்சு வச்சுட்டேன்னு சொல்றதுக்கு? அதற்குள் அங்கிருந்த மக்களிலே ஒரு சிலர் தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்தனர். பேராசிரியர். அரசுக்கும் ஆதவனுக்கும் கொஞ்சம் பிரச்சினை ஆனது. இடையில் கவிஞர் விக்கிரமாதித்யனும் தனது எதிர்ப்பை சொன்னார். கடைசியாக நிகழ்ச்சியின் அமைப்பாளர் தேவேந்திர பூபதி வந்து அனைவரையும் சமாதானம் செய்து உரையாடலை முடித்து வைத்தார்.
இரண்டு நாட்கள். நண்பர்களின் அருகாமை. எக்கச்சக்கமான இலக்கிய அறிமுகங்கள். கொண்டாட்டம். மகிழ்ச்சிகளின் பரிமாற்றம். கடவுக்கும், அதன் அமைப்பாளர் கவிஞர் தேவேந்திர பூபதிக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்..!!!
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

30 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி.

குடந்தை அன்புமணி said...

சென்ற பதிவின் தொடர்ச்சியாக எழுதியிருந்த இந்தப் பதிவு சற்று விரிவாக இருப்பதாக படுகிறது. ஏராளமான அறிமுகங்களைப் பெற்றிருக்கிறீர்கள். கல்யாண வீட்டுக்கு அழைப்பு வச்சாத்தான் போகணும். இழவு வீட்டுக்கு அழைக்காமலே போகணும் என்பதுதான் தமிழர் பண்பாடு. இது அவர்களுக்கு புரிந்தால் சரி.

பீர் | Peer said...

வர வர உங்க எழுத்து கூட எனக்கு புரிய மாட்டேங்குது.

அகநாழிகை said...

கார்த்தி,
உங்கள் அவதானிப்பும், தொகுப்பும் அருமை.

தமிழ்நதி - ஆதவன் தீட்சண்யா சர்ச்சை குறித்த பதிவை நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். உங்களது கருத்திற்கான எனது பதில் அதில் தருகிறேன்.

பகிர்தலுக்கு நன்றி.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

நர்சிம் said...

நல்லா எழுதி இருக்கீங்க நண்பா.நன்றி.

Kumky said...

நன்றி நண்பா.,

விவகாரங்கள் நாம் பார்க்கும் ஒரு புள்ளியிலிருந்து ஆரம்பிப்பதில்லை.
அவரவர் மனச்சுமைகளும்,உளக்கொதிப்பும் வேறு வேறானவை.இதில் யாராலும் சமாதானப்படுத்தமுடியாமலேயே பொழுதுகள் கழிந்து கொண்டிருக்கின்றன.
பார்வையாளராக மட்டுமே நாம் பங்கேற்க வேண்டிய சூழ்நிலை.

உங்கள் அன்பிற்கு எனது நன்றி.

உண்மைத்தமிழன் said...

இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம்..!

Anbu said...

நடத்துங்க நடத்துங்க.

Rajeswari said...

நல்ல பகிர்வு.நன்றி!

"உழவன்" "Uzhavan" said...

சென்ற பதிவின் தொடர்ச்சியாக எழுதியிருந்த இந்தப் பதிவு சற்று விரிவாக இருப்பதாக படுகிறது. ஏராளமான அறிமுகங்களைப் பெற்றிருக்கிறீர்கள். கல்யாண வீட்டுக்கு அழைப்பு வச்சாத்தான் போகணும். இழவு வீட்டுக்கு அழைக்காமலே போகணும் என்பதுதான் தமிழர் பண்பாடு. இது அவர்களுக்கு புரிந்தால் சரி.
 
வழிமொழிகிறேன்.

குமரை நிலாவன் said...

நல்லா எழுதி இருக்கீங்க நண்பா

கல்யாண வீட்டுக்கு அழைப்பு வச்சாத்தான் போகணும். இழவு வீட்டுக்கு அழைக்காமலே போகணும் என்பதுதான் தமிழர் பண்பாடு. இது அவர்களுக்கு புரிந்தால் சரி.

வழிமொழிகிறேன்.

Prabu M said...

குழப்பாமாகத்தான் இருக்குமென்றாலும் அவர் புத்தகத்தைப் படிப்போம் என்னும் உணர்வும் ஆவலும் வருகிறது கோணங்கி அவர்களைப் பற்றி அறிமுகம் இங்கு..

தெளிவான, ஆழமான பகிர்வை வழங்கியமைக்கு நன்றி கார்த்திக் :)

அ.மு.செய்யது said...

நடந்த இலக்கிய சந்திப்பை அழகாகவும் சுவாரசியமாகவும் பதிவு செய்திருக்கிறீர்கள்.

நமக்கு தான் அந்த அரிய கூடலில் இணையும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதே என்ற வருத்தம்
தான் மேலோங்குகிறது.

வால்பையன் said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம்..!//

ஒரு உரையில ஒரு கத்தி தான் இருக்கனும்!

தமிழ் பதிவுல்கத்துல ஒரு மொக்கை தான் இருக்கனும்! எங்களுக்கு நீங்க மட்டும் போதும்ணே!

வால்பையன் said...

பதிவை படித்து, ஓட்டு போட்டதோடு மட்டுமில்லாமல் உங்கள் பொறுமையையும் பாராட்டுகிறேன்!

தீப்பெட்டி said...

நல்ல அனுபவ பகிர்வு.. நன்றி கார்த்தி..

குப்பன்.யாஹூ said...

thanks for sharing, good post.

ச.முத்துவேல் said...

சலனம் அவ்வளவா காமிக்காத உங்க முகம், ஈடுபாட்டோடு அவதானிக்கிறது என்பது உங்கள் பதிவுகளிலிருந்து தெரிகிறது. நல்ல பதிவு.

தேவன் மாயம் said...

ஆனால் கோணங்கியின் எழுத்துக்கள் ஆழ்ந்த வாசிப்பை வேண்டுவன என்பதையும் குறிப்பிட்டு இருந்தார்///

கோணங்கியின் மதனிமார்கள் கதை படியுங்கள்!!!

ச.பிரேம்குமார் said...

நிகழ்ச்சியை அருமையா பதிவு செய்துருக்கீங்க கார்த்தி. வாழ்த்துகள்

சொல்லரசன் said...

//"கோணங்கியின் எழுத்துக்கள் நிறைய பேரை போய் அடைவதில்லை. காரணம் அவரின் மொழி. மொழியில் அவர் புதிய வார்த்தைகளை, புதிய தளங்களை உண்டாக்குகிறார்.//

உண்மை ,நேரில் கலந்தகொண்ட அனுபவத்தை ஏற்படுத்தியது உங்கள் பதிவு .

Joe said...

அருமையான விவரிப்பு. அடுத்த கட்டத்துக்கு போய்க் கொண்டிருக்கிறீர்கள் கார்த்திக், வாழ்த்துக்கள்.

நீங்கள் சொன்னது போலவே எனக்கும் கோணங்கியின் எழுத்துகள் புரியவில்லை. ஒரு வேளை எனது வாசிப்பனுபவம் குறைவாக இருக்கலாம்.

ஆ.சுதா said...

நல்ல தொகுப்பு.

மேவி... said...

sema narration

Prabhu said...

உங்களோட எழுத்து முன்ன விட நல்லாருக்கு!

ஆ.ஞானசேகரன் said...

//இரண்டு நாட்கள். நண்பர்களின் அருகாமை. எக்கச்சக்கமான இலக்கிய அறிமுகங்கள். கொண்டாட்டம். மகிழ்ச்சிகளின் பரிமாற்றம். கடவுக்கும், அதன் அமைப்பாளர் கவிஞர் தேவேந்திர பூபதிக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்..!!!//

வாழ்த்துகள் நண்பா
நன்றாக பகிர்ந்துள்ளீர்கள்

முரளிகண்ணன் said...

நல்ல பகிர்வு. எழுத்து நடையும் அருமை

anujanya said...

நல்லா எழுதியிருக்கீங்க கார்த்தி. நேர போயிட்டு வந்த உணர்வு. நிறைய எழுதுங்கள்.

அனுஜன்யா

கடவுள் said...

எழுத்து நடை அருமை

யாத்ரா said...

நிகழ்வுகளை மிக அழகா எழுதியிருக்கீங்க நண்பா.