September 21, 2009

போதிமரம்..!!!

கல்லூரி முடிந்து வெளியே வந்த போது வானத்தில் மேகங்கள் திரண்டு கொண்டிருந்தன. கடந்த இரண்டு, மூன்று நாட்களாகவே மதுரையில் நல்ல மழை. வீட்டுக்கு நனையாமல் போய் விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டே வண்டியைக் கிளப்பினேன். தெப்பக்குளத்தை நெருங்கியபொழுது மொபைல் அடித்தது. வண்டியை ஓரங்கட்டி நிறுத்தினேன். போனில் அம்மா.

"தம்பி, வரும்போது ஒரு லிட்டர் நல்லெண்ணையும், கொஞ்சம் சின்ன வெங்காயமும் வாங்கிட்டு வந்துடுரியாப்பா?"

அம்மா எப்போதாவதுதான் என்னிடம் இது போல சொல்வது உண்டு.

"சரிம்மா..."

வாடிக்கையாக எண்ணெய் வாங்கும் கடை கீழவாசலில் இருக்கிறது. அவர்களிடமே வெங்காயம் எங்கே வாங்குவது என்று விசாரித்தேன். அருகில் இருக்கும் சந்துக்குள் செல்ல வேண்டும் என்றார்கள். வண்டியைத் திருப்பினேன். மழை லேசாகத் தூர ஆரம்பித்து இருந்தது.

நான் வெங்காய மண்டியை அடைவதற்கும் மழை வலுப்பதற்கும் சரியாக இருந்தது. அவசரமாக வண்டியை நிப்பாட்டி விட்டு கடையின் வாசலில் நின்று கொண்டேன். வெளியே காய வைத்து இருந்து வெங்காயத்தை எல்லாம் ஒரு வயதான பாட்டி பெருக்கி எடுத்துக் கொண்டிருந்தார். இன்னொருவர் கடையின் உள்ளே மூட்டைகளை அடுக்கிக் கொண்டிருந்தார். மழை ரொம்பப் பெரிதாக பெய்யத் தொடங்கியது.

"தம்பி, அப்படி வாசல்ல நின்னீங்கன்னா நனைஞ்சிடுவீங்க.. இப்படி உள்ள வந்து நில்லுங்க.." உள்ளே இருந்தவர் அழைத்தார். அவர்தான் கடையின் முதலாளியாக இருக்கக் கூடும்.

"இல்லண்ணே... பரவாயில்ல.. கால்ல ஷூ போட்டிருக்கேன்.. நீங்க வேலை பாக்குற எடம்.."

"அதனால என்ன தம்பி.. எல்லாம் நம்ம மனசுதான்... மனுஷனத்தான் முதல்ல மதிக்கணும்.. சும்மா உள்ள வாங்க.."

கடைக்கு உள்ளே போய் நின்று கொண்டேன். ஒரு பெரிய அறை. அதன் முக்கால்வாசி இடத்தை வெங்காய மூட்டைகளும், பூண்டு மூட்டைகளும் அடைத்துக் கொண்டிருந்தன. ஒரு டேபிள், சேர். அதன் மேலே கொஞ்சம் சாமி படங்கள். பக்கத்திலேயே ஒரு எடை போடும் எந்திரம்.

"நீங்க ...... ஸ்கூல்லையா தம்பி வேலை பாக்குறீங்க?" அவர் கேட்டபோது தான் நான் கழுத்தில் கிடக்கும் அடையாள அட்டையை இன்னும் கழட்டவில்லை என்பதையே கவனித்தேன்.

"இல்லண்ணே.. நான் காலேஜ்ல வேலை பாக்குறேன்.. ஸ்கூல், காலேஜ் எல்லாமே ஒரே நிர்வாகம்தான்.."

"ஏன்னா தம்பி.. எம்பிள்ளைங்க ரெண்டும் உங்க ஸ்கூல்லதான் படிக்குதுங்க.. அதுக்காக கேட்டேன்.."

"அப்படியா.. சரிங்கண்ணே..." சிரித்துக் கொண்டே மழையை வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். அப்போது ஹோவென சத்தம் போட்டவாறே ஒரு சிறுவர்கள் கூட்டம் மழையில் ஆடிக் கொண்டே போனார்கள். அடித்து ஊற்றும் மழையை அவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

"கொடுத்து வச்சவங்க.. இல்லையா தம்பி..?"

"கண்டிப்பாண்ணே..வாழ்க்கைல வளரவே கூடாது.. எப்பவும் சின்னப் பசங்களாவே இருந்துடணும்.."

"அப்படி எல்லாம் இல்ல தம்பி.. எல்லாம் சூழ்நிலையைப் பொறுத்துதான்.. என்னோட பிள்ளைங்களுக்கும் இந்த வயசுதான்.. ஆனா அதுங்க இந்த மாதிரி ஆடிப் பாடி சிரிச்சு விளையாண்டு நான் பார்த்ததே இல்ல.. நாமதான் வியாபாரத்துக்கு வந்துடோம்.. நம்ம பிள்ளைங்களாவது நல்லா படிக்கட்டும்னு பெரிய ஸ்கூல்ல சேர்த்து விட்டா அவங்க பிள்ளைங்கள செக்கு மாடா ஆக்கிட்டாங்க.. காலைல எட்டுல இருந்து சாயங்காலம் அஞ்சு வரைக்கும் ஸ்கூல்.. ஸ்கூல் விட்டு வந்தவுடனே டியூஷனுக்குப் போயிட்டு ஒன்பது மணிக்குத்தான் வரும்ங்க.. அதுக்கு அப்புறம் கொஞ்சம் டிவி.. தூங்கிடும்ங்க... இதுதான் வாழ்க்கைன்னு ஆகிப்போச்சு தம்பி.."

நான் ஏதும் பேசாமல் அவர் முகத்தை பார்த்தேன். அதில் ஒரு சின்ன வேதனை இருந்தது. அவரே தொடர்ந்தார்.

"ஏதோ ஏன் வீட்டுக்காரம்மா இருக்குற தைரியத்துலதான் தம்பி என் பொழப்பு ஓடிக்கிட்டு இருக்கு.. அது பொறுமையா பிள்ளைங்கள பார்த்துக்குரதாலத்தான் நான் நிம்மதியா இருக்கேன்.. பிள்ளைங்க கூட சேர்ந்து வெளிய கொள்ள போக முடியல.. ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் தான் அதுங்களுக்கு லீவு.. ஆனா அன்னைக்கு நான் லைனுக்கு போனாத்தான் கலெக்ஷன்... யாருக்காக சம்பாதிக்கிறோமோ, அவங்க கூட சந்தோஷமா இருக்க முடியாட்டி எதுக்கு இந்த வாழ்க்கைன்னு ரொம்ப கோபமா வருது தம்பி.."

எளிமையாக அவர் பேசினாலும் அந்த வார்த்தைகளில் இருந்த உண்மை என்னை சுட்டது.

"ஏதோ உங்க கிட்ட பேசனும்னு தோணுச்சு தம்பி.. தப்பா எடுத்துக்காதீங்க.."

"அய்யய்யோ.. என்னன்னே இப்படி சொல்லிட்டீங்க... உங்க கூட பேசுனதுல எனக்கும் சந்தோஷம்தாண்ணே .."

அவர் முகம் கொஞ்சம் தெளிவு அடைந்தது. மழை கொஞ்சம் சிறுத்து இருந்தது. வெங்காயம் வாங்கிக் கொண்டு கிளம்பினேன்.

"இருங்க தம்பி.. மழைல நனையாமப் போங்க.." என்று சொல்லியவாறே அவருடைய ஹெல்மட்டைக் கொடுத்தார். "நேரம் கிடைக்குரப்ப கொண்டு வந்து கொடுங்க.."

நன்றி சொல்லி வாங்கிக் கொண்டேன். மனதுக்குள் அவர் சொன்ன விஷயங்கள் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தன. இந்த வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் தான் என்ன? வாழ்க்கையை நாம் துரத்திக் கொண்டிருக்கிறோமா அல்லது வாழ்க்கை நம்மை துரத்துகிறதா? விடை தெரியாத நிலையிலும் பயணங்கள் தொடர்ந்து கொண்டுதானே இருக்கின்றன. மழைத்துளிகள் முகத்தில் அறைய வண்டியைக் கிளப்பினேன்..!!!


(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

30 comments:

நாடோடி இலக்கியன் said...

நண்பா,
அருமையான இடுகை.எஸ்.ராவின் எழுத்தை வாசிக்கும்போது கிடைக்கும் அதே ஃபீல் இந்த இடுகையை படித்தபோது.தொடர்ந்து கலக்குங்க.

ஆரூரன் விசுவநாதன் said...

//காலைல எட்டுல இருந்து சாயங்காலம் அஞ்சு வரைக்கும் ஸ்கூல்.. ஸ்கூல் விட்டு வந்தவுடனே டியூஷனுக்குப் போயிட்டு ஒன்பது மணிக்குத்தான் வரும்ங்க..///

குழந்தைகளை செக்குமாடாக்கும் இந்த கல்விமுறை எங்கு சென்று முடியுமோ?

நல்ல பதிவு
வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்

ப்ரியமுடன் வசந்த் said...

நல்ல விஷயங்கள் இயல்பா புரியும்படி சொல்லியிருக்கீங்க நண்பா...

Jerry Eshananda said...

நல்ல பதிவு கார்த்தி.

க.பாலாசி said...

//ஏதோ ஏன் வீட்டுக்காரம்மா இருக்குற தைரியத்துலதான் தம்பி என் பொழப்பு ஓடிக்கிட்டு இருக்கு.. அது பொறுமையா பிள்ளைங்கள பார்த்துக்குரதாலத்தான் நான் நிம்மதியா இருக்கேன்.. பிள்ளைங்க கூட சேர்ந்து வெளிய கொள்ள போக முடியல.. ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் தான் அதுங்களுக்கு லீவு.. //

வேதனையான விஷயம். இதே நிலையில்தான் இன்று பெரும்பாலான ஆண்கள் இருக்கிறார்கள்.

நல்ல பயனுள்ள இடுகை அன்பரே...

Raju said...

\\நாடோடி இலக்கியன் said...
நண்பா,
அருமையான இடுகை.எஸ்.ராவின் எழுத்தை வாசிக்கும்போது கிடைக்கும் அதே ஃபீல் இந்த இடுகையை படித்தபோது.தொடர்ந்து கலக்குங்க.\\

:-)

வாழ்த்துக்கள்.

தினேஷ் said...

:)

Anbu said...

மன்னிக்கவும் அண்ணா..

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பதிவர் சந்திப்பினில் கலந்து கொள்ள இயலவில்லை..

பதிவு நன்றாக இருக்கிறது அண்ணா...

vasu balaji said...

அருமையான இடுகை. பாராட்டுகள்

வலசு - வேலணை said...

//
யாருக்காக சம்பாதிக்கிறோமோ, அவங்க கூட சந்தோஷமா இருக்க முடியாட்டி எதுக்கு இந்த வாழ்க்கைன்னு ரொம்ப கோபமா வருது
//
சும்மா நச்சுன்னு இருந்திச்சு.
அருமையாய் எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

Unknown said...

/--"கண்டிப்பாண்ணே..வாழ்க்கைல வளரவே கூடாது.. எப்பவும் சின்னப் பசங்களாவே இருந்துடணும்.." --/

இந்த நப்பாசை எனக்கும் இருக்கிறது பாண்டியன். போதிமரம் என்றதும் சம்புத்தனைப் பற்றியதாக இருக்குமோ என்று நினைத்தேன். அனுபவமும் ஒரு போதிமரம் தானே. அதை அனுகச் செய்பவர்களும் புத்தர்கள் தானே.

நல்ல பதிவு.

தருமி said...

ஒரு நல்ல அப்பா ..

கிருஷ்ண மூர்த்தி S said...

தருமி ஐயா, இந்தப் பதிவுல ஒரு நல்ல அப்பாவைப்பாத்து சந்தோஷப்படறார்! நான், ஒரு இங்கே ஒரு நல்ல ஆசிரியன், நல்ல கல்வி முறை உருவாக வேண்டும் என்கிற ஆதங்கத்தைப் புரிந்துகொள்கிறேன்!

உள்ளது உள்ளபடியே சொல்கிற வித்தை, யதார்த்தம் என்று சொல்வோமே, அது உங்கள் எழுத்தில் நன்றாகத் தெரிகிறது.

கனவு மெய்ப்பட வேண்டும்!

Unknown said...

//.. யாருக்காக சம்பாதிக்கிறோமோ, அவங்க கூட சந்தோஷமா இருக்க முடியாட்டி எதுக்கு இந்த வாழ்க்கைன்னு ரொம்ப கோபமா வருது ..//

:-(

அ.மு.செய்யது said...

சின்ன சின்ன விஷயங்களைக் கூட விஷயங்களை சிலாகிச்சி எழுதுற உங்க அப்சர்வேஷன் ரொம்ப பிடிச்சிருக்கு...இன்ஃபாக்ட் இது அவ்வளவு சின்ன விஷயம் இல்ல...

"உழவன்" "Uzhavan" said...

சிந்திக்கத் தூண்டும் அருமையான பதிவு.

இராகவன் நைஜிரியா said...

விடைத் தெரியாத கேள்விகள்.

ஒரு பக்கம் நல்ல கல்வி என்றுச் சொல்லி, குழந்தைகளின் சந்தோஷங்களை மிகவும் கெடுத்துக் கொண்டு இருக்கின்றோம். எப்போது பார்த்தாலும் படி, படி என்று சொல்லிச் சொல்லி, உடலுக்கு தேவையான பயிற்சிகள் இல்லாமலே ஆக்கிவிட்டோம். படிப்பு, டிவி இதைத் தவிர அடுத்த லெவலுக்கு செல்லவேயில்லை.

ஹேமா said...

கார்த்திக்,மழை ஓய்ந்தாலும் மனதில் அடித்த சாரல்போல அருமையான அனுபவம்.நல்ல தலைப்பும் கூட."போதி மரம்".

சிவக்குமரன் said...

நான் அடிக்கடி யோசிக்கிற விஷயம் இது கார்த்தி.

ஆனா இதுக்கு ஒரு முடிவில்லை.

எந்த பக்கம் யோசிச்சாலும், மெட்ரிக் பள்ளிகளோட பாடத்திட்டம், பசங்கள விளையாடவோ, மத்த எந்த விஷயத்திலும் அதிகமா ஈடுபட அனுமதிக்கரதில்ல..

Prabhu said...

மதுரக்காரங்க பாசக்காரங்க!
இப்படித்தான்!

வால்பையன் said...

கல்வி விசயத்தில் நமக்கு போதுமான தெளிவி இல்லை என்றே தெரிகிறது!

நான் படித்த படிப்பு எனக்கு பைசாவுக்கு கூட உபயோகப்படவில்லை என்பதே உண்மை!
(மொழியைத்தவிர)

பாலகுமார் said...

அருமை கார்த்தி, வாழ்த்துக்கள்

//"அப்படி எல்லாம் இல்ல தம்பி.. எல்லாம் சூழ்நிலையைப் பொறுத்துதான்.. //

யதார்த்தம் !

☼ வெயிலான் said...

நல்ல பதிவு பாண்டியன்.

ச.பிரேம்குமார் said...

நல்ல பதிவு பாண்டியன்.

//காலைல எட்டுல இருந்து சாயங்காலம் அஞ்சு வரைக்கும் ஸ்கூல்.. ஸ்கூல் விட்டு வந்தவுடனே டியூஷனுக்குப் போயிட்டு ஒன்பது மணிக்குத்தான் வரும்ங்க..//

இவர் விசயத்தில் இந்த tuition என்பது கொஞ்சம் அவசியமானதாகிப் போகிறது. ஆனா பசங்க கொஞ்சம் ஆர்வமானவர்களா இருந்தாலோ, அல்லது பள்ளி நல்ல தரமான கல்வி கொடுப்பதாக இருந்தாலோ இது தேவையே இல்லாமல் போய்விடும் அல்லவா?

சில பேரு எதுக்கு Tuition அனுப்பனும்னு ஒரு புரிதலே இல்லாமல் அனுப்புறாங்க. அது தான் கொடுமை

ச.பிரேம்குமார் said...

//நான் படித்த படிப்பு எனக்கு பைசாவுக்கு கூட உபயோகப்படவில்லை என்பதே உண்மை!
//

வால் அவர்களே, அது அவரவர் என்ன வேலை செய்கிறோம் என்பதை பொறுத்தது! நாம என்ன வேலைக்கு போக போறோம்னு முன்னமே தெரிஞ்சிட்டா அது எம்புட்டு வசதியா இருக்கும். தேவையில்லாததை எல்லாம் படிக்காம விட்டுடலாம் :-)

cheena (சீனா) said...

அன்பின் கா.பா

இயல்பு நடையில் ஒரு போதி மரம் - நமக்கு சில சமயங்களில் எதிர்பாராத இடங்களிலிருந்து ஞானம் பிறக்க உதவும் நிகழ்வுகள் / செய்திகள் வருவதுண்டு.

நல்ல நடையில் எழுதப்பட்ட இடுகை

நல்வாழ்த்துகள் நண்பா

Karthik said...

செம பதிவுங்ணா!

selvanambi said...

nalla pathivu.
vazhthukkal!

ராஜ நடராஜன் said...

கண்ணுல பட்டு வந்தேன்.போதி!

selventhiran said...

கார்த்தி உங்கள் பேச்சில் இருக்கும் கண்ணியம் எழுத்திலும் இருக்கிறது. பலரும் சொல்லியது போல உங்களுக்கு வாய்த்திருப்பது மயிலிறகு நடை.